அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்

தோழியை அழைத்தேன்....

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்...

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசந்தரும் என்னைப் பெறா
அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

வீட்டைவிட்டு
வெளியேற....

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க...

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
ஒரே படகில் பயணப்படும்
என் உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???

கணியன் பூங்குன்றன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்,
இன்னா தென்றலும் இலமே ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 -கணியன் பூங்குன்றன்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
அவனும் இல்லை