புலவர்கள் பொய் மூட்டைகளா?

பொய்யிலே பிறந்து
பொய்யில வளர்ந்த
புலவர் பெருமானே
என்றால்
புலவர்கள் கவிஞர்கள் எல்லாம்
பொய் மூட்டைகளா

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்

உலகே மாயம் வாழ்வே மாயம்
என்றான் இன்னொரு சித்தன்

ஆக
புலவர் பெருமான் மட்டுமல்ல
உலகின் ஒவ்வோர் உயிரும்
காயம் என்ற
பொய்யிலே பிறந்து
உலகம் என்ற
பொய்யிலே வளர்ந்தவைதானே

4

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று இறைவன்
அடுத்தது மரணம்

இறைவனும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்

மரணம் உன்னைக் காதலிக்கிறது
26

அடி பெண்ணே
உன்னை என் விழிகளால்
தொட்டுத் தொட்டு வாசித்தபோது
நீ அள்ளி இறைத்த நயாகராச் சாரல்
என் கண்களின் ஞாபகங்களில்
அப்படியே ஒட்டிக்கிடக்கிறது

அடடா
என்ன ஒரு நாணம்

மேப்பிள்மரத் தேன்
துளித் துளியாய்ச் சொட்டச் சொட்ட
உன் கன்னங்களில்
கனடாவின்
வடதுருவ ஒளிக்கதிர் வீச்சுகள்
வண்ணங்களை வாரியிறைக்க
என் கண் கடலுக்குள்
உன் காதலைச் செழுத்தியது
உன் நங்கூர நாணம்

என்னைக் கண்டு வெடித்த உன்
தோரண வெட்கமும்
பூரண ஆனந்தமும்
என்னைக் கிழித்தெடுத்து
உன் சந்தனக் கழுத்திலிருந்து
சறுக்கும் இடைக்குள்
நழுவி விழும் துப்பட்டாவாய்
ஆக்கிக்கொண்டன

போதாக்குறைக்கு
குழைந்து குழைந்து வழிந்தோடும்
உன் கொஞ்சு மல்லிக் குரல் வேறு

நான் கவிதை எழுதுகிறேன்
வெகு அக்கறையாய்

ஆனாலோ
காகிதங்கள்
காலியாகக் கிடக்கின்றன

ஏன்

என் கவிதையே
நீதான் அங்கே நிற்கிறாயே

ஒரு கவிதையிடம்
ஒரு கவிஞன்
உணர்வு மொழிப் பரப்பில்
உரையாடிக்கொண்டிருப்பதுதான்
எத்தனை எத்தனை அற்புதப் புல்லரிப்பு

கோடை வனக்
குற்றாலக் குளியலிலும்
கிட்டுமோ அந்த உச்சநிலைச் சிலிர்ப்பு

வண்ண வண்ண விளக்குகள்
லட்சம் பலகோடியாய்
உன் கண்களில் வரிசைகட்டி
விட்டுவிட்டு எரிந்ததைப் பார்த்து
அணைந்துதான் போனேன் முதலில்
பிறகோ எரிந்தே போனேனடி
என் கண்ணே

அன்றுமுதல்
கொஞ்சம் பைத்தியம்தான் நான்

அட
நாசூக்கு என்ன வேண்டியிருக்கிறது இதில்
முழுவதும் ஆனேனடி
உன் பைத்தியமாய் என் பெண்ணே

ம்ம்ம்...
இதையெல்லாம்
நானா எழுதுகிறேன்
எனக்குள் நுழைந்து ஏதோ செய்யும்
உன்னுடைய எதுவோ எழுதுகிறது

யாருடன்
உரையாடுகிறேன் இப்போது
இது கனவாய் இருக்குமோ
என்று நான் சுதாரித்தாலும்கூட
நகத்தின் நம்பமுடியா வேர்களுக்குள்ளும்
தித்தித்திப்பாய்த் தித்திக்கிறதடி

மனசு அலைபாய்வதை
மனசே அறிந்துகொள்கிறது
ஆனால் ஏன் என்றுதான்
அந்த மனசுக்கும் தெரியவில்லை

அட
நீதான் சொல்லேன்
சொன்னால்
உயிர் வாழ்வேன் தப்பிப் பிழைத்து
உன் சொற்காற்றைச் சுவாசித்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
25

கல்யாணம்
கூண்டில் நிற்கும்போது
காதல் மட்டுமே
அதன் நீதிபதி

வெளி வழக்கறிஞர்களின்
முறையீடுகளைக்
கண்டு கேட்டு அங்கீகரிக்க
காதலுக்குக்
கண்ணும் இல்லை
காதும் இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
24

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பத்திரமாய்

உன் என்னை
என் உன்னில் கரைக்க
எப்போது வருவாய்

மென்மையானதா?

இல்லையன்பே இல்லை
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

உன்
வானம் விழுந்து
பலகோடி நட்சத்திரங்களாய்
வெடித்துச் சிதறுண்டால்தான்
இந்நொடியே பூக்கத் தவிக்கும்
புதுப்பூவின் உள்வட்ட இதழ்களைவிட
மென்மையானதாகும்
என் காதல்

கொத்துக் கொத்தான கோள்களாய்
உனக்குள்
சுற்றிச் சுற்றித் திரிந்தால்தான்
இல்லாப்பொருளினும்
மெல்லியதென்றாகும்
என் காதல்

சிறுசிறு இழைகளாய்
உனக்குள்
பிரிந்து பிரிந்து பெருகினால்தான்
காற்றே இல்லா இடத்திலும்
அலையலையாய்ப் பறப்பதாகும்
என் காதல்

அன்பே
நீ எங்கிருக்கிறாய்

செலவே செய்யாமல்
பல்யுகக் காதலை
நான்
அப்படியே வைத்திருக்கிறேன்
பாதுகாப்பாய்

பூமியைக்
கழுத்தில் கட்டிக்கொண்டு
சூரியனுக்குள் விழும்
பெருங்கொடுஞ் சுமையானது
என் காதல்

பில்லியன்களில் பெண்கள் இருந்தும்
செலவே செய்யாமல்
அப்படியே வைத்திருக்கிறேன்
என் காதலை
உனக்கே உனக்காக

எப்போது வருவாய்
அன்பே

அதை நீ
இப்போதும் சொல்லாவிட்டால்
வேறு எப்போதுமே
சொல்ல வழியற்றதாய்
என்னைத்
தின்று செரித்துக்கொள்ளும்
ஜென்மங்களில் தீராத
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
23

கனாக்களின் பரவச வானில்
கற்பனைகளின் பொற் சிறகுகளில்
பறந்தேன் தொலைதூரம்
முத்தமிட்டேன்
நட்சத்திர ஒளிப் பூக்களை

நிலவை மிதித்தேறியவன்
உன் சொல்தடுக்கி வீழ்ந்தேன்
கெடு நோய் நொடிக்குள்

கருவும் நீ
கருச்சிதைவும் நீ

அமைதியிலா உன்னகம்
ஆட்டிப்படைக்க

என்னைப்
புறந்தள்ளவும்
உள்ளிழுக்கவுமாய்
வழுக்கித் திரிகிறாய்
வற்றாமல்

தூள் தூளாய் உடைத்தே
சிதறியழிகிறது
என் நடுமுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
22

அது ஒரு வனாந்தரம்

அழைத்துச் சென்ற
என் விரல் முடிச்சுகளை
அவிழ்த்துக்கொண்டு
திசைகள் திணர ஓடுகிறாய்

.....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

கண்களை விரித்து
சொற்களை அவிழ்த்து
இதழ்களில் உயிர் நிரப்பி
எல்லைகள் கனியப் பாடுகிறாய்

பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

.....பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று....

கோடி இலைகளும்
கூர் நுனிகளால்
உன்னைத் தீண்டத் தாவுகின்றன

செடிகளும் கொடிகளும்
இயற்கை வளைவுகளால்
உன்னை வளைக்கப் பார்க்கின்றன

மரங்களின் பட்டைகளும்
காதுகளாய் வெடித்து
உன் குரல் கேட்டுத் தவிக்கின்றன

பாடுகிறாய்
பசுமைக்குள் பசுமையாய்ப்
பச்சை விரித்துப் படருகிறாய்

....துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை.....

எகிறி விழுந்து
ஓடிச் சென்று
முத்தமிட்டு
நிறைவடையா தாகமாகி
உன்முன் ஆடுகிறது
உயிர்

.....நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்....

....நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்.....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கணினிக்குள் கனிந்துருகும்
கண்ணறியாப் பொன்நிலா
அவள் என்நிலா

அன்பு கொய்து கனவு நெய்யும்
உறவு நெஞ்சப் பொய்கை
அவள் என் நம்பிக்கை

முகம்காணும் ஏக்கம்
நெஞ்சக் கூட்டில்
ஆயிரம் பெண்டுலம்
அதை
அழகாய் மறைக்கும்
வண்டுளம்

உனக்காகப்
பின்னப்படும் சொல்லாரங்களை
ஏதுமறியாதவளைப் போல
யாருக்கென்று கேட்பது
சொல்லவொண்ணாச்
செல்லக் குறும்பு செல்லம்

வாழ்க நீ
பஞ்சுப்பொதி நெஞ்சே

என் தனிமைக்குள்
ஏற்றிவைத்த உன் தீபங்களில்
என் விழிகள் மலர்கின்றன
விழாக்கோலம் பூண்டு

நன்றிகளின் ஊர்வலத்தை
உன் நாடுவரச் செய்கிறேன்
கடவுச்சீட்டு கேளாமல்
கதவு திறந்து நில்

ஏதோ ஒரு புள்ளியில்
எதிர்பாரா தருணத்தில்
இதய விரல்கள் கவ்வி
புல்லரித்துகொள்வதை...
தடைகளேதுமின்றி
அனுபவிக்கும் அனுபவிப்புக்கு
ஒரு பெயர் சூட்ட வேண்டுமென்றால்
என்னவென்று சூட்டுவது?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

கண்ணா
உன் காலம் வேறு
ஏசுவே
உன் காலம் வேறு

ஆனால் நீங்கள்
கைகோத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நிறம் கறுப்பு
ஏசுவே
உன் நிறம் சிவப்பு

ஆனால் நீங்கள்
எங்களை
நிறங்களற்ற
எண்ணங்கள் கொண்டவர்களாய்
ஆக்குவீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

கண்ணா
உன் நூல் கீதை
ஏசுவே
உன் நூல் பைபிள்

ஆனால் நீங்கள்
கீதைக்கும் பைபிளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லையென
உணரச்செய்வீர்கள் என்று
ஆசைப்படுகிறோம்
நாங்கள்

2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி

அழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.

புற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.

வாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.

இது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:

அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு


அப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.

கண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.

ரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.

அவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண்ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.

உலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.

ஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.

உலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.

ஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்?

ஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள்? கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.

பிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை?

தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா?

முக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார்? கமலுக்கு அக அழகு இல்லையா? அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா?

ஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள்? இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும்? கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.

கண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செய்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

தனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

பண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.

அவர் அகத்தின் அழகு குறைவானதா?

"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா?

கமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?

அவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது!

இல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.

கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி!

1 நட்பின் வழியே


தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும்.

சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது.

காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம்.

எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும்.

இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை!

காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்!

காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது.

கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா?

உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!
20

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
19

பறவை பறக்கும் உதட்டுக்காரி
பஞ்சவர்ண சிரிப்புக்காரி
சிந்தாமணி கண்ணுக்காரி
சிணுங்கிச் சிவக்கும் மூக்குக்காரி

பால்வாழை நாக்குக்காரி
பறித்தெடுக்கும் பேச்சுக்காரி
மச்சமுள்ள காதுக்காரி
மரிக்கொழுந்து வாசக்காரி

வாழையிலை வயித்துக்காரி
வளையலளவு இடுப்புக்காரி
வசந்தம்பூத்த மார்புக்காரி
வழுக்கிவிழும் கழுத்துக்காரி

என்னை நினைக்கும் இதயக்காரி
என்னைத்தேடும் உணர்வுக்காரி
எப்போதும் என் கனவுக்காரி
எனைப்பிரியா உயிர்க்காரி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
18

காத்திருப்பதற்காக
காதலிக்கவில்லை
ஆனால் காத்திருக்கிறேன்

காதலிப்பதற்காக
காத்திருக்கவில்லை
ஆனால்
காதலிக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
17

வற்றாக் குற்றாலமான
என் அன்பும்
அணையிடாக் காவிரியான
என் பாசமும்
உப்பிலாப் பசிபிக்கான
என் கருணையும்
கலையா முகிலான
என் கண்ணீரும்
என்னை
உனக்குள் திணித்து
உன்னை
ஏமாற்றி விட்டதாகக்
கோபப்பட்டாய்

உன்
கோபத்தையும்
குற்றச்சாட்டையும்
பரிவோடு ஏற்றுக்கொண்டு
நான் உன்மீது
அளப்பரிய
அன்பும் பாசமும்
கருணையும் கண்ணீரும்
கொட்டுகிறேன்

வேறென்ன
எனக்குத் தெரியும்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

தீம்பாவழி தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்து மின்னட்டையாக


அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி

*


மாசறு தீபாவளி (வைகைச் செல்வி இதழுக்கு)

அன்பு என்பினும் அறிவு என்பினும் தீபம் தீபம்
அழகு என்பினும் அமுது என்பினும் தீபம் தீபம்
இரக்கம் என்பினும் ஈகை என்பினும் தீபம் தீபம்
உதயம் என்பினும் உச்சம் என்பினும் தீபம் தீபம்

கனவு காதல் நளினம் நாணம்
நட்பு நேயம் உறவு ஊக்கம்
பரிவு பாசம் அகரம் ஆதி
எளிமை ஏற்றம் எண்ணம் ஏகம்
யாவும் யாவும் தீபம் தீபம்

தூளி என்பினும் தாய்மை என்பினும் தீபம் தீபம்
தவம் என்பினும் வரம் என்பினும் தீபம் தீபம்
ஞானம் என்பினும் மோனம் என்பினும் தீபம் தீபம்
கனிவு என்பினும் கருணை என்பினும் தீபம் தீபம்

உள்ளம் உயிர் வளமை செழுமை
வண்ணம் மின்னல் தனிமை இனிமை
மனிதம் புனிதம் மஞ்சள் மாட்சி
பக்தி பூசை மாண்பு நோன்பு
யாவும் யாவும் தீபம் தீபம்

அகந்தை அறுப்பதும் அமைதி விளைப்பதும் தீபம் தீபம்
வக்கிரம் எரிப்பதும் வஞ்சம் தகர்ப்பதும் தீபம் தீபம்
நரகம் ஒழிப்பதும் சொர்க்கம் மீட்பதும் தீபம் தீபம்
வாழ்க்கை தருவதும் வாழச் சொல்வதும் தீபம் தீபம்

தீபமென்றால் ஒளி ஆவளி என்றால் வரிசை
அழகு தீபங்களின் அறிவு தீபங்களின்
இதய தீபங்களின் இனிய தீபங்களின்
ஊர்வலம்தான் தீபாவளி

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம் இன்பமே ஒளிரட்டும்

இனிய இதய தீம்பாவழி  தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

*கவிஞர் புகாரி*



(முழுக்கவிதை)

அன்பு என்பினும்
அறிவு என்பினும்
தீபம் தீபம்

அழகு என்பினும்
அமுது என்பினும்
தீபம் தீபம்

இரக்கம் என்பினும்
ஈகை என்பினும்
தீபம் தீபம்

உதயம் என்பினும்
உச்சம் என்பினும்
தீபம் தீபம்

0

கனவு காதல்
நளினம் நாணம்
நட்பு நேயம்
உறவு ஊக்கம்
பரிவு பாசம்
அகரம் ஆய்தம்
எளிமை இனிமை
எண்ணம் ஏற்றம்
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

தூளி என்பினும்
தாய்மை என்பினும்
தீபம் தீபம்

தவம் என்பினும்
வரம் என்பினும்
தீபம் தீபம்

ஞானம் என்பினும்
மோனம் என்பினும்
தீபம் தீபம்

கனிவு என்பினும்
கருணை என்பினும்
தீபம் தீபம்

0

உள்ளம் உயிர்
வளமை செழுமை
வண்ணம் மின்னல்
தன்மை தனிமை
மனிதம் புனிதம்
மஞ்சள் மாட்சி
பக்தி பாசம்
மாண்பு நோன்பு
யாவும் யாவும்
தீபம் தீபம்

0

அகந்தை அறுப்பதும்
அமைதி விளைப்பதும்
தீபம் தீபம்

வக்கிரம் எரிப்பதும்
வஞ்சம் தகர்ப்பதும்
தீபம் தீபம்

நரகம் ஒழிப்பதும்
சொர்க்கம் மீட்பதும்
தீபம் தீபம்

வாழ்க்கை தருவதும்
வாழச் சொல்வதும்
தீபம் தீபம்

0

தீபமென்றால்
ஒளி
ஆவளி என்றால்
வரிசை
தீப ஆவளி
தீபாவளி

அழகு தீபங்களின்
அறிவு தீபங்களின்
இதய தீபங்களின்
இனிய தீபங்களின்
ஊர்வலம்தான்
தீபாவளி

0

இருளகற்றும் தீபமே
இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி
விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம்
தீய்ந்து கருகட்டும்
துயரங்கள் துரோகங்கள்
எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்

0

இனிய
இதய
தீம்பாவழி
தீபவொளி
தீபாவளி வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி
16

பூரித்துப் பூரித்துப்
பத்தே நிமிடங்களில்
பன்மடங்காய்ப் பெருத்துவிட்டேன்

எத்தனை ஜென்மங்கள் கழித்து
உன் யாழிசையை
என் செவிக் கூடத்தில்
இதயவாசம் மணக்க மணக்க
மீட்டுகின்றாய்

உன் பனிமுகம் கண்டறியா
என் கண்கள் கொதிக்கின்றன

ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன்

பேருந்து நிறுத்தத்தில்
ஒரு நிமிடம் விழிமூடி
மௌன தீபம் ஏற்றலாம்

பார்த்தால் பசிதீரும் என்று
முணுமுணுத்துக்கொண்டே
ஏதோ ஓர் பேருந்தில்
இலக்கின்றி ஏறிக்கொள்ளலாம்

என் பெயரை நானே சத்தமாய்க் கூவி
ஏதேனும் ஓர் ஐம்பது கிலோ
திரும்பிப் பார்க்கிறதா என்று
தமிழ் சினிமாவைப் போல் பித்தாடலாம்

அல்லது
இதில் எதையும் செய்யாதே
சிறகுகளைக் காற்றில் கழுவிக்கொண்டு
பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம்

சொல்...
உனக்குத்தான் என்மீது
கொஞ்சமோ கொஞ்சமாய்க்
கொஞ்சிக் குதித்தாடும்
நெஞ்சத் துடிப்பிருக்கிறதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இல்லறம்

இல்லமதில்
வெல்லம்
இரு
பிள்ளை உள்ளம்
ஓர் ஊரில் ஒரு வெள்ளை உள்ள எலி

ஓர் ஊரில்
ஒரு வெள்ளை உள்ள எலி
.
சின்னஞ்சிறு பொந்து
உற்சாக உலகம்
.
நெல்லோடு
கடலையும் பருப்பும்
.
பொழுதுக்கும்
சிரிப்பும் விளையாட்டும்
.
ஓர் இருளில்
மொத்தமாய்க் களவுபோனது
நெல் கடலை பருப்பு
.
தவித்தது
தவமிருந்து துடித்தது
.
நாள்
வாரமானது
வாரம் வருடமானது
.
கறுத்துப் போனது
சிறுத்துப் போனது
.
செவிகள்
சிதைந்துவிட்டன
.
கண்கள்
விழுந்துவிட்டன
.
நாவின் தாகம்
உயிரில் ஓலம்
.
இன்னும் ஓர் இருளில்
தங்கத்தால் ஒரு பொறி
தகதகப்பாய் உள்ளே
தேங்காய்க் கீற்று
.
எத்தனை வாசம்
எத்தனை வசீகரம்
.
பசியே
பதார்த்தத்தின் ருசி
.
அச்சத்தால்
பொந்துக்குள் பொந்துசெய்து
புதைந்துகொண்டது எலி
.
உயிரைப் பிளந்து
தாக மையத்தில் புறட்டி எடுத்தது
தேங்காய்க் கீற்று
.
மதி
மயங்குவதில்லை
ஆனால்
பசியோ விடுவதில்லை
.
இன்றோடு பொறிக்குள்
இருபது வருடங்கள்
.
தேங்காய்க் கீற்று எங்கே
நெல்மணிகள் எங்கே
கடலையும் பருப்பும் எங்கே
.
கம்பிகளுக்கிடையில்
கடுங்கொடும் பட்டினியில்
ஏக்கத்தின் விசித்திர திசைகளில்
கிழிந்தழியும் எண்ணங்களில்...

15 ஹஜ் என்ற புனிதப் பயணம் ஏன்?

ஹஜ் என்னும் தியாகத் திருநாள் எப்படி வந்தது?

பெற்ற பிள்ளையையே
தனக்குப் பலிதருமாரு
இறைவன் கனவில் வந்து
கேட்டதாகக் கூறி
தியாகம் செய்ய முற்படுகிறார்
பக்தர்

மகனும்
தானே முன்வந்து
பலிபீடத்தில் தலைவைத்து
இறைவனுக்காக
வெட்டுப்படக் காத்திருக்கிறான்

கொடுவாள் எடுத்து
ஓங்கி வெட்டுகிறார்
பக்தர்

ஆனால்
அந்தக் கூர் வாளோ
வெட்ட மறுக்கிறது

சாத்தான் கூட
ஓடிவந்து தடுக்கிறான்
வெட்டாதே வெட்டாதே
என்று கூவுகிறான்

பின்னர்
இறைவனுக்குப்  பலியிடுதல்
வேண்டாம் - ஏனெனில்
இறைவன் தேவைகளற்றவன்

பலியிடத்தான் வேண்டுமெனில்
அதற்கு ஓர் ஆடு போதும் என்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது

கருணை நிறைகிறது

மனித உயிரைப் பலியிடுவது
தியாகம் அல்ல என்று மறுத்த
இறைவனின் கட்டளை வந்த
நாளைத்தான்
தியாகத் திருநாள்
என்று அழைக்கிறார்கள்

நரபலி மறுத்து
மனிதத்தைக் காத்தத்
திருநாள்தான் ஹஜ் பெருநாள்

உண்பதற்கே அன்றி
விலங்குகளை பலியிடுதல்
கூடாது என்பதே இஸ்லாம்

ஆகவேதான்
ஆகப் பழைய
வழமை காரணமாக
பலியிடப்படும் ஆடுகளும்
உறவுகளுக்கும் உலகுக்கும்
பகிர்ந்தளிக்கப்படுகிறது

ஆடுகளைப் பலியிடுதலும்
இறைவனின் தேவையல்ல
இறைவன் தேவைகளற்றவன்

இறைவன்
பெரிதும் விரும்பும்
ஒப்பிலா
பலி ஒன்று இருக்கிறது

மனிதனே முயன்று
மனிதனுக்குள் இருக்கும்
தீயவற்றை பலியிடுதலே
அது

அஸ்ஸலாமு அலைக்கும்

*

ஹஜ் பெருநாள் என்றால் என்ன என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இன்றும் அலுவலகத்தில் என்னிடம் கேட்டார்கள். வெள்ளைக்கார நாவில் ஈத் முபாரக் என்ற வாழ்த்தைப் போராடிப் பதியவைத்தேன். அழகாகவே வாழ்த்துச் சொன்னார்கள் ;-)

ஹஜ் பெருநாள் என்றால் என்ன? எப்படி வந்தது? ஏன் புனிதப் பயணம்?

முதலில் இந்த என் கண்ணோட்டத்தை வாசியுங்கள், பின் இறுதியாக ஹஜ் பெருநாள் எப்படி வந்தது என்ற வரலாற்றை வாசிக்கலாம்,

இஸ்லாம் மார்க்கத்தில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடலும் மனமும் உறுதியும் தூய்மையும் ஆகின்றன.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது.

சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது.

அந்தத் தொழுகைக்குச் செல்லும்முன் பலரும் குளித்து விடுவார்கள்.

அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேரத்தின் ஓசோன் காற்றை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது.

அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது.

உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவின் பல நிலைகளைப் போன்றது.

நெற்றி தரையில் தொடும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது.

இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும்.

இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும்.

அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனம் முழுமையான நம்பிக்கையைப் பெறுவதால், வாழ்வின் சுமைகள் பெரிதாகத் தெரிவதில்லை.

அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அன்பு கருணை ஈவு இரக்கம் என்ற உயர்ந்த மனம் வளர்கிறது.

அதிகாலை நாம் கேட்கும் பாடலோ படிக்கும் பாடமோ நம் மனதைவிட்டு எளிதில் நீங்குவதில்லை.

ஆகவே அதிகாலையிலேயே தொழுதுவிட்டால், தீய எண்ணங்கள் மனதில் தோன்றாது.

இந்த நிலை மெல்ல மெல்ல பலவீனம் அடைவதற்குள் அடுத்த தொழுகை வந்துவிடும்.

அந்த இரண்டாம் தொழுகை உச்சி வேளையில் இருக்கும்.

அதுவும் அதைத் தொடர்ந்த மற்ற தொழுகைகளும் தரும் தாக்கம் குறுகிய காலமே நீடிக்கும் என்பதாலும், மனச் சிதறல்கள் அதிகம் உள்ள பொழுதுகள் இவை என்பதாலும் அடுத்தடுத்த தொழுகைகள் விரைவில் வந்துவிடுகின்றன.

குத்துமதிப்பாக அதிகாலை ஐந்து மணிக்கு முதல் தொழுகையும், மதியம் பனிரண்டரை மணிக்கு இரண்டாம் தொழுகையும், பின்மதியம் மூன்றரை மணிக்கு மூன்றாம் தொழுகையும், மாலை ஆறு மணிக்கு நான்காம் தொழுகையும் பின்மாலை எட்டு மணிக்கு நாளின் இறுதித் தொழுகையான ஐந்தாம் தொழுகையும் இருக்கும்.

சரியான தொழுகை நேரம் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறும்.

அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் பாங்கு என்ற தொழுகை அழைப்பின் மூலமாகவும் தொழுகை நேரத்தை அவ்வப்போது அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு முறை தொழுகைக்குச் செல்லும்போதும் உடலைத் தூய்மைப் படுத்த வேண்டும்.

மனதைத் தொழுகைக்காகத் தயார் செய்யவேண்டும்.

அதன்வழியே மனத்தூய்மைக்கு ஏற்றதாய் மனம் மாற்றிக்கொள்ளப்படும்.

இந்தத் தொழுகையை தனித்தனியே தொழலாம் என்றாலும் பள்ளிவாசல் போய் நாலுபேரோடு தொழுவதையே இஸ்லாம் விரும்புகிறது.

இதன்மூலம் பிறரோடு உறவு வளர்வதையும் சகோதரத்துவத்தையும் மனிதர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறது.

மற்ற தினங்களில் அப்படி சேர்ந்து தொழுகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் கட்டாயம் உச்சி நேர இரண்டாம் தொழுகையின்போது பள்ளிவாசலில் அல்லது ஒரு பொது இடத்தில் ஒன்றாய்க் கூடி ஜும்மா என்ற சிறப்புத் தொழுகையோடு தொழவேண்டும்.

இந்தத் தொழுகைக்கு குறைந்தது நாற்பது பேர்களாகவது சேர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் இஸ்லாம் வைத்திருக்கிறது.

அந்த சிறப்புத் தொழுகையின்போது தொழுகை நடத்தும் இமாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை குத்பா என்ற பெயரில் வழங்குவார். நல்வழி செல்ல மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் ஓர் உரையாக நிகழ்த்தப்படும்.

இதன் மூலமாக ஊரில் உள்ள அனைவரும் சந்திக்கவும் ஒன்றுகூடவும் உறவு வளர்க்கவும் சகோதரத்துவம் கொள்ளவும் உடல் காக்கவும் மன உறுதி பெறவும் வழி அமைகிறது.

ஹஜ் என்பதும் இதே போல உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் ஓரிடத்தில் வந்து தொழுவதே ஆகும்.

அதோடு அந்த புண்ணியத் தளத்தைக் காணும்போது உடலில் ஏற்படும் நேர்மறை அதிர்வுகள் அல்லது மனதில் ஏற்படும் அபார உணர்வுகள் பக்தியை வளர்க்கக் கூடியதாய் இருக்கின்றன.

 அதைத் தவிர கொஞ்சம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் ஹஜ்ஜில் உண்டு.

முற்போக்கு மதமான இஸ்லாத்தில்கூட எப்படி வந்தன இம்மாதிரி சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

ஹஜ் செல்லும்போது சில நிபந்தனைகள் உண்டு.

உடல் தூய்மை மனத் தூய்மை காக்கும் செயலின் உச்சமாக இது மதிக்கப்படுகிறது.

ஆகவே ஹஜ் செய்ய முடிவு செய்தவர் நல்லதையே நினைத்து நல்லவராகவே வாழவேண்டும்.

ஹஜ் செல்லும்முன் ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவராய்த் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஹஜ் சென்று திரும்பியதும் அந்த நினைவிலேயே, தவறுகளுக்கு அஞ்சி நடந்து, உடல், உள்ளம், ஊர், உலகம் அத்தனையும் தூய்மையாய் மலர வாழவேண்டும்.

இதன்மூலம் பரிசுத்தமான, அமைதியான, நிறைவான, குற்றங்கள் அற்ற ஓர் உலக சமுதாயம் உருவாக இஸ்லாம் வழிவகுக்கிறது.

அதற்கான கட்டுப்பாடுதான் ஒவ்வொரு நாள் தொழுகையிலும் மெல்ல மெல்ல வளர்க்கப்படுகிறது.

நொடியும் மாறாத நம்பிக்கை
நாளில் ஐந்து முறை தொழுகை
இயலும் போதெல்லாம் ஜக்காத்
வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்

இந்த ஐந்து கடமைகளும்தான் இஸ்லாம் மார்க்கத்தில் ஒவ்வொருவரையும் நல்லொழுக்க வழியில் செல்லப் பயிற்சிதரும் கருவிகள்




2 தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

நரபலி மறுத்து
மனிதம் காத்தத் திருநாள்தான்
ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே
மும்முறை கனவில் வந்து
பலியிடக் கேட்டதாகக் கூறி
இறைவனுக்குத் தியாகம் செய்ய
முற்படுகிறார் பக்தர்

ஆனால்
கூர் வாளும்
வெட்ட மறுக்கிறது

சாத்தான்கூட
தடுக்கின்றான்

பின்னரோ
பலியிடுவதெனில்
ஓர் ஆடு போதுமென்று
இறைக் கட்டளை வந்ததாக
காட்சி மாறுகிறது
கருணை நிறைகிறது

மனித உயிர் பலியிடுவது
தியாகமன்று
உன் உள்ளத்தினின்று
தீயவற்றைப் பலியிடுவதே
தியாகம் என்றறியவைத்து
நரபலியை மறுதலித்த இறைவனின்
கட்டளை வந்த நாளே
தியாகத் திருநாள்

உலகமக்கள் யாவருக்கும்
உயர்வான உறுதியான உண்மையான
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
இது உங்கள் கவிதை

எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய
என் கவிதைகளின்
முதல் ரசிகனும்
முதல் விமரிசகனும்
நானல்லவா
15

கண்ணுக்குக் கனவு வேண்டாமா
கனவுக்குச் சிறகு வேண்டாமா
சிறகுக்குக் கவிதை வேண்டாமா
கவிதைக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

நிலவுக்கு முகம் வேண்டாமா
முகத்துக்கு இதழ் வேண்டாமா
இதழுக்கு முத்தம் வேண்டாமா
முத்தத்துக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா


உயிருக்கு இளமை வேண்டாமா
இளமைக்குச் சுகம் வேண்டாமா
சுகத்துக்குத் தழுவல் வேண்டாமா
தழுவலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

ரசனைக்கு உணர்வு வேண்டாமா
உணர்வுக்கு உள்ளம் வேண்டாமா
உள்ளத்துக்குக் காதல் வேண்டாமா
காதலுக்கு நான் வேண்டாமா
அன்பே நீ எனக்கு வேண்டாமா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
14

உயிரின் இருப்பிடம்
உதடுகளில் இடமாற்றம்
முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 
நமக்கு எவ்வளவு
நேசத்துக்குரியவர் என்றாலும்
ஊழல் வழக்கில் சிக்கி
நிரூபிக்கப்பட்டுவிட்டால்
படுபாவி என்று எரித்துக்
கொண்டாடத்தான் வேண்டும்


அம்மாவாய்
இருந்தால் என்ன
ஐயாவாய்
இருந்தால் என்ன

மக்கள் சொத்து
நாடு நலம்பெற
ஒப்படைக்கப்படும்போது

அந்த நம்பிக்கைக்கு
ஒரு பைசா
கலங்கம் விளைவித்தாலும்
அது
சுண்டெலியாய் இருந்தாலும்
பெருச்சாளியாய் இருந்தாலும்
பொறியில் அடைக்கத்தானே வேண்டும்

நாடு வேண்டுமா
நாசம் வேண்டுமா

இனியாவது
முடிவு செய்ய வேண்டாமா?
நெருப்பில் விழுந்தாலும்...

காதலைத் தொட்டாயிற்று
கல்யாணமும் முடித்தாயிற்று

இனியென்ன?

இதோ இதோ
இந்த வாழ்க்கையின்
இனிப்பான அடுத்த கட்டம்

ஆம்
பெற்றெடுத்துக் 
கொஞ்சுவது

அந்தப் பிஞ்சுகளின்
சின்னச் சின்ன ஆசைகளை
நிறைவேற்றி நிறைவேற்றி
நிறையாமல் வெறி கொள்வது

வாழ்க்கையின்
சர்க்கரைக் காலம்

வர்ணங்களுக்குள்
விழிகள் விழுந்து
நீச்சலடிக்கும் காலம்

உயிரையும்
உவப்போடு வழங்க
உரங்கொண்ட
சாதிப்புக் காலம்

அடடா
அந்தப் பிஞ்சுகள்
வளரவே கூடாது

வளர்ந்துவிட்டால்?

சட்டுச் சட்டென்று 
அவர்களும்
பெற்றெடுத்துப் பெற்றெடுத்து
பரிதவித்து நடுங்கும் கரங்களில்
பனி ரோசாக்கள் பத்துப்பதினாறை
கொட்டித் தந்துவிட வேண்டும்

பிஞ்சுகளின் பிஞ்சுகளும்
இந்த மரத்தில்தான்
ஊஞ்சல் கட்டி ஆட வேண்டும் 

ஊஞ்சலாட
வழியற்ற மரங்கள்
உடைந்து நொறுங்கி
நெருப்பில் விழுந்தாலும்
வேகாமல்லவா கிடந்துழலும்

அன்புடன் புகாரி
கடவுள்
இல்லை என்று சொல்வதும்
மதங்கள்
இல்லை என்று சொல்வதும்
சாதிகள்
இல்லை என்று சொல்வதும்
அவற்றை
இல்லை என்று
சொல்வதற்காக அல்ல

மூடநம்பிக்கைகள் கூடாது
என்று சொல்வதற்காக
காட்டுமிராண்டித்தனம் கூடாது
என்று சொல்வதற்காக
வன்முறை கூடாது
என்று சொல்வதற்காக
தீண்டாமை கூடாது
என்று சொல்வதற்காக

வேரையே அறுக்கச் சொல்வது
விளைவதெல்லாம்
விசமாக இருப்பதால் மட்டும்தான்


13

நீ
குழைந்த
வார்த்தைகளை
நான்
எப்படிக் கொண்டாடுவேன்
என்றே தெரியவில்லை

உதிர்த்த
நீ
மறந்துபோவாயோ
தெரியாது

ஏற்ற நானோ
தொலைந்தே போனேன்

தொலைந்தேன் என்றதும்
சுயம் தொலைத்தேனோ
என்று மருளாதே

நான் நானாக மீண்டேன்
வரமாக

ஈரமற்ற
வெளிகளிலிருந்து
மழை அவிழும் சோலைக்குள்
இந்தக் கவிவண்டை மீட்டுத்தந்த
உன் வார்த்தைப் பூக்களைப்
பாராட்டுகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இரத்தவழி என்றில்லை

ஆதரவைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

அன்பைத்
தேடித் தவிக்கும் கோடுகளும்

சந்திக்கும்
தற்செயல் புள்ளிகள்தாம்

உறவெனும்
அற்புத ஆரத்திற்கான
அத்திவார முத்துக்கள்

ஓர் உறவு
உயிர் போகும்வரைக்கும்
நிலைத்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஆனால்
இருக்கும்வரை
இறக்கும்வரைக்கான
சுக நினைவுகளைத் தருவதாய்
இருக்க வேண்டும்




12

உதடுகளின் ஈரத்தில்
உயிர்களின் சுவாலை
உன் முத்தம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
11

முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது

அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்

இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா

அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்

சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு

மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்

அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது

விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே

பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ

இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிட்டுக் குருவியின்
சிறகுகள் தொட்டேன்

கைக்குள் அள்ளி
காற்றுக்கும் நோகாமல்
அப்ப்ப்படியே பொத்திக்கொள்ள
உள்மனப் பிஞ்சு உடைந்து தவித்தது

குவிந்து குவிந்தே பீறிட்ட இதழ்கள்
முத்த ராகங்களைச மூச்சழிய இசைக்க
மொத்த நரம்புகளிலும்
முரசுகொட்டித் துடித்தன

பஞ்சு பஞ்சுப் பரிசங்களில்
பறிகொடுத்த நெஞ்சக்குழி
இறகின் முடிக்கூட்டில்
இமை மூடிய கிறக்கவிழி

தத்திய குருவியின்
பொன்னழகில் லயித்திருந்தேன்
பொத்திய மறுநிமிடம்
பறந்தே போனது

எப்படி மறந்தேன்
இப்போது அறிந்தேன்
சிட்டுக்குருவியின்
சிறகினைத் தொட்டால்...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
10

இந்தக் காலையும்
உன் நினைவுகளோடுதான்
எழுகிறேன்

இன்று உன்னைச்
சந்திக்க மாட்டோமா
என்ற ஏக்கம்
என்னைத் தேநீராய் எடுத்து
தன் நெருப்பு உதடுகளால்
உறிஞ்சுகிறது

நாளெல்லாம்
பொழுதெல்லாம்
உன்னோடு
ஆயிரம் ஆயிரம்
கதைகள் பேசவேண்டும்
என்ற தவிப்பு
வார்த்தைகளைக் குவித்து
அதனுள்
என்னைக் கவ்விக்கொண்டு
மூடிக்கொள்கிறது

நான்
இருந்துகொண்டே
இல்லாமல் போகிறேன்

நான் இல்லாமல்
போகும் பொழுதெல்லாம்
புரிந்துகொள்கிறேன்

உன்னிடம்தான்
ஓடிவந்திருப்பேன் என்று

நான்
இருக்கும் பொழுதுகளை
கிளறிப் பார்க்கிறேன்

நீ எங்கே
என்ற தேடலைத் தவிர
அதில்
வேறொன்றும் இல்லை

நான் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன்

உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் இருக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
09

என்
இதயச் சுடுகாட்டில்
உன்
நினைவுச் சடலங்களைப்
புதைக்க
பிஞ்சு விரல்களுடன்
சென்றேன்

முட்கள் கிடந்தன

*

இரும்புக் கம்பிகளுடன்
சென்றேன்

இரத்தம் கசிந்தது

*

வெப்பக் கண்ணீருடன்
சென்றேன்

புதைந்து கொண்டன

*

ஆனால்
என்
பிரியமானவளே

வினாடி இமைகள்
நிமிசக்கண்
தழுவும்முன்
செத்த சடலங்கள்
சிலிர்த்துக் கொண்டன

பிசாசுகளாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
08

உன் சோலையில்
என் கிளிகள் சிறகடிக்கின்றன

உன் சங்கினில்
என் காற்று இசைக்கின்றது

உன் குளத்தினில்
என் மீன்கள் குதிக்கின்றன

உன் வானத்தில்
என் நட்சத்திரங்கள் மினுக்குகின்றன

உன் பஞ்சினில்
என் நெருப்பு பத்திக்கொள்கிறது

நீயோ
ஏதுமறியாதவள் போல்
என்னிடம்
பொய்யாய்க் காட்டித் திரிகிறாய்

போதுமடீ
என் பொல்லாதவளே

காலமும் காதலும்
சேர்ந்திருந்தால்தான்
அதன் பெயர்
பிரபஞ்சம்

வா வா
வாழ்வோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
07

மாரெடுத்து
மழலைக்கு ஊட்டிவிடும்
தாய்ப் பாசம்

உயிரெடுத்து
உயிருக்குள் ஊட்டிவிடும்
காதல் பாசம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


நான் முதன் முதலில் ’போட்டோ ஸ்டுடியோ’வுக்குச் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுதான்.

கல்லூரி முடித்ததும் என்னை ஜெர்மனிக்க்குப் பொட்டலம் கட்ட உறவினர் ஒருவர் முயன்றார். அதற்கு ‘பாஸ்போர்ட்’ எடுக்க எடுத்த படம் இது.


பத்திரிகையில் வெளியான முதல் கவிதையல்ல இது. அது அலிபாபா என்ற இதழில் வெளியானது. அக்கவிதையும் இன்று என்னிடம் இல்லை. இது ஞானபாரதி வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியரா இருந்த தாய் இதழில் ஆசிரியர் பக்கத்தில் வெளியானது. நான் அப்போது சவுதியில் இருக்கிறேன். இந்தப் படம் என்னைக் கவர்ந்தது. படத்தில் ஏதேனும் விசேடமாய்க் காண்கிறீர்களா என்று சொல்லுங்கள்


இப்ப நான் இப்படி நின்றால் தலை பூமியில் புதைந்துவிடும்.

படிக்கின்ற காலங்களில் எங்கள் ஊர் ஏரிக்குச் சென்று புற்களில் அமர்ந்து படித்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.

அப்போது துபாய் கேமராவோடு என் நண்பன் அங்கே வந்தான். ஒரு போஸ் கொடு புகைப்படம் எடுக்கிறேன் என்றான்.

கொடுத்த போஸ் இதுதான் ‘;-)


இது நான் ஏறிய முதல் மேடை. இது எனக்கு முதல் புகைப்படமும் கூட

முதல் மேடையே கவிதை மேடைதான். இதில் நான் வாசிக்கும் கவிதை என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது.

யாரோ ஒரு புகைப்படக்காரர் என்னைப் புகைப்படம் எடுத்து உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டார். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என் சிறுவயது புகைப்படங்களைக் காணவேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. ஆனால் எவருமே எடுத்து வைக்கவில்லை. இந்த மூஞ்சிக்கெல்லாம் புகைப்படம் கிடையாது என்று விட்டுவிட்டார்கள்

கவிதைகள் தின வாழ்த்துக்கள்


911, செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள். அன்றுதான் அந்த உச்சி வானம் உடைந்து விழுந்தது.

பாரதி நினைவு நாளுக்கு நான் கவிதை எழுதவில்லை, ஒரு காவியமே படைத்திருக்கிறேன்.

அந்தக் காவியம் பல்லாயிரம் வரிகளைக் கொண்டதல்ல, இரண்டே இரண்டு வரிகளையே கொண்டது.

ஆனால் அந்த இரு வரிகளும் உங்கள் இதயங்களில் விழுந்ததும், ஈராயிரம் வரிகளாய்ப் பல்கிப் பெறுக வேண்டும். அதுவே என் ஆசை.

இதோ அந்த இருவரிக் காவியம் உங்களுக்காக:


கவிராசன் காவியம்


செல்லம்மாள் சேலை கேட்டாள்
பாரதி நூல் கொடுத்தான்

பாட்டுக்குப் பொன்னாடை
பாடைக்குப் பதினாலேபேர்
அன்பின் அஞ்சலி
*
புலரும் அதிகாலைப்
பொழுதுகளை முத்திக்கொண்டு
செய்தித் தாள்களுக்குள்
செல்லவியலா தூரமெலாம்
சென்று கடந்தவர்
அவரே செய்தியானதையும்
இன்று வாசிப்பாரா
*
சற்றும் அயராமல்
சதா உழைத்தவர் அமரர் குதா
பணி ஓய்வு பெற்றாரென்று
பத்தாண்டு முன்பே சொன்னார்கள்
அது பச்சைப் பொய்
இதோ இன்றுதான்
தீரா நித்திரைக்குள்
திரும்பா பயணத்தில்
விரும்பா ஓய்வினைப் பெறுகிறார்
*
ஒப்பந்தப் பணிகளுக்கு
ஒப்புதல் தரும் பணி செய்தும்
நிர்பந்தக் காலங்களிலும்
நீளாக் கரத்தோடு நிமிர்ந்து நின்ற
அரசு அதிகாரி
ஆம்
அறந்தாங்கியில் பிறந்தவர்
அறந்தாங்கியே வாழ்ந்தார்
*
காய்த்துக் குழுங்கிய குதா மரத்தில்
கல்லெறிந்தோர் சிலர்
சொல்லெறிந்தோர் சிலர்
கண்ணெறிந்தோர் பலர்
ஆயினும் எவர்க்கும்
காயங்களை எறிந்ததே இல்லை
கனிகளையே சொரிந்தது
அந்த அதிசயக் குதா மரம்
*
அழகில் இவர்
ஆறடி எம்ஜியார்
கட்டுடல் கொண்ட
எட்டடுக்கு மாளிகை
உதயக் கதிர்களால்
உருவான நிறம்
பணிவுகளில் அருவி நீர்
பந்தங்களில் ஈர நிலம்
உழைப்பினில் புயல் காற்று
பொறுப்பினில் அணையா நெருப்பு
அன்பினில் விரிகின்ற வானம்
இப்படியே
அடுக்கிக்கொண்டே போகலாம்தான்
ஆனால்
ஒற்றைச் சொல்லில் சொல்ல
தேடுகிறேன்
எண்ணக் கிடங்குகளில்
கிடைத்ததும்
சொல்லப் போவதில்லை
சொல்லாமல்
புரிந்துபோகும் சொல்லைச்
சொல்லியா புரியவைக்க முடியும்
*
கம்மங்காட்டின் கந்தகச் சூட்டில்
வறுமை தீய்த்த கரித்துண்டுக் கூட்டில்
விளைந்தது இந்த வைரம்
தானே வெடித்து
தானே வளர்ந்து
தானே நிமிர்ந்து
தானே தளைத்து
தன்னோடு ஒட்டிய
தகரங்களுக்கும்
தங்கமுலாம் பூசிய
பொற்கனிப் பயிர்
*
முதன்முதலில் கண்டபோது
கடைநிலை ஊழியர்போல்
பணிவோடு நின்றார்
மகளைக் கட்டிமுடித்து
அவர் பணியாற்றிய
காடம்பாறைக்குச் சென்றேன்
அசந்தே போனேன்
ஊரே கூடி நின்று
மன்னர் வந்ததுபோல்
மரியாதை தந்தார்கள்
*
காடம்பாறை அணை கட்டி
மின்சாரம் எடுத்தவர்
கடப்பாரை உடற்கட்டில்
பாலாடை மனங் கொண்டவர்
*
அந்த
மனம் போலவே
பெற்றெடுத்த மக்களுக்கு
மன்னர்களின் பெயர் சூட்டினார்
மகளை ராணி என்றே அழைத்தார்
மகன்களிரண்டு
மகளொன்று என்று
பிள்ளைகள் மூன்றை
நிறைவாய்ப் பெற்றெடுத்தார்
இருந்தும்
மூன்றாவதாயும்
பெண்ணே பிறந்துவிட்ட வீட்டிலிருந்து
பிஞ்சு தேவதையை
இரண்டாம் மகளாய்த் தத்தெடுத்தார்
தத்தெடுத்த மலரை
பெத்தெடுத்த பூக்களைவிட
பொத்திப் பொத்தி வளர்த்தார்
வாழ்நாளெல்லாம் எவரும்
பொன்னும் பொருளுமாய்
வாரியே இறைத்தாலும்
இந்தக் கொடைக்கு
ஈடாகுமா
*
பத்து வயதில்
பறிகொடுத்தேன்
பதினைந்து வருடம் கழித்து
இவரிடம்தான் கண்டெடுத்தேன்
தந்தையின் நேசத்தை
தந்தவரைத்
தொலைத்துவிட்டேன்
படுக்கை நாளில்
பக்கத்தில் அமரும்
பாக்கியம் பெறா பாவியானேன்
நம்பினேன்
இரும்புத் தேகமல்லவா
ஈராண்டேனும் இருப்பாரென்று
நம்பிக்கையைத் தீய்த்தழித்த
மரணத்தை என்செய்வேன்
*
கண்விட்டுப் பிரியும்
கண்ணின் மணிகள் கோத்து
மண்விட்டுப் பிரிந்த
மாமனாருக்கு என் அஞ்சலி
*
சாவே சாவே சாவாய் சாவா 

சொல்ல வேண்டியவற்றைச்
சொல்லும்முன்
இழுத்துச் செல்வது
அநாகரிகமில்லையா

காணவிரும்பியதைக்
காணும்முன்
கண்ணடைத்துச் செல்வது
கொடுமையில்லையா

சொல்லிவிட்டுச் செல்ல
நெஞ்சற்றவன் மனிதன் என்றா
இத்தனைக் கேவலமாய்
நடத்துகிறாய்

எந்த ஒரு
பண்புமே இல்லா
மூர்க்கமே முட்டாளே
மரணமே

மாண்ட மறுநொடியே
உன்னைக் கண்டுபிடித்து
மண்டை பிளக்க முடிந்தால்
அதைச் செய்யா உயிர்
ஒன்றும் இரா

மகா கேடுகெட்ட
மனிதப் பிறவிகூட
உன்னைக் காட்டிலும்
மிக உயர் பண்புகளைப்
பெற்றிருப்பான்

சாவே சாவே
சாவாய் சாவே
கையறு நிலை

ஆறுதலே
சொல்ல முடியா இடத்தில்
எப்படித்தான் நிற்கிறேன்
என்னதான் பேசுகிறேன்

என்ன பேசி
எதைத் தந்துவிடுவேன்


அச்சமாய்
அவமானமாய்
ஆத்திரமாய்
வக்கற்ற கொதிப்பில்
விழிகுத்திய நிலையில்

சாவுக்குமுன்
ஏமாந்து
தோற்று
துவண்டு
வெதும்பி நிற்கும்
நிலை ஒன்றுதான்
உச்சத்திலும் உச்சமான
ஒரே
கையறு நிலையோ...

நெடுபுலம் பெயர்ந்தவனிடம்...

இந்நொடி சூடாய் இருந்த
ரத்தத்திலிருந்தும்
சதையிலிருந்தும்
என்னதான் பிரிந்தது

பிரிந்தது
பிரிந்தேதான் போனதா
அல்லது
என்னைக் காணவும்
கண்டங்கள் தாண்டி
என்னருகே வந்து

காற்றென நிற்கிறதா
 

எப்படி அறிவேன்
நான்
யாரிடம் கேட்பேன்
கொடுமிருகம்

எள்ளளவும்
கருணையற்ற
எறும்பின் கழிவளவும்
அன்பற்ற
மரியாதையே
தெரியாத
மன்னிக்கவே
முடியாத
கொடுமிருகம்
அகால மரணம்




சாவே
இல்லாதது
சாவு


இறைவன் இல்லை

இறைவன் இல்லை
அன்பும் கருணையுமே இறைவன்

இப்படி யார் சொல்லி இருப்பார்கள்? தெரியுமா உங்களுக்கு? சொன்னால் நம்பமாட்டீர்கள். இஸ்லாம் என்னும் மார்க்கம்தான் இப்படிச் சொல்கிறது

”லா-இலாஹ இல்லல்லாஹ்” என்பது முதல் கலிமா என்று சொல்லப்படும் இஸ்லாத்தின் மார்க்க வாசகங்களுள் முதலாமானது.

லா என்றால் இல்லை
இலாஹ என்றால் இறைவன்
இல் என்றால் மட்டும்/ஆனால்/தவிர
அல்லாஹ் என்றால்...

அல்லாஹ் என்றால்?

அதற்கான பொருள் குர்-ஆனில் முதல் வரியிலேயே தரப்பட்டுள்ளது

”பிஸ்மில்லாஹ் இர்ரஹ்மான் நிர்ரஹீம்”

பிஸ்மில்லாஹ் என்றால் அல்லாஹ்வின் பெயரால்
ரஹ்மானி என்றால் அளவில்லா அன்புடையோன்
ரஹீமி என்றால் நிகரில்லா கருணையுடையோன்

அதாவது இறைவன் என்றால் ”அளவற்ற கருணை நிகரற்ற அன்பு”



 
06

உன்
உள்ளம் தொட்ட
விரல்கள்
அப்படியே
ஈரமாய் இருக்கின்றன

கோடி சூரியன்கள்  வந்து
சுட்டெரித்தாலும்
அது
காய்ந்துவிடப் போவதே
இல்லை செல்லம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
05

என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

அதன் வேரில் நிரம்பும் எண்ணெய்
என்னைப் பற்றிய நினைவுகள்

அதன் திரியில் எரியும் தீபம்
என் மீதான காதல்

அதைச் சூழ்ந்து உணவாகும் காற்று
என் மீதான கனவுகள்

அது வீசும் ஒளியில்
 எனக்கான ஏக்கம்
 வெளிச்சமாய் இருக்கிறது

 அது ஆடும் நடனத்தில்
 எனக்கான கண்ணீர்
 சிதறித் தெறிக்கிறது
என்னைப் பார்த்து
அசைகிறது
என்னை நினைத்து
எரிகிறது
அருகில் சென்றால்
சுடுகிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
04

மிருகங்களால் ஆனது
மனது

உள்ளுக்குள்ளேயே
ஒன்றையொன்று கொன்று திண்ணும்
பசி கொண்டவைகளால் ஆனது
மனது

காதல் காம்பில்
கண்ணீர்ப் பால் பொழிய
மிருகங்கள் செத்து
வண்ணத்து பூச்சிகள் பறக்கின்றன

மனித இனத்தையே
தேன் பூக்களாக்கி
வாழ்க்கையை ருசிக்கின்றன

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

எதிர்ப்பார்ப்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது
தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்கத் தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும்
ஆனதடீ
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

நாவில்
உன் பெயரணிந்தேன்
என் சுவைகளெல்லாம்
மாறிப்போச்சு

விழியில்
உன் நினைவணிந்தேன்
என் கனவுகளெல்லாம்
பிரபஞ்சமாய் விரிஞ்சுபோச்சு

உயிரில்
உன் உணர்வணிந்தேன்
என் கவிதைகளெல்லாம்
எனை அள்ளிக்கொண்டு
இணைய வெளியெங்கும்
பரந்துபோச்சு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * * *

என்
கண்களுக்கு
வெளியில் ததும்பும்
என் கண்ணீர்
நீ

என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சத்தியம் அசத்தியம்
இரண்டுக்கும் இடையில்
புதிதல்ல போராட்டம்

அறிவை துணிச்சலை
யாசித்தே சத்தியம்

தங்கமுலாப் பொய்களால்
சத்தியத்தின் சங்கறுத்தே
அசத்தியம்

ஆயிரத்து நானூற்று
முப்பத்தைந்து ஆண்டுகளும்
நழுவியே போனால்தான்
என்ன

சத்திய நூல்தானே
நிலைக்கும்

இதோ
அறிவும் துணிச்சலும்
ஐந்தாம் வயதினிலேயே
அதுதான்
புதிய தலைமுறை

சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக
அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்
(குர்-ஆன் 17:81)

அழிக்கவொண்ணாத் தமிழின்பம்

#தமிழ்

இதோ இன்னும் ஒரு சொல்லடுக்கு.

இப்படியான சொல்லடுக்குகளை மேடைகளில் உதிர்க்கும்போது, பொன்னுதிர்வதைப் போல் புன்னகைகள் உதிர்வதைக் காண்கிறேன்.

இழக்க வேண்டுமா என்ன அழிக்கவொண்ணா இத்தமிழ் இன்பத்தை?


கண்ணேறிக் கருத்தேறிக்
        கற்பனைத்தேர் கவிகளேறி
எண்ணேறி எழுத்தேறி
        ஏட்டுத்தேன் கூடுகளேறி
சொல்லேறிச் சுவையேறி
        சொல்லழகுச் சொர்க்கமேறி
எந்நாளும் நீந்துகின்றேன்
         காதல் தமிழ்க் கடலேறி

மேடையேற்றும் தமிழ்

மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.

மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.

செவிப்புலனைச் சிலிர்க்க வைக்கும் சிறப்பு மொழி தமிழ்தான். ஏன்? தமிழன் சங்ககாலம்தொட்டு அதற்கு முன்னும்கூட சொற்களின் சுவைபார்த்துக் கோத்தெடுத்த கவிதைகளையே நேசித்தான். எதுகை என்றும் மோனை என்றும் அசை என்றும் சீர் என்றும் மொழியை அழகுபடுத்தினான். செவி ஒன்றைச் சரியாகக் கேட்டுப் பதிவு செய்துவிட்டால் அவன் உயிர்பிரிந்தாலும் அச்செவி அதை மறப்பதில்லை.

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடீ

என்று பாரதி சொல்கிறான். இதைக் கேட்டால், இறந்துபோன காதலிகூட மீண்டும் உயிர்பெற்று ஓடிவருவாளா இல்லையா? இதையே மொக்கையாய் எழுதினால் உயிரோடு இருக்கும் காதலியும் செத்துப் போவாள் ;-)

என்றும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காகவே ஒரு மொழி தன் இலக்கியத்தை வடிவமைத்திருக்கிறது என்றால் அது தமிழ்தான். ஒரு குறளைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. ஒரு பழமொழியைக் கேட்டுவிட்டால் அது மறக்காது. உதாரணம்...

அறுக்க முடியாதவ இடுப்புல
ஆயிறத்தெட்டு அறிவாள்

படிப்பறிவே இல்லாத மக்களும் தமிழின் சுவைகுன்றாது பாடுவார்கள். அப்படியான பின்னணியைக் கொண்டதுதான் தமிழ் மொழி. உதாரணம் இந்தப் பாட்டு. இதை வைரமுத்து ஒரு திரைப்பாடலுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று நாமறிவோம்.

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை
எழுதி நான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்

எத்தனைதான் நான் என் ஊரைப்பற்றி சொல்லி இருந்தாலும் இப்படிச் சொன்னதற்கு இணை என்று நான் எதனையும் கருதவில்லை

வானூறி மழைபொழியும்
வயலூறி கதிர்வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் உரந்தையில்...

ஆகவேதான் மேடையேறினால் நான் இயன்றவரை தமிழின் தனக்கே தனக்கான சொந்த நடையைப் பின்பற்றி எழுத முயல்வேன். பின் வந்த நடையிலும் தமிழின் சொந்த நடையைக் கலந்து சுவையேற்றி மேடையேற்றுவேன்.

நேற்று ஓர் மேடையேறினேன், அதில் நூலாசிரியரின் ஆற்றலைப் பாராட்டத் தோன்றியது. அதை இப்படி எழுதி ஏற்றினேன் மேடையில். இறுதி வரிகளில் பொதுமைப்படுத்துவதற்காக சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.

ஊற்றுநீர்
மண்ணுடைத்தே வெளியேறும்
உறவுநீர்
கண்ணுடைத்தே கரையேறும்
ஆற்றுநீர்
அலைமிதித்தே கடலேறும்
ஆற்றல்தான்
அனைத்துக்கும் மேலேறும்
ஏற்றவான்
ஏறிக் குடியேறும்
எஃகிரும்புக் கால்களே
ஏற்றந்தான்
மாற்றமே இல்லை
பூமியுங்கள்
தோள்களின் மேலே

Kill the unbelievers wherever you find them

இசுலாம் தொடர்பான தங்கள் பதிவுகளை ஏற்கனவே பார்த்துள்ளேன்,

( “Kill the unbelievers wherever you find them.” Koran 2:191

“Make war on the infidels(non believers of Islam) living in your neighborhood.” Koran 9:123
...
“When opportunity arises, kill the infidels(non believers of Islam) wherever you catch them.” Koran 9:5

“Any religion other than Islam is not acceptable.” Koran 3:85)

-இலங்கை நேசன் இலங்கை

இப்படி ஒரு கருத்தை சென்னையே சிறந்த நகரம் என்று நான் இட்ட ஏற்றுமடலுக்குக் கருத்திடல் பகுதியில் திரு இலங்கை நேசன் எழுதி இருக்கிறார்.

இதற்கான மறுமொழியை நான் இங்கே எழுத இருக்கிறேன். உண்மையறியாது அவர் ’இடையில் வாசித்து’ குழம்பியிருக்கும் ஒன்றைத் தெளிவு படுத்த வருகிறேன்.

பணிச்சுமை காரணமாக நான் சொட்டுச் சொட்டாய் கொட்டும் அருவையாகவே இருக்க முடியும். அதை மட்டும் அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் அத்தனையையும் கொட்டி முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இஸ்லாம் இஸ்லாமியர்களாலேயே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மார்க்கம். மாற்று மதச் சகோதரர்கள் பிழையாகப் புரிந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

”சகோதரனின் அடிபட்ட காலில் சீழ்பிடித்து வேர் அழுகி அதன் காரணமாக உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் அவன் உயிரைக் காக்கும் பொருட்டு சித்த மருத்துவக் குறிப்பிற்கிணங்க, பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இது ஒரு வரலாற்றுக்குக் குறிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து....

”பண்டைத் தமிழன் தன் சகோதரனின் காலை வெட்டி எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்”

இந்த வரிகளை மட்டும் எடுத்து போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டுங்கள். என்ன நடக்கும்?

http://www.tamililquran.com/qurandisp.php?start=2#2:191 இங்கே செல்லுங்கள்

குர்-ஆன் வசனங்கள்:

2:190
2:191
2:192

ஆகியவற்றை வாசியுங்கள்.

பிறகு நாம் நிறைய பேசுவோம் சகோதரரே!


*

முதலில் குர்-ஆனை எப்படி அணுகவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது.

குர்-ஆன் ஒரு மொத்த நூலாக அப்படியே வந்து இறங்கிவிடவில்லை.

நீதிமன்ற வழக்குகளைப் போலவும் அதற்கான தீர்ப்புகளைப் போலவும் தான் பெரும்பாலும் குர்-ஆன் வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய அராபியர்களின் வரலாற்றினைத் தெரிந்துகொண்டு, அதனோடு தொடர்பு படுத்தி வாசிக்கும்போது குர்-ஆன் மிக மிக எளிமையானதாய் இருக்கும்.

குர்-ஆனைப் புரிந்துகொள்ள ஹதீதுகளின் துணை தேவையே இல்லை. ஆனால் அன்றைய வரலாற்றை அறிந்திருந்தால் அது நிறையவே கைகொடுக்கும்.

அண்ணல் முகம்மது நபியின் வரலாறு, அவரின் பிறப்பு முதல் இறப்புவரை சரியாகச் சொல்லும் வரலாறு மிகவும் முக்கியம்.

The Messenger என்ற ஓர் திரைப்படம் அப்படியான வரலாற்றின் தேவையான பகுதிகளைத் தெளிவாகக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=17C6HOp8NIA

இந்தப்படத்தை அழகாகத் தமிழுக்கு மொழிமாற்றி இருக்கிறார்கள். அப்படத்தை நான் உங்கள்திரையில் YouTube கண்டேன் ஆனால் தற்போது அது உரிமம் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை ஒரு முன்னுரையாக மட்டும் எடுத்துக்கொண்டு, அண்ணல் முகம்மது நபியின் வரலாற்றையு அன்றையநாள் அராபியாவையும் பல நூல்கள் வழியாக வாசிக்கலாம். இணையத்திலும் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

*

இலங்கைநேசன் இலங்கை பைபிளுக்கு விவிலியம் என்பதுபோல் குர்ஆனுக்கும் ஏதாவது பெயர் உண்டா

அன்புடன் புகாரி உண்மையைச் சொல்லப்போனால், குர்-ஆனுக்குப் பெயரே இல்லை. வானவர் மூலம் அண்ணல் முகம்மது நபிக்கு இறைவனிடமிருந்து வந்த செய்திகள் தான் குர்-ஆன் என்று சொல்லப்பட்டது. குர்-ஆன் என்றால் ‘ஓதப்பட்டது’ என்று பொருள். இறைவனின் திருமறையில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட குர்-ஆன் என்ற சொல்லையே அந்தத் தொகுப்புக்குப் பெயராகச் சூட்டினர். மற்றபடி இது ஒரு நூல், இந்நூலின் பெயர் குர்-ஆன் என்று இறைவன் சொன்னதாக நான் எங்கும் கண்டதில்லை. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் இலங்கைநேசன் இலங்கை. நிறைய கேளுங்கள், அப்போதுதான் நான் எதைச் சொல்லலாம் என்ற முடிவுக்கு வரமுடியும். உங்கள் கேள்விகள் மெமையாக இருக்க வேண்டும் என்றில்லை, குத்தீட்டியாகவும் இருக்கலாம். நன்றி

4 முகநூல் முத்தங்கள்

பத்துவிரல் நர்த்தனங்கள்
பரந்தவெளிக் கணித்திரையில்

ஒத்தமனம் தேடித்தேடி
ஓய்ந்திடாத கணிமொழிகள்

முத்தமென்றே ஆனதன்றோ
முகநூலின் ’லைக்’-மின்னல்

எத்தனைதான் குவிந்தாலும்
ஏங்குமனம் தூங்குதுண்டோ


ராசமல்லிப் பூவொன்று
ரகசியமாய் வந்து நின்று
வாசமுடன் பூத்ததென்னவோ - பின்
வாடிமுகம் மறைத்ததென்னவோ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


இன்றெல்லாம்
உலக நிகழ் மேடைகளில்

கூட்டமாய் ஓநாய்களும்
நடுவில்
ஒற்றை ஆட்டுக்குட்டியும்
காட்சிகள்தாம்

வதைகளை ரசிப்பதும்
வதைகளை ஆக்குவதுமாய்
கேடுகெட்ட இவ்வுலகம்

தர்மம் மீட்க
அரசியலே தீர்வு

ஆனால்
அந்த அரசியலோ
அறத்தை 
அடியோடு எரித்துவிட்டு
ஊழல் கூண்டில் 
சிறகொடிந்து
படுத்துக் கிடக்கிறது

மக்கள்
மாறாது
மண்
மாறாது

மனிதம் என்னும்
இறைநிலை
முழுதாய் முடிந்துபோன
முற்றுப் புள்ளியில்
எது துளிர்க்கும்?



7 ஆகஸ்ட் 15

சுதந்திரமாக
இன்று
என்ன செய்யலாம்
என்று கேட்டு
என் மனைவியின்
உத்தரவிற்காகக்
காத்திருக்கிறேன்

5 பெருமைகொள் இந்தியா

பெருமைகொள் இந்தியனே

இந்தியா...
31 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள் ...
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய திருவிழாக்கள்

நிலப்பரப்பால் ஏழாவது மிகப்பெரிய நாடு

மக்கள் தொலையால் இரண்டாவது மிகப்பெரிய நாடு

மக்கள் தொகை அதிகம் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு

எத்தனை எத்தனையோ
கற்கள் எறியப்பட்டும்
இன்னும்
இந்தத் தேன்கூடு
எப்படித்தான்
ஒட்டியே இருக்கிறது
என்பதே
உலகின் மிகப் பெரிய அதிசயம்

ராக்கெட் விடுவதோ
செவ்வாய்க் கோள் செல்வதோ

அல்ல!