பரியின் குட்டி ஃபஹீம்

கட்டுடைத்த காவிரியே
கறுப்பழகின் இடுப்பழகே
சொட்டிவிழும் பௌர்ணமியே
சொர்ணமணிப் பூஞ்சிரிப்பே
தொட்டிலாடும் தாரகையே
தோளிலேறும் ராட்டினமே
எட்டிமனம் தாவுதடா
எடுத்துன்னை முத்தமிட

மண்ணுக்கு மழைவேண்டும்
மரத்துக்கு வேர்வேண்டும்
விண்ணுக்கு மீன்வேண்டும்
விடிவுக்குக் கதிர்வேண்டும்
கண்ணுக்கு ஒளிவேண்டும்
கவிதைக்கு நான்வேண்டும்
பெண்ணுக்கு எதுவேண்டும்
பெற்றெடுக்கும் பேறுவேண்டும்

பாசமென்றால் பரிக்குட்டி
பரியுள்ளம் பனிக்குட்டி
ஏசுவதாய் நடித்திடுவாள்
இதயமெலாம் துடித்திடுவாள்
தூசுதொட முடியாத
தூயமனம் பெற்றவளே
காசுபணம் மதியாத
கற்பூரப் பொற்பூவே

மாலிக்கென்ற மகராசன்
மடிவிழுந்த மலர்க்கொடியே
மாலிக்கின் மாளிகையில்
மங்காத சுடரொளியே
மாலிக்கின் கொடிபறக்க
மணிகளீந்த குலக்கொடியே
வாழியநீ பல்லாண்டு
வற்றாத வளமோடு