உறைபனிக் கூடுகளில் தெறுநிலத் தமிழன் - கட்டுரைகள்


அந்தரங்கமாய்ப் பேசும் குரல்கள்

வாழ்வெளியில் வழியும் துளிகள் - எதிர்மறை

வாழ்வனத்தில் வழியும் துளிகள் - எதிர்மறை

கிலியில் கிளியைக் கிழித்து -

என்னை மீறும் எண்ணங்கள்

இதயம் மீறும் எண்ணங்கள்

எனக்குள் நான்

என்னோடு நான்

எனக்கு நிலா உனக்குச் சூரியன்

ஒளிக்கீற்றின் படிகளில் உடைந்த பாதங்களில் உதடுகள் - எதிர்மறை

நெஞ்ச நதிக்கரையில் ஒரு புல்லின் நடனம்

பனிவிழும் கவிவனம்

பனிக்குள் மறைந்த புற்கள்

டிராபிகல் கோல்ட் கன்றி


* * *

#வெளிச்ச_அழைப்புகள் என்னும் என் முதல் கவிதைத் தொகுப்பில் வெளியான கவிதை இது.

2016-06-18

இந்த வாரம் நான் தீவிரவாதியா என்று கேட்டு என் முகநூல் பக்கம் ஒன்றை நிறைத்திருந்தேன். அதைப் பார்த்து எங்கே நான் மதவெறியனாய் ஆகிவிட்டேனோ என்ற கவலை வந்துவிட்டது என் ரசிகர்கள் சிலருக்கு.

எது உண்மை என்பதை நான் அவர்களுக்குச் சொல்லவேண்டும். அதை இந்த என் பழைய கவிதையோடு தொடங்களாம் என்றே இந்தக் கவிதையை மீண்டும் இப்போது இட்டேன்.

அமெரிக்கா பெட்ரோலைக் கொள்ளையடிக்க மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. செய்யட்டும்.

அமெரிக்கா எதிரிநாடுகளின் வேரறுக்கு ரகசியப் படை உருவாக்கிக் காரியம் முடிந்ததும் கலைத்துவிடுகிறது. செய்யட்டும்.

அதெல்லாம் செய்தால்தான் அதனால் வல்லரசாக இருக்க முடியும்.

ஆனால் என் பார்வையில் வல்லரசு என்பது உண்மையில் நல்லரசு மட்டுமே!

இப்படி அரசியல் சித்துவிளையாட்டு விளையாடும் அரசு வல்லரசு அல்ல வல்லூறு அரசு என்றே சொல்வேன்.

தன் வலிமையைக் கொண்டு ஊடகத்தை அடிமையாக்கி பொய்யைப் புறட்டை உண்மையாக்கி உலகிற்குக் காட்டினாலும், உலகம் நம்ப மறுக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஆனாலும் அமெரிக்கா தொடர்ந்து தன் வழியில் சென்றுகொண்டுதான் இருக்கிறது. இருக்கட்டும்.

தீவிரவாதி என்ற சொல்லைத் தொடர்ந்து 1.6 பில்லியன் மக்கள் மீது அலட்சியமாகச் சொல்லிச் செல்வதென்றால் என் அறம்கொண்ட மனம் கேள்வி கேட்கத் தொடங்குகிறது.

ஒரு பாபர் மசூதியை இடித்ததால், அரசியலில் மதம் தொடர்பான சில அட்டூலியங்களைச் செய்வதால் இந்துக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பது சரியா?

0.000001 சதவிகிதத்தினர் பித்துப் பிடித்துக் கிடப்பதால் உலக முஸ்லிம் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது சரியா?

அவ்வளவுதான், மற்றபடி நான் மதம் பின்னால் செல்வதே அது என்னை ஈர்த்ததே இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதனால், அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத உறவுகளால், அவர்களின் அழிச்சாட்டியங்களால், நான் பட்டபாடும் படும்பாடும் கொஞ்சநஞ்சமல்ல.

மதம் என்னை எதுவும் செய்ததில்லை, அறிதலில்லாத மனிதர்களால்தான் என்னை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கிறார்கள்.

நான் இறுதியாக முன்வைக்கும் ஒரு விடயம் இதுதான்.

ஒரு செயல், ஒரு கருத்து, ஒரு செய்தி அல்லது ஒரு ஒலிபரப்பு எதன் அடிப்படையில் வருகிறது என்று பாருங்கள். அதன் அடிப்படை ஆன்மிகமா? அல்லது அரசியலா? அதைப் பார்க்காமல் நீங்களும் அறிவிழந்து போகாதீர்கள். தூண்டுகிறவர்களுக்கு அது மிகவும் வசதியாகிவிடும் என்பதை மறவாதீர்கள்.

நான் தீவிரவாதியா? என்று கேட்டேன். நீங்கள் எல்லோரும் இல்லை இல்லை இல்லை என்றீர்கள்.

அப்படியானால்... முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் எவரோ ஒருசிலர் தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பது!

(29) வயதென்ன?


கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

"கவிஞனே... கவிஞனே... உன் வயதென்ன?"

நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ..... கவிஞனே... கவிஞனே....
உன் வயதென்ன....?"

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ... போ....
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்...
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது

* (ஜூன் 2003)
மகளிர்தின வாழ்த்துக்கள்

பார்வை நொறுக்கும் விழியோடு
பழி வென்று முடிக்கும்
நடையோடு
காட்டுத் தீயாய் எழுகின்றாள்
பழங் கட்டுகள் எரித்து
நிமிர்கின்றாள்

விகிதம் கேட்டா அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா
தருகின்றாள்
உரிமை மீட்டே எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே
அதுவென்றாள்

மலரின் மென்மை விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை
வேர்கொண்டாள்
நிலவின் எழிலாய் வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள்
வெடிக்கின்றாள்

கருணை அன்பு மனங் கொண்டாள்
உயர் காதல் நட்பு
உயிரென்றாள்
தாய்மை தூய்மை தானானாள்
வளர் அறிவின் தெறிப்பில்
ஓடுடைத்தாள்

பெண்களின் நலன், முன்னேற்றம், உரிமை என்று விரும்பும் பெண்கள் நேசிக்கத்தக்கவர்கள். ஆனால் பெண்களின் உரிமைக்காக யாசகம் கேட்கும், மடிப்பிச்சை கேட்கும் பெண்களால் பெண்ணுரிமை கிடைக்குமா? பெண் முன்னேற்றம் வளருமா? 

பெண்ணின் முன்னேற்றமும் உரிமையும் நலனும் பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு பெண்ணின் கைகளில்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். தன் பிள்ளைகளில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாகப் பார்த்தால் சமமாக வளர்த்தால். நாளை என்பது சம உரிமை கொண்டதாகத்தானே மலரும்?

ஒரு பெண் தான் பெற்ற பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுப்பதும், தன் சகோதரனைவிட அவள் எதிலும் இளைத்தவல் இல்லை என்று உறுதிபட வளர்ப்பதும், திருமணச் சந்தைகளில் பெண்ணை கடைப் பொருளாய் ஆக்காமல், இணையானவளாய் நிறுத்தி மணமுடித்து வைப்பதும் பெண்களின் கைகளில் இல்லையா?

எந்த ஒரு முன்னேற்றமும் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீடு சமுதாயத்தை மாற்றும் சமுதாயம் உலகை மாற்றம்.

ஆண்களுக்கு அதிகாரம் வேண்டும், அதற்காக அவர்கள் தங்களின் உடல்வலிமையைக் காட்டுவார்கள், ஆணாதிக்க சமூகத்தின் பழைய சிலந்தி வலைகளைக் கொண்டு மூட வருவார்கள், மதம் என்ற பெயரில் அடக்கியாள வருவார்கள், இன்னும் என்னென்ன வழிகள் உண்டோ அனைத்திலும் முயல்வார்கள். 

பெண்கள் என்ன செய்ய வேண்டும்? பெண்களால் முடியாதது என்று ஒன்று உண்டா? வருங்கால சமுதாய மரங்களின் விதைகள் உங்கள் கையில். ஆம் பிள்ளைகள் உங்கள் கைகளில்...

பெண்ணுரிமைக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களின் நலனுக்காக சிறு துரும்பையேனும் நகர்த்தும் பெண்களுக்கு என் மகளிர்தின வாழ்த்துக்கள்.

- அன்புடன் புகாரி
‪#‎தமிழ்முஸ்லிம்‬

தாடி - மீசை

தாடி நிச்சயமாக கம்பீரத்தின் அடையாளம்தான். ஆண்மையின் முக்கியமான அங்க அடையாளமாகத்தான் தாடி தொடக்கம் முதலே பார்க்கப்படுகிறது

கொரவம் மிக்க மனிதனின் அடையாளமாகவும் தாடி பலநேரங்களில் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அப்படியே தாடியை ஐந்து பிளேட் சவரக்கருவியால் சரசரவென்று மழித்துவிட்டு கண்ணாடியில் பார்க்கும்போதே ஏற்படும் உற்சாகத்தை ஒவ்வொரு நாள் அதிகாலையும் இன்றே புதிதாய்ப் பிறந்ததைப் போல அனுபவிக்கும் ஆண்கள்தாம் உலகில் அதிகம்.

அன்றெல்லாம் இரண்டுநாள் தாடியோடு நின்றால், அவன் ஏதோ காதலில் தோல்வியடைந்தவன் அல்லது எதையோ பறிகொடுத்துவிட்டு நிற்பவன் என்று அர்த்தம். ஆனால் இன்று இரண்டு நாள் தாடியோடு இருக்கும் இளைஞன் உற்சாகமானவன்.

பூனை முடியோடு வளரும் முதல் தாடி மீசை என்பது பதின்ம வயது வாலிபர்களின் குறுகுறுப்பும் கிளர்ச்சியும் ஆகும்.

இன்றைய இளம் பெண்களில் பலருக்கும் ஒட்ட மழித்த ஆணின் முகத்தைவிட கதிரறுத்த வயல் போன்ற தாடி முக ஆணைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது. ஆனாலும் சில பெண்களுக்குத் தாடியைக் கண்டாலே பிடிக்காது. இது என்ன வேசம் என்று வசைபாடவே தொடங்கிவிடுவார்கள்.

ஒரு தாடி நண்பர் என்னிடம் ஒருமுறை சொன்னார். உன் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று தன் மனைவியிடம் கேட்டாராம். ஒரே ஒரு முறையாவது உங்கள் கன்னங்களை முழுதாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னாராம்.

தாடி வைத்தால் கண்டுகொள்ளாத பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீ தாடி வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் ஒரு பெண் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

தாடியும் வழுக்கையும் ஆண்களுக்குச் சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளால்தான் வருகிறதாம். தாடியும் புல்தரைகளைப் போல கோடைகாலத்துக்கும் குளிர்காலத்துக்கும் மாறுபட்டு வளர்கின்றது.

கோடையில் தாடியின் வளர்ச்சி குபீர் என்று செழுமையாய் இருக்கும். ஆகவே பாலைவனத்தில் உள்ளவர்களின் தாடி இயல்பாகவே மிக விரைவாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும்.

உலகின் பெரும்பணக்காரர்கள் பெரும்பாலும் சுத்தமாக மழித்துவிட்டு அழகு காட்டுபவர்கள். மரத்தொழில், போர், குத்துவெட்டு போன்றவற்றில் ஈடுபடுவோரில் அதிகமானோர் தாடி வளர்ப்பவர்களாய் இருக்கிறார்கள்.

தாடி வைப்போர் பலவகைப்படுவர்.

தாடி வைப்பவர்களில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டினர் சோகத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள்தாம். ஒரு இருபது விழுக்காட்டினர் சோம்பேறிகள் என்று சொல்லலாம். மீதமுள்ளவர்கள் கவர்ச்சி, கம்பீரம், அடையாளம், மதம், அரசியல் என்று பல காரங்களுக்காக தாடி வளர்ப்பவர்கள்.

விரதம் இருப்பவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டவர்கள் தாடி வளர்க்கிறார்கள்.
சன்னியாசிகள் தாடி வளர்க்கிறார்கள்.
பிச்சைக்காரர்கள் தாடி வளர்க்கிறார்கள்.

தங்களை அறிவு ஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் முகமாக சில கவிஞர்கள் எழுத்தாளர்கள் தாடி வளர்க்கிறார்கள்.

கேரளாவில் பாதிக்குப் பாதி தாடி வளர்ப்பவர்கள்தாம்.

அந்தக்காலத்தில் எஜிப்துதான் தாடி வளர்ப்பதில் பெயர்போன நாடு. அதற்கு இணையாக இந்தியாவும் இருந்தது. இந்தியாவில் தாடி வளர்ப்பது என்பது ஞானிகளின் அடையாளம்.

எஜிப்தில் தாடியை மிக சிறத்தையாக அழகுகூட்டி வண்ணம் தீட்டி இடையிடையே தங்கச் சரிகைபோல் அமைத்து பெருமைபட்டுக்கொள்வார்களாம்.

மத அடிப்படையில் பார்த்தால் இந்துமதத்தில் பலரும் முஸ்லிம் மதத்தில் சிலரும் தாடி வளர்க்கிறார்கள். கிருத்தவ மதத்தவர் பெரும்பாலும் தாடியை மழித்துவிடுகிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தாடிக்கு சில அரசுகள் வரி விதித்தன. தாடியைக் கண்டாலே உறக்கமும் பிடிக்காத எலிசபெத் ராணி தாடி வரியில் பிரபலமானவர்.

சரி, இனி தாடியும் தமிழ் முஸ்லிமும் என்ற நிலைப்பாட்டிற்கு வருவோம்.

அன்று தாடி தமிழ்முஸ்லிகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. தாடி வளர்ப்பவர்கள் தாடியை பல மாதிரியாக வளர்த்தார்கள்.

மிக நீண்ட தாடி, அழகு படுத்தப் பட்ட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் நீளமுள்ள தாடி. மீசை இல்லாமல் வெறுமனே தாடி. தலையைச் சுத்தமாய் மழித்துவிட்டு தாடியும் மீசையும் மட்டும்.

இவர்கள் இப்படி தாடி வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்.

அந்தக் காரணங்களைக் காண்பதற்கு முன்னர், வரலாற்றுக் குறிப்புகளின் படி நபி பெருமானார் அவர்கள், சில வேளைகளில் தாடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மழுங்க சவரம் செய்திருந்தார்கள், சில வேளைகளில் நிறைய முடி வைத்திருந்தார்கள், சில வேளைகளில் மிகக் குறைவாக முடிவைத்திருந்தார்கள். நபி பெருமானார் தனக்கென விருப்பமான ஒரு சவரத் தொழிலாளியையும் வைத்திருந்தார்.

இறைவன் ஆண்களுக்கு என்று தாடியைத் தந்திருக்கிறான் என்றால் அதை மனிதன் மழிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றர்.

இறைவன் தாடியை மட்டுமா தந்திருக்கிறான், நகத்தையும்தான் தந்திருக்கிறான், மீசையையும் தலை முடியையும்தான் தந்திருக்கிறான்.

நகத்தை அப்படியே விட்டுவிடலாமா? அது இஸ்லாத்தில் கூடாதல்லவா?

மீசையை அப்படியே விட்டுவிட்டால் என்னாகும்? வாயை மூடிவிடும், உணவு உண்ணும்போது சுகாதாரமாக உண்ண முடியாது. அதனால் நோய்வந்து மடியவேண்டும். இதுவும் இஸ்லாத்தில் கூடாதல்லவா?

மாற்று மதத்தவர்களிடமிருந்து வேறுபாடு காட்டுவதற்காக தாடி வளருங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். மாற்று மதத்தவர்களுள் மிக முக்கியமானவர்கள் தாடி வளர்க்கிறார்கள் என்பதால் இதுவும் செல்லுபடியாகாது.

அதுமட்டுமல்லாமல் மாற்றுமதத்தவர் செய்வதை செய்யக்கூடாது என்று சொல்வது அறிவில்லாமலும் ஆழ்ந்து வாசிக்காமலும் கூறுவதாகும். மாற்றுமதத்தவர்களின் மதச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்தான் இன்னொரு மதத்தவர் செய்யக்கூடாதே ஒழிய உலகப் பழக்க வழங்கங்களை செய்யக்கூடாது என்று குர்-ஆன் தடுக்கவில்லை. அப்படித்தடுத்தால் மாற்றுமதத்தவர் உணவு உண்கிறார்கள் நாம் உண்ணக்கூடாது என்றளவுக்கு அபத்தம் ஆகிவிடும்.

முஸ்லிம்கள் தாடி வளர்ப்பதில் மதம் நுழைய வேண்டும் என்றால் முக்கியமான ஒன்றைப் பார்க்க வேண்டும். அதுதான் குர்-ஆன். குர்-ஆன் எந்த முஸ்லிம்களையும் தாடி வளர்க்கக் கட்டாயப்படுத்தவில்லை. அது ஏதும் சொல்லாத நிலையில், வேண்டும் என்றால் வைத்துக்கொள், வேண்டாம் என்றால் விட்டுவிடு என்பதே பொருளாகும்.

மற்றபடி ”தமிழ்முஸ்லிம் தாடி” என்ற இந்த சிட்டுரையே (சிறுகட்டுரையே) தேவையில்லை.

எப்படியோ முன்புபோல் இல்லாமல் இன்றெல்லாம் தமிழ் முஸ்லிம்களிடையே தாடி வளர்க்கும் எண்ணம் கிட்டத்தட்ட அழிந்தேபோய்விட்டது. யாரும் யாரையும் தாடி வைக்கச் சொல்லி பரிந்துரைப்பதும் இல்லை. அப்படிப் பரிந்துரைத்தாலும் கேட்பதற்கு பெரும்பாலான ஆட்கள் இல்லை.

இப்படித்தான் மதத்தில் இல்லாததையெல்லாம் பாலைவனக் கலாச்சாரப் பழக்கம் காரணமாக பலகாலமும் உட்புகுத்தியே வந்திருக்கிரார்கள். அந்த அறியாமை மெல்ல மெல்ல நீங்கும் நிலையில், தாடி பற்றிய பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.
#தமிழ்முஸ்லிம்

கப்பல் - விமானம் - பயணம் - திரைகடல் - திரவியம் - பாலை - துயர்

*

விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது

கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

*

தமிழில் சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவின் பிரிவை பாடும் பாடல்களைப் பாலைத்திணை என்று அழைப்பார்கள். அது பாலைவனத்துக்கு நிகரான துயர் மிக்கவை.

இந்த உலகத்தில் முதன் முதலில் பாலைத்திணை பிரிவுத் துயரில் படாத பாடு பட்டவர்கள் இன்றும் படுபவர்கள் தமிழ்முஸ்லிம் பெண்கள்தாம் என்பேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் படித்தவர்களாய் அன்று இருக்கவில்லை. படித்துமுடித்து வெளிவந்தால் வேலை கிடைக்காத நிலையே அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு அன்று இருந்தது. அது இன்றும் நீடிக்கும் அரசியல் என்றாலும் அன்று அது கொடூரமாய் இருந்தது.

வேலைக்குச் சேரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் சிபாரிசு தேவை, தமிழ் முஸ்லிம்களின் பணியிலிருப்போர் உறவுகள் தேவை. அது ஏற்கனவே பதவிகளில் இருந்த சமூகத்தினருக்குத்தான் அது பல்கிப் பெருகி இருந்தது.

தமிழ்முஸ்லிம்கள் பெரும்பாலும் மளிகைக்கடை வைத்திருப்பார்கள், கறிக்கடை வைத்திருப்பார்கள், மீன்கடைகளில் வேலை பார்ப்பார்கள்.

அவர்களுக்கு அன்று இருந்த ஒரே சம்பாதிக்கும் வழி திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதுதான்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று வள்ளுவன் சொன்னால் திரைகடல் ஓடித் திரவியம் தேடு என்று ஔவை சொன்னாள். அதை எந்தத் தமிழன் கேட்டானோ கேட்கவில்லையோ, தமிழ் முஸ்லிம்கள் உறுதியாக அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் முதலில் கப்பல் ஏறினார்கள் இப்போது விமானம் ஏறுகிறார்கள்.

ஆரம்பத்தில் சிங்கப்பூர் மலேசியா சிலோன் பர்மா செய்கோன் என்று ஆண்கள் மட்டும் செல்வார்கள். சம்பாதித்து அவ்வப்போது வீட்டுக்குப் பணம் அனுப்புவார்கள். சில காலம் பணமே அனுப்பமாட்டார்கள். சில நேரம் அங்கேயே செத்தும் போயிருப்பார்கள்.

பெண்கள் என்னவோ கணவன் உடன் இல்லாத தனித்த துயர வாழ்க்கையையே எப்போதும் வாழ்வார்கள். அது இன்றும் இன்றும் நீடித்தவண்ணம்தான் இருக்கிறது.

இவர்களின் வெளிநாட்டுத் தனிமை வாழ்க்கையின் நீட்சி 70 களுக்குப் பிறகு அரபு நாடுகளில் பெருமளவுக்குக் படர்ந்தது. அமெரிக்கா கனடா என்றும் இன்று எல்லைகள் உலகலவில் விரிந்தன.

அதிராம்பட்டிணம் போன்ற ஊர்களுக்குச் சென்றால், அங்கே ஆண்களே தென்படமாட்டார்கள். அப்படித் தென்படுபவர்கள் எல்லோரும் ஒன்று எல்லாம் முடித்து ஓய்வில் உள்ளவர்களாய் இருப்பார்கள் அல்லது ஒரு மாத விடுப்பில் ஊர் வந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஊர் செல்வதற்கு ஆயத்த நிலையில் இருக்கும் இளைஞர்களாய் இருப்பார்கள்.

ஒரு நடுத்தர ஆண் ஊரில் இருந்தால் நாக்கைப் பிடிங்கிக்கொண்டு சாகும் அளவிற்கு மானக்கேடான விசயம் அம்மாதிரியான ஊர்களில்.

கட்டை விளக்கமாறாய் இருந்தாலும் எனக்குக் கப்பல் விளக்கமாறுதான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்குப் பெண்கள் அந்த வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டிருப்பார்கள்.

கப்பலுக்கு போன மச்சான்
கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
எப்பதான் வருவிங்க
எதிர் பார்க்குறேன்
நான் இரவும் பகலும்
தொழுது தொழுது கேக்குறேன்.

இந்தப்பாடலைக் கேட்டுக் குமுறிக் குமிறி அழுத தமிழ் முஸ்லிம் பெண்களின் துயரை எத்தனை கவிதைகளில் வடித்தாலும் அத்தனை கவிதைகளும் அதனுள்ளேயே கரைந்து மூழ்கிவிடும்.

திருமணமான பத்தாவது நாள் புறப்பட்டு துபாய் போனவன் மகனுக்கு நாலு வயதானபோது திரும்பி வருகிறான். இரவில் சேர்ந்து படுக்கப்போகும்போது அந்த நாலு வயது அழுது அடம்பிடித்துக் கத்தியது ‘இந்த மாமாவை வெளியே போகச்சொல்லு’

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழ்முஸ்லிம்களை உண்டியல் வியாபாரிகள் வளைத்துப் பிடித்தார்கள். அந்த தொழிலில் வெகுவாக தமிழ் முஸ்லிம்களை ஈடுபடுத்தினார்கள்.

சிலர் முறையாகப் பணமாற்றுச் சேவைகளைச் செய்து பெரிதாக வளர்ந்தார்கள், சிலர் உண்டியல் பணி செய்தார்கள், சிலர் குருவிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால் வட்டிக்குப் பணம் தரும் சேவையை மட்டும் அவர்கள் செய்வதே இல்லை.

செய்கோன் பர்மா இந்தோநேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் வைரக்கல் வியாபாரிகள் ஆனார்கள்.

தமிழ்முஸ்லிம்கள் எத்தனை ஏழையாய் இருந்தாலும் தன் வீட்டுப் பெண்களை மணமுடித்துக்கொடுக்க பெருமளவில் சீர்வரிசைகள் செய்ய வேண்டிய கலாச்சாரத்துக்குள் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை மணமுடித்துக்கொடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு குடும்பத்தையே அழித்துமுடிக்கும் அளவுக்குப் பொருள் தேவைப்படுகிற விசயமாகவே தமிழ்முஸ்லிம்கள் பலரிடமும் இருக்கின்றது.

இதன் காரணமாகவும் பதினைந்து வயதை எட்டிய சிறுவனை எப்படியாவது கப்பலேற்றிவிட குடும்பம் முழுவதும் முழுமூச்சாய் இயங்கும்.

நான் பம்பாயில் இரண்டு மாதங்கள் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி இருந்தேன். படித்துவிட்டு துயாய் சவுதி செல்பவர்களைவிட எதுவுமே படிக்காமல் புறப்பட்டவர்கள்தான் ஏராளம்.

சவுதியோ துபாயோ சென்று அங்கும் நல்ல நிலையில் இருக்கும் கல்வியோ அறிவோ அவ்வளவாக அவர்களுக்குக் கிடையாது.

பம்பாயில் ஒரு அதிரை இளைஞன் சொன்ன ஒரு சொல் இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவன் கற்றவன் இல்லை. எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டதால் உடனே செல்ல வேண்டும் என்ற அவமானம் அவனைக் கொன்றுதின்றுகொண்டிருந்தது.

”அரபிக்குக் குண்டிகழுவியாவது நான் வூட்டுக்குப் பணம் அனுப்புவேன்”  என்றான். எனக்குக் கண்ணீர்ப் பெருக்கெடுத்துவிட்டது. இந்த அறியாமை நிலையிலிருந்து இவர்களைக் காப்பாற்று இறைவா என்று வேண்டிக்கொண்டேன்.

தமிழ்முஸ்லிம்களே தாராளமாக வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள், செல்வதற்கு முன் உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நல்ல கல்வி, சுயவேலைத் திறன் என்று தேர்ச்சிபெற்றபின் செல்லுங்கள். அங்கே செல்லும் போது மனைவி மக்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

நாற்பதுநாள் மனைவியைப் பிரிவதையே இஸ்லாம் விரும்பவில்லை. நாலுமாதம் என்பது அதிகப்படியான பிரிவு நாட்களாக இருக்க வேண்டும் என்றும் அது சொல்கிறது. அதன்பின் எல்லாமே பிழைதான் - காரணங்களாக எதைச் சொன்னாலும்கூட அது பிழைதான்.

பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்