வாழ்க்கையின் ஓர் துளி


பூமியின்
கண்ணீர்தானே
கடல்

அந்த மாபெரும்
கண்ணீர்முன் நின்று
நீ
ஒரு சொட்டுக்
கண்ணீருக்கு
எத்தனிப்பது சரியா?

ஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வு



ஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வு - அன்புடன் புகாரி கனடா
20

உன்
விழிவானப் பந்தலில்
மினுக்கும் நட்சத்திரங்களின்
கனவுக் கோலங்கள்தான் நீ

உன்
இதய மயிலின்
இயல்பான தோகை விரிப்புகளால்
சிலிர்க்கும் உணர்வுகள்தான் நீ

ஊருக்கும் உறவுக்கும்
உன் நிறம் கரைத்து வெளிர்வது
நாடகம்

வேர் மறைத்த அபிநயங்கள்
ஒருபோதும் வாழ்க்கையாவதில்லை
சுயத்தின் தலை நசுக்கித்தான்
அரிதாரக் கூத்துகளின் அரங்கேற்றம்

வாழும்போது மரணித்தால்
சாகுப்போதா வாழப்போகிறோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***30 


இறைவன் படைத்தது இயல்புகளை
மனிதன் படைத்தது சிதைவுகளை

இயல்பாய் வாழென
அவன் அனுப்பிவைத்தான்

இவனோ
இஷ்டம்போலச் சட்டமிட்டான்

கோடுகள் கொடுத்ததுவா வாழ்க்கை
கோட்டுக்குள்
நாளும் கிழிகின்றன உயிர்கள்

எது சரி எது தவறு
எவருக்கும் தெரியவில்லை

தவறு சரியென்றும்
சரி தவறென்றும்
தோன்றுவதைத் தடுக்க
எவருக்கும் முடியவில்லை

வட்டம் சிறிதானால் அதனுள்
எப்படி ஓடினாலும்
முட்டத்தான் செய்யும்

வாழ்க்கை ஒருமுறைதான்
ஆனால்
அதனுள் மரண சோதனைகளோ
பலமுறை பலமுறை

வாழ்க்கை கிடைக்கிறது
ஆனால்
வாழ்வதுதான்
பலருக்கும் கிடைப்பதில்ல்லை

தேங்காய் மூடியை
நாய் உருட்டும்
நாட்களாகிப் போகின்றன

அறிவற்று உலவுவதும்
அழகான வாழ்க்கையாகலாம்

எதையும் நம்பி நம்பி வாழ்வதும்
நிரந்தர நிம்மதி தரலாம்

அங்கே
துன்பமென்று
ஏதுமில்லாமல் போகலாம்

துயருக்கும்
வழியில்லை என்றாகலாம்
19

கண்கள் உயிரெழுத்து
பொட்டுநிலா மொட்டுவிட்ட
நெற்றி மெய்யெழுத்து

இதயம் மெல்லெழுத்து
இளங்காலைப் பனிப்பந்தல்
இதழ்கள் இடையெழுத்து

அடியே அழுத்தக்காரி
உந்தன் ஆசைகள்தானடி
வல்லெழுத்து

குரலில் தெறிக்குதடீ
குயிலெழுதும் பொன்னெழுத்து
உன் குற்றாலச் சிரிப்புத்தான்
உயிர் விரிக்கும் பூவெழுத்து

மௌனம் ஆய்த எழுத்து
மனமத்தியில் புதுவாசப்
புயல் அவிழ்க்கும் மல்லிகை மாநாடே
என் அகங்காரி உனைச் சேராமல்
மாறாதடீ என் தலையெழுத்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****29 

செல்கிறேன்


பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்

18

உயிர் மரத்தின்
உணர்வுப் பட்டைகளை
கொத்திக் கொத்தி
உனக்கான இரையைக் கிளறி
எனக்குப் பெருமூச்சுகளை
அடுக்கடுக்காய்ப் பரிமாறி
விருந்து வைக்கும்
உன் அலகுகளில் வழிகிறது
என் வாழ்க்கை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***28

பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும்
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில்
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்
பத்துவயதுப் பருவமகளைத்
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்
பிணங்களடியில் எப்பிணம்
மகள் பிணமோவென்று
தேடிச் சாய்கிறாள்

மணத்தேரேற மனத்தேரேறி
விழித்தேர் செலுத்திய நிலவழகு மூத்தமகளின்
கற்பு சூறையாடப்படுவதைத் தன்னிரு கண்களால்
கொடுநெருப்பாய்க் கண்டவள்
அவள் தொங்கிய கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு
நிலைகுத்திய பார்வையில் வெறித்துக் கிடக்கிறாள்

பத்துமாதம் முன்புதான்
ஓர் பகல்பொழுதின் யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலியறுபட்டாள்
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
நாலுவயது பிஞ்சு மகளை
கம்பிவளைகளுக்குப்பின் காணத் துடிக்கிறாள்

வீடுநிலம்விட்டு பொட்டல் வந்தாள்
அனாதை முகாம்களாகிப்போன அகதி முகாம்களில்
பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு போராடி நிற்கிறாள்
நாலுவயதுப் பிஞ்சாவது மீதப்பட்டுப் போகாதா
என்ற மிகப்பெரிய ஆசையில்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

17

கடல்
தேவையில்லை
உன் விழியின்
ஒரு துளி போதும்
நான்
மூழ்கிப்போவதற்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

27 எது என் ஊர்



கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!

27 இலையுதிர் காலம்

செப்டம்பர் 29, 2014 கனடாவில் இலையுதிர் காலம் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகப்போகின்றன. இந்த முறை குளிர் வருவதுபோல் வந்து விலகிவிட்டதில் மகிழ்ச்சி. கனடாவில் இலையுதிர் கால மரங்களைக் காண்பது எத்தனை அழகென்று நான் ஒருநாள் கவிதை எழுதினேன். அக்கவிதையை எழுதும்போது சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன். இதோ அந்தக் கவிதை


பச்சைத் தாவர
இலைகளின் நரம்புகளில்
பஞ்சவர்ணக் கிளியின்
இரத்தம் பாய்ச்சிப்
பரவசம் பொங்கப்
படபடக்க வைப்பதாரோ
நானறியேன்

மஞ்சளும் சிகப்பும்
முதற்காம மஞ்சத்தில்
ஒன்றுக்குள் ஒன்று
குதித்தெழுந்தால் வரும்
கிளுகிளுப்பு நிறங்களில்
எழிலாய்ச் சிரிக்கும்
இலைகளே இலைகளே!

நீங்கள்
இதயத்துக்குள்
இறக்குமதி செய்யும்
இனிப்பெல்லாம் - என்
இமைக்கூட்டுப் பறவைகள் - ஒரு
கனவாய்க் காணவும் முடியாத
சொர்க்க வெளிக்கல்லவா
இதயத்தை
ஏற்றுமதி செய்கின்றன

அடடா....
இலையுதிர் காலம் என்பது
ஒரு தரமான வரமென்பதில்
சந்தேகமில்லை

மரங்களுக்குக் கிடைத்த
இந்தப் பேறு
மனிதர்களுக்கும் வேண்டும்!

காலம்
கறுப்புச் சுமையேற்றும்
கொடிய கணங்களிலெல்லாம்
கவலைக்குள் கசங்கும்
கண்ணீர் இலைகளை
ஒவ்வொன்றாய்
நிறச் சீர்வரிசைகளோடு
நிலம்மீது உதிர்த்துவிட்டு
தன் உர உயிர் உடைந்துவிடாமல்
இயற்கையை எதிர்த்து நிற்கும்
அற்புத வாழ்வல்லவா - இந்த
மரங்களுக்கு வாய்த்திருக்கிறது!

பின்
காலம் கும்பிடுபோடும்
குதூகலப் பொழுதுகளில் - மீண்டும்
புத்தம் புதிதாய்
இலைச் சிறகுகளைப்
பூட்டிக்கொள்ளும்
பூரிப்புத் திருவிழா - என்றும்
காணக் கண்கொள்ளாக்
காட்சியல்லவா?

இலைகள் பூக்களாகும்
இந்தப் பொற்பொழுதுகளில்
அதில் நனையத் துடிக்கும்
வேகத்தோடு

பூமி மத்தளத்தில்
மேளம் கொட்ட நீண்டுவரும்
மழையின் மந்திர விரல்கள்

மெல்ல மெல்லத்
தட்டித் தட்டி - பின்
காதல் இமைகள் அடிக்கும்
கடும் வேகத்தில்
கொட்டிமுழங்கும் கொண்டாட்டம்

தன் நீர் இலைகளையும்
உதிர்கின்றனவோ - இந்த
இலையுதிர்க்கால மேகங்கள்?

இவ்வேளையில்
காற்றுக்கு
அவசரச் செய்தி அனுப்பியது
யாரென்ற புலன்விசாரனை
பிசுபிசுத்துப் போக
உய்ய்ய்ய்யென்று கூவிக்கொண்டு
ஓடி வருகிறது காற்று

அது
கிளைகளில் அமர்ந்து
இலைகளின் காதுகளில்
எதையோ கிசுகிசுக்க
நாணக் குடம் கவிழ்ந்து
மேலும் சிவக்கின்றன
இலைக்குமரிகளின்
ஈர அங்கங்கள்

இந்த
இனிய காலத்தில்
அலுவலகம் நோக்கி
வாகனம் ஓட்டிச் செல்லும்
அகண்ட பெரும் தார்ச்சாலையில்
வானம் தெரிகிறது எனக்கு
நட்சத்திரங்களாய்க்
கொட்டிக்கிடக்கும்
வண்ணவண்ண இலைகளின்
வசீகரப் புன்னகையால்!

* (அக்டோபர் 2003)

16

காலைக்கும் கனிவுக்கும் இடையில்
எச்சில் புரை ஏறியது
என் உயிரையே வெளியேற்றி

அதன் வள்ளுவ நாயகி
நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில்
செருமிச் செருமிச்
செருமிக்கொண்டே இருக்கிறேன்

புல்நுனி நீர்ப்பொட்டே
எத்தனைமுறை நினைத்திருப்பாய்
நீ என்னை
மறந்தாவது ஒருமுறை
என்னிடம் சொல்லக்கூடாதா

உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்
ஏனிப்படி நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்

வா...
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

**** 26 நட்பு விமோசனம்


சாபம்தான் வாழ்வு
என்றாகிப்போனாலும்
அதில்
சாயம் போகாத
நட்பு
விமோசனம்

15

மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்

சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது

தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்

நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய்ச் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

14

காதல் இல்லாமல்
சிலிர்ப்பதற்கு
உலகில்
எத்தனையோ விசயங்கள்
இருக்கின்றன
காதலைத் தாண்டித்தான்
ஒரு விசயமும்
இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

24 எனக்குக் கவிதையெழுத வேண்டாம்

எனக்குக்
கவிதை எழுதவேண்டாம்
பற்றியெரிந்து நெற்றி வெடித்துப்போன
ஈழக்கொடுந்துயர் பற்றி எனக்கு
ஒரு கவிதையும் எழுதவேண்டாம்

அரை நூற்றாண்டு மூச்சுத் தவமாய்
இதோ ஈழம் என்று
நடு உயிரில் கனவுகண்டு
ஏக்க உணர்வில் வாழ்ந்துவந்த
அப்பாவி உயிர்களின்
அடிப்படை உரிமைகளும்
துரோகத் தீயினில் பொசுங்கிப்போன
யுகதுக்கத்தை எனக்கு
கவிதையாய் எழுதவேண்டாம்

கள்ள நரியொருபக்கம்
மூர்க்க நாயொருபக்கம்
வானங்கொள்ளா வெறி பிடித்த
ஓநாயொருபக்கமென்று
குதறிக்குதறி வேட்டையாட

சோறு வேண்டாம் எங்களுக்கு
தாய்மண் தின்றால் போதுமென்று
பெற்றெடுத்த மண்மீது
அடங்கா காதல் கொண்ட
மானினம் மடிந்த அவலத்தை
எனக்குக் கவிதையாய் எழுதவேண்டாம்

பௌத்தத்தின் பொருள்
அன்பென்று சொன்னார்கள்
உயிர்களின் மீதா
உயிர்களைத் தின்னவா
என்று சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்

புத்தகங்களும் மக்கள்தாம்
உணர்வுகளோடு வாழும்
பல நூற்றாண்டுகளின் உயிர்க் கொத்துக்கள்
அன்றே அவற்றைத் தீக்குள் சமாதிவைத்த
சுடுகாட்டுக் கரங்கள்
வேறெதைத்தான் இன்று செய்துவிடும்

தீவிரவாதம் அழிப்பதாயொரு
பௌத்தப் படுதா கட்டிக்கொண்டு
எந்த யுகமும் காணா
உச்சத் தீவிரவாதம் காட்டிய
தந்திரமா வெற்றி

நச்சுக் கத்திகளுக்கு ஒத்திகை
கர்ப்பிணியரின் கருவசையும் வயிறுகளா

துஷ்ட துப்பாக்கி ரவைகள்தாம்
சோற்றுக்குச் சாவோரின் வாயிலூட்டும்
ஈர ரத்தப் பருக்கைகளா

ராணுவமென்றால் என்னடா
துரத்தித் துரத்தி
பத்துவயதுகளின் கற்பையும்
பேய்த்தனமாய்ச் சூறையாடும்
காட்டுவெறித்தனமா

உங்கள் இனவெறிப் பசிக்கு
உரிமை கேட்போரின்
உயிர்களையே கொத்துக் கொத்தாய்க்
கொடுத்தாகிவிட்டது

நேற்று விழித்த பிஞ்சையும் சேர்த்து
இன்று இந்த உலமே தெரிந்துகொண்டது
தமிழரென்றால் யாரென்று
ஆனால் அதற்குக் கொடுத்த விலைதான்
அதிகமோ அதிகம்

ஊசலாடும் அரையுயிர்ப் பிணங்களின்
ரத்தச் சொதசொதப்பில்
கனரக ஆயுதச் சக்கரங்களாவது
ரத்தக் கண்ணீர் சிந்தின
நீங்களோ சிவப்புக் கம்பளம் என்று
குதூகலித்தீர்கள்

அலறித் துடித்த அத்தனை உயிர்களின்
கடைசிப்பொழுது சாபங்களும்
சும்மா இருக்காதடா
பெரும் சுனாமிகளாய் எழும்

குள்ளநரி அரசியல் கூத்துகட்டி
நீங்கள் ஆடியதல்ல வெற்றி
அறம்காத்து வருவதொன்றே
நிரந்தர வெற்றி

உரிமை கேட்பது அறம்
தரமறுப்பது அரக்கம்

போராடுவது அறம்
புதைத்துப்போடுவது அரக்கம்

இனியொரு தமிழ்த் தீபாவளி வரும்
அன்று நரகாசுரம்
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும்

கொஞ்சம் பொறு
உலகத் தமிழினம் ஒற்றுமைச் சிறகுகளை
ஒன்றனுக்குள் ஒன்றாக
அறத்தறியில் நெய்துகொண்டிருக்கிறது

துரோகத் துருப்பிடித்த அச்சாணியோடு
அதுவரைக்கும் இரு

13

எதையும் இழக்கலாம்
இவளுக்காக என்று
உயிரைச்
செதுக்கிக் கொள்ளும்போது
காதலனைச்
சுவாசிக்கிறது காதல்
காதலைத்
தொழுகிறான் காதலன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

23 ஈரச் செங்கறை அப்பிய பலகோடிக் கரங்களோடு


சின்னஞ்சிறு கால்கள் சிரித்து விளையாட
மண்வாசம் எழுந்து நெஞ்சு நிரப்ப
வசந்த புழுதி பறந்த தெருக்களில்
சிதைந்த பிணக் குவியல்கள் சிதறிச்சிதறிப் பறக்க
பாழும் பூமியிலிருந்து பரிசுத்த வானம் நோக்கி
சுடுரத்தப் பெருமழை

பிசுபிசுக்கும் ஈர வெப்பம் தாளாமல்
கருங்குழி தேடி ஓடுகிறான் சூரியன்
விடைபெறுகிறது வெளிச்சம்
நிரந்தரமாய் வாழ்வீதிகளில்

தீராத பிணச்சதையுண்டு
முறிந்து தொங்கும் எலும்பு மென்று
செரிக்கத் திணறும் வயிற்றுக்கு
கடலளவு குருதி குடித்துக்
களைத்துப்போகிறது அடர் இருட்டு

ஓல ஒப்பாரிகள் மேல் மரண அச்சு பதித்து
இரும்புக் கால்களில் தரைப்படை
கட்டற்ற கண்ணீர் உப்பாறுகளில்
கொடுந்துடுப்பசைத்து கடற்படை
உடலெறிந்த அனாதை உயிர்கள்
எந்த உடலிலிருந்து எறியப்பட்டோம்
என்பதும் அறியாமல் ஹோவென்று
இடைவெளியற்று காற்றில்
நெறுக்கியடித்துப் பறந்துசெல்லும்
பாதைகளில் வான்படை

பல்லொன்றில் பலநூறு புதுப்பிணங்கள்
பல்லாயிரம் பற்களோடு அரக்கன்
இதோ நிற்கிறான்

கற்புதின்று கலாச்சாரம் குடித்து
மரபு அடையாளங்கள் தொலைத்து நிற்கும்
நாளைய பேரவலத்தை இன்றே வெளித்தள்ளும்
காட்டுமிராண்டிக் காலத்தவன்
இதோ நிற்கிறான்

இதோ நிற்கிறான்
முன்னிலும் கொடூரமாய்

ஈவு இரக்கமற்று விரிந்து திமிறும் மார்போடும்
ஈரச் செங்கறை அப்பிய பலகோடிக் கரங்களோடும்
சிறுபிள்ளை கருவயிறு முதுவுயிர்
என்றெதையும் விட்டுவைக்காமல்
மிதித்துப் பிழியும் ராட்சத கால்களோடும்
இதோ இதோ

இதோ நிற்கிறான்
முன்னிலும் மிகமிகக் கொடூரமாய்

(நன்றி: புகலி)

12

உயிர்ப் பந்தை
உருட்டி விளையாடுகிறது
காதல்
உதைத்து விளையாடுகிறாள்
காதலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
11

நான் அதிக நேரம் வாசிக்கும்
ஒரே கவிதை
உன் புகைப்படம்

புரிகிறது புரியவில்லை
புரிகிறது புரியவில்லை
உன் பார்வையை வாசித்துக்கொண்டே
ஒரு பைத்தியம்

பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் நீ
புகைப்படமா இலக்கிய மேடையா

எப்போது நிறுத்துவாய் என்று
உன்னிடம் நீ கேட்டுச் சொல்
நீ சொல்லப்போகும் சொல்லுக்குக்
கட்டுப்படுமா என் கண்கள் என்று என்னிடம்
நான் கேட்கத் தேவையில்லை

கொஞ்சம் திரும்பு
இப்படி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர் திரி கொளுத்தப் பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது

இன்றும் அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி
நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது
உயிர் போவதைத்தான் உணரமுடிகிறது

*
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


_______________________________________
இளமை விகடன் பிரசுரம்