ஆதாமின் புத்திரர்கள்

ஓர்
உயர்ந்த இதயம்
சந்தர்ப்பங்களின்
சதியில்
தடுமாற்றம்
கண்டிருக்கலாம்

அதனால் மட்டுமே
அது
கெட்டுவிட்டது
என்றில்லை

அப்படித்தான்
உயர்வுகள் கெடுமென்றால்
உயர்வு என்ற ஒன்று
இல்லவே இல்லை

இதயநெறி

நீ
விழும்போது
மின்னல் கீற்றாய்
விரைந்து
உன்னைத் தாங்கும்
ஓர் இதயம்
முன்பே விழுந்து
பேரடி
வாங்கியதாய்த்தான்
இருக்கும்
உனதே உனது

எந்த விரல்கள்
உன் சந்தோச தீபங்களை
ஏற்றி வைக்கின்றனவோ
அதே விரல்களே
உன் சோக ஊற்றுகளையும்
தீண்டித்
திறந்துவிட்டு நிற்கும்

சந்தோசமோ சோகமோ
எதுவாயினும்
அதன் காரணியை
வெளி விரல்களில் இருந்து
கைப்பற்று
உன் சொந்த விரல்களுக்கு
இடம்மாற்று

மறுகணம்
நீ வாழும் வாழ்க்கை
உனது

உன்
இன்ப துன்பங்கள்
உனதே உனது



நானொரு கவிதை
நீயொரு கவிதை

ஒருவர் வரியிலே
ஒருவரடி

அறிமுகமாயிற்று...

ஒருவர் உயிரிலே
ஒருவரடி

சிலிர்த்தாகிவிட்டது...

ஒருவர் மெய்யிலே
ஒருவரடி

கலந்தாயிற்று...

ஒருவர் பொய்யிலே
ஒருவரடி

வாழத்தொடங்கியாயிற்று...

எங்கிருந்து வந்தாய்

உன் வேர்களில்
எப்படி வந்தது என் வாசம்

உன் வாசத்தில்
எப்படி பூக்கிறது என் காலம்

இன்றோடு எனக்கொரு
புது ஜென்மமா

நீயா...
நீயேதானா
அதைத் தரவந்த தேவதை

உன்னை
அணைக்கத் துடிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னை
முத்தமிட ஏங்குகிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னுள்
மூழ்கிப்போக கொதிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

ஏன்

நீ சொல்
என்னைத் தெரிந்த
கர்வம் உனக்கிருந்தால்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***

*பற்றுதான் வெறுப்பு*

ஆம்
ஒன்றின் மீதுள்ள
அதீத பற்றுதான்
மற்றதன் மீதான
அதீத வெறுப்பும்

என்றால்
பற்று
தவறானதா?

இல்லை
பற்று
தவறே இல்லை

பற்றுடை நெஞ்சு
சுருங்கியதாய் இருப்பின்
அதுவே தவறு

பற்றுடை நெஞ்சம்
ஒன்றையே
பற்றிக் கிடக்கட்டும்
தொற்றுநோய்
அப்பற்றிலில்லை

ஆனால்
இவ்வுலகும் தன்போல்
தனக்குப் பிடித்த
ஒவ்வொன்றையும் பற்றிக்கிடக்கும்
பற்றுக் கொடிகளால் ஆனதே
என்பதை
ஏற்கக்கூட வேண்டாம்
மறுக்காதிருந்தால் மட்டுமே
போதும்

வெறுப்புகள் வெளியேறும்
பூமிப்பூ புன்னகைக்கும்

சகிப்பின்மை
பூமிக்கான இருதய நோய்

அன்புடன் புகாரி
அறக் கண்ணாடியில்...

வஞ்சகர்களின்
தந்திரங்களில் ஏமாறும்போது
உங்களை நீங்களே
குறைவாக எண்ணிக்
குமையாதீர்கள்

அறக் கண்ணாடியில்
உங்கள்
அழகைப் பாருங்கள்
நீங்கள் நீங்களாக
நல்ல மனதோடு இருக்கிறீர்கள்

அதைப்
புலன்கள் ஐந்தும் குதூகலிக்கப்
பூதங்கள் ஐந்தோடும்
கூடிக் கொண்டாடுங்கள்

அப்போதுதான் உங்கள்
நல்ல மனம்
விரியத் தொடங்கும்
தந்திரக்காரர்களைத்
தடாலடியாய்த்
தோற்கடிப்பீர்கள்

இல்லையேல் உங்கள்
நல்ல மனம்
மெல்ல மெல்லச்
சுருங்கத் தொடங்கிவிடும்
நீங்களும் அந்த அற்ப அழுக்குப்
புழுக்களாகிவிடுவீர்கள்
உன்னையே உயிரென்று
நான்
ஏற்றிவைத்த பின்
உன்னை
எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
புல்லரிக்கவே செய்கிறது

...பைத்தியம்
...பிசாசு
...உசுரு
...லட்டு
...ராட்சசி
...டைனசர்
...செல்லக்குட்டி
...சாத்தான்

நீ பைத்தியம் என்றால்தான்
என் நோய் வைத்தியம் பெறும்

நீ பிசாசு என்றால்தான்
என் உயிர் உனதாகிப்போகும்

நீ உயிர் என்றால்தான்
தமிழ் எனக்குக் கவிதைகள் தரும்

நீ லட்டு என்றால்தான்
என் எறும்புகளெனைக் கொல்லாதுவிடும்

நீ ராட்சசி என்றால்தான்
என் காதல் சாந்தம் பெறும்

நீ டைனசர் என்றால்தான்
என்னைத் தேடித்தேடிக் கடிப்பாய்

நீ செல்லக்குட்டி என்றால்தான்
என் மடிவிட்டு இறங்கவே மாட்டாய்

நீ சாத்தான் என்றால்தான்
நான் உன் ஆப்பிள் உண்ணுவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

எங்கே நீ என்று
என்னிடம் கேட்டால்
நான் எப்படிச் சொல்வேன்


நீ
கண்டுபிடித்தால்
ஒப்படைத்துவிட
ஓடோடி வந்துவிடாதே

ஏனெனில்
நீ
கண்டுபிடிக்கப்போவது 
என்னை அல்ல
உன்னை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விளையாடிச் செல்கிறது...

வசந்தங்கள் தேடும்
பார்வைகளோடும்

வாய்ப்புகளுக்கேங்கும்
தாகங்களோடும்

விழிகளில் நிறையும்
கனவுகளோடும்

விரல்களில் கனியும்
தவிப்புகளோடும்

உயிரூட்டித் தேற்றும்
தமிழோடும்

அத்தனைக்கும் மேலொரு
முத்தமாக
இந்நொடி நலம் கேட்கும்
மனம்பிடித்தக் கவிதையோடும்
விளையாடிச் செல்கிறது
வாழ்க்கை
இந்துக்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
இந்தியா என்றோ
அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம்
லாபநோக்குடைய வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக் கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதத்தை
வல்லரசுகள் விரும்புவதைப் போல
உலக மக்கள் யாவரும்
விரும்பிவிட்டால்
ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்

தீவிரவாதம் வெறுக்கும்
மக்களைப் போற்றுவோம்

தீவிரவாதம் உருவாக்கும்
நச்சு வல்லரசுகளைத் தூற்றுவோம்
நீ ஒரு வானம் கொண்டுவந்தாய்
நான் ஒரு வானம் கொண்டுவந்தேன்

உன் நட்சத்திரங்களை
நீ என் வானில் இறைத்தாய்
என் நட்சத்திரங்களை
நான் உன் வானில் நிறைத்தேன்

இரண்டு வானங்களிலும்
நீயே ஒற்றை நிலவானாய்
உன்முக ஒளியெழிற்காகவே
நான் கதிர்வீசும் சூரியனானேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

மூடப்பட்டுக் கிடக்கும் புத்தகங்கள்

படிப்பதற்காக வாங்கி வைத்த
புத்தகங்களின் அட்டைகளில்
ஏறி நின்று
விருப்பமும் நேரமும்
ஒன்றை ஒன்று
தேடிக்கொண்டிருக்கின்றன

நிரம்பி வழியும் சறுக்கல்களில்
ஓடிப் போகும் நேரத்தைத்
தப்பவிடும் விருப்பம்
எங்கே தொலைந்தாய் நேரமே
என்று சாடுகிறது

துளியும் வைத்துக்கொள்ளாமல்
வாரிக்கொடுக்கும் நேரம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
எங்கே தொலைந்தாய் விருப்பமே
என்று வழக்காடுகிறது

கத்தி கம்புகளோடும்
நித்திரை விழிப்புகளோடும்
மான அவமானங்களோடும்
அட்டைகளின் மேல்
யுத்தம் விருவிருப்படைகிறது

மூடப்பட்டுக்கிடக்கும்
புத்தங்களின் உள்ளே
தீர்வுகள் எழுதப்பட்டிருக்கலாம்

மயக்கமா தெளிவா

ஹதீதுகளில் மயங்குவதைவிட
குர்-ஆனில் தெளிவதே நலம்

அம்மா கவிதை ஆங்கிலத்தில் மொழியாக்கம்


Amma...
This world is just so tiny 
When compared to
The grandeur of your immense love


Even before my tongue could move
You taught me a language  -
The language of this universe
LOVE - that needs no words


When I first peeped into this world
Cuddled in the warmth of your arms
In a blissful comfort
The whole world seemed
So sweet and serene
With a lot of  promising love


Oh my beloved Amma....
You are my Niagara of love
Drenching my soul deeply
With the never ending shower of
Your hugs and kisses


Oh my most beautiful Amma....
I feel I would have expressed less
When I  said
You are my dark, rain bearing cloud
Ready always for
A heavy downpour of your love
Over me and only me


Oh my selfless Amma...
You have been a candle
All your life
Burning yourself - Sacrificing
Only to bring light to my eyes


Isn't it true?
The first home I ever lived
Is your precious womb


Isn't it true?
The first food I ever consumed
Is the sacred milk
From your body and blood


Isn't it true?
The first lullaby I ever heard
Is the 'Araaro... Aariraro.... '
Which is the voice of your loving soul


Isn't it true?
The first face I ever saw
Is your beautiful face
That glowed with nothing but endless love


Isn't it true?
The first word I ever spoke
Is 'Amma...'
Which is deeply forged in my soul


Isn't it true?
The first breathe I ever took
Is your divine gift to me


Oh my affectionate  Amma....
Like a bird that keeps grains in the beak
To feed its young
You fast always
Waiting for me to eat first
Before taking a morsel for yourself


When in my life I wandered astray
Only your tear drops were the beacon
That guided me to the right path.


Oh my angel Amma....
Isn't it true?
Even If I promise to offer you my life
In place of all your endless sacrifice
I will still be an ungrateful soul
As I will be giving back only a small drop
For the ocean of treasures
You showered upon me


Amma....  Amma...
I love you
Amma....

ரிதா ரிதா




ரிதா ரிதா

பலநேரங்களில் எனக்குக் கவிதை எழுதுவது மழை பொழிவதைப் போல்தான். ஆனால் அது உணர்வுகளின் ஒய்யார மழை. என் உள் முகில்கள் நீர்சுரந்து நீர்சுரந்து கருத்து நிற்கும் பின் ஒரு தனிமைச் சந்தர்ப்பத்தில் சட்டென்று கொட்டிவிடும். பெரும்பாலும் அதன்பின் அக்கவிதையில் மாற்றங்கள் தேவைப்படாது. தேவைப்படும்போது நான் மாற்றங்களை நிச்சயமாகச் செய்வேன். ஆனால் அப்படி எந்த மாற்றமும் செய்யாத கவிதை இது. 

.
பனி பொழிந்த ஓர் இரவில்
கத்தி முனையில் கத்தாமல் பிறந்த
சித்தாரமே என் சென்பகமே...
.
என் மகள் பெற்றெடுத்த மகளே
ரிதா ரிதா
.
தேன் மலரா தீஞ்சுவையா
தஞ்சைத் தமிழா தாரகையா
என் தங்க நிலவே பொன் மகளே
ரிதா ரிதா
.
பெண்களெல்லாம் பிறந்தபின்தான்
அழகு நிலையம் செல்வார்கள்
நீ மட்டும்தான் தங்கி இருந்த சொர்க்கபுரியிலேயே
அழகு நிலையப் பணியையும்
முடித்துக்கொண்டு பிறந்திருக்கிறாய்
.
ரிஸ்வானா உன் தாய்
என்பதின் சுருக்கமா உன் பெயர்
ரிதா
.
உன் கண்கள் கண்டேன்
செவிகள் பார்த்தேன்
கைவிரல் தடவினேன்
கன்னம் முகர்ந்தேன்
பனி மென்மை பரிசித்தேன்
பவள இதழ் தொட்டேன்
கன்னங்கரு முடி வருடினேன்
உறங்கும் பேரழகு ரசித்தேன்
.
அடடா நம் குடும்ப அழகை
இப்படி அச்சடித்து அள்ளிக்கொண்டுவர
வயிற்றுக்குள்ளேயே
நீ வரம்கேட்டு வாங்கிவந்தாயா
.
அழுகின்ற குழந்தை
பால் குடிக்கும் என்பார்கள்
பால் குடிக்கக்கூட அளவோடு அழும்
உன் பக்குவத்தை
நீ எங்கிருந்து பாடம் கற்று வந்தாய்
.
பால் பொழியும் உன் பூ முகம் கொண்டு
எனக்குப் பாசம் பொழிய வந்தாயா


உன் அன்னையின் தந்தைக்கு
நீ அன்னையாக வந்தாயா


உன் சிறு கொள்ளைச் சிரிப்பில்
என் சாபங்களைச் சிதறடிக்க வந்தாயா
.
என் தோட்டங்களிலெல்லாம்
இன்று ஒரே ஒரு பூதான்
ரிதா
.
என் இதயத்தைக் கோதிவிடும்
உன் சின்னஞ்சிறு தலையைக் கோதுவதுதான்
இனி எனக்கு எல்லாமும்
என் உயிர் ரிதா ரிதா
பசுமை விரித்த
இலைகளால் மட்டுமின்றி
நீருக்கு மேலே எட்டிப் பார்க்கும்
வேர்களாலும் சுவாசிக்கும்
அலையாத்தியை போல
உள்ளத்தின் உதடுகளால் மட்டுமின்றி
உயிரின் இழைகளாலும்
என்னையே சுவாசிக்கும்
அடியாத்தி
நீ என் அலையாத்தி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*

குறிப்புகள்:

அலையாத்தி என்பது ஒரு வகை மரம். இது கடலோரங்களில் தொடர்ச்சியாகக் காண்ப்படும். இதை சதுப்புநிலத் தாவரம் என்று கூறலாம்.

2008ல் இந்தியா சென்றபோது முத்துப்பேட்டையில் உள்ள இந்த அலையாத்திக் காட்டுக்குச் சென்றிருந்தேன். அருமையான பயணமாக இருந்தது. ஒரு படகில் பதினைந்துபேர் சென்றோம்.

அலையாத்தி மரம் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. இதனால் சுனாமி போன்ற பெரும் ஆபத்துக்களும் தடுக்கப்படும்.

இதன் வேர்கள் வினோதமானவை. அதை கீழே வாசியுங்கள்

Adaptations to low oxygen
Pneumatophore penetrates the sand surrounding the mangrove tree.
Red mangroves, which can survive in the most inundated areas, prop themselves above the water level with stilt roots and can then absorb air through pores in their bark (lenticels). Black mangroves live on higher ground and make many pneumatophores (specialised root-like structures which stick up out of the soil like straws for breathing) which are also covered in lenticels. These "breathing tubes" typically reach heights of up to thirty centimeters, and in some species, over three meters. There are four types of pneumatophore—stilt or prop type, snorkel or peg type, knee type, and ribbon or plank type. Knee and ribbon types may be combined with buttress roots at the base of the tree. The roots also contain wide aerenchyma to facilitate oxygen transport within the plant.
கறுவுளக் கொள்ளையர்கள்

அரசியல் கழுகுகள்
அத்தனை வாழ்வாதாரங்களையும்
மிச்சமே வைக்காமல்
கடிதுகவ்விச் செல்கின்றன

எதைத்தான் திருடுவது என்ற
வெட்கமும் வேண்டாமா

சோறு திருட்டு
சுகம் திருட்டு
உரிமை திருட்டு
உறக்கம் திருட்டு
என்பதெல்லாம் போக

நீர் திருட்டு
நிலம் திருட்டு
நெருப்பு திருட்டு
காற்று திருட்டு
ஆகாயம் திருட்டு என்று
பஞ்ச பூதங்களைக்கூட
எப்படித்தான் திருடுகிறார்களோ
பிரபஞ்சத் திருடர்கள்

ஊர் கொஞ்சம் பெருசு என்றால்
அங்கே ஏரி திருட்டு

சிற்றூர் என்றால் அங்கே
குளம் கேணி குட்டை
குட்டையின் மண்
மண்ணின் தூசு

காப்பொன்னிலும்
மாப்பொன் எனும் நக்கல்மொழி
அரசியல் நடப்புமொழியிடம்
தோற்றோடிப்போனதால்

சளியைக்கூட
பொத்தி வையுங்கள்

வருவார்கள் வெல்வார்கள்
வெள்ளாடை போர்த்திய
கறுவுளக் கொள்ளையர்கள்
அழுகைதான்
மனித நாகரிகத்தின்
முதல் படி

ஆண் அழுவது
அழகல்ல என்பது
அழகல்ல

அழுவது
முடங்கிப் போய்விட என்றால்
ஒருபோதும் அழுதுவிடாதே

அழுவது
ஆறுதல்கொள்ள என்றால்
அழுதுவிடு

சிரிப்பு வரும்போது
சிரிக்காமல் இருப்பவன்
மட்டுமல்ல

அழுகை வரும்போது
அழாமல் இருப்பவனும்
குறையுள்ளத்தானே
இந்தியாவின்
ஒரு
சாதாரண
எம் எல் ஏ வீட்டுக்
கழிப்பறையைப் போல...
எப்போதுதான்
சென்னைப் பன்னாட்டு
விமான நிலைய
ஒப்பனை அறையும்
மாறும் என்ற ஏக்கமே
இம்முறைப் பயணத்திலும்....



இருந்தால் இந்தியாவில்
அரசியல்வாதியாய் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் அப்படியே
வேறு நாட்டிற்கு
ஓடிவிட வேண்டும்
...
அரசியல்வாதியாய் இருக்க
எனக்கு எந்தத் தகுதியும் இல்லை
வெளிநாடு ஓடலேன்னா
சோறு கிடைக்காது
வாழ்க மணித்திரு நாடு
யுத்தம் மறைந்த
மண்ணகம்
முத்தம் நிறைந்த
பொன்னகம்

யுத்த வெறுப்பும்
முத்த விருப்புமே
உலகின்
தலை சிறந்த
நாகரிகம்
* *

சந்தேகிக்க
நூறு விழுக்காடு
வாய்ப்பிருந்தும்
துளியும்
சந்தேகிக்காத
கசடறு அன்பே
காதல்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பிள்ளைகள்
இயற்கையிடமிருந்தும்
இறைவனிடமிருந்தும்
செய்திகள் கொண்டுவந்திருக்கிறார்கள்

கற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையைக்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்

பிள்ளைகளைக்
கொத்தடிமை ஆக்காதீர்கள்

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

தாய் மடிகிடந்து
தாய் முகம்கண்டு
தாய் முலைப் பால்பருகி
தாய் மேனி மெத்தையில் கண்ணுறங்கி
தாய் முத்தம் பெற்று
தாய் உயிர்த் தளிராய் வளரும் சேய்க்கு
தாய் மொழிக் கல்வி வேண்டுமா
என்ற கேள்வியும் வேண்டுமா?

காதலர் தினம் அது யாவரும் கேளிர் தினம்

காதலர் தினம் அது யாவரும் கேளிர் தினம்

கொலை ரத்தம்
கொப்பளிக்கும் யுத்தபூமி
அற்றைநாள் பேரரசு
ரோமாபுரி

கால்களுக்கும் தோள்களுக்கும் பூட்டு
போர்வீர
நெஞ்சுரத்தின் மீதுவிழும் வேட்டு
என்றே
தடைசெய்து நிறுத்தியது
திருமணத்தை

அங்கேயோர் துறவி
வாலண்டைன் என்பது அவர் பெயர்
அவரோ வாலிபரின் காயங்களில்
விழுகின்ற கண்ணீர்

புழுதிவெறி மாமன்னன்
கண்மறைத்து
பழுதில்லாக் காதலை
வாழவைத்தார்
ரகசியமாய் கல்யாணம்
முடித்துவைத்தார்

கண்டனவே அதையந்த
அரசவைக் கண்கள்
கொதித்து வெடித்தனவே
கோபமெனும்
எரிமலைப் புண்கள்

அறுத்தெறியடா
அந்தத் துறவியின் கழுத்தை
ஆணையும் வந்தது
மரணத் தேதியும் தந்தது

அடைபட்டச் சிறைச்சாலையில்
அரிய நட்போடு ஒரு காவலதிகாரி
அவருக்கோ
அழகே அவளென்றானதோர்
அன்புமகள்

ஆனால்
பிறப்பிலேயே அவள்
பார்வையற்றுத் தவிக்கும்
துன்பமகள்

பரிசுத்தப் பிரார்த்தனையால்
தேவனின் ஆசிகளைப்
பொழியவைத்தார் புனிதத் துறவி
அவளின்மீது

அடடா என்ன அதிசயம்
சிறு விழிகள் பிறந்தன நிலவுகளாக
அவை
தத்தித் தத்தித் தாவிக் குதித்தே
ஆடத் தொடங்கின குழந்தைகளாக

நன்றியோ
கருணையோ
அன்பின் பெருக்கோ
கொட்டும் நயாகராவைக்
கொண்டன அவள் கண்கள்

மரணத்தின் இறுதி நொடியில்
நின்று
கண்பெற்றச் சின்னவளுக்கு
எழுதுகிறார் துறவி
ஒரு கடிதம்

அன்புடன் வாலண்டைன்
என்றே
அக்கடிதம் நிறைகிறது

பலநூறு கதைகளில்
நம்பத் தகுந்ததென
இதனையே போற்றுகிறது மேற்கு

வாலண்டைன் தினம்
என்றதனைக் கொண்டாடுகிறது
உலகு

பரிவின் நாள் அது பாசத்தின் நாள்
அன்பின் நாள் அது அரவணைப்பின் நாள்
என்றபோதிலும் அந்த நாளைக்
காதலர்களே கொண்டாடுவதால்
அது காதலர்தினம் என்றே ஆனது

ஆயினும்
பல நாடுகளும்
அன்பர்கள் தினமென்றும்
நண்பர்கள் தினமென்றும்
பச்சைப் பயிர்களின் தினமென்றும்
பறவைகளின் தினமென்றும்
இன்னும் பலவாறாயும்
மகிழ்ந்தே கொண்டாடினாலும்

மதவெறிக் குருடர்களால்
காதலர்களைக் கண்டவிடத்து
அடித்துநொறுக்கும் தினமாகவும்
கொன்றாடப்படுகிறது

இந்நாளில் நானோ
சங்கத் தமிழனின்
செங்கதிர்ச் சொற்களை
எண்ணிப் பார்க்கிறேன்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

அடடா
அறத்தால் வார்த்த
உரத்த குரல்

வானத்தையே உடைத்தெறியும்
வையப் பார்வை

இதனினும் உயரமோ
இவ்வுலகிலோர் அன்பு
ஒரு பண்பு பாசம் காதல் நட்பு

உலகெலாம் எனது ஊர்
உலக மக்களெலாம் எனது உறவுகள்

சொல்லச் சொல்லப் புல்லரிக்கும்
இம்மத்திரச் சொற்களால் அல்லவா
இந்நாளினை அழைத்திடல்
தகும்

இன்று தொட்டு
யாதும்ஊரே யாரும்கேளிர் தினம்
என்றே
இந்நாளினை அழைப்போம்
உள்ளம் நெகிழ்ந்து
உயிர்வரை மகிழ்ந்து

அன்புடன் புகாரி

கோட்சே வாழ்க

கனடாவில்கூட காந்திக்குச்
சிலை வைத்துப் போற்றுகிறார்கள்
காந்தி பிறந்த நாட்டில்
அவர் உயிரை
இன்னும் இன்னும்...
கொன்றுகொண்டே இருக்கிறார்கள்



செய்தி: இந்தியாவில் ஒரு பாலத்திற்குக் கோட்சே பெயரைச் சூட்டுகிறது பஜக

கிரந்தம் நாலெழுத்தும் அயல் பெயர்ச்சொல்லும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றான் தமிழன்

கிணற்றுத் தவளையா
தமிழன்

சொல்லவும் கூடுவதில்லை
அவை சொல்லுந் திறமை
தமிழ்மொழிக் கில்லை என்றொரு
பேதையுரைத்தான் என்றான்
பாரதி

உலகின் அயல் பெயர்ச்சொற்கள்
அனைத்தையும்
தமிழனால் உச்சரிக்க இயலவேண்டும்
அப்போதுதான் அவனால்
உலக மேடைகளில் ஓங்கி நிற்கவியலும்

சொல்லவே தெரியாதவன்
உலகமேடையில்
வெல்லவா போகிறான்

சொல்லுஞ் சொல்லில்
தமிழன் தமிழ்ச்சொல்லையே கொய்வான்
ஆயினும் தமிழல்லாச் சொல்லைச்
சொல்ல நேருங்கால்
அவனால் தங்குதடையின்றி
சொல்லி முடிக்கவும் தெரியும்

பெயர்ச்சொல்லில் இரட்டை நாக்கு
அவசியமற்றது
வீணே சக்தியை இழப்பதும்கூட

இந்த நான்கே போதும்
இனி எந்த எழுத்தும் தேவையில்லை
என்று அன்றே முடிவெடுத்தத் தமிழன்
தந்த நான்கினையும் ஏன் மறுப்பானேன்

அது மேலும் பெருக வேண்டுமென
எவன் வந்தாலும்
இடுப்பொடிக்கும் விழிப்புணர்வு
இன்று தமிழனுக்குண்டு

பண்டை நாலெழுத்தால்
என்ன கெட்டது தமிழில்
சொல்லா? பொருளா?
சொற்களின் தன்னிகரா?
பொருளின் தரமா?

குஷ்புவை குசுப்பு என்று அழைப்பது
தமிழனுக்கு நாற்றமல்லவா

ஜெய்ஹிந்தை செய்யிந்து என்றால்
நன்றாகவா இருக்கும்

உலகின் பழம்பெரும் மொழி
அனைத்து எழுத்துக்களையும் கொண்டிருக்காது
அதுவே அதன் சிறப்பு

ஆனால்
ஓரிரு எழுத்துக்களை
புதியன புகுதலென
அயல் பெயர்ச்சொற்கள் பயிலும்போது
மட்டும் ஏற்கும்போது
மெருகேறித்தானே நிற்கிறது

தமிழ்ச்சொல் கெட்டதா
தமிழன்தான் கெட்டானா

எழுத்து என்பது
ஒரு வாகனம்தான்
அதில் ஏறிச்செல்லும்
மொழிதான் உயிர்

சில்லறைவிடயங்களில்
செலவழிந்துபோகாமல்
நாம் சிகரம் தொடும்
தமிழ் படைப்போம்

அறிவியல் புதினங்களிலும்
கணினிக் கலைகளிலும்
உயர்ந்து தழைப்போம்

உடனே முயன்று
ஒரு கணிநிரலி படைப்போம்
அது அந்நோடியே
எம்மொழியையும் மாற்றித்தரட்டும்
தமிழனுக்கு

பிறகென்ன
அவன் விண் தாண்டியல்லவா பறப்பான்
தமிழ் நீடித்தல்லா வாழும்

*

பிற்சேர்க்கை விளக்கம்:



கிரந்தம் இல்லாவிட்டால் தமிழுக்கு மரணமா?

1. ஹ ஷ ஜ போன்ற எழுத்துக்கள் குஷ்பு போன்ற அயல் பெயர்ச்சொற்களை இயன்ற ஓசை கொண்டு எழுத தமிழுக்கு உதவுகின்றன

2. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழுக்குப் பேறு என்பது புது கணினி நிரலி ஒன்றைத் தமிழன் கண்டுபிடித்து உலக அறிவியல் கணித தொழில்நுட்ப ஆய்வுகளை அந்த நொடியே தமிழில் மாற்றித் தரக்கூடிய வசதியைச் செய்து தருவது

3. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. தமிழ்ச் சொற்கள் எதிலும் அந்தக் கிரந்தம் கலக்காமல் எழுத முயல்வதே தமிழுக்குப் பேறு.

4. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. வழக்கு அழிந்துபோன தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்துப் புழக்கத்தில் இடுவது பேறு

5. கிரந்தம் நான்கெழுத்து தமிழுக்குப் பேறு அல்ல. பூக்களின் இடையில் அவசியம் கருதி மட்டும் இருக்கும் நாரினைப் போல, அயல் பெயர்ச் சொற்களுக்காக மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியவே அந்த நான்கெழுத்து

*

தமிழை அழிப்பதற்கான சிறந்த வழிகள் சில
1. ஆக்கப்பூர்வமான தமிழ்த் தொண்டுகளைக் கைவிட்டுவிட்டு அவசியமில்லாத காரியங்களில் தமிழன் நேரத்தைச் செலவிடுவது. தமிழ்மாற்றிக் கணினி நிரலி எழுதாமல் அயல் பெயர்ச் சொற்களோடு மல்லாடுவது ஓர் உதாரணம்
2. பழந்தமிழ்ச்சொற்களைப் புழக்கத்துக்கொண்டுவராமல், திசைச்சொற்களையே பயன்படுத்தும் நோக்கத்தோடு அதனை நோண்டிக்கொண்டிருப்பது
3. புதிய புதிய அறிவியல் ஆவனங்கள், ஆராச்சிக் கட்டுரைகள், கணினி ஆய்வுகள் வாணவியல் கட்டுரைகள் சமைக்காமல் எழுத்துக்குள் நின்று எதுவுமற்றுப் போவது
4. அயல் பெயர்ச் சொற்களை ஒலிக்கத் தமிழனால் முடியவே முடியாது அவன் அதைச் சிதைத்தே கொல்வான் என்றுபதுபோல தமிழைத் வெறும் எழுத்துக்காக மட்டுமே தாழ்த்திப் பிடிப்பது
இன்னும் சொல்லலாம் ஆனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன்

தனித்தமிழ் கருத்தாடல்

தனித்தமிழ் எனக்குப் பிடித்தமான ஒன்று, நான் அதையே இயன்றவரை செய்கிறேன். நான் எழுதும் நடையைக் கண்டால் அது எவருக்கும் விளங்கும்.

ஆனால் தனித்தமிழ் என்ற பெயரில் கையாளப்படும் சில அத்துமீறல்களை என்னால் செரிக்கவே முடியவில்லை.

தமிழுக்குள் வலுக்கட்டாயமாகக் கள்ளம்புகுந்த வடச்சொற்களை நான் வெகுவாக வெறுக்கிறேன். எது தமிழ்ச்சொல் எது வடச்சொல் என்று தமிழன் அறியமுடியாத வண்ணம் அது இரண்டறக் கலந்த கொடுமை தமிழுக்கு நிகழ்ந்த அநீதி. அதை எதிர்த்துப் போரிட்டு நற்றமிழ்ச் சொற்களைக் கொண்டுவந்தவர்களை ஆயிரமுறை பாராட்டி இருக்கிறேன்.

தமிழுக்குள் வடசொல் அத்துமீறி கலந்ததால்தான் மலையாளம் என்று தமிழனின் சேரநாடு மாறியது.

ஆனால் இதெல்லாம் தமிழ்ச்சொற்கள் தமிழ்ச்சொற்களாய் இருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவை. இதில் ஏதும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

ஆனால்.....

குஷ்பு, ஹரிஹரன், ஜரினா, ஜேக்கப், ஜோசப் என்பவை தமிழ்ச்சொற்கள் அல்ல, தமிழில் எழுதப்படும் அயல் பெயர்ச்சொற்கள்.

இவற்றை...

குசுப்பு, கரிகரன், சரினா, சேக்கப்பு, சோசப்பு என்றெல்லாம் எழுதுவது தமித்தமிழ் அல்ல. வரட்டுத்தமிழ். 

வரட்டுத்தமிழ் என்றும் சொல்லமாட்டேன். ஏனெனில் தமிழுக்கு வரட்டுத்தனம் வராது. 

இப்படி அயல் பெயர்ச்சொற்களை வேர் மொழியோடு இணைத்து நடத்தும் வரட்டுத்தனத்துக்கு தமிழ் என்ன பாவம் செய்தது?

ஜெர்மனி, ஸ்காட்லாண்ட், டொராண்டோ, ஸ்கார்பரோ, அலாஸ்கா என்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களா?

இல்லையே, இவை நாடு, ஊர் ஆகியவற்றின் பொதுச் சொற்கள்.

இதைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று படுத்தியெடுப்பது வரட்டுத்தனம் மட்டுமல்ல முரட்டுத்தனமும் கூட

செருமனி, இடாய்ச்சுலாந்து, இசுக்காட்டுலாந்து, தொரந்தோ, இசுக்காருபரோ, அலாசுக்கா....

ஏன் தமிழனில் நாவுகளில் இந்த அயல் பெயர்கள் நுழையவே நுழையாதா? நுழைந்தால் என்ன அழிந்துவிடும், தமிழனின் நா உலக அரங்கில் உச்சரிக்க வேண்டிய அயல் பெயர்களைச் சரியாகத்தானே உச்சரிக்கும்?

தமிழ்ச்சொல் எது அயல் பெயர்சொல் எது என்பதுகூடவா தெரியாத மொழியியல் நேயர்கள் இருக்கிறார்கள்? 

ஆச்சரியம்

மலையாளம் ஏன் வந்தது - தமிழில் பிறமொழிப் பெயர்ச்சொற்களை உச்சரிக்க வழி தந்ததாலா?

அல்லது தமிழுக்குள் பிறமொழிச் சொற்கள் அத்துமிறி நுழைந்ததாலா?

சமஸ்கிருதம் ஏன் பேச்சின்றி புதையுண்டது? வேற்று எழுத்துக்கள் ஏதேனும் உள் நுழைந்ததாலா?

அல்லது, நடைமுறைக்கு ஒவ்வாததாய் பேசுவோரை விட்டுவிட்டு நூலில் மட்டும் தனிச்சமஸ்கிருதமாய் நின்றதாலா?
33

கடுந்தாகச் செவிவிழுந்து
நடுநாசி முற்றமேறி

கனவுக் கனல்வீசித்
தீய்ந்த என் விழிகளுக்குள்
தமிழமுதாய்ச் சிதறி

நாவடித் தேனூற்றுகளை
அதிரடியாய் உடைத்து

பட்டமரத் தேகமெங்கும்
பனிப்புல்லாய்ச் சிலிர்த்து

துயர் மேயும் இதயத்தின்
திறவாக் குகைக்குள்ளும்
தித்திப்புக் கனிரசமாய் இறங்கி

வளர்முத்தத் தவிப்பு கொட்டும்
உயிர் வெள்ள நயாகரா

உன் குரல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
32

சில
குரல்களைக் கேட்கும்போதே
செத்துப் போகிறோமே
ஏன்

அந்த குரல்
உண்மையில்
நம்மை
என்னதான் செய்கிறது

ஏன்
அந்தக் குரல்
நம்முடனேயே இல்லை

ஏன்
அந்தக் குரல்
நமக்கே நமக்காக
வேண்டும் வேண்டும்
என்று
நாம் அடம்பிடிப்பதும்
இல்லை

நம் நாகரிகம்
நம்
தேவைகளைக்
கொன்று புதைக்கிறதா

நம் பண்பாடு
நம் வேர்களை
நீரின்றித்
தவிக்கவிடுகிறதா

ஏன்

ஏன்

ஏன்

இறைவன் படைத்ததை
மனிதன் மறுக்கிறான்
என்று கொள்ளலாமா
இதை

தெரியவில்லையே

ஆனால்....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 
31

நானா?
அழகா?
பொய் சொல்லாதீர்கள்
என்று
சிணுங்குகிறாய்

எனக்குத் தெரியாதா
உன் அழகில் விழுந்து
ஆழத்தில் மூழ்கிவிட்ட என்னை
உன்னை வர்ணித்து...
ஒரு கவிதை எழுதச் சொல்கிறாய்
என்று

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
30

குறிஞ்சியும்
பூதான்

ஈராறு கோடைகள்
முன்னாங்குக் குளிர்கள்
எப்படியோ கழிந்தன

எப்படியோ உடைந்தோடி
நீங்கிப்போன
நிலவுமடிப் பொழுதொன்றில்
வந்தது வசந்தம்

அந்த
வசந்தங்களின் வசந்தத்தில்
பூத்தது என் குறிஞ்சி

பூக்காது போமோ எனும்
நம்பிக்கை நெடுந் தவத்தில்
புயல் ஓய்ந்த மழைத்துளியாய்

உயிர்
சொட்டிச் சொட்டிச்
சிதற

கருந்தலை முட்களின்
உறக்கம் கடிக்கும் படுக்கையில்
எரிதனலாய்க் காத்திருந்தேன்

அடடா
அந்தக் குறிஞ்சியும்
பூத்தேவிட்டது

ஆம்
பூத்தேவிட்டது

ஆனால்....

மொட்டாகி
மொட்டுடைந்து மலராகி
பூவாய் அவிழ்த்த
தன் பொன்னிதழ்களைத்
தானே வாட்டிக்கொண்டு
மீண்டும்
உதிர்ந்தே போனது
என் காம்பினின்று...

இனியும்
பல பன்னிராண்டுகள்
குறிஞ்சியே
உனக்கே உனக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
இப்படிச்
சொல்வதை
சிலர்
ஏற்கமாட்டார்கள்

சிலர்
மதங்கொண்டு
மிரட்டவும் செய்வார்கள்

ஆனால்
உண்மை இதுதான்

தமிழ்
என்னோடு
இல்லாமல் போயிருந்தால்
நான் என்றோ
செத்துப் போயிருப்பேன்


மலிந்துபோன கற்பழிப்புகளும் கண்டனக்குரல்களும்

வளர்ந்த
வண்ணமாய்த்தான்
இருக்கிறது

சின்னஞ்சிறு பெண்களை
நாசப்படுத்தும்
வன்புணர்ச்சி
பலாத்காரம்
கற்பழிப்பு...

அறம் துறந்தவர்களே
அதிகரிக்கிறார்கள்
நாளுக்கு நாள் நம்மூரில்

அபலைப் பெண்களைக் காக்க
சட்ட ஒழுங்கு
ஒழுங்காய் இருக்க வேண்டும்

திருத்தப்பட வேண்டியவர்கள்
காவல் துறையினர்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
அறந்துறக்கும் வக்கிரக்காரர்கள்

நேர்மையும் பொறுப்பும்
காவல் துறையினரிடம்
முழுமையாக வந்துவிட்டால்
அறம்பிறழ்வோர் அஞ்சுவர்

அஞ்சுதலை மிஞ்சுவோர்
அழிக்கப்படுவர்

வெறும் காவல் துறையைக்
குறைகூறினால் தீர்ந்ததா
அவர்களை ஆட்டுவிக்கும் ஆட்சியாளர்கள்
அறம் மிதிப்பவர்களாய் இருக்கும்போது

என்றால் அரசியல் வாதிகளே
இதற்கு முழுப்பொறுப்பு

இல்லை இல்லை
அந்த அரசியல்வாதிகளை ஏற்றி
சிம்மாசனத்தில் அமர வைக்கும்
நாமல்லவா குற்றவாளிகள்

அரசியல்வாதிகளின்
ஊழலை ஆதரிக்கிறோம்
அவர்களிடமிருந்து நம் செல்வத்தையே
பிச்சையாய்ப் பெற காத்துக்கிடக்கிறோம்

அவர்களின் உண்மையான கைக்கூலிகளாய்
நாம்தான் இருக்கிறோம்

அரசியல்வாதிகள் அறம்பிறழும்போது
அடித்து நொறுக்கி அறமற்றவனே வெளியேறு
என்று பதவி நீக்கம் செய்ய நாம் என்ன செய்கிறோம்

ஆகவே மக்களே
மக்களாகிய நாம்தான் இப்படிச்
சின்னஞ்சிறு கண்மணிகளைக் கொடூரமாய்
வன்புணர்ந்து வன்புணர்ந்து வீதியில் எறிகிறோம்.

நாம்தான் மக்களே நாமேதான்
நம்பிக்கையைவிட
அதிக
விளைச்சல் தரும்
இன்னொரு பயிர்
கிடையவே கிடையாது
தனித்தமிழா? தனித்துவிடப்பட்ட தமிழா?

மொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்

அதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.

கிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.

அவை தமிழ்ச்சொற்கள் அல்ல. 

ஒருவன் தன் பெயரைவிட அதிகம் இன்னொரு சொல்லை ரசிக்க மாட்டான். அந்தப் பெயரை கொலைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.

மொழி இலக்கணம் என்ற எந்தப் போர்வையைப் போற்றிக்கொண்டும் அதைச் செய்ய எவருக்கும் உரிமை இல்லை.

இலக்கியத்திற்கே இலக்கணம்
இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை

இலக்கியமே காலங்கள்தோறும் காய்த்துக் கனிந்து கொத்துக் கொத்தாய்ப் பூத்து மொழியைச் செழுமையாக்குவது

மைக்ரோசாஃப்ட், விண்டோஸ், ஹோண்டா, ஹெவ்லட் பாக்கார்ட், பஹ்ரைன் என்பனவெல்லாம் நிறுவனம், மென்பொருள், நாடு போன்றவற்றின் பெயர்கள்.

இவை எதுவுமே தமிழ்ச்சொல் இல்லை.

இதையும் ஒரு கொலைவெறியோடு அனுகுவது நிச்சயமாகத் தமிழ்ப்பற்று இல்லை

என்றால் உண்மையான தமிழ்ப்பற்று என்பது என்ன?

தமிழை வளர்த்தெடுக்கும் வழிகளைக் காண்பதே தமிழ்ப்பற்று.

வீட்டில் தமிழில் உரையாடவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் அழிந்துபோய்விடும்.

இப்படி வீட்டுக்குள் வந்து தமிழ்த்தமிழ் என்று தமிழ் பேசுவோரைக் குறை சொன்னாலும் தமிழ் அழிந்துபோகும்

தமிழனின் கலைகள் எல்லாம் தமிழையே மொழியாகக் கொண்டு வளரவேண்டும்

உலகின் இன்றே தோன்றிய அறிவியல் புரட்சியெல்லாம் அந்த நொடியே தமிழில் மொழியாக்கம் செய்யப்படல் வேண்டும். அப்படியான தொரு மென்பொருள் உருவாக்கத் தமிழன் பாடுபடவேண்டும்

உலகின் அனைத்துக் கலைகளையும் இலக்கியங்களையும் அறிவியல் நுட்பங்களையும் பொருளாதாரப் புரட்சிகளையும் கல்வி ஆவனங்களையும் தமிழுக்குள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

அதைச் செய்யாமல் வசதியாக அடுத்தவரைக் குறைகூறித் திரிய எளிய வழியான எழுத்தை எடுத்துக்கொண்டு குசுப்பு, கரிகரன், சானு, சாருசு என்றெல்லாம் பேசித்திருவது தமிழை புதைத்துப் புல் முளைக்கச் செய்துவிடும்

தமிழால் எதுவும் முடியும் அது எப்படியும் வளையும் என்று நிறுவ இங்கே எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களே உண்மையான தமிழ்ப்பற்றாளர்கள். மற்றோர்  போலிகளே
29

உன்னோடிருந்த
நொடித் துகள்கள் ஒவ்வொன்றும்
இன்னமும் எனக்குள்
தூண்டி விட்டுக்கொண்டே
இருக்கின்றன

முடிச்சிட்டுக் கட்டி
ஞாபகங்களால்
நீந்தித் தொடமுடியாத
மாய மரண மௌனத் தீவில்
இட்டு வைத்திருக்கும்
என் சுயத்தை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
28

என் தாக நெஞ்சின்
நெடுங்காலக் கற்பனையிலிருந்து
நழுவித் தரையிறங்கி
என் மடிவிழுந்த செல்லமே

என் முத்தங்களின்
மூடிவைக்காத பெட்டகமே

உன்
அப்பழுக்கற்ற அன்பிருக்க
என் நூறையும் கடந்து
ஒவ்வோர் பொழுதிலும்
இப்பொழுதுதான்
புதிதாய்ப் பிறந்தேன் என்ற
நினைவுத் துள்ளலோடும்
நீங்காத நிம்மதியோடும்
நெடுங்காலம் வாழ்வேனடா
என் செல்ல நிலவே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கனடா தொலைக்காட்சியின் தமிழ் மரபுத் திங்கள் பற்றி உரையாடிவிட்டு வெளியில் வந்தபோது ஓர் ஈழ நண்பர் கேட்டார்.
முஸ்லிம் பொங்கல் கொண்டாடுவார்கள் என்கிறீர்களே, பொங்கல் அன்று யாரைக் கும்பிடுவீர்கள்?

அவரின் ஐயத்தின் அடிப்படை எனக்குப் புரிந்தது.
...
பொங்கல் என்பது உணவு தரும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்லும் நன்றிநவிலல் நாள் Thanks Giving Day.

நன்றியைச் சொல்லிவிட்டு நீங்கள் சாமி கும்பிடச் செல்லுங்கள் பிழையில்லை ஆனால் சாமி கும்பிடத்தான் பொங்கல் என்று கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். குழப்பத்தோடு விடைபெற்றார்.
ஆறுதலும் நிம்மதியுமே இறைவன்

ஆறுதலும் நிம்மதியும்
தரமாட்டான்
அவந்தான் இறைவன்
என்று
கூறிப்பாருங்கள்

பக்தர்கள்
பைத்தியங்களாய்
ஆகிவிடுவார்கள்

மனிதர்களிடம்
ஆறுதலும் நிம்மதியுமாய்
இருந்துபாருங்கள்

நீங்கள்
இறைவனின் அருகே அருகே
சென்றுகொண்டிருப்பதை
உணர்வீர்கள்

ஆறுதலும் நிம்மதியுமாய்
இருப்பதும்தான்
இறைவனை அடையும்
ஒரே வழி

மனித நேயம் காப்பதும்
இறைவனை அடைவதும்
இருவேறு செயல்கள் அல்ல

சாதியா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
மதமா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
கடவுளா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்

ஆனால் 
இந்த மூன்றையும் கொண்டு 
மனிதர்களிடம்

- ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தால்
- வெறுப்புணர்வுகள் எகிறினால்
- வன்முறைகள் தூண்டப்பட்டால்

மனிதன் படைத்த இந்த மூன்றையும் 
மனிதனே முயன்று அழிக்கத்தான் வேண்டும்

மனிதன் படைக்காத
இறைவன் ஒருவன் இருக்கிறான்

அவனுக்கு நாம் இட்டுவைத்திருக்கும்
இந்தப் பெயர்கள் கிடையாது
இந்தப் பண்புகள் கிடையாது
இந்த இலக்கணங்கள் கிடையாது

வரையறுக்கப்பட முடியாத
எல்லைகளற்ற
சிந்திக்கவியலாத
ஒருவனெனக் கொண்டால்
இறை நம்பிக்கை
நிச்சயமாகப் பிழையே இல்லை

ஆறுதல்
நிம்மதி
நம்பிக்கை
என்றதில்
நன்மைகளே உண்டு

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா

கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?

மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?

கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை

ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு

என் மனைவிக்குப் பிடித்தனை
அவள் செய்யட்டும்
அதில் எனக்கு விரோதம் இல்லை.
என் கணவனுக்குப் பிடித்ததை அ
வன் செய்யட்டும்
அதில் எனக்கு உடன்பாடுதான்.
ஏனெனில்,
நாங்கள் இருவரும்
உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.

அதாவது
விட்டுக்கொடுப்பது
தொடர்ந்து விட்டுக்கொடுப்பது

சகிப்பது
தொடர்ந்து சகிப்பது

மன்னிப்பது
தொடர்ந்து மன்னிப்பது

பெற்ற பிள்ளைக்கு
விட்டுக்கொடுக்கிறோம்
சேட்டைகளைச் சகிக்கிறோம்
தொடர்ந்து மன்னிக்கிறோம்

வேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது
இன்பமான மணவாழ்விற்கு?

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?

கணவன் மனைவியையும்
 மனைவி கணவனையும்
 மூச்சுக் காற்றினைப் போல
 தீர்ந்தே போகாமல்....
 தொடர்ந்து....
 இடையறாது
 மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
 அவர்கள்
 மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள் 
 மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
 ஆகையினால்
 மீண்டும் புத்தம் புதிதாக
 அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
 தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
 உடலெங்கும் மனமெங்கும்
 உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
உன்னை மட்டுமா?

வாசல் வந்து நிற்கும்
வரத்தை
ஊத்தைச் செருப்பால்
விலாசுகிறாய்

பின்
வாழ்க்கை
வசமாகவில்லையே
என்று
ஓரம் நின்று
வெகு நேரம்
விசும்புகிறாய்

அறிவோ அன்போ
கருணையோ பாசமோ
காட்சிப் பின்னணியிலில்லா
உன் நாடகத்தில்
தத்தித் தாவுகிறாய்
முட்டி மோதுகிறாய்
உள்ளழித்து  உயிர்மிதித்து
நடனமாடுகிறாய்

தப்புத் தாளங்கள்
எம்மேடை ஏறினாலும்
அது மயான மேடையே என்ற
ஐயமே இல்லா
நீ
உன்னை மட்டுமா
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடத்திவிட்டுப் போகிறாய்...
பிறந்தநாட்கள்

இவ்வுடல்
பிறந்தநாள்
பிறந்தநாளே
அல்ல

உள்ளழியும் துயரில்
உயிரழியும் நாளில்
வாரியணைக்கும்
கைகளுக்குள்
பிறக்கும் நாட்களே
பிறந்தநாட்கள்
வலிமிகு
கொடுங்கதறல் பொழுதுகளில்
கைகளில் ஏந்திக்
கண்களில் ஒற்றும் உயிர்களால்
ஒட்டி ஒட்டி உருவாகும் ...
கூட்டு உயிரே
உன் உயிர்
27

உன்
நீர்க் குமிழ்களும்
என்
நீர்க் குமிழ்களும்
சந்தித்து உடைந்த
மந்திரப் பொழுதுகள்
அப்பொழுது


உன்
நினைவுகளும்
என்
நினைவுகளும்
சந்தித்துச் சிறகடிக்கும்
பொற்பொழுதுகள்
இப்பொழுது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்