எவரொருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார். வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான். -பகவத்கீதை 7:20
கண்ணால் காணமுடியாதது எவனோ, அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்குப் பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை. -ரிக்வேதம் 6:45:16.
அன்பு நண்பர்களே, மேலே குறிப்பிட்டுள்ள வேதங்கள் இரண்டும் உண்மையானவையா என்று எவராவது எனக்கு அறியத் தருவீர்களா?
இப்பல்லாம் இட்டுக்கட்டி வரும் கதைகளே மிக அதிகம். இது எனக்குக் கடந்த வருடம் வந்த செய்தி.
அன்புடன் புகாரி
20171130
சில இந்துக்கள் என்னை
இந்து விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில முஸ்லிம்கள் என்னை
முஸ்லிம் விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

சில நாத்திகர்கள் என்னை
நாத்திக விரோதி
என்பதுபோலப் பார்க்கிறார்கள்

ஆனால்
பெரும்பாலானவர்கள் என்னை
நல்லிணக்கம் தேடும்
வெள்ளைப் புறாவாகத்தான்
பார்க்கிறார்கள்

இவற்றைச் சந்தித்துத்தான்...

ஒவ்வொரு கவிஞனும்
இங்கே வளர்ந்து வந்திருக்கிறான்

ஒவ்வொரு எழுத்தாளனும்
இங்கே காலூன்றி இருக்கிறான்

ஒவ்வொரு கலைஞனும்
இங்கே கலை வளர்த்திருக்கிறான்

ஒவ்வொரு புரட்சியாளனும்
இங்கே புரட்சி செய்திருக்கிறான்

உலகம் புதிதல்ல
நான் தான் உலகுக்குப் புதியவன்

நான்தான் இம்மாதிரி
வெறுப்புணர்வுகளையும் சகித்து
இணக்கம் தேடிப் போராட வேண்டும்

எதிர்ப்பவர்கள்
எண்ணங்களை ஊட்டுகிறார்கள்
அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்

பாராட்டுபவர்கள்
ஊக்கம் தருகிறார்கள்
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஆகவே
எதிர்ப்பும் இணக்கமும்
என் வேர்களுக்கான நீர்தான்
என்று புரிந்துகொள்கிறேன்

போற்றுதலும் தூற்றுதலும் கடந்து
நல்லறம் செய்க
அன்பு நெஞ்சங்களே

அன்புடன் புகாரி
20171130
வாட்சப்பில் ஒரு நண்பர் சொல்கிறார். எல்லா கோவில்களும் முகலாயர் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டுவிட்டன. இப்போது இருப்பவை வெள்ளைக்காரன் கட்டியது என்கிறார். எனக்கு வியப்பளிக்கிறது.
உண்மை என்ன?
நான் தஞ்சாவூர்க் காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். அடிக்கடி தஞ்சை பெரியகோவில் - பிரகதீஸ்வரர் கோவில் சென்று அந்த வளாகத்தில் அமர்ந்திருப்பதை விரும்புபவன். அந்த அமைதி எனக்குப் பிடிக்கும். என் இளவயதில், திசைகள் பத்திரிகைக்காக எழுத்தாளர் கவிஞர்கள் ஓவியர்கள் என்று நாலைந்துபேர் வாரம் ஒரு சந்திப்பு நிகழ்த்துவோம். அதற்கு ஏற்ற இடம் கோவிலின் உள் வளாகம்தான் என்று முடிவெடுத்து அங்கேயே கூடுவோம்.
இப்போது அந்தக் கோவிலுக்கு மிக அருகிலேயே என் வீடு இருக்கிறது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
அந்தக் கோவிலைக் கட்டியது வெள்ளைக்காரன் இல்லை. 1003-1010 ல் கட்டப்பட்ட அந்தக் கோவிலைப் போல பெரிய கிருத்துவ ஆலயமோ இஸ்லாமிய பள்ளிவாசலோ இந்தியாவிலேயே கிடையாது.
தாஜ்மகால் ஒரு சமாதி. பள்ளிவாசல் அல்ல. அந்த சமாதியைவிட உயர்வான கட்டிடக் கலையைக் கொண்டது தஞ்சை பெரியகோவில்
ஏன் ஒருசில தமிழர்களின் மனம் இப்படிச் சுருங்கி மதவெறிக்குள் சிக்கிச் சீரழிகிறது சமீபகாலமாக?
அன்புடன் புகாரி
என்னிடம் ஒரு நான்கு கேள்விகள் இருக்கின்றன. அதற்கு சரியான விளக்கம் உங்களிடமிருந்து வேண்டும்:
1. ”நான் உன்னை நினைத்து உருகிக் கரைகிறேன்.” உடம்பு உருகிக் கரையுமா? கரைந்தபின் எப்படி உயிரோடு இருக்க முடியும்?
2. ”உன்னைக் காணாமல் நான் செத்தே போயிட்டேன்” செத்துப் போனவன் எப்படி இப்போது பேசுகிறான். என்றால் அவன் பிசாசா?
3. ”கமலைக் கண்டதும் எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல” காலாவது ஓடும். கை எப்படி ஓடும். என்றால் இவன் ஆடா மாடா? கைகள் இல்லாமல் இவனுக்கு இருப்பவை அத்தனையும் கால்களா?
4. ”என் தந்தை இறந்த சொல் கேட்டு தூள் தூளாய் வெடித்துச் சிதறினேன்” ஓர் உடம்பு இப்படித் தூள் தூளாய் வெடித்துச் சித்றுமா? அப்படிச் சிதறியது ரத்தமும் சதையுமாய் வீதியில் கொட்டிக் கிடக்கிறதா? அதன்பின் அவன் உயிரோடு இருந்து நம்மிடம் பேசுகிறானா?
கவிதையைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. பலரது கேள்விகள் என்னைத் திடுக்கிட வைக்கின்றன. நான் அதிர்ந்து வாயடைத்துப் போகிறேன். அவர்களுக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்லமுடியும் என்று திணறினேன். பிறகுதான் இப்படி எளிய முறையில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டலாம் என்று இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன். எல்லோரும் பதில் சொல்லலாம். இது எப்படிச் செல்லப் போகிறது என்று காண உண்மையிலேயே ஆவல்.
இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா என்பது ஆதாரக் கேள்வி. நான் உருவம் இல்லை என்கிறேன். இருக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்தின் இலக்கிய நடையைப் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த வழியில் புரியவைக்க முடியுமா என்பதே என் வேர் முயற்சி.
உதாரணம்:
மிக்க வல்லமையும்
கண்ணியமும் உடைய
உம் இறைவனின் முகமே
நிலைத்திருக்கும்.
(குர்-ஆன் : 55:27)
இக் குர்-ஆன் வசனத்தில் இறைவனின் முகமே என்று வருகிறதே. அதனால் இறைவனுக்கு முகம் உண்டு, இறைவனுக்கு உருவம் உண்டு என்கிறார்கள் சிலர். அவர்களுக்குக் கவிதை வாசிப்பைக் கற்றுத் தருவதே இந்த இடுகையின் உண்மையான நோக்கம்.
அன்புடன் புகாரி
20171130
உன்னை
அறியவைப்பதே
எனக்கு வெற்றி

தோற்கடிப்பது
வெற்றியே அல்ல
வெறி

நான்
வெறிகொள்வதில்லை

என்
உரையாடல்
தோற்பதில்லை

அன்புடன் புகாரி
20171130
அணுசக்தி அறிஞர் நண்பர் கனடா ஜெயபாரதன் அவர்களிடம் நான் கேட்ட என் கேள்விகள் சிலவற்றிற்கு அவரின் பதில்கள் பின்வறுமாறு. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
​1. பூமியின் சுனாமி போன்ற பேராபத்துகளுக்கு பூமி மத்தியின் சூடு காரணமா அல்லது வானம் காரணமா?​
​பூகம்பத்தால் கடலில் எழும்பும் சுனாமிக்குப் பேரளவு சேமிப்பு இயக்கசக்தி [Stored Kinetic Energy] தேவைப்படுகிறது. அந்த இயக்கசக்தியைத் தருவது பூமியின் உட்கரு அணு உலை. விண்ணிலிருந்து [சூரியனிடமிருந்து] பூகம்பத்தைத் தூண்ட ஒளிக்கதிர் பாய்கிறது.

​2. ​சூரியனில் ஓட்டை விழ முடியுமா? அது என்ன திடப் பொருளா? வாயுப் பொருளா?​
சூரியன் மாபெரும் வாயுக்கோளம் [பேரளவு ஹைடிரஜன் + சிறிதளவு ஹீலியம்]​
In a recent report NASA has revealed that a monstrous coronal hole (low-density gas regions of the Sun’s atmosphere), measuring more than ten percent of the Sun’s surface area, has opened up on our star, the sun.
The footage was captured May 17 and 19, 2017 by the US space agency’s Solar Dynamics Observatory.
Coronal holes are areas on the Sun where the solar magnetic field extends up and out into interplanetary space, sending solar material speeding out in a high-speed stream of solar wind.
​​3. ​உஷ்ண சூடேற்றத்திற்கு நாம் இயற்கையை அழிப்பதுதான் காரணமா? அல்லது அது ஒரு இயற்கைச் சுழற்சியா? ​
​நாம் தினம் பெட்ரோல் கார்கள் மூலமும், நிலக்கரியால் தொழிற்சாலைகள் இயக்கியும் கரிவாயு [CO2] உற்பத்தி செய்வது ஓரளவு காரணம். காட்டுத்தீக்கள் ஒரு காரணம். எரிமலைகள் ஒரு காரணம். பூமியின் சுழல் அச்சு சற்று சாய்வதும் ஒரு காரணம்.​
​தற்போதைய பூகோளச் சூடேற்றம் ஒருபோக்கு மீளா நிகழ்ச்சி. இதைக் குளிர்ப்படுத்த பனியுகக் காலம் எப்போது வரும், பூமியின் அச்சு பழைய நிலைக்கு மாறுமா என்று ஊகிக்க முடியாது.​
​4. ​முன்பு உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதா?​
​60 மில்லியன் [ஆறு கோடி] ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் சுமார் 12 மைல் விண்பாறை விழுந்து பயங்கர சூடான பூமியில் டைனோசார்ஸ்கள் அத்தனையும் மரித்துள்ளன. பூமியே கொந்தளித்துச் சுற்றுப்பாதை நகன்று, சூரியனுக்கு அப்பால் தள்ளப்பட்டு, உஷ்ணம் தணிந்து புதிய பயிரினம், உயிரினம், மானிடம் தோன்றியுள்ளது என்று நான் அறிந்தது.
அன்புடன் புகாரி
20171130
இறைவனுக்கு
இணைவைத்தால்
நான்
இஸ்லாமியனில்லை

மாற்றுக்
கருத்துண்டா?

இறைவனின் சொல்லான
குர்-ஆனுக்கு
இணைவைத்தால்
நான்
நல்ல இஸ்லாமியனா?

என் கேள்விக்குப்
பதிலுண்டா?

அன்புடன் புகாரி
கவிதை எழுதுபவன் கவியன்று
கவிதையே வாழ்க்கையாய் உடையோன்
வாழ்க்கையே கவிதையாய் செய்தோன்
அவனே கவி

-பாரதி

அட்சய வரம் அம்மா

இந்த வாழ்வில்
கிடைத்தற்கரிய ஒன்று
எல்லோருக்குமே
கிடைத்துத்தான் இருக்கிறது

தொகையிடாக்
காசோலையைப்போல

பிறப்போடு ஒட்டிவந்த 
குறைந்தழியாக்
கருணையைப்போல

அட்சய வரம்
அம்மா

அன்புடன் புகாரி
கடவுள் இல்லை என்று
அறிவித்த புத்தர்
அன்பைப் போதித்தார்
கடவுளாக்கப்பட்டார்

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்
என்கிறது இஸ்லாம்

அன்பே சிவம் என்றார்
திருமூலர்

அன்பே கடவுள்
என்பதுதான்
ஆன்மிக அடிப்படை
என்பார் பலர்

இப்படியாய் யாவரும்
அன்பைத்தான் போதித்தார்கள்
அன்பாகத்தான் ஆனார்கள்
கருணையைத்தான் கற்பித்தார்கள்
கருணையாகவேதான் நின்றார்கள்

இனி நாம்
இறைவனை நோக்கிப்
பயணப்படுவது
எத்தனை எளிதானது
என்று சிந்தியுங்கள்

இறைவனை நெருங்க
ஒற்றை வழி
நாம் அவன்போலவே
அன்பாலும் கருணையாலும்
உயர்ந்துகொண்டே செல்லுதல்தான்

அதி உயர்ந்த
அன்பாய்க் கருணையாய்
நாமும் உயர உயர
அவனுக்கு அருகே அருகே
செல்கிறோம்

அன்புடன் புகாரி
20171126
எனக்கு இறைவன் என்பவன் மனிதன் அல்ல.
உருவமே இல்லா இணையே இல்லா மாபெரும் சக்தி.
ஆகவே ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால் அவன்.
பிறகு ஏன் இறைவனை அவன் என்கிறாய் என்கிறீர்களா?
என் மகளை வாடா என்று நான் அழைத்தால் என் மகள் ஆண்பிள்ளையாகிவிடுமா?
என் மகள் வந்தது நின்றது சென்றது என்று நான் சொன்னால் இலக்கணம் தடுக்கலாம் இதயம் தடுக்குமா? என் மகள் விலங்கினம் ஆகிவிடுமா?
என் மகளைப் பஞ்சவர்ணக்கிளி என்று கொஞ்சினால் என் மகள் பறவையினமாகிவிடுமா?
இலக்கணத்தை எப்போதுமே இலக்கியம் வென்றெடுத்தே செல்லும்.
கற்பனைகளை எப்போதும் உண்மை களையெடுத்தே நடக்கும்
இறைவனை அவன் என்று அழைப்பதால் இறைவன் மனிதன் ஆகிவிடமாட்டான்.
இது என்னுள்ளக் கருத்து.
மறுப்போரை வெறுப்போனும் நானில்லை ஏற்போனும் நானில்லை.
அன்புடன் புகாரி
பூக்களைத் தொடுத்தால் மாலை
புலர்வினைத் தொடுத்தால் காலை
கோடுகள் தொடுத்தால் ஓவியம்
கவிதைகள் தொடுத்தால் காவியம்
எவற்றைத் தொடுத்து நான் சொல்ல
உங்கள் அன்பை என் நன்றி வெல்ல

அன்புடன் புகாரி
நீதான் தேவதை
நீயேதான் ராட்சசி

நீதான் தீபம்
நீயேதான் கும்மிருட்டு

நீதான் உயிர்
நீயேதான் மரணம்

நீதான் உடன்பாடு
நீயேதான் முரண்பாடு

நீதான் அமுதம்
நீயேதான் விசம்

நீதான் படுக்கை
நீயேதான் சுடுகாடு

நீதான் தெய்வம்
நீயேதான் சாத்தான்

நீதான் ரகசியம்
நீயேதான் அம்பலம்

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை மகிழ்வித்ததில்லை

உனையன்றி
வேரு எவரும் என்னை
இத்தனை துக்கப்பட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என் முன்
இத்தனை
அசடுவழிந்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இப்படித்
திடுக்கிட வைத்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை சேவையில்
மூழ்கடித்ததில்லை
உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் சொர்க்கம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் எனக்கு
இப்படியோர் நரகம் காட்டியதில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனை முறை
பிறக்கச் செய்ததில்லை

உனையன்றி
வேறு எவரும் என்னை
இத்தனைமுறை
கொன்றழித்ததில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி

கவிஞரே எனக்குள் ஓர் ஆதங்கம், நீங்கள் இவ்வளவு தமிழை மூளையில் வைத்துக் கொண்டு கன்டாவில் இருப்பதால் தமிழ் வருந்துகின்றதோ?

*
கனடாவில் இருப்பதால்தான் நான் வணிக மற்ற தமிழ் செய்கிறேன்.
பலனல்லவா அது தமிழுக்கும் எனக்கும்.

என் இன்னலெல்லாம் நேரம் போதவில்லையே என்பது மட்டுமே
கணினி ஆலோசகனாகப் பணியாற்றும் எனக்கு நேரம் வெகு தூரம்

அன்புடன் புகாரி
20171125
ஆமாம்
உங்களுக்கென்ன

ஆர் எஸ் எஸ் தான் இந்துக்கள்
ஐ எஸ் ஐ எஸ் தான் முஸ்லிம்கள்
என்று சொல்லி
குளிர்நோவு கண்ட
பூனையைப்போல் பினாத்துவீர்கள்

ஒருங்கிணைந்து
இவர்களை
உண்டு இல்லை என்று
ஆக்க
முன்வரமாட்டீர்கள்

மையப் புள்ளிவிட்டு
ஒளிந்தோடுவதே
ஒப்பிலாப் பணி உங்களுக்கு

கேட்டால்
பகுத்தறிவு என்பீர்கள்

உண்மையான பகுத்தறிவு
ஓரமாய் நின்று
தேம்பித் தேம்பி அழும்
பாவம்

அன்புடன் புகாரி
20161028
பட்டாசுக்கு
நெருப்பு வைக்கும்
பிஞ்சு

பிஞ்சுக்கு
நெருப்பு வைக்கும்
பட்டாசு

அன்புடன் புகாரி
20161028
எந்தப் பண்டிகை
வந்தாலும்
கொண்டாடப்
போவதென்னவோ
வணிகர்கள்தாம்

அன்புடன் புகாரி
20161028
மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி

நிலம்விழுந்து நடனமாடும்
பல்லாயிரம் வானவில்களாய்
எத்தனைக் கவர்ச்சி

அடடா இது
கனடிய இலையுதிர் காலம்

அன்புடன் புகாரி
20161028
தெற்கு
தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

மடக்க நினைக்கும்
வடக்கிற்கு
முடக்குவாதம்தான்
ஆயுள் முழுக்கவும்

அன்புடன் புகாரி
20161028
பாதுகாப்புக்காகத்தான்
வேறு வழியில்லாமல்தான்
என நினைத்துச்
செய்யப்படும்
குற்றம்கூட
ஒருபோதும் உனக்குப்
பாதுகாப்பாய்
அமைந்துவிடாது

இன்னொரு
பெரிய
குற்றத்திற்கான
வேராகவே
அது
வளர்ந்துவரும்

அன்புடன் புகாரி
20161028
*கண்ணீர் அஞ்சலி*

1984 அக்டோபர் 31ன் கொடுங்காலைப் பொழுதில் பீந்த்சிங் சத்வந்த்சிங் என்ற இரு மத வெறியர்களால் அன்னை இந்திரா சுடப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து கலங்கியபோது வெளிவந்த கண்ணீர்க்  கவிதை இது - 19841031

அன்றைய என் அறிவின் பார்வையில், எழுதப்பட்ட கவிதைதான் இது. தீபம் இதழில் வெளிவந்தது. ஆனால் அதன்பின் இதை என் எந்தக் கவிதை நூலிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒரு கவிதையாய்க் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதை வெளியிட வேண்டும் என்று தோன்றியது -20171124

*

இவ்வையகத்தின்
வைர நிலாவே

தேசக்கவி பாரதியின்
பொற்கனாவே

உலக சமாதானத்திற்காக
ஓயாது உழைத்த
புனிதப் புறாவே

இது நிசந்தானா?

இம்மாபெரும்
ஜனநாயகத் தோட்டத்தில்
காவல்காரர்களாலேயே
உன் ரோஜா உயிர்
கிள்ளியெறியப்பட்டதாமே
நிசந்தானா?

உனக்கோர்
உயிருள்ள இரங்கற்பா
வடிக்கலாமென்றால்
என்
பேனாவிலிருந்து
கண்ணீரல்லவா
பெடுக்கெடுத்து
எழுத்துக்களை மூழ்கடிக்கிறது

இந்திய மண்ணைத்
துண்டுபோடத் துடிக்கும்
துரோகிகள் உன்னைத்
துப்பாக்கிக் குண்டுகளால்
துளைத்துவிட்டார்களா

இந்தத் தேசத்தந்தைக்கு அன்று
தாய்க்கு இன்று
என்று
இவர்கள் செலுத்தும்
நன்றிக் கடனும் மரியாதையும்
இதுதானா

ஈடு செய்ய முடியாத
இழப்பு என்று
ஒரு
பேச்சுக்குச் சொல்வார்கள்
பலருக்கு

நிசத்தில்
உன்னை
அள்ளிக் கொடுத்துவிட்டுத்
தேம்பி நிற்கும்
இந்த தேசத்தின்
இழப்பல்லவா
ஈடு செய்யவே முடியாத
பேரிழப்பு

அன்புடன் புகாரி
19841031



பகுத்தறிவாளர்கள்
என்று சொல்லிக்கொண்டு
படுத்தி எடுப்பவர்களே

உங்களுக்குள்
கடவுள் பக்தியை
வலிய நுழைப்பதா
என்
பணி என்று
நினைத்தீர்கள்

உங்களின்
சொல் வன்முறையைக்
கிள்ளியெறிவது
மட்டுமே
என் தாகமும்
விவேகமும்

மானுடத்தை வாழவைக்கும்
அடித்தளப்
பகுத்தறிவு பெறுங்கள்
முதலில்

பிறகு
பகுத்தறிவாளர்கள் என்று
உங்களை
*அன்போடு* சொல்லிக் கொள்ளலாம்

மறந்துவிடாதீர்கள்
அன்போடு
சொல்லிக்கொள்வது
அடிப்படை அறிவு
அஃதிலாமல்
பகுத்தறிவு பெற
வழியே இல்லை

அன்புடன் புகாரி 
20171123
>>>சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.<<<

தீவிரவாதிகள் தைரியமாக மேடைபோட்டுப் பேசும் காலத்தில் நாம் வாழ்கிறோம்

தீவிரவாதிகள் எல்லோரும் ஹிரோக்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்

தீவிரவாதிகளிடம்தான் எல்லா நியாயமும் தர்மமும் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறது

தீவிரவாதிகளின் இருப்பினால்தான் அரசியல் சுகப்பயணம் செய்கிறது

தீவிரவாதிகள்தாம் அறம் என்பதற்கான சரியான விளக்கம் சொல்லக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் நாடு சுவாரசியம் குன்றியதாய் ஆகிப் போகும்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் அரசின் ஓட்டு வங்கிகள் நிரம்பாமல் போய்விடும்

தீவிரவாதிகள் சுதந்திரத்தின் பொருளைச் சரியாக விளக்குகிறார்கள்

தீவிரவாதிகள் மட்டும்தான் நாட்டில் சுதந்திரம் பெற்ற குடிமக்கள்

அன்புடன் புகாரி
20171122


உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...
அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்
ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்
அன்புடன் புகாரி
20171122
*முகநூலும் நானும்*

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை

புது நட்புப் பூக்கள்
தினம் தினம்
மொட்டுடைத்துப் பூக்கின்றன
ஆனால் நான்
அப்படியானதொரு குறிக்கோளில்
முகநூலில் இல்லை

உறவுகள் வந்து
உற்சாகமாய் லைக் போடுகின்றன
ஆனால் நான் அதற்காகவும்
முகநூலில் இல்லை

நண்பர்கள் 
உறவுகள்
நன்கறிந்தவர்
சற்றே அறிமுகமானவர்
மறந்தே போனவர்
யாரென்றே தெரியாதவர்
என்று இன்று
5000 நண்பர்கள் இருக்கிறார்கள்
அதற்குமேலும் வருகிறார்
முகநூல்தான் 5000+ ஐ
ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர
நான் ஏற்கிறேன்

ஏனெனில்
என் இதயம் அப்படியே
விரிந்து பரந்தது
இந்தப் பிரபஞ்சத்திற்கும்
பெரியதாக

இந்த 5000+ ஐ அடையும்
லட்சியத்திலும் 
நான்
முகநூலில் இல்லை

பிறகு
ஏன் இருக்கிறேன்
நான் முகநூலில்?

என் கவிதைகள்
தென்றலாய் உலவ
ஒரு மன்றம் வேண்டும்
புயலாய் வீச
ஒரு கரை வேண்டும்

என் தென்றலின் தீண்டலை
என் புயலின் சீற்றத்தை
என் கருத்தின் புதுமையை
என் கவிநயத்தின் அழகை
ரசிக்கும் நண்பர்கள்
ரசித்ததைச் சிலாகித்து
*மறவாமல்
மறுமொழி இடவேண்டும் *

என் கவிதைகளின்
ஆணிவேர்வரைத்
துளைத்துச் சென்று
கண்ட சுகங்களையும்
கடும் விமரிசனங்களையும்
இணையான விருப்பத்தில்
இன்றே 
இப்பொழுதே
அள்ளித் தரவேண்டும்

நாலு லைக் வந்தாலும்
போதும்
அட 
அதுவும் இல்லாவிட்டாலும்
போதும் போதும்

ஆனால்
ஒவ்வொரு லைக்கும்
உண்மையின் கர்ப்பத்தில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

லைக்கைவிடப் பன்மடங்கு
நான் லைக் பண்ணுவது
வந்து விழும் உங்கள்
மறுமொழிகளைத்தான் 
என்பதை
என் முகநூல் நட்புகள்
அன்போடு
அறிந்து வைத்திருக்க வேண்டும்

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

அன்புடன் புகாரி
20171122
காதல் என்பதே
சாதி மதம் இனம் நிறம் மொழி கடந்து
சின்னச் சிறகுகள் விரித்து
மனிதப் பெருவானில்
எழுந்து பறக்கத்தானே

லவ் ஜிகாத் என்று
நேரெதிர்ப் பெயர் சூட்டி
முற்போக்குப் பிஞ்சுப் புறாக்களை
அடித்துச் சூப்பு வைக்கும்
காட்டுமிராண்டிக் கூத்தென்பது
வெட்கத் தலைகுனிவின்
உச்சமல்லவா

எங்கோ
பல்லாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கிச் செல்கிறோமா

அதன் காரணம்
சாக்கடைச் சாதிமத பேதமா

அகிலா
ஹதியாவானாலோ
ஹதியா
ஜெனிலாவானாலோ
ஜெனிலா
அகிலாவானாலோ

உனக்கென்ன
கேடு

எங்கே
வன்முறைக்கு
விருந்தாகாமல்
வயதுவந்தோர்
முடிவெடுக்கிறாரோ
அங்கேதான்
சுதந்திரம்
தன் வேர்களில்
உயிர்நீர் அருந்துகிறது

சட்டமும்
கடமையைச் செய்வதில்லை
நீதியும்
நியாயத்தை நிறுவுவதில்லை

வெறிக்குப் பலியாகி
வீதியில் அம்மணமாய்
மனிதவாழ்வு
இங்கே

அன்புடன் புகாரி
20171121












*கவிதை பற்றி ஓர் உரையாரல்:*

கேள்வி: நன்றாய் வரவேண்டிய உங்கள் கவிதை இப்படி இழுவையாய் ஆகிவிட்டதாய் உணர்கிறேன். ரசிகர்களுக்கு ஏற்ப எழுதுபவர்கள்தானே பெருங்கவிகளாய் இருக்க முடியும்?

ரசிகனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எழுதுபவனே நல்ல கவிஞன் என்பதை நானும் ஏற்கவில்லை பாரதியும் ஏற்கவில்லை. நான் சினிமா எடுக்கவில்லை கவிதை எழுதுகிறேன்.

கேள்வி: ரசிகனின் கருத்தில் நியாயம் இருந்தாலுமா?

நியாயங்கள் காலத்தின் கையில். அதோடு எந்த ரசிகனை நினைத்துக் கவிதை எழுதவேண்டும்? அத்தனை ரசிகர்களும் ஒரே மாதிரி ரசிப்பார்களா? ஒரு ரசிகர் தனக்குப் பிடித்ததைத் தேடிப்பிடுத்து ரசிக்கிறார். ஒரு விமரிசகர் தனக்குப் பிடிக்காததைத் தேடிப்பிடித்து விமரிசிக்கிறார். நான் எனக்குப் பிடித்தக் கவிதைகளை எழுதிச் செல்கிறேன். ரசிகரும் விமரிசகரும் அவரவர் விருப்பத்தைச் செய்வதில் எனக்கு யாதொரு மறுப்பும் இல்லை விருப்பமே உண்டு.

அன்புடன் புகாரி
20171120
*நூஹு என்றொரு நண்பர்*

டொரோண்டோவில் நூஹு என்று ஒரு நண்பர். கீழக்கரையைச் சேர்ந்தவர். உணர்வுகளின் கோட்டைக்குள் உற்சாகமாய்க் குடியிருப்பவர்.

அருமையான புதிய வீடு ஒன்றை ஏஜாக்ஸ் என்ற ஊரில் வாங்கிக் குடிபெயர்ந்து விருந்து வைத்தார்.

அவருக்குக் கானா பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதை மனதில் கொண்டு ஒரு நான்கு வரிகள் எழுதிப் பாடினேன். அதுவும் அவருக்குப் பிடித்து எங்களிடம் பாடிக்காட்டிய ’வகைவகையா சீப்பு சோப்பு கண்ணாடி’ என்ற மெட்டுக்குள் எழுதிப் பாடினேன். இதோ அது உங்களுக்காக

பளபளப்பா
தொப்பி ஜிப்பா கண்ணாடி
நூஹு....
பச்சப்புள்ள
பாசத்துக்கு முன்னாடி

பேட்டுமிட்டன்
ஆட்டத்துல கில்லாடி
அந்த.....
ஜல்லிக்கட்டு காளையெல்லாம்
பின்னாடி

நூஹூ நூஹூ நூஹுடா
நூஹூ வெல்லப் பாகுடா

அன்புடன் புகாரி
20171119
மாமனுக்கு அஞ்சலி

உறவினர் ஒருவர் இறந்திருப்பார். அம்மா என்னை அந்த மரணவீட்டிற்குச் சென்றுவா என்று கட்டளை இட்டிருப்பார். நானும் சென்றிருப்பேன். மருந்துக்குக்கூட அந்தச் சாவினால் எனக்கு ஒரு துளி கண்ணீர் வராது.

ஆனால்... நான் தொடர்ந்து அழுதேன் ஒரு மரணத்திற்கு. இறந்தவர் எனக்குச் சொந்தம் இல்லை. என் உறவினர் எவருக்கும் அவர் தூரத்து உறவும் இல்லை.

என்னை எடுத்து முத்தமிடும் என் வீட்டு வேலைக்காரர். என்னால் ‘மாமா’ என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர் ஒரு தெய்வப் பிறவி என்றே எனக்குத் தோன்றும். அத்தனை அன்புடன் வேறு எவரும் என்னிடம் இருந்ததாய் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது.

அவர் ஒரு நாள் விபத்தில் இறந்துவிட்டார். பார்க்க இயலாத நெடுந்தூரம். இறந்த செய்தியே ஒரு வாரம் கழித்துத்தான் என்னை வந்து சேர்ந்தது. என் கண்ணீர் ஒரு நயாகராவாய் அவருக்கு என்றென்றும்...

*

அஞ்சலி...

ஓவெனக் கதறினால் தீருமோ - என்
       ஒப்பாரியுனையிங்கு மீட்குமோ
ஆவியும் இல்லையே போக்கிட - என்
       ஆவியே நீதானே மாமனே

தூவிய முட்களில் துவள்கிறேன் - மனந்
       தேறிடும் வழியற்றுத் தீய்கிறேன்
சாவெனும் அரக்கனவனெங்கே - என்
       சினத்தினில் எரியட்டும் இன்றே

அன்புடன் புகாரி
19870000

கீழே உள்ள இரண்டு கவிதைகளும் ஒன்றுதான். இறைவன் என்றாலும் அல்லாஹ் என்றாலும் பொருளில் யாதொரு மாற்றமும் இல்லை. 

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்) = God (ஆங்கிலம்)

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை மாற்று மதத்தவர் பலரும் அனுபவித்துப் பாடுவார்கள். அப்படியானதோர் அற்புதப் பாடல் அது. மனித உயிர்கள் நெஞ்சுருக நேசிக்கும் இறைவனின் குணாதிசயங்களை அருமையாகப் பாடிச் செல்லும் அந்தப் பாடல்.   

இறைவன் இறைவன் என்றே எல்லா இடங்களிலும் வரும் அந்தப் பாடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ’அல்லா’ என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்திவரும்.

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

இதை ஒரு மேடையில் ’ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப்பாடினார்கள். பிழையே இல்லை. ஆனாலும் தமிழர்களாகிய நாம் எத்தனையோ வடமொழிச் சொற்களையும் அரபுமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குள் அழகாகக் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம். அதுபோலவே அல்லா என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏனெனில் அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். God என்றுதான் பொருள். 

நான் அறிந்து சில மாற்றுமத எழுத்தாளர்கள் இன்சால்லா என்ற சொல்லை வெகு சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். 

நான் மதநல்லிணக்கம் பாடுபவன். இதுபோல் எழுதி இணக்கம்தேட விழைபவன்.

*
அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

அன்புடன் புகாரி
20171120
எத்தனையோ மாணவர்களைத் தமிழால் ஊட்டிய உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் நான் என்றும் உங்களை மறப்பதே இல்லை.
என் கவிவேர் இதழ்களில் பாலூட்டியத் தாயை நான் எப்படி மறப்பது?
என் நட்பில்தான் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். ஆனால் நான் தான் அடையாளம் தெரியாதவனால் இருந்திருக்கிறேன். வருந்துகிறேன்.
இப்போதும் உங்கள் பாராட்டைக் கேட்டு அதே வயதுக்கு மீள்கிறேன்.
அடுத்தமுறை ஊர் வரும்போது அவசியம் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்கிறேன்
அன்புடன் புகாரி
கவிஞரய்க்
கவிஞராய்க்
காண்பதய்ப்
பொய்யென
பிழய்யெனக் 
கொள்கய்
முறய்யோ?
(பின் குறிப்பு: இப்படித்தான் எழுத வேண்டும் என்று நான் எழுதுவதாய் யாரும் அன்புடன் எண்ணிவிடவேண்டாம். ஓர் ஆய்வின் நீட்சியாய்த்தான் இப்படி. சிரிப்பு வந்தால் சிரியுங்கள். சிந்திப்பு வந்தால் சிந்தியுங்கள். தொல்காப்பியனை மறவாதிருங்கள்)
அன்புடன் புகாரி
ஆசான் என்ற சொல் ஒருமையில் முடிவதுபோல் இருக்கிறதல்லவா? அந்த ’ன்’ என்ற ஈறால்.
இறைவன், ஆண்டவன் என்பன எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ஆசானும் என்று தமிழ் சொல்லித் தருகிறதா?
அன்புடன் புகாரி
பூக்காரிகளின் புகாரி

MohdAppas Rajak கவிஞர் புகாரியா அல்லது பூக்காரியா என்று கேட்டார் என் கவிதை நூல் ஒன்றைக் கண்டுவிட்டு

முதல்வர் Chandra Bose அன்புடன் புகாரி இதுவும் நல்லா இருக்கு. இது தங்கள் அடைமொழிப் பெயராக மாறிப் புழக்கத்தில் வரப் போகிறது என்றார் நகைச்சுவையாக

பூக்காரிகளின் புகாரி என்றால் என்ன என்று யோசித்தேன், இன்னும் மீளவில்லை -:)

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதி முகநூலில் இட்டேன்

*

வந்த பதில்களும் தொடரும் சுவாரசியமும்:

Chandra Bose "பூக்காரப் புகாரி" எனச் சுருக்கிப் பட்டம் வழங்கலாம். தமிழ்ப் பூக்களைக் கவிதையாகத் தொகுத்துத் தருவதால்......

Lion Mansure Pm பூக்களின் புகாரி பொருத்தமாய் இருக்கும்

Kulam Rasool தப்பாக போகுமே. வீட்டிற்கு தெரியாது பார்த்துக் கொள்ளுங்கள்.

குலாம் ரசூல் அவர்களுக்கு என் பதில்:

பூக்காரிகளை எங்கு பார்த்தாலும் நான் எந்த அவசர வேலையில் சென்றாலும் சட்டென்று நின்றுவிடுவேன்.

ஏன் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கும் என் மனைவிக்கும் மல்லிகை முல்லை என்றால் கொள்ளைப் பிரியம்.

இந்தப் பூக்காரிகளால் எனக்குக் கிடைத்த ஆனந்த நாட்கள் மிக அதிகம்

(இந்தக் கடைசி வரியையும் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவீர்களே)

அன்புடன் புகாரி
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.

அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.

உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார். ஏமாற்றத்தோடு விடுதிக்குச் சென்று மௌனமாகவே இருந்துவிட்டு உறங்கிவிட்டேன்.

ஆனால் அடுத்த நாள் பேராசிரியர் மன்சூர் அலி அவர்கள் என்னை அள்ளி அனைத்ததை சொல்லி மாளாது. தன் நூலகம் அழைத்துச் சென்று அத்தனை நூல்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று அள்ளிக்கொடுத்தார். அப்படி ஒரு ஆசான் எனக்கு அதன்பிறகு கிடைத்ததாகச் சொல்லமாட்டேன். புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அது எனக்கு மகா வருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஓ மன்சூரா நல்லாத் தெரியுமே என்று கூறினார். சந்திக்கலாம் என்றும் சொன்னார். இன்னும் நிறைய என் நினைவுகளை எழுதலாம். அலுவலகம் ஓட வேண்டும் நேரமாகிவிட்டது. 

அன்று என் தமிழாசிரியர் கேட்டதற்காக நான் எழுதிய கவிதைதான் இது.

தமிழய்யா

தீந்தமிழ்ப் பாடங்களைத்
        தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
நீந்தும் ஆசையை ஏந்திச் சென்றேன்
        நீர்சொன்ன கவியாற்றில் நீச்சலிட
பூந்திடச்சில துணிவுகளைப் புகுத்தி
        எனதாசையையும் வளர்த்துவிட்டீர்
காந்தம்முன் இரும்பாய்நான்
        கவிபுனைய முற்பட்டேன்

பாந்தமாய்க் கவிவடிக்கப்
       பெருந்துணையோ கருத்தென்றீர்
ஆந்தையாய் விழியுருட்டி
       அலசியுமொரு பலனில்லை
ஏந்துக உணர்சிகளென்றீர்
       எங்கிருந்தும் கிட்டவில்லை
சாந்திகெட்டேன் தமிழய்யா
       கவிவருமோ இச்சிறுவனுக்கு

அன்புடன் புகாரி
19760615



தொன்றுதொட்டும்
தொடர்ந்தும்
வீசப்படும்
அத்தனைக்
கந்தகக் கல்லடிகளுக்கும்

தன்
சுவைமிகு
கனிகளையே
பரிசாய்க் கொடுக்கும்

தமிழ்
என் தாய்மொழி


யானை போவது
எனக்குத் தெரியவில்லையா
அல்லது
எறும்புகளை நசுக்குவதுதான்
என் வேலையா?
நவம்பர் 8,2016
அன்புடன் புகாரி
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்

புறநாநூறு
சங்க இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்

அகநாநூறு காமத்துப்பால்
காதல் இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு காதல் மொழி
என்கிறார்கள்

வள்ளுவ
அறிவியல் தடங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஓர் அறிவியல் மொழி
என்கிறார்கள்

குறள்வழி அறம் கண்டு
பிரமித்தவர்கள்
தமிழ் ஓர் அற மொழி
என்கிறார்கள்

இப்படியாய்
வாழ்க்கையின்
அத்தனையையும் கொண்ட
தமிழை
அவரவர் கண்கள் போல் கண்டு
போற்றிப் புகழ்கிறார்கள்

குருடர்களும் யானையும்
கதைதான்
என் நினைவில் வருகிறது

தமிழ்
ஒரு முழுமை மொழி

தமிழில் இல்லாதது
தரணியில் இல்லை

அதைத்
தமிழன் அறியாததுதான்
தமிழுக்குத் தொல்லை

அன்புடன் புகாரி
20171113

உறக்கமெனும் மலர்...

கிழக்கிலிருந்து மேற்காக
மேற்கிலிருந்து வடக்காக
வடக்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து தெற்காக

உருண்டு உருண்டு
புரண்டு  புரண்டு
விழுந்து எழுந்து
கவிழ்ந்து நிமிர்ந்து

எப்படிப் படுத்தாலும்
முழு இரவுக்கும்
வருவேனா என்று
முரண்டு பிடிக்கும்
தூக்கம்

அதிகாலை வந்ததும்
எப்படித் துடித்துத் துடித்துக்
கண்களை விரிக்க முயன்றாலும்
விடாமல் உள்ளிழுத்து
விடியல் மடிகளில் புதைத்து
போர்வைக்குள் அள்ளியணைத்து

உச்ச உறக்கமாய்
தேவ தூக்கமாய்
சொர்க்க நித்திரையாய்
மலரும் அதிசயம்தான்
என்ன என்ன?

உறக்கம் என்பதும்
ஒரு மலரோ
அது
சூரியனின் வரவில்தான்
மலருமோ?

அன்புடன் புகாரி
20171113
சமஸ்கிரத மொழிக்கு
இருக்கை கிடைத்து
ஆயிற்று ஆண்டுகள் பல

தோசைக் கல்லில் விழுந்த
பனித்துளிகளின்
உஷ்ஷ்... பயணம் போல
நோயுற்ற வாழ்வே
இன்றும்
சமஸ்கிருதத்திற்கு

என்ன செய்து
கிழித்ததாம் ஹார்வர்டு

வழக்கொழிந்து
போன மொழி
வாய்மொழியாய்
ஆனதா

வாய்நிறைத்துப்
பேசிக் கொண்டாடும்
மக்கள் மொழியாய்
ஆனதா

வணிகம்தானே
இத்தகைய
கல்வி நிறுவனங்களின்
வேர்களும் விழுதுகளும்

அன்புடன் புகாரி

தமிழா
உன்
நாக்கு எனும்
ஈர
இருக்கையைத்
தமிழுக்குக் கொடு
வேறு
இருக்கைகள்
தானே முளைக்கும்
அன்புடன் புகாரி
அ. முத்துலிங்கம்
உலக இலங்கியங்களைத் தமிழில் தமிழ்வாசம் மாறாமல் தரக்கூடிய அற்புத எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தோட்டம் தன் முதல் இயல்விருதை அவருக்குத்தான் வழங்க வேண்டும்.
அவரின் பணி மற்றும் பின்புலங்களைக் கொண்டு பார்த்தால் இத்தனை இடையூறுகளுக்கும் இடையில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்
வாலிபத்தில் அறுத்துக்கொண்ட எழுத்துத் தொடர்பை மீண்டும் ஓய்வுபெற்றதும் ஒரு காட்டுத் தீ பரவுவதைப் போல பற்றிக்கொண்டது அதிசயம் ஆச்சரியம்.
என் ஐயம் என்னவென்றால் எப்படி இந்த மனிதரால், இத்தனைக் காலம் இத்தனை உணர்வுகளைச் சுமந்து கொண்டு, எழுதாமல்.... காகிதங்களில் இறக்கி வைக்காமல் இருக்க முடிந்தது என்பதேு
அவருக்குத் தமிழின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என் சார்பில் எப்போதும் உண்டு
அன்புடன் புகாரி

201708 கதிர் வீசிடும் காலை

நண்பர் ஹனிபா அழைத்தார். நண்பரே என் மகன் இஸ்லாமிய மரபு மாத விழாவில் ஒரு பாடல் பாடுகிறான். அதற்கான மெட்டினை அனுப்புகிறேன் தமிழில் பாட்டெழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டார். கனடா வந்த நாளிலிருந்தே நண்பர் ஹனிபாவை நான் அறிவேன்.

எப்போது பாடல் வேண்டும் என்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் என்றார் ;-)

நானோ சிறகுப்பந்தாட சென்றுகொண்டிருக்கிறேன். எப்படி? ஆனாலும் வேண்டுகோளை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதே சில வரிகளை எழுதி முடித்தேன். அப்படி உருவான ஒரு பாடல் தான் இது.

இதை இசையமைப்பாளர் நண்பர் ஹாஜி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் ஒரு புதுத்தனி மெட்டுப் போட்டு அனுப்பி விட்டு. இன்னும் சில வரிகள் எழுதினால் முழுப்பாடலாய் ஆக்கிவிடலாம் என்று பெருந் தூண்டில் போட்டார்.

நண்பர் ஹனிபா கேட்டது நான்கு வரிகள். இப்போது இது எப்படி வளரப் போகிறதோ தெரியவில்லை. எளிமையான இசைக்கு ஏற்ற என் பாடல் வரிகள் இதோ:

கதிர் வீசிடும் காலை
       உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
        உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
        நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
        நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
        தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
        நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்

அன்புடன் புகாரி
அன்று
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறிய
நற்றமிழ் உலகம்

இன்று
நூற்றிப் பதினெட்டு
நாடுகளுக்கும் மேலேறி

கொட்டும் பனிமூடிய
வழுக்குக் கார்ச் சாலைகளிலும்

வெள்ளைச்
சீருடையணிந்த
வைர வேர்ச் சோலைகளிலும்

விரிந்து பரந்து
தமிழ்மூச்சு வீசித்
தளைத்துக் கிடக்கின்றது

இன்னும் பல நாடுகளுக்கும்
தாவிப் பறக்கின்றது

தமிழா தமிழா
தமிழ் நாட்டைவிட்டுப்
புலம்பெயர்ந்த உலகத் தமிழா

தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தும்
தமிழைவிட்டுப் புலம்பெயர்ந்த
தரங்கெட்டத் தமிழா

நீ சென்றேறி வாழுமிடத்தில்
முற்றித் தடித்த
உன் முதிர்ந்த நாவினில்
மட்டுமின்றி

அங்கு நீ பெற்றெடுத்த
உன் பிஞ்சுகளின்
கொஞ்சு நாவுகளிலும்
ஈர இருக்கை அமைத்துத்
தமிழைக் கர்வமாய்
வீற்றிருக்கச் செய்யும்
நாள் எந்த நாளடா?

புலம்பெயர் நாடுகளெங்கும்
இலவசத் தமிழ் வகுப்பும்
இலவசத் தமிழ் உணவும்
வழங்கப் போகும்
நாளெந்த நாளடா?

அன்புடன் புகாரி
அடுத்தது
என்ன கமல்?

வாக்களித்துவிட்டு
முற்று முழுதாக
மாற்றி நடப்பவர்களைவிட
வந்து விழுந்த
வார்த்தைகளுக்கு
மாற்றி
விளக்கம் சொல்வது
ஒன்றும்
பாவச் செயலல்ல

எவன்
திருத்திக்கொள்ள
முயல்கிறானோ
அவனைக்
கேலி கிண்டலால்
சுற்றி வளைப்பது
அறம் மதியாக்
கீழ்மனிதக் குற்றம்

ஆனால்
திருத்திக்கொள்ளவே
விரும்பாத தலைகளைக்
கொடுங்கோலர்களாய்
எரிக்காத பூமிக்கு
விமோசனமாய் வருவாயா

அடுத்தது
என்ன கமல்?

அன்புடன் புகாரி
20171108
நவம்பர் எட்டு
ஈராயிரத்துப் பதினாறு
இது கறுப்பு நாள்

கறுப்புப் பணத்தை
ஒழித்த நாளல்ல
ஏழை உயிர்களை அழித்த
கொடுங் கறுப்பு நாள்

கள்ளநோட்டுக்களை
எரித்த நாளல்ல
சிறுதொழில் ஏழைகளை
வறுத்து முடித்த
மயானக் கறுப்பு நாள்

திருடர்களைப்
பிடித்த நாளல்ல
இந்தியப்
பொருளாதாரத்தையே
திருட்டுக்கொடுத்த
மையிருள் கறுப்பு நாள்

நவம்பர் எட்டு
ஈராயிரத்துப் பதினாறு
இது கறுப்பு நாள்

அன்புடன் புகாரி
20171108
நிலா ஒன்றுதான்
ஆனால்
நிலவைப் பற்றிய
எண்ணங்களோ
ஒரு நூறு
ஒரு கோடி

இறைவன் ஒருவன்தான்
ஆனால்
அவனைப் பற்றிய
சிந்தனைகளோ
பல நூறு
பல கோடி

ஒவ்வொரு
சிந்தனைக்காகவும்
பக்தக் கண்களில்
இறைவன்
கணக்கற்றக்
கற்பனைப் பிறப்பெடுக்கலாம்
காலங்கள் தோறும்

ஆனபோதிலும்
பொய்யெல்லாம்
மெய்யாகுமா
உண்மைப் பூதலத்தில்

அன்புடன் புகாரி
காலுக்குக் கால்
கங்காருகளாய்த் தாவித்தாவி
கவிழ்ந்துவிழும்
மானமிலா ஈனத் தலைகள்

முதுகெலும்பை ஒடித்து ஒடித்து
கள்ளக் காசுக்கு
வெட்கமின்றிக் கும்பிடுபோடும்
தலையில்லாக் களைகள்
தமிழ்நாட்டின் பிழைகள்

எழவே முடியாமல்
தமிழனின் மானத்தை
முட்டிபோட்டு முட்டிப்போட்டே
முடித்துப்போடும்
இந்தக் கூத்தை
இன்னும்
எத்தனைக் காலத்தில்தான்
மானத் தமிழன்
மீட்டெடுப்பானோ

மின்னலாய் பாய்ந்து
மீசையோடு வாருங்கள்
சேர சோழ பாண்டியத்
தமிழ்க் காளைக் கன்றுகளே

சவுரிமுடித்த
கவரிமான் கூட்டத்தின்
உயிர்நீக்க வாருங்கள்

மயிர்நீப்பினல்ல
தலையே நீங்கப்பெற்றும்
முண்டங்களாய்
நாற்காலிப் பசையில்
ஒட்டிக்கிடப்பதைத்
துடைத்தெறிய வாருங்கள்

அன்புடன் புகாரி
20171106
உன் இறைவன்
என் இறைவன்
என்று
இரு இறைவன்
உண்டென்றால்
ஒரு இறைவனும்
இல்லை

அன்புடன் புகாரி
நேற்று
ஏரிக்குள்
ஏறினான் குடி

மகிழ்ந்தான்
மிதந்தான்
பெருமையில்

இன்று
குடிக்குள்
ஏறியது ஏரி

மூழ்கினான்
மிதக்கிறான்
நீர்விழுங்கி

தலை கெட்டக்
கமலம் இவன்
கூறுகெட்டக் கூவம்

நாற்றத்தின் முற்றத்தில்
நாசத்தின் உச்சத்தில்
சென்னை

அடடா...
அது உன் அன்னை

அன்புடன் புகாரி
20171105
கனடியப் பகல்நேர மாற்றுநாள்
தமிழில்
தமிழாய்த்
தமிழுக்குத்தா
தமிழா

தமிழ்க் கவிஞர்களை
அவர்கள் வாழும்போது
பெட்டக நிலாக்களாகவும்
அவர்கள்மறைந்தபின்
மறையா
நட்சத்திரங்களாகவும்
போற்றிப்
பாராட்ட வேண்டும்

ஒவ்வொரு கவிஞனும்
தமிழின் உயிருக்கு
உரமூட்டும் மகாசக்தி
வாழும்போதும்
மறைந்தபின்னும்

அன்புடன் புகாரி
நீங்கள் ரசிக்கும்
ரசிப்பைக் கண்டுதான்
நான்
என் கவிதைகளை
ரசிக்கத் தொடங்குறேன்
அன்புடன் புகாரி
தமிழ்
ஒரு வானம்

நட்சத்திரங்கள்தான்
அதில் உண்டு

வார்த்தைகள்
இல்லை

அன்புடன் புகாரி
20171120