23

சகோதரனே

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன

நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்

நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்
.

உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்

அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே
.

நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்

நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே
.

பிரிந்தோம்

மீசைகளும் ஆசைகளும்
வளர வளர
நாம் பிரிந்தோம்சட்டைகளுக்காக வந்தச்
சண்டைகள்
சட்டுச் சட்டென்று
விட்டுப் போனாலும்

சொத்து சுகமென்று
வந்த சண்டைகள்
நம்மைச்
சும்மா இருக்கவிடவில்லையே
.

வெறுமனே ஓடும்போது
கரைகளைக் காயப் படுத்தாத
நம் நதிகள்

கோபம் என்றதும்
நாடு காடு என்றா பார்த்தன

உனக்கும் எனக்கும்
வீரம் விளைவித்தது
எந்தப் பாலோ
அந்தப் பால்தானா
நமக்குள்
விரோதத்தையும்
விளைவித்தது
.

நாம் பிரிந்தோம்

இந்த இடைவெளியில்
எனக்கும் உனக்கும்
எத்தனையோ உறவுகள்
புதுப் புது பந்தங்கள்
இரத்தக் கிளைகள்

எல்லாமும் ஆகின
.

இன்றோ
நானென் சாய்வு நாற்காலியின்
தனிமை மடியில்
மனதைத்
தொங்கப் போட்டுக்கொண்டு
மல்லாந்து கிடக்கிறேன்
.

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

நீ எங்கே

நீர் நிறைந்த
என் விழிகளுடன்
இன்று நான்
உன்னைத் தேடுகிறேன்

-அன்புடன் புகாரி 1997

No comments: