பலசாலியல்ல

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா

0

பலசாலியல்ல....
வாழக் கிடைத்ததை
வாழாதிருப்பவர்

பலசாலியல்ல....
வாழ்வை விட்டுவிட்டு
வறட்டுத்தனம் பற்றியவர்

பலசாலியல்ல....
உறவை வெளியேற்றி
வெறுமையில் அமிழ்ந்தவர்

பலசாலியல்ல...
வளையத் தெரியாது
வம்படியாய் நிற்பவர்

பலசாலியல்ல....
வாழ்வின் கழிவுகளைக்
களையத் தெரியாதவர்

பலசாலியல்ல....
விட்டுக்கொடுப்பதோ
என்றோர் ஜம்பமடிப்பவர்

பலசாலியல்ல....
உயிராய் வந்ததை
உதறும் கர்வமுடையவர்

பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்

பலசாலியல்ல....
வாழத் தெரியாது
வீழ்வதில் பெருமையுடையவர்

பலசாலியல்ல....
சந்தேகங்களுக்கு
சந்தோசங்களை பலியிடுபவர்

பலசாலியல்ல....
முட்டாள்தனங்களையே
முறையென்று பற்றியவர்

பலசாலியல்ல
தொலைந்துபோவதே ஏதெனத் தெரியாது
சினம் கட்டிக் கூத்தாடுபவர்

பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்

பலசாலியல்ல
அன்புதரும் மெல்மனப் பிறப்பறியாது
வஞ்சந்தரும் மரணங்கள் நேசிப்பவர்

0

கயிறிழுத்துப்
பார்ப்பதா

மீட்டெடுக்கமுடியாத
ஈர உயிர் நாட்களை
இரத்தப் பலியிட்டு

கரித் துண்டுகளாய்க்
கருகி விழும்
மரண நாட்களில்
எரிந்து

கயிறிழுத்துப்
பார்ப்பதா