வன்முறையாளர்கள் மனிதர்கள் இல்லை
மனிதர்கள் மட்டுமே ஓர் இனத்தில் இருக்கமுடியும்
மனிதர்கள் மட்டுமே ஒரு மதத்தில் இருக்க முடியும்
மனிதர்கள் மட்டுமே ஒரு சாதியில் இருக்கமுடியும்
வன்முறையாளர்கள் மனிதர்கள் இல்லை
அன்புடன் புகாரி

உன் மௌனம்

 

மௌனம், அது விவரிக்கவே முடியாத ஒரு சொல்.  அது எதைச் சொல்லும் என்று சற்றே சிந்திக்கத் தொடங்கினால், அது காடுகொள்ளாப் பூக்களாய்க் பூத்தவண்ணம் இருக்கும், கண்டு முடியாத பேரண்டக் கோள்களாய்க் கூடிக்கொண்டே போகும், ஊற்றி முடியாத நயாகாராவாய்க் கொட்டிக்கொண்டே இருக்கும், எண்ணி முடியாத எண்ணங்களாய் பெருகிப் பெருகி நம்மை மூழ்கடித்துக்கொண்டே இருக்கும்.

என்றால், மௌனத்தின் நீள அகலம்தான் என்ன?  இந்தப் பிரபஞ்சத்தின் நீள அகலம் எது வென்றுகூட ஓர் நாள் நாம் சொல்லிவிடலாம் ஆனால் மௌனம் சொல்லும் சேதிகளின்... உணர்வுகளின்... வாழ்க்கையின்... நீள அகலத்தை மட்டும் சொல்லிவிடவே முடியாது.

அதிலும் இந்தக் காதல் இருக்கிறதே காதல். அதில் நிலவும் மௌனத்தைவிடப் பெரியது அந்தக் காதலும் இல்லை, உயிர்க் காதலியும் இல்லை. ஆமாம் மௌனம் சூழ்ந்திருக்கும்போது எழுந்து நிற்கும் காதல் இருக்கிறதே அது சொல்லிச் சிவந்த எத்தனை உயர்வான காதலையும்விட பன்மடங்கு உயர்வானது. கைகளின் வளைவுகளில் கனிந்து கிடக்கும் எத்தனை அற்புதமான காதலியையும்விட அற்புதமானது.

அப்படியான மௌனம் படுத்தும் பாடு இருக்கிறதே அதைத் தாங்கிக்கொள்ள ஆயிரம் பல்லாயிரம் தேவர்களால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். உயிரை எடுக்கும் அந்த மௌனமே உயிரைத் தருவதாயும் நிலவும். அந்த மௌனம் கலைந்துவிட்டால்? எப்படி கலையும்?  ஒன்று சம்மதமாகிக் கைகூடும் அல்லது சருக்கி விழுந்து சருகாகும்.

ஆனால் அது சம்மதத்தையே தொட்டு சந்தோசத்தையே அள்ளிக் கொட்டினாலும், மௌனத்தில் தவித்துத் தவித்து ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒரு கோடி முறை பூத்துப் பூத்து சொர்க்க மணம் வீசிய அந்த விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை இழந்ததாகவே ஆகிப்போகும்.

இங்கே ஒரு கவிஞன் தன் காதலியின் மௌனத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து வார்த்தைகளாய் வெடித்து ஒரு கவிதை எழுதுகிறான், வாருங்கள் வாசிக்கலாம்.


உன் மௌனம்
நித்தமும்
ஒரு புதுப் புத்தகசாலை

உன்
மௌனத்துக்கு
உரை வரையத் துவங்கித்தான் -

என்
தூரிகைக்குப்
பொற்சிறகுகள் வெடித்தன

என்
வெற்றுத்தாள்கள்
தங்கத்தாள்களாக்கப்பட்டு
வைர வைடூரியங்கள்
பதிக்கப்பட்டன

என்
கனாக்களுள்
இந்திர நந்தவனங்களத்தனையும்
நறுமணத்தைக் கொட்டிவிட்டு
விதவைகளாய்த் திரும்பின

அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா

என்
உறக்கத்தைத்
தின்று தீர்க்கும் பசிப்பற்களா

நிலவொளீ...
உனக்குத் தெரியுமா

மார்கழிப் பிஞ்சுப்புல்
வைகறைப் பொழுதுகளில்
பனிப் பன்னீர்க் குடங்களைக்
கர்வமாய்ச் சுமக்குமே

அப்படித்தான்
என்
உட்கிளியும்
உன் மௌனத்தைச் சுமக்கிறது

ஒருமுறை
என் உறங்கா விழிகளின்
இமைக்கதவுகள்
அடித்து விலகும்முன்
ஓராயிரம் முறை
உன்
மௌனத்தின் நினைவுகளாய்த்
துடித்து நெளிகிறது

இந்த உன்
மௌனம் கலைக்கப்படும்
பொற்பொழுது எப்பொழுது

உன்
பொல்லாத
மௌனத்தை இழுத்து
முடிவுரை சொல்லச்செய்யும்
திடமனமும் எனக்கில்லை

அடர்ந்து கொண்டே போகும்
அதன்
அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும்
உர உயிரும் எனக்கில்லை




உலகம்

 

எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் இதழில் வெளியான விதை இது. தமிழ்நாட்டின் மாநில அடையாளக் கவிதையாக ந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை இக்கவிதையைத் தேர்வு செய்து இந்தியில் மொழிபெயர்த்து வார்சிகி 86ல் வெளியிட்டது. இக்கவிதையை இந்தியில் மொழிபெயர்த்தவர்  டெல்லி பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜமுனா.

இருந்தும் ஒரு கவிதை நூல் வெளியிடும் எண்ணம் அன்று எனக்கு வரவே இல்லை. நானொன்றும் அத்தனை பெரிய கவிஞன் இல்லை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்வேன். தீபம் எஸ் திருமலை அவர்கள் என்மீது அன்புகொண்டு நூலின் தொகுப்பு, அச்சு, வெளியீடு ஆகிய எல்லாம் தானே செய்வதாகவும் நான் ஒப்புதல் தந்தால் மட்டும் போதும் என்றும் என்னை ஊக்கப்படுத்தினார். ஆனாலும் என் மனம் உடன்படவில்லை.

கனடா வந்துதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. காரணம் இணையமும் ஈழத்தமிழர்களும்தான். இணையத்தில் என் கவிதைகளை வெளியிட்ட என். சொக்கனின் ’தினம் ஒரு கவிதை’, என்னை ஆஸ்தான கவிஞராய் அங்கீகரித்த தமிழ் உலகம் மின்குழுமம், என் கவிதைகளை நேசித்த அகத்தியர் மின்குழுமம் என்று பாலைவனத்தில் தவித்துக் காத்திருந்த என்னை கவிதைகளுக்குள்ளேயே வாழவைத்தப் பொற்காலத்தின் தொடக்கம் அது.

என் மேடைத் தமிழும் கவிதைகளும் நேசத்துக்குரியவனவாகிப் போக நான் கனடா வந்திறங்கிய தொடக்க காலத்தில் என்னை மேடைகள் பலவற்றிலும் பாசத்தோடு ஏற்றிய டொராண்டோ வாழ் ஈழத்தமிழர்கள் -குறிப்பாக உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம், மற்றும் கீதவாணி வானொலி.

என் பழைய கவிதைகள் சிலவற்றையும் புதிய கவிதைகள் சிலவற்றையும் கோத்து வெளிச்ச அழைப்புகள் என்ற என் முதல் கவிதை நூலை கனடாவில் வெளியிட்டேன். அந்நூலில் இரண்டாவது கவிதையாக இக்கவிதையைச் சேர்த்தேன்.


சிரியுங்கள்
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது

அழுங்கள்
நீங்கள் மட்டுமே அழுகிறீர்கள்

பாடுங்கள்
அந்த மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன

பெருமூச்செறியுங்கள்
அவை காற்றினில்
காணாமல் போகின்றன

கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்

கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை

வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்

ஆனால்
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்

விருந்தளியுங்கள்
உங்கள் அறை அமர்க்களப்படுகிறது

கையேந்துங்கள்
எங்கும்
மனிதர்களே தென்படமாட்டார்கள்

வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது

ஆனால்
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை

ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது

இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்

நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது

நம்பிக்கை கொள்ளுங்கள்
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து


வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்

1999ல் கனடா வந்தேன். உதயன் பத்திரிகை என் கவிதை ஒன்றிற்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கிறது. கீதவாணி வானொலியில் கவிதை பற்றி உரையாட கலைவேந்தர் கணபதி ரவீந்திரன் அழைக்கிறார். அதுவரை கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தவன் கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். எழுதி வானொலியில் வாசித்தவற்றையும் உரையாடியவற்றையும் சுருக்கி இறுக்கி கவிதையாய் வடிக்கிறேன். ஏனெனில் என் மொழி கவிமொழிதானே? அக்கவிதையை என் முதல் கவிதை நூலான வெளிச்ச அழைப்புகளில் முதல் கவிதையாக வெளியிட்டேன். அதுவே இக்கவிதை.

கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை