மாப்பிள்ளை வாழ்த்து


பூக்களின்
முகங்களில் பொன்னழகு
பொன்னழகோ
இந்தப் பெண்ணழகோ

கண்ணழகும்
இவள் கனிவழகும்
விண்ணளக்கும்
வனத் தேன்விளைக்கும்

மாமகனே
மணிக் கணித்தளமே
தேவனவன்
உன் கவர் முகத்தில்

ஆனவரை
சுடர் ஏற்றிவைத்தான்
தூயநதிக்
குணம் பூட்டிவைத்தான்

கைகோர்ப்பீர்
உணர் மெய்கோர்ப்பீர்
மனங்கோர்ப்பீர்
என்றும் சுகம்சேர்ப்பீர்

வாழ்வாங்கு
இந்த வான்நிறைத்து
வாழ்கவென்றே
நின்று வாழ்த்துகின்றேன்

சேவியர் மகளுக்கு வாழ்த்து


அழகழகு ரோஜா
அன்பழகு ரோஜா
மழையழகு ரோஜா
மானயழகு ரோஜா
கலையழகு ரோஜா
கவியழகு ரோஜா
இலையழகு சிவக்க
என்முத்த ரோஜா

பழகுதமிழ் ரோஜா
பனிமுத்து ரோஜா
இளயநிலா ரோஜா
இனியநதி ரோஜா
விலையில்லா ரோஜா
விண்ணாளும் ரோஜா
இளரோஜா முகத்தில்
என்முத்த ரோஜா

தினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து


இணையத்தில் கேள்விப்பட்டேன்
இலக்கியத்தில் தொட்டுப்பார்த்தேன்
அணையாத தாகத் தோடும்
அணுவிசையின் வேகத்தோடும்

மழைக்காலக் காற்றைப்போல
மனத்தோடு ஒட்டும்-எழுத்தால்
நினைக்காதத் தளமும்தொட்டு
நீச்சலிடும் வெற்றிச்-சொக்கா

உனதுமுகம் கண்டதும்-இல்லை
உனதுகுரல் கேட்டதும்-இல்லை
தினமும்வரும் தினமொருகவிதை
தெளிவாகக் காட்டியதுன்னை

கனவுலகின் வாயிலைத்திறந்து
கவிதைகளில் நாளும்-விருந்து
மனதிலொரு மத்தளங்கொட்டி
மணக்கும்புது நாளும்-மலர்ந்து

எழுத்தோடு குடித்தனம்நடத்தும்
எனதருமை லவணா-நாகா
கழுத்தோடு கைகள்பூட்டி
கதைபேச இன்னொரு-வரவா

எழுத்தாளன் மணவாழ்வென்றால்
இனிப்புக்கு எல்லைகளில்லை
பழுத்தநல் கனிகள்போல
பழகுசுகம் வேறெவர்க்குண்டு

நேரிலே வருவார்சிலபேர்
நினைவுகளும் தூரமாய்நிற்கும்
நேரிலே வரும்வழியில்லை
நெஞ்சத்தால் வருவேனங்கே

தூரிகைப் பந்தமும்வெல்லும்
தூரங்கள் மனங்களுக்கில்லை
வாரியே இறைப்பேன்-பூக்கள்
வாழ்த்துக்கள் அள்ளிநிறைத்தே

இன்பத்தில் இனித்தேகிடந்து
துன்பத்தில் துணையாய்நின்று
உள்ளங்கள் பின்னிப்பிணையும்
உயிர்க்காதல் கொண்டேவாழ்க

கண்ணோடு இமையாய்க்கோர்த்து
கல்யாண உறவைப்போற்றி
விண்முட்டும் இன்பம்-சேர்த்து
வளமோடு நெடுநாள்வாழ்க

மகளின் பிறந்தநாள் வாழ்த்து


ஆண்டுகள்
ஆயிரம்
உருண்டோட

மீண்டும்
மீண்டும்
இவ்வினியநாள்

வேண்டும்
சுகமுடன்
மலரட்டும்

பொன் மகளே வாழ்க
பசுந் தளிரே வாழ்க
மனம் நிறைந்தே வாழ்க
தினம் சிரித்தே வாழ்க

தீபாவளி வாழ்த்துக்கள்


இருளகற்றும்
தீபமே
இதயமாகட்டும்

கருணை அன்பு
எங்குமே
நிறைந்து ஒளிரட்டும்

புதிய வானம்
புதிய பூமி
விரைந்து மலரட்டும்

போற்றி போற்றி
நேயம் காக்கும்
நாட்கள் வளரட்டும்

இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்

நிச்சயித்தவளுக்கு வாழ்த்து


நியாயமான
காத்திருப்புகளுக்கு
நிச்சயம்
புனிதத்துவமுண்டு

உள்ளம் அள்ளும்
வாசம்
காத்திருந்து
கிள்ளியெடுக்கும்
மல்லிகைக்குத்தான்

வாழ்த்துக்கள்
உன்
பிறந்தநாளுக்கு

1985

மணநாள் வாழ்த்து


திருமண வாழ்த்து

ஆனந்தத் தேனூறுதே
அன்புச் சுடர் - உங்கள்
மணவிழா நாளறிந்தே...
மாணிக்கத் தேர்மீதினிலே
முல்லைக்கொடி - உங்கள்
மரோபா கைகோத்தே...
வானெங்கும் ஒளிவீசியே
வனப்போடு - என்றும்
பேரின்ப பவனிவரவே...
நானிங்கும் பூத்தூவியே
கவிதாவனம் - நின்று
நயமோடு வாழ்த்துகின்றேன்...

நாட்டிய அரங்கேற்றம்


சங்கத்தமிழ் மணம் வீசிவரும்
சந்திரப் பொன்னெழில் மேடைதனில்
சந்தனக் கிண்ணங்கள் பேரழகைச்
சிந்திடும் நாட்டிய அரங்கேற்றம்
இந்தப் புவி தனில் வேறெவர்க்கும்
என்றும் கிடைக்கா மகுடங்களை
எந்தன் கண்மணிகள் சூடிக்கொள்ள
எழிலாய் கலையாய் நிகழட்டுமே

பேராசிரியர் பசுபதி


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும்மேல்
தமிழ்நாட்டை விட்டுத்
தமிழறியா நாடுவாழ்ந்தும்
முத்தமெல்லாம் தமிழுக்கே
என்று...

கன்னித்தமிழோடும்
கணித்தமிழோடும்
கற்பூரக் காதல்பூண்டு...

ஒட்டிக்கிடக்கும்
உச்சிவான மச்சுயேறிய
பொன்மதியே...!

மாசற்ற மரபோடு
மணம்வீசும் எண்ணங்களால்
தூசற்று வாழ்கின்ற
நற்பண்பின் அதிபதியே...!

அன்புக் கவிமதியே...!
அண்ணன் பசுபதியே...!

அவைக்கழைத்த உங்கள்
அழகுமொழிக்கு
கவியடியேனின்
காலை வணக்கங்கள்!

O

சந்தவசந்தத்தில்
உங்கள் தலைமையில்
நெஞ்ச நன்றியைச்
சிந்திப் பாடிட
இந்தநல் வாய்ப்பினைத்
தந்த தலைமைக்கு
முந்தித்தருகிறேன்
வந்தன நன்றிகள்...!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பொன்னான பிறந்தநாள்
புகழேந்தும் பிறந்தநாள்
கண்ணோர ஆனந்தம்
கவிபாடும் பிறந்தநாள்
அன்பான உள்ளங்கள்
அமுதூட்டும் பிறந்தநாள்
வளமோடு நலம்சேர
வாழ்த்தவரும் பிறந்தநாள்

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா சிரிப்போடும்
நயாகராப் பொழிவாக
நெடிதுயர்ந்து வாழ்கவாழ்க

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
என் இதயவெளி வாழ்த்து

இன்பம் மலரும் பிறந்தநாள்
கண்ணில் ஒளிரும் பிறந்தநாள்
என்றும் வளரும் பிறந்தநாள்
உள்ளம் குளிரும் பிறந்தநாள்

அன்பில் மிளிரும் பிறந்தநாள்
விண்ணும் அருளும் பிறந்தநாள்
எண்ணம் மணக்கும் பிறந்தநாள்
விண்ணில் ஒளிரும் பிறந்தநாள்

அன்னை மகிழ்ந்த பிறந்தநாள்
கண்கள் சிரிக்கும் பிறந்தநாள்
கைகள் அணைக்கும் பிறந்தநாள்
உள்ளம் சிலிர்க்கும் பிறந்தநாள்

உள்ளம் வாழ்த்தும் பிறந்தநாள்
உயிரை நிறைக்கும் பிறந்தநாள்
கைகள் வணங்கும் பிறந்தநாள்
எல்லாம் அருளும் பிறந்தநாள்

மணிசார் மணநாள் வாழ்த்து


குதிச்சுக் குதிச்சுமனம்
குத்தாலந் தாவுது
வெதச்சத் தாலிக்கொடி
விண்ணேறிப் பாயுது

மதிச்சு மதிச்சுத்தான்
மணவாழ்வு கூடுது
நெனச்சி நெனச்சித்தான்
நெஞ்சுமணி பாடுது

வருசம் வளரத்தான்
உறவும் வளருது
புருசன் பொண்டாட்டிப்
பெருமை புரியுது

கருச மணியோடு
காதல்மணி உரசுது
புருச மணியோடு
பிரேமமணி ஒலிக்குது

நாப்பத் தஞ்சாகி
நல்வாழ்க்கை மிளிருது
மூப்புக் கண்ணோரம்
மெய்க்காதல் ஒளிருது

தோப்புக் குயிலிரண்டு
தோப்பாகிப் போனது
தோப்புக்குள் நாலு
தோப்பாகி வாழுது

கண்ணில் நீரானேன்
கனிந்த பாகானேன்
எண்ணம் நெய்யாக
எரியும் சுடரானேன்

இன்னும் பல்லாண்டு
இனியும் சிறப்போடு
வண்ணம் விண்ணாக
வாழ வாழ்த்துகிறேன்

செந்தீ வளர்க


சுழல் பந்தென
களத்தில் இறங்கிய
செயல் வீரனின்
வர்த்தகச் சோலை

தழல் கொழுந்தெனத்
தாவி எழுந்தது
தமிழ் மகனிவன்
நற்பணி வாழ்க

நிழல் போலவே
வணிகர் தேவையில்
நலம் பேணிடும்
இளைய நிலவனே

குழல் இனிமையும்
செந்தீச் சுடரும்
குணம் ஆக்கியே
வெற்றி குவித்திடு

நெஞ்சார வாழ்த்துகிறேன்


பிறைநிலவாம் விஜயலஷ்மி
பொன்மகனாம் கார்த்தியுடன்
குறைவற்ற வளத்தோடும்
கொண்டாடும் குணத்தோடும்
சிறைவிட்ட சிட்டுக்கள்
சிறகடிக்கும் சிலிர்ப்போடு
நிறைவாக வாழ்ந்தோங்க
நெஞ்சார வாழ்த்துகின்றேன்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

மனித மனமெனும்
மயக்க நிலங்களில்
கருணைப் பூவனம்
குழுமிப் பூத்திட

புனித நாயகன்
பிறந்த நாளிதில்
இனிய வாழ்த்துக்கள்
இதய வாசலில்

அலைகள் தொடுத்திடும்
கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும்
பாலின் வெண்மையாய்

இரவைத் தேற்றிடும்
நிலவின் இனிமையாய்
உறவும் உலகமும்
வாழ வாழ்த்துக்கள்

யேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கூவத்தில் கார்த்திகை தீபமா?


பிப்ரவரி 2008
இதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது!

திமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.

வந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.

அந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)


சுருக்குப் பைக்குள்
சூரியனை மறைக்கப்பார்க்கிறாள்
சூனியக் கிழவி
எங்கள் அலமேலு பாட்டி

குறைப்பது நாய்க்கழகு
கொத்துவது நாகத்திற்கழகு
குழைவது பொங்கலுக்கழகு
குணம் ஒன்றே பெண்ணுக்கழகு

எவ்வளவு ஊதினாலும்
பலூன் ராக்கெட்டாகிவிடாது
எவ்வளவு பெருத்தாலும்
பன்றி யானையாகிவிடாது

அழியாக் கவிதைகள் என் கைகளில்
அடுக்களைப் பருப்பு உன் கைகளில்
சபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்
உனக்குச் சில்லறைதானே பாட்டி

பதவியில் இருந்தால் உனக்குப் பெயர்
பதவியே எனக்கு இன்னொரு பெயர்

நீயும் நானும் படைப்பாளிகள்தாம்
என் படைப்பு தங்குவது இதயத்தில்
உன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்

எனக்குச் சன்மானம் சரித்திரம்
உனக்குச் சன்மானம் ஏப்பம்

என்னால் இந்த உலத்தையே
உருட்டிப் பார்க்க முடியும்
உன்னால் லட்டுதானே பாட்டி
உருட்டிப் பார்க்க முடியும்

நீ ஊதி அணைக்க
நான் உன்வீட்டு சிம்ளியல்ல
என்றும் அணையாத சூரியன்

இன்றுதான் நான்
தரங்குறைந்துவிட்டேனோ
என்று சந்தேகப் படுகிறேன்
ஏன் தெரியுமா

உனக்கு நான் ஒரு
கவிதை எழுதலாமா

குட்டிச் சுவருக்குப்
பாலாபிசேகமா
கூவத்தில்
கார்த்திகை தீபமா

ஏப்ரல் 2001

199101 சுகைல் குட்டித் தம்பிக்கு


என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.

அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.

வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)



சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா

அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா

வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா

குட்டி குட்டி அக்காக்கு
ஸ்கூலுக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா

துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா

வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா

மொழியாக்கமென்றால்...


சிந்தையில் ஊறும்
சொந்தக்
கருத்தெழுதியே
வலுப்பெற்ற
கரமிது
மொழியாக்கமென்றால்
கொஞ்சம்
முடங்கிக்கொள்கிறது

வேறென்ன இருக்கு?


ஊறும் விரல் சிவக்கும்
ஊறிடும் வாய் சிவக்கும்
தீரத் தீரச் சுரக்கும்
தீதரும் நதிமூலம்

வாரி வாரி இறைத்தும்
வற்றா நிலம் கண்டு
மாரி மழையும் வெட்கும்
ஆழக் கடலும் தோற்கும்

அடிமன ஆசையில்
அம்மணக் கோலத்தில்
முடிவற்ற துடிப்புகள்
மண்மீது விழும்வரை

198204 விழி எழுதும் புது சிறு வரிகள்


விழி எழுதும் புது சிறு வரிகள் - உன்
விழி எழுதும் புது சிறு வரிகள் 
என் இயத்திலே கவிதை

நிலாவில் ஆடும் பூவிலே
உலாவும் நெஞ்சின் ராகமே

அழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே
அழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே

மனசுத் தீவினில் உன்நினைவு
தனித்து எரிவதும் நீங்காது

தினம் தினம் அந்திநேரம்
தவிக்கும் நெஞ்சில் ஊறும்
என்தாகம் தீர்க்கும் பூமுகமே வா

உறக்கம் மறந்து போனேன்
உயிரைக் கேட்டு வந்தேன்

பருவ நெஞ்சிலே அலையே அலையே
அலைகள் முழுவதும் உன் நினைவே

நெருப்பின் சிகப்பு தாகம்
விலகும் நேரம் சேரும்
விழி ஏங்கும் மாலைகள்
கதைபலசொல்லும்

குரங்குபோல் தாவிற்று கொம்பில்


அரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்
பரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ
வறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்
குரங்குபோல் தாவிற்று கொம்பில்

பொற்குணவாளருக்கு வாழ்த்து


பொற்குணவாளரே பொற்குணவாளரே
போதுமும் புன்னகையையே - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே - இனியும்
அற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே
ஆளை விழுங்காதீர் - நல்லக்
கற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்
கதைத்து மயக்காதீர்

நெற்பயிர் சரியும் சூரியன் சரியும்
நீங்களோ சரிவதில்லை - உங்கள்
சொற்களில் செயலில் உலகமே நிற்பினும்
சுத்தமோ குறைவதில்லை - இந்தக்
கற்பிலா உலகில் எப்படி நீங்களும்
காலங்கழிக்கிறீரோ - உம்முன்
நிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்
நேரமுங் கரைகிறதே!

தமிழ்ச்சங்கத்துக்கு வாழ்த்துரை


எத்திசை பெயர்ந்து
வாழ்ந்தாலும்
எத்தனை மொழிகள்
பயின்றாலும்
பித்தரைப் போலவே
பிதற்றிடுவர்
பேசும்மொழி அன்னைத்
தமிழின்றி

பத்தரை மாற்றுத்
தங்கமிவர்
பாசத்துடன் தமிழ்
வேண்டுகிறார்
இத்தனை தூர
தேசத்தில்
இன்பத் தமிழுடன்
வாழுகின்றார்

சித்திரை பூக்கும்
புத்தாண்டில்
செந்தமிழ் தேடும்
உத்தமர்கள்
முத்திரை பதிக்க
எட்டுகின்றார்
முத்தமிழ்ச் சங்கம்
கட்டுகின்றார்

மொத்தமாய் என்றன்
விழியிரண்டும்
மூழ்கியே போயின
நீர்பெருக்கில்
சத்தமாய் என்மடல்
வாசிக்கிறேன்
சத்தியம் உலகெலாம்
சேர்ந்துவிடும்

இத்தரை மீதினில்
யாவருக்கும்
இந்நாள் திருநாள்
ஐயமில்லை
உத்தமர் இவர்தம்
உணர்வுகளை
உயர்த்திப் பாடியே
வாழ்த்துகிறேன்




தமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்

தமிழ்நிலா

(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)


அஞ்சிலா பிஞ்சிலா
அன்னைமடி மஞ்சிலா
ஆரம்பம் ஆனதெப்போ
பிறப்பிலா - நாளும்
அமுதூறும் எழுத்தொன்றே
நெஞ்சிலா - தாகம்
அலைமோதத் தமிழோடு
கொஞ்சலா

கண்ணிலா கருத்திலா
கற்பனைப்பொற் சரத்திலா
கண்மூடிக் கூறுவாய்
பொன்னிலா - சஞ்சிகைக்
கனவுகளில் விழியிரண்டும்
ஊஞ்சலா - அந்தக்
கணம்தேடிப் பொழுதுக்கும்
ஏங்கலா

சொல்லிலா சுவையிலா
சுடர்வீசும் பொருளிலா
சுகமெதிலே சொல்லுவாய்
கவியிலா - பண்பைச்
சுரண்டாத முத்துப்பொன்
மொழியிலா - என்றும்
சுயநலமே நோக்காத
எழுத்திலா

விருப்பிலா பொறுப்பிலா
விரைவுபணி நெருப்பிலா
உயிர்க்கூடு பூப்பதெப்போ
கனவிலா - உந்தன்
விருப்பத்தைப் பொறுப்பாக்கும்
தரத்திலா - விரைவை
வெற்றிக்கு வேராக்கும்
சிறப்பிலா

அழகிலா அறிவிலா
அன்பெனும் பொழிவிலா
ஆசைமனப் பெருமையெது
நெஞ்சிலா - நீயும்
அத்தனையும் பெற்றுவிட்ட
நினைவிலா - அன்பை
அழகான அறிவாக்கிய
பண்பிலா

சொந்தமண் பாசமா
இந்தமண் வாசமா
எதிலுந்தன் கவனங்கள்
தமிழிலா - தமிழின்
யாதுமே ஊரென்ற
சிறப்பிலா - இருந்தும்
எந்தைதாய் முந்தையர்தம்
நிலத்திலா

பணியிலா படிப்பிலா
புத்தம்புது எழுத்திலா
பரவசம் கொண்டதெப்போ
வெண்ணிலா - இனியும்
பல்லாண்டு நடைபோடும்
தெளிவிலா - வெற்றிப்
பாதையை உருவாக்கும்
கனவிலா

குறைவிலா பேட்டியா
குரல்வழிக் கொஞ்சலா
குற்றாலச் சிரிப்போடு
குளியலா - என்னும்
காற்றலை வீச்சுகளில்
தனியுலா - இன்னும்
கட்டுரை கவிதைகளோ
கணக்கிலா

வளர்க்கவா வளைக்கவா
வாயாற வாழ்த்தவா
வாவென்று அழைத்ததேன்
சொல்நிலா - என்றன்
வாழ்த்துக்கு ஒளிருமே
கறுநிலா - அரங்கக்
கரவோசை கூட்டுமே
திருவிழா

மலர்விழா பொன்விழா
மாணிக்க மணிவிழா
மங்கைநீ காணவேண்டும்
முழுநிலா - குவியும்
மலர்மாலை பொன்னாடை
பெருவிழா - எழுத்தால்
மகுடங்கள் ஏந்திவா
தமிழ்நிலா

உயிரெழுத்து


உயிர் கரைத்து ஊற்றாமல்
கவிதைப் பயிர் வளர்க்கும்
கதையேது

உயர் கவிதான் உயிரெழுத்து
எதிலும் உயிர் சேர்க்கும்
திருவெழுத்து
இன்றைய ஒளிர்வாய்
நேற்றுகளில் சிக்காத
நெய்வாச
நம்பிக்கைச் சுடர்கள்

விழித்தளத்தில்
இமைக்கரைகளைப்
பெயர்த்தோடும்
வற்றாத
வண்ண வண்ணக்
கனவு நதிகள்

நித்தம் நித்தம்
கையணைவில்
நீண்டு வளரும்
புத்தம் புதுச்
சந்தோசங்கள்

முதன்மைபெற்று
முடிவற்று
உயிர்தொட்டுத் தழுவட்டும்
புத்தாண்டுப் புலர்வினிலே

உதய
புத்தாண்டிலென்
இதய 
வாழ்த்துக்கள்

அகவியாடும் இதயமயில்


கதைகதையாய்க் கவிதைகளாய்
எதைவடித்து நிமிர்ந்தாலும்
அதைவடிக்கும் முன்னெனக்குள்
அகவியாடும் இதயமயில்
பதைபதைப்பு அடங்கிமெல்லப்
புத்துயிராய்ப் பூப்பதனால்
எதையெதையோ எழுதியெழுதி
எந்நாளும் துயில்கின்றேன்

*

எடுத்தப் பிறப்பிங்கெனக்கே
எழுத வென்றிருக்கலாமோ
குடித்தக் கள்ளொன்றிருப்பின்
கன்னித் தமிழன்றி வேறோ
வடித்தக் கவித்தேனே
இவ்வையம் மூடிக்கிடந்தும்
கொடுக்கும் கனலென்றனுள்ளே
குறைந்தழியக் கண்டிலேனே

ஒரு கவிஞனின் முகவரி


கண்களில் கவர்ச்சி
கருத்தினில் முதிர்ச்சி
பழக்கத்தில் இளமை
பண்பினில் தாய்மை

அவைதனில் அடக்கம்
அன்பினில் பெருக்கம்
உழைப்பினில் பெண்டுலம்
உள்மனம் தாண்டவம்

சகிப்பினில் நெருப்பு
சமத்துவக் காற்று
எடுப்பதில் வானம்
கொடுப்பதில் பூமி

எனக்குள் இருப்பதெலாம்






இந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)





எனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்
....இதயத்தின் ராகமெலாம் ஒப்பாரியோ
உனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்
....உள்ளத்தின் ஈரவனம் கிட்டாதோ
மணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்
....மடியினில் துயின்றிடவே யாசிக்கிறேன்
பிணக்கம் எனக்கொன்றும் விளங்கவில்லை - நான்
....பிறந்ததே ஏனென்றும் புரியவில்லை

திருமண வாழ்த்து


எப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.


இன்பத்தில் கண்கள் கோத்து
....துன்பத்தில் கைகள் கோத்து
உள்ளங்கள் பின்னிப் பிணையும்
....உயர்காதல் கொண்டே வாழ்க

கண்ணோடு இமையாய்ச் சேர்ந்து
....கல்யாண உறவைப் போற்றி
விண்ணேறும் சுகங்கள் பார்த்து
....வளமோடு நெடுநாள் வாழ்க

நித்திரைகள் பத்து


நான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன? ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே!


விழித்தாளில் கவியேந்தி
விரல்நாவில் மொழிசிந்தி
அழியாத நினைவுகளை
ஆளுக்கொரு பரிசாக்கி
பழிச்சொல்லை விதித்தலையில்
பக்குவமாய்ச் சூட்டிவிட்டு
நழுவுகின்ற நாகரிகம்
நற்காதல் நித்திரையில்

கண்களினால் அழைப்பிட்டு
கட்டுடலை வெளிக்காட்டி
பெண்ணினத்தின் நாணமின்றி
பேய்க்காமக் காளையிடம்
தன்னைத்தான் விலைபேசும்
தரம்குறைந்த பெண்களின்று
மண்டலத்தில் மலிந்ததெலாம்
பெண்மைகொண்ட நித்திரையில்

கட்டிலிலே காணுகின்ற
காமமெனும் தேனமுதை
மொட்டுமுகம் மலரமணம்
முடித்துவந்த நாள்முதலாய்
கட்டியவன் கையணைவில்
கண்டிடாத மனைவிவேறு
கட்டழகன் காணுவது
ஆண்மைகொண்ட நித்திரையில்

பத்துமாத பந்தமுடன்
பெற்றெடுத்தப் பிள்ளையினைத்
தத்தென்ற முறைகூறித்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு
நித்திரையைக் கண்டுவிடும்
நெஞ்சமற்ற பெண்களின்று
எத்திசையும் இருப்பதெலாம்
தாய்மைகொண்ட நித்திரையில்

மூவெட்டு வயதினிலும்
முறையாகப் பெறுகின்ற
பூவையரின் பொன்னாளாம்
பூப்பெய்தும் நன்னாளை
காவிரியாய்க் கண்பெருக
கண்டிடாத பாவையவள்
சாவினுக்குள் சரிவதெலாம்
இயற்கைகொண்ட நித்திரையில்

செய்யாத கொலையொன்றைச்
செய்தானெனக் கூண்டிலேற்றி
பொய்யான சாட்சிகளின்
புளுகுகளில் தீர்ப்பளித்து
மெய்யான நிரபராதி
மரணப்படி மிதித்தபின்னர்
மெய்யறியும் மேன்மையெலாம்
நீதிகொண்ட நித்திரையில்

காலமெலாம் மெழுகாகக்
கண்ணீரில் சுகங்கண்டு
வாழவெண்டும் என்மகனென
வாழவைத்த தெய்வங்களை
மாலையிட்ட மறுநாளே
மணந்தவளின் சொல்கேட்டு
காலடியில் கசக்குவது
ரத்தபாச நித்திரையில்

இன்னுமின்னும் அவனியிலே
எத்தனையோ நித்திரைகள்!
என்றென்றும் நீதிநாடி
எங்கெங்கும் அன்புசிந்தி
ஒன்றுசேர்ந்த ஞானத்தால்
ஒருகுறையும் இன்றிமக்கள்
நின்றுவாழ நினைப்பினெந்த
நித்திரைக்கும் நித்திரைதான்

திருமண அழைப்பிதழ்


பேரன்புடையீர்

நிகழும்
1985ம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 1ம் நாள்
பிறை 18 காலை 9 முதல் 10க்குள்

என்
வாலிப வானுக்குள்
உலாவர வருகிறாள்
ஒரு வசீகர நிலா

என்
பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள்
ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும்
என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள்
ஓர் இளமயில்

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி
பெரியோர்களின் நல்லாசியுடன்
பட்டுக்கோட்டை
86, காளியம்மம் கொவில் தெரு
மணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய
தாம்பத்ய தீபம் ஏற்றுகின்றோம்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்.... வாரீர்....

பிரியங்களடர்ந்த இதயமுடன்
புகாரி

200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து


இப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)


வலையில் விழுந்து இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதில் வந்துவிடு

யாகூ பேச்சின் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு

உன் நுழைவுக் கதவொலி
இணையம் கேட்டால்
அத்தனை நிரலியும் திறக்கும்

உன் அஞ்சல் பூமழை
கணினியில் விழுந்தால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ கூகுள் பேச்சில்
வணக்கம் சொன்னால்
யாகூவுக்குக் காயச்சல் வரும்

நீ விடுமுறை என்று
வீட்டில் கிடந்தால்
வலைத்தளம் எல்லாம் உறைந்துவிடும்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

கணினி செல்லக் கூடாதென்று
அம்மா ஆணையிட்டார்

அஞ்சல் மீன்கள்
இரண்டில் ஒன்றை
இணைப்பின் தடுப்பில் போட்டார்

வலையில் விழுந்து
இணையம் நுழைந்து
மடலில் கலந்த உறவே

வலையும் விழியும் உரசிக்கொள்ளும்
இணையப் பொழுதின் போது

யாகூ கரையில் காத்திருப்பேன்
கூகுள் விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
விரல்கள் தட்டும் அஞ்சல்

உனக்கு மட்டும் கேட்கும் எனது
கணினி சொடுக்கும் சத்தம்

ஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை


சந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏதோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.

நான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...


பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி
நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்பு விழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
நண்பா

ஒரு கிளியினை நான் கண்டேன்


ஒரு கிளியினை நான் கண்டேன்
என் மனதினைப் பறிகொடுத்தேன்
அந்தக் கிளியின் இருப்பிடமோ
ஒரு சின்னஞ்சிறு தங்கக்கூண்டு

வண்ண வண்ணச் சிறகுகள்தாம்
அந்தச் சின்னஞ்சிறு கிளியிடத்தில்
மெல்ல மெல்ல விரித்ததனை
எந்த வானிலும் பறந்திடலாம்

விரித்திட வழியில்லையே
அது பறந்திடும் நிலையில்லையே
தனிமையின் மஞ்சங்களில்
அது தழுவுது தன்னைத்தானே

அதிர்ஷ்டங்கள் ஓரிடத்தில்
வெறும் அவலங்கள் வேறிடத்தில்
வாழ்க்கைப் புயல் வெளியில்
இந்த வரங்களின் ராஜ்ஜியமே

200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்


கிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)


விலகாத கொஞ்சல் வேணும்
விரட்டாத நெஞ்சம் வேணும்
முடியாத முத்தம் வேணும்
மொறைக்காத கண்ணு வேணும்

கொஞ்சி கொஞ்சி பேசும்போது
கோடிப் பூவா பூக்க வேணும்
பிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு
பஞ்சுப் போல காக்க வேணும்

கன்னக் குழியில் விரலை விட்டு
காதல் கவிதை எழுத வேணும்
கண்ணப் பாத்து கனவக் கேட்டு
கையக் கோத்துச் சிரிக்க வேணும்

நீட்டிப் படுத்துக் கெடக்கும் போது
நெட்டி முறிச்சு அணைக்க வேணும்
நெஞ்சு முடியில கைய விட்டு
நெனைப்புத் தப்பி அலையவேணும்

மாத்தி மாத்தி கன்னங் காட்டி
ஊத்து முத்தம் கேக்க வேணும்
முத்தம் முடிச்சு நிமிரும் போது
மீண்டும் தொடங்க சொல்ல வேணும்

கழுத்துக்குள்ள ஊரும் போது
காதல் மூச்சு சேர வேணும்
கட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு
கெட்டித் தேனச் சொட்ட வேணும்

கண்ண மூடி நிக்க வெச்சி
கரும்பு எறும்பா ஊர வேணும்
செவக்கச் செவக்க முத்தம் வெச்சி
சொர்க்கக் கதவைத் திறக்க வேணும்

மெத்து மெத்து மேனி எல்லாம்
பொத்திப் பொத்தித் தழுவ வேணும்
பொத்துக் கிட்டு ஆசை வந்தா
ஒத்துக் கிட்டு சாக வேணும்

198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்



ஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்


உயிரே நலம்தானா
உறவே சுகம்தானா
மன ஓடத்தில் நீ பாய்மரம்
உனை நான் நினைக்கிறேன்

கணிமடி ஏந்தும் கடிதங்களில்
உன் கனவு கண்டேன்
தனிமடல் வீசும் வசந்தங்களில்
உன் தவிப்பு கண்டேன்
உயிரே உயிர்க்கருவே
உனை நான் நினைக்கிறேன்

ரசனைக் கடலின் ஆழத்திலே
ஓர் முத்தெடுத்தேன்
ரகசியமாய் அதன் காதினிலே
என் காதல் சொன்னேன்
அழகே அலைச்சுருளே
உனை நான் நினைக்கிறேன்

ஏனோ எங்கும் காணாமல்
எனைத் தேடுகிறேன்
ஏற்றியச் சுடராய்
உன் விழிச் சிமிழில் நானிருந்தேன்
விழியில் விழித் துளியில்
உனை நான் நினைக்கிறேன்

நிலவே போதும்
நெருப்பினில் வேகும் காலங்களே
நிழலுக்கும் வேண்டாம்
நீயற்ற வெறுமை வாழ்வினிலே
நாளை உனைக் காணும்
மனம் பாடும் காவியம்

ஒரு சங்கக் காதல்


எங்கும் எழில் பொங்கும் நீ
திங்கள் முக மங்கை
அங்கம் தமிழ்ச் சங்கம் நீ
தங்கும் இடம் எங்கே

வங்கம் எனப் பொங்கும் நீ
எங்கள் நிலச் சிங்கம்
இங்கும் வெளி எங்கும் நீ
தங்கம் எனில் அங்கே

மஞ்சம் உன் நெஞ்சம் அதில்
துஞ்சும் என் நெஞ்சே
வஞ்சம் உனில் மிஞ்சும் எனில்
தஞ்சம் தரும் நஞ்சே

வஞ்சிக் கொடி கொஞ்சும் என்
நெஞ்சம் உன் நெஞ்சே
தஞ்சம் உன் நெஞ்சம் இனி
வஞ்சம் ஏன் மிஞ்சும்

ஒரு சினிமாக் காதல்


நாணம் குடிக்கிறதே உன்னை
நான் குடிக்கக் கூடாதா

மௌனம் மேய்கிறதே உன்னை
நான் மேயக் கூடாதா

தயக்கம் தின்கிறதே உன்னை
நான் தின்னக் கூடாதா

மயக்கம் இழுக்கிறதே உன்னை
நான் இழுக்கக் கூடாதா

ஆசை கவ்வுகிறதே உன்னை
நான் கவ்வக் கூடாதா

அச்சம் பறிக்கிறதே உன்னை
நான் பறிக்கக் கூடாதா

மிச்சம் இன்றி உன்னை
நீ என்னுள் கரைக்க வா

எச்சில் அரித்த என்னை
நான் உன்னுள் புதைக்க வா

அழகிய காதல் மலரே


அழகிய காதல் மலரே
என் ஆருயிர்க் காதல் கிளியே

பழகிய நாளாய் நிலவே
புதுப் பாலாற்றில் நீந்துது மனமே

குழைவது உன்னெழில் முகமே
என் காதலின் மொத்தமும் நீயே

அலைகளில் தவிக்கும் நுரையாய்
என் அணுக்களில் உனக்கென ஏக்கம்

மழையென விழுந்தாய் என்னுள்
என் மனதினை இழந்தேன் நானும்

விழைவது என்றுமுன் மனமே
அதில் உறங்காத நானோர் பிணமே

வளைக்கரம் குலுங்கிட வந்தாய்
என் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்

விலையேது உனக்கிவ் வுலகில்
என் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்

ராஜ முத்தங்கள்


இதய ஆழத்தின்
...இனிய வெளிகளில்
உதிரும் நினைவுகள்
...உணர்வைக் கூட்டியே
புதிய வாழ்த்தெனப்
...பொழிய வந்தன
ரதியுன் இதழ்களில்
...ராஜ முத்தங்கள்

ஒரு கிராமத்துக் காதல்


வெறிச்ச விழி மூடாம
வருத்தத்துடன் நானிருந்தேன்
பருத்திக் கொட்டை கண்ணழகே
பறிச்சிக்கிட்டே என்னுசுரை

வறுத்து வெச்ச முந்திரியே
வழுக்கிக்கிட்டே போகுறியே
தெறிச்சு விழும் முத்தழகே
தவிச்சிருக்கேன் பாரேன்டி

குறிச்சி வச்சத் தேதியில
கொறிச்சிப் பாக்க வேணுமடி
நரச்சமுடி ஆகும்முன்னே
நரம்பதிர வாயேன்டீ
அன்பே
என் வீட்டுத்தோட்டத்தில்
புதியதாய் மலரும்
பூக்களையெல்லாம்
உன் பெயரிட்டே அழைத்தேன்.

உன் கூந்தல் தோகையினின்று
பறந்து வந்து ஒற்றை முடி இறகை
என் பாடப் புத்தகத்தில்
பத்திரப் படுத்தினேன்

உன் தாவணிச் சோலையில்
பொட்டுப் பொட்டாய்த் தெரியும்
பூக்களில்
ஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்
இருந்துவிட ஏங்கினேன்

உன் கைகளுக்கு
எண்ணெய் தடவுவதை விட
என்னைத் தடவுவதே அழகு என்று
சினிமா வசனங்களெழுதி
சந்தோசப் பட்டேன்

ஆனால் நீ உன்
கல்யாணப் பத்திரிகையுடன்
என் கனவுகளை மிதித்துக் கொண்டு
யதார்த்த வாசலில் வந்து
நண்பரே என்று நின்றபோதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் செய்திருக்க வேண்டியவை
இவைகளல்ல என்று
அன்பே
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு

தினம் வெட்கப்பட்டு
வெட்கப்பட்டு
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு

உன் மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு

உன் கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்

உன் சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை உன்னுடன்
இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு

இவை அத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனிவரும் அத்தனைப் பிறவியிலுமே
இன்றுபோலவே துடித்துக்கொண்டிருக்கப்போகும்
என் அத்தனை உயிர்களையும்
இன்றே இப்பொழுதே எழுதிக்கொடுத்துவிடுகிறேன்

கனவுகள் ததும்பும் கருவிழிகள்..


கனவுகள் ததும்பும்
கருவிழிகள்
உணர்வுகள் மிளிரும்
சிறுஇதழ்கள்

தினமொரு அஞ்சலாய்
வந்துவந்து
மனதினுள் வார்ப்பது
பாற்குடங்கள்

வனமலர்க் குவியலில்
நின்றாடும்
வண்ணத்துப் பூச்சியின்
உள்ளமென

குணவதி மனரதி
வான்மதியே
என் நெஞ்சினில் பொங்குது
தேன்நதியே

பிறப்பதும் இறப்பதும்
நிகழ்ச்சிகள்தாம்
பிறக்கிறார் இறக்கிறார்
பலரும் இங்கே

குறிஞ்சியாய்ப் பிறப்பவர்
ஒரு சிலரே
நறுமலர் நீயும்
அதில் ஒன்றே

முல்லையும் மல்லியும்
கோத்தெடுத்த
நல்லதோர் கவிதையும்
எனக்குள்ளே

மெள்ளத்தான் அசையுது
பூத்து
சொல்லத்தான் காதலர்
வாழ்த்து

1998301 தீ மூச்சைத் தூதுவிடு


அவன்
அவளைச் சந்தித்தான்

அந்தச் சந்திப்பு
சிந்திப்பை முந்திக்கொண்டு
இதுதான் பந்தம்
இருவரும் சொந்தம் என்று
சந்தம் கட்டிச்
சிந்து பாடச் சொன்னது

அந்தி விரித்த
அரையிருள் பந்தியில்
இவன் இமைகள்
அவள் விழிகளிலும்
அவள் இமைகள்
இவன் விழிகளிலும்
பட படவென்று தட்டும்
தந்தித் தகவல்களால்
சிலிர்ப்புகளையும்
சிலிர்க்க வைத்துக்கொண்டன

இதய அருவிகள்
நிலவுக்குள் விழுந்து
கனவுக்குள் புரண்டோடி
நினைவுகளை ஈரமாக்கி
அவர்களின் சிந்தையைப்
பேதலிக்கச் செய்தன

ஆம்
அவர்கள் காதலித்தார்கள்

அவர்கள் மட்டுமே வாசிக்கும்
தனி ஏடுகளில் மட்டுமே
அழகழகாய்த் தட்டச்சேறியது
அவர்களின் காதல்

சில நாட்கள் நழுவி
காலத்துக்குள் விழுந்து
காணாமல் போனபின்
அவள் மனம்
அவசரமாய் நிதானமானது

மூச்சு முட்டிச் செத்தாலும்
முடிவெடுக்கும் முயற்சியின்
மன ஊஞ்சல் ஓயாது
பெண்களில் சிலருக்கு

கல்லூரிப் படிக்கட்டுகளை
கணிசமாகவே
தேய்த்துவிட்டிருந்தாலும்
அவளும் அந்தச்
சிலரில் ஒருத்தி என்னும்
விதிக்குள் சிக்குண்டாள்

காதல் வேறு
கல்யாணம் வேறு என்று
செழித்து வளர்ந்த
சமுதாயப் பாழ்மரத்தின்
ஆணிவேர் இதில்தானே
ஊட்டச்சத்தே உண்கிறது

பிறகென்ன
அவளுக்கே அர்த்தம் விளங்காத
போராட்டங்கள் அவளுக்குள்
மீண்டும் மீண்டும்
புதுப் புது வர்ணங்களில்
நாள்தோறும்
அவதாரம் எடுத்தவண்ணமாய்
இருக்கின்றன

எல்லா நிறங்களும்
முடிவில் கறுப்பாய்த் திரிவதுதான்
அவளுக்குப் புரியவே இல்லை

விளைவாய்
அவன்முன் அவள்
தன் மௌனத் தாவணியால்
முழு முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள்

அவனோ
கண்ணீர் அலை அடிக்கும்
அவன்
கண்களின் கரைகளில் நின்று
அவளின்
மெல்லிய இதயத்தின் காதுகளில்
மிகவும்
துல்லியமாய்ப் பாடுகின்றான்

O

நீ
ஈரங்கள் நீராடும் மேகம்
என்னோடு ஏனிந்த மௌனம்

கோழை மனக் காதல்
நாளும் நிறம் மாறும்
மாறாது என்னுள்ளமே

தேனோடையின் காற்றானவன்
உனைச் சேரவே புயலாகிறேன்

தீ மூச்சைத் தூதுவிடு
மணத் தேர்ஏறத் தேதி கொடு

வானம் மலர் தூவும்
வற்றாத குற்றாலம் வாழ்வாகும்

உனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
தேன் முல்லையே மொழியாததேன்

ஈரேழு ஜென்மங்கள்
நாம் வேறல்ல ஓருயிரே

நாளும் வழிமேலே
விழியல்ல
உயிர் வைத்தேன் இளமானே

கவிதைபற்றி கவிதை


கவிதைபற்றி
கவிதையெழுத வேண்டுமா
அதைக் கவிதைகேட்டு
கவிதைமனம் மறுக்குமா

கவிதைபற்றி
கவிதையென்ன எழுதுவேன்
எனைக் கவிதைகேட்கும்
கவிதைமனம் வாழ்த்துவேன்

தவிப்பதற்கும்
துடிப்பதற்கும் எதுவேண்டும்
இந்தக் கவிதைமகள்
வைத்திருக்கும் மனம்வேண்டும்

புவிநிறைந்த
பூக்களள்ளி தூவுகிறேன்
இவள் பொன்மனதை
வாழ்கவென்று வாழ்த்துகிறேன்

இணையமென்ற
மேடைதனில் சந்தித்தேன்
உயர் இதயமென்று
அப்பொழுதே சிந்தித்தேன்

அணை தாண்டும்
வெள்ளமென உணர்வுநதி
இவள் உள்ளமெங்கும்
தித்திப்பு அமுதநதி

தனைமறந்து
கவிரசிக்கும் கவிதைமலர்
என்றும் தரமிழந்து
போகாத தீபச்சுடர்

நினைவுகளில்
நிச்சயமோர் இடமுண்டு
நட்பு நெகிழவைக்கும்
இதயத்தின் அன்போடு

காதலர்தினம் வந்துவிட்டது


என்
உயிர்த்துடிப்பின் ஓசைகளை
இன்றுன்னிடம் எப்படியாவது
மொழிபெயர்த்துவிடவேண்டும்

அன்பே...
உன் தாவணிச் சிறகினைப்
பூவென விரித்து
என் காதல் வனத்துக்குள்
நீ பறந்து வரப்போகும்
அந்த நாள் எது?

கவிதையில் தொடங்கினேன்:
நீ இப்போதெல்லாம்
தாவணி போடுவதே இல்லை
செல்லம்...

தினம் கனவுகளின் தழுவல்களில்
கரைந்து போகும் உணர்வுகளை
நிஜமாய்ப் பொழியப் போகும்
அந்த நேரம் எது?

அடுத்த வரி கோத்தேன்:
உன் ”வால்பேப்பர்” விழிகள்
அலட்சியப் பார்வை வீசுகின்றன

கண்ணே
உன்னைக் காணாக் கணங்களில்
காற்றில்லாக் கூண்டுக்குள்
மூச்சுவிடத் தவிக்கும்
இளங்கிளி நான்
நினைவுப் புதை குழிக்குள்
நிமிசம் தவறாமல் மூழ்கும்
முது மான்

மேலும் தொடர்ந்தேன்:
புருவங்களைச் செதுக்கிச்
சீர்செய்ய விரைகிறாய்...

அன்பே இத்துடன் என்
தீ மூச்சைத் தூதுவிடுகிறேன்
வந்து விடு
உன் வரவுக்காக நான்
வழிமேல் விழியை அல்ல
என் உயிரையே வைத்துக்
காத்துக் கிடக்கிறேன்

கவிதையை முடித்துவிட்டேன்:
அஞ்சலைச் சொடுக்கும்முன்
என்னுடன்
விழி
மாற்றிக்கொண்டிருந்த
நீ
ஆள்
மாற்றிவிட்டாய்
என்ற
அவசரத் தகவல்...

பாவேந்தர் பிறந்தநாள் உறுதிமொழி


சொட்டுந்தேன் தமிழையள்ளி
கெட்டிப்பால் ஆடைகட்டி
பட்டுத்தழல் வீரம்தொட்டு
கொட்டுந்தேள் கோபம்பொத்தி

எட்டுத்திசை எங்கும் மின்னல்
வெட்டித்தான் கவிதை தந்தாய்
முட்டித்தினம் மூடர் எண்ணம்
விட்டுத்தான் ஓடச் செய்தாய்

சிரித்தாயே அழகின் சிரிப்பில்
சிலிர்த்தாயே இயற்கை வளத்தில்
தெறித்தோடும் முத்தே பாட்டில்
தீவீசும் கொள்கை வேட்டில்

விரித்தாயே புரட்சிக் கொள்கை
விவேகத்தின் வெற்றி முல்லை
நரிக்கள்ளம் கொண்ட மனத்தை
நறுக்கியே வைத்தாய் சொல்லில்

பாரதமும் இரண்டாம் பட்சம்
பைந்தமிழர் வாழ்வே உச்சம்
பாராட்டும் தமிழ்ப் பாவேந்தே
பாட்டாலே தந்தேன் முத்தம்

போராட்ட வெற்றிச் சுடராய்
புவிமீது தமிழர் வாழ
தேரோட்டிப் போனாய் உந்தன்
தரம்போற்ற வந்தேன் இன்றே

அமுதங்கள் அள்ளியே தந்தாய்
அழகுதமிழ் உயிரிலே வைத்தாய்
குமுறிவரும் எரிமலைக் குழம்பை
கவிதையினில் கொட்டியே தந்தாய்

சமுதாயப் போக்கினைச் சாடும்
சவுக்கோடு பாய்ந்தே வந்தாய்
தமிழுமோர் வரமெனக் கண்டாய்
தமிழினம் உயரவே நின்றாய்

விண்ணோடு கவிபாடும் சோலை
வேருக்குள் இரத்தமும் கொட்டி
மண்ணோடு கனிவளம் தோண்டி
மரமேறிக் கிளைகளும் வெட்டி

பொன்னோடு மணிகளும் செய்து
பொழுதுக்கும் உழைப்பினில் வாழும்
எண்ணிலா ஏழ்மையின் மாந்தர்
ஏற்றமே வாழ்வெனச் சொன்னாய்

போர்க்களம் வெல்லும் உன்றன்
புரட்சியின் கரங்களை நீட்டி
நேர்க்குரல் ஓங்கும் பாட்டால்
நெற்றியில் இட்டாய் பொட்டு

வேர்ப்பலா விதவைத் துயரம்
வேர்வெட்டித் தீர்த்தாய் மறவா
பார்புகழ் பாட்டின் வேந்தா
பாரதியின் தாசா வாழ்க

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழே
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழே

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழே
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழே

உறுதியெடு தமிழர் இனமே
உயர்த்திப்பிடி தமிழின் கொடியை
மறதிகளும் கொண்டார் தமிழர்
மறந்திட்டார் தமிழின் சொல்லை

குறுகித்தினம் சாவதும் தமிழோ
கெடுப்பதுவும் தமிழரின் பண்போ
உறுதிமொழி உயிரில் தைப்போம்
உலகெலாம் தமிழே வளர்ப்போம்!

---------------------------------
நினைவுநாள் ஏப்ரல் 21, 1891
பிறந்தநாள் ஏப்ரல் 29, 1964
**
பைசா கோபுரங்கள் நிமிரட்டும்



நாம்
கைகுலுக்கிக் கொள்வது
நம் விரல்களைச்
சரிபார்த்துக்கொள்ளத்தான்

தேவையற்ற
நகங்களை நறுக்கத்தான்

அழகு மிளிர விரல்களில்
சந்தனம் பூசத்தான்

பொய்ப்புகழ்ச்சி மோதிரமிடவோ
பொறாமை நெருப்பில்
தோல் கருக்கவோ அல்ல

உங்கள் விமரிசனங்களால்
எனக்குள் இருக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன

200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு


மின்னஞ்சல் ஓசை - அதை
மீட்டத்தான் ஆசை
மடிக்கணியின் பாஷை - அதில்
மூழ்கத்தான் ஆசை

கணிப்பலகை மடியிட்டு
கைவிரலின் நுனிதொட்டு
தட்டச்சும் ஓசை சங்கீதம்

நாளெல்லாம் தவிக்கவிட்டு
நகர்ந்துவரும் மடல் பார்த்து
மவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்

வலை தேடும் நேரம்
வன்களத்தின் ஓசை
சந்தோச சங்கீதம்

இணையத்தின் சாளரமெல்லாம்
இன்பத் தென்றல் தழுவும் சுகமாய்
இழையோடும் தகவல் சங்கீதம்

தட்தட்டும் அஞ்சல்களில்
துணைதேடும் உள்ளங்கள்
தடுமாறும் ஓசை சங்கீதம்

உரையாடும் மின்னறையில்
உயிரோடு உயிர்சென்று
உறவாடும் பாஷை சங்கீதம்

யாரென்றே கூறா
முகமூடி வேசம்
தவறான சங்கீதம்

எந்நாளும் ஏழை என்னை
அள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்
அன்புத்தாய் இணையம் சங்கீதம்

இந்தியா இன்பத்திரு நாடு...


நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.

1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.

இதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.



இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே
இருப்போரில் பலருக்கும்
அதுதானே கூடு

சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்
சிரிக்கின்ற தமிழ்நாடோ
வைரப்பொன் மாலை

வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த
வளமான மண்ணுக்குப்
பொருள்தந்த பெருமை

செந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்
செழித்தோங்க நெல்வார்க்கும்
எழிலான நஞ்சை

நானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்
நாளெல்லாந் தொழுகின்றேன்
நல்லதமிழ்ச் சொல்லை

வானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்
வார்த்தைக்குள் உயிராக
வரவேண்டும் ஓடி

மானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற
மண்தாண்டி வந்தும்மண்
மறந்ததே இல்லை

தேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த
டொராண்டோ தமிழர்க்கென்
நன்றிகளோ கோடி

தமிழ் மாதக் காதல்


தைத்தான்
அவளைக் கண்களால்

மாசில்லாக் காதல்
உனதென்றால்...

பங்குநீ சரிபாதி இனியென்
வாழ்வில் என்றாள்

சித்திரை விலக்கி
வெளியில்வா பொன்மலரே

வைகாசி என்று வாட்டும்
வரதட்சணை வேண்டாமெனக்கு
என்றான்

ஆ..நீ..தானடா
ஆண்மகனென்று

ஆடிப் பாடி
தாவணிச் சிறகடித்து
அவன் மடிவிழுந்தாள்
அவள்

புரட்டாசியில் ஊருக்கே சொல்லி
ஐப்பசிக்கும் விருந்தாக
கார்த்திகைக் கணையாழியும்
மார்கழித் தேன்நிலவுமாய்
அமர்களப்பட்டது
தமிழ்க்காதல் திருமணம்