நம்பு

நம்பு
உன்னால்
உறுதியாய் முடியும்

நம்பு
நீ ஏற்கனவே பாதி
வென்றுவிட்டாய்

நம்பு
நீ வெற்றிகொள்வது
நிச்சயம்

நம்பு
உன்னை எவராலும்
நெம்ப முடியாது

நம்பு
உன் நரம்புகளில்
புது ரத்தம் பாய்கிறது

நம்பு
உன் நாட்களில்
ஒளி தீபம்
ஊர்வலம் செல்கிறது

நம்பு
நீ யாரையும்
குறைகூறித்
தோற்கப் போவதில்லை

நம்பு
நீ யாருக்காகவும்
உன் வெற்றியை
இழக்கப் போவதில்லை

நம்பு
உன் கனவுகள்
உன்னாலேயே
நிஜமாகப் போகிறது

நம்பு
நீதான் நீதான்
வாழப் பிறந்தவன்
#தமிழ்முஸ்லிம்

தொப்பி - குல்லா - முண்டாசு - தலைப்பாகை - தலைத்துணி - ஒட்டகக்கயிறு

முதலில் மனிதர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.

தலையை நேரடி சூரியத் தாக்குதலில் இருந்து காக்காவிட்டால், அப்படியே மயங்கிவிழ நேரிடும், பைத்தியம் பிடிக்க வாய்ப்புண்டு, ஏன் சாவுகூட நிகழக்கூடும்.

ஆனால் இந்த தேவை கருதிய இயற்கைக் காரணம் தாண்டி மக்கள் தொப்பியை வேறு சில காரணங்களுக்காகவும் அணிகிறார்கள்.

தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் அணிகிறார்கள். எம்ஜிஆர் அப்படித்தான் அணிந்தார். பட்டிணப் பெண்கள் தங்களை அழுகுபடுத்திக்கொள்ள அணிகிறார்கள்.

முடிசூடும் ராஜவம்சங்கள் அழிந்தாலும் அப்படி ஒரு கௌரவம் தரும் என்ற நினைப்பில் சிலர் தொப்பி அணிகிறார்கள் முடிசூடிக் கொள்வதைப் போல.

சிலருக்கு இது ஒரு சமூக அல்லது தங்கள் கொள்கையின் அங்கீகாரமாக இருக்கிறது. நேத்தாஜி, நேரு போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

மதம் சார்ந்த அடையாளமாக சிலர் அணிகிறார்கள். முஸ்லிம்கள், சர்தார்ஜிகள் போன்றவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ராணுவத்தில் தேசப்பற்றின் அடையாளமாகத் தொப்பி அணிகிறார்கள்.

அப்புறம் இந்த சுதந்திரப் போராட்டக்காரர்கள் அவர்களுக்கான ஓர் அடையாளமாக அணிந்தார்கள். இன்றும் அதை ஒரு பண்பின் அடையாளமாக ஆக்கி அரசியல்வாதிகள் சிலர் அணிகிறார்கள். இது போன்று அணிபவர்கள் வட இந்தியாவில்தான் அதிகம்.

இந்தத் தலைப்பாகை என்பதையும் நாம் தொப்பி என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தொப்பியை உருவாக்க அறியாத காலத்தில் தோளில் உள்ள துண்டையே தலையில் கட்டிக்கொள்வார்கள், வெயிலுக்காகவும் வசதிக்காகவும்.

பின் தலைப்பாகை கட்டுவது என்பது உயர்ந்தவர் என்ற அடையாளமாகவும் பாரம்பரிய வழக்கமாகவும் சில சாதிகளின் அடையாளமாகவும் இருக்கிறது.

போலீஸ்காரர் தொப்பி அணிந்து தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள். பதிவிக்கு ஏற்ப தொப்பிகள் மாறும்.

இப்படியே தொப்பிகளைப் பற்றி ஆராயப்போனால், ஏகப்பட்ட விசயங்கள் வந்துகொண்டே இருக்கும்.

தொப்பிகளில் எத்தனை வகை தொப்பி என்று கணக்கெடுக்கத் தொடங்கினாலும் அது சீக்கிரத்தில் முடிவதாய் இருக்காது.

ஆனால் அன்று அராபியர்கள் தேவை கருதியே தொப்பி அணிந்தார்கள்.

பாலைவனத்தில் இரண்டு பெரும் தொல்லைகள் இருக்கும்.

ஒன்று சூரியன் தலைக்கு மேல் ஏறி நடு உச்சியில் உட்கார்ந்துகொண்டு கடப்பாறை சுத்தியல்களால் மண்டையைப் பிளக்கும்.

அடுத்தது அங்கே வீசும் கொடு மணற் புயல்.

இந்த இரண்டையுமே தாங்க முடியாது. சூரியன் சுட்டெருக்கும் என்றால் இந்த மணற்புயல் கடுமையான மூச்சுத் திணறலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மண்ணள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தால் எப்படித் தாங்கிக்கொள்வது?

இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க, அராபியர்கள் ஒரு தொப்பியும் ஒரு மேல்துண்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒட்டகங்களைக் கட்டுவதற்கான, அல்லது மேய்ப்பதற்கான ஒரு கயிறும் வைத்திருப்பார்கள்.

இந்த தொப்பி துண்டு கயிறு ஆகிய மூன்றையும் தலையில் வசதியாகக் கட்டிக்கொள்வார்கள். இதனால் சூரியனையும் மணற்புயலையும் அவரால் சமாளிக்க முடிந்தது.

இதையே சில முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகப் பிடித்துக்கொண்டு, பாலைவனம் இல்லாத சோலைவனத்தில் வாழும்போதும் இஸ்லாத்தில் கட்டாயம் தொப்பி அணியவேண்டும் இல்லாவிட்டால் நாம் முஸ்லிம் இல்லை என்று மூட நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அராபியர்களுள் ஆண்களும் சரி பெண்களும் சரி தலையில் துணி கட்டி இருப்பார்கள். இல்லாமல் மணல் புயலையும் வெயிலையும் சமாளிக்கவே முடியாது அல்லவா?

மணற்புயல் வீசும்போது, தலைத்துணியைச் சுற்றிச் சுற்றிக் கட்டி கண்மட்டுமே தெரியும்படி அமைத்துக்கொள்வார்கள். ஏன் என்று காரணம் சொல்லி இனியும் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இதுவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் ஆனது, முஸ்லிம் ஆண்களுக்குத் தொப்பி ஆனது.

ஹிஜாப் என்றால் முக்காடு போட்டுக்கொள்ளும் தனியான ஒரு தலைத்துணி.

கனடாவில் பல முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போட்டிருப்பார்கள், டிசர்ட் போட்டிருப்பார்கள், ஆனால் தலையில் மட்டும் ஒரு துணியால் முக்காடு போட்டிருப்பார்கள். முகம் மூடப்பட்டிருக்காது, திறந்துதான் இருக்கும்.

அதாவது, தலையின் ”முடியை” மட்டும் மறைத்து வைத்திருப்பார்கள்.

ஏன் தலையின் முடியை மட்டும் மறைக்க வேண்டும்?

முடிதான் ஒரு பெண்ணின் உடலில் மிகவும் கவர்ச்சியான பகுதியா? இந்தக் கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியாது.

பிறகு ஏன் அணிகிறார்கள் என்றால், ஒரு பயம்தான். மதம் சார்ந்த பெரியோர்கள், நீயெல்லாம் ஒரு முஸ்லிம் பெண்ணா என்று கேவலமாகப்
பேசுவார்களே என்ற பயம்தான்.

வேறு சிலருக்கு அப்போதுதான் தான் ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்படுவோம் என்றும் நினைக்கிறார்கள்.

இந்தத் தலைத்துணி முஸ்லிம் ஆண்கள், பெண்களிம் மீதான அவநம்பிக்கை காரணமாக, தன் பாதுகாப்பின்மை கருதி பெண்களிம் மீது சுமத்திய ஒரு காரியம் என்பதை சற்றே சிந்தித்தால் புரியும்.

ஆகவே அராபியர்கள் தங்களின் பாலைவன ஒட்டக வாழ்க்கை காரணமாக அணிந்த தொப்பி தலைத்துணி ஒட்டகக் கயிறு ஆகியவற்றை இந்த நவீன காலத்திலும் முஸ்லிம்கள் அணிவது அறியாமை மட்டுமே.

மற்றபடி இஸ்லாத்தில் இதெல்லாம் கிடையாது.

காம உணர்வுகளைத் தூண்டும் அங்கங்களை பெண்கள் மறைத்துக் கொள்ளும்படியே குர்-ஆன் பரிந்துரைக்கிறது. ஆணும் சரி பெண்ணும் சரி வெறித்து நோக்குவதை விடுத்து காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தருணங்களில் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொண்டு கண்ணியமாக நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றே சொல்கிறது. மற்றபடி ஆடைகளால் தங்களை அழகு படுத்திக் கொள்வதை குர்-ஆன் வரவேற்கவே செய்கிறது.

இந்த உலகை அனுபவித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவே இல்லை.

முன்பெல்லாம் தமிழ்முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் பள்ளிவாசலுக்கு வரவே மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் இறைவனிடம் எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.

தொப்பி அணியாமல் தொழ மாட்டார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. வகாபியம் அதைப் பெரிதாய் வலியுறுத்தவில்லை என்றதும், சவுதி அதை பெரிதாய்ப் பார்க்கவில்லை என்றதும், தமிழ் முஸ்லிம்களும் தொப்பியைச் சற்றே கழற்றிவைத்துவிட்டார்கள்.

தொப்பியில்லாத தலைகள் இன்றெல்லாம் தமிழ் நாட்டின் பள்ளிகளில் நிறையவே தொழுதுகொண்டு நிற்கின்றன.

இப்படி சவுதிக்காரர்களைப் பார்த்தே தங்களின் ஒவ்வொன்றையும் ஏற்பதும் துறப்பதுமே உண்மையான முஸ்லிமின் சிறந்த செயல் என்று நினைக்கும் முஸ்லிம்கள், நிச்சயமாக குர்-ஆனை நிராகரிக்கிறார்கள் என்றே சொல்வேன்.

நல்ல வேளையாக ஒட்டகக் கயிறையும் தலையில் கட்டுவேன் என்று எந்த தமிழ் முஸ்லிமும் நிற்கவில்லை. அரபுக்காரன் ஒட்டகக் கயிறு கட்டினான் என்றால் அவன் ஒட்டகம் மேய்த்தான் என்பதை புரிந்துகொண்டுதான் கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

எந்த ஐயம் வந்தாலும் ஒரு முஸ்லிம் அனுகவேண்டியது ஐயங்களே அற்ற ”ஆதண்டிகேட்டட்” - ஏற்புடைய என்று சொல்லத் தேவைப்படாத குர்-ஆன் மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்பதை முழுதாய் உணரும் காலம் ஒன்று நிச்சயம் வரும் என்று நம்புவோமாக.

தொப்பி இடுவதும் இடாததும் அன்றைய சீதோஷ்ண தேவையைப் பொறுத்தது.

குடை ஏன் வேண்டும்?


நீரலையைப் போன்று
புத்தம் புது அலை
வேறு எதிலும்
உருவாவதில்லை

ஓர் அலை கரை தொட்டால்
அந்த அலையின் நீர்
அடுத்த அலை புறப்படும்போது
எங்கோ எங்கோ
தொலைதூரம் சென்றிருக்கும்

புது நீரில்
புதிது புதிதாக உருவாகும்
ஒவ்வொரு நதியலையும்
நதிக்கு மட்டும் பெருமையல்ல
நமக்கும்தான்

ஏனெனில்
அது ஒரு
வாழ்க்கை ரகசியம்

வாழ்வின்
இன்ப அலையோ
துன்ப அலையோ
இடைப்பட்ட அலையோ
யாவுமே புத்தம் புதியனதான்

பழையது என்ற
நம் எண்ணம்தான்
உண்மையில் பழையது

பெண்களின் உடை

பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.

சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.

ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஞான வெளிச் சொர்க்கம்

செவி மூடியவர்களிடம்
பேச்சு வார்த்தை நடத்துவதும்
செருப்பில்லாமல்
நெருஞ்சி முட்காட்டில் நடப்பதும்
ஒன்றுதான்

வாய் திறக்க விடாமல்
குரல் மட்டும் உயர்த்துவதால்
சாதிக்கப் போவதுதான் என்ன -
புரிந்துணர்வைப் போட்டுப்
புதைப்பதைத் தவிர

கதறி அழுது சிதறிப்போகும்
நட்பை... நல்ல உறவை...
சற்றும் பொருட்படுத்தாமல்
துடித்து வெடிக்கும்
துப்பாக்கி ரவைச் சொற்களுக்கு
வாழ்க்கை அகராதிகளில்
பொருள்தான் என்ன -
பிதற்றிப் பின்னழும் வைபவத்துக்கு
விழிநீர் சேர்க்கும் எத்தனம்
என்பதைத் தவிர

இடைவிடாமல்
இரு முழு நீள மணி நேரமும்
தொலைபேசியில்
பேசமட்டுமே செய்தான்
சொந்தம் ஒருவன்

அவன்
குற்றச்சாட்டுக் குத்தீட்டிகளையும்
அறிவில்லா
அறிவுரைத் தோரணங்களையும்
ஏந்திக்கொண்டே
நான்

ஒரு
நம்பிக்கைதான்
எனக்கும் ஒரு வாய்ப்புத் திறப்பான்
நானும் பேசலாமென

”ரொம்ப நேரமா பேசிட்டோம்
அப்புறம் ஒருநாள் பேசலாம்”
சட்டெனத் துண்டித்தான்
தொலைபேசி சாதுர்யன்

அட இனி எப்போது
பேசப்போகிறானோ என்று
நிலை குலைந்து
நடுங்கித் தவிக்கிறது நெஞ்சு

கல் விழுந்த கண்ணாடிக் குடுவையைப்போல
உடைந்துதான் போனது
வெகுகாலம் குரல் நீட்டா மோனத்தில்
களித்திருந்த நெஞ்சு

சட்டென ஒரு பொறி
அக்னி பரவியது அகமெங்கும்

சொல்வதை
வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டு
மௌனத்தையே பதிலாகக்
கொடு கொடு என்று
கொடுத்திருந்தால்?

கேட்கும் செவியோடு
என்றாவது வாவெனக்
காத்திருப்பதல்லவா
ஞானவெளிச் சொர்க்கம்! 

முஸ்லிம் தீவிரவாதிகள்

1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

காரணம் கடந்த 50 ஆண்டுகளில் 235% வளர்ச்சி பெற்று பெருகும் முஸ்லிம்களின் மக்கள்தொகையாகத்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாம் தொடங்கும்போதே எதிர்ப்புகளால் பல இன்னல்களைச் சந்தித்தது. ஆனால் அழிந்துவிடவே இல்லை.

இன்று, காழ்ப்புணர்ச்சி கொண்டு துவேச சொற்களை அள்ளிப் பொழியவும் பழிபோட்டு ஒரு மார்க்கத்தையே அழிக்கும் முயற்சியில் சில பல மத மற்றும் அரசியல் அமைப்புகள் முயல்வதும் நாம் தெளிவாகக் காணும் காட்சி.

ஆனால் அழிந்துபோகுமா இஸ்லாம்?



 
ஆயிரம் வேர்கள்

ஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்
பிரபஞ்சம்

இன்னும்
இன்னுமாய்...
இவை
அத்தனையும்
நெஞ்சு விம்மிப்
பெருமைப்படத்
தகுதி மிகக் கொண்டனதாம்

இவற்றுள் எதுவும்
குறைவும் இல்லை
உயர்வும் இல்லை

அனைத்து வேர்களாலும்
ஆனவனே மனிதன்

இன்னும்
கோடி கோடி
இலைகளையும் கிளைகளையும்
பரப்பிச் செல்பவனே
மனிதன்

சவுதிதான் இஸ்லாம்

இஸ்லாம் என்றதுமே பலர் சவுதி அரேபியாவோடு அதை முடிச்சுப் போட்டுவிடுகிறார்கள்.

சவுதிதான் இஸ்லாம். இஸ்லாம்தான் சவுதி என்ற உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள்.

சவுதியின் மீதான பயபக்தி சவுதி செய்யும் எந்த வகை அறமற்ற செயலையும் அறவழிதான் என்று அடித்துக் கூறும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

உணர்வுப் பூர்வமாக அணுகும் இவர்கள் அறிவுப் பூர்வமாக அணுகத் தயங்குகிறார்கள்.

காரணம் மதத்தை அல்லது மார்க்கத்தைப் பலரும் உணர்வுகளில் கட்டிப்போடுகிறார்களே தவிர அறிவோடு அலசுவதில்லை.

முகம்மது நபிபெருமானார் ஓர் உலக மகா புரட்சி நாயகர். இதுவரை அவரைப்போல மனித உள்ளங்களில் தலைகீழ் மாற்றங்களைச் செய்த மகத்தான சாதனையாளர் இன்னொருவர் கிடையாது என்று அறிஞர்கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கினைப் பெற்ற 100 சிறந்தவர்களை மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் தொகுத்தார்.

அதில் அவர் தேர்வு செய்த முதலாமவர் முகம்மது நபி அவர்கள்தான். நியூட்டனுக்கு இரண்டாம் இடம். ஏசுவுக்கு மூன்றாம் இடம். புத்தருக்கு நான்காம் இடம்.

மைக்கேல் ஹார்ட் ஒரு கிருத்தவராக இருந்தபோதும் வேற்றுமத இறைத்தூதரான முகம்மது நபிக்கு முதலிடம் கொடுத்தார்.

அத்தனை உயரிய பகுத்தறிவாளர் முகம்மது நபி. ஆனால் அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலர் சிந்திக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது வேடிக்கை, வினோதம்.

இஸ்லாம் தோன்றியது கி.பி. 610. சௌதி அரேபியா தோன்றியது கி.பி. 1932. இடையில் எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சவுதி என்ற நாட்டின் சட்டதிட்டங்கள் வேறு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வேறு. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அதோடு இப்படி வரிந்துகட்டிக்கொண்டு முஸ்லிம் நாடு என்று பறைசாற்றிக்கொள்ளும் பெரும்பாலான நாடுகள், அறிவியல் அறிவில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் முகம்மது நபி பெருமான் அன்றே கூறியதுபோல சீனாவுக்குச் சென்றேனும் கல்வி கற்றுக்கொள் என்பதன் பொருள் புரியும்.

 
துக்கப்படவா வாழ்க்கை

எவ்வழி விரைந்தும் எப்படியேனும்
எட்டிப் பிடித்துக்
கட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும்
நம்முடனேயே
நமக்குப் பிடித்த யோகங்களை

அன்றி
துக்கப்படவா வாழ்க்கை?

நம்
சந்தோசங்களைக் கொய்ய
நம்மைவிட வேறுயார்
வான்முட்ட
எகிறிக் குதிப்பர்

நம் மகிழ்ச்சிகளை
நாமே மறுக்கும் பாசாங்கு நிலை
பேரவலமல்லவா

இன்றே
இப்பொழுதே
இன்பம் துய்த்து
வாழ்வதே வாழ்க்கை

நாளை என்பது 
உயிரின் தத்துவத்தில்
இல்லவே இல்லை

நேற்றுகளைப்
பாடங்களாக்கி
இன்றுகளை
பரிட்சைகளாக்கி
வென்று வாழ்வதே
வாழ்க்கை
பெரிதினும் பெரிது

நூறு வெறிநாய்களிடம்
ஒற்றை எலும்புத் துண்டு
நீ

ஆயிரம் கொள்ளிக் கட்டைகளிடம்
ஒற்றைப் பஞ்சுப் பொதி
நீ

மில்லியன் புல்டோசர்களிடம்
ஒற்றை மரக் குடில்
நீ

பில்லியன் கொசுக்களிடம்
ஒற்றை நிர்வாணம்
நீ

தப்பத் துடிக்காமல்
கருணைக்கும் அன்புக்கும்
அழுது நின்றால்

மனவீரத்தின் அகரமும் அறியா
உடைந்து ஊற்றும்
சிறு முட்டை
நீ

அடைகாத்துக்கொள்
உன்னை
நீயே

குஞ்சாகு
ஆகு
சிறகாகு
வளர்
பற பற

அதோ
பெரிதினும் பெரிய
வானம்
உன் முன்