எழுத்தினில் நிமிர்கின்ற விரல்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.





இதயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்

அன்புடன் புகாரி


#அன்புடன்_இதயம்

புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே அல்ல

புகாரி என்று எழுதுவதைவிட புஹாரி என்று எழுதுவதுதான் அரபி மொழியின் உச்சரிப்பைச் சரியாகக் கொண்டதாகச் சொல்ல முடியும். நான் இலக்கணம் படித்தவனல்ல புஹாரி சார். ஆனால் வீம்புக்காக புகாரிதான் சரியென வாதிடுபவர்களை தமிழ் வெறியன் என்றுதான் நான் சொல்வேன். அவர்கள் தமிழை வளர்ப்பது போல பாவ்லா செய்யலாம். புஹாரி என்று கா வுக்கு பதிலாக ஹா போட்டு எழுதுவதால் தமிழ் அழிந்து விடும் என நினைப்பது பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல. இந்த தமிழ் அறிஞர்களின் பிரச்சனைக்குள்ளே நான் புக விருப்பமில்லை. என் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தேன் அவ்வளவுதான். கிரந்தம் என்கிறதெல்லாம் தெரியாமலேயே தமிழை என் உயிராக நேசிக்கிறேன்.. ஆனால் ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் உயபோகிக்கும், அவற்றையும் தமிழாகச் சேர்த்துக் கொள்ளும் பொதுநோக்கு மனம் படைத்தவன், வெறியில்லாத தமிழன் அவ்வளவுதான். முதலில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா, கான்வெண்டில் பாபா பிளாக் ஷீப் பாடுகிறார்களா என்று பார்க்கட்டும் புஹாரி சார். 

இது என் நண்பர் ஒருவர் எனக்கு எழுதியது. அவர் பெயர் இங்கே அவசியமில்லை. சொல்லப்போனால் அவர் பெயரையும் அவரையும் இன்றுநான் மறந்தும்விட்டேன். அவர் இதை வாசிக்க நேர்ந்தால், முகப்பெட்டியில் ஓர் அஞ்சலிடலாம் அல்லது இங்கே மறுமொழியாய்த் தரலாம்


முதலில் புஹாரி என்பது அரபு மொழியின் சரியான உச்சரிப்பு ஆகாது. Bukhari بخاری என்பதுதான் இமாம் புகாரியின் பெயர். இது புஹாரி என்பதைவிட புகாரி என்பதற்குத்தான் அதிக நெருக்கமானது.

காண்க: http://en.wikipedia.org/wiki/Muhammad_al-Bukhari

இதைவிட சுவாரியமான ஒரு தகவல் என்னவென்றால். என் பெயர் இஸ்லாமியப் பெயரே அல்ல. புகாரா என்ற ஊரிலிருந்து வந்தவர் என்ற பொருளைக்கொண்டதுதான் புகாரி.

அதைவிட சுவாரசியம் என்பதெல்லாம் தமிழரசன், பூங்குழலி, இறைநேசன், கருணைநேசன், அன்புநேசன், அருள்நேசன், முத்தழகு, பொன்னழகு, பூவழகு என்பதெல்லாம் இஸ்லாமியப் பெயர்கள்தாம். ஆனால் அதை ஏற்பதற்கு பலருக்கு மனம் வராது ஏனெனில், இந்து என்றால் சமஸ்கிருதப் பெயர், கிருத்தவன் என்றால் ஹிப்ரூ, வெள்ளைக்காரன் பெயர், இஸ்லாமியன் என்றால் அரபிமொழிப் பெயர் என்று இவர்களே வகுத்துக்கொண்டார்கள். பெயரைக் கேட்டதுமே மதம் தெரிந்துகொள்ளலாம் இல்லையா? சாதியைத் தெரிந்துகொள்ளலாம் இல்லையா?

ஆனால் மற்றமதங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது, நானறிந்தவரை இஸ்லாமிய மதம் மொழிகடந்தது. அது எந்த மொழியையும் இழிவாகக் காணாதது. ஆகவே அதன் அடிப்படையில் அறநாசன், இறைமறுப்பான் என்பதுபோன்ற பெயர்களாய் இல்லாவிட்டால் எல்லா மொழிப் பெயர்களும் இஸ்லாம் பெயர்கள்தாம்.

ஏனெனில் இஸ்லாமியன் என்பவன் அதை ஏற்றுக்கொண்டு தன் கண்ணிய நடட்த்தை வழி காண்பிப்பவனே அன்றி உடல், உடை போன்ற புற அழகால் காட்டுபவன் அல்ல.

ஆகவே தலைப்பில் புகாரி என்பது இஸ்லாமியப் பெயரே என்பது பிழை. அது தாராளமாக இஸ்லாமியப் பெயராய் இருக்கலாம். ஓர் இந்து விரும்பினால் இந்துப் பெயராய் ஆகலாம், ஒரு கிருத்துவர் விரும்பினால் கிருத்துவப் பெயராய் ஆகலாம்.

இந்தியாவிலிருந்து வந்தவர் இந்தியர், பாகிஸ்தானிலிருந்து வந்தவர் பாகிஸ்தானி, குஜராத்திலிருந்து வந்தவர் குஜராத்தி என்பதுபோல புகாரா என்ற உஸ்பெகிஸ்தானின் ஓர் ஊரிலிருந்து வந்தவர் என்பதன் பொருள்தான் புகாரி. இமாம் புகாரியின் பெயர் முகம்மது. அவரின் குடும்பப்பெயர்தான் புகாரி. இரண்டையும் சேர்த்து முகம்மது புகாரி என்பது அவர் பெயர் ஆனது.

என் தந்தையை அசன்பாவா ராவுத்தர் என்று அழைப்பார்கள். ராவுத்தர் என்பது குடும்பப்பெயர். இஸ்லாமியப் பெயர் அல்ல. இப்போது யாரும் அந்த ராவுத்தர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துவதில்லை. அது அவர் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ஒருவகையில் அது முஸ்லிம்களுக்கிடையில் சாதியை உருவாக்குவதுபோல் இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது. அப்படிக்குறைவதையே நானும் விரும்புகிறேன்.

சென்னையிலும் இலங்கையிலும் இன்னும் சில நாடுகளிலும் Bukhari என்பதை Buhari என்று எழுதும் வழக்கம் உள்ளது. இது அவர்கள் துவக்கத்தில் செய்த தவறு என்றாலும் பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. எப்படியோ வைத்து அழைக்கப்படுவதுதான் பெயர். அந்த வகையில் என் பெயர் Buhari தான். வேறு எப்படி அழைத்தாலும் என் செவிகள் ஏற்பதில்லை. என் நண்பர்கள் அனைவரும் என் பெயரை Buhari என்று உச்சரிக்க மிகவும் விரும்புவார்கள். அதனுள் ஓர் இசை ஊஞ்சலாடிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். சொல்லச் சொல்ல இனிக்குதடா புகாரி என்று சொன்ன நண்பரும் உண்டு.

ஆகவே, Buhari என்பதை புஹாரி என்று எழுதினால்தான் சரி என்று நினைத்து புஹாரி என்றே எழுதிவந்தேன். அப்போது என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளிலும் ஏ. புஹாரி என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பின் தமிழை மேலும் கற்றபின், தமிழில் எழுதப்படாத எழுத்துக்களின் அறிமுகங்கள் எனக்குக் கிடைத்தன. அதன்பின் என் பெயரை நான் புகாரி என்று எழுதத் தொடங்கிவிட்டேன்.

முகம் அகம் என்ற சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் க என்ற எழுத்து எந்த உச்சரிப்பைக் கொடுக்கிறது. முஹம் அஹம் என்றுதானே?

காகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் எழுத்து கா வாகவும் இரண்டாம் எழுத்து ஹ வாகவும் ஒலிப்பதைக் காணமுடிகிறதல்லவா?

கா முதல் எழுத்தாய் வரும்போது கா என்றும் அதுவே இடை எழுத்தாய் வரும்போது ஹா என்றும் ஒலிக்கப்படும். இதுதான் தமிழில் எழுதப்படாத எழுத்துக்கள். இப்படி எழுதப்படாத எழுத்துக்கள் தமிழில் ஏராளமாய் இருக்கின்றன.

காகம் என்பதை காக்கா என்று எழுதினால் இதில் ஹா என்ற உச்சரிப்பு வரவே வராது. ஏனெனில் ஒரு ஒற்றுக்குப்பின் வரும் க ஒலிப்பில் மாறிவராது என்பதுதான் காரணம். ஒற்றுக்கு அத்தனை அழுத்தம் உண்டு.

ஹரி என்ற பெயரை கரி என்று எழுதமுடியுமா? முடியாது ஏனெனில் அதில் க முதல் எழுத்தாய் வருகிறது. அப்படி வரும்போது அதை ஹரி என்று உச்சரிக்க இயலாது கரி என்றுதான் உச்சரிக்க முடியும். எனவே சில தமிழ்ப்பிரியர்கள் அரி என்று எழுதுவார்கள். என் தந்தையின் பெயரான ஹசன்பாவா அப்படித்தான் அசன்பாவா ஆனது.

இப்படியே புகாரி என்று எழுதி உச்சரித்துப்பாருங்கள் அது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்படும். புகாரி என்பது புஹாரி என்று சரியாக ஒலிக்கப்பட்டால் நான் தமிழ் எழுத்தைத் தானே பயன்படுத்த வேண்டும்? ஏன் கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது எப்படிப் பார்த்தாலும் கடன்வாங்கிய எழுத்துதானே?

எதுவும் முடியும் தமிழ் எப்படியும் வளையும்!

தமிழன்னை எனக்குத் தந்தது சில்லறைச் சலுகைகளையல்ல உயர்வான வாழ்க்கையையும் நிம்மதியையும்.

என் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ் தந்தது. என் அடையாளமும் இருப்பும் தமிழ் தந்தது.

என் பெயரின் உச்சரிப்பில் தமிழ் எனக்குச் சலுகை தந்தது என்றால் எனக்குத் தேவை ஒரு சலுகை அல்ல இரு சலுகைகள். ஒன்று ’ஹா’ என்ற உச்சரிப்பு. அடுத்தது ’Bu’ என்ற உச்சரிப்பு.

‘ஹா’ என்ற உச்சரிப்பை எழுத்தப்படாத ஆனால் ஒலிக்கப்படும் எழுத்தில் தமிழ் வைத்திருந்தது. அதை அடையாளம் கண்டதும் உடனே பயன்படுத்திக் கொண்டேன்.

இந்த B யின் ஓசை அன்பு என்று வரும்போது வந்துவிடும். ஆனால் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது வர வழியில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு முன்னரே பாரதிகளும் பாலுகளும் கவலைப்பட்டதில்லை.

ஏனெனில் எழுத்தில் இருப்பதை வாசிக்கும்போது கற்றோர் பழகின பயன்பாட்டையே பின்பற்றுவர். அப்படித்தான் பாரதி பாரதிதாசன் என்ற பெயர்களெல்லாம் சரியாக உச்சரிக்கப்படுகின்றன.

’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடியவர் பாரதிதாசன். ஆனால் அவர் பெயரை ஏன் தூய தமிழில் வைத்துக்கொள்ளவில்லை என்று அடிக்கடி யோசிப்பேன். தமிழ்மீதுள்ள பற்றைவிட பாரதியின் மீதுள்ள பற்றுதான் மிகுத்திருந்ததா அவருக்கு என்ற ஐயம் தோன்றும்.

பாரதி என்ற சொல்லும் தாசன் என்ற சொல்லும் தமிழ் மூலச் சொற்கள் அல்ல. தமிழனின் பெயர் என்ற அளவில் அது தூய தமிழாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தமிழ்ப் பற்றைக் குறைத்துக்கூற முடியுமா?

அவ்வண்ணமே, பிறமொழிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், கிரந்தம் பயன்படுத்துவதாலும் ஒருவனின் தமிழ்ப்பற்றை இழித்துக்கூறுவது அறிவுடைமையாய் எனக்குப்படவில்லை.

ஆனால் வெறுமனே கிரந்தத்தை வலியப் புகுத்துதலும், பிறமொழிச் சொற்களிலேயே விருப்பம் மிகக் கொண்டுள்ளமையும் தமிழை அழிக்கச் செய்யும் அறியாமைச் செயலாகத்தான் இருக்கமுடியும்.

சேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு, தனி ஆங்கிலமே தேவை என்று ஆங்கிலம் கொடிபிடித்திருந்தால் இன்று ஆங்கிலம் இந்த அளவிற்குப் பரந்து விரிந்து உலக மொழிகளின் முதன்மைக்குப் போட்டிபோட்டுக் கொண்டிருக்க வழியில்லை.

பிறந்த குழந்தை பிறந்ததுபோலவே இருப்பதுதான் சரி. அது வளர்ந்தால் கலப்படமாகிக் குரங்காகிவிடுகிறது என்று எண்ணுவது அறிவுடைமையா?

ஓலைச்சுவடி தொடங்கி கணினி வரை குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் எத்தனை வளர்ச்சியினை அடைந்திருக்கும்?

தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? தொல்காப்பியனுக்குப்பின் இலக்கண இலக்கிய மாற்றங்களே இல்லாதிருப்பதா? என்றால் அது வாழ்தமிழ் இல்லை. வாழ்ந்த தமிழ். தொடர் தமிழ் இல்லை முடிந்த தமிழ்.

தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?

தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாதுபோனால்தான் எனக்குத் துக்கம் வரும். தமிழில் இதெல்லாம் சொல்லமுடியாது அதெல்லாம் செய்யமுடியாது என்று சொல்லும் தமிழனை நான் வெறுக்கிறேன். எதுவும் முடியும், தமிழ் எப்படியும் வளையும் என்று சொல்லுவோரால்தான் தமிழ் வாழும் வளரும்.

நான் ஊசுடன் என்று எழுதுவதைவிட ஹூஸ்டன் என்று எழுதுவதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நான் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை.

புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ்.

இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ்ப் பிடிகளைத் தளர்த்துவதே சிறப்பு என்றே கருதுகிறேன்.

தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதல் தேவை!

வடமொழிச்சொற்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் உள்ள சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன.

இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.

ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்து தமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.

இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.

ஆங்கிலம் தமிழை மட்டும் தாக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் தாக்குகின்றது. இந்தி பேசுவோர் நம்மைவிட மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியே சைனா, ஜப்பான், கொரியா என்று பல நாட்டு மொழிகளும். உலகில் இன்று ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுவோர் மிகக் குறைவு.

இன்றைய நாட்களில் மனித இனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒட்டு இனங்களாய் நிற்கின்றவோ அப்படியே மொழிகளும் நிற்கின்றன. கனடாவின் டொராண்டோ நகரம் வந்தீர்களென்றால், எங்கும் கலப்பு எதிலும் கலப்பு என்பதுபோல், தமிழ்ப்பெண் ஆஃப்கானிஸ்தான் பையனை மணக்கிறாள். சைனாக்காரன் ஜெர்மானியப் பெண்ணை மணக்கிறான். கறுப்பர் வெள்ளையரை. வெள்ளையர் மஞ்சள் இனத்தவரை என்று மனித இனங்கள் பிணைந்து நிற்கின்றன.

இவர்களெல்லாம் அந்த ஊரின் வட்டார மொழியே தம் புழங்குமொழியாய்க் கொள்கின்றனர். அது வேறென்ன ஆங்கிலம்தான்.

இதில் ஒரு தமிழ்ப்பெண் ஜார்ஜ் புஷ் என்ற ஆங்கில இளைஞனை மணந்தபின், சார்சு பூழ்சு என்று அழைத்தால் என்னாகும்? அதைப்போலவே ஒரு வெள்ளைக்காரன் காத்தாயியை மணந்தபின், ’கேட்டாய்’ என்றால் என்னாகும்?

இளையவர்கள் நிறையவே வளைகிறார்கள். எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள். தன்னையும் தன் மொழியையும் நேசிப்பதுபோலவே பிறரையும் பிற மொழிகளையும் நேசிக்கிறார்கள்.

கிலோ மீட்டர், லிட்டர் போன்ற சொற்களை எல்லாம் தமிழாக்கவேண்டும் என்று நினைப்பது தேவையா? அதேபோல கணினி, இணையம், யுனித்தமிழ் போன்ற சொற்களைப் புழங்காமல் இருப்பது சரியா?

தமிழன் வேற்று மொழிப் பெண்ணை மணந்தாலும் தமிழை விடக்கூடாது. அப்பெண்ணின் மொழியை அறிந்துகொண்டு அதையும் பேசவேண்டும். அவளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து அவள் தமிழையும் பேசவேண்டும். இரண்டு மொழிகளும் பிள்ளைகளின் மொழியாக வேண்டும். அதுதான் சிறப்பு. ஒரு மொழி அழியாமல் காக்கும் பண்பாடு. அந்தப் பண்பாட்டை வளர்க்கப் பாடுபடுவோம். அது தமிழின் தேவைமட்டுமல்ல உலக மொழிகளின் தேவை.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் எளிய வழிகளில் தமிழை உள்ளிழுத்துக்கொள்ள என்ன வழியென்று கண்டு அதனைச் செம்மையாக வளர்ப்போம்.

’என்னம்மா குஷ்புவை குசுபூங்கிற’ என்று மகள் கேட்டுச் சிரிக்காதவாறு தமிழ் வளர்ப்போம். குஷ்பு என்பதென்ன தமிழ்ச்சொல்லா, வெறும் பெயர்ச் சொல்தானே? அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. இதனால் நற்றமிழ் எப்படி கெடும்?

வேட்டி என்பதை வேஷ்டி என்று கூறினால் நாம் திருத்துவோம். கனவு என்பதை ட்ரீம் என்று எழுதினால் வசைபாடுவோம். அப்படிச் செய்வதுதான் நற்றமிழுக்கு இழுக்கு.

பெயர்ச்சொற்களை அதனதன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.

புகாரி என்று எழுதி Buhari என்று வாசிக்கிறோம். பாரதி என்று எழுதி Bharathi என்று வாசிக்கிறோம். இதனால் தமிழ் அழிந்துவிடுமா?

சாருசு பூழ்சு என்று எழுதி அதை ஜார்ஜ் புஷ் என்று வாசிக்க முடிந்தால் அப்படி எழுதுவதில் ஏதும் குழப்பம் இல்லைதான். ஆனால் அப்படி வாசிக்கமுடியுமா? முடியும் என்றால் அது வெற்று விவாதமாகவே ஆகும்.

உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.

கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது.

அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது.

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

1. குளிர்பானம் கூடவே கூடாது

2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்

3. பகல் தூக்கம் கூடாது

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்

5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்

6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது

7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்

8. வாழைப்பழம் உண்ணக் கூடாது

9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்

10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்

11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்

12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்

13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது

16. புளி சேர்க்கக் கூடாது

17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது

18. நிறைய நீர் அருந்த வேண்டும்

19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

20. மது அருந்தக் கூடாது

21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது

22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது

23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்

24. கணினிமுன் அதிக நேரம் செலவிடக்கூடாது

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல் மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகு தமிழ் அமுதத் தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்
*****4 

ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னும்
உலராத ஊக்கமாய்
ஓர் எதிரி