பச்சை மிளகாய் இளவரசி


நீதான் நீதான் நீயேதான்
என் பச்சை மிளகாய்
இளவரசி

நீளும் நாக்கின் நுனியோரம்
பொன் ஊசி உறைப்புச்
சிங்காரி

நாளும் பொழுதும் பாசம்தான்
நெடும் ஆயுள் வளர்க்கும்
நேசம்தான்

செல்லச் சிணுங்கல் பூங்குருவி
நீ உள்ளம் ஊறும்
பாலருவி

யாரும் உன்போல் இருப்பாரோ
மிகச் சின்னஞ் சிறிய
கன்னித்தாய்

தன்னை மகளாய் ஈன்றவனை
மன வயிற்றில் சுமந்து
பெற்றவளாய்

காலை எழுந்தால் உன்முகத்தை
என் கண்ணின் மணியே
தேடுகிறேன்

மாலை கவிழ்ந்தால் தளிர்மடியில்
என் மனதின் கிழிசல்
தைக்கின்றேன்

எல்லாம் உதிர்ந்த பூஞ்சோலை
அதில் சொக்கத் தங்கம்
பூத்திருக்கு

கல்லோ முள்ளோ காலடியில்
எனை அள்ளிக் கொள்ளும்
மாம்பிஞ்சு

பெண்ணைப் பெற்றவன் மகராசன்
தினம் பிறையின் மடியில்
பிறக்கின்றான்

பொன்னும் மணியும் யாருக்கு
ஒரு பெண்ணே வேண்டும்
உயிருக்கு

* (ஏப்ரல் 2004)

கனடாவே உயரந்தான்


கழுத்தெலும்பு ஒடிய ஒடிய
கண்ணுமணி விரிய விரிய
ஆச்சரியம் கூச்செறிய
அதிசயத்தைப் பாரு
இது கனடா சீயென் டவரு

உச்சிமேல உச்சி ஏத்தி
உலகத்தையே பாக்க வச்சு
கட்டி முடிச்ச ஓவியமிது
நீண்டு வளர்ந்த தாவரம்
இந்தக் கனடா தேசக் கோபுரம்

கோபுரந்தான் உயரமா
கனடாவே உயரந்தான்
கனடாவின் உயரத்துக்கு
அருமையான சிகரத்துக்கு
இந்தக் கோபுரமும் சாட்சிதான்

(கழுத்தெலும்பு...)

கூவிக் கூவிக் கொட்டும்
கணமும் ஓயாப் பாட்டு
நயாகராவின் நாதம்
இதயக் கதவு மோதும்
சுகம் ஆயுள் முழுதும் போதும்

நூறு நூறு மொழிகள்
வேறு வேறு இனங்கள்
ஊரு ஊராய்த் தேடு
ஒன்றாய் இங்கே பாரு
அது கனடா என்றே கூறு

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்
இது சொர்க்கத்தையே மிஞ்சும்

(கழுத்தெலும்பு...)

சட்டம் மதிக்கும் மக்கள்
தணிந்து பேசும் குயில்கள்
சத்தியத்தின் மேன்மை
சொல்லும் மனித இனங்கள்
ஒரு வஞ்சமில்லா மான்கள்

மேடைப் பேச்சு இல்லை
சாலை கோஷம் இல்லை
தூய கைகள் விரித்து
தெளிந்த நல்ல ஆட்சி
தினம் மேன்மை தானே மூச்சு

கவிஞர் அறிஞர் கூடி
அன்பும் அறிவும் கூட்டி
நேசக் கொடிகள் ஏற்றி
சட்டம் தீட்டி வைத்தார்
உலக ஒட்டு மொத்தம் வென்றார்

காற்றில் மூச்சில் கருணை
கனடா மண்ணின் மகிமை
கோடி அன்னை தெரிசா
கூடிச் சேர்ந்த அங்கம்
எங்கள் கனடா என்னும் தங்கம்

(கழுத்தெலும்பு...)

* (ஜீன் 2002)

*****

யார் இந்த பாரதிதாசன்


சோலையின் நடுவில்
சொக்கிடும் அழகில்
பூக்களைக் கண்டு
பூரித்து நின்றால் - அவன்
இயற்கை நேசன்!

அந்தச்
சோலையின் வேர்களில்
உழைத்தவன் இரத்தம்
ஓடுதல் கண்டு
உள்ளம் நெகிழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

தமிழெனும் மொழியில்
கவிதையின் வனப்பில்
நயங்களைக் கண்டு
நெஞ்சம் குளிர்ந்தால் - அவன்
தமிழின் பிரியன்

அந்தத்
தமிழெனும் அமுதில்
அசைகின்ற தேரில்
துடிக்கின்ற உயிரைத்
தனதெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

விதவைச் சிறையில்
வாடும் நிலவின்
வேதனை கண்டு
இதயம் கனத்தால் - அவன்
சமூக நண்பன்

அந்த
விதவை என்பவள்
முடிந்தவள் அல்ல
வேர்ப்பலாக் கனிக்கு
நிகரெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

சொல்லும் சொல்லில்
பொருளை வைத்துச்
சுவைபடச் சொல்லி
அறிவினைத் தந்தால் - அவன்
பாட ஆசிரியன்

அந்தச்
சொல்லின் உள்ளே
நெருப்பை உமிழும்
புரட்சிக் கருத்தைப்
பொதிந்து வைத்தால் - அவன்
பாரதிதாசன்

மனிதன் முகத்தில்
சாதியைத் தேடிச்
சாலை ஓரம்
சண்டைபிடித்தால் - அவன்
சாதிக்காரன்

அந்தச்
சாதியின் நரம்பை
வேரொடு அறுத்துத்
தூர எறிந்திடக்
கூர்வாள் தந்தால் - அவன்
பாரதிதாசன்

பிறந்தது முதலாய்ப்
பழகிய பழக்கம்
புகுத்திய வழியில்
வாழ்வினைக் கண்டால் - அவன்
குடும்பக்காரன்

அந்த
வாழ்க்கை வழியில்
மூடப் பழக்கம்
முற்றிலும் கொல்லும்
முரசினை ஒலித்தால் - அவன்
பாரதிதாசன்

பெண்மையின் மென்மையில்
பேரெழில் வனப்பில்
அதிசயம் கண்டு
ஆனந்தம் கொண்டால் - அவன்
காதலின் ரசிகன்

அந்தப்
பெண்களின் உரிமையே
பெரிதெனக் கண்டு
பாரினில் அவளைப்
போற்றிட எழுந்தால் - அவன்
பாரதிதாசன்

நாட்டை ஆள
நல்லவன் தேடி
ஓட்டுச் சாவடியில்
மைமச்சம் பெற்றால் - அவன்
தேசக் குடிமகன்

அந்தக்
கோட்டை ஆள்பவன்
ஓட்டை அரசியலை
ஊருக்குச் சொல்லி
உயர்வுக்கு நின்றால் - அவன்
பாரதிதாசன்

நாளும் பொழுதும்
மேற்கே பார்த்து
வாழும் வாழ்வை
மாற்றிச் சென்றால் - அவன்
பட்டணக்காரன்

அந்த
நாணம் கெட்ட
வாழ்வைப் புதைத்துத்
தமிழர் வழியை
உரக்கச் சொன்னால் - அவன்
பாரதிதாசன்

இறக்கும் முன்னே
சாதனை ஒன்றைப்
படைத்தே இறப்பேன்
என்றே நின்றால் - அவன்
நல்லதோர் மனிதன்

அந்தச்
சாதனை என்பது
பொழுதும் என்னைச்
சார்ந்தே இருப்பது
என்றே வாழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

(பாரதிதாசன் வையவிரி அவையின் 2003ம் வருட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

* (ஏப்ரல் 2003)

கடத்தப்பட்ட நகரங்கள்


ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள் ஒரு பிரகாசமான கவிதைக்கு வெளிச்சம் தந்ததென்னவோ உண்மை.


கஞ்சா கடத்தினால்
சிலமாதச் சிறைவாசம்
விமானம் கடத்தினால்
சிலவருடச் சிறைவாசம்
செழித்துக் கொழித்த சில
நகரங்களையே கடத்தினால்?

ஆம்!
உலகின் தலைசிறந்த
வட அமெரிக்க நகரங்களுள்
சிலவற்றை
சிரஞ்சீவிமலை பெயர்த்துச்
சிவ்வென்று பறந்த அனுமந்தனாய்க்
கடத்திக்கொண்டுபோய்
கூடுவாஞ்சேரியும் கிண்டலடிக்கும்
ஓர் ஆதிவாசிப் பொட்டலில்
அப்படியே போட்டுவிட்டு
அநியாயமாய்ப் பறந்துவிட்டது
மின்சாரம் என்னும் துரோகி

வினோதம் என்னவென்றால்
கடத்தப்பட்ட நகரங்கள்
கடத்திய கொடுங் கள்ளன்
மின்சாரத்திடமே
ஆயுளுக்கும்
சிறையிருக்கக் கோரி
கண்ணீர்விட்டுக் கதறின

இருட்டுப் பற்கள்
மயான நிசப்தமாய் நெறிய
சத்தமில்லாமல்
சாத்தானாய்ச் சிரித்தான்
மின்சாரம்

ஆசைகளே தேவைகள் -அந்தத்
தேவைகளே மனிதர்கள்

'என்னை எடுத்துக்கோ
ஏய்... என்னையும் எடுத்துக்கோ'
என்றே அழகுகாட்டி
அங்காடிச் சாளரங்களில்
வீற்றிருக்கும்
தேவையில்லாப் பொருட்கள்
ஆசை வாகனங்களேறி
நம்வீட்டு
அலமாரிகளை நிறைக்கும்
கதையல்லவா நம் கதை

இந்த நவீன நாட்களில்
சூரியனைக் கிள்ளித்தரும்
செயற்கை நிலாக்களாய் அணிவகுக்கும்
சாலை விளக்குகள் முதல்
வாழ்வின் எல்லாமுமாகிப்போன
இணையம் வரை
கொடுத்துக் கொடுத்து
மனிதவாழ்வை அடிமைவாழ்வாக்கிய
மின்சாரம் என்னும் மகா பூதம்
ஒருநொடி தொலைந்துபோனால்
உயிர் தொலைத்தப் பரிதவிப்பில்
தேடியோடும் பிணங்களாய்
மக்கள்

பெண்டாட்டி
பிறந்தகம் போனால்
வரும் வரை காத்திருக்கலாம்
கண்ணில் பொங்கும்
புதுப்பிக்கப்பட்ட காதலோடு

மின்சாரம் போனால்?

வங்கிநிறையப் பணமிருந்தும்
ஓர் அட்டையைத்தானே
வைத்திருந்தோம்

காசுகேட்டு நின்றால்
பேசாமல் நின்று
நம்மைப்
பிச்சைக்காரனாக்கிய
வங்கி இயந்திரத்தின்
பேச்சை நிறுத்தியது யார்?

சின்னச் சிறகடித்து
வானம் பாய முடியாத
கோழிக்குஞ்சுகளாய்
மின்தூக்கிப் பருந்துகளிடம்
அகப்பட்ட அவலங்கள்

'ஆயிரத்தெட்டாம் திருப்படி
சரணம் பொன் மின்சாரம்' என்று
அடுக்கு மாடிப் படிக்கட்டுகளில்
அழுகுரல்கள்

உணவை
விசமாய் மாற்றித்தரும்
குளிரில்லாப்பதனப் பெட்டிகள்

தண்ணி இல்லாக்
கழிப்பறைக் கொடுமையை
எங்கே கொண்டுபோய்க்
கழிப்பது?

இந்தத்
திருடர்களின் சுதந்திரதினத்தில்
மிரட்டும் இருட்டுக்குப் பயந்து
அவர்களும் பதுங்கிவிட்டார்கள்

உங்கள் பிரச்சினை உங்களோடு
எங்களுக்கு தொலைக்காட்சியில்
சித்திரப்படம் காட்டு என்று
உருண்டுபுரளும் இரண்டுவயது
புதிய சுகவாசிகள்

இப்படிப்
பட்டியலிட்டால்
முடிந்துபோகும் அவதிகளா
மின்சாரமில்லா அவதிகள்?

ஆனாலும்
இந்த ஓர் இரவு மட்டும்
ஊருக்குப் போய்வந்த
அடிமன நிறைவு

மெல்ல மெல்ல
இருட்டைப் பழகிய கண்கள்
தங்களின் உட்பாவைக்குள்
ஊரை உயிர்ப்பித்துக்கொண்டன

நேற்றுவரை
கண்ணில் தெரியாத வானம்
ஆயிரம் கவிதைகள் சொன்னது

மெல்லிய ஓசைகளின்
இனிய காதலைக்
காதுகள் அங்கீகரித்து
மோகம் கொண்டன

இத்தனையையும்
தின்றுவிட்டுத்தானே
மின்சாரம் என்ற பக்காத்திருடன்
நம்மை உள்ளே அடைத்துத்
தாளிட்டுக் கொள்கிறான்

அந்தச் சிறையில்
காலமெல்லாம்
கம்பி எண்ணிக்கொண்டே
நம் நவீன வாழ்க்கை

* (ஆகஸ்ட் 2003)

நியூயார்க் நியூயார்க்


நீர்க்குடங்கள் கொட்டும்
நயாகராவின் கரைகளிலிருந்து
கட்டிடங்கள் கொட்டிக்கிடக்கும்
நியூயார்க் சென்றுவந்தேன்

உலகம் சுழல்வது ஒருபுறம் இருக்க
நியூயார்க் மட்டும்
தனியே சுற்றுகிறதோ
என்ற ஐயம் வந்தது

கடுகாய்த் தொலைந்துபோய்
கற்சிலையாய் மீண்டுவந்தேன்

திரும்பும் திசையெல்லாம்
திமிர்பிடித்தக் கட்டிடங்கள்
வானத்தை ஏளனம் செய்ய
மேகத்தை மறிக்க
மின்னலைத் தடுக்க
இடிகளைப் பிடிக்க
அடடா... நின்று நோக்க
பிரமிப்பாய்த்தான் இருக்கிறது

கட்டிடங்களல்ல அவை
எழுந்து நிற்கும் வீதிகள்

உலகின் அதி உயர
கட்டிடம் எழுப்பும்
நீயா நானா போட்டியில்
பில்லியன்களை
சிரபுஞ்சி மழையாய்க்
கொட்டிக்கொட்டி
ரொட்டிக்கு அலையும்
பட்டினிகள்
உலகெங்கிலும் செத்துமடிய
வானுடைக்கும் கோபுரங்களை
எழுப்பிவிட்டுக்
காலியாய் வைத்திருக்கும்
தர்ம தண்டம் உலக மகா நட்டம்

கோடையின் கொடையாய்க்
குவிந்த மக்கள் தம் முகங்களில்
மத்தாப்பு வெளிச்சங்களோடு
அலைவதைக் காண
முடிந்துபோகாத திருவிழா
முகத்தைக் காட்டுகிறது

கூட்டக் கூட்டக் குவியும் குப்பை
கொட்டக் கொட்ட அள்ளும் சேவை
நியூயார்க் அதிசயங்களில் ஒன்று

கண்களைப்
பிடித்துத் தள்ளிக்கொண்டு
இரவில் ஒளிப் புயல் வீசுகிறது

கட்டிடங்கள் அத்தனையும்
நட்சத்திரங்களைக்
குவித்துவைத்தக் குவியல்கள் ஆக
வானத்தைச் சுருக்கிக் காட்டும்
கண்ணாடியானது பூமி

உலகின் மிகச்சிறந்த ரொட்டி
இங்குதான் கிடைக்கும்
என்ற கடையோர வாசகத்தால்
கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டு
வெடித்துச் சிரித்தேன்

ஏய்ப்பும் திருட்டும்
நான்தான் என்ற ஜம்பமும்
இங்கே சுவாசங்களல்லவா

எதைத் தொட்டாலும்
எதனுள் நுழைந்தாலும்
பேய்க்காற்றில் வாழையாய்ப்
பெரிய டாலர்கள் கிழிய...

வீதியில் அலைந்தவர்களை
ஊடுறுவிப் பார்த்தால்
முகங்கள் அல்ல
டாலர்களே தெரிகின்றன

இரு தினங்கள்
சுற்றித்திரிந்ததும்
இனி என்ன செய்ய்வதென்ற
கேள்வி வாளெடுத்தது

ஆம்
இம்மாதிரி வியப்பின் ஆயுள்
இரு தினங்கள்தானே

நடப்பதறியா நடையும்
ஓடுவதறியா ஓட்டமும்
சுறுசுறுப்பு நியூயார்க்கின்
சுகங்கள்

முகம் பார்க்கவும் அவகாசமின்றி
இப்படி ஓடும் மக்கள்
எப்படித்தான் வாழ்க்கையைப்
பார்ப்பார்களோ

மஞ்சள்நிற வாடகை வாகனமா
வெள்ளைநிறக் காவலர் வாகனமா
எது அதிகம் என்று
முடிவுசெய்ய முடியவில்லை சாமி

உலகின் தலைநகரம் என்றார்கள்
உலகின் மிகப் பெரிய
வணிக அங்காடி என்றார்கள்
வியப்பாகத்தான் இருந்தது

உலகின்
அமைதிகாக்கும் கருணைக் கோட்டம்
இங்குதானா என்று கேட்டுவிட்டால்
வியப்பு அவர்கள் முகத்தில் சூழுமோ
அல்லது.... வீராப்பாய் ஓர்
அமெரிக்கப் பொய்வந்து வீழுமோ!

* (ஆகஸ்ட் 2004)

கழுத்துக்குமேல் எதுவும் இல்லாதவன்


சமீபத்தில் டொராண்டோவில் நடந்த பழைய மாணவர் அமைப்பின் விழாவிற்குச் சென்றிருந்தேன் இலங்கையின் இன்றைய சூழலில் பாடசாலைகளின் நிலை சற்று சிக்கலே என்று நான் கூறித்தான் அறியவேண்டுமென்பதில்லை. ஆனால், அதன் பழைய மாணவர்கள் அமைப்பு அப்பாடசாலைகளைத் தூக்கி நிறுத்தும் பொற்பணி ஏற்றது கண்டு ஒட்டுமொத்தமாய் என் உள்ளும் புறமும் ஒன்றாகப் புல்லரிக்கக் கண்டேன். அந்த உயர் நன்றி எனக்குள் ஈந்த உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதை நான் ஒரு மகத்தான கடமையாகக் கருதுகிறேன்

கல்லாதவன்
கழுத்துக்குமேல்
எதுவும் இல்லாதவன்

இல்லாமை என்பது
கல்லாமையேயன்றி
வேறில்லை காண்
.

பள்ளிப் பாடங்களால்
நம் மூளை வயல்களிலும்
பிஞ்சு மனத் தோப்புகளிலும்
அள்ளிப் பதியனிட்டு
அன்றாடம் வளர்த்தெடுக்கும்
அறிவுக் கொழுந்துகளோ
ஆயிரம் ஆயிரம்

அத்தனைக் கொழுந்துகளிலும்
அற்புதப் பசுமை காட்டும்
சொர்க்கக் கொழுந்து யாதெனில்
அது கற்பதைப் போற்றுவோம் என்ற
கற்பூரச் சிந்தனைதானே
.

எழுத்தறிவித்தவன்
இறைவனென்றால்
எழுத்தறிவிக்க
எல்லா வசதிகளையும்
அள்ளிப் பொழியும்
மேகமனக்காரன் யார்

இறைவனுக்கெல்லாம்
அவனே இறைவனென்றால்
அது மிகையாகுமா
.

பத்து ரூபாயைப்
பசியால் வாடும்
பிச்சைக்காரனுக்கு இட்டால்
அவனின்
அந்த வேளைப் பசியே அழியும்

ஆனால்
அதில் பாதியையேனும்
கல்வியின் வேர்களில்
உரமாய் ஊட்டினால்
உலகில் பிச்சைக்காரர்களே
இல்லா வாழ்வல்லவா மலரும்
.

உணவு தந்தால் வாய் திறக்கும்
ஓசை தந்தால் செவி திறக்கும்
கல்வி தந்தால்தானே
நம் கண் திறக்கும்

தாய்க்குச் சோறிடுவதும்
கல்விக்கு நீரிடுவதும்
வேறு வேறு என்றாகுமா

கல்வி வளர்க்காத
செல்வமும் வீரமும்
கடலில் வீசிய
உப்பென்று ஆகாதா
.

ஒரு தந்தை தாயாவதில்லை
அந்தத் தாயும் முற்றாய்
ஒரு தந்தையாவதென்பது
நிகழ்வதில்லை

ஆனால்
நம் பாடசாலைகளைப்
பாருங்கள்

பண்பினை ஊட்டுவதில்
பொன்னழகுத் தாயாய் - நல்ல
அறிவினைப் புகட்டுவதில்
பேரருள் தந்தையாய் - நம்முன்
ஓங்கி உயர்ந்தல்லவா கிடக்கிறது
.

பழைய மாணவனே
ஒரு பள்ளியின் அழியாச் சொத்து

அவன்தான்
அந்தப் பழைய கூடத்தைப்
பள்ளிக்கூடம் என்று
அழைக்கக் கிடைக்கின்ற
அற்புதச் சான்று

அவனை
அள்ளித்தராவிடில்
அது பள்ளியென்று ஆகுமா
.

பழைய மாணவர்கள்
ஒன்றாய்க் கூடி
விம்மும் நன்றிப் பெருக்கோடு
தம் பள்ளிக்கு விழா எடுக்கும்
வைரப் பொழுதுகளிலெல்லாம்

ஆயிரமாயிரமாய்ப் பொருளிறைத்துத்
தம் பள்ளியை
இமாலய வெள்ளிப் பனிமலைக்கு
உயர்த்திச் சிரிக்கும் அந்த
உத்தமப் பொழுதுகளிலெல்லாம்

என் உள்ளம்
சீனிக் கண்ணீரில் நீந்திச்
சத்தேறி மிளிர்கிறது
.

நம் வாழ்க்கை வளர
நல்ல சந்ததி தழைக்க
இந்த ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றாய் உயர

அந்தக் கல்வியின்
விரிந்த மடிகளில்
கணக்கற்றுத் தினந்தோறும்
நாம் அள்ளியள்ளிக் குவிப்போம்

நல்ல
நன்றியின் பெருமை தரும்
வீர மதர்ப்போடு
நாம் அள்ளியள்ளி இறைப்போம்

நன்றி

* (செப்டம்பர் 2002)

ஆயிரம் தீவுகள்


கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன.

ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் இந்த ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.


வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யௌவனம் ததும்ப
நனைந்து நனைந்து
மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடிய தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா...
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே
நானும்
சிலிர்ப்புக்குள்
சிக்கிக்கொண்டேன்

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்கலில் கண்டேன்
பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்
அருவிகளின் மாநாட்டைக்
குற்றாலத்தில் கண்டேன்

தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

இயற்கையே...
என்றென்றும் உனக்கு என்
முதல் வணக்கம்

தீவுகளை இணைக்கும்
சின்னஞ்சிறு பாலம்
இங்குமட்டுமே
என்றறிந்தபோது...

விலகி விலகி
என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போடப்
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற
ஏக்கம் எழுந்தது

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால்
நதிக்கு மகுடமா
என்றொரு
பட்டிமன்றமே நடத்தலாம்

அப்படியோர் அழகு
அந்த லாரன்ஸ் நதிக்கு

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும்
தீவுகள்... தீவுகள்...

அவற்றில்
ஓடிப்போய் நின்று...
ஓஹோ வென்று
உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக்
களித்த நாட்களை
மனம் இன்று
ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின்
சுந்தர ஊர்வலம்?

திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கிய
தீவுகளே... தீவுகளே...

நீங்கள்
நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து
என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ...

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில்?

(ஆகஸ்ட் 2000)

உயிர் முத்தங்கள் - பச்சைமிளகாய் இளவரசி


மனதை
உயிர்ச் சிமிழில்
இட்டுக்கொள்ளும்
குங்குமங்களுக்கும்

உயிரை
மனத் திரியில்
ஏற்றிக்கொள்ளும்
தீபங்களுக்கும்

நடந்தான் நடந்தான்


இருட்டுகள் திரண்டு
இரக்கத்தைக் கழித்து
இறுக்கிக் கட்டிய
இருட்டோ இருட்டு

வெளிச்ச தாகத்தை
விக்கலாய்க் கக்கவும்
வக்கற்ற நிலையில்
அவன் உயிர்

காதுக் கதவு தொடக்
காற்றேறிய ஓசைகள்
கால்தடுக்கிக் கால்தடுக்கிக்
கருச்சிதைவாக...

கண்முன் நகரும்
வண்ணக் காட்சிகள்
கருந்திரை விரிப்பில்
கரியோவியங்களாய் ஓட...

நாசிக்குள் நுழைந்த நரக நாற்றமும்
சாதிக்க வழியற்று விக்கி விக்கி அழுதபடி
வெளியேறிப்போக...

ஈரம் செத்த நாக்கு ருசிமொட்டு கெட்டு
பல்லிடுக்கில் வெட்டுப்படப்
பரிதவிக்க...

துக்கத்துக்கும்
தூக்கத்துக்கும் இடையில்
தூது சென்ற எண்ணங்கள்
தூள் தூளாகித் தொலைந்துபோக....

மனக்குகைகளில்
பயமென்னும் வவ்வால்கள்
கீச்சுக்கீச்சென்று கத்திக்கொண்டு
அலையோ அலையென்று
அலைந்தன

ஆம்
மனிதனை முதலில்
பயம்தானே
பாசத்தோடு பற்றிக்கொண்டு
பின்னடைய மறுக்கிறது

ஆயினும்...
காலமென்னும் கோரைப்பல்லோ
பயத்தைப் பக்குவமாய் மென்று
செரிமானச் சிறை தள்ளும்
வித்தை அறிந்த வித்தகனாயிற்றே

தட்டில் விழும் பிச்சையாய்ச் சேர்ந்த
சில்லறைத் தைரியங்கள்
தூரத்தில் மினுக்கும்
நட்பு நட்சத்திரமாய் அழைக்க....

தானாகவா விட்டோடும்
இருட்டை
நீயன்றோ விரட்டவேண்டும்
என்ற ஞானக்கரம்
பிடறியில் விரலச்சு பதிக்க...

எழுந்து
மெதுவாய்
ஓர்
அடி
எடுத்து
வைத்தான்...

அம்மா...
காலில் பட்ட கல்லடியில்
நகங்கள் உடைந்து இரத்த நதி

இனியோர் அடியும் எடுத்து வைப்பதா
ஊசலாடும் உயிரையும்
ஒழித்துப் போடுவதா என்று
மூளை அடுக்கிலிருந்து
அபாயச் செய்திகள்
அவசர கதியில் அலறின

மனமோ
அட...
இன்னும் எனக்குள்
இரத்தமுண்டோ என்று
சந்தோசம் கொண்டது
கோபத்தோடு....

அடுத்த
அடி
எடுத்து
வைத்தான்...

அய்யோ....
இப்போது
இடறியவன் விழுந்தது
பாம்புகளும் தேள்களும்
நட்டுவாக்காலிகளும் கடித்துக் குதறும்
படுபாதாள நரகத்தில்

திரும்பி ஓடடா மடையா என்று
அறிவு துப்பாக்கி ரவைகளாய்
இராணுவ ஆணையிட்டது

மனமோ...
தரையைப் பெயர்த்து வானத்தில் வீசவும்
வானத்தை உடைத்துக் கடலுக்குள் புதைக்கவும்
தன்மான வெறிகொள்ள....

எழுந்தான்
நரம்புகளில் புகுந்த
ஆத்திரம் முறுக்க...

நடந்தான்
எலும்புகளில் நுழைந்த
மும்முரம் விரட்ட...

கால்களில் கற்கள் அடிபட்டு
கோவென்று அலறின

மிதிபட்ட தளத்திலேயே
விசஜந்துக்களெல்லாம்
மறுபிறப்பில் பார்த்துக்கொள்கிறேன்
என்று சபதமிட்டுச் செத்தன

நடந்தான்
நடந்தான்

அட...
வெளிச்சம்!

முன்பு எப்போதும் கண்டிராத
மகோன்னத வெளிச்சம்!

சுட்ட வீரப்பன் வேண்டுமா?


சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

அதிரடி மரத்தின்
கிளைகளிலிருந்து
நழுவி விழுந்த வினாவிற்குத்
தம் பெருங்குரல் சுருக்கி
ஓசை மண் ஒட்டாமல்
விடை மொழிந்திருப்பார்
முன்பே யாரோ

உலகறிய இவ்வேளையில்
ஒலிபெருக்கிகள் கதறும்போது
கீழே நிலத்தில் நிற்கும்
அறிவுக் கண்கள்
கிழக்கு வான் காலையாய்த்
திறந்து கொள்கின்றன

சுட்ட வீரப்பன் நம்மூரில்
சட்டென்று ஆகிவிடுகிறான்
தியாகி

ஊதி ஊதி
உணர்ச்சி அடுப்புகளில்
மகாத்மாவாகக்கூட
சுடர் நீட்டக்கூடும்

பத்திரிகை பசிக்கு
ஒன்றிரண்டு கூட்டோடு
கொஞ்சமாய் அப்பளம் நொறுக்கி
அரைவயிறு நிறையலாம்
அவ்வளவுதான்

சுடாத வீரப்பன்
அரசியல் விசமிகளின்
அடிமடி குதறும் வியாதி

சட்ட வளாகங்களில்
சத்தமாய்ப் பேசப் பேச
கூவத்தில் மத்தாடக்கூடும்
மூக்குவெடிக்க

ம்ம்ம்....
இவ்வளவு பொறுத்த காவல்
இன்னும் கொஞ்சம்
பொறுத்திருக்கலாம்
தானே செத்திருப்பான்
வயதான பழம்

அடுத்து....

சந்தனமில்லாத ஒரு
மனிதக் கடத்தலோடு
காட்டு மத்தியிலிருந்து
கடிதில் வந்து சேரலாம்
ஓர் தகவல்
அடுத்த வீரப்பன் யாரென்ற
அறிவிப்போடு

கூட்டு அதிரடிப்படை
வீட்டில் கொஞ்சம்
பாட்டு கேட்கும் அதுவரைக்கும்

காட்டுராணி கோட்டையிலே
காவல்கள் இல்லை
அங்கே
காவல் காத்த நாட்டுத் துரோகி
உயிருடன் இல்லை

சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

வீரப்பன்கள் வேண்டாம்

ஐயா அப்துல் கலாமோடு
அவசரகதியில்
ஈராயிரத்து இருபது நோக்கி
நிறைய
நடக்கவேண்டி இருக்கிறது
இந்தியா

கொடைமிளகாய் கண்ணழகா


கொடைமிளகாய் கண்ணழகா
கொத்தவரும் மூக்கழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா

தொடைமீறும் நடையழகா
தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
எஃகிரும்புத் தோளழகா

மீசைவரும் மணியோசை
மேலுதட்டில் கேட்குதடா
ஓசையில்லாச் சொல்நூறு
உதட்டோரம் ஏங்குதடா

ஆசைகொட்டிப் பேசயிலே
அடிவயிறு ஊறுதடா
மேசையிலே பூங்கொத்தா
மனசெல்லாம் நிறையுதடா

சின்னஞ்சிறு விரலெடுத்து
சிக்கெடுக்க வருகின்றாய்
இன்னுமின்னும் வேண்டுமென்று
இனிப்பள்ளித் தூவுகிறாய்

எண்ணயெண்ண இனிக்குதடா
இதயவெளி மணக்குதடா
தின்னத்தினம் திகட்டாத
திங்கள்முகம் யோகமடா

விழுதாடும் ஆலமரம்
தானூஞ்சல் ஆடுதடா
உழுதநில எழிலான
உன்னழகைக் கொஞ்சுதடா

நழுவிவிழும் விழித்துளிகள்
நன்றிமழை கொட்டுதடா
பழுதில்லாப் பிள்ளைபெற
புண்ணியமோ கோடியடா

சுவர்களல்ல அறைகளல்ல...

நான் கனடாவுக்கு 1999ல் குடிபெயர்ந்தேன். வந்த ஈராண்டுகளின் நிறைவில் குட்டியாய் ஒரு நகர்வீடு (டவுன் ஹவுஸ்) வாங்கினேன்.

அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்து பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது என் மகள் பள்ளியில் வரைந்த ஒரு பென்சில் ஓவியம் என் கண்ணில் பட்டது. அது ஓர் அழகான வீட்டின் படம்.

ஒரு படத்தைக் கண்டதும் அதன் கீழ் பொருத்தமாக ஓரிரு வரிகள் எழுதுவது எனக்குப் பிடித்தமானப் பொழுதுபோக்குகளில் ஒன்று.

அன்று அந்த ஓவியம் அந்தச் சூழலில் என்னைக் கவரவே அடுத்த நொடி அந்த ஓவியத்திற்கும் ஒரு வரியை எழுதினேன்.

அந்த வரியை என் மகளிடம் கொடுத்து ஓவியத்தின் கீழ் எழுதச் சொன்னேன். அது என் வீட்டுச் சுவரை அலங்கரித்தது.

வீட்டிற்கு வருபவர்கள் அதைப் பார்வையிடும் போதெல்லாம் ஒரு புன்னகையோடும் மன ஒப்புதலோடும் அதைப் பாராட்டுவார்கள்.

”சுவர்களல்ல... அறைகளல்ல... வசிப்போரின் கூட்டுயிரே வீடு...”

இதுதான் அந்த வரி. பின் சில காலம் கழித்து அந்த வரியையே முதல் வரியாய்க் கொண்டு ஒரு முழுக் கவிதையும் எழுதினேன். அதை ”பச்சை மிளகாய் இளவரசி” என்ற என் கவிதை நூலில் இட்டு கனடாவில் வெளியிட்டேன்.

அந்த நூலுக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் அணிந்துரை தந்தார். ”தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை” என்ற பாராட்டை அந்த அணிந்துரை அன்போடு ஏந்தி நிற்பதை என் நூலில் காணலாம்.

*

சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின்
கூட்டுயிரே வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு

துயரறிந்து விழிகசிந்து
அயலவர்க்கும்
அன்புதரும் வீடு

பகைவருக்கும் முகமளித்து
வருகவென்று
மனம்திறக்கும் வீடு

யாருக்கும் நிழலாகும்
எந்நாளும்
ஒளிவீசும் வீடு

ஊருக்கு வளம்சேர்க்கும்
உலகுக்கே
சான்றாகும் வீடு

பேருக்கு வாழாமல்
புத்தகமாய்
வாழுமிந்த வீடு

பூட்டுக்குள் பலியான
வீட்டுக்கும்
சாவியாகும் வீடு

அன்புடன் புகாரி

விடுபட்ட நரம்புகளில்
விட்டுவிட்டும்
பொடிபட்ட எலும்புகளில்
புதைபட்டும்

இடிபட்ட மத்தளத்தின்
துடியதிர்வில்
விடைகேட்டு நடுக்கத்தில்
எனது உயிர்

கிழிபட்ட நெஞ்சத்தின்
சந்துகளில்
கீறலிட்ட இசைத்தட்டின்
பாட்டாக

****
முதுமை


இளமொட்டுக் காலத்து
நினைவலைகள்
இடைவிடாத லயத்தோடு
பொழுதெங்கும்

காற்றடித்தச் சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்

சுருக்கத்தின் இடுக்குகளில்
சரிந்துவிழும்
சுவையான அனுபவத்தின்
பழங்கதைகள்

நான்கூட மழலைதான்
அண்டத்தில்
சூரியனின் வயதென்ன
கொஞ்சமோ

ஏனெனக்கு பூமித்தாய்
இளையவளோ
என்சிரிப்பு குழந்தைக்கு
ஒவ்வாதோ

ஊன்றுகின்ற கம்பெனக்கு
இன்னொருகை
மூன்றாவது காலென்பது
அறியாப்பொய்

கையைத்தான் நானூன்றி
நடக்கின்றேன்
கைக்கிடையே கம்பொன்றை
வைக்கின்றேன்

முதுமைநிலை என்பதுவும்
சிலந்திவலை
வலையோடு சிலந்திகூட
நானேதான்

சாவென்னும் காற்றுவந்து
வீசும்வரை
தினமோடித் திரிகின்றேன்
எனக்குள்ளே

விழிப்புக்கும் நித்திரைக்கும்
இடையிலொரு
மங்கலான மோனநிலை
எனக்குள்ளே

தனிமையென்று தனித்துவொரு
பொழுதுமில்லை
தனிமைதானே நானென்று
ஆனநிலை

எனைச்சுற்றிக் கேட்கின்ற
சப்தங்கள்
அத்தனையும் இன்றெனக்கு
நிசப்தங்கள்

நினைவுகளில் கனவுகளில்
நின்றாடும்
அந்நாளின் ஓசைகளே
செவிப்பறையில்

வந்துமண்ணில் விழுந்தபோது
அழுதநாளும்
எனக்கேநான் சொல்லாத
பிரிவுநாளும்

ஒன்றென்றே ஆவதையும்
கண்டீரோ
இரண்டுக்கும் ஞாபகத்தில்
இடமுண்டோ

சாவினின்று கையணைத்து
எனைக்காத்த
முன்பறியா புதியவனின்
அன்புமுகம்

ஒருமுறையே கண்கலந்த
தேவதையின்
ஒருநாளும் மறவாத
அழகுமுகம்

ஓய்வென்று ஒதுக்கிவைத்த
தனிமைநாளில்
உயிரேந்தி எனைக்கண்ட
ஈரமுகம்

ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
இவைபோல
அத்தனையும் காணவேண்டும்
இந்நாளில்

இன்றுகூட இறுக்கமாக
நான்பற்றும்
என்னுயிரின் பொருளென்று
எனக்குண்டு

என்னைவிட்டு முன்போன
என்னவளின்
இடுப்பழுக்குச் சேலைநுனி
தலைப்பு அது

முழுமொத்த விழிவிரித்து
நான்காண
முற்றாக என்பேத்தி
தெரிவதில்லை

விழிமொத்தம் நான்சுருக்கிக்
கூர்ந்தாலென்
வாழ்க்கைக்கு அர்த்தமெனச்
சிரிக்கின்றாள்

நோக்கித்தான் நிற்கின்றேன்
மரணத்தை
நெஞ்சிலின்று உணர்கின்றேன்
இன்பத்தை

நோக்கியநாள் வந்தாலது
சுகந்தானா
நெஞ்சேது நானேது
அறிவதற்கு

சுனாமி வேட்கை


மனம் பறிகொடுத்து
மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள்
இன்று உயிர் பறிகொடுத்து
அலை பார்க்க நேர்ந்தது

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது

கரைகளிலெல்லாம்
கண்ணீர்
ஓரங்களிலெல்லாம்
ஓலம்

சிப்பிகளுக்கெல்லாம்
முத்து வழங்கும் கடல்
உயிர் முத்துக்களை
அபகரித்துக்கொண்டு
மனித உடல்களை
வெற்றுச் சிப்பிகளாக்கி
விசிறியடித்துவிட்டது

தன்னிடம் வந்து
உழைப்பைக் கொட்டிய
மீனவ உயிர்களைக்
கட்டாய ஓய்வு கொடுத்துப்
பிணங்களாய்
ஊருக்குள் கொண்டுவந்து
கொட்டிவிட்டுப் போய்விட்டது

பாவம்...
கடல் என்ன செய்யும்
நிலநடுக்கத்தின்
பினாமிதானே இந்தச் சுனாமி

கடலின் இடுப்பை
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி

தன் கோடிக் கரங்களால்
வெறிகொண்டமட்டும்
கரைகளைப் பிறாண்டியபோது
கணக்கற்ற உயிர்கள்
கிழிந்து உதிர்ந்தன

எனக்கொன்றும் தெரியாது
நான் குற்றமற்றவளென்று
நிலத்தின் மடிகளிலேயே
சடலங்களை வீசிவிட்டுச்
சடுதியில் ஓடிவிட்டது கடல்

பூமிக்கு
இது வெறும் நடுக்கமல்ல
மல்யுத்தத்தில்
மரணஅடி பட்ட நிலை

நாடுகளெல்லாம்
நகர்ந்துபோய்விட்டன
தாழ்ந்தும் உயர்ந்தும்
நிலைகுலைந்துவிட்டன

பூமிக்கோள்
தன் அச்சிலிருந்து
சடக்கென்று வழுக்கி
விலகிப்போய்விட்டது

பூமியைச் சொல்லியும்
குற்றமில்லை
இவையெல்லாம்
வானத்தின் லீலைகள்

மனிதனின் சக்தி
எப்போது
வானத்தை வளைக்கும்?

நாச வேலைகளை
உதறியெறிந்துவிட்டு
எப்போது மனிதன்
முழுமையாய்த் தன்னை
அதில் நுழைப்பான்?

அதுவரைக்கும் ஆளாளுக்கு
ஆயுள் கணக்குப் போடாதீர்கள்

நிரந்தரமென்று எதுவுமில்லை
என்ற நிரந்தரத்துக்குள்
முடங்குங்கள்

கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004


மூடு பள்ளிகளை
அகற்று கீற்றுகளை
கைதுசெய் துரோகிகளை
இது என்ன பள்ளியா
அரசின் முழக்கம்

களுக்கென்று சிரிக்கிறார்
ஓர் அதிகாரி
இன்னும் எத்தினி நாளைக்கி
இந்தக் கூத்து?
.

இனி என்ன செஞ்சு
எனக்கு என்ன ஆச்சு
பாவியளா பாவியளா
எம்பிள்ளை போச்சே
கதறிக் கதறிக்
கருகிக் கருகி
மடிஞ்சே போச்சே

நாளைய துக்கம் தடுக்க
யார் சட்டையைப் பிடித்தும்
கண்ணீரா உலுக்கும்
கைகள்தானே உலுக்கும்?
.

எத்தினியோ பிள்ளைகள்
சாகாம வீட்டுக்கு வந்துட்டாங்க
விதியிருந்தா உம்பிள்ளையும்
வீடுவந்திருக்காதா?

இருநூறு கொடுத்தாப்
போலீசு விட்டுடுவான்
இரண்டாயிரம் கொடுத்தாத்
தாசில்தார் விட்டுடுவான்
இருபதாயிரம் கொடுத்தா
அடுப்பு மேடையும்
பள்ளிக்கூடம் ஆகிடாதா?
.

வாத்தியாருங்க எல்லாம்
எங்கே போனாங்க
பிள்ளைகளைவிடத்
தப்பிக்கிற அறிவு
அதிகமா இருந்ததாலே
தப்பிச்சுட்டாங்களோ?

அவர்கள் கைகளில் இருந்த
இந்தியாவின்
வளமான எதிர்காலத்தைப்
பாதுகாக்க ஓடிவிட்டார்களோ
.

கருகிய பிஞ்சுகளின்மேல்
கட்சிக்கொடி போர்த்தி
எதிர்க்கட்சியைத் தூற்றி
மேடை முழக்கம்
பெரும் சாலை கோசம்

அடப்பாவிகளா
என்னிக்குத்தான்டா உங்க
வியாபாரத்தை நிறுத்துவீங்க
இன்னிக்காச்சும்
விடுமுறை விடக்கூடாதா
.

கல்விதேடும் பிள்ளைகளைக்
காசுதேடும் பள்ளிகள்
கண்மூடிக் கொளுத்த

உதிரத்தில் உறவுநெய்து
உயிர்விட்டு உயிர்வளர்த்துப்
பறிகொடுத்த உயிர்க்கெல்லாம்
பதிலென்று ஒன்றில்லை
.

வீடெங்கும் ஒப்பாரி
வீதியெங்கும் கருமாதி

இந்தக்
கறுப்பு நெருப்பு எரிப்பு நாளை
பள்ளிகளின்
பாதுகாப்புத் தினமாக அறிவித்து
ஆவன செய்ய ஆணையிடுகிறது
மௌனத்தில் எரியும்
இதயம்

(ஜூலை 16, 2004 கும்பகோணம் தனியார் பள்ளியில் இடம்பெற்ற
தீவிபத்தில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்தனர்)

உயிருறவு


(ஒரு வரியின் இறுதிச் சொல்லை, அடுத்த வரியின் முதல் சொல்லாக அமைத்து எழுதப்பட்ட அந்தாதிக் கவிதை)


இதயமென்ற பெட்டகத்தில்
எத்தனையோ உதடுகள்

உதடுகளின் முணுமுணுப்பில்
ஓசையில்லா ஆசைகள்

ஆசைகளின் அலையடிப்பில்
அனுதினமும் ஏக்கங்கள்

ஏக்கங்களின் பரிதவிப்பில்
இரையாகும் தூக்கங்கள்

தூக்கமெனும் தொட்டிலிலே
தொடர்கதையாய்க் கனவுகள்

கனவுகளில் காண்பதெலாம்
கட்டறுந்த காட்சிகள்

காட்சிகளை உண்மையாக்கக்
கண்ணுறங்கா முயற்சிகள்

முயற்சிகளின் முக்குளிப்பில்
முத்தெடுக்கும் யோகங்கள்

யோகங்களும் கனவுகளும்
இழைபிரிந்தால் சோகங்கள்

சோகங்களே சொந்தமல்ல
சுற்றுமுற்றும் தேடுங்கள்

தேடல்களின் பரிசுகளாய்த்
தேடிவரும் உறவுகள்

உறவுகளே ஜென்மங்கள்
உயிரேந்தும் தீபங்கள்

 
*****
சும்மா இருடா


சும்மா சும்மா என்னைச்
சும்மா இரு என்கிறாய்
சும்மா சொல்கிறாயா இல்லை
நிசமாகத்தான் சொல்கிறாயா

சும்மா இருப்பதென்பது
சும்மா வருமா அம்மா?

ம்ம்...
கட்டிக்கொண்டாயிற்று
என் கைகளை
பொத்திக்கொண்டாயிற்று
என் வாயை
மூடிக்கொண்டாயிற்று
என் கண்களை
அடைத்துக்கொண்டாயிற்று
என காதுகளை
ஒதுங்கிக்கொண்டாயிற்று
என் தனிமையில்

இப்போது நான்
சும்மா இருக்கிறேனா
அம்மா?

சூரியன் அடைகாக்கும்
பூமி முட்டை
சுற்றிச் சுழல்வதைப்போல்
என் எண்ணங்கள் எப்போதும்
சுற்றிக்கொண்டேயல்லவா
இருக்கின்றன

இந்த
முதலும் முடிவும் தெரியாத
சிந்தனையும் அற்று
சுகமும் சோகமும் பிழியாத
நினைவுகளும் அற்று
சும்மா இருக்க முடியுமா
அம்மா?

அதற்கு நான்
சும்மா சும்மா மூளை தோண்டி
சிந்திக்க வேண்டுமல்லவா?

ஒரே ஒருமுறை
சும்மாவேனும் சிந்தித்தவன்
பிறகெல்லாம்
சும்மா சும்மா சிந்திக்கத்தானே
செய்வான்

எதையுமே சிந்திக்காமல்
எப்படித்தான்
சும்மா இருப்பது அம்மா?

பாலுக்கழும்
பச்சிளம் குழந்தையும்
சும்மாவா அழுகிறது
சிந்தித்தல்லவா அழுகிறது

முட்டாள் கூட
சிந்திக்காமலா
ஓட்டுப்போடுகிறான்
தவறாகச் சிந்தித்துத்தானே
ஓட்டுப்போடுகிறான்

தன் மூச்சை
நிறுத்திக்கொள்ளாமல்
சிந்திப்பவன்
சிந்திப்பதை நிறுத்திக்கொள்வது
எப்படி அம்மா?

உள்மூச்சை இழுத்து நிறுத்தி
உள்ளத்தை நிலைப்படுத்தி
உசும்பாமல் அமர்ந்தாலும்
ஒற்றைப் புள்ளியில்
ஒரே சிந்தனையில்
ஒளிச்சுடராவததுதானே
தியானமும்

அதீத
எண்ணத்தெளிவிலேனும்
சும்மா இருக்கலாம் என்றால்
எண்ணத்தெளிவென்பதும்
ஓர்
மகத்தான சிந்தனையல்லவா

இனி எப்படித்தான் நான்
சும்மா இருப்பது?

மீண்டும் என்னைச்
சும்மா இருடா என்றுவிட்டு
சமையல் கட்டுக்குள் நீ
சிந்தனையோடு நுழைவது
சும்மாவா அல்லது
என் கேள்விகளுக்கான
சம்மதத்தோடா அம்மா?

05. மறுஜென்மம்

காதலிப்பதென்பது
சூடான மழையில்
சுகமாக
நனைவதென்றால்

காதலிக்கப்படுவதோ
மழைத் துளியாகவே
மறுஜென்மம்
எடுப்பது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

04 கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை


கணினி வந்த பிறகு காதல் தன் எல்லைக் கோட்டையை எல்லையற்றதாய் விரித்துக்கொண்டது. எங்கோ சைனாவிலிருந்து ஒரு சிட்டுக்குருவியும் அலாஸ்காவிலிருந்து ஒரு மொட்டுடையும் பூவும் தேனுறிஞ்சிக்கொள்கின்றன.
இது கணினிக்குமுன் சாத்தியமானதாய் இருந்திருக்கவில்லை.
இதனால், கணினியைக் காதலின் புதிய கடவுள் என்று அழைக்கலாமா?
பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்துகொண்டு, அன்பே நீ அங்கே நான் இங்கே என்று பாடிக்கொண்டிருந்தது அன்று. இன்று பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் என்றாலும் மடியில் உட்கார்ந்து கொஞ்சுவதுபோல் காதல் புதுமைப்பட்டுவிட்டது.
அப்படியான ஒரு காதலைச் சொல்லும் கவிதைதான் இது. எனக்கு இது முதல் பரிசை வாங்கித்தந்தது ஓர் இணையக் கவிதைப் போட்டியில்.
2000 வருடங்களுக்கு முன்னரே தமிழில் மிக உயர்வான கவிதைகள் வந்துவிட்டன. அந்தப் பெருமை தமிழுக்கு உண்டு. ஆனால் இப்படியான ஒரு கவிதை வர முடியுமா? வாய்ப்பே இல்லை!


சிறகடித்துப்
பறக்குது மின்அஞ்சல்
அதன் சிறகசைவில்
துடிக்கிறதென் நெஞ்சம்

கருமுகிலின்
கூடுகளில் இல்லை
நிலா கணினிக்குள்
கொதிக்கிறது என்முன்

விரலெடுத்து
நடனமாடும் யாகம்
அதில் விரிவதுவோ
காதலெனும் வானம்

இரவுபகல்
விலகாத தாகம்
என் இணையக் கிளி
எழுதுகிறாள் நாளும்

கனிப்பாவை
கணினிக்குள் இருந்து
என் கனவுகளைக்
கேட்பதுவோர் விருந்து

இனிப்பான
கவிதைகளாய் விரிந்து
தினம் என்மனதைச்
சொல்லுவதோ மருந்து

தடதடக்கும்
தட்டச்சுப் பலகை
அதன் தாளலயம்
வெல்லுமிந்த உலகை

படபடக்கும்
நெஞ்சங்கள் பேசும்
அந்தப் பரவசத்தில்
நரம்புகளும் கூசும்

தூதுசெல்லக்
கடிதமேந்தும் பறவை
பல தூரதேசம்
பறந்துபோவ தில்லை

சேதிசொல்ல
வானமேறும் போது
ஒரு வேடனுக்கு
விருந்தாகக் கூடும்

மின்னலுக்கு
முன்சென்று கொஞ்சும்
மின் மடலாடும்
மகிழ்வோ நீர் மஞ்சம்

இன்னமுதக்
கன்னியவள் மடியில்
நான் இருந்தாடும்
சுகங்கூடும் நொடியில்

முகம்மூடி
முகந்தந்தாள் முதலில்
அம் முதல்மடலே
மோதிரம் என் மனதில்

அகந்தானே
அஞ்சல்வழி பூக்கும்
அது அகலாத
உறவுகளின் ஆக்கம்

முகங்கண்டு
வருங்காதல் மயக்கம்
அது முடிந்துவிடும்
மூன்றுநாள் பழக்கம்

அகங்கண்டு
இணைகின்ற உள்ளம்
அது அண்டவெளி
ஈர்ப்பினையும் வெல்லும்

நானிங்கே
உலகிலொரு முனையில்
அவள் நாணமுடன்
சிலிர்ப்பது மறு முனையில்

வானந்தான்
எல்லையிந்த உறவில்
அவள் வாசனையோ
இணையப் பெரு வெளியில்

கூடுவிட்டு
கூடுபாயும் வித்தை
அவள் கணினிக்குள்
விழுந்துவிட்ட தத்தை

தேடுபொருள்
கிடைப்பதில்லை வாழ்வில்
என் தேவதையைத்
தந்தவலை வாழ்க

1 உயிர் மலரும் (இசையில் கேட்க)

(தலைப்பைச் சொடுக்கினால் இசையில் கேட்கலாம்)

மழை பொழிய - பொன்
       மழை பொழிய
மனம் நனையும் - என்
       மனம் நனையும்

மனம் நனைய  - என்
      மனம் நனைய
முகம் தெரியும் - உன்
     முகம் தெரியும்

முகம் தெரிய - உன்
     முகம் தெரிய
உயிர் மலரும் - என்
     உயிர் மலரும்