மாப்பிள்ளை வாழ்த்து


பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ

கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்

மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்

ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்

கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்

வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்

சேவியர் மகளுக்கு வாழ்த்து


அழகழகு ரோஜா
அன்பழகு ரோஜா
மழையழகு ரோஜா
மானயழகு ரோஜா
கலையழகு ரோஜா
கவியழகு ரோஜா
இலையழகு சிவக்க
என்முத்த ரோஜா

பழகுதமிழ் ரோஜா
பனிமுத்து ரோஜா
இளயநிலா ரோஜா
இனியநதி ரோஜா
விலையில்லா ரோஜா
விண்ணாளும் ரோஜா
இளரோஜா முகத்தில்
என்முத்த ரோஜா

தினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து


இணையத்தில் கேள்விப்பட்டேன்
இலக்கியத்தில் தொட்டுப்பார்த்தேன்
அணையாத தாகத் தோடும்
அணுவிசையின் வேகத்தோடும்

மழைக்காலக் காற்றைப்போல
மனத்தோடு ஒட்டும்-எழுத்தால்
நினைக்காதத் தளமும்தொட்டு
நீச்சலிடும் வெற்றிச்-சொக்கா

உனதுமுகம் கண்டதும்-இல்லை
உனதுகுரல் கேட்டதும்-இல்லை
தினமும்வரும் தினமொருகவிதை
தெளிவாகக் காட்டியதுன்னை

கனவுலகின் வாயிலைத்திறந்து
கவிதைகளில் நாளும்-விருந்து
மனதிலொரு மத்தளங்கொட்டி
மணக்கும்புது நாளும்-மலர்ந்து

எழுத்தோடு குடித்தனம்நடத்தும்
எனதருமை லவணா-நாகா
கழுத்தோடு கைகள்பூட்டி
கதைபேச இன்னொரு-வரவா

எழுத்தாளன் மணவாழ்வென்றால்
இனிப்புக்கு எல்லைகளில்லை
பழுத்தநல் கனிகள்போல
பழகுசுகம் வேறெவர்க்குண்டு

நேரிலே வருவார்சிலபேர்
நினைவுகளும் தூரமாய்நிற்கும்
நேரிலே வரும்வழியில்லை
நெஞ்சத்தால் வருவேனங்கே

தூரிகைப் பந்தமும்வெல்லும்
தூரங்கள் மனங்களுக்கில்லை
வாரியே இறைப்பேன்-பூக்கள்
வாழ்த்துக்கள் அள்ளிநிறைத்தே

இன்பத்தில் இனித்தேகிடந்து
துன்பத்தில் துணையாய்நின்று
உள்ளங்கள் பின்னிப்பிணையும்
உயிர்க்காதல் கொண்டேவாழ்க

கண்ணோடு இமையாய்க்கோர்த்து
கல்யாண உறவைப்போற்றி
விண்முட்டும் இன்பம்-சேர்த்து
வளமோடு நெடுநாள்வாழ்க

மகளின் பிறந்தநாள் வாழ்த்து


ஆண்டுகள்
ஆயிரம்
உருண்டோட

மீண்டும்
மீண்டும்
இவ்வினியநாள்

வேண்டும்
சுகமுடன்
மலரட்டும்

பொன் மகளே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க

தீபாவளி வாழ்த்துக்கள்


இருளகற்றும்
தீபமே
இதயமாகட்டும்

கருணை அன்பு
எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்

புதிய வானம்
புதிய பூமி
விரைந்து மலரட்டும்

போற்றி போற்றி
நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்

இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்

நிச்சயித்தவளுக்கு வாழ்த்து


நியாயமான
காத்திருப்புகளுக்கு
நிச்சயம்
புனிதத்துவமுண்டு

உள்ளம் அள்ளும்
வாசம்
காத்திருந்து
கிள்ளியெடுக்கும்
மல்லிகைக்குத்தான்

வாழ்த்துக்கள்
உன்
பிறந்தநாளுக்கு

1985

மணநாள் வாழ்த்து


திருமண வாழ்த்து

ஆனந்தத் தேனூறுதே
அன்புச் சுடர் - உங்கள்
மணவிழா நாளறிந்தே...
மாணிக்கத் தேர்மீதினிலே
முல்லைக்கொடி - உங்கள்
மரோபா கைகோத்தே...
வானெங்கும் ஒளிவீசியே
வனப்போடு - என்றும்
பேரின்ப பவனிவரவே...
நானிங்கும் பூத்தூவியே
கவிதாவனம் - நின்று
நயமோடு வாழ்த்துகின்றேன்...

நாட்டிய அரங்கேற்றம்


சங்கத்தமிழ் மணம் வீசிவரும்
சந்திரப் பொன்னெழில் மேடைதனில்
சந்தனக் கிண்ணங்கள் பேரழகைச்
சிந்திடும் நாட்டிய அரங்கேற்றம்
இந்தப் புவி தனில் வேறெவர்க்கும்
என்றும் கிடைக்கா மகுடங்களை
எந்தன் கண்மணிகள் சூடிக்கொள்ள
எழிலாய் கலையாய் நிகழட்டுமே

பேராசிரியர் பசுபதி


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும்மேல்
தமிழ்நாட்டை விட்டுத்
தமிழறியா நாடுவாழ்ந்தும்
முத்தமெல்லாம் தமிழுக்கே
என்று...

கன்னித்தமிழோடும்
கணித்தமிழோடும்
கற்பூரக் காதல்பூண்டு...

ஒட்டிக்கிடக்கும்
உச்சிவான மச்சுயேறிய
பொன்மதியே...!

மாசற்ற மரபோடு
மணம்வீசும் எண்ணங்களால்
தூசற்று வாழ்கின்ற
நற்பண்பின் அதிபதியே...!

அன்புக் கவிமதியே...!
அண்ணன் பசுபதியே...!

அவைக்கழைத்த உங்கள்
அழகுமொழிக்கு
கவியடியேனின்
காலை வணக்கங்கள்!

O

சந்தவசந்தத்தில்
உங்கள் தலைமையில்
நெஞ்ச நன்றியைச்
சிந்திப் பாடிட
இந்தநல் வாய்ப்பினைத்
தந்த தலைமைக்கு
முந்தித்தருகிறேன்
வந்தன நன்றிகள்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பொன்னான பிறந்தநாள்
புகழேந்தும் பிறந்தநாள்
கண்ணோர ஆனந்தம்
கவிபாடும் பிறந்தநாள்
அன்பான உள்ளங்கள்
அமுதூட்டும் பிறந்தநாள்
வளமோடு நலம்சேர
வாழ்த்தவரும் பிறந்தநாள்

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

இன்பம் மலரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

அன்பில் மிளிரும் பிறந்தநாள்
விண்ணும் அருளும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
விண்ணில் ஒளிரும் பிறந்தநாள்

அன்னை மகிழ்ந்த பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்

உள்ளம் வாழ்த்தும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்
கைகள் வணங்கும் பிறந்தநாள்
எல்லாம் அருளும் பிறந்தநாள்

மணிசார் மணநாள் வாழ்த்து


குதிச்சுக் குதிச்சுமனம்
குத்தாலந் தாவுது
வெதச்சத் தாலிக்கொடி
விண்ணேறிப் பாயுது

மதிச்சு மதிச்சுத்தான்
மணவாழ்வு கூடுது
நெனச்சி நெனச்சித்தான்
நெஞ்சுமணி பாடுது

வருசம் வளரத்தான்
உறவும் வளருது
புருசன் பொண்டாட்டிப்
பெருமை புரியுது

கருச மணியோடு
காதல்மணி உரசுது
புருச மணியோடு
பிரேமமணி ஒலிக்குது

நாப்பத் தஞ்சாகி
நல்வாழ்க்கை மிளிருது
மூப்புக் கண்ணோரம்
மெய்க்காதல் ஒளிருது

தோப்புக் குயிலிரண்டு
தோப்பாகிப் போனது
தோப்புக்குள் நாலு
தோப்பாகி வாழுது

கண்ணில் நீரானேன்
கனிந்த பாகானேன்
எண்ணம் நெய்யாக
எரியும் சுடரானேன்

இன்னும் பல்லாண்டு
இனியும் சிறப்போடு
வண்ணம் விண்ணாக
வாழ வாழ்த்துகிறேன்

செந்தீ வளர்க


சுழல் பந்தென
களத்தில் இறங்கிய
செயல் வீரனின்
வர்த்தகச் சோலை

தழல் கொழுந்தெனத்
தாவி எழுந்தது
தமிழ் மகனிவன்
நற்பணி வாழ்க

நிழல் போலவே
வணிகர் தேவையில்
நலம் பேணிடும்
இளைய நிலவனே

குழல் இனிமையும்
செந்தீச் சுடரும்
குணம் ஆக்கியே
வெற்றி குவித்திடு

நெஞ்சார வாழ்த்துகிறேன்


பிறைநிலவாம் விஜயலஷ்மி
பொன்மகனாம் கார்த்தியுடன்
குறைவற்ற வளத்தோடும்
கொண்டாடும் குணத்தோடும்
சிறைவிட்ட சிட்டுக்கள்
சிறகடிக்கும் சிலிர்ப்போடு
நிறைவாக வாழ்ந்தோங்க
நெஞ்சார வாழ்த்துகின்றேன்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மனித மனமெனும்
மயக்க நிலங்களில்
கருணைப் பூவனம்
குழுமிப் பூத்திட

புனித நாயகன்
பிறந்த நாளிதில்
இனிய வாழ்த்துக்கள்
இதய வாசலில்

அலைகள் தொடுத்திடும்
கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும்
பாலின் வெண்மையாய்

இரவைத் தேற்றிடும்
நிலவின் இனிமையாய்
உறவும் உலகமும்
வாழ வாழ்த்துக்கள்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கூவத்தில் கார்த்திகை தீபமா?


பிப்ரவரி 2008
இதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது!

திமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.

வந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.

அந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)


சுருக்குப் பைக்குள்
சூரியனை மறைக்கப்பார்க்கிறாள்
சூனியக் கிழவி
எங்கள் அலமேலு பாட்டி

குறைப்பது நாய்க்கழகு
கொத்துவது நாகத்திற்கழகு
குழைவது பொங்கலுக்கழகு
குணம் ஒன்றே பெண்ணுக்கழகு

எவ்வளவு ஊதினாலும்
பலூன் ராக்கெட்டாகிவிடாது
எவ்வளவு பெருத்தாலும்
பன்றி யானையாகிவிடாது

அழியாக் கவிதைகள் என் கைகளில்
அடுக்களைப் பருப்பு உன் கைகளில்
சபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்
உனக்குச் சில்லறைதானே பாட்டி

பதவியில் இருந்தால் உனக்குப் பெயர்
பதவியே எனக்கு இன்னொரு பெயர்

நீயும் நானும் படைப்பாளிகள்தாம்
என் படைப்பு தங்குவது இதயத்தில்
உன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்

எனக்குச் சன்மானம் சரித்திரம்
உனக்குச் சன்மானம் ஏப்பம்

என்னால் இந்த உலத்தையே
உருட்டிப் பார்க்க முடியும்
உன்னால் லட்டுதானே பாட்டி
உருட்டிப் பார்க்க முடியும்

நீ ஊதி அணைக்க
நான் உன்வீட்டு சிம்ளியல்ல
என்றும் அணையாத சூரியன்

இன்றுதான் நான்
தரங்குறைந்துவிட்டேனோ
என்று சந்தேகப் படுகிறேன்
ஏன் தெரியுமா

உனக்கு நான் ஒரு
கவிதை எழுதலாமா

குட்டிச் சுவருக்குப்
பாலாபிசேகமா
கூவத்தில்
கார்த்திகை தீபமா

ஏப்ரல் 2001

199101 சுகைல் குட்டித் தம்பிக்கு


என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.

அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.

வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)



சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா

அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா

வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா

குட்டி குட்டி அக்காக்கு
ஸ்கூலுக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா

துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா

வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா

மொழியாக்கமென்றால்...


சிந்தையில் ஊறும்
சொந்தக்
கருத்தெழுதியே
வலுப்பெற்ற
கரமிது
மொழியாக்கமென்றால்
கொஞ்சம்
முடங்கிக்கொள்கிறது

வேறென்ன இருக்கு?


ஊறும் விரல் சிவக்கும்
ஊறிடும் வாய் சிவக்கும்
தீரத் தீரச் சுரக்கும்
தீதரும் நதிமூலம்

வாரி வாரி இறைத்தும்
வற்றா நிலம் கண்டு
மாரி மழையும் வெட்கும்
ஆழக் கடலும் தோற்கும்

அடிமன ஆசையில்
அம்மணக் கோலத்தில்
முடிவற்ற துடிப்புகள்
மண்மீது விழும்வரை

198204 விழி எழுதும் புது சிறு வரிகள்


விழி எழுதும் புது சிறு வரிகள் - உன்
விழி எழுதும் புது சிறு வரிகள் 
என் இயத்திலே கவிதை

நிலாவில் ஆடும் பூவிலே
உலாவும் நெஞ்சின் ராகமே

அழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே
அழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே

மனசுத் தீவினில் உன்நினைவு
தனித்து எரிவதும் நீங்காது

தினம் தினம் அந்திநேரம்
தவிக்கும் நெஞ்சில் ஊறும்
என்தாகம் தீர்க்கும் பூமுகமே வா

உறக்கம் மறந்து போனேன்
உயிரைக் கேட்டு வந்தேன்

பருவ நெஞ்சிலே அலையே அலையே
அலைகள் முழுவதும் உன் நினைவே

நெருப்பின் சிகப்பு தாகம்
விலகும் நேரம் சேரும்
விழி ஏங்கும் மாலைகள்
கதைபலசொல்லும்

குரங்குபோல் தாவிற்று கொம்பில்


அரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்
பரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ
வறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்
குரங்குபோல் தாவிற்று கொம்பில்

பொற்குணவாளருக்கு வாழ்த்து


பொற்குணவாளரே பொற்குணவாளரே
போதுமும் புன்னகையையே - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே - இனியும்
அற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே
ஆளை விழுங்காதீர் - நல்லக்
கற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்
கதைத்து மயக்காதீர்

நெற்பயிர் சரியும் சூரியன் சரியும்
நீங்களோ சரிவதில்லை - உங்கள்
சொற்களில் செயலில் உலகமே நிற்பினும்
சுத்தமோ குறைவதில்லை - இந்தக்
கற்பிலா உலகில் எப்படி நீங்களும்
காலங்கழிக்கிறீரோ - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே!

தமிழ்ச்சங்கத்துக்கு வாழ்த்துரை


எத்திசை பெயர்ந்து
வாழ்ந்தாலும்
எத்தனை மொழிகள்
பயின்றாலும்
பித்தரைப் போலவே
பிதற்றிடுவர்
பேசும்மொழி அன்னைத்
தமிழின்றி

பத்தரை மாற்றுத்
தங்கமிவர்
பாசத்துடன் தமிழ்
வேண்டுகிறார்
இத்தனை தூர
தேசத்தில்
இன்பத் தமிழுடன்
வாழுகின்றார்

சித்திரை பூக்கும்
புத்தாண்டில்
செந்தமிழ் தேடும்
உத்தமர்கள்
முத்திரை பதிக்க
எட்டுகின்றார்
முத்தமிழ்ச் சங்கம்
கட்டுகின்றார்

மொத்தமாய் என்றன்
விழியிரண்டும்
மூழ்கியே போயின
நீர்பெருக்கில்
சத்தமாய் என்மடல்
வாசிக்கிறேன்
சத்தியம் உலகெலாம்
சேர்ந்துவிடும்

இத்தரை மீதினில்
யாவருக்கும்
இந்நாள் திருநாள்
ஐயமில்லை
உத்தமர் இவர்தம்
உணர்வுகளை
உயர்த்திப் பாடியே
வாழ்த்துகிறேன்




தமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்

தமிழ்நிலா

(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)


அஞ்சிலா பிஞ்சிலா
அன்னைமடி மஞ்சிலா
ஆரம்பம் ஆனதெப்போ
பிறப்பிலா - நாளும்
அமுதூறும் எழுத்தொன்றே
நெஞ்சிலா - தாகம்
அலைமோதத் தமிழோடு
கொஞ்சலா

கண்ணிலா கருத்திலா
கற்பனைப்பொற் சரத்திலா
கண்மூடிக் கூறுவாய்
பொன்னிலா - சஞ்சிகைக்
கனவுகளில் விழியிரண்டும்
ஊஞ்சலா - அந்தக்
கணம்தேடிப் பொழுதுக்கும்
ஏங்கலா

சொல்லிலா சுவையிலா
சுடர்வீசும் பொருளிலா
சுகமெதிலே சொல்லுவாய்
கவியிலா - பண்பைச்
சுரண்டாத முத்துப்பொன்
மொழியிலா - என்றும்
சுயநலமே நோக்காத
எழுத்திலா

விருப்பிலா பொறுப்பிலா
விரைவுபணி நெருப்பிலா
உயிர்க்கூடு பூப்பதெப்போ
கனவிலா - உந்தன்
விருப்பத்தைப் பொறுப்பாக்கும்
தரத்திலா - விரைவை
வெற்றிக்கு வேராக்கும்
சிறப்பிலா

அழகிலா அறிவிலா
அன்பெனும் பொழிவிலா
ஆசைமனப் பெருமையெது
நெஞ்சிலா - நீயும்
அத்தனையும் பெற்றுவிட்ட
நினைவிலா - அன்பை
அழகான அறிவாக்கிய
பண்பிலா

சொந்தமண் பாசமா
இந்தமண் வாசமா
எதிலுந்தன் கவனங்கள்
தமிழிலா - தமிழின்
யாதுமே ஊரென்ற
சிறப்பிலா - இருந்தும்
எந்தைதாய் முந்தையர்தம்
நிலத்திலா

பணியிலா படிப்பிலா
புத்தம்புது எழுத்திலா
பரவசம் கொண்டதெப்போ
வெண்ணிலா - இனியும்
பல்லாண்டு நடைபோடும்
தெளிவிலா - வெற்றிப்
பாதையை உருவாக்கும்
கனவிலா

குறைவிலா பேட்டியா
குரல்வழிக் கொஞ்சலா
குற்றாலச் சிரிப்போடு
குளியலா - என்னும்
காற்றலை வீச்சுகளில்
தனியுலா - இன்னும்
கட்டுரை கவிதைகளோ
கணக்கிலா

வளர்க்கவா வளைக்கவா
வாயாற வாழ்த்தவா
வாவென்று அழைத்ததேன்
சொல்நிலா - என்றன்
வாழ்த்துக்கு ஒளிருமே
கறுநிலா - அரங்கக்
கரவோசை கூட்டுமே
திருவிழா

மலர்விழா பொன்விழா
மாணிக்க மணிவிழா
மங்கைநீ காணவேண்டும்
முழுநிலா - குவியும்
மலர்மாலை பொன்னாடை
பெருவிழா - எழுத்தால்
மகுடங்கள் ஏந்திவா
தமிழ்நிலா

உயிரெழுத்து


உயிர் கரைத்து ஊற்றாமல்
கவிதைப் பயிர் வளர்க்கும்
கதையேது

உயர் கவிதான் உயிரெழுத்து
எதிலும் உயிர் சேர்க்கும்
திருவெழுத்து
இன்றைய ஒளிர்வாய்
நேற்றுகளில் சிக்காத
நெய்வாச
நம்பிக்கைச் சுடர்கள்

விழித்தளத்தில்
இமைக்கரைகளைப்
பெயர்த்தோடும்
வற்றாத
வண்ண வண்ணக்
கனவு நதிகள்

நித்தம் நித்தம்
கையணைவில்
நீண்டு வளரும்
புத்தம் புதுச்
சந்தோசங்கள்

முதன்மைபெற்று
முடிவற்று
உயிர்தொட்டுத் தழுவட்டும்
புத்தாண்டுப் புலர்வினிலே

உதய
புத்தாண்டிலென்
இதய 
வாழ்த்துக்கள்

அகவியாடும் இதயமயில்


கதைகதையாய்க் கவிதைகளாய்
எதைவடித்து நிமிர்ந்தாலும்
அதைவடிக்கும் முன்னெனக்குள்
அகவியாடும் இதயமயில்
பதைபதைப்பு அடங்கிமெல்லப்
புத்துயிராய்ப் பூப்பதனால்
எதையெதையோ எழுதியெழுதி
எந்நாளும் துயில்கின்றேன்

*

எடுத்தப் பிறப்பிங்கெனக்கே
எழுத வென்றிருக்கலாமோ
குடித்தக் கள்ளொன்றிருப்பின்
கன்னித் தமிழன்றி வேறோ
வடித்தக் கவித்தேனே
இவ்வையம் மூடிக்கிடந்தும்
கொடுக்கும் கனலென்றனுள்ளே
குறைந்தழியக் கண்டிலேனே

ஒரு கவிஞனின் முகவரி


கண்களில் கவர்ச்சி
கருத்தினில் முதிர்ச்சி
பழக்கத்தில் இளமை
பண்பினில் தாய்மை

அவைதனில் அடக்கம்
அன்பினில் பெருக்கம்
உழைப்பினில் பெண்டுலம்
உள்மனம் தாண்டவம்

சகிப்பினில் நெருப்பு
சமத்துவக் காற்று
எடுப்பதில் வானம்
கொடுப்பதில் பூமி

எனக்குள் இருப்பதெலாம்






இந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)





எனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்
....இதயத்தின் ராகமெலாம் ஒப்பாரியோ
உனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்
....உள்ளத்தின் ஈரவனம் கிட்டாதோ
மணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்
....மடியினில் துயின்றிடவே யாசிக்கிறேன்
பிணக்கம் எனக்கொன்றும் விளங்கவில்லை - நான்
....பிறந்ததே ஏனென்றும் புரியவில்லை

திருமண வாழ்த்து


எப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.


இன்பத்தில் கண்கள் கோத்து
....துன்பத்தில் கைகள் கோத்து
உள்ளங்கள் பின்னிப் பிணையும்
....உயர்காதல் கொண்டே வாழ்க

கண்ணோடு இமையாய்ச் சேர்ந்து
....கல்யாண உறவைப் போற்றி
விண்ணேறும் சுகங்கள் பார்த்து
....வளமோடு நெடுநாள் வாழ்க

நித்திரைகள் பத்து


நான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன? ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே!


விழித்தாளில் கவியேந்தி
விரல்நாவில் மொழிசிந்தி
அழியாத நினைவுகளை
ஆளுக்கொரு பரிசாக்கி
பழிச்சொல்லை விதித்தலையில்
பக்குவமாய்ச் சூட்டிவிட்டு
நழுவுகின்ற நாகரிகம்
நற்காதல் நித்திரையில்

கண்களினால் அழைப்பிட்டு
கட்டுடலை வெளிக்காட்டி
பெண்ணினத்தின் நாணமின்றி
பேய்க்காமக் காளையிடம்
தன்னைத்தான் விலைபேசும்
தரம்குறைந்த பெண்களின்று
மண்டலத்தில் மலிந்ததெலாம்
பெண்மைகொண்ட நித்திரையில்

கட்டிலிலே காணுகின்ற
காமமெனும் தேனமுதை
மொட்டுமுகம் மலரமணம்
முடித்துவந்த நாள்முதலாய்
கட்டியவன் கையணைவில்
கண்டிடாத மனைவிவேறு
கட்டழகன் காணுவது
ஆண்மைகொண்ட நித்திரையில்

பத்துமாத பந்தமுடன்
பெற்றெடுத்தப் பிள்ளையினைத்
தத்தென்ற முறைகூறித்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு
நித்திரையைக் கண்டுவிடும்
நெஞ்சமற்ற பெண்களின்று
எத்திசையும் இருப்பதெலாம்
தாய்மைகொண்ட நித்திரையில்

மூவெட்டு வயதினிலும்
முறையாகப் பெறுகின்ற
பூவையரின் பொன்னாளாம்
பூப்பெய்தும் நன்னாளை
காவிரியாய்க் கண்பெருக
கண்டிடாத பாவையவள்
சாவினுக்குள் சரிவதெலாம்
இயற்கைகொண்ட நித்திரையில்

செய்யாத கொலையொன்றைச்
செய்தானெனக் கூண்டிலேற்றி
பொய்யான சாட்சிகளின்
புளுகுகளில் தீர்ப்பளித்து
மெய்யான நிரபராதி
மரணப்படி மிதித்தபின்னர்
மெய்யறியும் மேன்மையெலாம்
நீதிகொண்ட நித்திரையில்

காலமெலாம் மெழுகாகக்
கண்ணீரில் சுகங்கண்டு
வாழவெண்டும் என்மகனென
வாழவைத்த தெய்வங்களை
மாலையிட்ட மறுநாளே
மணந்தவளின் சொல்கேட்டு
காலடியில் கசக்குவது
ரத்தபாச நித்திரையில்

இன்னுமின்னும் அவனியிலே
எத்தனையோ நித்திரைகள்!
என்றென்றும் நீதிநாடி
எங்கெங்கும் அன்புசிந்தி
ஒன்றுசேர்ந்த ஞானத்தால்
ஒருகுறையும் இன்றிமக்கள்
நின்றுவாழ நினைப்பினெந்த
நித்திரைக்கும் நித்திரைதான்

திருமண அழைப்பிதழ்


பேரன்புடையீர்

நிகழும்
1985ம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 1ம் நாள்
பிறை 18 காலை 9 முதல் 10க்குள்

என்
வாலிப வானுக்குள்
உலாவர வருகிறாள்
ஒரு வசீகர நிலா

என்
பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள்
ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும்
என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள்
ஓர் இளமயில்

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி
பெரியோர்களின் நல்லாசியுடன்
பட்டுக்கோட்டை
86, காளியம்மம் கொவில் தெரு
மணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய
தாம்பத்ய தீபம் ஏற்றுகின்றோம்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்.... வாரீர்....

பிரியங்களடர்ந்த இதயமுடன்
புகாரி

200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து


இப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)


வலையில் விழுந்து இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதில் வந்துவிடு

யாகூ பேச்சின் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன் நுழைவுக் கதவொலி
இணையம் கேட்டால்
அத்தனை நிரலியும் திறக்கும்

உன் அஞ்சல் பூமழை
கணினியில் விழுந்தால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ கூகுள் பேச்சில்
வணக்கம் சொன்னால்
யாகூவுக்குக் காயச்சல் வரும்

நீ விடுமுறை என்று
வீட்டில் கிடந்தால்
வலைத்தளம் எல்லாம் உறைந்துவிடும்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

கணினி செல்லக் கூடாதென்று
அம்மா ஆணையிட்டார்

அஞ்சல் மீன்கள்
இரண்டில் ஒன்றை
இணைப்பின் தடுப்பில் போட்டார்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதின் போது

யாகூ கரையில் காத்திருப்பேன்
கூகுள் விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
விரல்கள் தட்டும் அஞ்சல்

உனக்கு மட்டும் கேட்கும் எனது
கணினி சொடுக்கும் சத்தம்

ஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை


சந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏதோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.

நான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...


பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி
நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்பு விழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
நண்பா

ஒரு கிளியினை நான் கண்டேன்


ஒரு கிளியினை நான் கண்டேன்
என் மனதினைப் பறிகொடுத்தேன்
அந்தக் கிளியின் இருப்பிடமோ
ஒரு சின்னஞ்சிறு தங்கக்கூண்டு

வண்ண வண்ணச் சிறகுகள்தாம்
அந்தச் சின்னஞ்சிறு கிளியிடத்தில்
மெல்ல மெல்ல விரித்ததனை
எந்த வானிலும் பறந்திடலாம்

விரித்திட வழியில்லையே
அது பறந்திடும் நிலையில்லையே
தனிமையின் மஞ்சங்களில்
அது தழுவுது தன்னைத்தானே

அதிர்ஷ்டங்கள் ஓரிடத்தில்
வெறும் அவலங்கள் வேறிடத்தில்
வாழ்க்கைப் புயல் வெளியில்
இந்த வரங்களின் ராஜ்ஜியமே

200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்


கிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)


விலகாத கொஞ்சல் வேணும்
விரட்டாத நெஞ்சம் வேணும்
முடியாத முத்தம் வேணும்
மொறைக்காத கண்ணு வேணும்

கொஞ்சி கொஞ்சி பேசும்போது
கோடிப் பூவா பூக்க வேணும்
பிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு
பஞ்சுப் போல காக்க வேணும்

கன்னக் குழியில் விரலை விட்டு
காதல் கவிதை எழுத வேணும்
கண்ணப் பாத்து கனவக் கேட்டு
கையக் கோத்துச் சிரிக்க வேணும்

நீட்டிப் படுத்துக் கெடக்கும் போது
நெட்டி முறிச்சு அணைக்க வேணும்
நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கழுத்துக்குள்ள ஊரும் போது
காதல் மூச்சு சேர வேணும்
கட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு
கெட்டித் தேனச் சொட்ட வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்

மெத்து மெத்து மேனி எல்லாம்
பொத்திப் பொத்தித் தழுவ வேணும்
பொத்துக் கிட்டு ஆசை வந்தா
ஒத்துக் கிட்டு சாக வேணும்

198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்



ஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்


உயிரே நலம்தானா
உறவே சுகம்தானா
மன ஓடத்தில் நீ பாய்மரம்
உனை நான் நினைக்கிறேன்

கணிமடி ஏந்தும் கடிதங்களில்
உன் கனவு கண்டேன்
தனிமடல் வீசும் வசந்தங்களில்
உன் தவிப்பு கண்டேன்
உயிரே உயிர்க்கருவே
உனை நான் நினைக்கிறேன்

ரசனைக் கடலின் ஆழத்திலே
ஓர் முத்தெடுத்தேன்
ரகசியமாய் அதன் காதினிலே
என் காதல் சொன்னேன்
அழகே அலைச்சுருளே
உனை நான் நினைக்கிறேன்

ஏனோ எங்கும் காணாமல்
எனைத் தேடுகிறேன்
ஏற்றியச் சுடராய்
உன் விழிச் சிமிழில் நானிருந்தேன்
விழியில் விழித் துளியில்
உனை நான் நினைக்கிறேன்

நிலவே போதும்
நெருப்பினில் வேகும் காலங்களே
நிழலுக்கும் வேண்டாம்
நீயற்ற வெறுமை வாழ்வினிலே
நாளை உனைக் காணும்
மனம் பாடும் காவியம்

ஒரு சங்கக் காதல்


எங்கும் எழில் பொங்கும் நீ
திங்கள் முக மங்கை
அங்கம் தமிழ்ச் சங்கம் நீ
தங்கும் இடம் எங்கே

வங்கம் எனப் பொங்கும் நீ
எங்கள் நிலச் சிங்கம்
இங்கும் வெளி எங்கும் நீ
தங்கம் எனில் அங்கே

மஞ்சம் உன் நெஞ்சம் அதில்
துஞ்சும் என் நெஞ்சே
வஞ்சம் உனில் மிஞ்சும் எனில்
தஞ்சம் தரும் நஞ்சே

வஞ்சிக் கொடி கொஞ்சும் என்
நெஞ்சம் உன் நெஞ்சே
தஞ்சம் உன் நெஞ்சம் இனி
வஞ்சம் ஏன் மிஞ்சும்

ஒரு சினிமாக் காதல்


நாணம் குடிக்கிறதே உன்னை
நான் குடிக்கக் கூடாதா

மௌனம் மேய்கிறதே உன்னை
நான் மேயக் கூடாதா

தயக்கம் தின்கிறதே உன்னை
நான் தின்னக் கூடாதா

மயக்கம் இழுக்கிறதே உன்னை
நான் இழுக்கக் கூடாதா

ஆசை கவ்வுகிறதே உன்னை
நான் கவ்வக் கூடாதா

அச்சம் பறிக்கிறதே உன்னை
நான் பறிக்கக் கூடாதா

மிச்சம் இன்றி உன்னை
நீ என்னுள் கரைக்க வா

எச்சில் அரித்த என்னை
நான் உன்னுள் புதைக்க வா

அழகிய காதல் மலரே


அழகிய காதல் மலரே
என் ஆருயிர்க் காதல் கிளியே

பழகிய நாளாய் நிலவே
புதுப் பாலாற்றில் நீந்துது மனமே

குழைவது உன்னெழில் முகமே
என் காதலின் மொத்தமும் நீயே

அலைகளில் தவிக்கும் நுரையாய்
என் அணுக்களில் உனக்கென ஏக்கம்

மழையென விழுந்தாய் என்னுள்
என் மனதினை இழந்தேன் நானும்

விழைவது என்றுமுன் மனமே
அதில் உறங்காத நானோர் பிணமே

வளைக்கரம் குலுங்கிட வந்தாய்
என் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்

விலையேது உனக்கிவ் வுலகில்
என் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்

ராஜ முத்தங்கள்


இதய ஆழத்தின்
...இனிய வெளிகளில்
உதிரும் நினைவுகள்
...உணர்வைக் கூட்டியே
புதிய வாழ்த்தெனப்
...பொழிய வந்தன
ரதியுன் இதழ்களில்
...ராஜ முத்தங்கள்

ஒரு கிராமத்துக் காதல்


வெறிச்ச விழி மூடாம
வருத்தத்துடன் நானிருந்தேன்
பருத்திக் கொட்டை கண்ணழகே
பறிச்சிக்கிட்டே என்னுசுரை

வறுத்து வெச்ச முந்திரியே
வழுக்கிக்கிட்டே போகுறியே
தெறிச்சு விழும் முத்தழகே
தவிச்சிருக்கேன் பாரேன்டி

குறிச்சி வச்சத் தேதியில
கொறிச்சிப் பாக்க வேணுமடி
நரச்சமுடி ஆகும்முன்னே
நரம்பதிர வாயேன்டீ
அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று
அன்பே
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு

தினம் வெட்கப்பட்டு
வெட்கப்பட்டு
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு

உன் மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு

உன் கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்

உன் சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை உன்னுடன்
இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு

இவை அத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனிவரும் அத்தனைப் பிறவியிலுமே
இன்றுபோலவே துடித்துக்கொண்டிருக்கப்போகும்
என் அத்தனை உயிர்களையும்
இன்றே இப்பொழுதே எழுதிக்கொடுத்துவிடுகிறேன்

கனவுகள் ததும்பும் கருவிழிகள்..


கனவுகள் ததும்பும்
கருவிழிகள்
உணர்வுகள் மிளிரும்
சிறுஇதழ்கள்

தினமொரு அஞ்சலாய்
வந்துவந்து
மனதினுள் வார்ப்பது
பாற்குடங்கள்

வனமலர்க் குவியலில்
நின்றாடும்
வண்ணத்துப் பூச்சியின்
உள்ளமென

குணவதி மனரதி
வான்மதியே
என் நெஞ்சினில் பொங்குது
தேன்நதியே

பிறப்பதும் இறப்பதும்
நிகழ்ச்சிகள்தாம்
பிறக்கிறார் இறக்கிறார்
பலரும் இங்கே

குறிஞ்சியாய்ப் பிறப்பவர்
ஒரு சிலரே
நறுமலர் நீயும்
அதில் ஒன்றே

முல்லையும் மல்லியும்
கோத்தெடுத்த
நல்லதோர் கவிதையும்
எனக்குள்ளே

மெள்ளத்தான் அசையுது
பூத்து
சொல்லத்தான் காதலர்
வாழ்த்து

1998301 தீ மூச்சைத் தூதுவிடு


அவன்
அவளைச் சந்தித்தான்

அந்தச் சந்திப்பு
சிந்திப்பை முந்திக்கொண்டு
இதுதான் பந்தம்
இருவரும் சொந்தம் என்று
சந்தம் கட்டிச்
சிந்து பாடச் சொன்னது

அந்தி விரித்த
அரையிருள் பந்தியில்
இவன் இமைகள்
அவள் விழிகளிலும்
அவள் இமைகள்
இவன் விழிகளிலும்
பட படவென்று தட்டும்
தந்தித் தகவல்களால்
சிலிர்ப்புகளையும்
சிலிர்க்க வைத்துக்கொண்டன

இதய அருவிகள்
நிலவுக்குள் விழுந்து
கனவுக்குள் புரண்டோடி
நினைவுகளை ஈரமாக்கி
அவர்களின் சிந்தையைப்
பேதலிக்கச் செய்தன

ஆம்
அவர்கள் காதலித்தார்கள்

அவர்கள் மட்டுமே வாசிக்கும்
தனி ஏடுகளில் மட்டுமே
அழகழகாய்த் தட்டச்சேறியது
அவர்களின் காதல்

சில நாட்கள் நழுவி
காலத்துக்குள் விழுந்து
காணாமல் போனபின்
அவள் மனம்
அவசரமாய் நிதானமானது

மூச்சு முட்டிச் செத்தாலும்
முடிவெடுக்கும் முயற்சியின்
மன ஊஞ்சல் ஓயாது
பெண்களில் சிலருக்கு

கல்லூரிப் படிக்கட்டுகளை
கணிசமாகவே
தேய்த்துவிட்டிருந்தாலும்
அவளும் அந்தச்
சிலரில் ஒருத்தி என்னும்
விதிக்குள் சிக்குண்டாள்

காதல் வேறு
கல்யாணம் வேறு என்று
செழித்து வளர்ந்த
சமுதாயப் பாழ்மரத்தின்
ஆணிவேர் இதில்தானே
ஊட்டச்சத்தே உண்கிறது

பிறகென்ன
அவளுக்கே அர்த்தம் விளங்காத
போராட்டங்கள் அவளுக்குள்
மீண்டும் மீண்டும்
புதுப் புது வர்ணங்களில்
நாள்தோறும்
அவதாரம் எடுத்தவண்ணமாய்
இருக்கின்றன

எல்லா நிறங்களும்
முடிவில் கறுப்பாய்த் திரிவதுதான்
அவளுக்குப் புரியவே இல்லை

விளைவாய்
அவன்முன் அவள்
தன் மௌனத் தாவணியால்
முழு முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள்

அவனோ
கண்ணீர் அலை அடிக்கும்
அவன்
கண்களின் கரைகளில் நின்று
அவளின்
மெல்லிய இதயத்தின் காதுகளில்
மிகவும்
துல்லியமாய்ப் பாடுகின்றான்

O

நீ
ஈரங்கள் நீராடும் மேகம்
என்னோடு ஏனிந்த மௌனம்

கோழை மனக் காதல்
நாளும் நிறம் மாறும்
மாறாது என்னுள்ளமே

தேனோடையின் காற்றானவன்
உனைச் சேரவே புயலாகிறேன்

தீ மூச்சைத் தூதுவிடு
மணத் தேர்ஏறத் தேதி கொடு

வானம் மலர் தூவும்
வற்றாத குற்றாலம் வாழ்வாகும்

உனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
தேன் முல்லையே மொழியாததேன்

ஈரேழு ஜென்மங்கள்
நாம் வேறல்ல ஓருயிரே

நாளும் வழிமேலே
விழியல்ல
உயிர் வைத்தேன் இளமானே

கவிதைபற்றி கவிதை


கவிதைபற்றி
கவிதையெழுத வேண்டுமா
அதைக் கவிதைகேட்டு
கவிதைமனம் மறுக்குமா

கவிதைபற்றி
கவிதையென்ன எழுதுவேன்
எனைக் கவிதைகேட்கும்
கவிதைமனம் வாழ்த்துவேன்

தவிப்பதற்கும்
துடிப்பதற்கும் எதுவேண்டும்
இந்தக் கவிதைமகள்
வைத்திருக்கும் மனம்வேண்டும்

புவிநிறைந்த
பூக்களள்ளி தூவுகிறேன்
இவள் பொன்மனதை
வாழ்கவென்று வாழ்த்துகிறேன்

இணையமென்ற
மேடைதனில் சந்தித்தேன்
உயர் இதயமென்று
அப்பொழுதே சிந்தித்தேன்

அணை தாண்டும்
வெள்ளமென உணர்வுநதி
இவள் உள்ளமெங்கும்
தித்திப்பு அமுதநதி

தனைமறந்து
கவிரசிக்கும் கவிதைமலர்
என்றும் தரமிழந்து
போகாத தீபச்சுடர்

நினைவுகளில்
நிச்சயமோர் இடமுண்டு
நட்பு நெகிழவைக்கும்
இதயத்தின் அன்போடு

காதலர்தினம் வந்துவிட்டது


என்
உயிர்த்துடிப்பின் ஓசைகளை
இன்றுன்னிடம் எப்படியாவது
மொழிபெயர்த்துவிடவேண்டும்

அன்பே...
உன் தாவணிச் சிறகினைப்
பூவென விரித்து
என் காதல் வனத்துக்குள்
நீ பறந்து வரப்போகும்
அந்த நாள் எது?

கவிதையில் தொடங்கினேன்:
நீ இப்போதெல்லாம்
தாவணி போடுவதே இல்லை
செல்லம்...

தினம் கனவுகளின் தழுவல்களில்
கரைந்து போகும் உணர்வுகளை
நிஜமாய்ப் பொழியப் போகும்
அந்த நேரம் எது?

அடுத்த வரி கோத்தேன்:
உன் ”வால்பேப்பர்” விழிகள்
அலட்சியப் பார்வை வீசுகின்றன

கண்ணே
உன்னைக் காணாக் கணங்களில்
காற்றில்லாக் கூண்டுக்குள்
மூச்சுவிடத் தவிக்கும்
இளங்கிளி நான்
நினைவுப் புதை குழிக்குள்
நிமிசம் தவறாமல் மூழ்கும்
முது மான்

மேலும் தொடர்ந்தேன்:
புருவங்களைச் செதுக்கிச்
சீர்செய்ய விரைகிறாய்...

அன்பே இத்துடன் என்
தீ மூச்சைத் தூதுவிடுகிறேன்
வந்து விடு
உன் வரவுக்காக நான்
வழிமேல் விழியை அல்ல
என் உயிரையே வைத்துக்
காத்துக் கிடக்கிறேன்

கவிதையை முடித்துவிட்டேன்:
அஞ்சலைச் சொடுக்கும்முன்
என்னுடன்
விழி
மாற்றிக்கொண்டிருந்த
நீ
ஆள்
மாற்றிவிட்டாய்
என்ற
அவசரத் தகவல்...

பாவேந்தர் பிறந்தநாள் உறுதிமொழி


சொட்டுந்தேன் தமிழையள்ளி
கெட்டிப்பால் ஆடைகட்டி
பட்டுத்தழல் வீரம்தொட்டு
கொட்டுந்தேள் கோபம்பொத்தி

எட்டுத்திசை எங்கும் மின்னல்
வெட்டித்தான் கவிதை தந்தாய்
முட்டித்தினம் மூடர் எண்ணம்
விட்டுத்தான் ஓடச் செய்தாய்

சிரித்தாயே அழகின் சிரிப்பில்
சிலிர்த்தாயே இயற்கை வளத்தில்
தெறித்தோடும் முத்தே பாட்டில்
தீவீசும் கொள்கை வேட்டில்

விரித்தாயே புரட்சிக் கொள்கை
விவேகத்தின் வெற்றி முல்லை
நரிக்கள்ளம் கொண்ட மனத்தை
நறுக்கியே வைத்தாய் சொல்லில்

பாரதமும் இரண்டாம் பட்சம்
பைந்தமிழர் வாழ்வே உச்சம்
பாராட்டும் தமிழ்ப் பாவேந்தே
பாட்டாலே தந்தேன் முத்தம்

போராட்ட வெற்றிச் சுடராய்
புவிமீது தமிழர் வாழ
தேரோட்டிப் போனாய் உந்தன்
தரம்போற்ற வந்தேன் இன்றே

அமுதங்கள் அள்ளியே தந்தாய்
அழகுதமிழ் உயிரிலே வைத்தாய்
குமுறிவரும் எரிமலைக் குழம்பை
கவிதையினில் கொட்டியே தந்தாய்

சமுதாயப் போக்கினைச் சாடும்
சவுக்கோடு பாய்ந்தே வந்தாய்
தமிழுமோர் வரமெனக் கண்டாய்
தமிழினம் உயரவே நின்றாய்

விண்ணோடு கவிபாடும் சோலை
வேருக்குள் இரத்தமும் கொட்டி
மண்ணோடு கனிவளம் தோண்டி
மரமேறிக் கிளைகளும் வெட்டி

பொன்னோடு மணிகளும் செய்து
பொழுதுக்கும் உழைப்பினில் வாழும்
எண்ணிலா ஏழ்மையின் மாந்தர்
ஏற்றமே வாழ்வெனச் சொன்னாய்

போர்க்களம் வெல்லும் உன்றன்
புரட்சியின் கரங்களை நீட்டி
நேர்க்குரல் ஓங்கும் பாட்டால்
நெற்றியில் இட்டாய் பொட்டு

வேர்ப்பலா விதவைத் துயரம்
வேர்வெட்டித் தீர்த்தாய் மறவா
பார்புகழ் பாட்டின் வேந்தா
பாரதியின் தாசா வாழ்க

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழே
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழே

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழே
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழே

உறுதியெடு தமிழர் இனமே
உயர்த்திப்பிடி தமிழின் கொடியை
மறதிகளும் கொண்டார் தமிழர்
மறந்திட்டார் தமிழின் சொல்லை

குறுகித்தினம் சாவதும் தமிழோ
கெடுப்பதுவும் தமிழரின் பண்போ
உறுதிமொழி உயிரில் தைப்போம்
உலகெலாம் தமிழே வளர்ப்போம்!

---------------------------------
நினைவுநாள் ஏப்ரல் 21, 1891
பிறந்தநாள் ஏப்ரல் 29, 1964
**
பைசா கோபுரங்கள் நிமிரட்டும்



நாம்
கைகுலுக்கிக் கொள்வது
நம் விரல்களைச்
சரிபார்த்துக்கொள்ளத்தான்

தேவையற்ற
நகங்களை நறுக்கத்தான்

அழகு மிளிர விரல்களில்
சந்தனம் பூசத்தான்

பொய்ப்புகழ்ச்சி மோதிரமிடவோ
பொறாமை நெருப்பில்
தோல் கருக்கவோ அல்ல

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன

200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு


மின்னஞ்சல் ஓசை - அதை
மீட்டத்தான் ஆசை
மடிக்கணியின் பாஷை - அதில்
மூழ்கத்தான் ஆசை

கணிப்பலகை மடியிட்டு
கைவிரலின் நுனிதொட்டு
தட்டச்சும் ஓசை சங்கீதம்

நாளெல்லாம் தவிக்கவிட்டு
நகர்ந்துவரும் மடல் பார்த்து
மவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்

வலை தேடும் நேரம்
வன்களத்தின் ஓசை
சந்தோச சங்கீதம்

இணையத்தின் சாளரமெல்லாம்
இன்பத் தென்றல் தழுவும் சுகமாய்
இழையோடும் தகவல் சங்கீதம்

தட்தட்டும் அஞ்சல்களில்
துணைதேடும் உள்ளங்கள்
தடுமாறும் ஓசை சங்கீதம்

உரையாடும் மின்னறையில்
உயிரோடு உயிர்சென்று
உறவாடும் பாஷை சங்கீதம்

யாரென்றே கூறா
முகமூடி வேசம்
தவறான சங்கீதம்

எந்நாளும் ஏழை என்னை
அள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்
அன்புத்தாய் இணையம் சங்கீதம்

இந்தியா இன்பத்திரு நாடு...


நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.

1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.

இதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.



இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும்
அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ
வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப்
பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும்
எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன்
நல்லதமிழ்ச் சொல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக
வரவேண்டும் ஓடி

மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண்
மறந்ததே இல்லை

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென்
நன்றிகளோ கோடி

தமிழ் மாதக் காதல்


தைத்தான்
அவளைக் கண்களால்

மாசில்லாக் காதல்
உனதென்றால்...

பங்குநீ சரிபாதி இனியென்
வாழ்வில் என்றாள்

சித்திரை விலக்கி
வெளியில்வா பொன்மலரே

வைகாசி என்று வாட்டும்
வரதட்சணை வேண்டாமெனக்கு
என்றான்

ஆ..நீ..தானடா
ஆண்மகனென்று

ஆடிப் பாடி
தாவணிச் சிறகடித்து
அவன் மடிவிழுந்தாள்
அவள்

புரட்டாசியில் ஊருக்கே சொல்லி
ஐப்பசிக்கும் விருந்தாக
கார்த்திகைக் கணையாழியும்
மார்கழித் தேன்நிலவுமாய்
அமர்களப்பட்டது
தமிழ்க்காதல் திருமணம்

200605 காதலி வருவாளா


ஆயிரம் பாவையர்
காதல் விழியோடு
ஓருயிர்ப் பூமகள்
தேரில் வருவாளா

வேருக்குள் வேர்விட்டு
பின்னிக் கொள்வாளா
தூருக்குள் நீர்போல
நெஞ்சில் வாழ்வாளா
மூச்சுக்குள் மூச்சாகி
மூச்சைக் காப்பாளா

தாகத்தின் ராகத்தில்
காதல் இசைப்பாளா
மோகத்தின் தாளத்தில்
முத்தம் விதைப்பாளா

தோளில்
ஏறிக் கொள்வாளா
தோளாய்
மாறிக் கொள்வாளா

கீறும்
காதல் நகத்தால்
காவியம் சொல்வாளா

பூஞ்சோலைப் புன்னகையில்
பூபாளம் வேண்டும்
மூக்குத்திப் பூவோடு
மோட்சங்கள் வேண்டும்

ஏக்கம்
எங்கும் எனைக்கொல்ல
தூக்கம்
எங்கோ விடைசொல்ல

தீயில்
தீயும் உயிரால்
தீபம் தேடுகிறேன்

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை


இலக்கியச் சுடரொளி(3) - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
- சத்தி சக்திதாசன்

நேர்காணல் - நன்றி: நிலாச்சாரல்

'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே
உங்களுக்காக:


1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது ?

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்
ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய். பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக்கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளையெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி
நின்றேன். நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பதுபோலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பதுபோலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன ?

அருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.

கவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.

என் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.

வாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.

வாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.


3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா ?

எனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.

எல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.

தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.

எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.

கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.

4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா?

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரை வீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.


5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் இருக்கிறதா? எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?

நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற எனக்கு ஞாபகம் இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷ்ணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்று அழைப்பார். அப்போதெல்லாம் இசைக்குள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.

நான் கல்லூரி சென்றபின்னர்தான் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.


6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற
கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க
ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.

7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை? சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா?

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.


8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாளர்கள் யார்?

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்றிருந்தாலும் சரி பெறாமலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் சரி.


9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல் பற்றிக் கூறுவீர்களா?

அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. 2004 பிப்ரவரி 8ல் தொடங்கி பத்து தினங்களுக்கு திசைகள் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் தலைமையில், லண்டன் பல்கலைக் கழகம் பேராசிரியர் சிவாபிள்ளை முன்னிலையில், தமிழ்-உலகம் குழுமம் இணையப் பந்தலில் என் அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.

வரலாற்றின் வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.

இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.

அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோ ம் நாம்.

சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.


அன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1. அழைப்பிதழும் வரவேற்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/1.html

2. தலைமையும் உபசரிப்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/2.html

3. வாழ்த்துரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/3.html

4. வெளியீடு ஆய்வுரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/5.html

5. விமரிசனங்கள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/6.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/7.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/8.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/9.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/13.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/14.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html

6. ஏற்புரையும் நன்றியுரையும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/15.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/16.html


10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன்?

நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான்
எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.

http://buhari.googlepages.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல்
சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.

buhari@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.

http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய
முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.

தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.


11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?

இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


12. "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் ?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த
நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி
உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!


13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?

அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்
வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்


14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது?

சிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே. என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள்
எழுதும் எண்ணம் இல்லை. கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.


15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?

தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம். உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை
எண்ணிக்கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது. இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப்
பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.


16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

தமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக் கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்

தமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.

திரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்

தமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்

வாழ்க தமிழ். நன்றி வணக்கம்.
காக்கைச் சிறகினிலே என்றொரு ஹாலிவுட் படம்

சிலர் சொல்வதைப்போல தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்தான்.

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக் கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக் கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக் கொண்டுள்ளோம்.

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

சில அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அவற்றை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன.

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

"தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga(?), Da(?), Ba(?), Dha(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று சிலர் சொல்கிறார்கள்.

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது muham என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Changam என்று உச்சரிக்கப்படுகிறது. Chankam என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: enough, cut, station, psychology, knife என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tamil என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை.

Thamiz என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Buhari என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

பாரதி என்ற பெயரை Bharathi என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Paarathi என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Puhaari என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Buhari என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - knowledge" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று சிலர் சொல்வதை நான் ஏற்கிறேன்.

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம்.

ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிக அதிகமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள்.

உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

பலர் வேறு வழியில்லை என்று சொல்லிக்கொண்டு பயன்படுத்தும் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

பட்டர் = வெண்ணை
பவுடர் = பொடி
பஸ் = பேருந்து
டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்
காலேஜ் = கல்லூரி

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான்.

பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

தமிழ் என்ற சொல்லை Tamil என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tanjore என்றும், மதுரை என்ற சொல்லை Mejra என்றும், தூத்துக்குடியை Tuticorin என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். Nganendran என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது, அனைத்து மொழியிலிருந்தும் உள்ள அனைத்துச் சொற்களையும் உச்சரிக்க நாம் புதிய எழுத்துக்கள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவோமா?

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cut, Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? Sun, Son எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? hire, here, hear, heir, hair நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், இப்படியான தப்பான விருப்பங்கள் சாத்தியப்படாது.

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஒருவர் எதை விடும்புவார்?

ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம்.

பலருக்கும் சில அயல்மொழிப் பெயர்களை அவர்கள் உச்சரிப்பதுபோலவே தமிழில் எழுதமுடியவில்லையே என்ற கவலைதான் இருக்கிறது.

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் பலரும் பலவாறு பேசுகிறார்கள். கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு Run - Joe என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்?

தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

அன்புடன் புகாரி