* *

சந்தேகிக்க
நூறு விழுக்காடு
வாய்ப்பிருந்தும்
துளியும்
சந்தேகிக்காத
கசடறு அன்பே
காதல்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பிள்ளைகள்
இயற்கையிடமிருந்தும்
இறைவனிடமிருந்தும்
செய்திகள் கொண்டுவந்திருக்கிறார்கள்

கற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையைக்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்

பிள்ளைகளைக்
கொத்தடிமை ஆக்காதீர்கள்

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

தாய் மடிகிடந்து
தாய் முகம்கண்டு
தாய் முலைப் பால்பருகி
தாய் மேனி மெத்தையில் கண்ணுறங்கி
தாய் முத்தம் பெற்று
தாய் உயிர்த் தளிராய் வளரும் சேய்க்கு
தாய் மொழிக் கல்வி வேண்டுமா
என்ற கேள்வியும் வேண்டுமா?

காதலர் தினம் அது யாவரும் கேளிர் தினம்

காதலர் தினம் அது யாவரும் கேளிர் தினம்

கொலை ரத்தம்
கொப்பளிக்கும் யுத்தபூமி
அற்றைநாள் பேரரசு
ரோமாபுரி

கால்களுக்கும் தோள்களுக்கும் பூட்டு
போர்வீர
நெஞ்சுரத்தின் மீதுவிழும் வேட்டு
என்றே
தடைசெய்து நிறுத்தியது
திருமணத்தை

அங்கேயோர் துறவி
வாலண்டைன் என்பது அவர் பெயர்
அவரோ வாலிபரின் காயங்களில்
விழுகின்ற கண்ணீர்

புழுதிவெறி மாமன்னன்
கண்மறைத்து
பழுதில்லாக் காதலை
வாழவைத்தார்
ரகசியமாய் கல்யாணம்
முடித்துவைத்தார்

கண்டனவே அதையந்த
அரசவைக் கண்கள்
கொதித்து வெடித்தனவே
கோபமெனும்
எரிமலைப் புண்கள்

அறுத்தெறியடா
அந்தத் துறவியின் கழுத்தை
ஆணையும் வந்தது
மரணத் தேதியும் தந்தது

அடைபட்டச் சிறைச்சாலையில்
அரிய நட்போடு ஒரு காவலதிகாரி
அவருக்கோ
அழகே அவளென்றானதோர்
அன்புமகள்

ஆனால்
பிறப்பிலேயே அவள்
பார்வையற்றுத் தவிக்கும்
துன்பமகள்

பரிசுத்தப் பிரார்த்தனையால்
தேவனின் ஆசிகளைப்
பொழியவைத்தார் புனிதத் துறவி
அவளின்மீது

அடடா என்ன அதிசயம்
சிறு விழிகள் பிறந்தன நிலவுகளாக
அவை
தத்தித் தத்தித் தாவிக் குதித்தே
ஆடத் தொடங்கின குழந்தைகளாக

நன்றியோ
கருணையோ
அன்பின் பெருக்கோ
கொட்டும் நயாகராவைக்
கொண்டன அவள் கண்கள்

மரணத்தின் இறுதி நொடியில்
நின்று
கண்பெற்றச் சின்னவளுக்கு
எழுதுகிறார் துறவி
ஒரு கடிதம்

அன்புடன் வாலண்டைன்
என்றே
அக்கடிதம் நிறைகிறது

பலநூறு கதைகளில்
நம்பத் தகுந்ததென
இதனையே போற்றுகிறது மேற்கு

வாலண்டைன் தினம்
என்றதனைக் கொண்டாடுகிறது
உலகு

பரிவின் நாள் அது பாசத்தின் நாள்
அன்பின் நாள் அது அரவணைப்பின் நாள்
என்றபோதிலும் அந்த நாளைக்
காதலர்களே கொண்டாடுவதால்
அது காதலர்தினம் என்றே ஆனது

ஆயினும்
பல நாடுகளும்
அன்பர்கள் தினமென்றும்
நண்பர்கள் தினமென்றும்
பச்சைப் பயிர்களின் தினமென்றும்
பறவைகளின் தினமென்றும்
இன்னும் பலவாறாயும்
மகிழ்ந்தே கொண்டாடினாலும்

மதவெறிக் குருடர்களால்
காதலர்களைக் கண்டவிடத்து
அடித்துநொறுக்கும் தினமாகவும்
கொன்றாடப்படுகிறது

இந்நாளில் நானோ
சங்கத் தமிழனின்
செங்கதிர்ச் சொற்களை
எண்ணிப் பார்க்கிறேன்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

அடடா
அறத்தால் வார்த்த
உரத்த குரல்

வானத்தையே உடைத்தெறியும்
வையப் பார்வை

இதனினும் உயரமோ
இவ்வுலகிலோர் அன்பு
ஒரு பண்பு பாசம் காதல் நட்பு

உலகெலாம் எனது ஊர்
உலக மக்களெலாம் எனது உறவுகள்

சொல்லச் சொல்லப் புல்லரிக்கும்
இம்மத்திரச் சொற்களால் அல்லவா
இந்நாளினை அழைத்திடல்
தகும்

இன்று தொட்டு
யாதும்ஊரே யாரும்கேளிர் தினம்
என்றே
இந்நாளினை அழைப்போம்
உள்ளம் நெகிழ்ந்து
உயிர்வரை மகிழ்ந்து

அன்புடன் புகாரி

கோட்சே வாழ்க

கனடாவில்கூட காந்திக்குச்
சிலை வைத்துப் போற்றுகிறார்கள்
காந்தி பிறந்த நாட்டில்
அவர் உயிரை
இன்னும் இன்னும்...
கொன்றுகொண்டே இருக்கிறார்கள்



செய்தி: இந்தியாவில் ஒரு பாலத்திற்குக் கோட்சே பெயரைச் சூட்டுகிறது பஜக

கிரந்தம் நாலெழுத்தும் அயல் பெயர்ச்சொல்லும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றான் தமிழன்

கிணற்றுத் தவளையா
தமிழன்

சொல்லவும் கூடுவதில்லை
அவை சொல்லுந் திறமை
தமிழ்மொழிக் கில்லை என்றொரு
பேதையுரைத்தான் என்றான்
பாரதி

உலகின் அயல் பெயர்ச்சொற்கள்
அனைத்தையும்
தமிழனால் உச்சரிக்க இயலவேண்டும்
அப்போதுதான் அவனால்
உலக மேடைகளில் ஓங்கி நிற்கவியலும்

சொல்லவே தெரியாதவன்
உலகமேடையில்
வெல்லவா போகிறான்

சொல்லுஞ் சொல்லில்
தமிழன் தமிழ்ச்சொல்லையே கொய்வான்
ஆயினும் தமிழல்லாச் சொல்லைச்
சொல்ல நேருங்கால்
அவனால் தங்குதடையின்றி
சொல்லி முடிக்கவும் தெரியும்

பெயர்ச்சொல்லில் இரட்டை நாக்கு
அவசியமற்றது
வீணே சக்தியை இழப்பதும்கூட

இந்த நான்கே போதும்
இனி எந்த எழுத்தும் தேவையில்லை
என்று அன்றே முடிவெடுத்தத் தமிழன்
தந்த நான்கினையும் ஏன் மறுப்பானேன்

அது மேலும் பெருக வேண்டுமென
எவன் வந்தாலும்
இடுப்பொடிக்கும் விழிப்புணர்வு
இன்று தமிழனுக்குண்டு

பண்டை நாலெழுத்தால்
என்ன கெட்டது தமிழில்
சொல்லா? பொருளா?
சொற்களின் தன்னிகரா?
பொருளின் தரமா?

குஷ்புவை குசுப்பு என்று அழைப்பது
தமிழனுக்கு நாற்றமல்லவா

ஜெய்ஹிந்தை செய்யிந்து என்றால்
நன்றாகவா இருக்கும்

உலகின் பழம்பெரும் மொழி
அனைத்து எழுத்துக்களையும் கொண்டிருக்காது
அதுவே அதன் சிறப்பு

ஆனால்
ஓரிரு எழுத்துக்களை
புதியன புகுதலென
அயல் பெயர்ச்சொற்கள் பயிலும்போது
மட்டும் ஏற்கும்போது
மெருகேறித்தானே நிற்கிறது

தமிழ்ச்சொல் கெட்டதா
தமிழன்தான் கெட்டானா

எழுத்து என்பது
ஒரு வாகனம்தான்
அதில் ஏறிச்செல்லும்
மொழிதான் உயிர்

சில்லறைவிடயங்களில்
செலவழிந்துபோகாமல்
நாம் சிகரம் தொடும்
தமிழ் படைப்போம்

அறிவியல் புதினங்களிலும்
கணினிக் கலைகளிலும்
உயர்ந்து தழைப்போம்

உடனே முயன்று
ஒரு கணிநிரலி படைப்போம்
அது அந்நோடியே
எம்மொழியையும் மாற்றித்தரட்டும்
தமிழனுக்கு

பிறகென்ன
அவன் விண் தாண்டியல்லவா பறப்பான்
தமிழ் நீடித்தல்லா வாழும்

*

பிற்சேர்க்கை விளக்கம்:



கிரந்தம் இல்லாவிட்டால் தமிழுக்கு மரணமா?

1. ஹ ஷ ஜ போன்ற எழுத்துக்கள் குஷ்பு போன்ற அயல் பெயர்ச்சொற்களை இயன்ற ஓசை கொண்டு எழுத தமிழுக்கு உதவுகின்றன

2. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழுக்குப் பேறு என்பது புது கணினி நிரலி ஒன்றைத் தமிழன் கண்டுபிடித்து உலக அறிவியல் கணித தொழில்நுட்ப ஆய்வுகளை அந்த நொடியே தமிழில் மாற்றித் தரக்கூடிய வசதியைச் செய்து தருவது

3. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழ்ச் சொற்கள் எதிலும் அந்தக் கிரந்தம் கலக்காமல் எழுத முயல்வதே தமிழுக்குப் பேறு.

4. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. வழக்கு அழிந்துபோன தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்துப் புழக்கத்தில் இடுவது பேறு

5. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. பூக்களின் இடையில் அவசியம் கருதி மட்டும் இருக்கும் நாரினைப் போல, அயல் பெயர்ச் சொற்களுக்காக மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியவே அந்த நான்கெழுத்து

*

தமிழை அழிப்பதற்கான சிறந்த வழிகள் சில
1. ஆக்கப்பூர்வமான தமிழ்த் தொண்டுகளைக் கைவிட்டுவிட்டு அவசியமில்லாத காரியங்களில் தமிழன் நேரத்தைச் செலவிடுவது. தமிழ்மாற்றிக் கணினி நிரலி எழுதாமல் அயல் பெயர்ச் சொற்களோடு மல்லாடுவது ஓர் உதாரணம்
2. பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்துக்கொண்டுவராமல், திசைச்சொற்களையே பயன்படுத்தும் நோக்கத்தோடு அதனை நோண்டிக்கொண்டிருப்பது
3. புதிய புதிய அறிவியல் ஆவனங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள் வாணவியல் கட்டுரைகள் சமைக்காமல் எழுத்துக்குள் நின்று எதுவுமற்றுப் போவது
4. அயல் பெயர்ச் சொற்களை ஒலிக்கத் தமிழனால் முடியவே முடியாது அவன் அதைச் சிதைத்தே கொல்வான் என்றுபதுபோல தமிழைத் வெறும் எழுத்துக்காக மட்டுமே தாழ்த்திப் பிடிப்பது
இன்னும் சொல்லலாம் ஆனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன்

தனித்தமிழ் கருத்தாடல்

தனித்தமிழ் எனக்குப் பிடித்தமான ஒன்று, நான் அதையே இயன்றவரை செய்கிறேன். நான் எழுதும் நடையைக் கண்டால் அது எவருக்கும் விளங்கும்.

ஆனால் தனித்தமிழ் என்ற பெயரில் கையாளப்படும் சில அத்துமீறல்களை என்னால் செரிக்கவே முடியவில்லை.

தமிழுக்குள் வலுக்கட்டாயமாகக் கள்ளம்புகுந்த வடச்சொற்களை நான் வெகுவாக வெறுக்கிறேன். எது தமிழ்ச்சொல் எது வடச்சொல் என்று தமிழன் அறியமுடியாத வண்ணம் அது இரண்டறக் கலந்த கொடுமை தமிழுக்கு நிகழ்ந்த அநீதி. அதை எதிர்த்துப் போரிட்டு நற்றமிழ்ச் சொற்களைக் கொண்டுவந்தவர்களை ஆயிரமுறை பாராட்டி இருக்கிறேன்.

தமிழுக்குள் வடசொல் அத்துமீறி கலந்ததால்தான் மலையாளம் என்று தமிழனின் சேரநாடு மாறியது.

ஆனால் இதெல்லாம் தமிழ்ச்சொற்கள் தமிழ்ச்சொற்களாய் இருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவை. இதில் ஏதும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

ஆனால்.....

குஷ்பு, ஹரிஹரன், ஜரினா, ஜேக்கப், ஜோசப் என்பவை தமிழ்ச்சொற்கள் அல்ல, தமிழில் எழுதப்படும் அயல் பெயர்ச்சொற்கள்.

இவற்றை...

குசுப்பு, கரிகரன், சரினா, சேக்கப்பு, சோசப்பு என்றெல்லாம் எழுதுவது தமித்தமிழ் அல்ல. வரட்டுத்தமிழ். 

வரட்டுத்தமிழ் என்றும் சொல்லமாட்டேன். ஏனெனில் தமிழுக்கு வரட்டுத்தனம் வராது. 

இப்படி அயல் பெயர்ச்சொற்களை வேர் மொழியோடு இணைத்து நடத்தும் வரட்டுத்தனத்துக்கு தமிழ் என்ன பாவம் செய்தது?

ஜெர்மனி, ஸ்காட்லாண்ட், டொராண்டோ, ஸ்கார்பரோ, அலாஸ்கா என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களா?

இல்லையே, இவை நாடு, ஊர் ஆகியவற்றின் பொதுச் சொற்கள்.

இதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று படுத்தியெடுப்பது வரட்டுத்தனம் மட்டுமல்ல முரட்டுத்தனமும் கூட

செருமனி, இடாய்ச்சுலாந்து, இசுக்காட்டுலாந்து, தொரந்தோ, இசுக்காருபரோ, அலாசுக்கா....

ஏன் தமிழனில் நாவுகளில் இந்த அயல் பெயர்கள் நுழையவே நுழையாதா? நுழைந்தால் என்ன அழிந்துவிடும், தமிழனின் நா உலக அரங்கில் உச்சரிக்க வேண்டிய அயல் பெயர்களைச் சரியாகத்தானே உச்சரிக்கும்?

தமிழ்ச்சொல் எது அயல் பெயர்சொல் எது என்பதுகூடவா தெரியாத மொழியியல் நேயர்கள் இருக்கிறார்கள்? 

ஆச்சரியம்

மலையாளம் ஏன் வந்தது - தமிழில் பிறமொழிப் பெயர்ச்சொற்களை உச்சரிக்க வழி தந்ததாலா?

அல்லது தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் அத்துமிறி நுழைந்ததாலா?

சமஸ்கிருதம் ஏன் பேச்சின்றி புதையுண்டது? வேற்று எழுத்துக்கள் ஏதேனும் உள் நுழைந்ததாலா?

அல்லது, நடைமுறைக்கு ஒவ்வாததாய் பேசுவோரை விட்டுவிட்டு நூலில் மட்டும் தனிச்சமஸ்கிருதமாய் நின்றதாலா?