முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்


தத்தித் தித்தித்தத் தங்கநிலவே
நீ தாவணிப் பூவுக்குள்
பூவானாய்
முத்துத் தெறித்திடும் மெய்யழகே
நீ முகத்தைக் கவிழ்த்தே
சிரிக்கின்றாய்

பெத்த மனங்களின் பொந்துகளில்
நீ பிறந்ததும் மீட்டிய
குரலிருக்கு
எத்தனை வளர்ந்து நிமிர்ந்தாலும்
உனை எடுத்தே கொஞ்சிடும்
உயிரெனக்கு

பத்துத் திங்கள் சுமந்தவளும்
உன் பருவம் கண்டே
வியக்கின்றாள்
ரத்த இழையின் சின்னவனும்
நீ ரத்தினத் தீவெனக்
கூவுகின்றான்

நித்தம் ஒளிரும் நெற்றி மொட்டே
என் நெஞ்சில் வளரும்
தாலாட்டே
புத்தம் புதிய மழைத்துளியே
நீ பேசிடும் மொழியும்
தேனிசையே

முத்தக் காட்டில் விட்டுவைத்தேன்
நீ மூர்ச்சையாகிப்
போகவில்லை
கட்டித் தழுவி நொறுக்கிவைத்தேன்
உன் கண்களில் தாகம்
தீரவில்லை

எத்தனைப் பாசம் பொன்னழகே
நீ ஏணிக்கு எட்டாத
வெண்ணிலவே
பொத்திய கைக்குள் வைரமென்றே
உனைப் பெற்ற நிறைவுக்கு
ஈடில்லையே

1 comment:

cheena (சீனா) said...

பெண் குழந்தை பெற்றவர்க்குச் சொந்தமில்லை. மரத்தின் சந்தனமும், கடலின் முத்தும், மண்ணின் பொன்னும் பிறந்த இடத்திற்குச் சொந்தமில்லை. வேற்றிடத்தில் தான் சிறப்பே!!

//ரத்த இழையின்
சின்னவனும்

நீ
ரத்தினத் தீவெனக்
கூவுகின்றான்//

அடிகள் அருமை!!!