2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன?



லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்




அருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.

கவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.

என் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.

வாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.

வாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.

4 அறத்துப்பால் - பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்


வற்றாத சிறப்பும்
வளமான செல்வமும் பெற
நீதிநெறி வழியே அல்லாது
வாழும் மனித குலத்திற்கு
மேன்மை தரும்
மாற்று வழி ஏது

காப்பதால் கிடைப்பது நன்மை
நீதிநெறியை மறப்பதால்
முளைப்பது தீமை தீமை

செய்யும் செயல்களிலெல்லாம்
இயலும் வழிகளிலெல்லாம்
பொழுதுக்கும் நீதிநெறிகளையே
காத்திடல் வேண்டும்

உள்ளத்தின் தூய்மையே
உண்மை நீதிநெறி
உள்ளத்தில் கள்ளம் வைத்தோன்
செய்வதெலாம் போலி

பொறாமையை விரட்டு
உன் எண்ணங்களிலிருந்து
பேராசையை நீக்கு
உன் இதயத்திலிருந்து
கொடுங்கோபத்தைக் களை
உன் இரத்தத்திலிருந்து
கடுஞ்சொற்களை அகற்று
உன் நாவினிலிருந்து
இந்த நான்கும் போதும்
வாழ்வில் நீதிநெறி என்பது
உன் நிழலாகவே ஆகிப் போகும

பிறகு செய்வோம்
பிறகு செய்வோம் என்றே
பின்னுக்குத் தள்ளிவிடாமல்
இன்றே இப்பொழுதே
இளமைக் காலம் தொட்டே
நீதிநெறி காக்கும் நற்சேவைகள் செய்
அது உன் இறப்புக் காலத்திலும்
பொறுப்பாய் வந்து நின்று
உனக்குள் உரம் சேர்க்கும்

பல்லக்கில் பரவசமாய்ப்
பயணம் செல்கிறான் ஒருவன்
அதைச் சிரமத்தோடு
சுமந்து செல்கிறான் ஏழை
இந்த ஏற்ற இறக்கங்கள்
நீதிநெறிப் பலன்கள் என்று
ஒருபோதும் எண்ணிவிடாதே

உன் நாட்களிலெல்லாம்
நல்ல நீதிநெறி காத்து வா
ஒரு நாளையும்
வெட்டியாய் விட்டுவிடாதே
நீ காக்கும் நீதிநெறிதான்
உன்னை வலுக்கட்டாயமாய்
அடையவரும் துயரவாழ்வின்
கொடிய வாயிலை
முற்றாக அடைக்கும்
கல்லாகி நிற்கும்

நீதிநெறிகளின் வழிநடக்க
உன் நெஞ்சினில் பொங்கும்
இன்பமே இன்பம் அதுவல்லாது
வேறுவழியினில் வருவன யாவும்
வேதனைகளே அல்லாமல்
உண்மை இன்பமும் அல்ல
உயர் புகழும் அல்ல

செய்யச் சிறப்பான செயல்
ஒன்றிருப்பின் அது
நீதிநெறி காத்துச் செய்யும்
செயல் மட்டுமேதான்
நீதிநெறி மறந்த
அற்பச் செயல்களெல்லாம்
இல்லாத பழியையும் உன்னிடம்
இழுத்து வந்தே சேர்க்கும்


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்
ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய்.

பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக் கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளை யெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி நின்றேன்.

நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பது போலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பது போலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக் கொண்டிருப்பது போலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

கவிதைகளால் அளந்துபார்


கவிதைகளால்
முகர்ந்துபார்
உலகம் பூப்போலே

கவிதைகளால்
உறங்கிப்பார்
கனவும் நிஜம்போலே

கவிதைகளால்
தொட்டுப்பார்
பரிசம் சொர்க்கம்போல

கவிதைகளால்
வளைத்துப்பார்
இதயம் முயல்போல

கவிதைகளால்
தேடிப்பார்
வாழ்க்கை கைவிரல்போல

கவிதைகளால்
திறந்துபார்
கதவும் காற்றுபோல

கவிதைகளால்
வைதுபார்
பகையும் நட்புபோல

கவிதைகளால்
நிமிர்ந்துபார்
வானமும் துகள்போல

கவிதைகளால்
அளந்துபார்
காலமும் சிறுநொடிபோல

குடும்பதின வாழ்த்துக்கள்


இந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது.

பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது திங்கள் கிழமையும் குடும்பதினம்.

பிப்ரவரி மாதத்தில் வரும் வாலண்டைன்ஸ் / அன்பர்கள் / காதலர் தினத்திற்கு கனடாவில் எப்போதுமே விடுமுறை கிடையாது. அட இது எவ்வளவு சந்தோசம் எனக்கு. ஏனோ எனக்கு இந்த வாலண்டைன்ஸ் தினம் பிடிப்பதில்லை.

வாலண்டைன்ஸ் தினத்திற்கு ஏகப்பட்ட கதைகள், ஏகப்பட்ட எதிர்ப்புகள். அது முதலில் காதலர் தினமா, அன்பர்கள் தினமா என்று எக்கச்சக்க சர்ச்சைகள்.

காதலர் தினமென்றே பலரும் முடிவுகட்டி, வணிகர்கள் கழுத்துப் பட்டிகளை (அதாங்க கழுத்தில் கட்டும் கோவணம் - ஆங்கிலத்தில் டை என்பார்களே) ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வெட்டிப்பொருட்களின் விற்பனைகள், தகாதவர்களின் கூத்தடிப்புகள், கும்மாளங்கள், கெட்ட உறவுகளின் அரங்கேற்றங்கள், நாள்குறித்தச் சோரங்கள்... அட போதுங்க மீதம் உங்கள் கற்பனைக்கும் அடுத்தநாள் வரும் அவசரச் செய்திகளுக்குமாய் விட்டுவிடுகிறேன்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் நிச்சயம் குடும்பதினம் அறிவிக்கப்படத்தான் வேண்டும்.

ஆளுக்கொரு திசையில் படிப்பு, வேலை, புலம்பெயர்வு என்று ஒவ்வொரு குடும்பமும் சிதறிக்கிடக்கிறது. அதுதானே இந்த நூற்றாண்டின் வாழ்க்கை முறை. அவர்களெல்லாம் ஓர் நாள் ஒன்றுகூடி மகிழவேண்டும் என்பதே விடுமுறையின் வெளி நோக்கம். அட எவ்வளவு நல்ல நோக்கம்.

சரி உள்நோக்கம் என்னவென்று கேட்கிறீர்களா? கொடுங்குளிர் காலத்திலும் ஒரு நீள்வாரயிறுதி தந்து தொலைங்கப்பா என்ற பணியாளர்களின் நீண்டநாள் முறையீடு.

ஒண்டாரியோ முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார், நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் ஆட்சிக்கு வந்ததும் அல்வா கொடுத்துவிடாமல், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்.

கனடாவில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களும் வாரயிறுதி விடுமுறை நாட்கள். அதுமட்டுமல்லாமல் சில மாதங்களைத் தவிர எல்லா மாதங்களிலும் தொடர்ந்து ஒரு நீள்வாரயிறுதியும் வரும்.

நீள்வாரயிறுதி என்றால் தொடர்ந்து சனி-ஞாயிறு-திங்கள் ஆகிய மூன்று தினங்களும் விடுமுறை.

இந்த மூன்று தினங்களை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு கனடியர்கள் கேம்பிங்-கூடாரம், காட்டேஜ்-உல்லாசக்குடில், நண்பர்கள் சந்திப்பு, உறவினர்கள் சந்திப்பு, அமெரிக்கப் பயணம், மெக்சிகோ சுற்றுலா, கரீபியன் தீவுகள் என்று கிளம்பிவிடுவார்கள்.

இந்தப் புதிய குடும்பதின விடுமுறை அறிவிப்பால் இதுவரை நீள்வாரயிறுதி இல்லாதிருந்த பிப்ரவரி மாதமும் அந்த யோகத்தைப் பெற்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொள்கிறது.

கனடாவின் குளிர் கொடுமையாக இருக்கும் என்பது பலரும் அறிந்த விசயம்தான். அதிலும் பிப்ரவரிதான் குளிரின் உச்சம். சும்மா சொல்லக்கூடாது, வெண்பனிப் புயல்கள் படுமோசமாய் வீசும், குளிர்காற்று நாம் குப்புறக்கிடந்தாலும் எழுப்பியெழுப்பி குதறியெடுக்கும்.

அப்படியான பிப்ரவரி மாதத்தில் ஒரு நீள்வாரயிறுதி கிடைத்திருப்பது என்பது கனடியர்களுக்கு எப்படியிருக்கும்?

பெரும்பாலானவர்கள் கரீபியன் தீவுகள் போல் நம்மூர் சீதோஷ்ணநிலை உள்ள இடங்களுக்குச் சென்று பெர்முடாக்கள் அணிந்து சட்டையில்லாமல் இருதினங்களாவது அலைவார்கள்.

மீதமுள்ளவர்கள் இறுக போத்திக்கொண்டு தொடர் உறக்கம் போட்டு, பாதி எழுந்த நிலையில் பீட்சா வரவழைத்து ஒரு போடுபோட்டு, கூடவே தொட்டுக்கொள்ள பியர் போத்தல்களில் தலையைக் கவிழ்த்து எடை ஏற்றிக்கொள்வார்கள்.

எப்படியோ எனக்கு இந்தக் குடும்பதின அறிவிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பங்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை எந்த ரூபத்தில் வந்தாலும் அது தேவதை தந்த வரம்தான்!

எல்லோருக்கும் என் இனிய குடும்பதின வாழ்த்துக்கள். அட என் இனிய மட்டும் இல்லீங்க, உங்கள் இனிய குடும்பதின வாழ்த்துக்களும்தான் :)

பிப்ரவரிப் பனிப்பொழிவில்
பிரியங்களின் கதகதப்பு
முத்தங்களின் சத்தங்களில்
மூன்றுநாள் சிறகசைப்பு
உறவுகளின் அணைப்புகளில்
உற்சாகக் கொண்டாட்டம்
கடுங்குளிர்க் கனடாவில்
குடும்பதின வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

மிருகம் எகிறிப் பாயும்போது


முதலில்
செயல்படப்போவது
கோரைப்பல் மிருகம்தானென்றால்
இதயத்துக்குள்
எத்தனைக் கிளிகளிருந்தாலென்ன

சூழலின் மாலுமி கோபமெனில்
சூராவளியில்தான்
கப்பல்கள்

மன்னிப்புகள்
கோபத்தின் காற்புள்ளிகள்
நிதானமிழக்கும் நரம்பின்
தற்காலிக அடைப்புகள்

பொங்கும் பாலில்
நீர் தெளிக்கும் அவசரம்தான்
நாகரிகம்

செப்பனிடப்படாத
காட்டுப் புதர்களிலிருந்து
மிருகம் எகிறிப் பாயும்போது
பொத்திப் பாதுகாத்த முயல்களின்
எலும்புகளும் எஞ்சுவதில்லை

நாகரிக நூலில் நட்புப்பட்டம்
அறுத்துக்கொள்ளாமல் பறப்பதற்கு
காற்றின் விசை
மிதமாயிருத்தல் அவசியம்

சிலநேர புயல்காற்று
இடம்-பொருள்-ஏவல் வழியே
வீசும்போது
தென்றலாய் மாறுகிறதே

நெருக்கடிக்கு நடுவிலும்
நெருப்பால் கருக்கப்படாத
அன்பு அரிதரிது

கோபம் வேண்டாமென
கோபப்படலாம்தான்
தாராளமாக

உளிதுறப்பது உயிர்துறப்பதல்லவா


முத்துவேண்டி
மூச்சுப் பிடிப்போம்

மாண்டுவிட்டாலும்
மரணமல்ல
அதுதான் வாழ்க்கை

மூச்சுப்பிடிக்க
திறமை திரட்டுவோம்

மூச்சுப் பிடிக்காமலேயே
முடங்கினால்
சுடுகாட்டு வெறுமையில்தான்
நாட்கள்

விரலை நீட்டாமல்
தீண்டுமின்பம் தோன்றுமா

வாழ்க்கை
கடும் பாறைதான் என்றாலும்
அதைச் செதுக்குவதில்
கிடைப்பதல்லவா இன்பம்

செதுக்கும்போது
சிலையை உடைத்துவிடா
கவனம் தேவைதானெனினும்
உளி துறப்பதென்பது
உயிர் துறப்பதல்லவா

கண்ணீரே


கடலிலிருந்து
கரைக்குப் புறப்படும்
ஒரே நதி
நீ

வேரிலிருந்து புறப்பட்டு
இலைகள் சொட்டும்
ஒரே மழை
நீ

துயரத்தின் தாகம்
துப்பும் குடிநீர்
நீ

கரைபுரளும்
ஆத்திரக் கற்களுக்கு
அணைகட்டும் நீர்
நீ

தற்கொலைக்
கிருமியின்
தடுப்பூசி மருந்து
நீ

மனத் தவளையின்
நெகிழ்ச்சிக் குளம்
நீ

உன்னை ஏன்
வேண்டாமென்கிறான்
மனிதன்?

அறிவும் நீயும்
ஆணும் பெண்ணும் போல

அறிவு என்பது
சக்கரம்
கண்ணீர் என்பது
கருணை

கருணையோடு
சக்கரம் சுழன்றால்தான்
இனிமையோடு உலகம் சுழலும்

உன்னைக்
கழித்துவிட்டால்
மண் வெறும் மயானம்தான்

புகாரி என்றால் என்ன?


என் பெயர் புகாரி.

என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர்.

புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது.

சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம்.

ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார்.

அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.

நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். உஸ்பெகிஸ்தானில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து 'ஹதீத்' என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள்.

அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

தமிழகராதியில் புகார் என்ற சொல்லுக்கு அற்புதமான பொருள்கள் இருப்பதைக் கண்டேன்.

ஆற்றுமுகம்
காவிரிப்பூம்பட்டினம்
பனிப்படலம்
மந்தாரம்
மழைபெய்யும் மேகம்
கபிலமரம்
கபிலநிறம்
முறையீடு

இவற்றுக்கு எனக்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டது. என் பெயருக்கான பொருளாக மிகச் சரியாக எதைக்கொள்ளலாம் என்ற என் அலசலில், சொல்லறிஞர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது. சொல்லறிஞர் என்றதுமே எனக்கு திரு. இராம.கி அவர்களின் நினைவே வரும். என் கேள்வியை அவரிடமே விட்டேன். வழக்கம்போல் அவர் பதிலும் அற்புதமாய் வந்து இறங்கியது. அவருக்கு என் நன்றி. இதோ அவரின் விளக்கம்:

(இந்த விளக்கத்தின் இறுதியில் என் கவிதை ஒன்று என் பெயர் குறித்து இருக்கிறது)

--ஆற்றுமுகம் - காவிரிப்பூம்பட்டினம்

ஆறு என்பது ஓடி வரும் போது அதன் கரைகளில் ஊர்களுக்கு அருகில் இருப்பது ஆற்றுத் துறை.

அதே ஆறு கடலை அடையும் போது அது கடலுக்குள் நுழைகிறது; அதாவது புகுகிறது; புகல்கிறது; புகருகிறது. புகரும் இடம் புகார். அப்படிப் பார்த்தால் எல்லா ஆறும் புகும் இடம் புகார்தான். (அதனால் தான் புகல் என்ற சொல் port என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முற்றிலும் இணையானது.) இருப்பினும் சிறப்பாகக் காவிரி புகும் இடத்திற்குப் புகார் என்று சொன்னார்கள். ஆறு கடலில் புகும் போது ஆற்றுப் பக்கம் ஒரு முகமும் கடலின் பக்கம் ஒரு முகமும், கடலிலிற்கும் ஆற்றிற்கும் அருகில் சற்று உள்வாங்கினால் போல் ஏற்படும் கழியில் (backwaters) இன்னொரு வகை முகமும் ஏற்படும்.

ஆற்றில் ஏற்படும் முகம் (இங்கே முகம் என்பது ஆங்கிலத்தில் சொல்லும் face என்னும் பொருள் தான்) ஆற்றுமுகம்; கடலைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் (ஆங்கிலத்தில் sea face என்பார்கள்.) கடல்முகம்; இதைக் கடற்புறம் என்றும் சொல்வது உண்டு. கழியைப் பார்த்தாற்போல் ஏற்படும் முகம் கழிமுகம்.

மேலே உள்ள மூன்றுமே புகாரில் உண்டு; (இந்தக் காலப் புகாரிலும் உண்டு; சற்று சீரழிவுடன். ஆனால் எர்ணாகுளம், கொச்சி போனால் இந்த மூன்றையும் பெரியாற்றின் முகப்பில் காணலாம்.)

காவிரி புகும் பட்டினம் காவிரிப் பூம்பட்டினம் ஆனது;

இது போன்ற சொல்லாட்சிகள் இங்கிலாந்து, இரோப்பா போன்ற இடங்களில் ஆற்றின் மேல் உள்ள ஊர், கடலின் மேல் உள்ள ஊர் என்ற பெயர்களால் உண்டு. இங்கு சவுதியில் கூட Yanbu Al bahar (Yanbu on the sea) என்ற ஆட்சி உண்டு.

-- பனிப்படலம் - மந்தாரம் - மழைபெய்யும் மேகம்

புய் என்பது துளைக் கருத்து மூலவேர்
புய்+அல்>புயல் = துளைவளியாக ஒழுகுதலையுடைய முகில்

மிகப் பலவாகிய பொத்தல்கள் உடைய ஒரு நீர் நிரம்பிய கலத்தினின்று நீர் வெளிப்பட்டு ஒழுகுதலைப் போலவே மழைநீர்ச் சொரிதலைக் கண்டு அப்படிப் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் புயல் என்பது முகில், மழை, காற்றோடு அடிக்கும் மழை என்று பொருள் நீட்டம் பெற்றது.

இதே போல நிலத்தின் மேல் நிரம்பிக் கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் இருந்து முகந்து கொண்டதால் முகில்

முகில் = நீரை முகக்கும் மேகம். பின் அது மழையையும் குறித்தது.

முகில் கரிய தோற்றம் கொண்டதால் மை, மழை, மங்குல், மப்பு, மந்து, மஞ்சு, மாரி, மால், மாசு, மேகம், கார், ஆயம் எனப் பல சொற்களைப் பெற்றது.

மப்பும் மந்தாரமும் என்று சொல்வது இரட்டைக் கிளவி. மந்து+ஆரம் = மந்தாரம் = மேகக் கூட்டம்; மேகம் நிறைந்து நிற்பது; அடைந்து நிற்பது ஆறு கடலை அடைவதைப் போல; அதன் வழியாக நீர் கொட்டுகிறதல்லவா?

மேகப் படலம் பனிப் படலம் போல;

-- கபிலமரம் - கபிலநிறம் - முறையீடு

புகர்தல் என்பது துளையிடுதல் என்று சொன்னேன் அல்லவா? அதனால் புகர்வது புள்ளியிடுவது ஆகும். புகர் என்றால் புள்ளி என்றும் பெயர். புகரப் புகர கருத்தது இன்னும் கருக்கும்; சிவந்தது இன்னும் சிவக்கும்.

எனவே புகர் என்பதற்கு இருண்டது என்ற பொருளும் வந்தது. dark என்ற பொருளில். புகார் என நீண்டு brown நிறத்தைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் brown என்ற சொல்லின் பிறப்பு இந்தக் கருத்தில் தான். brown என்பது தமிழில் இரண்டு விதமாக உணரப் படும். ஒன்று கருமை கலந்த பொன்மை; இன்னொன்று கருமை கலந்த செம்மை..

கபில நிறம் என்பது இது தான்; brown நிறம். கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்பது போல் கபிலன் என்றால் புகர் நிறத்தான். புலவர் கபிலர் என்றால் என்னமோ, ஏதோ என்று எண்ணிக் கொள்கிறோம். அது அவருடைய நிறக் குறிப்பு. அந்தக் காலப் பெயர்கள் பல இப்படி நிறம் சார்ந்து இருக்கின்றன. கருப்பன், செவத்தான், பொன்னன், வெள்ளையன், நீலன், பச்சையப்பன் போல இது ஒன்று கபிலன்.

இறுதியாக புகார் என்றால் என்னவென்று தனி விளக்கம் தேவையில்லை. அதுபற்றி யாரும் எந்தப் புகாரும் செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றேன் ;-)


ஆக, நான்
கபில நிறத்தவனோ

கூட்டம் கூடி
கருணைக் கும்மியடித்து
மண்ணுக்குத் தேன் பொழியும்
மேக மனத்தவனோ

எண்ணக் குஞ்சுகள்
சின்னச் சிறகினை
விண்ணில் விரிக்க
மெல்லக் கிழிக்கும்
பனிப்படலமோ

ஓடித் திரிந்த
காவிரிப் பெண்ணின்
காதல் புகலிடமோ

ஆற்றலைத் தாகமும்
கடலலை மோகமும்
ஆரத்தழுவ
ஆசையாய் விரிந்துகிடக்கும்
இன்ப மடியோ

கற்பனை நீர் முத்துக்கள்
கணக்கற்று இறைய இறைய
கவிதை இழைகள்
காற்றினில் நிறைய நிறைய
கருத்துகள் எடுத்து வீச
புறப்பட்ட புயலோ

நானறியேன் நானறியேன்
ஆனால்...

புகாரி என்றெவரும்
அன்போடு அழைக்கும்போது
பூரித்துப் போகிறேன்
இந்த
அன்புடன் புகாரி

அதுவொன்றே
போதும் எனக்கு!

யாமறிந்த மொழிகளிலே


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா

ஜூன் 24, 2006: தமிழ் இலக்கியத் தோட்டம் பூக்களால் நிரம்பி வழிந்தது. இன்றெல்லாம் டொராண்டோ என்றாலே தமிழர் விழாக்களின் கூடாரம் என்றாகிவிட்டது. அதிலும் வேனிற்காலமென்றால் சொல்லவே வேண்டாம். முண்டியடித்துக்கொண்டு பெருகும் விழாக்களின் மத்தியில் முத்தான விழாக்கள் சில கௌரவமாய்க் கைகூப்பி நிற்கும். அவற்றுள் ஒன்றுதான் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல்விருது விழா.

தமிழ் என்றாலே நரம்புகளெங்கும் இன்பம் பரவும் பலருக்கு. தமிழ் வளர்க்கும் விரல்கள் என்றால் அவற்றைப் பிடித்து முத்தமிடத் தோன்றாத பொழுதுகள் இருப்பதில்லை சிலருக்கு. அப்படியான விரல்கள் பல ஒன்றுகூடி ஒன்றையொன்று கோத்துக்கொண்டு கொண்டாடும் இன்ப விழாவாகக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விழா அமைவது வழக்கம். டொராண்டோ பல்கலைக்கழக அரங்கில் ஐந்தாம் முறையாகவும் இவ்விழா அப்படியே அமைந்தது.

உலகளாவிய ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையில் வருடம்தோறும் ஓர் சிறந்த தமிழ் இலக்கியச் சேவையாளரை டொராண்டோவுக்கு அழைத்து அவருக்குப் பாராட்டுக் கேடயமும், 1500 டாலர்கள் பணமுடிப்பும் தந்து வாழ்நாள் விருதான இயல்விருது வழங்கி கௌரவிப்பதே தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முதன்மை நோக்கம். அதோடு கட்டுரை மற்றும் புனைவு இலக்கியத்திற்காக மேலும் இரு விருதுகள் வழங்குவதை இந்த ஆண்டுமுதல் அது வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பல தமிழ்ச்சேவை இயக்கங்கள் அதனதன் வட்டங்களில் நின்று தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பரிசுகள் பல வழங்கி வருகின்றனதாம். ஆனால், கனடா தமிழ் இலக்கியத் தோட்டமோ உலகம் மொத்தத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து தமிழர், தமிழரல்லாதோர், தன் நாட்டவர், பிற நாட்டவர் போன்ற எந்தப் பாகுபாடுமின்றி அகில உலகம் மொத்தத்திற்கும் பொதுவான ஓர் அமைப்பாக இயங்கி வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான உண்மையான பொருளை உயர்த்திப் பிடித்துச் சிறப்பாக இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவையைப் பாராட்டாமல் இருப்பது எவருக்கும் இயலாத காரியம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தமிழ் இலக்கியத் தோட்டம் தனக்கென இவ்வாண்டு ஓர் புதிய 'லோகோ' ஒன்றினைத் தயாரித்துள்ளது. 'அ' என்ற உயிர் முதலெழுத்தை ஓர் அழகிய கிண்ணமாகவும் அதனுள் செர்ரி பழம் சிவந்து கிடப்பதைப்போல மெய்யெழுத்தின் புள்ளியையும் அதன்மேல் பனிக்குழைவு அமுதமாய்க் கொட்டி வைத்திருப்பதைப் போல ஆய்த எழுத்தும் அமைக்கப்பட்டு மிகவும் கவர்ச்சியாகக் காணப்படுகிறது.

தமிழ் இலக்கியத் தோட்டம் ஈராயிரத்து ஓராம் ஆண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் முயற்சியினால் தன் நண்பர்களின் துணையுடன் கனடாவில் தொடங்கப்பட்டது. இவர் ஓர் இலங்கைத் தமிழர். இந்தியாவிலும் இலங்கையிலும் இவரின் சிறுகதைத் தொகுதிகள் அனைத்தும் பல பரிசுகளை வென்றிருக்கின்றன. 1937ம் ஆண்டு கொக்குவில் கிராமத்தில் பிறந்த இவர் 1960 தொடக்கம் சிறுகதைகள் எழுதி பரிசுகளும் பெற்றவர். 1964 முதல் தொடங்கிய இருபதாண்டுகால பணிவாசத்திற்குப்பின் 1995ல் தன் தமிழ்மன உள்நெருப்பு உந்த, மீண்டும் எழுதத் தொடங்கினார். மீண்டும் எழுதத் தொடங்கிய முதல் மூன்றாண்டுகளிலேயே மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு அனைத்திற்கும் பரிசுகளைக் குவித்த இவர் தற்போது டொராண்டோவில் வாழ்ந்துவருகிறார்.

2001ம் ஆண்டிற்கான இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, விமரிசனம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத் தொண்டாற்றி வந்த அமரர் திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டிற்கான இயல்விருது, மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதியும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழ்த் தொண்டாற்றி வருபவருமான திரு கே. கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டிற்கான விருது, தமிழ் இலக்கியம், நாடகம், இசை, சினிமா, சிற்பம், ஓவியம் என்று பல துறைகளிலும் கடந்த 40 ஆண்டுகாலமாகத் தமிழ்த் தொண்டாற்றி வரும் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2004ம் ஆண்டிற்கான இயல்விருது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நூற்பதிப்பில் தன்னலமற்ற சேவையாற்றிவரும் திரு பத்மநாப ஐயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2005ம் ஆண்டிற்கான இயல்விருது கலிஃபோர்னியா பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வைப்பற்றித்தான் இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு தமிழச்சிக்குப் பிறவாமல் ஆனால் தமிழை ஆர்வத்துடன் பயின்று தமிழ்ப் பேராசிரியராகவே வாழும் ஓர் ஆங்கிலேயருக்கு இந்தமுறை இவ்விருது வழங்கப்பட்டது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 1942ல் பிறந்த திரு ஹார்ட் சிறுவயதிலேயே, மொழிகளின் பால் தீராத ஈர்ப்பு கொண்டிருந்தார். லத்தீன் மொழியை முன்பே கற்றிருந்த இவர் தன் ஒன்பதாம் வயதில் ரஷ்ய மொழியையும் பயின்றார். அதோடு பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வேதியியலும் இயற்பியலும் பயிலச்சென்ற இவர் தன் அறைத் தோழனின் ஆர்வத்தால் உந்தப்பட்டு சமஸ்கிருதம் பயின்றார். பின் இந்தியாவில் அதனினும் மேன்மையான இன்னொரு செம்மொழியும் உண்டு என்றறிந்து அதையும் பயிலும் ஆர்வம் கொண்டார். அம்மொழிதான் நம் இன்பத் தமிழ் மொழி.

தன் இருபத்துமூன்றாம் வயதில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் தமிழைத் தொட்டுப்பார்த்தவர் அப்படியே அதில் ஒட்டிக்கொண்டுவிட்டார். இன்றுவரை அதன் பிடியிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள இயலாமல் காதலால் கட்டுண்டு கிடக்கிறார். அந்த அமுதத் தமிழ் அழைத்து வந்த மதுரை தமிழ்ப்பெண்ணான கௌசல்யா அவர்களைக் காதல்மணமும் செய்து கொண்டார். பேராசிரியர் ஏ.கே. ராமானுஜன் அவர்கள்தான் இவரின் இளைய இதய நிலங்களில் இயற்கையாய் தமிழ்ப்பயிர் வளர்த்த பெருமைக்குரியவர். பின் இந்தியாவில் ஓராண்டு தங்கி, திரு இராம சுப்ரமணியம் அவர்களிடம் சங்க இலக்கியப் பாடல்களை மிகுந்த சுவையுடன் பயின்றார்.

1969ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். 1975ம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அந்த ஆண்டுதான் பலராலும் பெரிதும் விவாதிக்கப்பட்ட The Poems of Ancient Tamil என்ற நூலை எழுதினார். 1979ல் The Poems of the Tamil Anthologies என்ற மொழிபெயர்ப்பு நூல் The American Book Awardக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 1996ல் இவரின் முயற்சியால் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் ஒன்று நிறுவப்பட்டது. அதன் தலைவராகவும் இவரே செயல்படுகிறார். 1998ல் கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தை The Forest Book of the Ramayana of Kampan என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 1999ல் The Four Hundred Songs of War and Wisdom என்ற தலைப்பில் புறநானூற்றை மொழிபெயர்த்தார். அது ஏ.கே.ராமானுஜன் பரிசினைப் பெற்றது. 2000ல் தமிழ் செம்மொழி என்று உறுதிபட இவர் பேராசிரியர் மறைமலை அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

புகைப்படங்களில் மட்டுமே கண்ட இவரை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்பினை இயல்விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்த மறுநாளும் நான் பெற்றேன். மென்மையாகவும் அழுத்தமாகவும் இவர் தரும் கருத்துக்களும் விளக்கங்களும் எவரையும் இவரின் ரசிகனாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மாலை ஏழு மணிக்குத் தொடங்குவதாய்த் திட்டமிடப்பட்ட விழா பலரும் முன்பே அரங்கத்துக்கு வந்துவிட்டபடியால், அதனினும் முன்பாகவே தொடங்கிவிட்டது. விழா ஏற்பாட்டின்படி, கைகுலுக்கல்களாலும் அறிமுகப் படலங்களாலும் சிற்றுண்டிச் சுவைகளாலும் அது பூரித்துச் சிரித்துக் கொண்டிருந்தபோது, பேராசிரியர் செல்வ கனகநாயகம் ஒலிபெருக்கியால், மனமின்றி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அன்பர்களின் அறிமுகத்தையும் அளவளாவுவதையும் நிறுத்திக்கொண்டு அரங்க மேடையை நோக்க அன்புடன் அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2006 முதல் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடம் துவங்கப்பட்ட இனிப்புச் செய்தியையும் தெரிவித்து கைதட்டல்களைக் கணிசமாகப் பெற்றுக்கொண்டார். திருமதி பார்வதி கந்தசாமி, விழா நாயகர் திரு ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களை நிறைவாய் அறிமுகம் செய்துவைத்தார். தன் அறிமுக உரையின் இறுதியில் தமிழிலும் சில சொற்கள் என்று அவர் கூறி அதுவரை ஆங்கிலத்தில் பயணித்த பாய்மரக் கப்பலில் தமிழ்க் காற்று வீசி தானும் மகிழ்ந்து அவையோரையும் மகிழ்வித்தார்.


அறிமுக உரையைத் தொடர்ந்து அழகு தமிழில் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தன் விழா நாயகன் உரையைத் தொடங்கினார். ஆங்கில மேகம் தமிழ்மழையைப் பொழியப்பொழிய தலை துவட்டிக்கொள்ளும் எண்ணமே இல்லாமல் அரங்கம் ஆனந்தமாய் நனைந்துகொண்டிருந்தது. தமிழால் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்டுக்குப் பெருமையா ஜார்ஜ் ஹார்டால் தமிழுக்குப் பெருமையா என்று என்னைப் போல அன்று எண்ணியோர் பலர் இருக்கக்கூடும். தமிழின் மேன்மையைப் புகழ்ந்து பேசினார். தமிழருக்குத்தான் தமிழைப்பற்றித் தெரியாது என்று தற்காலத் தமிழர்களின் நிலையை நகைச்சுவையோடு சாடினார். சமஸ்கிருதம் ஒரு லாஜிக் இல்லாத மொழி, செயற்கைத்தன்மை அதிகம் கொண்டது என்ற தகவலைத் தந்தார்.

செம்மொழி என்றால் என்னவென்று விவரிப்பது எளிதான காரியமல்ல, செம்மொழி என்றாலே அது சிறப்புச் சக்திகள் வாய்ந்ததாய் இருக்கவேண்டும். அப்படியான சிறப்புச் சக்திகள் அதிகம் பெற்ற மொழி இந்தியாவில் தமிழ் தான் என்று அடித்துச் சொன்னார். ஆங்கிலத்தில் பேசினால் எனக்கு வசதியாக இருக்கும்தான், ஆனாலும் இம்மேடையில் தமிழில் பேசுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அவர் கூறியபோது, அவை அப்படியே நெகிழ்ந்துபோனது. மேடையிலேயே பழந்தமிழ்ப் பாடல்களை உணர்ச்சி பொங்க வாசிக்கும்போதே பலர் முன்னிலையில் உணர்வோடு ரசித்து இன்புற்றார்.

நாற்பதாண்டுகாலமாக மீண்டும் மீண்டும் புறநானூற்றை வாசிப்பதாகவும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய விசயங்களைக் காண்பதாகவும் கூறி ஆச்சரியப்பட்டார். எத்தனை முறை வாசித்தாலும் அயர்வோ அலுப்போ சலிப்போ வருவதில்லை என்று அதிசயித்தார்.

நாடா கொன்றோ! காடா கொன்றோ!
அவலா கொன்றோ! மிசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

என்ற ஔவையின் பாடலை உரக்கப்பாடி இது எவருக்கேனும் புரியவில்லையா என்று கேட்டார். ஈராயிரம் வருடப் பழந்தமிழ் இன்று வாழும் நமக்குப் புரிகிறது என்றாலே அது தமிழ் செம்மொழி என்பதற்கான ஒரு சான்றாக அமைகிறது என்று கூறினார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்றான் பாரதி. இவரோ "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் செம்மொழி வேறில்லை" என்று கூறுவதுபோல் இருந்தது இவரின் சொற்பொழிவு. ஓர் ஆங்கில இதயம் தமிழில் தங்கி குதித்தாடுவதைக் காணக்காண தமிழர்களின் தமிழ்ப்பற்று குப்பென்று பற்றியெரியத்தான் செய்தது. மூக்குக் கண்ணாடி அணிந்துகொள்ளாமல் அளவான வெளிச்சமே உள்ள விழா மேடையிலிருந்து சுலபமாகப் பழந்தமிழ்ப் பாடல்களை வாசித்தது அதிசயிக்கவைத்தது.

பிற்காலத்தில் வந்த அடுக்குமொழி தமிழைக் காட்டிலும் சில சொற்களிலேயே சிறப்பான பொருள் தரும் பழந்தமிழ்ப் பாடல்கள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பவை என்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைக் கூறி எத்தனை அற்புதம் என்று இயல்பாக வியந்தார். மேடையில் அவர் சுவைகூட்டிப் பேசப்பேச, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற ஆர்வம் எழுந்தது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் உரை நிகழ்ந்த வந்தபோதும், இயல்விருது பெற்றுக்கொண்டபோதும் அரங்கம் அப்படியே எழுந்து நின்று உரக்கக் கைகள் தட்டி ஆனந்தப்பட்டது.

திருமதி கௌசல்யா ஹார்ட் அவர்களும் இயல்விருது விழாவிற்கு வந்திருந்தார். மிக இனிமையாகப் பழகும் இவரும் பேராசிரியர் ஏ. கே. ராமானுஜம் அவர்களின் மாணவியாவார். ஆரம்ப காலம்தொட்டே பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் தமிழ்ச்சேவையில் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறார். அவரின் சேவையையும் தமிழ் நெஞ்சங்கள் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சிறந்த கட்டுரை இலக்கியத்திற்காக "க்ரியாவின் தற்கால அகராதி' யைத் தந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கியது. எனக்கு மிகவும் பிடித்த அகராதி இது என்பதால், சரியான தேர்வு என்று வாய்விட்டுக் கூறினேன். சிறந்த புனைவு இலக்கியத்திற்காக, "கூகை" என்ற நாவலுக்காக திரு சோ. தர்மன் என்ற எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது. அதோடு, டொராண்டோ பல்கலைக்கழக மாணவர்கள் நடித்து அரங்கேற்றிய, தமிழின் தேவையை உணர்த்தும் வண்ணமாய் அமைந்த ஒரு சிறு நாடகமும் அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தயவால் நிகழ்ந்த இந்த அருமையான விழா ஓர் முக்கிய காரணத்திற்காக என் இதயத்தின் தனிப் பாராட்டுக்குரியதாய் இருக்கிறது. விழாக்களுக்குச் சென்றுவருவது வெறும் கேளிக்கைக்காக அல்ல என்று இதுபோன்ற விழாக்கள்தாம் நமக்குச் சொல்லித்தருகின்றன. ஒரு நல்ல விழாவுக்குச் சென்று வந்தால் அது நமக்குள் பல உன்னதமான உணர்வுகளை ஊட்டிவிட்டிருக்க வேண்டும். அப்படியான உணர்வுகளைத் தராத எந்த விழாவையும் நல்ல விழா என்று எப்படி அழைப்பது? இந்த விழா அப்படி எதை நமக்குள் ஊட்டியது என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிடலாம். இதோ என் உணர்வுகள்...

தமிழர்கள் அதிகம் இல்லாத நிலையிலும், சுமார் அரை மில்லியன் டாலர்களைச் சேகரித்து பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் தொடங்கினார். நாமோ கனடாவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாய் வாழ்கிறோம். ஏன் தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக ஓர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை கனடாவில் தொடங்கக்கூடாது?

தமிழ் கற்காத ஒரு தமிழ் இளைஞரும் கனடாவில் இருத்தல் கூடாது என்ற நிலைக்கு நாம் உயரவேண்டும். பிறமொழிக்காரர்களையும் தமிழ் கற்க அழைக்க வேண்டும். தமிழுக்குத் தனி நூலகங்கள் பல அமைத்தல் வேண்டும். தமிழ் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்க இலவச தமிழரங்கங்கள் பல உருவாக்குதல் வேண்டும். தமிழ் நூல்களைக் குறைந்த விலையில் வெளியிடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தமிழ் நூல் வெளியிடுவோரை ஊக்கப்படுத்துதல் வேண்டும். தரமான தமிழிலக்கிய இதழ்கள் பல கனடாவில் வெளிவரவேண்டும். நவீன தமிழ் அகராதிகள், இலக்கண நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்று நூல்கள் பலவும் செய்திடல் வேண்டும். உலகத் தரத்திற்குச் சவாலான தமிழ் இலக்கியங்கள் இங்கிருந்து பெருகவேண்டும். கம்பன்களும், பாரதிகளும், கண்ணதாசன்களும் கனடாவில் உருவாகுதல் வேண்டும். அன்றைய மதுரை முத்தமிழ்ச்சங்கம் நவீன முகத்துடன் இன்று இங்கே கனடா முத்தமிழ்ச் சங்கமாய் மீண்டும் பிறக்கவேண்டும்.

இத்தனை உணர்வுகளையும் நம் உயிர்வரைக்கும் ஊட்டும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் மேலும் பல நல்ல தமிழ் வளர்ச்சிக் காரியங்களைச் செய்து சிறப்பாக வளரவேண்டும் என்று தமிழன்னையே பாராட்டுவதாக என் செவிகள் உணர்ந்தன.

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது


இனிய இணைய அன்பர்களே,

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

யுனித்தமிழ் தட்டச்சுவது எப்படி?

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.

இது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.

தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.

(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)

அன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எண்ணிக்கைகளாகும். இன்று அன்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அன்புடனில் சேர்ந்ததும் முதலில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை அன்பர்களுக்குத் தாருங்கள். உங்கள் பெயர், ஊர் விபரங்களையும், அன்புடன் குழுமத்தைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள் என்றும், அன்புடனில் இணைய விரும்பியதன் காரணத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்களின் அவ்வப்போதய உதவிகளுக்கு, அன்புடன் உதவிக்கு மடல் அனுப்புங்கள்.

எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஓர் சேவையாகச் சொல்லித்தருகிறது. மேலும் இணையம் மின்னஞ்சல் யுனித்தமிழ் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் அன்புடன் தீர்த்துவைக்கிறது.

அன்புடனின் கொள்கைகள்

1. அன்புடன் தமிழில் உரையாடுவோருக்கான குழுமம். தமிழ் அறியாதவர்கள் இதில் பங்குபெற முடியாது. தமிழில் உரையாடும் ஜார்ஜ் ஹார்ட்டை அன்புடன் இணைத்துக் கொள்ளும். தமிழ் எழுதத் தெரியாத தமிழ்ச் செல்வனை நிராகரிக்கும்.

2. அவசர கால தேவைகளை மனதில் கொண்டு அன்புடனில் The Only English Thread in Anbudan என்ற ஓர் இழை ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் தட்டச்ச இயலாத உண்மைச் சூழலில் முக்கியமான தகவல்களையும் விபத்து, மரணம், சுனாமி போன்ற அவசர விசயங்களையும் அறிவிக்க இவ்விழையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. அன்புடன் யுனித்தமிழில் மட்டுமே இயங்கும். உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு. இங்கே திஸ்கி, தாம், டாப் போன்று வேறு எந்த தமிழெழுத்துத் தரத்தோடும் எழுத அனுமதியில்லை.

4. அன்புடனில் கௌரவமான விசயங்களே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை. எது கௌரவம் எது ஆபாசம் என்பவற்றை அன்புடன் மட்டுமே தீர்மானிக்கும். இதில் சர்ச்சைக்கு இடமில்லை.

5. அன்புடனில் தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள், துணுக்குகள், பாடல்கள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான மற்றும் சுமுகமான தலைப்புகளிலேயே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டுமே இக்குழுமத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

6. அன்புடனில் மதங்களை சாதிகளை இனங்களை காயப்படுத்தும் விதத்தில் மடல்கள் அனுமதிக்கப்படாது.

7. அன்புடனில் இதயங்களை நோகடிக்கும் நோக்கத்தோடு பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் மடல்கள் இடக்கூடாது. கருத்துக்களால் எழும் மோதல்கள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன. ஆனால் தனிமனிதக் கீறல்கள் அனுமதிக்கப்படாது.

8. அன்புடனிலோ, அன்புடனின் நிர்வாகிகளிடமோ, அன்புடன் உதவிக் குழுவினரிடமோ எவரும் குறைகள் கண்டால், அவற்றை அன்புடன் உதவிக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவன்றி அன்புடனில் நேரடியாக மடல்கள் இடக்கூடாது.

9. அன்புடன்-உதவியிலிருந்து எந்த ஒரு விவாதத்தையும் நிறுத்தக்கோரி மடல் வந்தபின் அன்பர்கள் அதில் தொடர்ந்து விவாதம் செய்யக் கூடாது. அவர்களின் விவாதத்தை அன்புடன்-உதவிக்குத் தனிமடலாக அனுப்பி வைக்கலாம். அவை பரிசீலிக்கப்படும்.

10. அறிந்தே அன்புடன் கொள்கைகளை மீறும் அன்பர்கள் அன்புடன் உதவியினரால்
கண்டிக்கப்படுவார்கள். பிரச்சினை அதிகம் ஏற்படும் பட்சத்தில் பிரச்சினைக்குரிய அன்பர் நீக்கப்படக்கூடும். இது தொடர்பான விவாதங்களை அன்புடன் உதவிக்குத் தனிமடலில் இடலாமே தவிர அன்புடனுக்குள் இடக்கூடாது.


இந்தக் கொள்கைகள் தரும் ஒழுங்கில், அன்புடன் மேலும் செழித்து வளரும் என்ற நம்பிக்கை அன்புடனுக்கு உண்டு. இந்தக் கொள்கைகளில் மாற்றம் விரும்புவோரும் வாழ்த்துத் தெரிவிப்போரும் மறவாமல் அன்புடன் உதவிக்குத் தனிமடல் இடுங்கள்.

அன்புடன் கருத்தாடல்களின் முக்கிய தளங்கள்:

தமிழ், செம்மொழித் திட்டம், தமிழ் இலக்கணம், தமிழ் மற்றும் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் புத்தாண்டு, சங்கத்தமிழ்ப் பாடல்கள், சித்தர் பாடல்கள்

யுனித்தமிழும் கூகுள்குழுமமும், யுனித்தமிழ் உதவி

நிகரான தமிழ்ச்சொல்

புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள்

புதிய கவிஞர்களுக்கு ஊக்குவிப்பு

பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்

கவிதைகள் பற்றிய அலசல்கள்

அறிவியல் கேள்வி பதில்கள்

மருத்துவக் குறிப்புகள்

இந்தியப் பெருமை, இந்திய சுதந்திரம்

சுவாரசியமான புகைப்படங்கள், வீடியோக்கள்

மூளைக்கு வேலை தரும் புதிர்கள், விடுகதைகள், கணக்குகள்

நகைச்சுவைப் பக்கங்கள், குறுந்தகவல்கள், செய்திகள், துணுக்குகள், சிந்தனைத் துளிகள்

திரைப்படப் பாடல்கள், திரைக்கவிதைகள், திரைவிமரிசனம்

இவைபோல இன்னும் பலதரப்பட்ட விசயங்களை இதுவரை மிகச்சிறப்பாகக் கலந்துரையாடியிருக்கிறோம் என்பதைப் பெருமையுடன் நினைவுகூரலாம். இவையனைத்தும் இன்னும் பலவும் அடங்கிய இனிய தமிழ்ச்சுரங்கமே அன்புடன் குழுமம்.

அன்புடன் அன்பர்களால் ஆனதே அன்புடன். அன்புடனில் எழுதத் துவங்குங்கள். உங்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், கருத்துக்கள் அன்புடனில் வரவேற்கப்படுகின்றன. எழுதுவோரை ஊக்குவியுங்கள். புதிதாய் எழுதத் தொடங்குவோருக்கு உங்கள் ஊக்குவிப்பும் அரவணைப்பும் மிகவும் இன்றியமையாதது. அன்புடனின் வளர்ச்சி நம் அனைவரின் கையிலும் தான் உள்ளது. அன்புடன் குழுமத்தை இன்னும் வளமாய், நலமாய் அமைக்க உலகத்தமிழர்கள் அனைவரும் அன்புடனுக்கு அன்புடன் வாருங்கள்.


இதய நிழலில்
இதயம் கிடத்துவதே
இதயத்தின் தேடல்
அந்தத் தேடலின்
கூடல் முகாம்தான்
அன்புடன்

எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது?


Scroll down for English Version

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது


இது விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 2000 பயன்படுத்துவோர் யுனிகோடு தமிழ் அஞ்சல்கள் அனுப்புவதற்கான உதவி

1. எதுவுமே செய்யாமல் உங்களால் யுனிகோடு தமிழை வாசிக்க முடியும்.

2. யுனிகோடு தமிழ் எழுதுவதற்கு மட்டும் எகலப்பை 2.0 டினை நிறுவிக்கொள்ளுங்கள்

3. உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருந்தால் சாலச் சிறந்தது, இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது மறற மின்னஞ்சல் சேவைகளிலும் செயல்படும்.

4. உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து வியூ - என்கோடிங் - யுனிகோடு (யுடிஎஃப்-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.

5. உங்கள் அஞ்சல் பெட்டியைத் திறங்கள்

6. உங்கள் விண்டோசின் வலப்புறம் ஆங்கிலத்தில் 'கே' என்று உள்ள ஐகானைச் சொடுக்கி, 'யுனிகோடுதமிழ்' என்று மாற்றுங்கள். அது இப்போது தமிழில் 'அ' என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.

அவ்வளவுதான், இனியெல்லாம் நீங்கள் தட்டச்சு செய்யச் செய்ய, யுனிகோடு தமிழ் உங்கள் சாதுர்ய விரல் வழியே நளினமாய்க் கொட்டுவதைக் காணலாம்.


விண்டோஸ் 98 ம் யுனிகோட் தமிழும்

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6.0 ம் எக்ஸ்புளோரர் 6.0 ம் இருந்தால், விண்டோஸ் 98டினைப் பயன்படுத்துவோர், யுனிகோடு தமிழில் இருக்கும் கூகுள் குழுமப் பக்கங்களையும், ஜிமெல் அஞ்சல்களையும், அவுட்லுக் அஞ்சல்களையும் வாசிக்கலாம், ஆனால் தட்டச்ச இயலாது.

சுரதாவின் 'புதுவை தமிழ் தட்டெழுதியைப்' பாவித்து யுனிகோடு தமிழைத் தட்டெழுதி பின்னர் வெட்டி ஒட்டும் முறையைத்தான் இங்கு எதிலும் பயன்படுத்த முடியும்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm


உதாரண கூகுள் குழுமம்: அன்புடன்

ஜிமெயில் சுற்றுலா
ஜிமெயில் உதவி
ஜிமெயில் சேவை
ஜிமெயில் அஞ்சல்


Free download of eKalappai 2.0 for Unicode Tamil computing

Click eKalappai 2.0 to start the installation of the software that facilitate you with Tamil Unicode computing.


How to type Unicode Tamil?

This help is for the Windows XP and Windows 2000 users to send emails in Unicode Tamil

1. Without doing anything, you should be able to see Unicode Tamil

2. Install ekalappai 2.0 to write in Unicode Tamil

3. If you have gmail account, it is excellent, otherwise no problem. This will work for other email services too.

4. Open your Internet Explorer. Change as follows from the menu:
View - Encoding - Unicode (UTF-8)

5. open your mailbox

6. select UNICODETAMIL in 'K' icon sitting on the right side of your Windows taskbar. The 'K' icon shoud turn to red color Tamil 'a' now

That is all, you will see Unicode Tamil charecters falling from your sharp fingers when you start typing


Windows 98 and Unicode Tamil

If you have Windows 98, Outlook Express 6.0 and Internet Explorer 6.0 in your PC, You can read Unicode Tamil
mails in Google Groups, Gmail, and Outlook Express. But you can not type in Unicode Tamil.

Using Suratha's Puthuvai Tamil Writer, you can write Unicode Tamil mails and then cut and paste it whereever you
want.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

Sample Google Group ANBUDAN


Gmail Tour
Gmail Help
Gmail Support
Gmail Mail


Detailed Help on How to type Unicode Tamil?

If you have Windows XP or Windows 2000 and Internet Explorer 6.0, the following instructions will help you:

To view thamiz Unicode

In your Internet Explorer, go to View | Encoding and change it to Unicode (UTF-8) If you still can't read clearly, there's one more thing you can do:

Go to Tools menu and click Internet Options
When the options box comes up, click on Fonts... button
In the Language script drop-down box, click on Tamil
You will see 2 lists under that, i.e. left & right side, called Web page font, and Plain text font.
If you have already installed e-kalappai 2.0 , you may see TheneeUniTx in both lists
If you see that, then select that in both lists
If you don't see TheneeUniTx, you can select either TheneeUni or Latha instead.
On the left hand side, select Latha. You usually won't have Latha on the right side. In that case you have to go with TheneeUniTx or TheneeUni on the right hand side.
Click OK then again click OK to exit the options box, then return to your browser
Go back to your email and see whether you can read thamiz Unicode clearly.

If you don't see TheneeUni or TheneeUniTx in the above lists, then you may be able to see it after you install e-kalappai 2.0. Follow the next few instructions and install e-kalappai, and then go back to the previous step and see if you can select TheneeUniTx or TheneeUni.


The following are the instructions for typing in thamiz Unicode:

If you have e-kalappai 1.0, you have to uninstall it first (go to Start | Programs and go to the Tavultesoft or e-kalappai program group and click Uninstall (it may be listed as Uninstall Keyman))

There is a software called eKalappai (e-Kalappai) which you need to use to type in thamiz Unicode. You can download eKalappai 2.0 at: http://www.anbudanbuhari.com/support/ekalappai2.exe

Once you install & run it, you will see a small "K" icon in your system tray (when typing in thamiz Unicode, it will show a red thamiz "a" letter) In the Programs menu it will be in a group called Tavultesoft Keyman for Thamizha! and the program you need to run to get eKalappai running is called Keyman.

The system tray will show K only while typing in English, and while typing in TSCII it show the thamiz letter for "a" in Purple/Violet, and while typing in Unicode it will show the thamiz letter for "a" in Red.

You can switch between them using the Alt key combinations.

Alt+1 - English
Alt+2 - Unicode
Alt+3 - TSCII

For anbudan group, you will be using Unicode option.

Gmail is a good place to type in thamiz Unicode, compared to Hotmail or Yahoo. You can also chat on Googletalk, and MSN Messenger in thamiz Unicode (but not in Yahoo Messenger)

Let us know how it goes. Pls reply if you need further help, and once you're able to type in thamiz Unicode, pls send us a test email, so we can check to make sure it worked.

யுனித்தமிழ் எழுத்துக்களின் அட்டவணை

உயிரெழுத்துக்கள்

அ - a
ஆ - aa, A
இ - i
ஈ - ii, I
உ - u
ஊ - uu, U
எ - e
ஏ - ee, E
ஐ - ai
ஒ - o
ஓ - oo, O
ஔ - au, oLa

மெய்யெழுத்துக்கள்

க் - k, g
ங் - ng
ச் - c, s
ஞ் - nj, X
ட் - t, d
ண் - N
த் - th, dh, T
ந் - w, n-
ப் - p, b
ம் - m
ய் - y
ர் - r
ல் - l
வ் - v
ழ் - z
ள் - L
ற் - R
ன் - n

ஆய்த எழுத்து

ஃ - q

கிரந்த எழுத்துக்கள்

ஜ் - j
ஷ் - sh, ch, Z
ஸ் - S
ஹ் - h
க்ஷ் - ksh, kch, kZ
ஸ்ரீ - sr

சென்னை விழா நன்றியுரை


நீரும் தனித்தே பொழிகிறது - அதன்
தொடுதலில் தாகம் தெரிகிறது

நிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்
தவிப்பினில் தாய்மை விரிகிறது

காற்றும் தனித்தே அலைகிறது - அதன்
அசைவினில் காதல் மலர்கிறது

நெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்
வேகத்தில் வேட்கை கொதிக்கிறது

வானம் தனித்தே விரிகிறது - அதன்
மௌனம் உயிரில் நிறைகிறது

தமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்
சாதனை இயல்பாய் வருகிறது

ஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்

என் அன்பினிய ஆறாவது பூதங்களே
உங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது
எனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்
இந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே
அவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது

நான் இந்த விழாவை மறப்பதற்கில்லை
இனி எத்தனையோ விழாக்கள் வரலாம்
ஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்
இது என் இதயம் கீறி என்றும் வாழும்
இசைத்தட்டாய் ஆக்கிய விழா

நினைவு இருப்பவர்களால்தான்
தன்னை மறக்க முடியும்
நிம்மதி இருப்பவர்களால்தான்
தளர்ந்து உறங்க முடியும்

அன்பு இருப்பவர்களால்தான்
அள்ளி அணைக்க முடியும்
தெளிவு இருப்பவர்களால்தான்
புதியதைப் பொழிய முடியும்

கனவு இருப்பவர்களால்தான்
விரைந்து வெல்ல முடியும்
கற்பனை இருப்பவர்கலால்தான்
விரிந்து பறக்க முடியும்

கவிதை இருப்பவர்களால்தான்
ரசித்து வாழ முடியும்
இதயம் இருப்பவர்களால்தான்
உண்மையாய் வாழ்த்த முடியும்

என்னை வாழ்த்திய உயர்ந்த உள்ளங்களுக்கு
என் உயிரின் நன்றி இழைகள்....

என் செல்ல மகள் தொட்டு இந்த அரங்கை விட்டுச்
செல்லாத கடைசி தமிழர்வரை அனைவருக்கும்....

பழைய சுவடுகளைப் பாடமாக்கிக்கொண்டு
புதிய சுவடுகளைப் பயணமாக்கிக்கொள்ளும்
இந்த புகாரியின் நன்றியும் வணக்கமும்

இவ்வேளையில்....
பத்தே தினங்களில் என் நான்காவது கவிதை நூலான பச்சைமிளகாய் இளவரசியை அச்சில் கோத்துத்தந்த மணிமேகலை பிரசுரம் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும்

சரணமென்றேன் கவிதைநூலை காவ்யாவில் அச்சிட மிகுந்த சிரமங்களை எடுத்துக்கொண்ட கவிஞர் வைகச் செல்வி மற்றும் அவர் கணவர் என் இனிய நண்பர் திரு வேணுகோபால் அவர்களுக்கும், என் தொலைபேசி குரல்கேட்டதுமே ஒரு சிறந்த தேனீயைப் போல சுறுசுறுப்பாய் சின்னச்சின்னக் காரியங்களையும் சிரத்தையாய் செய்துமுடித்து என்னைத் திக்குமுக்காடவைத்த திருமதி காந்தி ஜெகன்னாதன் அவர்களுக்கும், நான் என் ஒவ்வொரு கவிதைத் தொகுப்பு இடும்போதும் என் கவிதைகளைக் கோர்த்து முத்துமாலையாய் ஆக்கித்தரும் என் அன்பிற்கினிய கவிதை நண்பர் கவிஞர் சேவியர் அவர்களுக்கும் என் பிரத்தியேக நன்றிகள்.

இறுதியாக நான் சொல்லப்போவது இதைத்தான். தமிழர்தம் அடையாளம் தமிழன்றி வேறில்லை தாய்மொழியைத் துறந்தவரோ தன்முகத்தை இழந்தவரே தமிழரோடு பேசும்போது தமிழ்மொழியில் பேசுவோம் தமிழ்த்தாயின் மடிதவழ்ந்து தன்மானம் ஓங்குவோம். வாழ்க தமிழ்

இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்


சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா

இப்படியாய் கவிப்பேரரசை நான்
வைரம் முத்து பொன் மணி
என்றுமட்டுமே எண்ணியிருந்தேன்
கனடாவில் முதன் முதலில் சந்தித்த பிறகுதான்
இவர் சொன்ன சொல் தவறாத மாணிக்கம் என்றும்
புரிந்துகொண்டேன்.

வார்த்தைகளை உருக்கி உருக்கி
இவர் என் ரகசிய இதயக் குகைகளுக்குள்
பகிரங்கமாய் ஊற்றி இருக்கிறார்
அதன் கொதிப்பு தாளாமல்
நான் துடித்தெழுந்து குதித்திருக்கிறேன்

1975 ஜமால் முகமது கல்லூரியில் நான் புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். தமிழ்ப் பேராசிரியர் மன்சூரலிகான் ஓர் இளம் கவிஞனை எங்கள் வகுப்பில் அறிமுகம் செய்கிறார். ”பன்னிரண்டு மணிகாட்டும் முட்கள் போல் நானும் அவளும்” என்ற வரிகளைச் சொல்லி என்ன புதுமை பாருங்கள் என்று வியக்கிறார். அந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தக் கவிதை வந்த நூல் வைகறை மேகங்கள் என்ற அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.

கவிப்பேரரசரிடமிருந்து எனக்கு இரண்டு வரங்கள் கிடைத்தன

ஒன்று என் முதல் கவிதை நூலுக்கு அற்புதமான ஓர் அணிந்துரை
இரண்டாவது இன்று தமிழகத்தில் நிகழும் என் முதல் அறிமுக விழாவில்
எனக்கு வாழ்த்துரை

ம்ம்ம்.... கவிதைகளால் மட்டுமல்ல
இந்த மனதாலும் அவர் பேரரசர்தான்

என் கவிதைக் குழந்தைகளின் முகவரிகளை
மிகச் சரியாக தமிழ் உலகத்திற்கு எடுத்துச் சொன்னார்
கவிப்பேரரசின் அணிந்துரைக்கு என் நன்றி சொல்லி மாளாது

இந்தக் கவிஞன்தான் என் கவிதைகளின் உச்சிமுகர்ந்தவன்
என்ற பெருமை எனக்கு மூன்றாம் சிறகை வெடிக்கச் செய்கிறது

நேரில் சந்தித்தால் எங்கே என் கவிஞனின் உயரம் குறைந்துவிடுமோ
என்று அஞ்சி முப்பது ஆண்டுகள் எழுத்துக்களோடு மட்டுமே
கைகுலுக்கிக் கிடந்தவன்.

நேரில் சந்தித்தேன் கடந்தமாதம். இந்தியாவில் அல்ல கனடாவில்
நேரில் சந்தித்தபோது அதனினும் உயர்ந்துநின்றார் கவிஞர்

என் நண்பர்களுக்காக தனியே என் திருமண அழைப்பிதழை நெய்தேன்
அது முழுவதும் கவிதைகளாலேயே ஆனது.

என் வாலிப வானுக்குள்
உலா வரப் போகிறாள் ஒரு வசீகர நிலா
என் பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள் ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும் என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள் ஓர் இளமயில்

ஆம்...
நான் என் விலா எலும்பின் விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற மனங்களைக் குவித்துவிட்டேன்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்... வாரீர்...
என்று எழுதினேன்

அதோடு என் தாகம் தீரவில்லை. கவிஞரின் அனுமதியில்லாமலேயே

எனக்குச் சம்மதமே
நீ மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலர்களாய் இருக்கமட்டுமல்ல
நீ பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்

என்ற வரிகளை அழைப்பிதழின் பின்னட்டையில் இட்டேன். அப்போதுதான் என் மனம் மகிழ்ச்சி கொண்டது

சொல்ல இனித்தால்தான் சொல், ஆயினும்
சொல்லாமல் போனாலும்
அது சொல்தானே

புள்ளி சேர்த்தால்தான் கோலம், ஆயினும்
புன்னகையால் வரைந்தாலும்
அது கோலம்தானே

கல்லை உடைத்தால்தான் சிலை, ஆயினும்
கருத்துக்குள் வடித்தாலும்
அது சிலைதானே

முல்லை மலர்ந்தால்தான் வாசம், ஆயினும்
மனதுக்குள் மலர்ந்தாலும்
அது வாசம்தானே

உள்ளம் இணைந்தால்தான் உறவு, ஆயினும்
உதிரத்தில் வெடித்தாலும்
அது உறவுதானே

வள்ளல் கொடுத்தால்தான் கொடை, ஆயினும்
வார்தையால் அளந்தாலும்
அது கொடைதானே

இல்லை உனக்குவோர் பரிசு, ஆயினும்
இதயத்தால் ஏந்திவிட்டால்
அது பரிசுதானே

பொறுப்புக்கு ஒரு பொன்னாடை தந்தேன்
அது மதிப்பிற்குறிய மாலனுக்கு

இந்த என் இருப்புக்கு ஒரு பொன்னாடை தந்தேன்
அது அம்மாவுக்கு

இப்போது கவிதை நெருப்புக்கு ஒரு பொன்னாடை தருகிறேன்
அது கவிப்பேரரசிற்கு....

நன்றி, வணக்கம்

புதுமைகளின் காதலன் மாலன்


என் சென்னை அறிமுக விழாவில் மாலனைப்பற்றி நான் பேசியது


ஆழ்கடல் எறிந்தாலும் அழகு
முத்தோடு வருவான் தமிழன்
அந்த ஆகாயம் எறிந்தாலும் புதுக்
கோளோடு வருவான் தமிழன்

கிழக்குத் திசையில் வளர்ந்தேன்
அச்சுத் திசைகளோடு வந்தார் இவர்
மேற்குத் திசையில் வாழ்கிறேன்
இணையத் திசைகளோடு வந்துவிட்டார்

என்போன்ற இளையோரை
எங்கு சென்றாலும் விடமாட்டாரோ
இந்தப் பொன்மன மாலன்

பண்டிகை தினத்தன்று புதுச்சட்டை அணிந்து அதைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்பில் நடந்தது ஒரு வயது. பின் கருகருவென்று வளர்ந்த மீசையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பெருமையில் திளைத்தது ஒரு வயது.

அந்த வயதில்தான் திசைகள் எனக்கு அறிமுகம். அது என் பத்திரிக்கை. ஏனெனில் அதை இளைஞர்கள் பத்திரிகை என்று அறிவித்தார்கள்.

நாலைந்து இளைஞர்கள் சேர்ந்து தஞ்சையின் சார்பாக திசைகளில் பங்குகொண்டோம். இனிமையான நாட்கள் அவை. தஞ்சாவூர் பெரிய கோவிலில்தான் எங்கள் சந்திப்பு நிகழும்.

பலரும் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ இலக்கியத்தில் நனைந்துகொண்டிருப்போம். அப்போதுதான் மாலன் என்ற பெயர் எனக்கு அறிமுகம்.

மாலையும் காலையும் மலர்ந்தமுக மாலனின் தலைமை எனக்கு இரண்டுமுறை கிடைத்திருக்கிறது.

என் இணைய நூல் வெளியீட்டு விழாவின் தலைவரும் மாலன்தான். (உலகின் முதல் இணையநூல் விழாபற்றி விரிவாக இதே வலைப்பூவிலேயே காணலாம்)

யானை கட்டிப் போரடிக்கும் பேருழவில்
ஓர் எறும்பு வந்து கயிறிழுக்கும் அதிசயம்
நயாகராக்கள் கூடிக் கொட்டும் விழாவில்
ஒரு குற்றாலம் பாட வரும் குதூகலம்

யார் தந்தார் இதை இன்று எனக்கு?

பொறுப்புகளின் ஆர்வலன்
எளிமைகளின் தூதுவன்
புதுமைகளின் காதலன் - நம்
மதிப்பிற்குரிய மாலன்

இந்த பந்தம் அதிசயமானது.
30 வருடங்கள் கழித்து மீண்டும்
இணையத்தின் மின்னிழைகளால்
கட்டித் தழுவிக்கொண்டோமே

இவர் இல்லையேல்... இன்று இந்த விழாவே இல்லை

நான் நேரே விமான நிலையத்திலிருந்து வருகிறேன்
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும்
மாலன் அமைதியாய்ப் புன்னகைக்கிறார்.
அதுதான் மாலன்....

இவருக்கு எப்படி நான் என் நன்றிகளைச் சொல்வது?

தேனுக்கு மேடைதரும் பூக்கள் - அந்தத்
தேனின் நன்றியோ ஒரு சொட்டு
மீனுக்கு மேடைதரும் நீரலை - அந்த
மீனின் நன்றியோ ஒரு துள்ளல்
மானுக்கு மேடைதரும் புல்வெளி - அந்த
மானின் நன்றியோ ஒரு தாவல்
வீணைக்கு மேடைதரும் காற்று - அந்த
வீணையின் நன்றியோ ஒரு நாதம்

என் கவிதைக்கு மேடைதந்த நெஞ்சமே
உங்களுக்கு என் நெகிழ்வான
நன்றியின் அளவென்ன தெரியுமா...?

வான் நிறைந்த விண்மீண்கள் கொஞ்சம்தான் - என்
வாய் நிறைந்த நன்றிகளோ சொல்லிலடங்கா!

திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம்


2005 சித்திரையில் சென்னை சென்றேன் ஒரு பத்து தினங்களுக்காக. அங்கே மாலன் தலைமையில் வைரமுத்து வாழ்த்துரை வழங்க இந்திரன், யுகபாரதி, அண்ணா கண்ணன், வைகைச் செல்வி ஆகியோர் என் நூல்களை விமரிசிக்க சிறப்பாக நடந்தது எனக்கான அறிமுக விழா. அதில் நான் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் இது


என் அன்பிற்கினிய தாய்மண் நெஞ்சங்களே
உங்கள் அனைவருக்கும்
என் இதய ஆழத்தின் இனிய வெளிகளிலிருந்து
ஆனந்தச் சந்தங்களாய்ப் பொங்கியெழும்
விசாரிப்புகளும் வணக்கங்கள்

ஐஸ்கிரீம் நடுவில்
ஜில்லென்றிருக்கும் செர்ரிப் பழம்
அப்படியே நழுவி
அடுப்பில் விழுந்துவிட்டதைப்போல
இப்போது என் உடல்

பாலைவனத்தில்
பல்லாயிரம் மைல்கள் நடந்து நடந்து
வெடித்த பாதமும்
பற்களின் நடுவிலிருக்கும் ஈரத்தையும்
சுத்தமாய் உறிஞ்சி முடித்த தாகமும்
விமானம் ஏறி நேரே
கங்கையில் விழுந்துவிட்டதைப்போல்
இப்போது என் மனம்

இப்படி நிலவும் சூரியனும்
ஒரே சமயத்தில் முற்றுகை இடப்பட்ட
சின்னஞ்சிறு வானத் துண்டாய் நிற்கிறேன்
இன்று நான் உங்கள் முன்

என்ன வினோதம் பாருங்கள்...
இரண்டு சூட்டோடு நான் இங்கே நிற்கிறேன்
ஒன்று இது... (என் உடையைச் சுட்டிக் காட்டுகிறேன்)
இன்னொன்று இந்தச் சித்திரைச் சென்னை

இரண்டுமே எனக்கு வெளியில்தான் இருக்கின்றன
என் உள்ளே இருப்பவையோ குளுகுளுப்பாய்
தமிழ் நாடும் பிரியமும்
தமிழ்நாட்டுப் பிரியமுமே

இருபத்தைந்து ஆண்டுகளாக நான் வெளிநாட்டில் வாழ்கிறேன்
பலமுறை ஊரோடு வந்துவிட வேண்டும் வேண்டும் என்று
ஆசைப்பட்டிருக்கிறேன்

ஆனால் இப்போதோ
ஊரே அங்குவிட்டதைப்போல ஒரே கூட்டம்

ஆவியான கடல்நீர் வானம் சென்று
மேகங்களாய்க் கூடுகட்டிக்கொள்வதைப்போலத்தான்
தமிழனின் வெளிநாட்டு வாழ்க்கை
மீண்டும் வானம் திரும்ப விரும்பாமல்தான்
நிலம் விழுந்து தன் கடல் சேருகிறான்

ஆனால் புலிவால் பிடித்த வாழ்க்கை அப்படி விடுவதில்லை
கடும் வெப்பம் ஏற்றி மீண்டும் ஆவியாக்கி
அந்த அயல் வானத்திலேயே ஏற்றிவைத்து விடும்

இருப்பினும்....
அதுவும் நமக்குச் சொந்தம்தான் என்ற நிறைவு
மெல்ல மெல்ல பின் வந்துசேரும்

தன் கிராமத்தை மறக்காமல்
அடுத்த கிராமத்தில் வாழ முடியும்போது
தன் தலைநகரை மறக்காமல்
அடுத்த தலைநகரில் வாழ முடியும்போது
தன் நாட்டை மறக்காமல்
அடுத்த நாட்டில் வாழ்வது மட்டும் இயலாதா

உலகம் ரொம்பப் பெருசுதான்....
ஆனால்
அது சுருங்கிச் சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிட்டதே
அடுத்த கோள் போவதற்கு
ஆயத்த நிலையிலல்லவா இன்று மனிதன்?

எங்கேயோ தூரமாய்ப் பறந்துபோய் ஏதேதோ கண்டுவிட்டேன்
ஆனால் இந்த மேடைதான்....
என் தாய்மண்ணின் இந்த மேடைதான் எனக்கு
இதயக் குப்பிக்குள் தஞ்சாவூர்க் கரும்புச்சாற்றை
ஊற்றிவைத்ததைப் போல் தித்திப்பாய் இனிக்கிறது

காமடி மூர்த்தி தொடங்கி கவிப்பேரரசு வைரமுத்துவரை
அங்கே அடிக்கடி வருகிறார்கள்

வாழை இலை தொடங்கி நெத்திலி கருவாடு வரை
எல்லாமும் கிடைக்கின்றன

அட...
அமுதத் தமிழே
பாட்டுப் பாடிக்கொண்டும்
ஆட்டம் ஆடிக்கொண்டும்
ஆசை ஆசையாய் அங்கே வந்துவிட்டபின்
வேறு எதுதான் வரவேண்டும்?

கழுத்தெலும்பு ஒடிய ஒடிய
கண்ணுமணி விரிய விரிய
ஆச்சரியம் கூச்செறிய
அதிசயத்தைப் பாரு
அது கனடா சியென் டவரு

அந்த சியென் டவரின் அடிவாரத்தில்
சின்னதாய் ஒரு கூடு கட்டி வாழும்
தஞ்சாவூர்ப் பறவை நான்

இன்று உங்களை எல்லாம் காண சிறகடித்துச்
சிலிர்ப்போடு வந்து இறங்கி இருக்கிறேன்

ஆயினும்
இது என் வேடந்தாங்கல் அல்ல
இதுதான் என் கருவறை

எத்தனை சுனாமிகள் வந்தாலும்
கடலை நேசிக்காமல் இருக்கமுடியுமா?

எத்தனை இன்னல்கள் துளைத்தாலும்
வாழ்வை நேசிக்காமல் இருக்கமுடியுமா?

எத்தனை தேசங்கள் சென்றாலும்
தாய்மண்ணை முத்தமிடாமல் இருக்கமுடியுமா?

எனவேதான்
இதயத்தைத் தேடிவரும் இரத்த நாளங்களைப் போல
என் தாய்மண் தேடி ஓடிவந்திருக்கிறேன்

நான் என் கால்நூற்றாண்டு வெளிநாட்டு வாசத்தால்
அனுபவித்து உறுதி செய்துகொண்டது
ஒன்றே ஒன்றைத்தான்

அது....
தமிழன் என்றோ எழுதி வைத்தப் பொன்னெழுத்துக்கள்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்தச் சர்வதேசச் சத்திய சொற்களை மீறி எழுத
எந்த மொழிக்கும் வக்கில்லை
எந்தக்கவிஞனுக்கும் இனி வாய்ப்பில்லை

கனடா வாழ்க்கை நவீனமயமானதுதான்.
தொட்டதற்கெல்லாம் அங்கே அட்டை அட்டை

கடன் அட்டை காப்புறுதி அட்டை
சாரதி அட்டை சலுகை அட்டை
வங்கி அட்டை வைத்திய அட்டை
அலுவல் அட்டை அடையாள அட்டை
வணிக அட்டை விருந்து அட்டை
தரிப்பிட அட்டை தகராறு அட்டை
அட்டை அட்டை அட்டையோ அட்டை

நாளும் பொழுதும் அது ஒட்டி ஒட்டி
உயிர் உறிஞ்சி வெளுத்துப் போன இந்த முகத்தில்

தமிழைக் காட்டி.... இரத்தம் பாய்ச்சி
தமிழைப் பேசி.... உயிரை மீட்டு... தமிழை வாழ்த்தி....
ஆயுள் வளர்க்கும் இனிய இணையம்
அதை அமைத்துத் தந்த கணித்தமிழ்க் கணிஞர்கள்
அவர்களுக்கு என் தமிழ்மன நன்றிகள்

கனடாவில் தமிழ் பற்றி
இங்கே நான் சொல்லியாகவேண்டும்

கனடாவின் தேசிய கீதம் தமிழ்க் கவிஞனால்
அதே இசைக்குள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

நான் வாழும் ஒண்டாரியோ மாகாணத்தின் மொழிகளில்
தமிழும் ஒன்று என்று தமிழின் பலகோடி கிரீடங்களோடு
ஒரு புதுக்கிரிடமும் தரப்பட்டுள்ளது

அதாவது எந்த அரசு பத்திரம் வந்தாலும்
அது தமிழிலும் வரும்

கனடிய பொது நூலகங்களில் தமிழ்ப் புத்தங்கள் வாசிக்கலாம்
தமிழ் திரைப்படங்களின் ஒளிநாடாக்களை இலவசமாகப் பெறலாம்

கனடா அனைத்துப் பண்பாடுகளையும் ஏற்பதால்,
தமிழ்ப் பண்பாட்டின் நெய்மணம் மாறாமல் அங்கே வாழலாம்.

இரண்டு லட்சம் தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்

உலகின் உயர்ந்த கோபுரமான சி என் டவரில் வருக வருக என்று
தமிழில் எழுதி இருப்பதை வாசிப்பது எத்தனைச் சிலிர்ப்பென்று அறிய
நீங்கள் நயாகராவில் விழுந்து எழவேண்டும்

இருபதுக்கும் மேற்பட்ட கனடிய தமிழ்ப் பத்திரிகைகள்
பத்துக்கும் மேல் தமிழ் வானொலிகள்
பன்னலை வரிசைகளில் (FM) தமிழ்
மசூதிகளில் தமிழ்,
கிருத்தவ ஆலயங்களில் தமிழ்
தொலைக்காட்சிகளில் தமிழ்
என்று எங்கும் எதிலும் தமிழ் தமிழ் தமிழ்

பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்
சொந்தவீடு கட்டிக்கொண்டிருக்கிறது அங்கே

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்
அது சொர்க்கத்தையே மிஞ்சும்

கனடாவில் ஒரு தமிழீழமும் இருக்கிறது;
ஒரு தமிழ்நாடும் இருக்கிற்து

இன்னும் நிறைய சொல்லலாம், எனக்கு அவகாசம் இல்லை
இருந்திருந்தால் அவற்றைக் குட்டிக் குட்டியாய்ப்
படம் எடுத்துக்கொண்டுவந்து
இங்கே ஓர் ஒளிப்படக்கருவி மூலம்
கொட்டிக் குவித்திருப்பேன்.

சின்ன வயதில் கோபால் பல்பொடி விளம்பரம் கேட்டிருக்கிறேன்.
இலங்கை இந்தியா சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில்
புகழ்பெற்ற கோபால் பல்பொடி என்பார்கள்

இன்று தமிழ் எந்தெந்த நாடுகளில் இருக்கிறது என்று சொல்லத்
தொடங்கினால், அது ஒரு நிறுத்தமுடியாத பட்டியலாய் இருக்கும்

சர்வதேச விமான நிலையங்களில் வேட்டி கட்டிக்கொண்டு
"உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு" என்று
பாட்டுப் பாடும் தமிழர்கள் அதிகரிக்கிறார்கள்.

செவ்வாய்க் கிரகணத்திலும் தமிழ்ப் பாடல் கேட்கிறது
என்று ஒரு கதை விட்டால்கூட அதை
உறுதியாய் நம்புவதற்கு வட அமெரிக்காவே இன்று தயார்

எங்கு சென்றாலும் தமிழன்
தன் மொழியையும் பண்பாட்டையும் எடுத்தே செல்கிறான்
தமிழை உச்சிக் கொம்பில் ஏற்றி வைக்காமல் அவன் ஓய்வதே இல்லை

நான் எழுதி வாழ்வது....
இன்று இணையத்தில்தான்

வெளிநாட்டுத் தமிழன் நெஞ்சில்
நீறு பூத்துக் கிடந்த நெருப்புத் தமிழ்
இனிப்புப் புயல்போல் வந்த
இணையத்தமிழால் உந்தப்பட்டு
நீறும் சேறும் என்றுமே தொடமுடியாத
சூரிய நெருப்பாகிவிட்டது


இணையம் தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம்
எல்லாம் ஒரு கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால்,
இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

நீங்கள் முழுச்சுதந்திரம் பெற்ற எழுத்தை வாசிக்க வேண்டுமா
இணையம் வாருங்கள். அது இன்று அனைத்து ஊடகங்களையும்
அப்படியே மாற்றிப்போட்டுக்கொண்டிருக்கிறது....

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே தமிழே தமிழே

வெளிநாடு வந்தவர்கள் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள்
தமிழிலேயே பொழுதும் யோசிக்கிறார்கள்
தமிழில் பேசுவோமே என்று யாசிக்கிறார்கள்

இன்று எங்கே இல்லை தமிழ்?

வளை குடாக்களில்
பாலைவன மணலில் படிந்திருக்கிறது தமிழ்

அமெரிக்க நாடுகளில் பனிக்கட்டிகளில்
ஒட்டிக்கிடக்கிறது தமிழ்

என்னடா தமிழ் தமிழ் என்று பேசுகிறானே என்று
புருவம் உலராதீர்கள்

மடியிலேயே கிடந்தால் தாயின் அருமை தெரிவதில்லை
கொஞ்சம் தூரதேசம் வந்து வாழ்ந்து பாருங்கள்
என் தாகம் புரியும் தமிழின் உன்னதம் விளங்கும்

உயிர் துறப்பான் தமிழன்...
ஆனால் தன் மொழி துறப்பானா?
மொழி துறந்தால் அவன் ஒரு தமிழன் தானா...?

மொழியின் மேடைகளில்தானே
தமிழனின் கர்வம் விண்ணளந்து நிற்கிறது!
அவன் பண்பாடு தலைநிமிர்ந்து வாழ்கிறது!

ஊர்விட்டால் என்ன?
மொழிவிடாத வரை தமிழன் என்றென்றும்
ராஜ சிம்மாசனத்தில்தானே!

புலம்பெயர்ந்த கனடா வாழ்வில்


பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும். அவை யாவும் தேவை கருதியே கையாளப்பட்டன

நம்மூர் வாழ்க்கை
மாட்டுவண்டியைப் போன்றது
இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால்
வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும்

கனடிய வாழ்வென்பதோ
மிதிவண்டியைப் போன்றது
ஒவ்வொரு முறையும் உயிரழுந்த உயிரழுந்த
மிதிப்பதை நிறுத்தினால்
அந்த நிமிடமே நாம் மரண மிதிபடுவோம்

உண்மைதான்...
பலருக்கும் இங்கே உறங்கவும் பொழுதின்றி
இருபணி முப்பணியென்று
செக்குப்பிராணி வாழ்க்கைதான்

கிரடிட் கார்ட் என்பதை எவரும்
பிழையாக மொழி பெயர்க்காதீர்கள்
கடனட்டை என்பது தவறு
கடவுள் அட்டை என்பதே சரி

அந்தக் கடவுள் அட்டையும்
தங்க நிறத்தில் கிடைத்துவிட்டால்
அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்தச் சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்காக

உண்மைதான்...
கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்

***************************************
இனிவரும் வரிகள் கவிதையாய் ஆக்கப்பட்டுவிட்டது

படிக்கத்தான் அனுப்பினோம் மகனை

பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டது
மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனான்

பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நாலு காதல் வீசி
எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்கள்

உண்மைதான்
பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள்
கட்டிவைப்பதென்பது
நயாகராவை
முந்தானையில் ஏந்துவதைப்
போன்றதுதான்

தமிழனின்
அடுத்த சந்ததியை அழித்தெடுக்க
மிகுந்த கவர்ச்சிகாட்டி நிற்கிறது
மேற்குலகக் கலாச்சாரம்
***********************************************


குளிரும்
இங்கே கொடுமைதான்

ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிடுகிறது

எழிலத்தனையும் இழந்துவிட்டு எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும் மூளி மரங்களே
மிச்சமாகிப் போகின்றன

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடுகட்டுகின்றன

உண்மைதான்...
ஒரே ஒருநாள் இந்த மின்சாரம்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும் மூச்சின்றிப் போவார்களோ
என்ற பயம் வந்து முட்டுகிறதுதான்

சரிதான்...
இந்தப் புலம்பெயர் வாழ்வென்பது
தேவைதானா என்ற கேள்வி எழுவது
உண்மைதான்

குளிர் குதறிக் கிழிக்க
வேலை விழிக்குள் விரலாட்ட
வருமானம் முகத்தில் கரிபூச
பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க
இந்தப் புலம்பெயர் குடும்ப வாழ்வு
தேவைதானா?

ஆனால்...
ஒரே ஒரு கேள்வி உங்களிடம்

உண்மையா
இல்லையா சொல்லுங்கள்

தமிழ் ஈழம்
இலங்கையில் மலரப்போவது
நாளை
இன்றே மலர்ந்திருப்பது
கனடாவில்

உண்மையா
இல்லையா சொல்லுங்கள்

உழைப்பிருந்தால்தானே
எங்கும் பிழைப்பிருக்கும்

நல்ல உழைப்பிருந்தால்
கடவுள் அட்டை
உன் கட்டைவிரலாகாதா

************
உன் வீட்டில் தமிழிருந்தால்
தமிழ்ப்பிள்ளை எப்படித் தடம்மாறும்?

தமிழ் வெறும் மொழியல்ல தமிழா
கற்புமிக்க பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழாக வேண்டும்

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்

நம் புலம்பெயர் வாழ்வில்
நான் மிகப்பெரும் தவறென்னு
எண்ணுவது ஒன்றே ஒன்றைத்தான்

ஊரில் என் விடலைப்பருவத்தில்
கவிதை கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம்
என்பன வருகிறதென்றால்
தமிழ் கேட்டு நெகிழ... உருக...
உள்ளமும் உயிரும் உயர...
கேளிக்கைகளை எல்லாம் துறந்து
ஓடிச்சென்று செவி விரித்துக்
காத்துக்கிடப்பேன்

எங்கே அந்த இளைஞர்கள்
இங்கே?

இளைஞர்களைத்
தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு
புழுதிவாழ்வாகித்தான் போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
இந்த மேடைகள் அமையவேண்டும்
இதுவே இன்றைய என்
உறுதியான வேண்டுகோள்
***************************************************

அடுத்தது குளிர்..
நெஞ்சில் நெருப்பிருந்தால்
கொடும் பனியும் கொடிய குளிரும்
உன்னைக் கும்பிட்டு விலகாதா

எதையும் தாங்கும்
இதயம் கொண்ட தமிழனை
குளிர் வவ்வால் கொன்றா போடும்?

என் முதற்பணி நேர்காணலில்
நிறுவன அதிபர் இத்தாலியர் கேட்டார்
பனியிங்கே கொல்லுமே
வாழ முடியுமா உன்னால்?

நொடியும் தாமதிக்காது
குரலுயர்த்திக் கேட்டேன்
உன்னால் இயலுமென்றால்
என்னால் இயலாதா?

மறுபேச்சின்றி அப்பொழுதே
பணியொப்பந்தம் கையெழுத்தானது

ஈழத்தமிழா...
பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு
ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய
தாய் நாட்டைவிட்டு
விதி விரட்டிய திசைகளெங்கும்
சிதறி ஓடும் அவலத்துக்கு
ஆளானாய் நீ

ஆனால் வந்த இடம் எப்படி?
சொர்க்க பூமியல்லவா

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்

மேடைப் பேச்சு இல்லை
சாலை கோஷம் இல்லை
தூய கைகள் விரித்து
தெளிந்த நல்ல ஆட்சி

கோடி அன்னை தெரிசா
கூடிச் சேர்ந்த அங்கம்
கனடா என்னும் தங்கம்

லஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி
அழுகல்-அரசியல் கற்பழிப்பு கிட்னி திருட்டு என்று
தாய்மண்ணின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு
நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை

ஏற்றத்தை நோக்கியதொரு
மாற்றம் புலம்பெயர்பு

புலம்பெயர்வின்றி
சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை

புலம்பெயர்வென்பது
இன்று நேற்று நிகழும் செயலல்ல
அன்று புலம்பெயர்ந்ததைப் பாடி
எத்தனை எத்தனை
பாலைத்திணைப் பாடல்கள்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
என்று பாரதி பாடினான்
ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே
இன்று பாலம் வந்துவிட்டது
புலம்பெயர்வுகளைப்
பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட
ஆகாயப் பாலம்

திரையில் வந்த
புலம்பெயர்வுப் பாடல் ஒன்று
என் கண்களை உருக்கித் திரவமாக்கியது

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

அந்த அழுகையையும் கண்ணீரையும்
கருணையோடு துடைத்து
பஞ்சு மஞ்சம் தந்த சுவனம்
இந்த நாடு

இரவும் உறங்கிப்போகும் இரவுகளில்
உறங்காத இருபத்துநாலு மணிநேர
தமிழ் வானொலிகள்
தமிழ்த் தொலைக்காட்சிகள்
தமிழ்ச் செய்தித் தாள்கள்

தமிழிலேயே பேசலாம்
என்ற வழக்காடு மன்றங்கள்

'வருக வருக' என்று
முகப்பில்
தமிழில் வரவேற்கும்
கனடா தேசக் கோபுர
நுழைவாயில் என்று
இப்படியாய்
எத்தனை எத்தனை அடுக்கலாம்

நம்மூரில்கூட
அவசரப்பிரிவுக்கு
ஐசியூ என்றுதானே எழுதியிருக்கிறார்கள்

ஆனால்
கனடாவில்
அழகு தமிழிலல்லவா
எழுதியிருக்கிறார்கள்

வாரம் தவறாமல்
எங்கோ ஓர் இடத்தில்
கலீர் கலீர் எனக் கேட்கும்
சலங்கையொலி

கொட்டும் பனியிலும்
முத்தமிழ் விழாக்கள்
பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள்
புத்தக வெளியீடுகள்
பழைய மாணவர் சங்கங்கள்

கவிப்பேரரசு முதல்
ஆச்சி மனோரமா வரை
அனைவரும் வந்து
தமிழ்மண் வாசணையை
இதயத்தில் கொட்டிவிட்டுச்
செல்கிறார்களே

சொல்லுங்கள்
ஈழத்தமிழர்களுக்கு
கனடா இரண்டாவது தாயகமா?

முதலாம் தாயகமல்லவா
முதன்மைத் தாயகமல்லவா

அகதிகளாக வாழாமல்
குடிமக்களாய் வாழும் வாழ்வு
எத்தனை ஏற்றம்?

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை
உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே
எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே
மண்ணே புகலிடமே
என்றன் மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே
நன்றி ஊற்றே உயிர்தனிலே

என்று
ஒவ்வோர் ஈழத்தமிழனும்
கண்ணீர் பொங்கப் பாடவேண்டும்
ஆனால் இங்கே சிலர்
அப்படியா செய்கிறார்கள்?

புலம்பெயர்ந்தது
வாழ்வு தேடியல்லவா

ஆனால் வீழ்ந்துபோகவே
எண்ணம் கொண்டு
தங்கள் குழிகளைத்
தாங்களே வெட்டிக்கொள்ளும்
கேடுகெட்ட மண்வெட்டிகளாய்
ஆகிப்போனார்களே
இங்கே சிலர்

புலம்பெயர்ந்த தமிழா
உனக்கு ஏனடா ஏக்கே 47

அதோபார்
உன் அம்மா... அப்பா...
உன்னால் தனித்து விடப்பட்டு
மன அழுத்தத்தால் மடிந்துபோகிறார்கள்

அழிந்துபோக மட்டுமே
ஆசைப்படும் தமிழனே கேள்

இது கருணை மிக்க நாடு
நல்ல மக்களைக் கொண்ட சொர்க்க பூமி
இங்கே உன் பாவங்களைக் கழுவிக்கொள்
மனிதனாய் இனியாவது வாழப் பழகு

தமிழையும் தமிழினத்தையும்
தரணி மேடையில்
வெட்கித் தலைகுனியச் செய்யாதே

இந்தக் கருணைக் கனடாவில்
தரமான உயரினம்
நம் தமிழினம் என்று காட்டு

புதைத்ததும் புதைந்ததும்
போதும் போதுமடா தமிழா

பண்பும் புகழும்
பாரம்பரியத் தமிழ் அறமும்
மீட்டெடுப்பொம் வா

தமிழ் அடையாளம்
தொலைத்துவிட்டு வாழும் தமிழனை
தமிழ் மண்ணிலும் காண்கிறேன்...
புலம்பெயர்ந்த மண்ணிலும் காண்கிறேன்.

தமிழ் அடையாளம் தொலைக்காமல்
ஆண்டாண்டு காலமாகப்
புலம்பெயர்ந்த மண்ணில் வாழும்
உண்மைத் தமிழர்களையே
நான் என்றும் போற்றுகிறேன்

எங்கே வாழ்கிறோம் என்பதைவிட
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே
நம் அடையாளத்தைத் தக்க வைக்கிறது

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பதே தமிழனின் பண்பாடு

ஒரு மனிதன் புலம்பெயரும் போது
தன் விழுதுகளைத்தான் பரப்புகிறான்

அவன் வேர்கள்
தான் பிறந்த மண்ணில்தான்
அழுத்தமாகக் கிடக்கின்றன

ஒருவனின் தாய்
எப்படி மாற்றப்படமாட்டாளோ
அப்படித்தான் பிறந்த இடமும்

தாய், மண், பண்பு என்ற அடையாளங்களோடு
போகுமிடத்தில் கிளை பரப்புவதும்
இலை விரிப்பதும்
கலாச்சாரக் கலப்பு கொள்வதும்
சிறந்த பண்புகளை ஏற்றுக்கொள்வதும்
இயல்பானது உயர்வானது

புலம்பெயர்வு என்பது பிழையல்ல
அது ஓர் உயர்வு

ஒரு பெண் பிறந்த இடத்திலிருந்து
தன் புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள்.
அவள்தான் உன் தாய்

ஓர் உயிர் கர்ப்பப்பையிலிருந்து
பூமிக்குப் புலம்பெய்கிறது
அதுதான் நீ

மனிதன் முதலில்
ஆப்பிரிக்காவில் பிறந்தான்
பின் எங்கும்
புலம்பெயர்ந்தான் என்கிறது
சரித்திரமும் அறிவியலும்

பறவைகள்
புலம்பெயர்ந்த வண்ணம்
இருக்கின்றன

அவை பொருளுக்காகவா
புலம்பெயர்கின்றன

வாழ்விற்காகப்
புலம்பெயர்கின்றன.

வாழ்விற்காகப் புலம்பெயர்வதில்
தவறே இல்லை

மனித வாழ்வில்
எது மிக மிக அவசியமானது?

சாதி, மதம், இனம், மொழி, மண்
என்ற எதுவும் இல்லை
மனிதம்... மனிதம் மட்டும்தான் தமிழா

இந்தியாவுக்குச்
சுதந்திரம் வாங்கித்தந்த
மகாத்மா காந்தி
புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்

இந்தியப் பெண்ணாகவே
மாறிவிட்ட
சோனியா காந்தியும்
புலம்பெயர்ந்தவர்

தேம்பாவணி
வீரமாமுனிவரை அறிவீர்கள்
அவர் தமிழ்நாட்டிற்குப்
புலம்பெயர்ந்ததோடு
தன் பெயரைத்
தமிழ்ப்பெயராகவே
மாற்றிக்கொண்டவர்

அன்னை தெரிசா எந்த நாடு
அவர் ஏன் புலம்பெயர்ந்தார்
காசுக்காகவா புகழுக்காகவா
பாதுகாப்பிற்காகவா

அவரின் ஆத்மா
கருணைமிக்க
அந்தப்
புலம்பெயர்வில்தானே
துடித்துக்கொண்டிருந்தது

நீர் தன் புலம் பெயராமல்
உலகுக்கு மழை இல்லை

பயிர் தன் புலம் பெயராமல்
மக்களுக்குச் சோறு இல்லை

நதி தன் புலம்பெயராமல்
கடல்சேர வழியில்லை.

புலம்பெயராத மரங்கள்கூட
தங்கள் விதைகளைப்
புலம்பெறச் செய்துவிடுகின்றன.

அந்தக் காலத்தில் வந்த
சுனாமிதான்
பூம்புகார் மக்களைப்
புலம்பெயரச் செய்தது

இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து
கடலால் புலம்பெயர்க்கப்பட்டிருக்கலாம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
புலம்பெயர்வு என்பது நிகழும்
அது இயற்கையின் விதி

அகிலமெங்கிலும் நிகழும்
அயராத புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இமயத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை
என்று கூறி விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்

200408 தெய்வீக ராகம்


தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்

தெளிவான பாடல்
கேட்பாரோ இல்லை

எறிந்தவர் நெஞ்சில்
தவறொன்றும் இல்லை

ஏன் இந்த ராகம் - அவர்
எச்சிலில் கரைந்தது

தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்
கிடந்தால்தான் என்ன
அது தெய்வீக ராகம்

தெய்வத்தின் செவிகள்
எப்போதும் உண்டு
எப்போதும் இருந்தால்
அதன் அருமைக்கு இழுக்கு

இப்போது வந்து
எடுத்தள்ளி அணைத்து
தெய்வீக ராகம்
மனக் கண்ணீரில் கழுவ

தெய்வீக ராகம்
தெளிவான பாடல்
தெய்வத்தின் மடியில்
ஆராரோ ஆரிரரோ

புலம்பெயராத உணர்வுகள்


எத்தனைக் காலம் நான் ஏங்கினேன்
எத்தனைக் கனவினில் மூழ்கினேன்
எத்திசை நோக்கினும் நீயின்றி
என்விழி கண்டது வேறில்லை

அத்தனை ஆசையும் தேக்கிவைத்து
அன்பே நானின்று ஓடிவந்தேன்
பித்தனைப் போலே ஆடுகின்றேன்
பேசு உன் மொழியில் சீராவேன்

முத்தங்கள் வேண்டுமென் இதழுக்கு
முந்தானை வேண்டாமுன் முகத்துக்கு
ரத்தினப் பேழையில் மதுவுண்ண
ரதியே பொன் மாலைகள் மயங்கட்டும்

மொத்தமாய் அள்ளியென் தோள்சேர்த்து
முடியாத கவியொன்று நான்பாட
முத்தமிழ்ச் சுவையேயுன் விழிமெல்ல
முகிழட்டும் முகிழட்டும் தேன்சிந்த

ஜாடையில் நீ இள ரோசாப்பூ
ஆடைகள் கட்டிய தாழம்பூ
ஓடையில் ஓரிரு ஊதாப்பூ
ஓடுதல் போலவுன் விழியழகு

கோடையில் கொட்டிடும் நீரருவி
கூந்தலாய் வந்ததோ பேரழகி
நாடிநான் தவிப்பது போதுமடி
ஓடிவா ஓடிவா தேவன் மடி

வளைகுடா நாட்களோ துயரமடி
வருமானம் வாழ்வை மேயுதடி
விலையாக உயிரைக் கேட்குதடி
விடியாத இரவுகள் ஈனமடி

கொஞ்சமே போதும் பொருளாக
கொஞ்சலே வேண்டும் வாழ்வாக
உயிரின் இழைகள் காயவைத்து
தரியில் பட்டாடை நெய்வதில்லை

காதலர்தின வாழ்த்துக்கள்


வீதி வரப்புகளில்
சாலைச் சோலைகளில்
முற்றி முடியாத
சாயுங்காலங்களில்
நெஞ்சுநிறை
பிஞ்சுக் காதலர்கள்...

சிரித்துச் சிரித்து
செவ்வானம் பூத்தால்
பிழையா?

முத்தமிட்டு முத்தமிட்டு
முத்த இதழ் வெளுத்தால்
தப்பா?

பூக்கரம் வளைய
தேகவாசம் கமழ
கட்டியணைத்து
நரம்புநதி ஜதிபாடினால்
தவறா?

அதையும் தாண்டிய
அவசரச்
சரசமென்றால்தானென்ன
குற்றமா?

சுத்தக் கருநாடகமா
நாம் நாகரிகப் போலிகளா

ராக்கெட் வானில்
சிறகசைக்கும்
கணியுகக்
குறுந்தகடுகளல்லவா

உண்மைதான் காதலர்களே
காதலில் எதுவுமே
பிழையில்லைதான்
முறைப்பது பழைமை

தப்பில்லைதான்
தடுப்பது வயிற்றெரிச்சல்

தவறில்லைதான்
தூற்றுவது துரோகம்

குற்றமில்லைதான்
மறுப்பது காட்டுமிராண்டித்தனம்

ஆயினும்
ஒரு சிறு பொறி மின்னல்
கொளுத்த வருகிறேன்
உங்கள் எண்ணப் பேழையில்

அம்மா அப்பா
அக்கா அண்ண‌ன்
தங்கை தம்பி
நண்பர் உற‌வின‌ரிருக்க
எதைச் செய்வோமோ
அதைத்தானே
பொதுவிட‌ங்க‌ளில் செய்வோம்

சில்மிசச் சாகசங்களைத்
த‌னியிட‌ங்க‌ளிலல்லவா
வெளுத்து வாங்குவோம்

உங்களையே உங்களுக்கு
அறிமுகம் செய்கிறேன்
வேறேதும்
ஔவை மொழியில்லை
காதலர்தின வாழ்த்துக்கள்

என் தங்கத்துக்குத் தாலாட்டு



பொன்மாலை வேளையில்
தவழ்கின்ற வெண்ணிலா
கண்ணான கண்மணி
உன்போலத் தவழுமா

பனிதூவும் காலையில்
பூக்கின்ற பூக்களும்
கனிவான உன்னெழில்
முகம் போல பூக்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ


முற்றாத மாலையில்
முகம்வீசும் தென்றலும்
நான்பெற்ற கண்மணி
உன் போல வீசுமா

வற்றாத கங்கையில்
செழித்தோடும் வெள்ளமும்
ஒப்பில்லாக் கண்மணி
உன்போல ஓடுமா

ஆரீராரீ.. ஆரீராரோ


கிளிபேசும் பேச்சிலும்
குயில்பாடும் பாட்டிலும்
தளிரான கண்மணி
உன் பாஷை கேட்குமா

மயில்தோகை விரிப்பிலும்
மான்தேக வனப்பிலும்
ஒயிலான கண்மணி
உன் வண்ணம் விளங்குமா

ஆரீராரீ.. ஆரீராரோ


உலகங்கள் யாவுமே
என் சொந்தம் ஆயினும்
உயிரான உயிரென்றும்
நீதானே கண்மணி

உயிர் நீங்கும் வேளையும்
உறங்காத கண்களில்
ஒளிவீசும் தங்கமே
உனைத்தானே தேடுவேன்

ஆரீராரீ.. ஆரீராரோ


அன்பே அன்பே
என் சொந்தமே
கண்ணே கண்ணே
கண் தூங்குவாய்

ஆரீராரீ.. ஆரீராரோ

மானே தேனே
தேனோடையே
பூவே பொன்னே
பூ முத்தமே

ஆரீராரீ.. ஆரீராரோ

உயிரே உயிரே
உயிர்த் தேடலே
உயிரில் ஊறும்
கவி வெள்ளமே

ஆரீராரீ.. ஆரீராரோ

மேதகு மனசாட்சி


யாரடித்தபோதும்
எனக்கு வலிப்பதில்லையே
அடடா
நீயடித்த பின்னர்
நிழலும் எழுவதில்லையே

ஊருரைத்த வசைகளேதும்
செவியிலில்லையே
உள்ளே
நீ இருந்து வதைப்பதென்னை
விடுவதில்லையே

சாட்சி சொல்ல
வந்திடாத சாட்சியமே
மனதின்
சன்னதியில் வீற்றிருக்கும்
ராச்சியமே

பேச்சில்லாமல்
பேசுகின்ற ஓவியமே
என்னைப்
பெற்றவளும் கண்டிடாத
காவியமே

வணக்கமென்று
கள்ளமனம் வணங்கும்போதும்
துளியும்
வணங்காமல் நிமிர்கின்ற
சத்தியமே

கணக்குமூடிக்
கைகழுவி மறந்ததையும்
உள்ளே
கணக்கு வைத்துப்
பழிதீர்க்கும் தீச்சுடரே

எனக்கு மட்டும் சொந்தமான
குருகுலமே
நெஞ்சில்
ஏணிவைத்து ஏற்றிவிடும்
திருக்கரமே

துணைக்கு வந்த எல்லாமும்
தொலைந்தபோதும்
என்னைத்
தொட்டணைத்துத் துணை நிற்கும்
உயிர்த் துணையே

அன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்


மாப்பிள்ளை இல்லாமலே பாகிஸ்தானில் கல்யாணம் ஒன்று நடந்தது என்று புகாரி ஒருமுறை சொன்னார். அதே போல, நூலாசிரியர் இல்லாமலேயே, புத்தக வெளியீடு ஒன்று நடந்து முடிந்தது, சென்னை மயிலாப்பூரில்.

ஆனாலும், கவிஞர் புகாரிக்கு எந்த ஒரு மனக்குறையும் ஏற்படா வண்ணம் விழா நேர்த்தியாகவே நடந்து முடிந்தது.

இதை ஒரு இலக்கியக்கூட்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஒரு சைபர் புத்தகக் கடைக்கு என்ன விதமாக விழா செய்தால் பேசப்படுமோ, அதை நேர்த்தியாக செய்து, இணையத்துக்கு வர்த்தகத்துக்கு மிக முக்கியமான eyeball pull லுக்கு வழி செய்த விதத்தில், நிகழ்ச்சி பொறுப்பாளர் பா.ராகவனின் சாதுரியம் தெரிகிறது,

வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் ப்ரொஃபைலும் அதை உறுதிப் படுத்துகின்றன.

விழா நடந்தது, வழக்கமாக சங்கீதக் கச்சேரிகள் நடக்கும் ராகசுதா அரங்கம்.

கடவுள் வாழ்த்து பாடியவர், கல்யாணி மேனன். அவரேதான், ராஜீவ் மேனனின் தாயார்.

குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கியவர், மானசரோவர் நிறுவனத்தின் தலைவர் திரு,சசிகுமார் நாயர் அவர்களின் துணைவியார்.

இது ஒரு இரட்டை விழா. மானசரோவர் இணையத்தளத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றியவர், பத்திரிக்கையாளர் மதன். புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் , ஏ. நடராஜன். இந்த இரு விழாக்களுக்கும் தலைமை உரை ஆற்றியவர் மூத்த எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள்.

விக்கிரமன் வழக்கம் போல, சுத்தத் தமிழில் பேசி, கூட்டத்தினரை நெளியவைக்காமல் கலோக்கியலாக பேசி கைத்தட்டலை அள்ளினார். முடிக்குமுன்னரே சிலர் கைதட்டியதை அவர் கண்டு கொள்ளவில்லை. இருந்திருந்தால், சற்று விரைவாகவே பேச்சை முடித்திருப்பார்.

அடுத்து இணையத்தளத்தை துவக்கி வைத்து பேசிய மதன், இணையத்தில் , புத்தகங்கள் விற்கும் சாத்தியத்தை பற்றி பேசினார். அவரது வழக்கமான தனி முத்திரை இதிலும் இருந்தது.ஏற்கனவே இருக்கும் பல இணையத்தளங்களுக்கு மாற்றாக இது அமைந்தால், இது பலத்த வெற்றியை தரும் என்று சொன்னவர், ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையிலேதான் அதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால், செய்யத் தயார் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. மேடையில் அமர்ந்திருந்த . பா. ராகவன் அதை உன்னிப்பாக கவனி த்துக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாருக்கு தெரியும் எந்த புற்றில் எந்த பாம்போ ? :-)

புத்தகங்களை பற்றி பேசியவர், விழாக்களுக்கு செல்வதில் கைதேர்ந்த ஏ. நடராஜன். சங்கீத விழாவானாலும் சரி, புத்தக வெளியீடானாலும் சரி, ஐந்து நிமிடப்பேச்சானாலும் சரி, ஐம்பது நிமிடப் பேச்சானாலும் சரி, அதற்கு ஏற்றார் போல, மிகவும் எளிமையாகவும் அதே சமயம் கருத்துக்களுடனும் பேச தன்னால், இயலும் என்று அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். குறிப்பாக, அவர் ஆறு புத்தகங்களை பற்றியும் சொன்ன ஒரிருவரி கமெண்ட்டுகள் அருமை.

நடராஜன் புத்தகங்களை வெளியிட, அதை பெற்றுக்கொண்டவர்கள், ஒளிப்பதிவாளர் கோபி நாத்,யுகபாரதி, ஆண்டாள் பிரிய தர்சினி, சின்னத்திரை இயக்குனர் விக்ரமாதியன், ரங்கராஜன் ( வண்ணராயர்),

எழுதிய எழுத்தாளர்களுக்கும் , சால்வை நினைவுப்பரிசு அளித்து கௌரவம் செய்தார்கள், பெற்று கொண்ட நாகூர் ரூமி, சொக்கன், வெங்கடேஷ் தவிர்த்து, இரா, முருகனுக்காக பரிசை ஏற்றவர் அவரது துணைவியார். சேவியரின் சார்பில், அவரது சகோதரர் மரியாதையை ஏற்றார்.

வாழ்த்துரை வழங்கியவர்கள், இயக்குனர் வசந்த், திருப்பூர் கிருஷ்ணன், அகிலன் கண்ணன் போன்றவர்கள்.வசந்த் ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே, பேச்சை முடித்து விட்டு கிளம்பி விட்டார், எனக்கு தெரிந்து வசந்த் இப்போது ஏதும் படம் செய்து கொண்டிருப்பதாக தெரியவில்லை, சினிமாகாரவுக என்றா கொஞ்சமாவது பந்தா வேண்டாமா? :-) . அடுத்து பேசிய, அகிலன் கண்ணன், அனைத்து நூல்களின் ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக பேசினார். அவர் புகாரி மற்றும் சேவியரை பற்றி பேசும் போது, அவர்கள் நூலில் இருந்த கவிதையை மேற்கோள் காட்டி பேசும் போது, அவர்கள் அந்த புத்தகத்தை படித்திருந்தார்கள் என்று தெரியவந்தது.

வாழ்த்துரையில் இறுதியாக பேசிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் உரை, நிகழ்ச்சியின் ஹைலட்டாக அமைந்தது. தெள்ளத்தெளிவாகவும், தன் அனுபவச்சாறின் சில துளிகளை கலந்து, மிக யதார்த்தமாகவும், சற்றே நகைச்சுவை உணர்வுடனும் அமைந்த இவரது பேச்சு, இவர் ஒரு பத்திரிக்கையாளர், விமர்சகர் மட்டுமல்லர், ஒரு திறமையான பேச்சாளர் என்பதையும் காட்டியது.

என் சொக்கன், ஆர். வெங்கடேஷ், மற்றும் ரூமி, அவர்களின் ஏற்புரை நிகழ்ந்ததுக்கு பின்னால், மானசரொவரின் துணை ஆசிரியர் நாகராஜகுமாரின், நன்றியுரையுடன், விழா இனிதே நிறைவுற்றது.

இந்த விழாவினை தொகுத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திரமவுலிக்கும் சால்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

கண்ணில் பட்ட, காதில் விழுந்த சில சுவாரசியங்கள்.

* விழாவுக்கு வந்திருந்த மற்ற சில பிரபலங்கள், மாலன், லேனா தமிழ்வாணன், பிரபஞ்சன், எஸ்.ஷங்கரநாராயணன், களந்தை பீர் முகம்மது, வானதி திருநாவுக்கரசு, அல்லையன் பதிப்பகத்தார், மவே சிவக்குமார், இன்னும் பல பிரபலங்கள்.

* எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பிரபஞ்சனின் எளிமையான பேச்சும், gestureஉம், சின்னப்பையன் போல இருந்து கொண்டு, மேடையில் காதல் பிசாசை பற்றி ரூமி சொன்ன போது, சற்றே கூச்சத்தில் நெளிந்த யுகபாரதியும். எதேச்சையாக மாட்டிய போனஸ்கள்.

* எழுத மட்டும் அல்ல, நன்றாக பேசவும் வரும் என்று நிரூபித்த நாகூர் ரூமி, சொக்கன், வெங்கடேஷ் அவர்களின் பேச்சுக்கள்.

* புத்தகம் வெளியாகும் போதே, மேடையில் வைத்து எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ராயல்டி செக், சபரி பப்ளிகேஷன் துவங்கி வைத்த ஒரு புதிய நடைமுறை

* தன் பேச்சுக்கிடையில் , திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், ஏன் .என் சிவராமனைப் பற்றியும், அ.ச.ஞா பற்றியும் சொன்ன ஒரு தகவல்.

* திசைகளை இணையத்தில் படியுங்கள், என்று கூவி அழைக்கும் பிட்நோட்டீஸ்களை வினியோகம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் பெண்.

அன்பன்
ப்ரகாஷ்,சென்னை