பேசப்படாத எதுவும்
விவரிக்கப்படாது



விவரிக்கப்படாத எதுவும்
விளங்கப்படாது



விளங்கப்படாத எதுவும்
உணரப்படாது



உணரப்படாத எதுவும்
உருப்படாது


கவிஞர் புகாரி
பணவேட்டைக்கு
மனிதவேட்டை
ஆடும்
ஆட்டத்திற்குப்
பெயர்தான்


மக்களாட்சி
பெருவணிகம்
உயர்மருத்துவம்
காவலர்படை
கல்விநிறுவனம்

வேறு ஏதேனும்
விட்டுவிட்டேனா

ஊருக்குப் போய்
நாளாகிறது

கவிஞர் புகாரி

கஜா புயல்

காவிரி நீரை நிறுத்திவிடுவோம், மீத்தேன் ஹைரோ கார்பன் எடுப்போம், ஸ்டெர்லைட் பாக்டரிகள் வளர்ப்போம், நெல்லை விட்டு தென்னைக்குப் போங்கள் என்று பரிந்துரைப்போம், பின் புயல் நிவாரணமும் சரியாக வழங்கமாட்டோம்.
ஒழியட்டும் விவசாயிகள்.
கார்ப்பரேட்டுகள் வெகு ஜோராக ஆளும்போது விவசாயிகள் படு மோசமாகச் சாகத்தானே வேண்டும்.
பசுமை செத்து காங்கிரீட்டுகள் முளைக்கத்தானே வேண்டும்?
இன்று சிக்கன் என்பது உண்மையான சிக்கனா?
இன்று கத்திரிக்காய் என்பது உண்மையான கத்திரிக்காயா?
இன்று நம் வாழ்க்கை என்பது நூறு வருடம்முன் வாழ்ந்தவர்களின் இயற்கையான வாழ்வா?
கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நான் பலமாடிக்கட்டிடத்தில் கரண்சி நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தால் என்னை எந்தப் புயலும் பாதிக்காது என்ற நினைப்பு சாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
கவிஞர் புகாரி
இந்தியாவில் ஒரு வருடம் செய்த ஊழலில் இருந்து 1% எடுத்துக்கொடுத்தால்
அல்லது
தமிழ்நாட்டில் ஒரு வருடம் செய்த ஊழலில் இருந்து 10% எடுத்துக் கொடுத்தால்
கஜா புயல் மிதித்துப் போட்ட டெல்டா பகுதி மீண்டும் சொர்க்க பூமியாகும்
அன்புடன் புகாரி

முகநூலும் நானும்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை


புது நட்புப் பூக்கள்
தினம் தினம்
மொட்டுடைத்துப் பூக்கின்றன
ஆனால் நான்
அப்படியானதொரு குறிக்கோளில்
முகநூலில் இல்லை

உறவுகள் வந்து
உற்சாகமாய் லைக் போடுகின்றன
ஆனால் நான் அதற்காகவும்
முகநூலில் இல்லை

நண்பர்கள் உறவுகள்
நன்கறிந்தவர்
சற்றே அறிமுகமானவர்
மறந்தே போனவர்
யாரென்றே தெரியாதவர்
என்று இன்று
5000 நண்பர்கள் இருக்கிறார்கள்
அதற்குமேலும் வருகிறார்
முகநூல்தான் 5000+ ஐ
ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர
நான் ஏற்கிறேன்

ஏனெனில்
என் இதயம் அப்படியே
விரிந்து பரந்தது
இந்தப் பிரபஞ்சத்திற்கும்
பெரியதாக

இந்த 5000+ ஐ அடையும்
லட்சியத்திலும் நான்
முகநூலில் இல்லை

பிறகு
ஏன் இருக்கிறேன்
நான் முகநூலில்?

என் கவிதைகள்
தென்றலாய் உலவ
ஒரு மன்றம் வேண்டும்
புயலாய் வீச
ஒரு கரை வேண்டும்

என் தென்றலின் தீண்டலை
என் புயலின் சீற்றத்தை
என் கருத்தின் புதுமையை
என் கவிநயத்தின் அழகை
ரசிக்கும் நண்பர்கள்
ரசித்ததைச் சிலாகித்து
*மறவாமல்
மறுமொழி இடவேண்டும் *

என் கவிதைகளின்
ஆணிவேர்வரைத்
துளைத்துச் சென்று
கண்ட சுகங்களையும்
கடும் விமரிசனங்களையும்
இணையான விருப்பத்தில்
இன்றே இப்பொழுதே
அள்ளித் தரவேண்டும்

நாலு லைக் வந்தாலும்
போதும்
அட அதுவும் இல்லாவிட்டாலும்
போதும் போதும்

ஆனால்
ஒவ்வொரு லைக்கும்
உண்மையின் கர்ப்பத்தில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

லைக்கைவிடப் பன்மடங்கு
நான் லைக்பண்ணுவது
வந்து விழும் உங்கள்
மறுமொழிகளைத்தான் என்பதை
என் முகநூல் நட்புகள்
அன்போடு
அறிந்து வைத்திருக்க வேண்டும்

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

அன்புடன் புகாரி
20171122
உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...

அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்

ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்

கவிஞர் புகாரி
20171122

கஜா புயலும் தென்னம் பிள்ளைகளும்

காவிரிக் கழிமுகப் பகுதியில் இவ்வளவு தென்னந்தோப்புகள் எப்போதிலிருந்து இருக்கின்றன என்ற கேள்வியை முகநூலில் கண்டேன்.

அலுவலகம் செல்ல நேரம் ஆகிறது என்றாலும் இக்காலை இதை எழுதுகிறேன். பின் மேலும் தகவல்களை எழுதுவேன்.

நிறைய நெற்பயிர் நிலங்களும் இடையிடையே தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், வாழைத் தோப்புகள், புளியந்தோப்புகள் என்றுதான் அந்தக் காலம் முதலே இருந்தன.

பின் காவிரி நீர் வராததால், நீருக்கு ஏங்கிய நிலங்கள் தென்னைக்கு மாறின.

தென்னையில் ஓரளவு வருமானம் உண்டு. நெல்லுக்கு அடுத்ததாக என்று சொல்லலாம்.

இதுபோன்ற புயல் 50, 60 வருடங்களுக்கு முன்புதான் வந்தது என்பதாலும் அப்படியான புயல்கூட நாகையை மட்டுமே தாக்கும் என்பதாலும் பேராவூரணி போன்ற ஊர்களில் தென்னை மரங்கள் நடுவதை யாரும் பாதுகாப்பற்றது என்று நினைக்கவில்லை.

இனியும் தென்னை நடுவது கூடாது என்று எண்ணுவது தவறு. பாதுகாக்க உரிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் சரி.

இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு அரசே பொறுப்பேற்று ஆவன செய்ய வேண்டும். அரசுதான் இதுபோன்ற விவசாயிகளுக்கான காப்புறுதி.

தென்னை மரத்திலிருந்தும் பனை மரத்திலிருந்தும்தான் கள், பதநீர், இளநீர் போன்ற இயற்கை பானங்களும் கிடைக்கும்.

தென்னை மரங்கள் தென்னிந்தியா முழுவதும் அதிக அளவில் இருக்கின்றன. இலங்கையிலும் தென்னை மரங்கள் அதிகம்.

தென்னையைப் பிள்ளை என்பார்கள்

சொந்தப்
பிள்ளையைவிட
வச்ச பிள்ளை
காக்கும்
கைகொடுக்கும்

என்பது கிராமத்து வழக்கு.

தென்னையைப் பெத்தா
இளநீரு
பிள்ளையைப் பெத்தா
கண்ணீரு

என்பது கண்ணதாசன் பாட்டு.

இப்போது தென்னம்பிள்ளைகளைப் பறிகொடுத்து நிற்கும் டெல்டா பகுதி மக்களின் கண்ணீர் பதில் சொல்ல முடியாத அளவிற்கு ரத்தம் கொட்டுவதாக இருக்கிறது.

ஒரு பதினைந்து வருடங்களுக்குத் தங்கள் வாழ்வை பூஜ்யத்திலிருந்து தொடங்கி மீட்டெடுக்க வேண்டும்.

இன்று பூஜ்யம் கூட இல்லை. தென்னை வளர்ப்பிற்காகவும் தென்னையை நம்பி பிள்ளை வளர்ப்பு திருமணம் போன்ற இதர காரியங்களுக்காகவும் கடன்கள் வாங்கி அடைக்கமுடியாமல் மைனசில் அதாவது பூஜ்யத்திற்கும் கீழ் இருக்கிறார்கள்

அரசு வாய் பேசுகிறதே ஒழிய செயலாற்றவே இல்லை.

அரசு அறிவிக்கும் நிவாரணம் அந்த விவசாயிகளைக் கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தையும் இன்னும் வரவில்லை.

விழுந்துகிடக்கும் தென்னையை அகற்ற வழியில்லை. குடிக்க நீர் இல்லை. உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை. மின்சாரம் இல்லை. பிள்ளைகள் படிப்பும் பறிக்கப்பட்டுள்ளது.

நான் தொலைந்துபோன இவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமே பார்க்கவில்லை.

டெல்டா பகுதி மண் மீத்தேனெடுக்க குறிவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப் படுகிறது. இந்தப் புயலைவைத்து அது தீவிரப்படுத்தப்படும் என்று நம்புகின்றேன்.

தஞ்சை பொட்டல் காடாய் ஆவதை காண எனக்குக் கண்கள் இல்லை.

இப்போதே காவிரியற்ற தஞ்சை என் நெஞ்சை மிதிக்கிறது. உயிரில் நெருப்பாய் எரிகிறது.

ஆகவே எனக்கு என் மண்ணை மீட்டெடுக்க வேண்டும். அதன் வாழ்வாதரத்தை மீண்டும் செழுமையாக்க வேண்டும். அதே பச்சைப் பசேல் தஞ்சையில் நிலவவேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறேன். ஊரில் என்ன நடக்கிறது என்று கவனித்து வருகிறேன்.

பத்துலட்சம் தென்னங்கன்றுகள் நடப்பட வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

அதற்காக தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் உலகுக்கே சோறுபோட்ட, சோழநாடு சோறுடைத்து என்று புகழப்பட்ட தஞ்சை நெற்களஞ்சியம் மீட்டெடுக்கப் படவேண்டும்.

நேற்று மூதாதையர் இருந்தனர், இன்று நாமிருப்போம், நாளை இளையவர்கள் வருவார்கள் ஆனால் என்றென்றும் தஞ்சை நிலம் தரமான பச்சை நிலமாகவே விளைநிலமாகவே இருக்க வேண்டும்.

கவிஞர் புகாரி
கஜா புயல்

கஜா என்றால் யானையாம்
இலங்கை சூட்டியப் பெயராம்

அந்தமானருகே
குட்டியாய்  ஜனித்த
கஜா

நாகையை மிதித்து
வேதாரண்யம் வளைத்து
பேயாட்டம் போட்டுக்
கதிகலக்கிய
கஜா

அதிரை பட்டுக்கோட்டை
தஞ்சை புதுக்கோட்டை
சுற்று வட்டாரக் கூட்டை
வட்டங்கட்டி வட்டங்கட்டி
கொடுஞ்சின ஜல்லிக்கட்டாடிய
கஜா

திண்டுக்கல்லில்
மேகங்களை உருட்டி
மழைத் தேங்காய் உடைத்துத்
தெறிக்கவிட்ட
கஜா

கடலில் பதுங்கியதும்
கரையில் மதங்கொண்டதும்
ஏனென்பது
கஜாவுக்கே தெரிந்த
கதை

சென்னயைக் கடந்தால்தான்
அது புயல்
நாகையைக் கடந்தால்
அது வெறும் முயல்
என்ற
எழுதப்படாத விதி
இந்தப் புயலிலாவது
மாறுமா?

கடலோர மாவட்டங்களில்
தென்னம்பிள்ளைகள்தாம்
சொந்தப் பிள்ளைகள்

இன்று
அத்தனை பிள்ளைகளும்
ஆணிவேர் பிடுங்கப்பட்டு
செத்துக் கிடக்கின்றன

இனி
எத்தனைக் காலத்தில்
அங்கே வாழ்வாதாரங்கள்
மீட்டெடுக்கப்பட்டு
பட்டிணிகள் நிறுத்தப்படுமோ
தெரியவில்லை

குனிந்து குனிந்து
தமிழ்நாட்டையே
அடிமை நாடாக்கிய அடிவறுடிகள்
கவுரவமில்லாக் கோமாளிகள்
யானைப் புயல் அழிவுக்கு
சேனை திரட்டி
முன்னேற்பாடு செய்தது
பெரிதல்ல

கஜாவால்
வாழ்வாதரம் பறிக்கப்பட்ட
ஏழைக் குடியானவர்களுக்கு
வாழ்வளிக்க
நிவாரணம் வழங்குவதுதான்
உண்மையான
பாராட்டுக்குரியது

கஜாவின்
தும்பிக்கையைப்
பிடித்துக்கொண்டாவது
தமிழகத்திற்கு
நம்பிக்கையைத் தருவோம் என்று
தொடர்ந்தும் அரசு
களப்பணி செய்யுமா?

இவற்றையெல்லாம் விட
மிக முக்கியமான
ஓர் உண்மையை  அறிந்து
அரசு
சிந்தித்துச் செயலாற்றுவது
மிக அவசியம்

புயல்கள் இனியும்
வரும் வரும்
பல்கிப் பெருகி
வாரம் ஒன்றாகக் கூட
வரும் வரும்

ஏன்

இயற்கை அழிவுகளே
புயல்களின் ஊற்றுக்கண்

தமிழகத்தில்

நிலத்தின் வளங்கள்
சுரண்டப்படுகின்றன

நீர்வளங்கள் தடுக்கப்பட்டு
விளைநிலங்கள்
சுடுகாடுகளாக்கப்படுகின்றன

மலைகள்
உடைத்தெறியப்படுகின்றன

மண்ணும் பறிபோக
வாழ் நிலங்கள்
மடலாகிக் கதறுகின்றன

வருகின்ற புயல்களுக்கு
நிவரணங்கள் தேவையா
அல்லது
புயலே வராதிருக்க
தடுப்புகள் தேவையா

அரசே அரசே
தமிழ்மன்ணை அழிக்கத் துடிக்கும்
நடுவனரசை வீழ்த்த
உன் ஆண்மைக்கு இதோ
ஒரு சவால்

கவிஞர் புகாரி
நவ் 18
கருத்துச் சொல்ல வருபவர்களை உங்கள் மதம் சாதி இனம் அறிந்து அதைவைத்துத் தாக்க வருவார்கள் கிருமிகள்.
தளர்ந்துவிடாதே!
மகிழ்ந்துகொள்!
ஏனெனில்....
உன் கருத்து வலிமையானதாய் இருக்கிறது என்று பொருள்.
வேறு ஏதும் மறுமொழி இட முடியாமல் உள்ளுக்குள் குமைந்து உடலெல்லாம் ஆடிப் போய் வெலவெலத்து நிற்கிறார்கள் என்று பொருள் 
அன்புடன் புகாரி
இணக்கம் 
இணக்கம்
அதற்கு 
என் 
வணக்கம்
மனதோடு மனதாக 
வாழாத வாழ்வெல்லாம் 
மரணத்தின் சுவடுகள்
அறம் என்பது 

அன்பு அல்ல
கருணை அல்ல
இணக்கம் அல்ல
இன்பம் அல்ல

ஆனால்
அறம் இருந்தால் 

மட்டுமே
இவை யாவும் 
எல்லோருக்கும்
கிட்டும்

அந்த 
மகத்துவமே 
அறம்
இணக்கம் கேட்டேன்
ஈட்டி எறிகிறார்கள்

அறம் சொன்னேன்
அடிக்க வருகிறார்கள்

அன்பு போற்றுகிறேன்
அசராமல் தூற்றுகிறார்கள்

உன்வழி உனக்கு என்றேன்
எங்கள் வழி
கொடுஞ்சொல் என்கிறார்கள்

என்வழி எனக்கு என்றேன்
உனக்கு வலி தருவோம்
என்கிறார்கள்

கவிஞர் புகாரி
இந்த உலகம் 
வன்முறையற்றுப் போக 
ஒரு சிறு கல்லையாவது 
நாம் நகர்த்துவோமே
புலன்களைச் சாகடித்து
பக்தி என்ற பெயரில்
புதைவதை
இறைவன் விருப்பவில்லை
புலன்களின் தாகங்களை 
அற வழியில் மகிழ்விப்பதே 
அற வாழ்க்கை
அன்பு அறம் அறிவு 
இந்தக் கலவை 
கலையும்போதெல்லாம் 
வாழ்க்கை 
கலைந்துவிடும்
கவிதை எனக்குத்
தொழில் இல்லை
பொழுதுபோக்கு இல்லை
என் இதயப்போக்கு
சாவே இல்லாதது
சாவு மட்டுமே

சாவில் 
சாவிருந்தால்தான்
அது நல்லது

நீரில்
நீரில்லாவிட்டால்
என்னாகும்?

சாவில்லாச் சாவோ
ஆகப்பெரும் 
கொடுமையானது

என்னில்
நானில்லாமல் போவேன்
அது நன்று

சாவில்
சாவில்லாமல் போயின்
அதுவே
சாவிலும் சாகாச் சாவு

’சா’வில் ‘சா’ விருக்கிறது
மொழி இலக்கணத்
தமிழெழுத்தில்

சாவுக்குத்தான் சாவே இல்லை
மனித வாழ்க்கைத்
தலையெழுத்தில்

கவிஞர் புகாரி


*தனித் தமிழ்த் தாறுமாறுத் தாண்டவம்*

>>>உங்களின் தாழ்வு மனப்பான்மையும் அடிமைப்போக்கும், மற்றவர்களை பாதிக்கக்கூடாது என்பது மட்டுந்தான் எனது கவலை. உங்களின் அரைகுறை தமிழறிவுடன் குமுக வழக்கியல் அறிவுக்குறையும் மிகத்தவறாக உங்களை இட்டுச்செல்கிறது. நாக இளங்கோவன் <<<

இப்படியான அநாகரிகம் தமிழ் மரபே இல்லையே?


உங்களால் மட்டுமே இப்படி வசைபாடமுடியும் என்று எண்ணமா?

ஒரு முட்டாள்தனத்தைக் கையில் வைத்துக்கொண்டு இப்படி வசைபாட வரும் உங்களை தமிழின் முன்னேற்ற வழியில் நிற்கும் நான் எத்தனை வசைபாட முடியும்?

அறிவில்லாத நிலையில் நின்று வசைபாடும் உங்களை அறிவு சார்ந்து வளர்தமிழோடு செல்லும் நான் எத்தனை வசைபாடமுடியும்?

இப்படித்தான் மரபுக் கவிதைதான் கவிதை புதுக்கவிதை கவிதையே அல்ல. நீ தமிழ்க் கவிஞனில்லை என்று தாறுமாக எழுதி வந்தீர்கள் கூட்டம் கூட்டமாக.

உங்கள் மூக்கையெல்லாம் உடைத்து உடப்பில் போட்டுவிட்டு புதுக்கவிதை வானலாவி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது

அதையும் தாண்டி நவீனம் பின் நவீனம் என்று சென்றுகொண்டே இருக்கிறார்கள் முன்னேற்ற வளர் தமிழ்ப் பற்றாளர்கள்.

பாலடைந்த மண்டபங்களின்
அழுக்கடைந்த சட்டங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
வவ்வால்கள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
நான் தலைகீழாய் நடக்கிறேனாம்

இதை எப்போதோ எழுதிவிட்டேன் இக்கவிதையை, புதுக்க்க்க்க்க் கவிதையை!

நிறுத்துங்கள் உங்கள் பிதற்றல்களை
நிறுத்தாவிட்டால் நானும் உங்களைப் போலவே தரமிழந்து வாய்மொழி உதிர்க்க வேண்டியதாக இருக்கும்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
தொடர்ந்து என் பணி செய்வேன்
நில்லேன் அஞ்சேன் என்றான் கண்ணதாசன்
அவன் கவிஞன்

உங்களால் எல்லாம் ஒரு கவிஞனையோ அவன் முற்போக்கையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தொலைந்து போங்கள், தமிழை வாழவிட்டுவிட்டு!

அன்புடன் புகாரி


>>>ஸிந்தனை ஸம்பவம்
பாஹுபலி முதற்கொண்டு காஹம் பஞ்ஜி வரைக்கும் இன்று எழுத்து மாறிநிற்கின்றது. இந்த இழையில் புகாரியவர்களின் கருத்துகளை மறுக்காவிடில் அவற்றையும் மறுக்கமுடியாது.வேல்முருகன் சுப்பிரமணியன்<<<

இதில் நியாயம் இல்லையே?


நான் நல்ல தமிழ் எழுதுகிறேன். கஷ்டம் என்ற சொல்லை கடினம் என்றே சொல்வேன்

விஷம் என்ற சொல்லை விசம் என்றே பலகாலும் எழுதிவருகிறேன். இன்னும் நஞ்சு என்று முழுதாகவே தவிர்க்கிறேன்.

வேஷ்டி முஷ்டி புஷ்டி என்று எல்லாம் எழுதுவதில்லை

என் பழைய கவிதைகளில் உள்ள நிஜம் என்ற சொல்லையும் மாற்றிவருகிறேன்.

நான் தெளிவான தமிழ்த் திசையில் செல்பவன். ஏனெனில் நான் தமிழின் காதலன்.

ஊரில் நான் தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசும்போது என்ன ஒருமாதிரி பேசுகிறாய் என்றுதான் கேட்கிறார்கள்.

மலையாளம் தோன்றியது வடசொற்களை 90% ஏற்றதால். ஏற்றபின் எழுத்தைக் கொண்டுவந்தார்கள்.

நாமும் ஏற்றோம் ஒரு பத்து விழுக்காடு இருக்கும். இன்று அதையும் விரட்டியடிக்கிறோம். அதுதான் உண்மையான தமிழ்த்தமிழ்த் தொண்டு. அது வாழ்க வளர்க.

தமிழ் வாழும் மொழுயாய் வாய்மொழியாய் இருக்க வேண்டும் என்பதே என் தேவை. பேச வருபவனையும் குசுப்பு... இடமாசுகசு... குசுவந்த சிங்கு... என்றெல்லாம் சொல்லி ஓட வைக்க என்னால் முடியாது. தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள்

1.

ini solvatharkku onnum ille. ellaam sollitten

என்று எழுதுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்

எனக்கு யார் அப்படி மடல் அனுப்பினாலும், மன்னிக்கவும் என்னால் வாசிக்க முடியவில்லை. ஒன்று
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று சொல்லிவிடுவேன்

2.

அடுத்து புலம்பெயர் பிஞ்சுகள் முழுதாக அந்த அந்த நாட்டின் மொழிக்குள் சென்றுவிட்டனர். அவர்களை மீட்டெடுக்காமல் தமிழ் வாய்மொழியாய் இருக்காது

3.

அடுத்து தமிழைக் கவிதை மொழியாய் மட்டுமே பாவிப்பது பிழை. அதை அறிவியல் மொழியாய்க் கணித மொழியாய் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு சொற்களை நோண்டிக்கொண்டிருக்காமல், அந்தந்த அயல்சொற்களை அப்படியே ஏற்று அறியல் அறிவை விரைந்து வளரச் செய்ய வேண்டும்.

ஆக்சிஜன் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், ஹீலியம் அப்படியே இருக்கட்டும், மைல் கிலோ என்றெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு கெட்டா போய்விட்டோம்

4.

இலவசத் தமிழ் வகுப்பு இலவச தமிழ் உணவு இலவச பேருந்துசேவை செய்து புலம்பெயர்த் தமிழ்ப் பிஞ்சுகளை மீட்டெடுப்பதே எல்லாவற்றுக்கும் மேலான என் தொண்டாய் இருக்கும். செய்வேன் இறைவன் அருளால்.

தொடங்கிவிட்டேன், என் பணிச்சுமைகளுக்கிடையில் அதை உலகெங்கும் கொண்டு செல்கிறேன்...

துணை நிற்போரை நற்றமிழர் என்று நெஞ்சாரப் புகழ்வாள் தமிழன்னை என்று திடமாக நம்புகின்றேன்

அன்புடன் புகாரி


Krishnan Ramasamy அவர்களோடு ஒரு உரையாடல்

>>>இற்றை மலையாளத்தில் வடசொற்புழக்கம் அவ்வளவு இருப்பது போல் தெரியவில்லை. எழுத்து மாறியபின்பு தான் அங்கு வடசொற்புழக்கம் கூடியது. (என் மதிப்பீடு 50/60 %) <<<

அன்பின் இராமகி ஐயா, மலையாளத்தை நாம் ஒரே மொழியாகப் பார்க்க முடியாது. பேச்சுவழக்கில் ஒரு மலையாளம். மேடையேறினாலோ அல்லது நூல் எழுதினாலோ கையாளப்படும் மலையாளம் இன்னொன்று.

பேச்சு வழக்கில் உள்ள் மலையாளம் கொடுந்தமிழில்தான் அதிகம் இருக்கும். 30% சமஸ்கிருதம் இருக்கலாம்

எழுத்து மற்றும் மேடை வழக்கில் சுமார் 70 லிருந்து 90 வரைகூட இருக்கும்.

நான் கேரளத் தொடர்பு உடையவன், கொறச்சு கொறச்சு மலையாளம் பேசவும் கூடியவன்.

பிழிச்சல், கிழி போன்ற தமிழன் பயன்படுத்தாத அழகு தமிழ்ச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதைக் கேட்டு பெரிதும் மகிழ்பவன்.

மலையாளிகளைப் போல் ‘ழ’ வை வெகு நேர்த்தியாக உச்சரிக்கும் தமிழன் மிக மிகக் குறைவு

>>>>அதேபோல் தமிழில் பிறசொல் புழக்கம் பத்து விழுக்காடு என்பதும் சரியில்லை. நீங்கள் இற்றைக் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்று எதையும் படிப்பதில்லை போலும். குறிப்பாய்க் குமுதம். 30 விழுக்காடாவது உரையாடல்களில் இருக்கும். <<<

இங்கும் தமிழை அப்படியே ஒரு மொழியாகக் கொள்ளமுடியாது. பிராமணர்கள் பேசும் தமிழ் ஏனையோர் பேசும் தமிழ் என்று பிரிக்க வேண்டும். பிராமணர்களின் தமிழில்தான் வடசொல் புழக்கம் 30 விழுக்காடு. ஏனையோரிடம் 10க்கும் குறைவாகிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.

>>>தமிழ் மொழி சிதைந்து ஒரு பொன்விழா ஆகப் போகிறது.<<<<

செம்மொழித் தேர்வில் தமிழ் நின்றபோது, சிதையா தமிழ் என்பதே நிறுவப்பட்டது. இன்றும் வள்ளுவன் குறள் புரிகிறது. ஏனையவற்றையும் மீட்டெடுத்திருக்கிறோம் மகிழ்வோடு.

>>>நீங்கள், உங்கள் காலத்தில் படித்த தமிழிலேயே இருக்கிறீர்கள் போலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு பண்பலை ஒலிபரப்பு என ஏதொன்றையும் நீங்கள் பட்டறிந்ததில்லை போலும். நிலைமை படு மோசம். <<<

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு குட்டிச்சுவராய் இருந்ததைக் கண்டிருக்கிறேன். இப்போது அது செம்மைப் பட்டுக்கொண்டிருப்பதையும் காண்கிறேன். பேச்சுவழக்கின் பொதுத்தமிழை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இடையிடையே ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனபோதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காண்கிறேன். அதுவே தமிழை பேச்சுவழக்கிலிருந்து அழியாமல் வைத்திருக்கிறது. புலம்பெயர்ந்த பிஞ்சுகளின் காதுகளில் அந்தத் தமிழ்தான் விழுகிறது. அவர்கள் தமிழில் மெல்ல மெல்ல எழுகிறார்கள். ஊடகம் இல்லாமல் போனால் தமிழின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான். திரையிசைப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களை பேச்சுத் தமிழின்பால் இழுத்து வைத்திருக்கிறது. இல்லாதுபோனால், பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யமட்டுமே தமிழ் என்றாகிப் போகும். நாக்கு எனும் ஈர இருக்கையில் தமிழ் உட்காராமல் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

>>>இன்று ஏராளமான தமிழிளையர், “ சமாலிஃபய்” என்று சாத்தாரமாய்ச் சொல்லுகிறார். பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. இது அழிவின் உயர்கட்டம். பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது. என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் இருவரும் ஒன்றைத்தான் சொல்கிறோம்.

>>>பிறமொழி வினைச் சொற்களைப் பயன்படுத்துவது கூடுகிறது. <<<

இது கூடவே கூடாது. நான் இதைத்தான் எங்கும் வலியுறுத்துகிறேன்

>>>பெயர்ச்சொற்கள் ஊடுறுவது இயல்பாய் நடப்பது<<<

இதற்கு மட்டும்தான் நான் அந்த நான்கு எழுத்துக்களுக்கு நன்றி சொல்லி ஏற்கிறேன். இதில் பிழை என்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை

>>>என்றைக்கு வினைச்சொற்கள் ஒரு மொழியில் ஊடுறுவுகின்றனவோ, அன்று நோய் முற்றி விட்டதென்று பொருள். <<<

மிக மிக சரி. இதைத்தான் நான் செய்யச் சொல்கிறேன். அதுதான் உண்மையான தனித்தமிழ் நோக்கம் என்றும் சொல்கிறேன். எந்த தமிழ் வார்த்தையும் தெரியாமல் தமிழர்கூட்டம் நான் shoppin போறேன், எனக்கு Sick leave வேண்டும், என் father engineer, என் அக்கா housewife. என்றெல்லாம் உரையாடுகிறார்கள். எந்த வினைச் சொல்லும் பயன்படுத்தாமல் தமிழ் அதல பாதாளம் சென்றுவிட்டது. அதை மீட்டெடுப்போம்

அதைவிட்டுவிட்டு, ஜார்ஜை சாருசு என்றும் டமாஸ்கசை இடமாசுகசு என்றும் குஷ்வந்த் சிங்கை குசுவந்த சிங்கு என்றும் எழுதியா தமிழை வாழவைக்கப் போகிறோம்

இயல்பாக அறிவியலில் புழக்கச் சொற்களை அதன் மொழியிலேயே பயன்படுத்தி அறிவியல் அறிவை வளர்க்கும் போக்கை துரிதப்படுத்தவும் தூண்டவும் வேண்டும் அல்லவா? அதுதான் தமிழின் சேவை. *****தமிழ் வாழும் மொழியாய் இருக்க வேண்டும் அதுதான் என் தேவை*****

அன்புடன் புகாரி
1, 2, 3, 4.... என்பன தமிழ் எழுத்துக்கள் அல்ல
கிலோ மீட்டர், மைல், லிட்டர் போன்றவை எல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல.
a+b, a2 + b2, x = y-a போன்ற கணிதக் குறியீடுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல.
H2O, NaHCO3, NaBO3, Na2B4O7.10 H2O ஆகிய வேதிக் குறியீடுகள் தமிழ் எழுத்துக்கள் அல்ல
ஹஜஸஷ எல்லாம் தமிழ் எழுத்துக்கள் அல்ல
தனித்தமிழர் முதல் மூன்றையும் ஏற்கிறார்கள். கடைசியை ஏற்கமாட்டேன் என்கிறார்கள்.
கட்டாயத் தேவை என்பது எங்கே தலை தூக்கி நிற்கிறதோ அங்கே அடங்கவேண்டுமல்லவா?
ஏற்பதல்லவா வளர்ச்சி?
அன்புடன் புகாரி