மீட்கப்படுவார் கடவுள்


சுடர்விட்டு
எரிகிறது கொள்ளி
அணையப் போகும்முன்
ஆரவாரமாய் வெகுண்டெழுந்து

இந்த நூற்றாண்டின்
பாதி நடையிலேயே
மிதிபட்டு மரணிக்கும்
அத்தனை மதங்களும்

இதற்கிடையில்
நவீன மதமென்று
எந்த நாசூக்கு நஞ்சையும்
பிஞ்சுகளின் நெஞ்சில்
நட்டுவிடக்கூடாதே
என்ற கவலையையும்

மூளையைச் செப்பனிட
முப்பத்து முக்கோடி பணிகள்
புத்தம் புதிதாய்ப் பூத்திருக்கின்றன
என்ற ஆறுதலும்
பரிசோதனைக்காக மட்டுமே
இனி மலம் நோண்டுவார்கள்
என்ற உறுதியும்
ஊதித் தள்ளுகிறது

மின்சாரம் நசுக்கிய பேய்கள்
சிரிப்புத்தொடரில் மட்டுமே
சிக்கிக்கொண்டதைப்போல
சித்ரவதைபடப்போகும் மதங்களுக்கு
இப்போதே மத்தாப்பு கொளுத்தி
அனுதாபம் கொண்டாடலாம்

மனித இருட்சிறையிலிருந்து
மீட்கப்படுவார் கடவுள்

வேலையில்லாப் பட்டதாரிகள்


வெறுந்தரையில் விரயமாகும்
விளைநில நீரூற்றுகள்

கல்லூரிச் சந்தைகளில்
வியாபாரக் கலைஞர்களால்
அஞ்சலில் சேர்க்கப்பட்ட
முகவரி இல்லாத
சிபாரிசுக் கடிதங்கள்

பெட்ரோலில் கையலம்பும்
அராபியச் சோம்பேறிகளிடம்
ரியாலுக்கு விக்கலெடுக்கும்
ஒட்டகக் கூட்டங்கள்

இளமை மலர்காய
வீடுநிலம் கைமாற
கல்லூரிக் கட்டிடங்களில்
தூண்களாகவே உருமாறி

மலடான பட்டங்கள் பெற்று
'வேலை காலியில்லை'
அறிவிப்புகளை அவமதித்து
அலுவலகப் படிக்கட்டுகளில்
இரத்தப் பாதங்களைப்
பதித்துப் பதித்து ஓய்ந்து

போதிமர நிழலிலே
படுக்கையை விரித்துவிட்ட
இவர்கள்

இன்று
விழிகளில் விரக்தி வழியத்தான்
அலைகிறார்கள்
எனினும் நெஞ்சில்
கனலைச் சேகரிக்கிறார்கள்

புரட்சிக் கரங்களை உயர்த்தி
நிச்சயம் ஒருநாள் இவர்கள்
எரிமலைக் குழம்புகளாய் எழுவார்கள்

அன்றே நம்
சுரண்டல் மந்திரிகள் எழுதும்
இந்தியாவின் தலையெழுத்துகள்
பொசுக்கப் பட்டு
புதிய அட்சரங்கள் பொறிக்கப்படும்

என்ன கவிஞன் நான்


என்ன கவிஞன் நான்

இங்குதான் எனச்சொல்லி
என் சுட்டுவிரல் தொட்டுவிடாமல்
எங்கெங்கிலுமே
காட்டாறாய்ப் பிரவாகமெடுக்கும்
என் ஆத்மத் துடிப்புகளுக்குச்
சரியான வார்த்தை வடிகால்
தேடத் தெரியாமல்

என்ன கவிஞன் நான்

அறிவே
உள்ளே கனலும் என்
நெஞ்ச எரிமலை
மிகச் சத்தமாய் வெடிக்க
நித்தம் முடிவு வெல்லாத
ஆவேசச் சொற் குழம்புகளை
என்னுள் கொப்பளிக்கச் செய்

இல்லையேல்
வெறித்தனமாய் என்னுள்
எழுந்து எரியும்
அந்த ராட்சசத் துடிப்புகளையேனும்
அணுவளவும் மிச்சமின்றி
தீயச் செய்
என்ன விலை தந்து இந்த இருட்டை
எனக்கே தெரியாமல் நான்
இங்கே அழைத்து வந்தேனோ

இதய இழைகளால் நெய்த
தலையணை தருகிறேன் நான்
படுத்துறங்கும் சுகமில்லை உனக்கு

ஏங்கி நிற்கும் உன் இதயக் கூட்டுக்குள்
நான் எங்கோ சிதைவுற்று
முகமின்றித் திரிகிறேன்

வெற்றுச் சதைப் பிண்டமாய்
வீழ்ந்து கிடக்கிறேன்
இனி நானுன் அடுப்புக்கேனும்
ஆவேனோ அறியேன்

யார் யாரோ அணிவிக்கும்
போலிக் கண்ணாடிகளைக்
கழற்றியெறிந்துவிட்டு என் உள்ளே பார்
உனக்கான உயிரின் நடுக்கம் தெரியும்

அடிமனதில் நேசிப்பே நிறைந்திருந்தும்
அலையோரங்களில் துயரங்களல்லவா
நுரை உமிழ்கின்றன

உன் கனவு மெய்ப்பட நானும்
என் கனவு மெய்ப்பட நீயும்
ரத்தம் கொட்டவும்
தயாராய்த்தான் எழுந்தோம்

பறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகளாய்
நம்மைப் படுக்கவைத்துச்
சிரிக்கிறதே பொல்லாத சூழ்ச்சி

உடைந்து ஒட்டவைக்கப்பட்ட
என் கைகளை
தளர்ந்த கால்களோடு குவித்து
நிரந்தர மடி ஏந்துகிறேன்
புதைந்து கொள்ளும் சுகம்
என்றுதான் வருமோ உனக்கு

வாழ்க்கை இனிமையானது


வாழ்க்கை என்ற அரிய பயிர்
கருகியபின் ஓடிவரும்
அழகு நீரோடைதான்
அனுபவமாம்
விரக்தியோடு சொன்னார்கள்
கண்டுணர்ந்தவர்கள்

ஆயினும் என்னைப்
புதுப்பிக்கும் மனத்தோடு
பொறுமையாய்க் காத்திருந்தேன்

கடந்த கணங்களின்
அழுக்குச் சுவடுகளைக்
கழுவிக்கொண்டே நடந்தேன்

முடிந்த துயரத்தின்
இருட்டுப் பிடியிலிருந்து
உயிர்த்தெழும் உர உயிராய்ப்
பூத்தெழுந்தேன்

உச்ச இறுக்கத்தில்
சிக்கிக் கிடந்ததால்
அது வைரம்

தப்புகளும் தவறுகளும்
வாழ்வின் தடங்கள்

அந்த
ஓடுகளை உடைத்துக்கொண்டு
புதிய பிறப்புகள்
மீண்டும் மீண்டும் பூக்கும்

வாழ்க்கை எப்போதும்
வசந்த வரங்களைப்போல
வந்துகொண்டே இருக்கும்

உடல் ஒன்றுதான்
உயிர் பிரியுமுன் வரும்
ஜென்மங்களோ ஆயிரம்

வாசலைத்
திறந்துவைப்போம்
நம்பிக்கை கொண்ட
வாழ்க்கை இனிமையானது

கவிதை கிடைத்துவிட்டது


ஒரேயொரு கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்று
ஒரு கதாசிரியனுக்கு
உயிருறங்காத தாகம்

பிடித்தச் சிறுகதையொன்றை
பிடித்துக் கட்டுகிறான்
கொம்பில்

வாக்கியம் வாக்கியமாய்
உரித்தெடுக்கிறான்
நடுப்புள்ளிவிட்டு
நழுவிய குற்றவாளிகளென்று

வார்த்தை வார்த்தையாய்க்
கத்தரிக்கிறான்
அனாவசியத் தொந்தியென்ற
அவசியத் தீர்மானத்தோடு

எழுத்து எழுத்தாய்க்
கிள்ளியெறிகிறான்
சொல்லிலும் வேண்டுமே
சுருக்கமென்று

வாசித்து வாசித்துத்
துள்ளித்துள்ளி குதிக்கிறான்
கவிதை வந்துவிட்டதென்று

நெடிதாய்க்
காய்ந்துகிடந்த சுடுகாடு
நொடிப்பொழுதில் ஈரமாகிறது

கண்ணீர்


சில நேரங்களில்
சில ராட்சச சோகக் கணைகள்
நம் நெஞ்ச அமைதியை
மிகக் கொடூரமாய்த் தகர்க்கும்

அவை
அநீதி மேலெழும்பும்
மரணக் கணங்கள்

அது பொழுதில்
ஒரே ஓர் அழுகை
நெருப்பில் வீசிய
உப்புக் கல்லைப் போல
மிகச் சப்தமாய் வெடிக்க

நம் விழிகள்
ஒரு சுடு மழையைச்
சுத்தமாய்ப் பொழியுமானால்
ஆறுதல் என்னும் அருமருந்து
பிறர் தயவின்றியே
அதனினும் பூரணமாய்
நம் நெஞ்ச நிலங்களை
அருவி நீரென நனைக்கும்.

ராசாத்தீ


அடீ
வெள்ளை ராசாத்தீ
உன் கூந்தலில் நான் என்
மோக விரல்களால்
நெருப்புப் பூச்சூட்டினேன்

அதற்காகவே என் பிரியமே
நீ எனக்கென உன்னை
அணு அணுவாயிக் கரைத்து
அழிந்தே போனாய்

அழிந்தும்
என்னைப் பிரிய விரும்பாமல்
என்னையும் உன்னுடன்
அழைக்கிறாய்
அந்த மேலுலகிற்கே

நியாயம்தான் என்றாலும்
உன் மீதுள்ள என் காதல்
என் உயிரையே துறக்குமளவிற்கு
அப்படி ஒன்றும்
புனித நீராடி வந்ததல்ல

ஆம் அன்பே
நான் உன் விசயத்தில்
தேவதாஸ் அல்லதான்
என்னை விட்டுவிடு
சிகரெட்டே

ஓ நானென்ன கவிஞனோ


என் இதயச் சத்திரத்தில்
ஒரு நாளிரவில்
வலுக்கட்டாயக் குடிபுகுந்து
அட்டகாசம் செய்த
எண்ண நாடோடிகளை
உருவமைக்க
என் பிஞ்சு விரல்களை
விளையாட விட்டபோது
ஓர் அற்புதக் கவிதை
சுகப் பிரவசத்தில்

ஓ நானென்ன கவிஞனோ
என்று உள்ளம் துள்ள
ஊனின்றி உறக்கமுமின்றி

சுருட்டிக் கொள்ளும்
சிந்தனை வாலை
வருத்தி வரவழைத்த
கற்பனை நதிகளில்
தோய்த்துத் தோய்த்து
நிமிர்த்தி நிமிர்த்தி
கவிதைப் பூக்களென
மலரவிட்ட போது

என் வீட்டுக்
குப்பைக் கூடைகள்
ஏப்பம் விட்டன

சமாதிகள் பூக்களை மறுப்பதில்லை


ஓர் வசந்தத்தின் விடியலில்
என் இதய வனத்தின்
இளைய மடிகளில்
குங்கும நிலவாய் வந்து பூத்தவளே

என் பருவ அணுக்கள்
ஒவ்வொன்றும் அன்று
இனம்புரியா புதுத் துடிப்புகளுடன்
இன்ப ரோஜாக்களாய்ப் பூத்துத் திணர
இரு நீல விழிகளின் ஓர நகங்களால்
என் ஈர நெஞ்சினில் முதல் கோலமிட்டாயே
உனக்கு நினைவிருக்கிறதா?

ஓர் இரவொழுகும் முதுமாலையில்
உன் தேன்குழல் இசைத்து
நீ கேட்டது என்அன்பை மட்டும்தான்
நான் கொடுத்ததோ
வேரோடு பெயர்த்தெடுத்த
என் இதயக் கொடியையல்லவா

பின் ஒரு நாள்
நம் காதல் மலர்ப் பூங்காவினில்
விதியின் காலடிச் சுவடுகளைக் கண்டு
நான் திடுக்கிட்டேன்

உன் சின்னச் சிறகுகள்
தீயில் கருக்கப்பட்டன

ஓர் அராஜகக் கூண்டு
உன்னை விழுங்கிக் கொண்டு
என்னைப் பார்த்த்து ஏளனம் செய்தது

போராட என் பிஞ்சுவிரல்களையே
தீப்பந்தங்களாய்க்
கொளுத்திக்கொண்டேன்

இருந்தும் என் அன்பே
நம்மை நம் காதல் வென்றதைப் போல்
பிரிவினை நெஞ்சங்களை
என் போராட்டம் வெல்லவில்லையே

வெறும் நாளேடுகள் மட்டுமே சொன்ன
அடுத்த சுபதினத்தில் (!)
உன் கல்யாணக் கடுதாசி
நம் பிஞ்சு இதயங்களைப்
பிழிந்துவந்த சிவப்பு மையினால்
அச்சிடப் பட்டுவிட்டனதே

மௌனம் உனக்குப் பிடித்தமொழி
அன்று இமைகளும்
கண்ணீர் மணிகளாய்க் கழன்றுவிழ
உன் கண்கள் கதறியதை
என் செவிகேட்டுச் செவிடானது
திறந்த விழிகளில்
மையிருட்டைக் கண்டேன்

நம் இருவரையும் விட்டுவிட்டு
இந்த ஈன உயிர்கள் அத்தனையும்
மண்ணோடு மண்ணாக மடிந்துவிடாதா

உன்னில் நிஜமாய்ச் சுரந்த
காதலெனும் அமுதச் சாரு
என் தாக நிலத்தின் முழுமையிலும்
செம்மையாய்ப் பாய்ந்து
ஓர் அழியாத தோப்பையே
உருவாக்கிவிட்டபின்
எஞ்சிய சக்கையில்
ஓர் அன்னிய ஆணுக்கு
வாழ்வுத் தொடக்கமா?

ஒரு நிச்சயப் போலி வாழ்க்கைக்கு
நம் ஈனச் சமுதாயம்
தன் அத்தனைக் கரங்களாலும்
பூக்களை அள்ளி இறைக்கிறது

ஏற்றுக்கொள்
ஏனெனில் சமாதிகள் என்றுமே
பூக்களை மறுப்பதில்லை
இரு ரோசாக்கள் கொடுத்து
எந்த ரோசாவைச்
சூடிக்கொள்ளப்போகிறாய்
என்றேன்

இருண்டுவிட்டது அவள்
முகவானம்

இரு சேலைகள் கொடுத்து
எந்தச் சேலையை
உடுத்தப்போகிறாய்
என்றேன்

மூன்றாவது உலகயுத்தம்
துவங்கியது அவள்
முன் நெற்றி வாசலில்

அவள் நட்பாயிருக்கும்
நண்பனையும் காட்டி
யாரோடு உன் வாழ்க்கை
என்றேன்

பிரபஞ்சம் அழிந்து
புல் பூண்டும் மிஞ்சாமல்
போனது
மாசறு மௌனமாய்
உள்ளுக்குள் மறைந்து கொண்டு
உதட்டு ஒலிபெருக்கியில்
பிரசங்கமே செய்யச் சொல்கிறாய்
நீயற்ற எவரையோ நிறுத்தி

உன் பவளப் பல்லிடுக்கு வழியாக
கவனங்களை ஏமாற்றிவிட்டு
எனக்குச் சொந்தமான உன் உயிர்
உடைந்து கரையவே செய்கிறது என்பதை
நானறிவேன் என்பதையும் நீ அறிவாய்

உன் மூச்சுக்காற்றால்
அக்கறையாய் ஊதி ஊதி
தூசுகளை எல்லாம் தூரக் களைந்து
பரிசுத்துமாக்கி வைக்கப்பட்ட
தெளிந்த பார்வை கொண்டவை
என் கண்கள்

இப்போது அவற்றை
எப்படிக் குத்திக்கிழித்துக்கொள்வது
என் உனக்காக நான்

வெள்ளி


நீலவான் பந்தலில்
நெஞ்சம் அள்ளும் கவிதையுடன்
நீள்விழி அசைத்தே மெல்ல
நில்லெனச் சொல்லும் வெள்ளி
விண் வெள்ளி

உள்ளுக்குள் வந்துபோகும்
ஒட்டுமொத்த உணர்ச்சிகளை
ஒரே மூச்சில் கொட்டித் தர
ஓயாமல் அழைக்கும் வெள்ளி
திரை வெள்ளி

தலைக்குமேல் ரேகைகளாய்
அனுபவத்தின் பரிசுகளாய்
இருள் கிழிக்கும் விடியலின்
ஒளிவடிவில் பூக்கும் வெள்ளி
நரை வெள்ளி

மேகங்கள் காதலிக்க
மின்னல்கள் கண்ணடிக்க
பொன்வான முற்றம் தன்னில்
வெட்கி
முக்காட்டு இடுவதும்
மீண்டும்
ஆசையில் வருவதுமாய் வெள்ளி
நிலா வெள்ளி

நெருப்போடு காதலாகி
நீண்டபால் வீதிவழி
சூரியனின் முத்தம் ஏந்த
முந்தும்
இரண்டாம் கோள் வெள்ளி
வீனஸ் வெள்ளி

அலுவலக இறுக்கத்திற்கும்
இயந்திர இயக்கத்திற்கும்
விடுதலை ஒத்திகை நாளாய்
இனிப்பள்ளித் தூவும் வெள்ளி
கிழமை வெள்ளி

ஆகாயக் கொடி நிறைத்து
அழகு வெண் பூப்பூத்து
நிலமகள் மேனிதூவி
விளையாட வாவெனும் வெள்ளி
பனி வெள்ளி

தண்ணீர்த் தாலாட்டாய்
தரைவிழும் சொர்க்கமாய்
தட்டித் தட்டித் தோளணைக்கும்
தாயின் தளிர்க்கர வெள்ளி
அருவி வெள்ளி

நிலத்தின் புதையல்கள்
உழைப்பின் வியர்வையால்
நெற்களாய்க் குவிந்து
புதுப்பானையில்
வழிந்தோடும் வெள்ளி
பொங்கல் வெள்ளி

சிணுங்கிச் சிணுங்கி
ஜென்மம் முழுதும் தொடர்ந்து
திறந்த விழியரங்கில்
கனவுகள் கொண்டாடும்
எப்போதோ கேட்ட
இன்னிசை வெள்ளி
என் காதல் தேவதையின்
தங்கக்கால் கொலுசு வெள்ளி

எங்கே எங்கே ஈரச்சுவை


பச்சை இலைமகள்
நெற்றித் தளங்களில்
புத்தம் புதுப்பனி
கொட்டி வழுக்கிடும்
பயண சுகந்தங்களோ

பிஞ்சுக் கொடிகொண்ட
பால்மண வேர்களின்
முழுமொத்த விழிவிரித்த
தன்னுயிர்த் தேடல்களோ

பாறை முதுகுகளில்
மோதும் அலைகளின்
நெடுநீள் ஏக்கத் தொடு வெறியோ

கடும் பாலை நிலம் மீது
சூல்மேக மடியவிழ
சிந்தும் மழைத்துளியின்
சொட்டுப் பரிசங்களோ

திறக்காத மாங்கனிக்குள்
திருட்டு வண்டொன்றின்
வாழ்க்கை அதிசயமோ

அதிகாலை ஒளிக்கசிவாய்
இள அறிவுக் கதிரெழும்பும்
பிள்ளைப்பருவமதில்
மெல்ல மெல்ல
மனம் சொல்லச் சொல்ல
முதல் கவிதை வடிப்பதுவோ

பழைய நண்பனை
பல்விழுந்த நாளொன்றில்
பார்த்துவிட்ட நெகிழ்வில்
உணர்வெரிய உரையாடுவதோ

இளைய இதழ் நான்கு
திரிகளாகித் தீப்பிடிக்க
மூடிய இமைகளுக்குள்
அடைபடும் கிளர்வுகளோ

குடும்ப நலன் தேடி
திரைகடல் பல ஓடி
இளமைப் பேறூற்றின்
கண்மூடிக் காய்ந்தபின்
நடுங்கும் கரங்களோடு
பெற்றமண் அள்ளி
பெருமூச்சாய் முகர்வதோ

நாவினில் ஒளியாக
செவிகளில் சிறகாக
இதயத்துள் தேனூற
எழுந்தாடும் தமிழோ

உலகமே அவள் மடியாக
உயிரே தாய் பிரியமாக
இளம்பிஞ்சு நகம்பதித்து
பொன்மடி முட்டிமுட்டி
பால் சொர்க்கம் பருகுவதோ

எங்கே எங்கே ஈரச்சுவை
இங்கே அங்கே ஈரச்சுவை
எங்கும் எதிலும் ஈரச்சுவை
இதயம் இருந்தால் ஈரச்சுவை

தமிழுகுச் சோறூட்டு

பாராட்டு
உன் பாராட்டால்
நண்பா
நம் தமிழுக்குச் சோறூட்டு

நீ
பாராட்டும்போது
உனக்குள் மலரும்
பௌர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும்
தீபவிழிகளைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள் வேறுண்டா

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டேனென்று
ஏன்தான் அடம்பிடிக்கிறாய்

உன்
அரைகுறைச் சொல்லைப் பாராட்ட
ஆளற்றுப் போனதே
அந்தச் சோகமா

உன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே இவன்
அந்தப் பொறாமையா

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
என் கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனமா

இவன் என்
எதிரி எழுத்தாளனின் தாசனாயிற்றே
அந்த விரோதமா

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணமா

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பனே
உன் நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத்தான்
தொலைக்க வேண்டும்
நீ

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில்
எழுத்து நீர்க் குவளையோடு வருகிறாய்
பாராட்டுக்கள்
ஆனால்
அந்த வெளிச்சத்தை
முதலில் முத்தமிடவேண்டியவன்
நீயல்லவா

பாராட்டலாம் வா
பாராட்டுவதால்
பாராட்டியவன்தான்
பன்மடங்காய் உயர்கிறான்

மனதாரப் பாராட்டினால்
மறுகணமே நீ
மனிதனாய்ப் பிறந்துவிடுவாய்

ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும் பண்புதான்
அதன் மகுடம்

ரசனைகளற்றவனின் உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா

கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடனல்லவா

காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடனல்லவா

நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமையல்லவா

மறந்துவிட்டாயா
தாலாட்டிப் பாராட்டியதாலேயே
நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்

சொல்...

வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா

தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா

நிலவு வந்து பாராட்டாமல்
இரவு நெஞ்சில் இனிக்குமா

மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா

இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா

பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை
அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை

சொந்தம் பாராட்டாமல்
இன்பம் இல்லை
உறவைப் பாராட்டாமல்
உயிர்களே இல்லை

பாராட்டி வளர்வதன்றோ
கலைகள்
பாராட்டி செழிப்பதன்றோ
உலகம்

அடடா
இப்படி நீ பாராட்டாமல்
மூடிக்கிடந்தால்
கொத்துக் கொத்தாய் அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்

அந்த அழிவின் கருங்குழி வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா
நீதான் நண்பா
நீயேதான்

பெண்ணியப் போலி


கொஞ்சமே கொஞ்சம்
அதுவும்
சிலுசிலு கண்ணாடி
ஆடையணிந்து

போதாதென்று
தொப்பலாய் நனைந்து

சிதைந்த செல்களிலும்கூட
செக்கச் செவேரென்ற
நெருப்பு மூட்டி

கால்வாசி ஆடைகூட
சாதிக்காது இனி என்ற
காலம் உணர்ந்து
மேலும் மேலும்
வெட்டியெறிகிறாள்
நனைகிறாள்
காணும் தேகங்களை
'தந்தூரி' செய்கிறாள்
கோலி-பாலி-ஹாலிவுட்காரி

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசும்
முற்போக்கு அரங்கில்
அனைத்தையும் கழற்றியெறிந்த
அந்தரங்கச் சொல்லாடலும்
படுக்கை நெடி வெடிக்கும்
கசங்கல் நடையுமாய்
எழுதிக் கவிழ்கிறாள்
பெண்ணியப் போலி

வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்

காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை

சிந்தனைத் துளிகள்
சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள்
கேட்கக் கேட்க
ஞானப்பல்
முளைக்க முளைக்க

நிம்மதி
செத்துப் போய்
நித்திரை
அற்றுப்போய்
விரக்தி
ரொம்பிப்போய்

அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே
கருகிய என்னிடம்

மனைவியின்
மடியில் கொஞ்சம்
மகளின்
மடியில் கொஞ்சம்
பேத்தியின்
மடியில் கொஞ்சம்
என்று
நழுவிய தாய்மடி
மெல்ல
மீண்டும் மலர்ந்ததில்

முதிர்ந்த இந்தக் கூட்டுக்குள்
புத்தம் புது மழலை
பூரணமாய் வந்து
குடியேற

அர்த்தமான நிம்மதி
ஆனந்தமான கண்ணீர்
அவசரமில்லாத புன்னகை

நிம்மதிதான் வாழ்க்கை


வாழ்க்கைக்கு விளக்கம்தேடி
வட்டமடித்த என் கழுகு அலகுகளில்
இதுவரை அகப்பட்டதெல்லாம்
இரைகளல்ல இரைகளல்ல
கேள்விகள்தாம் கேள்விகள்தாம்

உள்ளம்தான் சுமை தோழா


தாழ்ந்த
வாயில் கடக்க
தலையைக் கொய்வதோ

சூழ்ந்த துயரம் வெல்ல
சுடுகாட்டில் வீழ்வதோ

வாழ்ந்த
நாட்கள் எண்ணி
வாடுவதால் ஆவதென்ன

வீழ்ந்த நாட்கள் தொட்டு
விசும்புவதால் போவதென்ன

மண்ணுயிர்
பறிக்கும் ஒருவன்
மதிகெட்ட மிருகமென்றால்
தன்னுயிர் பறிக்கும் மனிதன்
தலையில்லா சாத்தான்தானே

கண்ணிலே
புகுந்த எண்ணம்
கணநேரக் கலக்கம்
எண்ணியே முடியும் முன்னர்
எடுத்தாலது தீர்மானமா

எண்ணமே
உயிரைத் தின்னும்
இதுஎன்ன வேடிக்கை
எண்ணமும் உயர்ந்தது என்றால்
இப்படியும் நடக்குமா

புதைமனம்
சிந்தும் கண்ணீர்
புத்திக்குள் தீயைமூட்ட
பதைத்தவன் புதையும் குழிதான்
பரிதாபத் தற்கொலைகள்

பாசமும் அன்பும் நட்பும்
பழகிய காதல் யாவும்
வேசமாய்ப் போவதென்றால்
ஆசையாய்க் கட்டிய கனவுகள்
அனைத்துமே சிதறியதென்றால்
வேதனையோ உச்சம்தான்
வெறுப்பொன்றே மிச்சம்தான்

ஆசையின்
வேர்கள் ஓடும்
அனைத்துமா வெற்றிகொள்ளும்
வேகமாய்ச் சாவைத் தேடும்
வெறித்தனம் கயமையாகும்

கண்வழி
வழிவது சிலர்க்கோ
நீரல்ல இரத்தம்தான்
பொன்மொழி கேட்கும் நிலையில்
பொழுதவர்க்கு இல்லைதான்

தருவாள்
தருவாள் என்றே
தாய்ப்பாலுக்கு அழும்பிள்ளை
பருகும் தாய்மார் பிழியலாம்
தன் உயிரையே பிழியலாமா

நதியுடன்
நீந்தும் நீச்சல்
நலமென்றே கொள்ளலாகுமா
எதிர்த்து நீ நீந்தும் நீச்சல்
இனிப்பான சொர்க்கமில்லையா

எஃகினால்
ஆனதா வாழ்க்கை
இழுபடும் சவ்வுதானே
இயற்கையும் ஈன்ற உயிரை
இழிவென்று நசுக்கலாமா

உயிர்
ஒரு சுமையே அல்ல
உன்
உள்ளம்தான் சுமை தோழா

கயிறினைத் தூக்கி எறி
கலக்கத்தைச் சுட்டு எரி

சுமைகளில்
அனுபவம் பாரு
சுதந்திரம் உனக்குள் தேடு
அமைவதில்
உயர்வினைப் பாரு
அழியாத நம்பிக்கையோடு

குயவன் கைபட்ட மண்ணாய்


குயவன் கைபட்ட மண்ணாய் - உன்
குரலில் வளைகிறேன் பெண்ணே
வயலின் நெல்மணிப் பொன்னாய் - உன்
விழியில் வளர்கிறேன் கண்ணே

புயலை எதிர்கொள்ள வேண்டும் - உன்
பொங்கு புன்னகை போதும்
துயரில் வெடித்ததென் காலம் - உன்
துணையில் பூத்ததே யாவும்

சின்னச் சின்னதாய்ப் பேசு - என்
சிந்தை நனைவதைப் பாரு
வண்ண வண்ணமாய்ப் பாடு - மனம்
வழிந்து மொழிவதைக் கேளு

முன்னம் இருக்குமோ பந்தம் - உன்
முகமும் சொல்லுதே சொந்தம்
எண்ணம் ஒருபட்ட நெஞ்சம் - அது
இறைவன் ஏந்திடும் மஞ்சம்
நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய்
இருக்க முடிந்தது

நீ
கோயில்
செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய்
இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை
சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க
முடியவில்லையே

வட அமெரிக்கத் தென்றலில்


கவிதைப் பந்தலில் ஆசிரியர் கவிஞர் மதுரபாரதி
இதழ்: ஆகஸ்ட் 2004

கனடாவில் வசிக்கும் புகாரியின் கவிதைகளை மின்னிதழ்கள் மடற்குழுக்கள் என்று இணையமெங்கும் பரவலாகக் காணலாம். நா.பா. தனது 'தீபம்' இதழில் தொடர்ந்து இவரது பல கவிதைகளைப் பிரசுரித்துள்ளார். 1986-ல் அதில் வெளிவந்த இவரது 'உலகம்' கவிதையை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை தனது ஆண்டுமலரான 'வார்ஷிகி-86' இல் இந்தியில் பிரசுரித்தது.

தொகுப்புகள்: வெளிச்ச அழைப்புகள் (2002), அன்புடன் இதயம் (2003), சரணமென்றேன் (2004), பச்சை மிளகாய் இளவரசி (அச்சில்). இதில் 'அன்புடன் இதயம்' தொகுப்பு தமிழ் உலகம் மடற்குழுவின் மூலம் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது ஒரு புதுமை. தனிக்கவிதைகளுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 'தென்னங்கீற்றுகளைப் போல் வாரி வகிடெடுத்த" ஊரான ஒரத்தநாட்டைச் சேர்ந்த புகாரி, கனடாவில் வானொலிச் சேவைகள் மூலமும் தமிழ்மணம் பரப்புகிறார்.



கவிதைப்பந்தலில் ஆசிரியர் மணி மு.மணிவண்ணன்
இதழ்: ஆகஸ்ட் 2003

கவிஞர் புகாரி கனடாவாழ் கவிஞர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில், மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற கேள்விக்கு இவர் விடை இசைக்கவிதை. இவருடைய கவிதைகள் பெரும்பாலும் சந்தத்தின் சத்தத்தோடுதான் வலம்வருவன. அண்மையில் இரண்டு கவிதைத் தொகுதிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டவர். 1. வெளிச்ச அழைப்புகள் 2. அன்புடன் இதயம். முதல் புத்தகம் சிறப்பாக விற்பனையாகி, பரிசும் பெற்றிருக்கிறது.

ஆகப்பெரிய கருணை


ஓர்
உயிரின் மீது
இறைவன் காட்டும்
ஆகப்பெரிய
கருணை
வேறொன்று
என்று
எதுவுமே இல்லை
அன்னையின்
ஆயுளைத்
தவிர






இணைவது ஒன்றே வரமாகும்


வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்
வாழும் கவிதை பிறப்பதில்லை
காற்றில் சுரங்கள் பிரிந்திருந்தால்
கானம் செவியை நிறைப்பதில்லை

கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டால்
காட்சிப் பிழைகள் நிறைவதில்லை
விண்ணும் விழியும் முத்தமிட்டால்
விரியும் ஞானம் குறைவதில்லை

பள்ளம் மேடுகள் தோள்தொட்டால்
பட்டினி என்னும் மிருகமில்லை
எல்லைக் கோடுகள் இணைந்துவிட்டால்
எங்கும் யுத்த நரகமில்லை

நிலமும் மழையும் உறவென்றால்
நெல்லும் புல்லும் கூத்தாடும்
நிலவும் வானும் நேர்பட்டால்
நிம்மதி நெஞ்சில் பாலாகும்

பலரும் சிலரும் கையணைத்தால்
பிரிவினை வஞ்சம் தூளாகும்
உள்ளம் உயிரைத் தழுவிவிட்டால்
உண்மைக் காதல் பயிராகும்

மண்ணைப் பிரிந்தால் துயராகும்
மனிதம் பிரிந்தால் அழிவாகும்
இணைவது ஒன்றே வரமாகும்
இணைக்கும் யாவும் இறையாகும்

அடக்கம் ஒடுக்கம்


அடக்கம்
ஒடுக்கம் என்ற
சொற்களின் உச்சரிப்பில்
அடக்கமும் இல்லை
ஒடுக்கமும் இல்லை

பூ சிறியது
காம்பு பெரியது
எழுத்துக்களில்

(இதை நீங்களும் தொடரலாம், நானும் தொடருவேன்)

பணம் பக்தி பரமன்


வால்மார்ட்டுக்குப்
பக்கத்தில்
டிம் ஹார்டனுக்கு
எதிரில்
கனடியன் டயருக்கு
அடுத்து

பணம்
தேடுபவர்கள்
கட்டுகிறார்கள்

பக்தி
தேடுபவர்கள்
கூடுகிறார்கள்

கடவுள்
வீற்றிருக்கிறார்
அதே
முத்திரை மௌனம்
முகத்தில் பிரகாசிக்க

கவிஞர் புகாரி

கண்களின் திறவுகோல்


உன்
உபதேச தேசத்தில்
கர்ணனும்
நீயே
கையேந்துபவனும்
நீயே

இருந்து
கொடுத்தாய்

இருந்தே
தவிக்கிறாய்

உன்
கண்களின் திறவுகோல்
உன்னிடமே இருந்தும்
பிறர்தாம்
திறக்கவேண்டும்

இது
உனக்கு
மட்டுமல்ல
எல்லோருக்குமே
தலையெழுத்து
வாலிபமே வாலிபமே


ஈடற்ற நிம்மதியும்
இதயம்
நிறைத்தக் குதூகலமுமாய்
இனித்துக் கிடந்த
என்
பிஞ்சுப் பிராயத்தைத்
தாண்டிவர
எனக்குள் அன்று
எந்த
எதிர்ப்பும் எழவில்லை

இன்றோ
விசக் கொடுக்கால்
முத்தமிடும்
ஏமாற்றங்களும்

பொறுக்க மாட்டாத
தவிப்புகளும்

புரையோடிய
நினைவுகளும்

சுட்டுச் சுட்டுச்
சுகங்காணும் உணர்வுகளும்

ஆழத்தில் புதைந்து விட்ட
அமைதியுமாய்

நான்-
கிழிந்து
குரலுடைந்து
விடியல் விடியலென்று
வரமாட்டாத
ஏதோ ஒன்றுக்காய்
நிரந்தரமாய்
விக்கித் தவித்தாலும்

இந்த
வாலிபத்தைத்
தாண்ட மட்டும்
என் இதயம்
அனுமதிக்க மறுப்பது ஏன்?

ஆசை



இன்னும்
ஒரு
ஜென்மம்
கவிதைகளோடு
மட்டும்
ஹைக்கூ என்ன விடுகதையா


உணர்வு வேண்டாம்
கற்பனை வேண்டாம்
மொழியழகு வேண்டாம்
உவமை என்பதோ
வேண்டவே வேண்டாம்

ஹைக்கூ என்ன
கவிதையா
ஹைதர் கால விதவையா?

முதல் இரு அடிகளில்
ஒரு கேள்வி
மூன்றாம் அடியில் பார்
ஒரு தடால் விடை

அட ஹைக்கூ என்ன
கவிதையா
கத்துக்குட்டி விடுகதையா?

ஐந்து அசை
பதினோரு அசை
மீண்டும் ஐந்து அசை
மூவரிக் கட்டுக்கோப்பு

ஹைக்கூவா அல்லது
உள்ளூர் மரபை
உடைத்தெறிந்துவிட்டு
புதிதாய்
வெளியூர் விலங்கா?

சிக்கனக் கவிதைக்குச்
சீற்றம் அதிகம்
அதை
வரட்டுச் சட்டங்களுள்
முடக்குவானேன்?

ஹைக்கூ என்னும்
அயல்கூண்டு தகர்ப்போம்

தமிழின்
செழுமை திமிறும்
வனப்பு குழைத்த
துளிக்கவிகள் பாடித்
துள்ளிக்குதிப்போம்
கறுப்புநிலா

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்
என்ன சம்பந்தம்

விழிக்குஞ்சுகளை
இமைப்பரண் ஏறவைக்கும் இக்கேள்வியை
மோனைத்தனமாய்க் கேட்டவர் யாரோ எவரோ

ஆனால்...
கறுப்புநிலா கண்டுதானே
மாதமொன்று நிறைந்துபோன
உண்மையறிகிறான் அப்துல்காதர்

பெருநாளையும் நோன்பையும்
அவனுக்கோர் உற்சாக மணியோசையாய்
உணர்த்துவதுதான் எது

வெள்ளை நிலா என்றொரு நிலா
நம் வானமாளிகையில் உண்டா

பூசிக்கொள்ளும் அரிதாரமே
மெய்முகமென்று சத்தியம் செய்யும்
திரைக்கதாநாயகியா நம் நிலா

வானத்தின் நிறம் நீலமென்றும்
நிலவின் நிறம் வெள்ளையென்றும்
இன்னும் நம்பித் தொலைக்க
இது என்ன ஹைதர் காலமா

பௌர்ணமி என்று நாம் பிதற்றும் வட்டநிலா
முழுமொத்தமும் வெள்ளைதானா
அதன் முதுகெங்கும்
பத்தை பத்தையாய் அப்பிக்கிடப்பது
சுத்தமான கறுப்பல்லவா

முழுமொத்த வெள்ளையென்பது
நிலவின் வாழ்வில் வாய்க்குமா
எந்த நொடியிலும்

பூமிக்குடை புகுந்து
சூரியச் சுடுவிழி தொடாத குருட்டுச் சிறைக்குள்
சிக்கிக்கொள்ளும்போது
நிலா என்ன நிறமாம்

கறுப்பென்று ஆனதால் மட்டும்
நிலவென்னா குறைந்தா போகும்

உலகப் பேரழகி
கிளியோபாட்ரா மட்டுமல்ல
உலகின் முதல் மனிதனே
கறுப்புநிலாதானே

அது மட்டுமா
இந்த அண்டமே ஓர் அழகு கறுப்பு
அந்தச் சத்தான கறுப்புக்குள்தானே
சகலமும் இருப்பு

வெள்ளாவியில்...


வெடிச்சு வெடிச்சுச் சிதறும் மனசு
வெள்ளாவியில் கிடக்குது
வெட்டுப்பட்டப் பல்லி வாலா
துடிச்சுத் துடிச்சுச் சாகுது

இனிப்புத் தொட்ட நாக்குநுனி
நெருப்புக் காட்டில் வேகுது
உசுரை மடிச்சு வெத்திலையாப்
போட்ட வாயி சிவக்குது

பருந்து கிழிச்ச சுண்டெலியா
மனசு நாத்தம் அடிக்குது
கிழிஞ்ச கூளம் கூட்டிவெச்சு
நெனப்பு நரியும் திங்குது

விழிப்பில்லாத தூக்கம்தேடி
கண்ணு ரெண்டும் ஏங்குது
விழிச்சு விழிச்சுப் பாத்துப்புட்டு
விம்மி விம்மிக் கதறுது

நெனப்புச் சுமை தாங்காம
மனசு எலும்பு நொறுங்குது
நொறுங்க நொறுங்க விட்டுடாம
நெனைப்புச் சுமையும் உசருது

அவமானச் சின்னமாகி
ஆவி கிடந்து அலையுது
கண்ணாடிப் பிம்பத்தையும்
காரிக் காரி உமிழுது

உச்சு முதல் பாதம்வரை
ஊசியேறிக் கிடக்குது
ஊசிமேல ஊசியேற்ற
வெந்த மனசு கெஞ்சுது

அழுகையும் சிரிப்பும் தூரமில்லை


என்னை மீறும் எண்ணங்கள்
என் இதயம் எங்கும் காயங்கள்
மண்ணில் வாழ்க்கை மாயங்கள்
மடியும் வரைக்கும் துயரங்கள்

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

தாழம்பூ நெஞ்சத்தின் தென்றல் அஞ்சல்


கடல்
அலைகளுக்கோ
கால்களில்லை
அவை
நடப்பதுவோ
ராஜநடை

உன்
விழிகளுக்கோ
இதழ்களில்லை
அவை
மொழிவதுவோ
தேன்கவிதை

உன்னைத்
தொடும்வரைத்
துயிலிலிருக்கும்
தென்றல்

உன்னைத்
தொட்டதும்
துள்ளித்துள்ளி
ஆடிவந்து

என்
காதுகளில்
கிசுகிசுக்கும்

ஏனெனில்
உன்
தாழம்பூ நெஞ்சம்
எப்பொழுதும்

எனக்குத்
தூதனுப்பத்தானே
துடித்துக்கொண்டிருக்கும்