ரிதா ரிதா




ரிதா ரிதா

பலநேரங்களில் எனக்குக் கவிதை எழுதுவது மழை பொழிவதைப் போல்தான். ஆனால் அது உணர்வுகளின் ஒய்யார மழை. என் உள் முகில்கள் நீர்சுரந்து நீர்சுரந்து கருத்து நிற்கும் பின் ஒரு தனிமைச் சந்தர்ப்பத்தில் சட்டென்று கொட்டிவிடும். பெரும்பாலும் அதன்பின் அக்கவிதையில் மாற்றங்கள் தேவைப்படாது. தேவைப்படும்போது நான் மாற்றங்களை நிச்சயமாகச் செய்வேன். ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யாத கவிதை இது. 

.
பனி பொழிந்த ஓர் இரவில்
கத்தி முனையில் கத்தாமல் பிறந்த
சித்தாரமே என் சென்பகமே...
.
என் மகள் பெற்றெடுத்த மகளே
ரிதா ரிதா
.
தேன் மலரா தீஞ்சுவையா
தஞ்சைத் தமிழா தாரகையா
என் தங்க நிலவே பொன் மகளே
ரிதா ரிதா
.
பெண்களெல்லாம் பிறந்தபின்தான்
அழகு நிலையம் செல்வார்கள்
நீ மட்டும்தான் தங்கி இருந்த சொர்க்கபுரியிலேயே
அழகு நிலையப் பணியையும்
முடித்துக்கொண்டு பிறந்திருக்கிறாய்
.
ரிஸ்வானா உன் தாய்
என்பதின் சுருக்கமா உன் பெயர்
ரிதா
.
உன் கண்கள் கண்டேன்
செவிகள் பார்த்தேன்
கைவிரல் தடவினேன்
கன்னம் முகர்ந்தேன்
பனி மென்மை பரிசித்தேன்
பவள இதழ் தொட்டேன்
கன்னங்கரு முடி வருடினேன்
உறங்கும் பேரழகு ரசித்தேன்
.
அடடா நம் குடும்ப அழகை
இப்படி அச்சடித்து அள்ளிக்கொண்டுவர
வயிற்றுக்குள்ளேயே
நீ வரம்கேட்டு வாங்கிவந்தாயா
.
அழுகின்ற குழந்தை
பால் குடிக்கும் என்பார்கள்
பால் குடிக்கக்கூட அளவோடு அழும்
உன் பக்குவத்தை
நீ எங்கிருந்து பாடம் கற்று வந்தாய்
.
பால் பொழியும் உன் பூ முகம் கொண்டு
எனக்குப் பாசம் பொழிய வந்தாயா


உன் அன்னையின் தந்தைக்கு
நீ அன்னையாக வந்தாயா


உன் சிறு கொள்ளைச் சிரிப்பில்
என் சாபங்களைச் சிதறடிக்க வந்தாயா
.
என் தோட்டங்களிலெல்லாம்
இன்று ஒரே ஒரு பூதான்
ரிதா
.
என் இதயத்தைக் கோதிவிடும்
உன் சின்னஞ்சிறு தலையைக் கோதுவதுதான்
இனி எனக்கு எல்லாமும்
என் உயிர் ரிதா ரிதா
பசுமை விரித்த
இலைகளால் மட்டுமின்றி
நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும்
வேர்களாலும் சுவாசிக்கும்
அலையாத்தியை போல
உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி
உயிரின் இழைகளாலும்
என்னையே சுவாசிக்கும்
அடியாத்தி
நீ என் அலையாத்தி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*

குறிப்புகள்:

அலையாத்தி என்பது ஒரு வகை மரம். இது கடலோரங்களில் தொடர்ச்சியாகக் காண்ப்படும். இதை சதுப்புநிலத் தாவரம் என்று கூறலாம்.

2008ல் இந்தியா சென்றபோது முத்துப்பேட்டையில் உள்ள இந்த அலையாத்திக் காட்டுக்குச் சென்றிருந்தேன். அருமையான பயணமாக இருந்தது. ஒரு படகில் பதினைந்துபேர் சென்றோம்.

அலையாத்தி மரம் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. இதனால் சுனாமி போன்ற பெரும் ஆபத்துக்களும் தடுக்கப்படும்.

இதன் வேர்கள் வினோதமானவை. அதை கீழே வாசியுங்கள்

Adaptations to low oxygen
Pneumatophore penetrates the sand surrounding the mangrove tree.
Red mangroves, which can survive in the most inundated areas, prop themselves above the water level with stilt roots and can then absorb air through pores in their bark (lenticels). Black mangroves live on higher ground and make many pneumatophores (specialised root-like structures which stick up out of the soil like straws for breathing) which are also covered in lenticels. These "breathing tubes" typically reach heights of up to thirty centimeters, and in some species, over three meters. There are four types of pneumatophore—stilt or prop type, snorkel or peg type, knee type, and ribbon or plank type. Knee and ribbon types may be combined with buttress roots at the base of the tree. The roots also contain wide aerenchyma to facilitate oxygen transport within the plant.
கறுவுளக் கொள்ளையர்கள்

அரசியல் கழுகுகள்
அத்தனை வாழ்வாதாரங்களையும்
மிச்சமே வைக்காமல்
கடிதுகவ்விச் செல்கின்றன

எதைத்தான் திருடுவது என்ற
வெட்கமும் வேண்டாமா

சோறு திருட்டு
சுகம் திருட்டு
உரிமை திருட்டு
உறக்கம் திருட்டு
என்பதெல்லாம் போக

நீர் திருட்டு
நிலம் திருட்டு
நெருப்பு திருட்டு
காற்று திருட்டு
ஆகாயம் திருட்டு என்று
பஞ்ச பூதங்களைக்கூட
எப்படித்தான் திருடுகிறார்களோ
பிரபஞ்சத் திருடர்கள்

ஊர் கொஞ்சம் பெருசு என்றால்
அங்கே ஏரி திருட்டு

சிற்றூர் என்றால் அங்கே
குளம் கேணி குட்டை
குட்டையின் மண்
மண்ணின் தூசு

காப்பொன்னிலும்
மாப்பொன் எனும் நக்கல்மொழி
அரசியல் நடப்புமொழியிடம்
தோற்றோடிப்போனதால்

சளியைக்கூட
பொத்தி வையுங்கள்

வருவார்கள் வெல்வார்கள்
வெள்ளாடை போர்த்திய
கறுவுளக் கொள்ளையர்கள்
அழுகைதான்
மனித நாகரிகத்தின்
முதல் படி

ஆண் அழுவது
அழகல்ல என்பது
அழகல்ல

அழுவது
முடங்கிப் போய்விட என்றால்
ஒருபோதும் அழுதுவிடாதே

அழுவது
ஆறுதல்கொள்ள என்றால்
அழுதுவிடு

சிரிப்பு வரும்போது
சிரிக்காமல் இருப்பவன்
மட்டுமல்ல

அழுகை வரும்போது
அழாமல் இருப்பவனும்
குறையுள்ளத்தானே
இந்தியாவின்
ஒரு
சாதாரண
எம் எல் ஏ வீட்டுக்
கழிப்பறையைப் போல...
எப்போதுதான்
சென்னைப் பன்னாட்டு
விமான நிலைய
ஒப்பனை அறையும்
மாறும் என்ற ஏக்கமே
இம்முறைப் பயணத்திலும்....



இருந்தால் இந்தியாவில்
அரசியல்வாதியாய் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் அப்படியே
வேறு நாட்டிற்கு
ஓடிவிட வேண்டும்
...
அரசியல்வாதியாய் இருக்க
எனக்கு எந்தத் தகுதியும் இல்லை
வெளிநாடு ஓடலேன்னா
சோறு கிடைக்காது
வாழ்க மணித்திரு நாடு
யுத்தம் மறைந்த
மண்ணகம்
முத்தம் நிறைந்த
பொன்னகம்

யுத்த வெறுப்பும்
முத்த விருப்புமே
உலகின்
தலை சிறந்த
நாகரிகம்