****70

இமைத்
துப்பட்டாவோடு
பிறந்த பேரழிகள் கண்கள்
நாகரிகமும் நாணமும்
கொண்ட பண்பு மணிகள்
கண்கள்

இதழ்கள்
கூடினாலும் சரி
இடைகள் கூடினாலும் சரி
நாணம் மிகக்கொண்டு
துப்பட்டாவை இழுத்து மூடிப்
பதுங்கிக் கொண்டுவிடுவார்கள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
69

பூக்கள்
இல்லாப் பூமிக்கு
என்னைப் பொட்டலம் கட்டுங்கள்

வாசனை
இல்லா வெளியில்
என்னை வீசி எறியுங்கள்

நட்சத்திரங்கள்
இல்லா வானத்தில்
என்னை அள்ளிக் கொட்டுங்கள்

கவிதைகள்
இல்லா சூன்யத்தில்
என்னைப் போட்டுப் புதையுங்கள்

புலன்கள்
கழிந்த தேகமாய்
என்னை மாற்றிப் போடுங்கள்

நான்
என் காதலியை
மறக்க வேண்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***69
பாவப்பட்ட முகமூடியே


தப்பான நிமிடத்தில் தவறான முடிவெடுத்து
கற்பிலா நிழல்முகம் பூட்டி
மெல்லச் சுயமுகம் சிதைந்தொழிய
அரிதார முகமாய் மட்டுமே
பரிதாப நிலை கொண்டுவிடும்
பாவப்பட்ட முகமூடியே

எதைச் செய்தாலும் அதை
நீதானே செய்கிறாய்
உன் சொந்த முகங்கொண்டு
செய்யமறுப்பதேன்

ஓ.. நீதான் எத்தனை பெரிய
கோழை என்று நீயே
வெட்கித் தலைமறைகிறாய்

தன்னைத்தான் சாகடிப்போன்
கோழை என்பதை
உன் வேரில் தீமூட்டி
உறுதிப்படுத்துகிறாய் பார்

தலைகெட்டக் கமலவாய் கழிப்பதையெல்லாம்
உன் முகவாய் மொழிந்து குமட்ட
முகமூடி சூடிக்கொண்டாய்
உன்னை நீயே தெருநாய் ஆக்கிக்கொண்டாய்

இட்டுக்கொண்ட மூடிக்கேற்ப
உன் ஜாடியை ஆட்டினாய்
அது உன் நாடிக்கே வேட்டுவைக்க
மூடியாய்மட்டுமே உடைந்துபோனாய்

தன் சொல் சொல்ல தன் முகம் தாரா
கேடுகெட்ட கோழையின் மரணச் செய்தியைத்
தாங்கி நிற்கும் ஓடுதானே முகமூடி
தன் சாவுக்கு தானே ஒப்பாரி வைக்கும்
அவலம் வந்த நிலை காணாயா

இனியாவது சுயம் மீட்டுக்கொள் நண்பா
தற்கொலை வேண்டாமடா
வீரனாய் வெளியில் வா
அதுவுன் தோள்களை வெற்றியாக்கும்
முகத்தைப் பொற்சூரியனாக்கும்
சரித்திரம் அடையாளம் கண்டு
உன் முகக்கீற்றை
வைர வரிகளால் குறித்துக்கொள்ளும்

*

பின் குறிப்பு:

இது புனைப்பெயர் வைத்துக்கொள்வதைப் பற்றியதல்ல. முகமூடி இட்டுக்கொண்டு தன் கருத்துக்கு தன்னையே தகுதியற்றவராக்கிக் கொள்பவர்களைப் பற்றிய கவிதை.

புனைபெயர் தவறல்ல.

பாரதி, கண்ணதாசன், இளையராஜா, பாரதிராஜா போன்ற அனைவரும் முகமூடிகள் அல்லர்.
*****
68

கனடாவில் பிறந்தாலும்
தமிழ்ப் பிள்ளை
தமிழ்ப் பிள்ளைதான்

ஆங்கிலம் அவசியம்
தமிழோ இதயம்

நாக்கு
ஆங்கிலத்தில்
நர்த்தனமே ஆடட்டும்
மூக்கு மட்டும்
தமிழையே சுவாசிக்கட்டும்
68

அன்பே நீ பேசினாய்
என் அடிவயிற்றில் இறங்கி
உன் குரல் குதூகலிக்கிறது

அன்பே நீ சிரித்தாய்
என் ஆயுளின்
அத்தனை அறைகளிலும்
சங்கீதம் கேட்கிறது

அன்பே நீ தொட்டாய்
உயிரின் அத்தனை சந்துகளிலும்
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

அன்பே நீ முத்தமிட்டாய்
மடிவதும் பிறப்பதுமாய்
எனக்குள் பில்லியன் பிறப்புகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
67

சுரக்காத மார் சுரந்து
உனக்காகப் பாலூட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மடியில் அள்ளிவைத்துச்
சோறூட்டிச் சீராட்ட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

காலை எழுந்ததும்
உன் தலைகோதி நான் மயங்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

சிணுங்கிச் சிணுங்கி உன்னோடு
பொழுதெலாம் விளையாட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

எண்ணி முடியாமல்
ஈரம் குறையாத இதழ் முத்தமிட
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

இடைவெளியும் இடைவலியும்
இல்லாமல் கட்டித்தழுவ
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விட்டுப் பிரியாமலும்
தொட்டு அகலாமலும்
மூச்சோடு மூச்சாகி சுவாசிக்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

உயிரோடு உயிர்வைத்து
ஓருயிராய் உருகி ஒன்றாக
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி


*67

இந்த உலகில்
நம்புவதற்கென்று
ஒன்றே ஒன்றுதான் உள்ளது

அந்த ஒன்றைத்தான்
இன்றுவரை எவரும்
கண்டுபிடிக்கவே இல்லை

நீ
கண்டுபிடித்தால்
அதை
உடனே என்னிடம் வந்து
சொல்

அதை நான் நம்பமாட்டேன்
66

என்னை
அனாதை விடுதிக்கு
அழைத்துச் சென்றாய்

உன் விரல்களை
என் விரல்களால் பற்றிக்கொண்டு
கம்பீரமாய் நடந்து வந்தேன்

அன்றுமுதல்
நான் அனாதை இல்லை
என்றானேன்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்

**** 66

சாவு சாவல்ல
சாவுக்குமுன் நிகழும்
போராட்டமே
சாவு
65

விழி வேர்களை உப்புக் கண்ணீர்
ரம்பப் பற்களால் அறுத்தெறிய
கைகளில் விழுந்த என் கண்களை
வாரி எடுத்துக்கொண்டு
ஓடிவந்தேன் உன்னிடம்

அடி பெண்ணே
உன்னால் கழன்று விழுந்தவற்றை
உன்னால்தான் பொருத்தமுடியும் என்று
உயிரழிய மன்றாடினேன்

என் குமுறல்களை
ஓரமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு நீயோ
உன் வாழ்க்கை வளம் பெற்றதற்கு
எனக்கு நன்றிகள் சொன்னாய்

எனக்கென்று உன்னிடம் மீதமிருப்பவை
இந்த நன்றிகள் மட்டுமே என்று
நெகிழ்வோடு கூறி உதடு பிதுக்கினாய்

உனக்கு நான் கவிதைகள் என்ற
நிரந்தரமான ஊன்றுகோல்
கொடுத்திருக்கிறேன் பார் என்று
உன் கருணையை நீயே
போற்றிப் புகழ்ந்துகொண்டாய்

பொற் கைத்தடியால்
நடை பழகிக்கொண்டே நானும்
உனக்கு நன்றி சொல்கிறேன்
நம் நன்றி உணர்வுகள் வாழ்க

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***
64 

அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள்தான் இருக்கிறது படுக்கை
அதில் மலர்ந்தால்தான் பிடிக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்

அழுகைதான் குடை
அதன் அடியில்தான் இளைப்பாறும்
வாழ்க்கையின் நடை

கண்களில் நீர் வந்து முட்டினால்
நிம்மதி நெஞ்சின் கதவு தட்டும்
கன்னத்தில் ஒரு சொட்டு உதிர்கின்ற போது
உயிருக்குள் அமைதி விதை நட்டுப் போகும்

எது வந்து மடி சேர்ந்தபோதும்
அது நில்லாமல் ஒரு நாளில் போகும்
மாற்றந்தான் வாழ்க்கையின் மாறாத நியதி
அழுகைதான் அதற்கான பயணத்தின்
ஊர்தி

கோழையின் கூடாரமல்ல
அழுகை கருணையின் கோபுரம்
தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை

ஒவ்வோர் அழுகையின் முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது
64

இன்று காலை நீ அழைத்தாய்
என் தொலைபேசி
அதை எனக்குத் தெரிவிக்கவில்லை

அது தெரிவித்திருந்தாலும்
என் செவியை என்னால்
அதற்குத் தந்திருக்க முடியாது

ஏனெனில் என் செவி அப்போது
என்னிடம் இல்லை

வார்த்தைகளால் பற்றியெரிந்த
முதல் நாள் நெருப்பு

அதைக் கொளுத்திக் கொளுத்தி
ஈமக்கிரியையும் பொறுப்பாய்ச்
செய்து முடித்துவிட்டதை
என் தொலைபேசி
தெளிவாகவே அறியும் என்பதால்
என் தொலைபேசி
எனக்கு உன் அழைப்பைச்
சொல்லவில்லை

குற்ற உணர்வில் இன்று நான்
என் தொலைபேசியிடம்
கடிந்துகொண்டேன்

ஒருநாளும் இப்படி நீ
எனக்குச் செய்யமாட்டாயே
நேற்று மட்டும் ஏன் அப்படிச்
செய்தாய் என்று

எனக்கும் இதயம் இருக்கிறது
என் இதயமும்
நின்றுபோய்த்தான் இருந்தது

உன்முன் யார் அழுதாலும்
உன் உயிரைக்
கழற்றிக் கொடுத்துவிட்டு
ஒடுங்கிக் கொள்கிறாயே

உன்னுடனேயே இருக்கும்
என் உணர்வுகளையும்
நீ புரிந்துகொள்ளக் கூடாதா
என்று என் தொலைபேசி
என்னிடம் திருப்பிக் கேட்கிறது
நான் என்ன செய்யட்டும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
63

விடைபெற்ற ஊமைக் கணங்கள்
உடைபட்டு உதிர்கின்றன
ஊன உணர்வுப் பொதிகளாய்
உயிர்மூச்சுப் பாதைகளில்

நீ நிறுத்தி வைத்த இடத்திலேயே
நெடு நேரமாய் நான்
நின்று கொண்டிருக்கிறேன்
அதுவும் எனக்கு
விருப்பமானதாகவே இருக்கிறது

உன் வலக்கரத்தை என் இரு
கரங்களுக்கும் இடையில் வைத்து
மூன்று கரங்களுடன் நான் வணங்கியது
நம் காதலைத்தான்

உன்னை நான் சந்தித்தது
எதேச்சைச் செயலென்று நம்பிக்கொண்டிருக்காதே

யுகம் யுகமாய்த் திட்டமிட்டு
நாம் அறியாத மர்மக் குறிப்பேட்டில்
குறித்து வைக்கப்பட்ட தேவ சந்திப்பு அது

மென்மைகள் கூடி
தேர்வு செய்த மென்மை
மென்மையாய்ப் பெற்றெடுத்த மென்மை நீ

உன் குதிகால் பூவெடுத்து
நீ நடப்பதைக் கண்டு
என் விழிகள் வியப்பதை நீ
வேடிக்கை பார்ப்பாய்

எனவேதான்
என் மூச்சுக்காற்றும் உன்னைக்
கருக்கிவிடுமோ என்ற கவலையில்
எப்போதும் இப்படியே நான்
என்னை மட்டுமே வதைத்துக்கொண்டு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *
63 வால் வீச்சு

புதுத்துணி வெட்ட
பொல்லாக் கத்தரியும் அழும்
உனக்கு மட்டும் ஏன் நண்பா இத்தனை
ஆனந்தம்

முற்றும் அறிந்தவன் மேதினியில் இல்லையென்ற
பழைய தத்துவம் வேண்டுமானால் ஓர் ஓரமிருக்கட்டும்
புல் தொட்டுப் பொதிகைவரை உனக்குப்
பலவும் தெரியும்தான் ஒப்புக்கொள்கிறேன்
அவற்றோடு உன் நெஞ்சத் தெருக்களில்
பண்பு ரதங்களும் மெல்ல
ஊர்ந்து வந்தாலல்லவா நீ மனிதன்

வெட்டரிவாளாய் நீட்டி நிற்கும் உன்
கொம்புகளைக் கொஞ்சம்
நறுக்கிக்கொள்ளக் கூடாதா
புதியவனின் முகத்தைக் குதறுவதால் மட்டுமே
உன் புத்திக்கூர்மை சபைச்சுடர் வீசிவிடுமா

உன்னிலும் இளையவனிடமிருந்து
ஓர் ஒப்பற்ற கலைவெள்ளம் பொங்கிவந்தால்
நீயேன் தட்டுத் தடுமாறி தறிகெட்டுக் கொதிக்கின்றாய்
நீ சிந்தித்தும் காணாததை
உன் இளையவன் எளிமையாய்க் காண்பான்
என்று உனக்குத் தெரியாதா

வஞ்சனை மகுடி ஊதி
வார்த்தைகளைக் கருநாகமாய்
வளைத்துப் போட்டு வம்புக்கிழுக்கிறாயே
பெட்டிக்குள் அடங்கு நண்பா

உன் அழிவை உன் வால் வீச்சால்
நீயே வரவேற்காதே
காலம் வாள் வீசும்போது
உன் வாலோடு சேர்த்துத் தலையும்
துண்டாடப்படும்

***62

நான் வில்லனா கதாநாயகனா

எத்தனையோ நான்
கெஞ்சிக் கூத்தாடியும்
”இவர்கள்” எனக்கு
வில்லன் வேடம்தான்
கொடுத்தார்கள்

கதறி அழுதும்
ஒரு மாற்றமும் இல்லை

நான்
எதுவுமே கேட்கவில்லை
”அவர்களோ” எனக்கு
கதாநாயகன் வேசத்தையே
கொடுத்தார்கள்

எப்போது நீங்களும் என்னை
வில்லனாய் ஆக்குவீர்கள் என்ற
பழைய பயத்தில்
ஐயக் கேள்வி கேட்டுக்கொண்டே
நிற்கிறேன்

எப்படியானாலும்
எங்கும்
நடிக்கத்தான் வேண்டும்
என்பது மட்டும்
வாழ்க்கை நாடகத்தின்
அசைக்கமுடியாத கலைதான்
62

ஆணும் பெண்ணும்
கலந்த முழுமையே கடவுள்

பிளந்த பகுதிகள்
ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதால்
இணையும்போதுதான்
தன்னைக் காணும் என்பதால்
ஆணாய் பெண்ணாய்
பிரிந்த பிறப்புகள் மண்ணில்

துளி வேற்றுமையும் இன்றி
முழுமொத்த ஈர்ப்புடன்
இரு பாதிகள் இணையும் போதுதான்
மீள்கிறது தெய்வம்

ஈர்ப்பில்லாமல் எவரும் இணையாதீர்
வெட்டிச் சேர்க்கைகள்
இயற்கை அவமதிப்பாகும்

சரியான பாதியும்
சரியான மீதியும் சேரும்வரை
உறவில் முழுமை இல்லை

அந்த இறைமை கிட்டும்வரை
உயிருக்கு உயிரில்லை
பாதிகள் அலையும் பரிதவித்தே எப்போதும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
61

கம்பிகளுக்குப் பின் அலையும்
கைதிகளைப்போல் அலைகின்றன
உன் கண்கள்

இதய நடுக்கத்தின் அதிர்வுகளைக்
கசிந்த வண்ணம் இருக்கின்றன
உன் கைவிரல்கள்

ஆழ்மன ஆசைகளைப் படம்பிடித்துக்காட்டும்
ஆப்பிள் திரைகளாய் ஒளிர்கின்றன
உன் கன்னங்கள்

மௌன கன்னிமரா நூலகத்தின்
அத்தனை நூல்களுமாய் விரிந்துகிடக்கின்றன
உன் இதழ்கள்

மறைக்க நினைத்து
மறைக்க நினைத்து
மேலும் அதிகமாக வெளிக்காட்டாதே

மேகம் முழுவதும் சூல்கொண்ட மழை
மனம் முழுவதும் ஆக்கிரமித்த காதல்
வெளியேறியே தீரும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்