ஆ. அணிந்துரை - கவிப்பேரரசு வைரமுத்து


புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. காரணம், என் கவனத்தில் கல்லெறியும் அவர்களது கனமான எழுத்துக்கள்தாம்.

அந்த வரிசையில் நெஞ்சைப் பிழியும் ஆழமான பதிவுகளையும், புகைப்படத்தின் நிழலுருவுக்கு நிஜம் கொடுக்கும் வார்த்தைகளையும் சுமந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியின் "வெளிச்ச அழைப்புகள்" வாசித்த போது மெல்லிய அதிர்வுகள் மனமெங்கும் பரவுவதை உனர்ந்தேன்.

குழந்தையின் புகைப்படத்தோடு தொடங்கும் இவரது கவிதைப் பிரசவம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து - நடந்து - பேச முற்படும்போது முதிர்ந்த சிந்தனைகள் சிறகடிக்கின்றன.

"விழிகளில்
நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப்
பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும்
அன்புக்கரம்
கவிதை"


கவிதை குறித்த இந்தக் கவிதை ஓர் அழகான வெளிப்பாடு.

இளங்குழந்தை இளைஞனானதும் காதலியின் மௌனம் கலையும் நேரத்திற்காய் தவமிருக்கையில்

"அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா"
- என்கிறார்.நம்பிக்கை குறித்த 'உலகம்' எனும் கவிதை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொறித்துக் கொள்ள வேண்டிய முத்திரைக் கவிதை.

"அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்".


- தமிழ்நாட்டின் நயாகரா குற்றாலம் குறித்த கவிஞர் புகாரியின் வர்ணணையில் நம் மனமும் குளித்துக் குதூகலமடையும் சுகானுபவத்தை என்ன சொல்ல

஑இலவசம்஑ எனும் கவிதை வணிக வாழ்க்கையின் சாமர்த்தியத்தை அழகாகச் சித்தரித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" இருட்டின் இலக்கணத்தைத் தேன் தோய்த்துத் தரும்போது எதார்த்தம் இனிக்கிறது.

கேளிக்கைகளோடு முடிந்து போகும் கவிதைத் தொகுப்போ என்ற என் எண்ணத்தின் திசையைத் திரும்பி பார்க்க வைத்தன ஑செப்டம்பர் 11, 2001ஒ, ஑இறுதியாய் ஒரு கேள்விஒ எனும் இரு கவிதைகள்.

நியூயார்க் கட்டடங்களைத் தீண்டிய தீவிரவாதத்தையும், குஜராத் மக்களின் மன அமைதி திருடிய வன்முறையையும் பதிவு செய்யும் போது கவிஞர் புகாரியின் ஈர இதயம் பற்றி எரிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சமகால நிகழ்வுகளின் பதிவுகளை நாளைய வரலாறாய் ஆக்குவது படைப்பாளர்களே அதில் புகாரியும் ஒருவர்.

அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சமூக விமர்சனத்துடன் பார்க்கும் இவரது பார்வையில் புதுமைகள் பூத்துக்குலுங்குகின்றன.

஑நினைத்துப் பார்க்கிறேன்ஒ கவிதையில் பொருள் தேடி கண்ணுக்குத் தெரியாத தேசத்தில் குடும்பத்தைப் பிரிந்து வாடும் தலைவனின் பிரிவுத் துயரை உணர்ச்சியோடு எழுதி உருகவைத்திருக்கிறார். அந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

"மண்ணுக்குப் பொழியாத
மழைமேகம் மேகமல்ல
தென்னையினைத் தழுவாத
தென்றலுமோர் தென்றலல்ல
கண்ணுக்குள் விரியாத
கனவும் ஓர் கனவல்ல
உன்னருகில் இல்லாயென்
உயிரும் ஓர் உயிரல்ல"


புதுக்கவிதையை விடவும் இவருக்கு இசை லயத்துடன் கூடிய இந்த நடை இயல்பாக அமைந்திருக்கிறது.

நவீனத்தின் போக்குவரத்து நெரிசலில் இருந்தாலும் கவிஞரால் ஑எழுது ஒரு கடுதாசிஒ கவிதை மூலம் கிராமத்து நடவு வாழ்க்கையோடும் நடந்துவர முடிகிறது; நேசத்தோடு அதன் வாழ்வியலை நுகர்ந்து வர முடிகிறது.

஑எங்கள் கலைக்கூடம் கலைந்ததுஒ எனும் நடிகர் திலகம் அவர்கள் பற்றிய கவிதை இத்தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று; அந்த மகா கலைஞனின் மகத்துவம் சொல்லும் அந்தக் கவிதையால் ஆசிரியர் என் மனதின் மதிப்பில் உயர்ந்தார்.

உற்றதை உணர்ச்சியின் உயிர்கெடாது வார்த்தெடுக்கும் வல்லமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும் வாய்த்திருக்கிறது.

புதுக்கவிதையின் பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும் ஆற்றலைப் புகாரி பெற்றிருக்கிறார்.

நுட்பமான கருத்தாழமும் பரந்து பட்ட பார்வையும் அமையப்பெற்றால் இன்னும் கனமான கவிதைகளை வருங்காலங்களில் படைப்பார் என்பது என் எண்ணம்.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" கவியுலகில் பிரகாசமான எதிர்காலத்தைக் கவிஞர் புகாரிக்குத் தரும் என்பதும் திண்ணம்.

கடல்தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரியைப் போன்ற படைப்பாளிகளின் புதிய வரவுகளால் தமிழ்க் கவிதை தழைக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களோடு
வைரமுத்து

அ. முன்னுரை - வெளிச்ச அழைப்புகள்


கவிதைகளாக
இந்த மனசு
மனசாக
அந்தக்
கவிதைகள்

*

உயிர் முத்தங்கள்

என்னை
எழுதத்
தூண்டும்
உணர்வுகளுக்கும்
எழுத
வைக்கும்
தமிழுக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில்
அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு
சிந்தனா முற்றத்தில்
கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே
எனக்குக் கவிதைகள்

என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை
எனக்குப் பிடித்த வண்ணமாய்
என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய்
இங்கே பிடித்து வைத்திருக்கிறேன்

எனக்கு ஞாபகம் முளைத்த
அந்தப் பழைய நாள் முதலாய்
கவிதைகளை என் உயிரின் ஆழம் வரை முகர்ந்து
நான் சுவைத்து வருகிறேன்

என் தாய் மொழி தமிழ் என்பதில்
எனக்கு அளவில்லா ஆனந்தம்
தமிழகத்தில் பிறந்த நான்
இன்று கனடாவில் வாழ்கிறேன்.

இங்கே,
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையாடும்போது மட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்.

தமிழ் வாழ்க

கவிதைகளுடன்,
புகாரி

186 Staines Road
Toronto, Ontario M1X 1V3
Canada

416-500-0972
anbudanbuhari@gmail.com