இணையப் படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்

இணையத்தில் ஒரு நல்ல கட்டுரையை வாசிக்கத் தொடங்கினேன், நேரமில்லாமல் துரிதமாக வாசிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

இது காலைப்பொழுது. அலுவலகம் ஓடுகிறேன். ஆகையால் பிறகு வந்து மீண்டும் வாசிக்கலாம் என்றுதான் கட்டுரையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாகிறது.

மீண்டும் வாசிக்க வரும்போது ஏதேனும் புதியவை இருக்கும். அதைத் தொடுவேன். பிறகு இது வாசிக்கப்படாமலே போய்விடும். ஏனெனில் எல்லாம் வாசிக்க ஆசை இருந்தும் நேரமே இல்லையே இந்த வட அமெரிக்காவில்?

இந்தக் கட்டுரையின் சாரத்தை தோட்டாக் கருத்துக்களாய் (புல்லட் பாயிண்ட்ஸ்) துவக்கத்திலேயே கொடுத்து இணையத்தில் எழுதுகின்ற வழக்கம் உருவாக வேண்டும்.

ஒரு கட்டுரை சுருக்கமாகவும் முன்பகுதியில் வேண்டும், அதன் பின் மிக விரிவாகவும் வேண்டும்.

இணையத்தில் வந்து கொட்டும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. வாசிக்க வேண்டியவற்றைத் தீர்மாணிப்பதற்கு இந்தத் தோட்டாக் கருத்துக்கள் நிச்சயம் பயன்படும்.

கண்ணதாசன் பாடல்கள் - இது மாலை நேரத்து மயக்கம்

கண்ணதாசன் ஒரு சுவாரசியமான காதல் பாடல் எழுதினார்.

அதில் காதலி அதீத காதலோடு கதாநாயகனிடம் கொஞ்சுகிறாள். அவனோ விரக்தியின் உச்சத்தில் இருக்கிறான்.

எல்லாம் துறந்த துறவும் இன்றே பூத்த பூவும் காதல் கொண்டால் அந்தப் பாடல் எப்படி இருக்கும்?

இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

என்கிறாள் காதலில் கனிந்து மயங்கி சொக்கி நிற்கும் அவள்.

இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

என்கிறான் அவன்.

எத்தனை சுவாரசியம் பாருங்கள். இரண்டு முரண்கள் ஒரு புள்ளியில் சந்தித்து உரையாடுவதை எத்தனை எளிமையாகக் கண்ணதாசன் தருகிறார்.

பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன

என்கிறாள் அவள் விடாப்பிடியாக. தன் கற்பனைகளையும் பருவத்தின் குறுகுறுப்புகளையும் தொலைக்க அவளால் துளியும் இயலவில்லை.

உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன

என்கிறான் அவன் விட்டுக்கொடுக்காதவனாக

உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன

என்கிறாள் காதலில் துடிக்கும் கன்னி

இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன

என்கிறான் உறைந்துபோன உணர்வுகளோடு துறவி.

முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
தினம் மூடி மூடி ஒடினாலும்
தேடும் வாசல்தானே

அப்படியே அவன் திசையிலேயே அவனை அடித்துப்போடுவதுபோல் அவள் பாடுகிறாள்.

பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே

என்று அவளுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறான் அவன்.

இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு

இறுதியில் கெஞ்சத் தொடங்கிவிடுகிறாள்.

இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு

அவள் மீது இரக்கப்பட்டு அமைதியாக அவன் அவளுக்குப் புத்தி சொல்கிறான்.

இப்படி எதிர் எதிர் கருத்துக்களை மோத வைப்பது எளிமையான காரியமல்ல. அதை இத்தனைச் சிறப்பாய்ச் செய்த கண்ணதாசனின் பாடல்களைக் காதலிக்காமல் எப்படி இருக்க முடியும்?

- கவிஞர் புகாரி
மனிதக் குருதியின்
நிறமும்
மறந்துபோகும்
புனித நாள் நோக்கி
ஊர்ந்து... நகர்ந்து.... செல்கிறது
அகிம்சை

எஞ்சிய
இரண்டே உயிர்களில்
ஒன்றையேனும்
கொன்றழிக்க
விரைந்து... ஓடிச்... செல்கிறது
வன்முறை

ஆமையா
முயலா
?
?
*பின்நவீனத்துவக் கவிதைகள் எழுதலாம் வாருங்கள்*

விரைவில் நான் எழுதிய பின் நவீனத்துவக் கவிதைகளை எல்லாம் முகநூலில் இடப் போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும் பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு என்று சரசரவென்று ’லைக்’ ’லைக்’ ’லைக்’ சொடிக்கிவிட்டீர்கள், நன்றி.

ஆனால் நான் இடும் கவிதை பின் நவீனத்துவக் கவிதைதானா என்று எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?

பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டால்தானே நாம் பின் நவீனத்துவக் கவிதையை ரசிக்க முடியும்?

பின் நவீனத்துவம் என்பது....

----ஒரு தத்துவ சிந்தனை அல்ல.
----ஒரு வலுவான தரப்பு அல்ல.
----ஒரு எழுத்துமுறை அல்ல.
----ஒரு பொதுப்போக்கு (Trend) மட்டுமே.

என்று ஜெய மோகன் கூறுகிறார்.

யாருக்காவது சந்தேகம்?

பின்னவீனத்துவம் என்பது ஒரு தத்துவச் சிந்தனை அல்ல - ஜெயமோகன்.

பிறகென்ன, இதுவரை என்ன தத்துவம் கொண்டு எதை எழுதிக்கொண்டிருந்தீர்களோ அவையெல்லாம் பின்னவீனத்துவப் படைப்புகள் அல்ல.

அவை அத்தனையும் பின் நவீனத்துவப் படைப்புகள் அல்ல என்று நீக்கிவிடுங்கள்.

பின்நவீனத்துவம் என்பது ஒரு வலுவான தரப்பு அல்ல - ஜெயமோகன்

அப்படியென்றால் வலுவிழந்த தரப்பு என்றுதானே அர்த்தம். என்றால் பின்நவீனத்துவக் கவிதை எழுதுவது எப்படி. வலுவில்லாத தரப்புகளை எங்கே என்று தேடுவது.

நாம் எழுதும் எதுவும் வலுவானதாக இருத்தல் கூடாதே!

அதற்காக அது அப்படியே சாரமிழந்து சக்தியிழந்து சொல்லிழந்து சுவையிழந்து என்றா நினைக்கிறீர்கள்?

ஆமாம் அப்படித்தானே நினைக்கத்தோன்றுகிறது?

சரி, பின் நவீனத்துவக் கவிதை என்பது எப்படித்தான் இருக்க வேண்டும்?

Postmodenism என்ற மேலை நாட்டுச் சரக்குதான் இந்தப் பின்நவீனத்துவம்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதி நமக்கெல்லாம் கட்டளையிட்டிருக்கிறான்.

ஆகவே மேலைநாட்டுச் சரக்கு என்றாலும் அதன் தரம்பார்த்து ஏற்புடையதெனில் அதைத் தமிழுக்குள் அழைத்துக் கொள்வது தமிழராகிய நம் கடமை. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால் அப்படியே சரக்கோடு சரக்காக, நீங்களும் உங்கள் வேர்களை அறுத்துகொண்டு ஓடிப்போகாதிருந்தால், ஒழிந்துபோகாதிருந்தால், சோரம்போகாதிருந்தால் சரி.

பின்நவீனத்துவம் என்பது ஒரு தத்துவச் சிந்தனை அல்ல என்கிறார் ஜெயமோகன். ஆகவே என்ன எழுதுகிறோம் என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்.

பின்நவீனத்துவம் என்பது ஒரு வலுவான தரப்பு அல்ல என்கிறார் ஜெயமோகன். என்றால் எந்தத் தரப்பும் அல்லது தரப்பே இல்லாத எதுவும் அதற்கு ஏற்புடையதுதான் என்றாகிறது. ஆகவே உங்கள் நடைமுறைக் கவிதைகளை நீங்கள் மாற்றிக்கொள்ளாமலேயே பின்நவீனக் கவிதைகளைப் படைக்க இயலும் என்றாகிறது.

பின்நவீனத்துவம் என்பது ஒரு எழுத்துமுறை அல்ல என்கிறார் ஜெயமோகன்.

அதாவது நீங்கள் பூடகமாக எழுதத் தேவையில்லை. சிக்கலான வாக்கிய அமைப்புகளால் தமிழைச் சிதைக்கத் தேவையில்லை. சொந்த நாட்குறிப்புப்போல எழுதத் தேவையில்லை. களவுப் பூனையாய் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து ஒன்றுமே புரியாத, உங்களுக்கே விளங்காத கவிதைகளை(?) எழுதத் தேவையில்லை.

பின்நவீனத்துவம் என்பது ஒரு பொதுப்போக்கு (Trend) மட்டுமே என்கிறார் ஜெயமோகன்.

அப்படியா? இதுவரைக்கும் எல்லாம் புரிந்தது. இது புரியவில்லையே என்கிறீர்களா? அது என்ன பொதுப்போக்கு (ட்ரெண்டு) என்று முடி எழுந்து நிற்கின்றனவா? கவலை வேண்டாம் அதையும் நாம் கண்டுபிடித்துவிடுவோம்.

இந்த ட்ரெண்டு என்று சொல்வது ஒரு காலத்தில் இருக்கும் பின் இன்னொரு காலத்தில் மாறும் பின் பழைய ட்ரெண்டே புதிய முகத்தோடு மீண்டும் வரும்.

குடுமி கிராப்பாகி மொட்டையாகி நீள் முடியாகி மீண்டும் குடுமியாகி என்ற எத்தனை ட்ரெண்டை மயிரில் பார்த்துவிட்டோம்?


அப்படியே மாத்திக்கொண்டே போகவேண்டியதுதான். இன்று மொட்டைதான் ட்ரெண்ட் என்றால் மொட்டைக் கவிதை எழுதுங்கள்.

ஒரு மொட்டைக் கவிதைதான் பின்நவீனத்துவக் கவிதையா என்று கேட்கிறீர்களா?

இதற்கான பதிலை என்னிடமிருந்தா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

அன்புடன் புகாரி
20140000

உன்னைக் கொல் உலகைக் கொள்

ஏவியவர்களின்
ஏவல்களை
ஏகமனதோடு
ஏற்றுக்கொள்கின்றன
ஏதுமறியா
ஏவுகணைகள்

ரத்தம்பட்டுச்
சொட்டும்போது
கத்திக்குக்கூட
கருணை வரலாம்

அடுத்த வெட்டுக்குப்
பாயும்முன்
அரைநொடியேனும்
அச்சங் கொள்ளலாம்

ஆட்களிடம் இல்லையே
என்ற பதைப்பில்
ஆயுதங்களிடமாவது
எதிர்பார்க்கலாம்
உள்ளங்களில் கருணை
உயிர்களிடத்து அன்பு
என்ற
செத்தொழிந்த
பழஞ்சொற்ப் பிரயோகங்களை

வாடிய பயிரைக் கண்டு
வாடிய நெஞ்சு கொண்ட
ஈரத்தின் சாரத்தில்
ஒற்றை விழுக்காடேனும்
ஒட்டிக்கிடக்குமா
உடைந்தொழுகிக் கிடக்கும்
உலகக் குடுவையில்

*
கண்விழிக்கும்முன்பே
காலடி நிலம்
காணாதொழிவதை
காக்கத் துடித்து
கதறியெழும்போது
ரத்தமும்
ரத்தத்தில் மிதக்கும்
சிதறுண்ட துண்டுகளுமாய்
நீளும்
தொடரோட்டப்
பாவக் காட்சிகள்

இன்னும் இன்னும்
இங்கும் அங்கும்
ஓயாச் சுடுகாட்டுக் கழுகுகள்
கொத்துக் கொத்தாய் உயிர்களைக்
கொத்தித் தின்னும்
காட்சிகள்

காணச் சகியாமல்
ஐயகோவென்று
கதறியழும் நெஞ்சோடு
கருணையாளர்கள் வந்தார்கள்
ஆயினும்
காட்சிகளோ மாறவில்லை

பின்
கடவுள்களே வந்தார்கள்
மதங்களென்ற கூராயுதங்களை
மனிதர்களிடம் களவுகொடுத்துவிட்டு
காட்சிகளை
விருவிருப்பாக்கிவிட்டார்கள்

பன்னாட்டுக் கூட்டாக
ஒருங்கிணைந்த தலைவர்கள்
உலக அரசியலோடு வந்தார்கள்
காட்சிகளின் இயக்குனர்களாய்
அவர்களே ஆனார்கள்

அடப்
பொல்லா உலகே
உன் சாபத்திற்குத்தான்
ஒரு
விமோசனமே இல்லையா

*
திருடனாய்ப் பார்த்து
திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க
முடியாது

ஆம்
வன்முறை என்ற
வக்கிர வன்மம்
உள்ளங்களிலிருந்து
அழியாமம்
உலகில் அழிய
வழியே இல்லை

எங்கோ செல்லாதே
எவர் முன்னும்
உபதேசித்து நில்லாதே
உனக்குள் ஏறு
உன் வக்கிரம் கொல்

அச்சிறு
வெற்றியினால்தான்
இந்த உலகின்
மாபெரும் வெற்றி
மந்திரமாய்ச் சமைக்கப்படும்

உன்னைக் கொல்
உலகைக் கொள்

மெல்லத் தமிழினிச் சாகும்

மெல்லத் தமிழினிச் சாகும்

இந்த வரியை பாரதிதான் சொன்னான். பொய்யில்லை. ஆனால் அவன் என்ன சொன்னானோ அதை விட்டுவிட்டு அதற்கு மாற்றமாக வேறு எதையோ புரிந்துகொண்ட தமிழர்கள்தாம் அதிகம் அதிகம் மிக அதிகம். இதோ பாரதி எழுதிய முழுக் கவிதையும் உங்களுக்காக.


கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

மகாகவி பாரதி

இன்று காலை 2014 07 17


இன்று காலை என்னை ஒரு கவிதை முட்டியது. விடுவதாய் இல்லை என்று முடிவெடுத்தேன்.

வாகனத்தில் அலுவலகம் செல்லும்போது எழுதத் தொடங்கினேன். கண்கள் சாலையைப் பார்க்க விரல்கள் காகிதத்தைப் பார்த்தன.

கோ ரயிலில் ஏறியதும் வசதி பெற்றேன் எழுதுவதற்கு. அப்போதும் கவிதை தீரவில்லை.

அதன்பின் நடந்தேன் கோ-ரத நிறுத்தத்திலிருந்து அலுவலக வளாகம்வரை.

நடக்கும்போதெல்லாம் கிறுக்கியதால், 15 நிமிடத்தில் முடியவேண்டிய நடை முப்பது நி...மிடங்கள் எடுத்தன.

ஒருவழியாய்ப் போதும் என்று நிறுத்திக்கொண்டேன் அலுவலக வாயிலி படிகளில்.

இப்போது அசைபோட்டவண்ணம் எழுதியதை செதுக்கிக்கொண்டிருக்கிறேன் உங்கள் எல்லோருக்கும் படைப்பதற்காக.

காத்திருங்கள் அன்பர்களே, கட்டாயம் வருவேன். இன்றே செதுக்குதல் முடியவேண்டும் என்றில்லை. செதுக்கியவரை சிலை என்று முகநூலில் இடுவதாய் இருக்கிறேன்.

என் கவிதைகளை நேசிக்கும் அனைவருக்கும் என் கோடிப்பொன் நன்றி.
பூமியின்
கண்ணீர்தானே
கடல்


அந்த மாபெரும்
கண்ணீர்முன் நின்று
நீ
ஒரு சொட்டுக்
கண்ணீருக்கு
எத்தனிப்பது சரியா?
கவிதையும் நாவலும்

சில சொற்களே கொண்ட 
ஒரு சிக்கனக் கவிதை
நீண்ட நாவல் எழுதும்
நேரத்தைக் கூட 
எடுத்துக்கொள்ளக் 
கூடும்

நாவல் படைப்பில்

அதிக நேரம் 
எழுதிக்கொண்டே இருப்பார்கள்

கவிதையிலோ 

அதிக நேரம் 
மௌனமாகவே இருப்பார்கள்

சட சடவென்று 

ஒரே நிமிடத்தில்
கவிதை கொட்டிவிடலாம்

ஆனால் 

அந்தக் கவிதை 
உள்ளுக்குள் 
கவிஞனே அறியாது
ஒரு சமுத்திரத்தின் வளர்ச்சியைப் 
பெற்றிருக்கும்

பல நாவல்களை 
வென்றெடுக்கும் வல்லமையை
ஒரு சிறு கவிதை  கொண்டிருக்கும்
எத்தனை பேர் நேசிக்கப் போகிறார்களோ
தெரியாது - ஆனால்
எல்லோரும் வாசிக்கப் போகிறார்கள்

கவிதையும் அல்லாமல் கட்டுரையும் அல்லாமல்
கண்சிமிட்டும் இதை - அது
தோன்றியதுபோலவே
எழுதிக்கொண்டிருக்கிறேன் - மடித்து மடித்து...

ஏன் மடித்து மடித்து?

அப்படி எழுதும்போது
தோட்டாக்களிட்டுச் சொல்வதுபோல்
வீண் சொற்களின்றி விசயச் சொற்களால்
எழுதிப் போகும் நிம்மதி வளர்வதால்

*
கவிதை வாசிப்புகள்
பல்கிப் பெருகிவிட்டனவா
அல்லது
அருகிக் கருகிவிட்டனவா

அதுபற்றி
யாதொரு அக்கறையுமின்றி
தன் போக்கில் - படுவேகத்தில்
சால உரு தவ நனி கூர் கழியாய்ப்
பொங்கிப் பெருகும் வீச்சத்தில்தான்
கவிதை எழுதுதல் எனும் தவக்கலை
நிகழ்கிறது
கணினித் தாழ்வாரங்களில்

ஆயினும்
ஊதிப் பெருத்து
உடைந்தழியுமோ பலூன் என்று
கவலைகொள்ளத் தேவையில்லை

உடைந்தழிந்தால்
வெற்று வாயுக்களே வெளியேறுமென்று
நித்திரை கொள்ளலாம் தாராளமாக

*
யோனிகளும் முலைகளும்

ஓர்
அருமையான தலைப்பின்கீழ்
என்னதான் எழுதிக்கொண்டிருக்கிறாய்
ஒன்றும் விளங்கவில்லையே
என்று
உள்ளுடைமனம் கேட்கிறது

ஆயினும் நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
எட்டிவிடலாம்
அந்த ஏற்றத்தை என்று

*
உடுக்கை என்றான்
பின்னல் தொடவியலாப்
பெண்ணின் இடையழகைக்
கவிஞன் அன்று

உடுக்கை
என்று மட்டுமா உரைத்தான்

உண்டு
என்றால்
அது
உண்டு

இல்லை
என்றால்
அது
இல்லை

என்று
எண்ணங்கள் சிக்கிச் சிறகடிக்க
தத்துவமாய்ச் சொல்லிப் போனான்

அட
அதனுள் எங்கே இருக்கிறது
தூண்டில் கவர்ச்சி என்கிறீர்களா

உடுக்கை போல் இடையழகு
என்றொரு
கன்னியிளம் பெண்ணைச் சொன்னால்
கவிஞன்
அந்த வெற்றிடத்தையா சொன்னான்

அந்த இடைக்கு மேலல்லவா
அவன் பார்த்தான்

பார்த்து பிரமித்து
இமை உதிர்த்த விழிகளோடு

பின்-கீழுமல்லவா பார்த்து
அவன் அடிபட்டுப்போனான்

கண்ணெடுக்கவியலா
இந்தக் கூத்தை
அவன் என்னவென்று சொல்வான்

சொல்லவும் முடியவில்லை
சொல்லாமல் அதைத்
தள்ளவும் இயலவில்லை

சொல்லத் துடிக்கும் தமிழ்க் கவிஞனுக்கு
கவிதையெனும் மந்திர வானம்
தன் கற்பனைச் சொற்புயலை
வீசியடிக்காமலா பொய்க்கும்

சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை என்று
சொல்லத் தெரிந்தவனாயிற்றே

ஆதலினால் கவிஞன்
சொன்னான் சொற்களால்
இடைகளை மட்டும்
சொல்லாமல் விட்டான்
யோனிகளையும்
முலைகளையும்

சொல்லாமல் சொன்னபோது
பெருஞ்சுவைச் சுடர
பொன்னொளிர்த்த சொற்கள்

பின் வந்த போலி நவீனத்தில்
எதை மறைத்து
எப்படிக் குழப்பினாலும்
இதை மறைக்கா மகோன்னதத்தில்

தெள்ளத் தெளிய கூச்சமறு நாச்சத்தில்
தீதுமிகு நவகவியாய்ச்
சொல்லியே போகும்
கற்காலப் புதுமையில்

மறைத்தலன்றி
மறைக்கத் துடிக்கும்
மடநாணப் பயிர்ப்பின்றி
மனவீரக் களிப்போடு சொல்லிப்போகும்
பிறழ்ந்த பெண்ணியத்தில்

யோனிகளும் முலைகளும்
படம்போட்டு
பாகங்கள் குறிக்கப் படும்
வெட்ட வெளிச்ச
இன்றைய
’கவிதைக்கு மெய்யழகில்’

நிமிர் நடையற்றும்
நேர்கொண்ட பார்வையற்றும்
சொல்லத் தயங்கிய சொல்லற்றவர்களை
நெத்தியடி அடிக்கின்றன
சுத்தியுடைந்து விழுகின்றன

யோனிகளும் முலைகளும்

சொன்னவன் கற்பனை
கடுகுச் சிறிதாக
சுவைப்பவன் கற்பனையோ
எல்லையற்ற காலப்பெரிதாக
எழுதப்படாத வரிகளில்
எப்போதேனுமாயினும்
விரிகின்றதாகுமோ
இனி
கவிதை
கனடாவின் ஜூலைச் சூரியனே

இரவு தரும் அந்தரங்கத்தில்
நிர்வாணமாய்ச் சுழலும்
பூமியின் பொன்னழகை

வெளிர் மஞ்சள்
விழி விரித்து விழுங்க

அதிகாலை
ஐந்தரைக்கே
வந்துவிடுகிறாய்

போதாதென்று
இரவு ஒன்பதானாலும்
அப்படி ஏன்தான்
விரட்டித் திரிகிறாயோ
விடலைப் பொடியன்கள்
துப்பட்டா விரட்டும்
வீரியத்தோடு


பூஞ்சிறகும் வைரச்சிறகும்

விழிகள் மலர்வதற்காய்
ஒத்திகை பார்க்கும்
ஒவ்வோர் அதிகாலைப் பொழுதிலும்

அமைதிக்குள்
அழகாய் உறங்கும்
உங்கள் படுக்கைக்குப் பக்கத்தில்
புத்தம் புதுப் பறவைகள் இரண்டு
காத்திருக்கின்றன
உங்களுக்கே உங்களுக்காக

ஒன்று
உங்களை அப்படியே
அலாக்காகத் தூக்கிக்கொண்டு
மிதந்து மிதந்து
விழிகளைப் பொற்திரைகளாக்கும்
மாயக் கனவுகளுக்குள்
உங்களைக்
கசங்காமல் ஏற்றிச் செல்லக்
காத்திருக்கும்
பூஞ் சிறகுப் பறவை

மற்றது
உங்களின் அற்புதக் கனவுகளை
நனவாக்கும் மெய்வெளிப் பரப்பில்
உங்களைக் கம்பீரமாய் ஏந்திக்கொண்டு
உயரே உயரே எழுந்து
சக்தி தெறிக்கப் பறக்கக் காத்திருக்கும்
வைரச் சிறகுப் பறவை

சட்டெனச் சொல்லுங்கள்
எந்தப் பறவையில்
உங்கள் பயணம்?
உங்களின் சொற்களையும்
குடும்பத்தின் சுகங்களையும்
சுண்டுவிரலால் புறந்தள்ளிவிட்டு
மதமென்ற பெயரில்
கண்டவனும் சொல்வதைக் கேட்டு
ஆடுகின்ற பெண்களை
அன்போடு அழைக்க
என்ன வார்த்தை
வைத்திருக்கிறீர்கள்
தமிழில்

முன்னுரை

இந்த வாரம்
மூன்று கவிதைகள் என்னிடம்
வந்து முட்டின

 நேரமில்லாப் பணிச்சுமையில்
பிறகு எழுதலாம் என்று
என் உணர்வுகளின் தாக்கத்தை
ஒத்திப் போட்டு
அவற்றை
வார்த்தைகளாக்காமலேயே
விட்டுவிட்டேன்

இது
கருக்கலைப்புக்குச்
சமம் என்பதை
நான் உணர்ந்திருந்தாலும்
அதுதான்
காலத்தின் கட்டாயம் என்பதை
புரிந்து

மௌனமாய்
அந்த
ஊர்வலத்தில்
நானும்
நகர்ந்துகொண்டே
இருக்கிறேன்
படைப்புலகில், இலக்கியம்தான் முதலில் தோன்றியது.
அந்த இலக்கியத்திற்காகத்தான் பின் இலக்கணம் உருவாக்கப்பட்டது.

அதாவது,
இலக்கியம் இயல்பாய் வந்தது.
இலக்கணம் செய்யப்பட்டது.

ஆகவே இன்றும் இலக்கியங்கள் தானே இயல்பாய்த் தோன்றவேண்டும். இலக்கணத்திற்கு அவை கட்டுப்படத் தேவையில்லை.

இலக்கணத்தைப் பரிந்துரையாக எடுத்துக் கொண்டால் மொழியின் கட்டமைப்பை வலுப்பெறச் செய்யலாம்.

இலக்கியத்தைச் சுதந்திரமானதாக ஆக்கிக்கொண்டால் மொழியின் உயிர் துடிப்பதைப் புலன்களெல்லாம் உணரக்கூடியதாய் இருக்கும்.

அழிந்துபோகும் தமிழும் தமிழ் இனமும்

புலம்பெயர்ந்து வாழும்போதும் சொந்த மண்ணிலேயே உயர் கல்வி பயிலும்போதும் பிறமொழிச் சொற்களுள் சில, நம் மொழிக்குள் ஊடுறுவதை தவிர்க்க முடியாதுதான்.

அதில் பிழை ஏதும் பெரிதாய் இல்லை.

உலகின் ஒவ்வொரு மொழிக்குள்ளும் ஏற்புடைய பிறமொழிச் சொற்கள் நாகரிகமாகப் புகுந்திருக்கின்றன.

அவற்றை ஏற்றுக்கொள்ளும் இலக்கணக் குறிப்புகளைத் தொல்காப்பியரும் தந்திருக்கிறார்.

அவை அந்த மொழிக்கு வரவுதானே தவிர கேடில்லை.

Catamaran என்ற ஆங்கிலச் சொல் கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல்.

அதுபோல பல சொற்கள் தமிழிலிருந்து பிற மொழிக்குச் சென்றிருக்கின்றன.

அதுபோலவே பிறமொழிகளிலிருந்து தமிழுக்குள் வந்திருக்கின்றன.

ஆனால் தன் மூல வேரையே துண்டித்துக்கொண்டு, வேற்று மரத்தின் மீதேறிக்கொண்டு அந்த மரத்தின் வேர்களையே தன் வேராய்க் ஆக்கிக் கொள்ளும் நிலைதான் மிகவும் பிழையானது.

அது தமிழ் இனத்தையே அழித்து முடித்துவிடும்.

ஆயிரம் போர் வந்தாலும் தமிழனை அழிக்கவே முடியாது.

ஆனால் தமிழனின் மொழிப்பற்று மட்டும் திசைமாறினால் போதும் அப்போதே அழிந்துபோகும் தமிழும் தமிழ் இனமும்.
ஒரு மொழிக்குள் 
இன்னொரு மொழி 
நுழைந்து 
ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்போது 
அழிவது வெறும் சொற்கள் அல்ல, 
அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்ட 
மக்களின் அடையாளங்கள், 
கலாச்சார பண்பாடுகள், 
ஆணி வேர்கள் போன்ற 
ஓர் தொன்மை இனத்தின் 
ஆதார அடிப்படைப் பண்புகள் 
அத்தனையும் என்பதை 
என்று நாம் உணரப் போகிறோம்?
தொடர் கவலையாய் இருக்கிறது
கனடாவில்
இப்பொழுதுதான் தொடங்கியதென்றாலும்
பனிகொய்யாப் பொழுதுகள்
காலக் குழிக்குள்...
விழுந்தழிகின்றனவே
என்கிற தேம்பலோடு

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

தமிழ் எந்த மொழிக்குள்ளும் கள்ளம் புகாதிருக்க, ஏன் பிற மொழிகள் தமிழுக்குள் கள்ளம் புகுகின்றன?

இது பிறமொழிகளின் குற்றமா
அல்லது தமிழர்களின் குற்றமா?

தமிழர்களின் குற்றமென்றே தோன்றுகிறது.

தமிழனுக்கு அந்நிய மோகம் அதிகம்.

ஒரு தமிழனால் அவனுடைய பாரம்பரியத்தையும், செழுமையான மொழி அழகையும், அதன் இலக்கிய வேர்ச் சுவையையும் சுவைக்கத் தெரிவதில்லை.

தன் சொந்த இலக்கியத்தின்மீது துளியும் காதல் இல்லாமல் அயல் இலக்கியத்துக்குள் குப்புற விழுந்து கிடக்கிறான்.

அடுத்தவர் தட்டைப் பார்த்தே எச்சில் வழிகிறான்

பேரவலமல்லவா இது?

இதிலும்கூட நான் பாரதியைப் போற்றுகிறேன். அவன் எத்தனை மொழி கற்ற முடியுமோ அத்தனையும் கற்றான். எங்கிருந்தெல்லாம் கொண்டுவந்து தமிழின் வேர்களுக்கு நீர் வார்க்க முடியுமோ  வார்த்தான். ஆனால் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் என்று தன் பாரம்பரியக் கவிஞர்களையே கண்டு பெரிதும் வியந்தான்.

ஆனால் சில மேதாவித் தமிழர்களோ இன்று அயல் இலக்கியத்தைக் கண்டல்லவா வியக்கிறார்கள். தமிழ் ஒரு குப்பை என்றெல்லவா நினைக்கிறார்கள்!

இவர்கள் தமிழர்களா?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

இயல் விருது விழா 2013

28 ஜூன் 2014ல் நிகழ்ந்த இயல்விருது விழாவிற்கு மிக ஆர்வமாகச் சென்றிருந்தேன். இயல்விருது பெறுபவரின் பேச்சைக் கேட்க என் செவிகள் காத்துக்கிடந்தன.

ஆனால் பெருத்த ஏமாற்றம்.

இயல்விருதினைப் பெற்ற தியடோர் பாஸ்கரன் நாலு வரியை மேடையில் பேச எட்டுமுறை மூச்சுமுட்டினார்.

முழுவதுமே எழுதிக்கொண்டுவந்து மேடையில் வாசித்தும்கூட தங்குதடையற்று அவரால் பேச இயலவில்லை.
...
கணிஞர் மணி மணிவண்ணன் ஒண்ணேமுக்கால் நிமிடங்களே பேசினாலும் தங்குதடையின்றி சிறப்பாகப் பேசினார். அவரையே இயல்விருது பெற்றவரின் சார்பாகப் பேச வைத்திருக்கலாமோ என்று தோன்றியது

தொகுத்து வழங்கிய பெண் முழுவதும் ஆங்கிலத்திலேயே தொகுத்து வழங்கினார் (அவர் ஒரு தமிழ்ப் பெண் தான் - சந்தேகம் வேண்டாம் தமிழர்களே).

என்ன ஒரு சரளமான ஆங்கில நடை அந்தப் பெண்ணுக்கு? ஆனால் ஒரு தமிழரின் பெயரைக்கூட அவரால் உச்சரிக்கவே முடியவில்லை.

ஒரே ஒரு தமிழ்ச் சொல்லும் சொல்லத்தெரியாத தமிழ்ப்பெண்கள் புலம்பெயர்ந்த கனடாவில் எதை நோக்கித்தான் செல்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவர் தொகுத்து வழங்கியதைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எல்லாம் அப்படியே பூரித்துப் போயிருப்பார்கள். ஆனால் அப்படி எந்த வெள்ளைக்காரரும் விழாவிற்கு வந்திருக்கவில்லை.

அமெரிக்க மோகம் கொண்ட தமிழர்களோ அதைவிடவும் புல்லரித்துப் பூரித்துப் போயிருப்பார்கள்.

ஓ.... அவர்களுக்காகத்தான் இவரோ?
புரிகிறது, வாழ்க!

ஆனால், தமிழரின் செவிகள் எல்லாம் செத்துத் தொலைந்தனவே இயல்விருந்து வழங்கும் எவராவது கவலைப்பட்டீர்களா?

எங்கே செல்கிறது இயல்விருது?

எங்கே செல்கிறது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
பொன்னான இயல்விருது?

வானுயர்ந்து
தாய்த்தமிழ் வாசம் சுமந்து

புலம்பெயர்ந்தும் ...
தமிழ்த்தேன் வேர் பெயரா
கர்வத்தோடு

உயர்ந்து உயர்ந்து
பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம்

ஓரிரு வாசல்களின் முன் மட்டும்
மண்டியிட்டுத் தாழ்ந்து
பின்னெலும்பு மடிந்து

அந்நிய மோகத் தனலில்
தானே வலிந்து விழுந்து
கருகிக் கருகி

சிதையும் சிறகுகளோடு
கீழ்நோக்கிப் பறக்கும்
அவலம் ஏன்?

நெஞ்சு
பொறுக்குதில்லையே!