உன்னை மட்டுமா?

வாசல் வந்து நிற்கும்
வரத்தை
ஊத்தைச் செருப்பால்
விலாசுகிறாய்

பின்
வாழ்க்கை
வசமாகவில்லையே
என்று
ஓரம் நின்று
வெகு நேரம்
விசும்புகிறாய்

அறிவோ அன்போ
கருணையோ பாசமோ
காட்சிப் பின்னணியிலில்லா
உன் நாடகத்தில்
தத்தித் தாவுகிறாய்
முட்டி மோதுகிறாய்
உள்ளழித்து  உயிர்மிதித்து
நடனமாடுகிறாய்

தப்புத் தாளங்கள்
எம்மேடை ஏறினாலும்
அது மயான மேடையே என்ற
ஐயமே இல்லா
நீ
உன்னை மட்டுமா
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடத்திவிட்டுப் போகிறாய்...
பிறந்தநாட்கள்

இவ்வுடல்
பிறந்தநாள்
பிறந்தநாளே
அல்ல

உள்ளழியும் துயரில்
உயிரழியும் நாளில்
வாரியணைக்கும்
கைகளுக்குள்
பிறக்கும் நாட்களே
பிறந்தநாட்கள்
வலிமிகு
கொடுங்கதறல் பொழுதுகளில்
கைகளில் ஏந்திக்
கண்களில் ஒற்றும் உயிர்களால்
ஒட்டி ஒட்டி உருவாகும் ...
கூட்டு உயிரே
உன் உயிர்
27

உன்
நீர்க் குமிழ்களும்
என்
நீர்க் குமிழ்களும்
சந்தித்து உடைந்த
மந்திரப் பொழுதுகள்
அப்பொழுது


உன்
நினைவுகளும்
என்
நினைவுகளும்
சந்தித்துச் சிறகடிக்கும்
பொற்பொழுதுகள்
இப்பொழுது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
புலவர்கள் பொய் மூட்டைகளா?

பொய்யிலே பிறந்து
பொய்யில வளர்ந்த
புலவர் பெருமானே
என்றால்
புலவர்கள் கவிஞர்கள் எல்லாம்
பொய் மூட்டைகளா

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்

உலகே மாயம் வாழ்வே மாயம்
என்றான் இன்னொரு சித்தன்

ஆக
புலவர் பெருமான் மட்டுமல்ல
உலகின் ஒவ்வோர் உயிரும்
காயம் என்ற
பொய்யிலே பிறந்து
உலகம் என்ற
பொய்யிலே வளர்ந்தவைதானே

4

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று இறைவன்
அடுத்தது மரணம்

இறைவனும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
26

அடி பெண்ணே
உன்னை என் விழிகளால்
தொட்டுத் தொட்டு வாசித்தபோது
நீ அள்ளி இறைத்த நயாகராச் சாரல்
என் கண்களின் ஞாபகங்களில்
அப்படியே ஒட்டிக்கிடக்கிறது

அடடா
என்ன ஒரு நாணம்

மேப்பிள்மரத் தேன்
துளித் துளியாய்ச் சொட்டச் சொட்ட
உன் கன்னங்களில்
கனடாவின்
வடதுருவ ஒளிக்கதிர் வீச்சுகள்
வண்ணங்களை வாரியிறைக்க
என் கண் கடலுக்குள்
உன் காதலைச் செழுத்தியது
உன் நங்கூர நாணம்

என்னைக் கண்டு வெடித்த உன்
தோரண வெட்கமும்
பூரண ஆனந்தமும்
என்னைக் கிழித்தெடுத்து
உன் சந்தனக் கழுத்திலிருந்து
சறுக்கும் இடைக்குள்
நழுவி விழும் துப்பட்டாவாய்
ஆக்கிக்கொண்டன

போதாக்குறைக்கு
குழைந்து குழைந்து வழிந்தோடும்
உன் கொஞ்சு மல்லிக் குரல் வேறு

நான் கவிதை எழுதுகிறேன்
வெகு அக்கறையாய்

ஆனாலோ
காகிதங்கள்
காலியாகக் கிடக்கின்றன

ஏன்

என் கவிதையே
நீதான் அங்கே நிற்கிறாயே

ஒரு கவிதையிடம்
ஒரு கவிஞன்
உணர்வு மொழிப் பரப்பில்
உரையாடிக்கொண்டிருப்பதுதான்
எத்தனை எத்தனை அற்புதப் புல்லரிப்பு

கோடை வனக்
குற்றாலக் குளியலிலும்
கிட்டுமோ அந்த உச்சநிலைச் சிலிர்ப்பு

வண்ண வண்ண விளக்குகள்
லட்சம் பலகோடியாய்
உன் கண்களில் வரிசைகட்டி
விட்டுவிட்டு எரிந்ததைப் பார்த்து
அணைந்துதான் போனேன் முதலில்
பிறகோ எரிந்தே போனேனடி
என் கண்ணே

அன்றுமுதல்
கொஞ்சம் பைத்தியம்தான் நான்

அட
நாசூக்கு என்ன வேண்டியிருக்கிறது இதில்
முழுவதும் ஆனேனடி
உன் பைத்தியமாய் என் பெண்ணே

ம்ம்ம்...
இதையெல்லாம்
நானா எழுதுகிறேன்
எனக்குள் நுழைந்து ஏதோ செய்யும்
உன்னுடைய எதுவோ எழுதுகிறது

யாருடன்
உரையாடுகிறேன் இப்போது
இது கனவாய் இருக்குமோ
என்று நான் சுதாரித்தாலும்கூட
நகத்தின் நம்பமுடியா வேர்களுக்குள்ளும்
தித்தித்திப்பாய்த் தித்திக்கிறதடி

மனசு அலைபாய்வதை
மனசே அறிந்துகொள்கிறது
ஆனால் ஏன் என்றுதான்
அந்த மனசுக்கும் தெரியவில்லை

அட
நீதான் சொல்லேன்
சொன்னால்
உயிர் வாழ்வேன் தப்பிப் பிழைத்து
உன் சொற்காற்றைச் சுவாசித்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
25

கல்யாணம்
கூண்டில் நிற்கும்போது
காதல் மட்டுமே
அதன் நீதிபதி

வெளி வழக்கறிஞர்களின்
முறையீடுகளைக்
கண்டு கேட்டு அங்கீகரிக்க
காதலுக்குக்
கண்ணும் இல்லை
காதும் இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
24

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பத்திரமாய்

உன் என்னை
என் உன்னில் கரைக்க
எப்போது வருவாய்

மென்மையானதா?

இல்லையன்பே இல்லை
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

உன்
வானம் விழுந்து
பலகோடி நட்சத்திரங்களாய்
வெடித்துச் சிதறுண்டால்தான்
இந்நொடியே பூக்கத் தவிக்கும்
புதுப்பூவின் உள்வட்ட இதழ்களைவிட
மென்மையானதாகும்
என் காதல்

கொத்துக் கொத்தான கோள்களாய்
உனக்குள்
சுற்றிச் சுற்றித் திரிந்தால்தான்
இல்லாப்பொருளினும்
மெல்லியதென்றாகும்
என் காதல்

சிறுசிறு இழைகளாய்
உனக்குள்
பிரிந்து பிரிந்து பெருகினால்தான்
காற்றே இல்லா இடத்திலும்
அலையலையாய்ப் பறப்பதாகும்
என் காதல்

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பாதுகாப்பாய்

பூமியைக்
கழுத்தில் கட்டிக்கொண்டு
சூரியனுக்குள் விழும்
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

பில்லியன்களில் பெண்கள் இருந்தும்
செலவே செய்யாமல்
அப்படியே வைத்திருக்கிறேன்
என் காதலை
உனக்கே உனக்காக

எப்போது வருவாய்
அன்பே

அதை நீ
இப்போதும் சொல்லாவிட்டால்
வேறு எப்போதுமே
சொல்ல வழியற்றதாய்
என்னைத்
தின்று செரித்துக்கொள்ளும்
ஜென்மங்களில் தீராத
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
23

கனாக்களின் பரவச வானில்
கற்பனைகளின் பொற் சிறகுகளில்
பறந்தேன் தொலைதூரம்
முத்தமிட்டேன்
நட்சத்திர ஒளிப் பூக்களை

நிலவை மிதித்தேறியவன்
உன் சொல்தடுக்கி வீழ்ந்தேன்
கெடு நோய் நொடிக்குள்

கருவும் நீ
கருச்சிதைவும் நீ

அமைதியிலா உன்னகம்
ஆட்டிப்படைக்க

என்னைப்
புறந்தள்ளவும்
உள்ளிழுக்கவுமாய்
வழுக்கித் திரிகிறாய்
வற்றாமல்

தூள் தூளாய் உடைத்தே
சிதறியழிகிறது
என் நடுமுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
22

அது ஒரு வனாந்தரம்

அழைத்துச் சென்ற
என் விரல் முடிச்சுகளை
அவிழ்த்துக்கொண்டு
திசைகள் திணர ஓடுகிறாய்

.....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

கண்களை விரித்து
சொற்களை அவிழ்த்து
இதழ்களில் உயிர் நிரப்பி
எல்லைகள் கனியப் பாடுகிறாய்

பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

.....பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று....

கோடி இலைகளும்
கூர் நுனிகளால்
உன்னைத் தீண்டத் தாவுகின்றன

செடிகளும் கொடிகளும்
இயற்கை வளைவுகளால்
உன்னை வளைக்கப் பார்க்கின்றன

மரங்களின் பட்டைகளும்
காதுகளாய் வெடித்து
உன் குரல் கேட்டுத் தவிக்கின்றன

பாடுகிறாய்
பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

....துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை.....

எகிறி விழுந்து
ஓடிச் சென்று
முத்தமிட்டு
நிறைவடையா தாகமாகி
உன்முன் ஆடுகிறது
உயிர்

.....நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்....

....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கணினிக்குள் கனிந்துருகும்
கண்ணறியாப் பொன்நிலா
அவள் என்நிலா

அன்பு கொய்து கனவு நெய்யும்
உறவு நெஞ்சப் பொய்கை
அவள் என் நம்பிக்கை

முகம்காணும் ஏக்கம்
நெஞ்சக் கூட்டில்
ஆயிரம் பெண்டுலம்
அதை
அழகாய் மறைக்கும்
வண்டுளம்

உனக்காகப்
பின்னப்படும் சொல்லாரங்களை
ஏதுமறியாதவளைப் போல
யாருக்கென்று கேட்பது
சொல்லவொண்ணாச்
செல்லக் குறும்பு செல்லம்

வாழ்க நீ
பஞ்சுப்பொதி நெஞ்சே

என் தனிமைக்குள்
ஏற்றிவைத்த உன் தீபங்களில்
என் விழிகள் மலர்கின்றன
விழாக்கோலம் பூண்டு

நன்றிகளின் ஊர்வலத்தை
உன் நாடுவரச் செய்கிறேன்
கடவுச்சீட்டு கேளாமல்
கதவு திறந்து நில்

ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்பாரா தருணத்தில்
இதய விரல்கள் கவ்வி
புல்லரித்துகொள்வதை...
தடைகளேதுமின்றி
அனுபவிக்கும் அனுபவிப்புக்கு
ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்றால்
என்னவென்று சூட்டுவது?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

கண்ணா
உன் காலம் வேறு
ஏசுவே
உன் காலம் வேறு

ஆனால் நீங்கள்
கைகோத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நிறம் கறுப்பு
ஏசுவே
உன் நிறம் சிவப்பு

ஆனால் நீங்கள்
எங்களை
நிறங்களற்ற
எண்ணங்கள் கொண்டவர்களாய்
ஆக்குவீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நூல் கீதை
ஏசுவே
உன் நூல் பைபிள்

ஆனால் நீங்கள்
கீதைக்கும் பைபிளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லையென
உணரச்செய்வீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி

அழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.

புற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.

வாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.

இது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:

அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு


அப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.

கண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.

ரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.

அவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண்ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.

உலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.

ஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.

உலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.

ஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்?

ஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள்? கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.

பிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை?

தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா?

முக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? கமலுக்கு அக அழகு இல்லையா? அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா?

ஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள்? இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும்? கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.

கண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செய்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

பண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா?

கமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?

அவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது!

இல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.

கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி!

1 நட்பின் வழியே


தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும்.

சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது.

காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம்.

எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும்.

இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை!

காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்!

காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது.

கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா?

உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
20

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
19

பறவை பறக்கும் உதட்டுக்காரி
பஞ்சவர்ண சிரிப்புக்காரி
சிந்தாமணி கண்ணுக்காரி
சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

பால்வாழை நாக்குக்காரி
பறித்தெடுக்கும் பேச்சுக்காரி
மச்சமுள்ள காதுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி

வாழையிலை வயித்துக்காரி
வளையலளவு இடுப்புக்காரி
வசந்தம்பூத்த மார்புக்காரி
வழுக்கிவிழும் கழுத்துக்காரி

என்னை நினைக்கும் இதயக்காரி
என்னைத்தேடும் உணர்வுக்காரி
எப்போதும் என் கனவுக்காரி
எனைப்பிரியா உயிர்க்காரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
18

காத்திருப்பதற்காக
காதலிக்கவில்லை
ஆனால் காத்திருக்கிறேன்

காதலிப்பதற்காக
காத்திருக்கவில்லை
ஆனால்
காதலிக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்