மாம்பழக் கவிதை

மாம்பழத்தைப் பற்றி
ஆயிரம் கவிதைகள்

எழுதலாம்
ஆனால்
அதை
கத்தியால் நறுக்காமல்
அப்படியே
கடித்துத் தின்பதைப் பற்றி
ஒரே ஒரு
கவிதைதான்
எழுதமுடியும்
அது

வார்த்தைகளால்
ஆனதில்லை


ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்

கொஞ்சுமுகப் பிஞ்சுமகன்
பாலச்சந்திரனின்
நெஞ்சைத் துளைத்தேறிய
இனவெறி ராணுவ ரத்த ரவைகளின்
காட்டேறி வக்கிர உச்சங்களை
உணர்வு தப்பாமல் சொல்லிவிட

ஆனால்
என் தமிழின்
எந்த ஒரு வார்த்தைக்கும்
அத்தனைக் கொடூரக் குணமில்லையே
கவிதையாய்
எடுத்தெழுதிக்காட்டிவிட

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ

தன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)

என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

ஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.

சுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா?

இளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்து திரையிசைப் பாடல் உலகில் ஒரு செவ்வானம்.

களங்கள் வேறு என்றாலும் உயரம் சற்றும் குறைந்ததல்ல. இப்படியான பிள்ளைகளைக் கொண்ட தமிழன்னை உள்ளம் முழுவதும் பூரித்திருந்தாள். ஆனால் இயல் என்ற தமிழை தற்காலிகமாக நசுக்கிய இளையராஜா இசை என்ற தமிழால் அவள் கண்ணீர் மட்டுமே சிந்தினாள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் தமிழிசையை வானுயர உயர்த்தினார் என்பதுதான். ஆனால் அதில் பெரும் கரும்புள்ளியாய் தமிழை அதல பாதாளத்த்துக்குத் தள்ளினார் என்பது எத்தனைப் பெரிய கலங்கம் இளையராஜாவுக்கு?

கனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை. பாடியிருந்தால், நான் புல்லரித்துப் போயிருப்பேன். அரங்கமே அழுது நிறைந்திருக்கும்.

இளையராஜா தன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இது பனிவிழும் மலர்வனம் என்றார். வெளியே பனி உள்ளே இசை வனம் என்று அழகாகச் சொன்னார்.

அது இளையராஜாவும் வைரமுத்து இணைந்திருந்ததால் வந்த அற்புதப் பாட்டு.

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளம் சோலை
மாலை சூடும் மண மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்
இளமையின் கனவில் விழியோரம் துளிர்விடும்

இப்படியே தேன் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கும் இந்தப் பாட்டு.

ஆனால் மேடையில் அந்தப் பாடலை இளையராஜா பாடவே இல்லை!

கண்ணதாசன் திரையிசைப் பாடல்களுக்குள் சந்தக் கவிதைகளையும் சங்கடமே தராத எளிய வார்த்தைகளையும் அற்புதமாய் வழங்கினார்.

வைரமுத்து புதுக்கவிதைகளை திரையிசைப் பாடல்களுக்குள் அப்படியே முறுகல் நெய் தோசைகளாக ஐவகை சட்னி சாம்பார் பொடிகளோடு அமர்க்களமாகத் தந்தார்.

வைரமுத்துவுக்குமுன் புதுக்கவிதைகளை பாடல்களில் பொத்தி வைத்த மல்லிகை மொட்டு வேறு யாராவது உண்டா? அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது? சிந்திக்க வேண்டாமா?

அவன் தமிழை அடித்து நொறுக்கி அழித்துப் போட்ட ராஜா ராஜாதானா? பட்டு ரோஜா ரோஜா இவர்தானா? எப்படி இருக்க முடியும் பட்டு ரோஜாவாய்?

வைமுத்து என்ற மனிதனை ராஜா மானசீகமாக வெறுக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இசைத்தமிழை எப்படி தமிழர்கள் கேட்கக்கூடாது என்று தடுக்கலாம்?

கண்டநாள் முதல் வைரமுத்துவைப் போற்றிப்பாடிய நீங்களே தூற்றிப்பாடுவது சரியா ராசய்யா?

உங்கள் இருவரின் இணைவில் வந்த கற்பூரப் பிறப்புகள் எத்தனை எத்தனை. அவை அனைத்தையும் தமிழர்களுக்கு இல்லாமல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை உண்டு இளையராஜா?

-அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
-பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
-இளைய நிலா பொழிகிறது இதயம் வரை
-இது ஒரு பொன் மாலைப் பொழுது
-கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
-சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
-சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்ததது சாமி
-என்விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே?

என்று எத்தனை எத்தனை மகுடங்கள்? அத்தனை மகுடங்களையும் தமிழன்னையின் தலையிலிருந்து கழற்றி எறிய உங்களுக்கு உரிமை தந்தது யார்?

எங்கள் கண்களெல்லாம் உங்கள் இசைகேட்டுக் கசியாத நாளுண்டா? ஆனால் தமிழைத் தள்ளிவைத்து தவறு செய்தது மட்டுமல்லாமல் இன்றுவரை அதே பிடிவாதத்தில் இருக்கிறீர்களே இளையராஜா. இது தகுமா?

தமிழைவிட உங்களுக்கு உங்கள் வரட்டுக் கௌரவம்தான் பெரிதாகிவிட்டதா?

எந்த மேடையிலும் உங்களைத் தரக்குறைவாகப் பேசுவதில்லை வைரமுத்து. ஆனால் நீங்கள்? கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே? என்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்?

இளையராஜா மறக்காமல் மலேசியா வாசுதேவன் அவர்களை நினைவு கூர்ந்து பேசியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே அதேபோல அழகாகப் பாடப்பட்டது.

ஜெயச்சந்திரன் பாடிய...

மாஞ்சோலைக் கிளிதானோ
மான் தானோ மீன் தானோ
வேப்பந் தோப்புக் கிளி நீ தானோ?

என்ற பாடலை ஹரிஹரனை வைத்துப் பாடவைத்தார் இளையராஜா. அத்தனை அற்புதமாய் இருந்தது அது. ஹரிஹரன் குரலிலும் பாவத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்கு வேறு வகையில் இந்தப் பாடலை அமைக்கத் தோன்றுவதாக இளையராஜா விரும்புவதாக பார்த்திபன் சொன்னார்.

அடுத்து எனக்குப் பிடித்தபாடலாய் வந்தது ”நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னாத் தெரியுமா?” இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை எனக்கு.

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற பாடலை எஸ்பிபி பாடினார். பாடல் முடிந்ததும் சுவையான இசை விருந்து ஒன்று நிகழ்ந்தது.

கரகாட்டக் காரன் படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற மெட்டில் அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகளைப் பாடிக்காட்டினார் இளையராஜா. அரங்கு அப்படியே கைத்தட்டல்களால் சூடானது. அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் மெட்டில் மாங்குயிலே பாட்டு வரிகளையும் பாடிக்காட்டினார்.

”தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற உருக்கமானப் பாடலையும் பாடிவிட்டு, அண்ணே நீங்க எப்படி “நிலா அது வானத்துமேலே” என்றும் பாடினீங்க என்று விவேக் கேட்டார். அதற்கு இளையராஜா ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.

உண்மையில் மணிரத்தினம் நாயகனில் கேட்ட சூழலுக்கு “தென்பாண்டிச் சீமையிலே” மெட்டையும் ”நிலா அது வானத்து மேலே” என்ற மெட்டையும் போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஒன்றை எடுத்துக்கொண்டு, அதோடு நில்லாமல் இரண்டாவது மெட்டையும் தனக்கே வேண்டும் என்றும் அதைக் கொஞ்சம் மாற்றி உஜாலாவாகப் பாடுவதுமாதிரி மாத்திக்கொடுங்கள் என்றும் கேட்டாராம்.

நிலா அது வானத்து மேலே என்ற பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாடல் போன்ற ஓர் உருக்கமான மெட்டில் மிக அழகாகப் பாடிக்காட்டி ஏராளமான கைத்தட்டல்களைத் தட்டிக்கொண்டுபோனார் இளையராஜா. இப்படியே இசையின் நெளிவு சுழிவுகளைப் பேசப் பேச நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். அதனால்தான் அப்படியான நிமிடங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதுபோலெல்லாம் நடனங்களோடு பாடல் என்றெல்லாம் இளையராஜா செய்யவில்லை. நிகழ்ச்சி முழுவதும் இசை இசை இசை மட்டுமே என்று அழகாகவும் எளிமையாகவும் செய்திருந்தார். நிச்சயம் அது பாராட்டுக்குரிய ஒன்று.

பார்த்திபன் பாதியில் விடைபெற்றதும் விவேக் வந்தார். வரும்போதே அரங்கம் சிரிப்பால் கடகடத்துப் போனது. உனனே பார்த்திபன் அவரை புதுமாதிரியாக அறிமுகம் செய்யத் தொடங்கினார். நிகழ்ச்சியின் உச்ச நிலைக் கைத்தட்டல்களில் அதுவும் ஒன்று.

விவேக் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். இளையராஜா பாட்டைக் கேட்டுக் கேட்டு இளையராஜா பாட்டாகவே ஆகிப்போனார் விவேக். அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாமா என்றார் பார்த்திபன். விவேக் சரியென்று சொல்லி நேராக நின்றார்.

விவேக்கின் தலையில் பார்த்திபன் தன் கையை வைத்தார். உடனே தலை தொடர்பான ஒரு இளையராஜா பாட்டு வந்தது விவேக்கிடமிருந்து. கைத்தல்கள் அரங்கைப் பிளந்தன. பின் நெற்றியைத் தொட்டார். நெற்றி தொடர்பான இன்னொரு பாட்டு. மீண்டும் கைத்தட்டல்கள். பின் மூக்கைத் தொட்டார்.... அதற்கொரு பாட்டு. ஆ ஆ வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்ற மூக்கால் பாடும் பாட்டு. கைத்தட்டல். பிறகு இடுப்பைத் தொட்டார்..... அவ்வளவுதான் ஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்.... என்று வெகு கவர்ச்சியாகப் பாடினார். சொல்ல வேண்டுமா?

அப்போது தொடங்கியதுதான் சிரிப்பலைகள். விவேக் அசராமல் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக விவேக் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மிகுந்த வலிமைதான்.

நீ ஒரு காமெடியன் நீ எதை வேண்டுமானாலும் காமெடி பண்ணு என்னை வெச்சிமட்டும் காமெடி பண்ணாதே என்று இளையராஜா ஒரு முறை சிரித்துக்கொண்டே ஆனால் சீரியசாகச் சொன்னார்.

பாத்தீங்களா, அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்டு...... ஸ்ட்ரிக்டு..... ஸ்ட்ரிக்டு..... என்று சொல்லி அதையும் காமெடி ஆக்கினார் விவேக்.

விவேக் விடைபெற்றதும் பிரசன்னா வந்தார். அவர் மைக்கைக் கையில் எடுத்து ஏதோ கிசுகிசுத்தார். ஒருவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. மைக்கை பக்கத்துல வெச்சிக்கங்க என்று பார்த்திபன் சொன்னார். மீண்டும் பாதாளத்திலிருந்துதான் குரல் வந்தது. பிரசன்னாவுக்கு மேடை அனுபவமே இல்லை என்று புரிந்துகொண்டேன். மைக்கைக் கையில் வாங்கினால் அரங்கத்தை அதிரடிக்க வேண்டாமா?

அப்படியே முக்கலும் முணகலுமாய் இதோ என் மனைவி சினெகா வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் இளையராஜாவின் ரசிகர்கள். எங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம் இளையராஜாதான் என்றார். அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்கள் காதலித்தோம் கைப்பிடித்தோம் வாழ்கிறோம் என்று புகழ்ந்தார்.

ஆனால் இளையராஜா இதற்குச் சட்டெனக் குறுக்கிட்டார். நீங்க பண்ற கூத்தையெல்லாம் என் தலையில் போடாதீர்கள். நான் ஏதோ என் இசைப்பயணத்தில் இருக்கிறேன். அந்தப் பாடல்களை நீங்கள் கேட்டு காதல் வயப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என்றார்.

ஆனால் அடுத்த பாட்டு ஆரம்பிக்கும்போது பிரசன்னா இளையராஜாவுக்கு ஒரு பதிலோடு வந்தார். ”இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு” என்று நீங்க தானே சார் பாடினீங்க அதனால்தான் நாங்க காதலிச்சோம் என்றார்.

மேடையில் சினேகா தோன்றினார். பிரசன்னா சினேகா இருவரின் ஆடையலங்காரம் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது. மேடைக்கே அது ஒரு புது வர்ணம் பூசியது. ஹலோ டொராண்டோ என்று சினேகா கணீர் என்று முழங்கினார்.

கடைசியாக இளையராஜா, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக என்று ஒரு பாடலின் வார்த்தைகளை மாற்றிப் பாடினார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டு வரவில்லை. அந்த ஈழ ஏக்கக் கண்களுக்கு எந்த ஒரு போலிக் கனவைக்கூட பரிசளிக்கவில்லை. அவர்மட்டும் அல்ல நீயா நானா கோபியோ, பார்த்திபனோ, விவேக்கோ, கார்த்திக் ராஜாவோ, யுவன் சங்கர் ராஜாவோ எவருமே ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அது ஏன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

அப்படியே ஒருவழியா இளையராஜாவின் வடை பாயச இசை விருந்து முடிந்துபோனது. நான் பனியில் நனைய என்னைத் தயார்ப் படுத்திக்கொண்டேன். அந்த ஊசிக் குளிரில் கொட்டும் பனியில் மக்கள் இறங்கி நடந்து விடைபெற்றார்கள். ஒரு ஆறுதல் வார்த்தை தந்திருக்கலாம்தான் வேறு எதைச் செய்துவிட முடியும் உங்களால் என்று மீண்டும் எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை.

நிகழ்ச்சிக்குச் செல்லும்போது எனக்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நான் இன்னும் ஆழத்துக்குப் போகலாம் என்ற கனவுகளோடுதான் சென்றேன். என் எதிர்பார்ப்புகளில் தவறிருந்ததாக நான் இப்போதும் நினைக்கவில்லை. எனக்கான இசைத் தீனி போதவில்லை என்று எனக்குப்பட்டது.

இளையராஜா என்னை ஆட்டிப்படைத்த இசைஞானி. இன்று அவரைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய நிலை.

என்ன காரணம் என்று மீண்டும் யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.

(நிறைந்தது - உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)

அன்பும் அமைதியும் நிறைக

இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.

ஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது "அன்பும் அமைதியும் நிறைக" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா?

இஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது "அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா?

உண்மையான இஸ்லாம் குர்-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல்பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.

தீவிர இறைப்பற்று

தீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.

இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

ஏனெனில்
அவையாக இறைவன் இருப்பதாகத்தான்
அனைத்து வேதங்களும் சொல்கின்றன.

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ

துவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.

எலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.

பார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)

கடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)

இளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.

இளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத்துக்கொள்ளும் கவனம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த விழாவிலும் அப்படியேதான். பாராட்டுக்கள்.

பிசிறுகள் இல்லாமல் இசை சன்னமாக ஒலித்தது. அது இதயத்தின் ஆழத்தில் இதயாக இறங்கியது. சில நேரங்களில் நிகழும் சிறுபிழையும் ராஜா விடவில்லை.

மீண்டும் வாசிங்கடா என்று சொல்லிவிட்டார். இறங்கிச் சென்று நின்று ஒவ்வொருமுறையும் அவர் அக்கறையாய் நேசித்துக் கவனித்துச் செய்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது.

ஏன்னா..... அண்ணன் ரொம்ப ஸ்டிரிக்டு..... ஸ்டிரிக்டு.... ஸ்டிரிக்டு.... என்று விவேக் அவ்வப்போது அதையும் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருந்தார்.

பார்த்திபனும் விவேக்கும் உண்மையிலேயே இளையராஜாவின் இசை வெறியர்கள்தாம். எங்குமே விட்டுக்கொடுக்காமல் எத்தனை உயரம் உயர்த்திப்பிடிக்கமுடியுமோ அத்தனை உயரம் உயர்த்திப் பிடித்தார்கள்.

எத்தனை நல்ல விசயமாக இருந்தாலும், அதை உயர்த்திப் பிடிக்க நிச்சயம் ஆட்கள் தேவை.

இதே மேடையில் 2000 அல்லது 2001ல் ஏஆர் ரகுமான் இசையைக் கேட்டிருக்கிறேன். அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது.

அப்போது கிடைத்த ஒரு குதூகலம் எனக்கு இப்போது இல்லை என்பது உண்மை. அதற்குக் காரணம் நானாகவே இருக்கலாம். எனக்கு அது முதல் நேரடி நிகழ்ச்சி.

அதுமட்டுமல்லாமல் அதுபோல கனடாவில் பிரம்மாண்டமாக ஒரு தமிழ் இசையமைப்பாளரைக் கொண்டு நிகழும் நிகழ்ச்சி நிகழ்வது அதுதான் முதன்முறை.

கூடவே இந்திப்பாடல்களும் பாடப்பட்டதால், தமிழ் அல்லாத இந்தியர்களின் கூட்டமும் சொல்லிமாளாத அளவு வந்திருந்தது. அப்படி வந்த கூட்டம் தமிழ்ப்பாட்டையும் மிகவும் ரசித்துக் கேட்டது வரவேற்கக்கூடியதாய் இருந்தது,

அறிமுகமே இல்லாத ஒரு இந்திக்காரர் ”ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாட்டை எனக்கு எப்படியாவது பதிவு செய்து கொடுத்துவிடு என்று என்னிடம் அன்று கெஞ்சினார்.

ரகுமானின் இசை அரங்கையே அதிரடிக்கும் இசை. ராஜாவின் இசை பூ மலர்வதைப் போன்ற இசை. இரண்டையும் ரசிக்க முடிந்த நான் இசையின் ரசிகனே தவிர ஒருவரை ரசித்து ஒருவரை விட்டுவிடும் கண்மூடி ரசிகன் அல்ல.

”கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அன்று என் கண்களில் நீரை வரவழைத்தது. நான் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தேன்.

அப்படியான ஒரு இதயத் தாக்கம் எனக்கு நேற்று கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் என் சொந்தச் சூழல்களின் மாற்றமாகவும் இருக்கலாம்.

ஆனாலும் எம் எஸ் விஸ்வனாதன் தன் பாடல்களை இந்த மேடையில் ஏற்றியிருந்தால் நாம் மீண்டும் அழுதிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது.

நேற்றுபோல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்....

என்னால் மறக்கவே முடியாத பாட்டு. அந்தப் பாடலைத் தேர்வு செய்து எஸ்பிபியைப் பாடவைத்து அரங்கில் எனக்கொரு தங்கத் தொட்டில் செய்துகொடுத்தார் ராஜா. நன்றி பண்ணைப்புரத்து பாட்டுக்காரா!

”தந்தன நந்தன தாளம் வரும்....” என்ற பாடலை எவரும் மறந்திருக்கமுடியாது. அது அவ்வகைப்பாடல்களில் முதலாவது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பாடல்கள் அதுபோல வந்துவிட்டாலும் அதை மட்டும் அசைக்கவே முடியவில்லை.

அந்தப் பாடலுக்கு எங்களுக்காகவே பிரத்தியேகமாய் இசையைக் கொஞ்சம் மாற்றியமைத்துப் பாடவைத்து இசையமைப்புப் பணியைச் செம்மையாய்ச் செய்துகாட்டினார் ராஜா.

இதுபோலெல்லாம் வேறு இசையமைப்பாளர்கள் செய்வதே இல்லை. இது ராஜாவுக்கே உரித்தான சிறப்பு. ராஜா இசையை எடுத்து எளிமையாய்ச் சொல்வதில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். இதுவரை நான் கண்ட இளையராஜா நிகழ்ச்சிகளிலெல்லாம் இதை அழகாகச் செய்து என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சி முழுவதுமே நான் இதுபோன்ற விசயங்களையே விரும்புவேன். அப்படியே அனைத்துப் பாடல்களையும் சோதனை முயற்சிகளாகவே செய்திருந்தால் நான் இன்னும் இரண்டு நாள்கூட அந்த அரங்கிலேயே உட்கார்ந்திருப்பேன்.

*

இளையராஜா ஒரு நல்ல கவிஞர். ஆனால் வைரமுத்துவுடன் வந்த லடாய்க்குப் பிறகு அவர் இசையா கவிதையா என்ற சண்டையிலிருந்து மீளவே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

எல்லா மேடைகளிலும் பாடல் வரிகளை அவர் கேவலமாகவே பேசுகிறார். ஆனால் பாரதி பாடல்களைத் தேடிப்பிடித்து இசையமைத்து வெற்றிபெறுகிறார் ;-)

ஒரு முறை கண்ணதாசன் சொன்னார். இசை வார்தைகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடும் என்று. அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனாலும் இறக்கை கட்டிக்கொள்ளத் தகுதியான அந்த வரிகளை எழுத ஒரு கண்ணதாசன் வேண்டும், ஒரு வைரமுத்து வேண்டும். ஒரு டி ஆர், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி என்று வார்த்தைகளின் சுவையறிந்தவர்கள் வேண்டும்.

அப்போதுதான் பாட்டு ஆயுள் கூடிய ஒன்றாய் இருக்கும். இல்லை என்றால் ஓரம்போ ஓரம்போ என்று ஓரம்போய்விடும்.

என்னிடம் கொடுத்தாலும் நானும் வார்த்தைகட்டி வையம் ஏற்றுவேன். இதை யாருக்கிட்டேயும் அவசரப்பட்டு சொல்லிடாதீங்க ;-)

ஓரம்போ ஓரம்போ என்ற புகழ்வாழ்ய்ந்த பாடலையும் இளையராஜா பாடினார். பாட்டுலகில் அது ஒரு புதிய முயற்சி என்று பேசப்பட்டது. ஆனால் இலங்கை வானொலி அந்நாளில் இது பாட்டே இல்லை என்று கூறி காற்றலையில் ஏற்ற மறுத்தது.

இன்றும் நாம் அதைக் கேட்கிறோம். ஆனால் ஒருவரும் விரும்பிப் பாடுவதில்லை. ஏனெனில் அதன் வார்த்தைகள் இதயத்தோடு பேசவில்லை.

ஆனால் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாடலை மக்கள் தாங்களாகவே விரும்பிப் பாடுகிறார்கள். இளைய நிலா பொழிகிறது என்றால் இயல்பாகவே இதயத்திலிருந்து பாடுகிறார்கள். எல்லாம் ராஜாவின் பாட்டுத்தான் என்றாலும் ஏன் இந்த வித்தியாசம்?

அங்கேதான் வரிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.

இந்த ஓரம்போ பாடலைவிட இளையராஜாவின் இன்னொரு அந்த சமயத்துப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

வாடை வாட்டுது
ஒரு போர்வை கேக்குது
இது ராத்திரி நேரமடீ...

இந்தப் பாடலை எவருக்காவது நினைவிருக்கிறதா? முழுக்க முழுக்க ஸ்டீரியோவிலான பாட்டு. ஸ்டீரியோவை உச்சத்தில் உயர்த்தி தனித்தனியே பிரித்துப் பாடப்பட்ட பாட்டு என்று சொன்னார்கள் அன்று. ஆனால் இளையராஜா இந்தப் பாடலை எங்கும் பாடுவதே இல்லை ஓரம்போ ஓரம்போ என்றுதான் பாடுகிறார்.

ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் இசை ஞானம் என்பது என் காதுகளோடு சரி. மூளை.... சுத்தம் ;-)

இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா வந்தார். இளையராஜாவின் மேஜிக் என்ற தலைப்பில் சில விசயங்களைச் சொன்னார். அதில் முக்கியமானது என்னவென்றால் கவிதை என்பதெல்லாம் குப்பை. இசை என்பது மட்டுமே கோபுரம் கோபுரம் கோபுரம்.

அதை நிரூபிக்கும் வகையில் இளையராஜா சில வரிகளைச் சொன்னார்

தாமரை மலரில்
மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்

ஒரு தூதும் இல்லை
உன் தோற்றம் இல்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

என்று இசை எதுவும் இன்றி மொட்டையாக வாசித்தார். தாமரை மனதில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். இந்த வரிகளைக் கேட்கும் போது உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது என்று அரங்கத்தாரைக் கேட்டார். ஆனால் பதிலுக்குக் காத்திருக்காமல் ராஜாவே சொன்னார், இதில் ஒன்றுமே இல்லை. வெத்து வார்த்தைகள். இதில் எந்தப் பொருளும் இல்லை என்றார்.

ஆனால் இப்ப பாருங்க என்று அப்படியே இசையோடு பாடிக்காட்டினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது!

”தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”

அடடா எத்தனை அற்புதமான கண்ணதாசனின் வரிகள்? உனக்காக என் மனதை நான் எப்படி வைத்திருந்தேன் என்று காதலி சொல்கிறாள். எந்த எண்ணங்களும் இடைமறிக்காத வேறு எந்த நினைவுகளும் தீண்டாத தனிமையில் வைத்திருந்தேன் என்கிறாள்.

அத்தோடு நின்றாளா நிற்கவில்லை, மேலும் சொல்கிறாள் அந்த மனதை உனக்காகக் காத்திருக்க எங்கோ ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவில்லை. அல்லது படுக்கையில் கிடத்திருக்கவில்லை. ஏனெனில் என் மனம் காதல் மனம். மெல்லிய மனம். பூவினும் மெல்லியது அது. ஆகவே அதை தாமரை என்ற நீண்ட இதழ்களைக் கொண்ட பூவின் இதழ்களின் மேல் தனியே வைத்திருந்தேன் என்கிறாள். சிறிய இதழ்கள் என்றால் உன்னை நினைத்துக் கனத்துக்கிடக்கும் என் இதயம் கீழே விழுந்துவிடுமே என்ற அக்கறையில் தாமரை இதழ்களின் மேல் வைத்திருந்தேன் என்கிறாள்.

உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை. ஒரு தூதும் இல்லாமல் இந்த மனம் எப்படிச் சமாதானம் அடையும் என்று காதலி கேட்பது எத்தனை நியாயமானது?

சரி தூதுதான் இல்லை, என் நினைவினில் அல்லது கனவினில் உன் தோற்றமாவது வரவேண்டுமா இல்லையா? அதுவும் இல்லையே? ஒரு பொய்யான தோற்றத்தைக்கூட நீ தராமல் போய்விட்டாயே காதலா என்று எப்படி உருகுகிறாள் காதலி? பிறகு தூக்கம் எங்கிருந்து வரும்?

இந்த வரிகளை எல்லாம் இளையராஜா வெத்து வார்த்தைகள் என்கிறார்.

என்றால் இவர் கவிஞர்தானா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இளையராஜா நல்ல கவிஞர் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. வைரமுத்துவோடு வந்த லடாயின் காரணமாக இவர் கவிஞர்களை எல்லாம் கீழாக்கினார். அதனால் கவிதைகளும் இவருக்குக் கீழாகத் தெரிகின்றன.

இது ஒரு மனப்பிறழ்வன்றி வேறென்ன?

(தொடரும்)

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ


யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.

கோபி நீ போய் ராஜாவை அனுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா? நானா? என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...

முதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.

இதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.

இது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.

இந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.

வெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை!

இலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.

நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.

அது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது? அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.

கோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.

ஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.

கோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.

கனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.

சட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

இடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

அரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...

டிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.

பாவம் கோபி அல்லாடினார்.

இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும்? 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.

25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே?

இளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.

ஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.

நீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.

ஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.

நேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்
வந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

இவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.

அரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்
தொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.

இது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.

இளையராஜாவுக்கு நேரம் போதவில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.

அந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.

அந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.

இளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.

உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை
வெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.

அவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.

விசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.

இப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.

இளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.

இந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.

காதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.

(தொடரும்)

எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை

எந்த வாழ்க்கையும்
புதிய வாழ்க்கை இல்லை.
எல்லா வாழ்க்கையும்
முன்பே வாழப்பட்டவைதாம்

எந்த மனிதரும்
புதிய மனிதரில்லை
எல்லா மனிதரும்
முன்பே பிறந்தவர்கள்தாம்

கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

விடைபெற்றுப்
பாழாகும் தினங்கள்
பெரும்
வெற்றியென நினைக்கின்ற
ரணங்கள்

அடைகாத்த
முட்டைகளும் குஞ்சாகும்
ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ
நஞ்சாகும்

கடக்கின்ற
நாளேதும் மீளாது
என்றும்
கடப்பாரை குடலுக்குள்
வேகாது

தடையில்லா
வாய்க்காலில் நீரோடும்
தினம்
தடுகின்ற உள்ளத்தால்
எது வாழும்

அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்?


அடீ மருதாணீ
என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க
அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்

எந்த மன்மதன் அனுப்பி
இங்குநீ தூது வந்தாய்

நீ முத்தமிட்டு முத்தமிட்டா
என் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன

மருதாணீ
நீ யாருக்குப் பரிசம் போட
இங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ

அடியே
நீ வெற்றிலையைக் குதப்பி
என் விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்

அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது

அழாதேடி தோழீ
உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து
ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்

எங்கேயோ....

எங்கேயோ உலவும்
ஒரு மேகம்
இந்த மனதை
நனைக்கக்கூடும்.

எங்கேயோ
பூக்கும்
ஒரு பூ
இந்த நாசிக்குள்
வாசம் வீசக்கூடும்

எங்கேயோ
வீசும்
ஒரு தென்றல்
இந்த தேகத்தைத்
தொட்டுத் தழுவக்கூடும்

எங்கேயோ
பாடும்
ஒரு பாடல்
இந்த உயிரை
உசுப்பிவிடக்கூடும்
இலக்கியம் யாதெனிலோ

வாழ்க்கையில்
வாழ்க்கை தேடிக் களைத்து
கற்பனையில் வாழ்க்கை தேடி
விருப்பம்போல் வாழ்வதே
அருங்கலைகளும்
அற்புத இலக்கியங்களும்

இயல்பில் நீ
ஒரே ஒரு கதாநாயகன்
ஆனால்
இலக்கியத்திலோ
நீ பல நூறு கதாநாயகன்

இல்லாததையும்
இயலாததையும்கூட
எண்ணங்களால் வாழ்ந்து
பல நூறு ஜென்மங்களை
ஒற்றைப் பிறவியிலேயே
பெற்றுச் சிறக்கும்
பேரின்ப வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

படுத்த படுக்கையாய்க்
கிடக்கும்
முற்று முடமானவனும்
படபடவெனப்
பொற்சிறகுகள் விரித்து
நீல வானின்
நிறந்தொட்டுப் பறக்கும்
அதிசய வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

உன்
உடலைக் கொண்டு
ஒரு வாழ்வுதான்
உன் உள்ளத்தைக் கொண்டு
உனக்கு
ஓராயிரம் வாழ்வு

எழுதி வைத்தால்தான்
அது இலக்கியம் என்றில்லை
ஆக்கிவைத்தால்தான்
அது கலையென்றில்லை
எண்ணத்தில் கருவாகி
உனக்குள்ளேயே
ரகசியமாய்
பொன்னுலகம் படைத்து
பூரித்து வாழ்ந்தாலும்
அது
கலைதான்
இலக்கியம்தான்

கலையும் இலக்கியமும்
இல்லாவிட்டால்
கடவுள் தந்த அரிய வாழ்வும்
கரிக்கட்டையாய்க்
கருகியே போகும்

யாப்புக்குத் தோப்புக்கரணம்

யாப்புக்குத்
தோப்புக்கரணம் போடமாட்டேன்
என்றார்
அதிலுள்ள
எதுகையை ரசித்தேன்

மரபுக்குள்
மடிவதோ என்றார்
அதிலுள்ள
மோனையை ரசித்தேன்

எதுகை மோனை தொல்லை
எனக்கதில் நாட்டம் இல்லை
என்றார்
அதிலுள்ள
இயைபை ரசித்தேன்

இப்படி எழுதிப்போகும்
இந்தப்
புதுக் கவிதையைக்
கண்டேன்
அதன் இயல்பினையும்
ரசித்தேன்