நேற்றா நாளையா இன்றா

கடந்த காலம்
நினைக்க நினைக்க
கண்களில் கண்ணீரின்
திவலை

வரும் காலம்
எண்ண எண்ண
நெஞ்சினில் பயத்தின்
கவலை

இன்றுக்குள்
சிறகுகள் விரிக்க
உயிரில் இன்பத்தின்
ரகளை




இந்த வாழ்க்கையில்

சுவாரசியம் மிகுந்த
ஓர் உயிர்
உன்னுடனேயே இருந்துவிட்டால்
வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது அகலமாவது?

வெறுமையின்
நீள அகலங்களுக்கு
அகால மரணங்கள்

நிம்மதிக்கும்
பெருமகிச்சிக்கும்
படபடப் பிறப்புகள்

அவ்வளவுதான்
வேறொரு தத்துவதும்
இல்லை
இந்த வாழ்க்கையில்
நிலம் ஒரு பாகம்
உப்புக் கடல் மூன்று பாகம்
அதுதான் பூமி

இயற்கையின் படைப்பில்
கண்ணீர்தான்
அதிகம்

அந்தக் கண்ணீரில்
நீந்தக் கற்றுக்கொண்டால்
கனவுகளைச்
சுதந்திரமாய் விரிக்கலாம்
கண்களின் திரைகளில்

கண்ணீரில் நீந்தும்போது
கவலைகள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றன
வெற்றி கொள்ளும்
ஆனந்தங்கள்
முன்னுக்கு வருகின்றன

நம் கனவுகளில்
நாம் மேலும் மேலும்
முன்னேறிக்கொண்டே இருக்கிறோம்

கைகூடாக் கனவுகள்
கண்ணீரில் கரைந்துபோகின்றன

வசந்த வாழ்க்கை
நம் கைகளைப் பற்றிக்கொண்டு
கூடவே வருகிறது

ஒன்பது ஓட்டைகளால்
கழிவுகளை வெளியேற்றுகிறது உடல்
அதனால்தான்
அது ஆரோக்கியமாய் இருக்கிறது

கனவுக் கழிவுகளை மட்டும்
ஏன் சேகரித்துச் சாகிறது
இதயம்

இதயத்தின்
கோடி வாசல்களையும்
திறந்துவிடுவோம்

தொலைந்து போகட்டும்
தொலைந்தே போகட்டும்
கழிவுகள்
கருணைதான்
மனித குலத்தின்
ஒற்றைத் தேவை

கருணைதான்
மனிதர்களின்
ஒற்றை அடையாளம்

கருணைதான்
உயிர் காக்கும்
ஒற்றைக் கவசம்

கருணைதான்
ஐம்புலன்களின்
ஒற்றை மகுடம்

கருணைதான்
உறவின் நட்பின்
ஒற்றை அடிப்படை

கருணைதான்
வாழ்க்கைக்கான
ஒற்றை ஆதாரம்

சாதுர்யமாகச் செயல்படுவதுதான்
சாதனை என்று நினைக்கிறார்கள்
அது பிழை
கருணையோடு செயல்படுவதுதான்
மானுடம் காக்கும் அறிவுடைமை

கருணைதான்
இறைவன்

கருணைதான்
இதயக்கூட்டில்
இதயம் வாழ்வதற்கான
ஒரே அத்தாட்சி
கொல்லாப்பாவம்
*
சிதறியடிக்கும் சேறு 
நம் மூக்கில்
வேண்டாம்தான்
கண்டதிலும் கல்லெறிய
*
சாக்கடைப் பன்றி 
உரச வருங்கால் 
ஓடவேண்டும்தான் 
வீட்டிற்குள்
*
ஆனபோதிலும்
உள்ளறைக்குள்ளேயே
வெறிநாய் நுழைந்துவிடின்
தயங்கத்தான் வேண்டுமா
கொன்றுபோட
இன்று நான் அவனைச் சந்தித்தேன்

கண்டுகொள்ளாதவர்களின் முன்
கதறி அழுவதே
வாடிக்கையாகிவிட்டது
அவனுக்கு

காரியம் கருதி
கண் கசக்குபவர்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கவும்
தெரியவில்லை

மரணத்தைச் சுமப்பவன்தான்
மனிதன்

இவனோ
நொடிக்கு நூறு என்று
செத்து செத்து விழும்
தன்னுடைய பிணத்தையே
உயிரின் எலும்புகளும்
முறிய முறிய சுமந்து திரிகிறான்

என்ன பிழை
என்று அவனை இழுத்து
கண்களுக்குள் இறங்கிப் பார்த்தேன்

அங்கே
துடியாய்த் துடித்துக்கொண்டிருந்த
பஞ்சு நெஞ்சம் ஒன்று
கனிந்துருகி
வழிவதைக் கண்டேன்

அட
இதுவா சேதி

எடுத்து எறியடா
அந்த
வெட்கமில்லா இதயத்தை
என்று
ஒரு வார்த்தையை
ஆயிரம் முறை
அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி
அழுத்திச் சொல்லிவிட்டு
வந்தேன்

யார் யார் எத்தனை சதவிகிதம்?

ஒரு மார்க்கத்தில் (மதத்தில்)

1. மார்க்கத்தின் அடிப்படையோடு இயைந்து எவருக்கும் தீங்கின்றி அமைதியாக வாழ்பவர்கள்.

2. மார்க்கத்தின் பெயரால் அறியாமையில் உள்ளவர்களை பயன்படுத்தி புகழ், பொருள், அதிகாரம் பெற்று ஊரை நாட்டை உலகை நாசம் செய்பவர்கள்

3. அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் அறியாமையில் இருக்கும் மக்கள். பயம் காரணமாக எதையும் நம்புவார்கள்.

4. மதத்தைக் கண்மூடித்தனமாகக் கண்டு தவறான அழிவுத் திசையில் வெறிபிடித்து அலையும் அடிப்படைவாதிகள்

5. எனக்கு மார்க்கம் பிறப்பால் வந்தது. மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நாட்டின் சட்ட ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இந்தப் பிரிவுகளில் நீங்கள் யார்?

அல்லது ஆறாவதாக ஒரு பிரிவா?
எத்தனை பேரிடம்
ஏமாந்தான் என்பதைப்
புலம்பித் தீர்ப்பான்
ஆண்

எத்தனை பேரிடம்
ஏமாந்தாள் என்பதை
மறைத்துப் பேசுவாள்
பெண்

ஆகையால்தான்
காதல் தோல்விக்
கவிதைகள் எல்லாம்
ஆண்களிடமிருந்தே
வந்துகுவிகின்றன 

நண்பர்கள்

கண்குட்டைகளின்
கைக்குட்டைகள்
நண்பர்கள்

ஏனோ இந்த இணையம்

வாயிலின் சின்னஞ்சிறு துவாரங்களையும்
அக்கறையாய் அடைக்க அடைக்க
அத்தனையையும் தாண்டிக்கொண்டு
வந்து வந்து விழும் வற்றா
Spam-கழிசடை மடல்கள்

விட்டேனா பாரென்று துரத்தித் துரத்தி
ரகசியத் தகவல்களை
அசந்த கணத்தில்
சாதுர்யமாய்க் களவாட
தடாலடியாய் விரட்டும்
Phishing-ஏமாற்று அஞ்சல்கள்

வெறுப்பிலும் கடுப்பிலும் கிடத்தி
எல்லையிலா எரிச்சலை ஊட்டி
வாட்டி வதைக்க
வகை வகையாய் புறப்பட்டு
தினந்தினம்
புரியாப் பனிமூட்டமாய்ச் சூழ்ந்து
கண்கட்டி உள்நுழையும்
Virus-கிருமி மடல்கள்

நிம்மதியில் அசரவிடாமல்
அக்கறையாய்க் காத்து வைத்திருக்கும்
ஆவனங்களைச் சூரையாட
சித்துமுத்து வேலைகாட்டி உள்நுழைய
வெறிகொண்டலையும்
Hackers-திருடர்கள்

இன்னும் இவைபோல் எத்தனையோ
ஏராளம் ஏராளம் என்று
பிலுபிலுத்துக் கிடந்தும்
ஏனொ இந்த
Internet-இணையம்
கசப்பதே இல்லை
மூன்று வயதில்
என்னை
என் தாயிடமிருந்து
பிரித்தார்கள

பள்ளிக்கு அனுப்பி
வைத்தார்கள்

அ எழுது என்றார்கள்
அ எழுதினேன்

ஆ எழுது என்றார்கள்
ஆ எழுதினேன்

இ எழுது என்றார்கள்
நான் அழுதுவிட்டேன்

முக்காடு
போட்டுக்கொண்டு
சிரித்த முகத்துடன்
இருக்கும்
என் அம்மாவைப் பார்த்தால்
’இ’ என்ற
உயிரெழுத்து போலவே
இருக்கும்

நம்பு

நம்பு
உன்னால்
உறுதியாய் முடியும்

நம்பு
நீ ஏற்கனவே பாதி
வென்றுவிட்டாய்

நம்பு
நீ வெற்றிகொள்வது
நிச்சயம்

நம்பு
உன்னை எவராலும்
நெம்ப முடியாது

நம்பு
உன் நரம்புகளில்
புது ரத்தம் பாய்கிறது

நம்பு
உன் நாட்களில்
ஒளி தீபம்
ஊர்வலம் செல்கிறது

நம்பு
நீ யாரையும்
குறைகூறித்
தோற்கப் போவதில்லை

நம்பு
நீ யாருக்காகவும்
உன் வெற்றியை
இழக்கப் போவதில்லை

நம்பு
உன் கனவுகள்
உன்னாலேயே
நிஜமாகப் போகிறது

நம்பு
நீதான் நீதான்
வாழப் பிறந்தவன்
#தமிழ்முஸ்லிம்

தொப்பி - குல்லா - முண்டாசு - தலைப்பாகை - தலைத்துணி - ஒட்டகக்கயிறு

முதலில் மனிதர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.

தலையை நேரடி சூரியத் தாக்குதலில் இருந்து காக்காவிட்டால், அப்படியே மயங்கிவிழ நேரிடும், பைத்தியம் பிடிக்க வாய்ப்புண்டு, ஏன் சாவுகூட நிகழக்கூடும்.

ஆனால் இந்த தேவை கருதிய இயற்கைக் காரணம் தாண்டி மக்கள் தொப்பியை வேறு சில காரணங்களுக்காகவும் அணிகிறார்கள்.

தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் அணிகிறார்கள். எம்ஜிஆர் அப்படித்தான் அணிந்தார். பட்டிணப் பெண்கள் தங்களை அழுகுபடுத்திக்கொள்ள அணிகிறார்கள்.

முடிசூடும் ராஜவம்சங்கள் அழிந்தாலும் அப்படி ஒரு கௌரவம் தரும் என்ற நினைப்பில் சிலர் தொப்பி அணிகிறார்கள் முடிசூடிக் கொள்வதைப் போல.

சிலருக்கு இது ஒரு சமூக அல்லது தங்கள் கொள்கையின் அங்கீகாரமாக இருக்கிறது. நேத்தாஜி, நேரு போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

மதம் சார்ந்த அடையாளமாக சிலர் அணிகிறார்கள். முஸ்லிம்கள், சர்தார்ஜிகள் போன்றவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ராணுவத்தில் தேசப்பற்றின் அடையாளமாகத் தொப்பி அணிகிறார்கள்.

அப்புறம் இந்த சுதந்திரப் போராட்டக்காரர்கள் அவர்களுக்கான ஓர் அடையாளமாக அணிந்தார்கள். இன்றும் அதை ஒரு பண்பின் அடையாளமாக ஆக்கி அரசியல்வாதிகள் சிலர் அணிகிறார்கள். இது போன்று அணிபவர்கள் வட இந்தியாவில்தான் அதிகம்.

இந்தத் தலைப்பாகை என்பதையும் நாம் தொப்பி என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தொப்பியை உருவாக்க அறியாத காலத்தில் தோளில் உள்ள துண்டையே தலையில் கட்டிக்கொள்வார்கள், வெயிலுக்காகவும் வசதிக்காகவும்.

பின் தலைப்பாகை கட்டுவது என்பது உயர்ந்தவர் என்ற அடையாளமாகவும் பாரம்பரிய வழக்கமாகவும் சில சாதிகளின் அடையாளமாகவும் இருக்கிறது.

போலீஸ்காரர் தொப்பி அணிந்து தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள். பதிவிக்கு ஏற்ப தொப்பிகள் மாறும்.

இப்படியே தொப்பிகளைப் பற்றி ஆராயப்போனால், ஏகப்பட்ட விசயங்கள் வந்துகொண்டே இருக்கும்.

தொப்பிகளில் எத்தனை வகை தொப்பி என்று கணக்கெடுக்கத் தொடங்கினாலும் அது சீக்கிரத்தில் முடிவதாய் இருக்காது.

ஆனால் அன்று அராபியர்கள் தேவை கருதியே தொப்பி அணிந்தார்கள்.

பாலைவனத்தில் இரண்டு பெரும் தொல்லைகள் இருக்கும்.

ஒன்று சூரியன் தலைக்கு மேல் ஏறி நடு உச்சியில் உட்கார்ந்துகொண்டு கடப்பாறை சுத்தியல்களால் மண்டையைப் பிளக்கும்.

அடுத்தது அங்கே வீசும் கொடு மணற் புயல்.

இந்த இரண்டையுமே தாங்க முடியாது. சூரியன் சுட்டெருக்கும் என்றால் இந்த மணற்புயல் கடுமையான மூச்சுத் திணறலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மண்ணள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தால் எப்படித் தாங்கிக்கொள்வது?

இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க, அராபியர்கள் ஒரு தொப்பியும் ஒரு மேல்துண்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒட்டகங்களைக் கட்டுவதற்கான, அல்லது மேய்ப்பதற்கான ஒரு கயிறும் வைத்திருப்பார்கள்.

இந்த தொப்பி துண்டு கயிறு ஆகிய மூன்றையும் தலையில் வசதியாகக் கட்டிக்கொள்வார்கள். இதனால் சூரியனையும் மணற்புயலையும் அவரால் சமாளிக்க முடிந்தது.

இதையே சில முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகப் பிடித்துக்கொண்டு, பாலைவனம் இல்லாத சோலைவனத்தில் வாழும்போதும் இஸ்லாத்தில் கட்டாயம் தொப்பி அணியவேண்டும் இல்லாவிட்டால் நாம் முஸ்லிம் இல்லை என்று மூட நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

அராபியர்களுள் ஆண்களும் சரி பெண்களும் சரி தலையில் துணி கட்டி இருப்பார்கள். இல்லாமல் மணல் புயலையும் வெயிலையும் சமாளிக்கவே முடியாது அல்லவா?

மணற்புயல் வீசும்போது, தலைத்துணியைச் சுற்றிச் சுற்றிக் கட்டி கண்மட்டுமே தெரியும்படி அமைத்துக்கொள்வார்கள். ஏன் என்று காரணம் சொல்லி இனியும் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இதுவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் ஆனது, முஸ்லிம் ஆண்களுக்குத் தொப்பி ஆனது.

ஹிஜாப் என்றால் முக்காடு போட்டுக்கொள்ளும் தனியான ஒரு தலைத்துணி.

கனடாவில் பல முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போட்டிருப்பார்கள், டிசர்ட் போட்டிருப்பார்கள், ஆனால் தலையில் மட்டும் ஒரு துணியால் முக்காடு போட்டிருப்பார்கள். முகம் மூடப்பட்டிருக்காது, திறந்துதான் இருக்கும்.

அதாவது, தலையின் ”முடியை” மட்டும் மறைத்து வைத்திருப்பார்கள்.

ஏன் தலையின் முடியை மட்டும் மறைக்க வேண்டும்?

முடிதான் ஒரு பெண்ணின் உடலில் மிகவும் கவர்ச்சியான பகுதியா? இந்தக் கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியாது.

பிறகு ஏன் அணிகிறார்கள் என்றால், ஒரு பயம்தான். மதம் சார்ந்த பெரியோர்கள், நீயெல்லாம் ஒரு முஸ்லிம் பெண்ணா என்று கேவலமாகப்
பேசுவார்களே என்ற பயம்தான்.

வேறு சிலருக்கு அப்போதுதான் தான் ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்படுவோம் என்றும் நினைக்கிறார்கள்.

இந்தத் தலைத்துணி முஸ்லிம் ஆண்கள், பெண்களிம் மீதான அவநம்பிக்கை காரணமாக, தன் பாதுகாப்பின்மை கருதி பெண்களிம் மீது சுமத்திய ஒரு காரியம் என்பதை சற்றே சிந்தித்தால் புரியும்.

ஆகவே அராபியர்கள் தங்களின் பாலைவன ஒட்டக வாழ்க்கை காரணமாக அணிந்த தொப்பி தலைத்துணி ஒட்டகக் கயிறு ஆகியவற்றை இந்த நவீன காலத்திலும் முஸ்லிம்கள் அணிவது அறியாமை மட்டுமே.

மற்றபடி இஸ்லாத்தில் இதெல்லாம் கிடையாது.

காம உணர்வுகளைத் தூண்டும் அங்கங்களை பெண்கள் மறைத்துக் கொள்ளும்படியே குர்-ஆன் பரிந்துரைக்கிறது. ஆணும் சரி பெண்ணும் சரி வெறித்து நோக்குவதை விடுத்து காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தருணங்களில் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொண்டு கண்ணியமாக நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றே சொல்கிறது. மற்றபடி ஆடைகளால் தங்களை அழகு படுத்திக் கொள்வதை குர்-ஆன் வரவேற்கவே செய்கிறது.

இந்த உலகை அனுபவித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவே இல்லை.

முன்பெல்லாம் தமிழ்முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் பள்ளிவாசலுக்கு வரவே மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் இறைவனிடம் எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள்.

தொப்பி அணியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.

தொப்பி அணியாமல் தொழ மாட்டார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. வகாபியம் அதைப் பெரிதாய் வலியுறுத்தவில்லை என்றதும், சவுதி அதை பெரிதாய்ப் பார்க்கவில்லை என்றதும், தமிழ் முஸ்லிம்களும் தொப்பியைச் சற்றே கழற்றிவைத்துவிட்டார்கள்.

தொப்பியில்லாத தலைகள் இன்றெல்லாம் தமிழ் நாட்டின் பள்ளிகளில் நிறையவே தொழுதுகொண்டு நிற்கின்றன.

இப்படி சவுதிக்காரர்களைப் பார்த்தே தங்களின் ஒவ்வொன்றையும் ஏற்பதும் துறப்பதுமே உண்மையான முஸ்லிமின் சிறந்த செயல் என்று நினைக்கும் முஸ்லிம்கள், நிச்சயமாக குர்-ஆனை நிராகரிக்கிறார்கள் என்றே சொல்வேன்.

நல்ல வேளையாக ஒட்டகக் கயிறையும் தலையில் கட்டுவேன் என்று எந்த தமிழ் முஸ்லிமும் நிற்கவில்லை. அரபுக்காரன் ஒட்டகக் கயிறு கட்டினான் என்றால் அவன் ஒட்டகம் மேய்த்தான் என்பதை புரிந்துகொண்டுதான் கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

எந்த ஐயம் வந்தாலும் ஒரு முஸ்லிம் அனுகவேண்டியது ஐயங்களே அற்ற ”ஆதண்டிகேட்டட்” - ஏற்புடைய என்று சொல்லத் தேவைப்படாத குர்-ஆன் மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்பதை முழுதாய் உணரும் காலம் ஒன்று நிச்சயம் வரும் என்று நம்புவோமாக.

தொப்பி இடுவதும் இடாததும் அன்றைய சீதோஷ்ண தேவையைப் பொறுத்தது.

குடை ஏன் வேண்டும்?


நீரலையைப் போன்று
புத்தம் புது அலை
வேறு எதிலும்
உருவாவதில்லை

ஓர் அலை கரை தொட்டால்
அந்த அலையின் நீர்
அடுத்த அலை புறப்படும்போது
எங்கோ எங்கோ
தொலைதூரம் சென்றிருக்கும்

புது நீரில்
புதிது புதிதாக உருவாகும்
ஒவ்வொரு நதியலையும்
நதிக்கு மட்டும் பெருமையல்ல
நமக்கும்தான்

ஏனெனில்
அது ஒரு
வாழ்க்கை ரகசியம்

வாழ்வின்
இன்ப அலையோ
துன்ப அலையோ
இடைப்பட்ட அலையோ
யாவுமே புத்தம் புதியனதான்

பழையது என்ற
நம் எண்ணம்தான்
உண்மையில் பழையது

பெண்களின் உடை

பெண்களின் உடை என்பது அதை அணிகின்ற பெண்களின் விருப்பம்.

சாதி மதம் பண்பாடு கலாச்சாரம் என்று எதையாவது சொல்லி எந்த உடையையும் வலுக்கட்டாயமாக அணிய பெண்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

ஊருக்கு ஏற்ப உடை, வீதிக்கு ஏற்ப உடை, வீட்டுக்கு ஏற்ப உடை, தனக்கு ஏற்ப உடை என்று உடுத்தும் பெண்கள் முடிவு செய்யட்டும்.

ஏன் உடையில் ஆணாதிக்கமும் அதன் சுயநலமும் இனம், மதம், சாதி, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில்?
ஞான வெளிச் சொர்க்கம்

செவி மூடியவர்களிடம்
பேச்சு வார்த்தை நடத்துவதும்
செருப்பில்லாமல்
நெருஞ்சி முட்காட்டில் நடப்பதும்
ஒன்றுதான்

வாய் திறக்க விடாமல்
குரல் மட்டும் உயர்த்துவதால்
சாதிக்கப் போவதுதான் என்ன -
புரிந்துணர்வைப் போட்டுப்
புதைப்பதைத் தவிர

கதறி அழுது சிதறிப்போகும்
நட்பை... நல்ல உறவை...
சற்றும் பொருட்படுத்தாமல்
துடித்து வெடிக்கும்
துப்பாக்கி ரவைச் சொற்களுக்கு
வாழ்க்கை அகராதிகளில்
பொருள்தான் என்ன -
பிதற்றிப் பின்னழும் வைபவத்துக்கு
விழிநீர் சேர்க்கும் எத்தனம்
என்பதைத் தவிர

இடைவிடாமல்
இரு முழு நீள மணி நேரமும்
தொலைபேசியில்
பேசமட்டுமே செய்தான்
சொந்தம் ஒருவன்

அவன்
குற்றச்சாட்டுக் குத்தீட்டிகளையும்
அறிவில்லா
அறிவுரைத் தோரணங்களையும்
ஏந்திக்கொண்டே
நான்

ஒரு
நம்பிக்கைதான்
எனக்கும் ஒரு வாய்ப்புத் திறப்பான்
நானும் பேசலாமென

”ரொம்ப நேரமா பேசிட்டோம்
அப்புறம் ஒருநாள் பேசலாம்”
சட்டெனத் துண்டித்தான்
தொலைபேசி சாதுர்யன்

அட இனி எப்போது
பேசப்போகிறானோ என்று
நிலை குலைந்து
நடுங்கித் தவிக்கிறது நெஞ்சு

கல் விழுந்த கண்ணாடிக் குடுவையைப்போல
உடைந்துதான் போனது
வெகுகாலம் குரல் நீட்டா மோனத்தில்
களித்திருந்த நெஞ்சு

சட்டென ஒரு பொறி
அக்னி பரவியது அகமெங்கும்

சொல்வதை
வாங்கு வாங்கென்று வாங்கிக்கொண்டு
மௌனத்தையே பதிலாகக்
கொடு கொடு என்று
கொடுத்திருந்தால்?

கேட்கும் செவியோடு
என்றாவது வாவெனக்
காத்திருப்பதல்லவா
ஞானவெளிச் சொர்க்கம்! 

முஸ்லிம் தீவிரவாதிகள்

1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

இந்த ஒருத்தனையே காரணம்காட்டி மீதம் உள்ள ஒன்பதாயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பது பேரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது ஏன் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?

99.99 % விழுக்காடு மக்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று அன்பும் அமைதியும் சாந்தமும் சமாதானமும் கொண்டு வாழ்கிறார்களே?

அளவற்ற அருளாளனின் நிகரற்ற அன்புடையோனின் கருணை கொண்டு அமைதி வழியில் வாழ்கிறார்களே, அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஏன் இந்த உலகம் ஏதோ சில தீவிரவாதிகளைக் கொண்டு இஸ்லாத்தைத் தீவிரவாதம் என்று முத்திரை குத்த நினைக்கிறது?

காரணம் கடந்த 50 ஆண்டுகளில் 235% வளர்ச்சி பெற்று பெருகும் முஸ்லிம்களின் மக்கள்தொகையாகத்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாம் தொடங்கும்போதே எதிர்ப்புகளால் பல இன்னல்களைச் சந்தித்தது. ஆனால் அழிந்துவிடவே இல்லை.

இன்று, காழ்ப்புணர்ச்சி கொண்டு துவேச சொற்களை அள்ளிப் பொழியவும் பழிபோட்டு ஒரு மார்க்கத்தையே அழிக்கும் முயற்சியில் சில பல மத மற்றும் அரசியல் அமைப்புகள் முயல்வதும் நாம் தெளிவாகக் காணும் காட்சி.

ஆனால் அழிந்துபோகுமா இஸ்லாம்?



 
ஆயிரம் வேர்கள்

ஒரு
மரத்துக்கு மட்டும்
ஆயிரம் வேர்கள் அல்ல
ஒரு
மனிதனுக்கும்
ஆயிரம் வேர்கள்தாம்

வாய்மொழி
வட்டாரமொழி
தாய்மொழி
மரபணு
மரபு
இனம்
குடும்பம்
சமூகம்
மார்க்கம்
தெரு
பிறந்த ஊர்
வளர்ந்த ஊர்
படித்த ஊர்
வாழ்ந்த ஊர்
தாய்நாடு
புலம்பெயர் நாடு
உலகம்
பிரபஞ்சம்

இன்னும்
இன்னுமாய்...
இவை
அத்தனையும்
நெஞ்சு விம்மிப்
பெருமைப்படத்
தகுதி மிகக் கொண்டனதாம்

இவற்றுள் எதுவும்
குறைவும் இல்லை
உயர்வும் இல்லை

அனைத்து வேர்களாலும்
ஆனவனே மனிதன்

இன்னும்
கோடி கோடி
இலைகளையும் கிளைகளையும்
பரப்பிச் செல்பவனே
மனிதன்

சவுதிதான் இஸ்லாம்

இஸ்லாம் என்றதுமே பலர் சவுதி அரேபியாவோடு அதை முடிச்சுப் போட்டுவிடுகிறார்கள்.

சவுதிதான் இஸ்லாம். இஸ்லாம்தான் சவுதி என்ற உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்கள்.

சவுதியின் மீதான பயபக்தி சவுதி செய்யும் எந்த வகை அறமற்ற செயலையும் அறவழிதான் என்று அடித்துக் கூறும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

உணர்வுப் பூர்வமாக அணுகும் இவர்கள் அறிவுப் பூர்வமாக அணுகத் தயங்குகிறார்கள்.

காரணம் மதத்தை அல்லது மார்க்கத்தைப் பலரும் உணர்வுகளில் கட்டிப்போடுகிறார்களே தவிர அறிவோடு அலசுவதில்லை.

முகம்மது நபிபெருமானார் ஓர் உலக மகா புரட்சி நாயகர். இதுவரை அவரைப்போல மனித உள்ளங்களில் தலைகீழ் மாற்றங்களைச் செய்த மகத்தான சாதனையாளர் இன்னொருவர் கிடையாது என்று அறிஞர்கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உலக சரித்திரத்தில் அதிக செல்வாக்கினைப் பெற்ற 100 சிறந்தவர்களை மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவர் தொகுத்தார்.

அதில் அவர் தேர்வு செய்த முதலாமவர் முகம்மது நபி அவர்கள்தான். நியூட்டனுக்கு இரண்டாம் இடம். ஏசுவுக்கு மூன்றாம் இடம். புத்தருக்கு நான்காம் இடம்.

மைக்கேல் ஹார்ட் ஒரு கிருத்தவராக இருந்தபோதும் வேற்றுமத இறைத்தூதரான முகம்மது நபிக்கு முதலிடம் கொடுத்தார்.

அத்தனை உயரிய பகுத்தறிவாளர் முகம்மது நபி. ஆனால் அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலர் சிந்திக்கவே மாட்டேன் என்று அடம்பிடிப்பது வேடிக்கை, வினோதம்.

இஸ்லாம் தோன்றியது கி.பி. 610. சௌதி அரேபியா தோன்றியது கி.பி. 1932. இடையில் எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சவுதி என்ற நாட்டின் சட்டதிட்டங்கள் வேறு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வேறு. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்வது அவசியம்.

அதோடு இப்படி வரிந்துகட்டிக்கொண்டு முஸ்லிம் நாடு என்று பறைசாற்றிக்கொள்ளும் பெரும்பாலான நாடுகள், அறிவியல் அறிவில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் முகம்மது நபி பெருமான் அன்றே கூறியதுபோல சீனாவுக்குச் சென்றேனும் கல்வி கற்றுக்கொள் என்பதன் பொருள் புரியும்.

 
துக்கப்படவா வாழ்க்கை

எவ்வழி விரைந்தும் எப்படியேனும்
எட்டிப் பிடித்துக்
கட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும்
நம்முடனேயே
நமக்குப் பிடித்த யோகங்களை

அன்றி
துக்கப்படவா வாழ்க்கை?

நம்
சந்தோசங்களைக் கொய்ய
நம்மைவிட வேறுயார்
வான்முட்ட
எகிறிக் குதிப்பர்

நம் மகிழ்ச்சிகளை
நாமே மறுக்கும் பாசாங்கு நிலை
பேரவலமல்லவா

இன்றே
இப்பொழுதே
இன்பம் துய்த்து
வாழ்வதே வாழ்க்கை

நாளை என்பது 
உயிரின் தத்துவத்தில்
இல்லவே இல்லை

நேற்றுகளைப்
பாடங்களாக்கி
இன்றுகளை
பரிட்சைகளாக்கி
வென்று வாழ்வதே
வாழ்க்கை
பெரிதினும் பெரிது

நூறு வெறிநாய்களிடம்
ஒற்றை எலும்புத் துண்டு
நீ

ஆயிரம் கொள்ளிக் கட்டைகளிடம்
ஒற்றைப் பஞ்சுப் பொதி
நீ

மில்லியன் புல்டோசர்களிடம்
ஒற்றை மரக் குடில்
நீ

பில்லியன் கொசுக்களிடம்
ஒற்றை நிர்வாணம்
நீ

தப்பத் துடிக்காமல்
கருணைக்கும் அன்புக்கும்
அழுது நின்றால்

மனவீரத்தின் அகரமும் அறியா
உடைந்து ஊற்றும்
சிறு முட்டை
நீ

அடைகாத்துக்கொள்
உன்னை
நீயே

குஞ்சாகு
ஆகு
சிறகாகு
வளர்
பற பற

அதோ
பெரிதினும் பெரிய
வானம்
உன் முன்

பாவ அழிப்பு

நூறு நூறு
ஜென்மங்களில்
அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த
எத்தனையோ கோடி
பாவங்களுக்கான
மிகக் கொடுந் தண்டனையை
உன் வழியே
அனுபவித்தாயிற்று


இன்னும்
ஆயிரம் ஆயிரம்
ஜென்மங்கள் ஆயிடினும்
இந்த ஜென்மத்தில்
நீ எனக்குச் செய்த
உன் மாபாவங்களில்
சிலவற்றையேனும்
உன்னால்
அழிக்கத்தான் இயன்றிடுமோ?

வாலி வாழி

வலிக்கிறது வாலி
உனக்கு என் உயிரின் அஞ்சலி

வானம் உடைந்தாலும்
உன் வாலிபக் கோட்டை மட்டும்
உடையவே உடையாது

வயதைத் தின்று
வார்த்தைகளில் வாழ்ந்து
விரல் நுனிக் காம்புகளில்
இசைச் சொல் சுரந்த
பத்துப் பத்தாயிரம் மடியே
உனக்கு ஏது மறைவு

வாலி நீ வாழி

உன் அடுத்த பாட்டை
அங்கிருந்தும் எழுது
சிலிர்க்கக் காத்திருக்கிறோம்
இதழ்களில்லா
இதயம் பாடும் மௌனராகம்
அது எனக்கு மட்டும் கேட்கும்
என் உயிரிருக்கும் இடமறிந்து
நீ என்னைத் தொட்டால்
அது உனக்கும் கேட்கும்
என்றேன் நான்

நானென்னும்
இவள் இன்று வெற்றுக்கூடு
என் உயிர் பறந்து
உன்னைச் சேர்ந்தது
நல் உள்ளம் கண்டு

இனி உன் இதயம்
என்பதுவும் வேறா
எனில் என் இதயம்
சென்றதுதான் எங்கே
என்றாய் நீ

14

நீ
கோலம் போடுவதற்கு
என்னால்
புள்ளிகளாய் இருக்க
முடிந்தது

நீ
கோயில் செல்லுவதற்கு
என்னால்
பக்தியாய் இருக்க முடிந்தது

ஆனால்
நீ மாலை சூடும்போது மட்டும்
என்னால்
மாப்பிள்ளையாய்
இருக்க முடியவில்லையே


நீ வரவேண்டாம்
உன் காதலை அவசரமாய் அனுப்பிவை
இங்கே உன் உயிர் சாகக் கிடக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*
அன்பே
எனக்குத் தெரியும்
உன்னைத் தொடுவது
தகாதது என்று

இருந்தும்
உன்னைத் தொடாதபோது
துடிக்கும் என் உயிர்
எனக்கா சொந்தம்
உனக்குத்தானே

என்னைத் தொடவிடு

*
008

என்னவளே
நீ என்னுடனேயே
இருந்திருந்தால்
என் இதயத் துடிப்புகளை
உன் உயிரில்
எழுதியிருப்பேன்
இன்றோ
காகிதங்களில்
எழுதுகிறேன்

உன் பிரிவு
என்னை வருத்தியதைவிட
அதன் விளைவு எனக்குள்
கவி மழை பொழிவதே
மிகை

என்னவளே
இன்றும் நானுன்னை
நேசிக்கிறேன்
கவிதைகளாய்

நீ வாழ்க

*
009

என் இதய உண்டியலில்
விழுந்ததெல்லாம்
செல்லாக் காசுகள்தாம்

இன்றொரு
தங்க நாணயம்
தன்னேர்ச்சியாய் விழுந்ததும்
அத்தனைச்
செல்லாக் காசுகளும்
பொற் காசுகளாகிப்
போனதென்ன மாயம்

*
010








உன்
மூடக் கால்களுக்கும்
மிகக் கீழாய்
மூளையைப் புதைத்து
இரும்புப் பலகையும் இட்டு
மூடிக்கொண்டுவிட்டால்
மொக்கைக் கத்திகூட
உன்னை
அக்கக்காய் அரிந்து
வெங்காயம் கூட்டி
வதக்கி வறுத்து
வாயில்
இட்டுக்கொள்ளாதிருக்குமோ
என்
அன்புடன் இதயமே
வேறு
எதுவும் தர அல்ல
கவிதைகள்
தரவே
நீ
வந்திருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?
 
 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

 உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வாசிப்பில் லயிப்பவர்கள்...

வாசிப்பில்
லயிப்பவர்கள்
மிதமாக
வாசிப்பவர்களைக்
கேவலமாக
ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை
அவர்களுக்காகவே
நேசிக்கத் தெரியாதவர்களின்
வாசிப்பு
அவர்களுக்கு
எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா
வாசிப்பு
இதய வாசிப்பு என்பது
அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை
வாசிப்பவர்களைவிட
நூல் வாசிப்பவர்கள்
சிறந்தவர்களாகிவிட
முடியுமா என்ன?
இந்தப் பிறப்பில்

என்
மாமழைக்கும்
நனையாத
உன்
புற்கள்

என்
முகில்மடிகள்
மலடிகளானபின்
ஈரமில்லையா
உன்
நெஞ்சில்
என்கின்றன
மயான பூமி

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும் 
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்


வாழ்க்கை வண்டி



இருட்டை
உடைத்தெறிந்து
எங்கிலும்
நிலைக்கப் பார்க்கிறது
வெளிச்சம்

வெளிச்சத்தை
உண்டு செரித்து
கருமையை
நிறைக்கப் பார்க்கிறது
இருட்டு

இத்தொடர்ப்
போராட்டங்களுக்குள்
மாய மயக்கத்தோடு
ஓடி முடிகிறது
வாழ்க்கை

பெண் புரியாத புதிர்



உலகம் போற்றும் 
கவிஞர் நீங்கள்
உங்களாலாவது 
புரிந்துகொள்ள முடிகிறதா 
பெண்ணின் மன ஆழத்தை
அவள் சிரிப்பின் அர்த்தங்களை

என்று

காதல் தவிப்பில்
காய்வதும்
காயும்முன் ஈரமாவதுமாய்
அலையடித்து
நிறம் ஒட்ட வழியற்ற
மணலாகிக் கிடக்கும்
இதயத்திடமிருந்து

ஒரு கேள்வி
வந்து முட்டியது
என்னை

பெண்ணின் மனதைத் 
தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான்

புரிந்துகொள்ளவே 

முடியாது என்று
பெண்ணின் மனதைத் 

தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான் ;-)

என்று இதற்கு 

நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்

ஆனாலும் 

ஒரு வாழ்க்கைச் சுவாரசியத்தை 
உங்கள் முன் வைக்கிறேன்
பாருங்கள் என்றேன்

எந்த ஓர் அழகும்

அறியமுடியா அதிசயமாய்
இருக்கும் வரைதான் 

அழகு

மீண்டும் மீண்டும் 

காண வைக்கும் 
மந்திரம்

பெண்ணின் மனம் 

புரியாததல்ல
அது சட்டென்று புரிந்துவிடும்
ஆனால் புரிந்தது 

உறுதிப்படும் முன்
மெல்ல நிறமிழப்பதாய்த் 

தோன்றும்

என்றால் அவள்
அவளே அறியாத 

வற்றாப் புதிர்

ஏன்?

அப்படி அவள் 

இருக்கும்வரைதான்
அவள்மீது எவருக்கும்

சுவாரசியம் இருக்கும்

எல்லாம் 

பளிச் பளிச் என்று 
ஆகிவிட்டால்
சட்டெனப் 

புளித்துப் போகக்கூடும்

வானத்தை 

ஆயிரம் முறை பார்த்தாலும்
அது ஏதோ 

ஒரு செய்தியைப்
புதிதாய்ச் 

சொல்லிக்கொண்டே 
இருக்கும்

இந்தப் பிரபஞ்சத்தில்
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று
ஆகாயத்தைவிட வேறு உண்டா?

அந்த சுவாரசியம்தானே 

அதன்மீது
அடங்காத ஈர்ப்பை நமக்குள்
கட்டி வைத்திருக்கிறது

இப்படியும் பதில் சொல்லலாம்

ஓர் 

ஆணின் விழிகளில் 
ஆயிரம் ஆசைகள்


ஒரு பெண் மட்டும்
ஒற்றை ஆசையோடு 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆணின் தேவைகளில்
ஆயிரம் சறுக்கல்கள்
ஒரு பெண் மட்டும்
ஒற்றைத் தேவையோடு மட்டும்
உறைந்து போய் 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆண் எப்படியெல்லாம்
மாறித் தொலைந்து விடுகிறான்
இவனை இப்படி 

நம்புகிறோமே
ஏமாந்துவிடுவோமோ?

ஏமாந்தால் 

அவனுக்கு ஒன்றுமில்லை
நாமல்லவா 

கந்தல் துணியாகிவிடுவோம்
அப்படியல்லவா 

சமுதாயம் நம்மை
ஆக்கி வைத்திருக்கிறது 

என்று
ஒரு லட்சம் ஒரு கோடி 

சந்தேக எண்ணங்கள்
அவள் மனதில் 

ஊசலாடாதா?

ஆண் கெட்டால் 

ஒரு அத்தியாயம்தான்
பெண் கெட்டால் 

புத்தகமே போட்டுடுவாங்க
என்று நம் சமூகத்தில் ஒரு பெண்
உள்ளுக்குள் 

கதறியழாமல் இருக்க முடியுமா?

ஆக பெண் 

புதிராவது அவளாலா
அல்லது ஓர் ஆணாலா
அல்லது அவளை 

அப்படி ஆக்கிவைத்திருக்கும்
ஆண் படைத்த 

சமூகத்தாலா?
முரண்கள்

உலகப் புகழ்
மல்லிகைப்
புன்னகைகளுக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மை
உண்மையிலும் உண்மை
கருணையிலும் கருணை
கொண்ட இதயங்கள்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கிக் கிடக்கின்றன

இணையத்தில் 

என்னைக் கடந்த சில வரிகள்
என்னை இந்த
வரிகளாக்கிப் போயின
நேர்கொண்ட பார்வை

சிலுசிலு துணியணிந்து
தொப்பலாய் மழையில் நனைந்து
இன்னும் கொஞ்சம்
கந்தக நெருப்பு மூட்டினால்

பாதித்தொடை
சாதிக்காது இனி என்ற
சாதுர்ய வணிகமறிந்து
இன்னும் கொஞ்சம்
விழிவெடிக்க உயர்த்தினால்

பின்னுக்கு வளையும்போது
முன்னுக்கு வரவேண்டும்
இன்னும் கொஞ்சம்
எடுப்பாக எல்லாம் துடிப்பாக

கண்களைச் செருக வேண்டும்
இன்னும் கொஞ்சம்
உணர்ச்சிக் கிளர்ச்சியோடு

இவைபோல் உண்டு இன்னும்
இவற்றால்தான் வெற்றி நிச்சயம்
திரையுலகில் நீயே
முதலிடத்தை முத்தமிடப்போகும்
புத்தம்புதுக் கதாநாயகி

அடப்பாவமே
பெண்களின் நிலை
இதுதானா என்று
அருவருப்பு தாளாமல்
பரிதாபம் கரைமீற

நெஞ்சு நிமிர்த்தி
பெண்ணியம் பேசி
முன்னேறும் பெண்களின்
கவிதைகளுக்குள் கர்வமாய்
மூச்சுவிடத் தாகம்கொண்டு
பக்கங்களைப் புரட்டினேன்

பெற்ற பிள்ளையிடமோ
பெற்றெடுத்த அன்னையிடமோ
உடன்பிறந்த உதிரத்திடமோ
உற்ற நட்பிடமோ
ஊர்க்கோடி நாலுபேரிடமோ
சொல்லக் கூசும் சொற்கள்

அந்தரங்க உறுப்புகளின்
அருவருப்புப் பெயர்களின்
அடாத அணிவகுப்புகள்
படுக்கைக் கசங்கல்களோடு
விசத் தூண்டில்
வீசும் வார்த்தைகள்

கவலை வந்தென்னைக்
கழற்றி எறிந்தது

இவர்களிடமிருந்து
இதய உணர்வுகளை
பெண்ணின மேன்மைகளை
முன்னேற்ற எண்ணங்களை
அற்புதமாய்ப் பதிவு செய்யும்
பலநூறு பெண் எழுத்தாளர்களை
எப்படிக் காப்பது?
உறவுதான்

பலமும் பலகீனமும்
உறவுதான்

உயிருக்குயிராய் நேசிக்கும்
ஜீவனை விழிகள் தேட
வாழ்க்கை கரைந்துவிடுகிறது
சிலருக்கு

உயிரையே வைத்திருக்கிறேனென்று
நிரூபிக்கத் தவிக்கும் தவிப்பில்
வாழ்க்கை தீர்ந்துவிடுகிறது
சிலருக்கு

கிழக்கை மேற்காக்கி
பின்னொருநாள்
அந்த மேற்கையே கிழக்காக்கி
வித்தை காட்டிக்கொண்டே
இருக்கிறது வாழ்க்கை
பலருக்கு

எப்படியானாலும்
தூக்கிச் சுமக்க
ஓடிவருவது மட்டும்
உன்னை விலக்க முடியாத
இன்னொரு உறவுதான்

பவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு

பூரண நம்பிக்கைப்
பொற் தேர் வீதியில்
புதுநிலவாய் உலாவரும்
பூரிப்புப் பொழுதுகளில்

உன் எதிர்பார்ப்பு
நெரிசல்களாலேயே
நொறுங்கிப்போய்விடாதே

காலத்தால் மூடிக்கிடக்கும்
வெற்றியை மறந்துவிடு

முயற்சிகளில் முழுதாய்
மூச்சைப் பிணைத்துவிடு

கதவுகள் தட்டப்படும்
களியூற்று லயத்தோடு

வாசலில் வந்து
காத்திருக்கும்
வெற்றி
தன்
பவளவொளி தெறிக்கும்
புன்னகையோடு

பிரியாவிடை

கிட்டத்தட்ட இதுதான் என் முதல் புதுக்கவிதை என்று சொல்லவேண்டும். இதை நான் புதுக்கவிதை எழுதுவதாய் நினைத்து எழுதவில்லை. ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் ’ஆட்டோகிராப்’- நினைவுப்பதிவு கேட்டார்கள். என் மனம்போன போக்கில் சுருக்கமாக நான் எழுதிய நினைவுப் பதிவுதான் இது

பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்புவிழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
என் இனிய நண்பா


சனி-யன் எனச் சபிக்கப்பட்டவளும்
காதல் ஞாயிறின் கைசேர்ந்தால்
அழகு திங்களாய் மிளிர்வாள்
அமுத செவ்வாய் மலர்வாள்
அரிய பண்-புதன்னில் உயர்வாள்
அரு-வி-யாழன் பொழியப் பொழிய
அற்புத வெள்ளியாய் மிளிர்வாள்
மாம்பழக் கவிதை

மாம்பழத்தைப் பற்றி
ஆயிரம் கவிதைகள்

எழுதலாம்
ஆனால்
அதை
கத்தியால் நறுக்காமல்
அப்படியே
கடித்துத் தின்பதைப் பற்றி
ஒரே ஒரு
கவிதைதான்
எழுதமுடியும்
அது

வார்த்தைகளால்
ஆனதில்லை


ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்

கொஞ்சுமுகப் பிஞ்சுமகன்
பாலச்சந்திரனின்
நெஞ்சைத் துளைத்தேறிய
இனவெறி ராணுவ ரத்த ரவைகளின்
காட்டேறி வக்கிர உச்சங்களை
உணர்வு தப்பாமல் சொல்லிவிட

ஆனால்
என் தமிழின்
எந்த ஒரு வார்த்தைக்கும்
அத்தனைக் கொடூரக் குணமில்லையே
கவிதையாய்
எடுத்தெழுதிக்காட்டிவிட

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ

தன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)

என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

ஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.

சுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா?

இளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்து திரையிசைப் பாடல் உலகில் ஒரு செவ்வானம்.

களங்கள் வேறு என்றாலும் உயரம் சற்றும் குறைந்ததல்ல. இப்படியான பிள்ளைகளைக் கொண்ட தமிழன்னை உள்ளம் முழுவதும் பூரித்திருந்தாள். ஆனால் இயல் என்ற தமிழை தற்காலிகமாக நசுக்கிய இளையராஜா இசை என்ற தமிழால் அவள் கண்ணீர் மட்டுமே சிந்தினாள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் தமிழிசையை வானுயர உயர்த்தினார் என்பதுதான். ஆனால் அதில் பெரும் கரும்புள்ளியாய் தமிழை அதல பாதாளத்த்துக்குத் தள்ளினார் என்பது எத்தனைப் பெரிய கலங்கம் இளையராஜாவுக்கு?

கனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை. பாடியிருந்தால், நான் புல்லரித்துப் போயிருப்பேன். அரங்கமே அழுது நிறைந்திருக்கும்.

இளையராஜா தன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இது பனிவிழும் மலர்வனம் என்றார். வெளியே பனி உள்ளே இசை வனம் என்று அழகாகச் சொன்னார்.

அது இளையராஜாவும் வைரமுத்து இணைந்திருந்ததால் வந்த அற்புதப் பாட்டு.

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளம் சோலை
மாலை சூடும் மண மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்
இளமையின் கனவில் விழியோரம் துளிர்விடும்

இப்படியே தேன் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கும் இந்தப் பாட்டு.

ஆனால் மேடையில் அந்தப் பாடலை இளையராஜா பாடவே இல்லை!

கண்ணதாசன் திரையிசைப் பாடல்களுக்குள் சந்தக் கவிதைகளையும் சங்கடமே தராத எளிய வார்த்தைகளையும் அற்புதமாய் வழங்கினார்.

வைரமுத்து புதுக்கவிதைகளை திரையிசைப் பாடல்களுக்குள் அப்படியே முறுகல் நெய் தோசைகளாக ஐவகை சட்னி சாம்பார் பொடிகளோடு அமர்க்களமாகத் தந்தார்.

வைரமுத்துவுக்குமுன் புதுக்கவிதைகளை பாடல்களில் பொத்தி வைத்த மல்லிகை மொட்டு வேறு யாராவது உண்டா? அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது? சிந்திக்க வேண்டாமா?

அவன் தமிழை அடித்து நொறுக்கி அழித்துப் போட்ட ராஜா ராஜாதானா? பட்டு ரோஜா ரோஜா இவர்தானா? எப்படி இருக்க முடியும் பட்டு ரோஜாவாய்?

வைமுத்து என்ற மனிதனை ராஜா மானசீகமாக வெறுக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இசைத்தமிழை எப்படி தமிழர்கள் கேட்கக்கூடாது என்று தடுக்கலாம்?

கண்டநாள் முதல் வைரமுத்துவைப் போற்றிப்பாடிய நீங்களே தூற்றிப்பாடுவது சரியா ராசய்யா?

உங்கள் இருவரின் இணைவில் வந்த கற்பூரப் பிறப்புகள் எத்தனை எத்தனை. அவை அனைத்தையும் தமிழர்களுக்கு இல்லாமல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை உண்டு இளையராஜா?

-அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
-பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
-இளைய நிலா பொழிகிறது இதயம் வரை
-இது ஒரு பொன் மாலைப் பொழுது
-கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
-சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
-சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்ததது சாமி
-என்விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே?

என்று எத்தனை எத்தனை மகுடங்கள்? அத்தனை மகுடங்களையும் தமிழன்னையின் தலையிலிருந்து கழற்றி எறிய உங்களுக்கு உரிமை தந்தது யார்?

எங்கள் கண்களெல்லாம் உங்கள் இசைகேட்டுக் கசியாத நாளுண்டா? ஆனால் தமிழைத் தள்ளிவைத்து தவறு செய்தது மட்டுமல்லாமல் இன்றுவரை அதே பிடிவாதத்தில் இருக்கிறீர்களே இளையராஜா. இது தகுமா?

தமிழைவிட உங்களுக்கு உங்கள் வரட்டுக் கௌரவம்தான் பெரிதாகிவிட்டதா?

எந்த மேடையிலும் உங்களைத் தரக்குறைவாகப் பேசுவதில்லை வைரமுத்து. ஆனால் நீங்கள்? கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே? என்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்?

இளையராஜா மறக்காமல் மலேசியா வாசுதேவன் அவர்களை நினைவு கூர்ந்து பேசியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே அதேபோல அழகாகப் பாடப்பட்டது.

ஜெயச்சந்திரன் பாடிய...

மாஞ்சோலைக் கிளிதானோ
மான் தானோ மீன் தானோ
வேப்பந் தோப்புக் கிளி நீ தானோ?

என்ற பாடலை ஹரிஹரனை வைத்துப் பாடவைத்தார் இளையராஜா. அத்தனை அற்புதமாய் இருந்தது அது. ஹரிஹரன் குரலிலும் பாவத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்கு வேறு வகையில் இந்தப் பாடலை அமைக்கத் தோன்றுவதாக இளையராஜா விரும்புவதாக பார்த்திபன் சொன்னார்.

அடுத்து எனக்குப் பிடித்தபாடலாய் வந்தது ”நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னாத் தெரியுமா?” இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை எனக்கு.

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற பாடலை எஸ்பிபி பாடினார். பாடல் முடிந்ததும் சுவையான இசை விருந்து ஒன்று நிகழ்ந்தது.

கரகாட்டக் காரன் படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற மெட்டில் அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகளைப் பாடிக்காட்டினார் இளையராஜா. அரங்கு அப்படியே கைத்தட்டல்களால் சூடானது. அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் மெட்டில் மாங்குயிலே பாட்டு வரிகளையும் பாடிக்காட்டினார்.

”தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற உருக்கமானப் பாடலையும் பாடிவிட்டு, அண்ணே நீங்க எப்படி “நிலா அது வானத்துமேலே” என்றும் பாடினீங்க என்று விவேக் கேட்டார். அதற்கு இளையராஜா ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.

உண்மையில் மணிரத்தினம் நாயகனில் கேட்ட சூழலுக்கு “தென்பாண்டிச் சீமையிலே” மெட்டையும் ”நிலா அது வானத்து மேலே” என்ற மெட்டையும் போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஒன்றை எடுத்துக்கொண்டு, அதோடு நில்லாமல் இரண்டாவது மெட்டையும் தனக்கே வேண்டும் என்றும் அதைக் கொஞ்சம் மாற்றி உஜாலாவாகப் பாடுவதுமாதிரி மாத்திக்கொடுங்கள் என்றும் கேட்டாராம்.

நிலா அது வானத்து மேலே என்ற பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாடல் போன்ற ஓர் உருக்கமான மெட்டில் மிக அழகாகப் பாடிக்காட்டி ஏராளமான கைத்தட்டல்களைத் தட்டிக்கொண்டுபோனார் இளையராஜா. இப்படியே இசையின் நெளிவு சுழிவுகளைப் பேசப் பேச நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். அதனால்தான் அப்படியான நிமிடங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதுபோலெல்லாம் நடனங்களோடு பாடல் என்றெல்லாம் இளையராஜா செய்யவில்லை. நிகழ்ச்சி முழுவதும் இசை இசை இசை மட்டுமே என்று அழகாகவும் எளிமையாகவும் செய்திருந்தார். நிச்சயம் அது பாராட்டுக்குரிய ஒன்று.

பார்த்திபன் பாதியில் விடைபெற்றதும் விவேக் வந்தார். வரும்போதே அரங்கம் சிரிப்பால் கடகடத்துப் போனது. உனனே பார்த்திபன் அவரை புதுமாதிரியாக அறிமுகம் செய்யத் தொடங்கினார். நிகழ்ச்சியின் உச்ச நிலைக் கைத்தட்டல்களில் அதுவும் ஒன்று.

விவேக் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். இளையராஜா பாட்டைக் கேட்டுக் கேட்டு இளையராஜா பாட்டாகவே ஆகிப்போனார் விவேக். அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாமா என்றார் பார்த்திபன். விவேக் சரியென்று சொல்லி நேராக நின்றார்.

விவேக்கின் தலையில் பார்த்திபன் தன் கையை வைத்தார். உடனே தலை தொடர்பான ஒரு இளையராஜா பாட்டு வந்தது விவேக்கிடமிருந்து. கைத்தல்கள் அரங்கைப் பிளந்தன. பின் நெற்றியைத் தொட்டார். நெற்றி தொடர்பான இன்னொரு பாட்டு. மீண்டும் கைத்தட்டல்கள். பின் மூக்கைத் தொட்டார்.... அதற்கொரு பாட்டு. ஆ ஆ வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்ற மூக்கால் பாடும் பாட்டு. கைத்தட்டல். பிறகு இடுப்பைத் தொட்டார்..... அவ்வளவுதான் ஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்.... என்று வெகு கவர்ச்சியாகப் பாடினார். சொல்ல வேண்டுமா?

அப்போது தொடங்கியதுதான் சிரிப்பலைகள். விவேக் அசராமல் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக விவேக் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மிகுந்த வலிமைதான்.

நீ ஒரு காமெடியன் நீ எதை வேண்டுமானாலும் காமெடி பண்ணு என்னை வெச்சிமட்டும் காமெடி பண்ணாதே என்று இளையராஜா ஒரு முறை சிரித்துக்கொண்டே ஆனால் சீரியசாகச் சொன்னார்.

பாத்தீங்களா, அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்டு...... ஸ்ட்ரிக்டு..... ஸ்ட்ரிக்டு..... என்று சொல்லி அதையும் காமெடி ஆக்கினார் விவேக்.

விவேக் விடைபெற்றதும் பிரசன்னா வந்தார். அவர் மைக்கைக் கையில் எடுத்து ஏதோ கிசுகிசுத்தார். ஒருவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. மைக்கை பக்கத்துல வெச்சிக்கங்க என்று பார்த்திபன் சொன்னார். மீண்டும் பாதாளத்திலிருந்துதான் குரல் வந்தது. பிரசன்னாவுக்கு மேடை அனுபவமே இல்லை என்று புரிந்துகொண்டேன். மைக்கைக் கையில் வாங்கினால் அரங்கத்தை அதிரடிக்க வேண்டாமா?

அப்படியே முக்கலும் முணகலுமாய் இதோ என் மனைவி சினெகா வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் இளையராஜாவின் ரசிகர்கள். எங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம் இளையராஜாதான் என்றார். அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்கள் காதலித்தோம் கைப்பிடித்தோம் வாழ்கிறோம் என்று புகழ்ந்தார்.

ஆனால் இளையராஜா இதற்குச் சட்டெனக் குறுக்கிட்டார். நீங்க பண்ற கூத்தையெல்லாம் என் தலையில் போடாதீர்கள். நான் ஏதோ என் இசைப்பயணத்தில் இருக்கிறேன். அந்தப் பாடல்களை நீங்கள் கேட்டு காதல் வயப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என்றார்.

ஆனால் அடுத்த பாட்டு ஆரம்பிக்கும்போது பிரசன்னா இளையராஜாவுக்கு ஒரு பதிலோடு வந்தார். ”இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு” என்று நீங்க தானே சார் பாடினீங்க அதனால்தான் நாங்க காதலிச்சோம் என்றார்.

மேடையில் சினேகா தோன்றினார். பிரசன்னா சினேகா இருவரின் ஆடையலங்காரம் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது. மேடைக்கே அது ஒரு புது வர்ணம் பூசியது. ஹலோ டொராண்டோ என்று சினேகா கணீர் என்று முழங்கினார்.

கடைசியாக இளையராஜா, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக என்று ஒரு பாடலின் வார்த்தைகளை மாற்றிப் பாடினார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டு வரவில்லை. அந்த ஈழ ஏக்கக் கண்களுக்கு எந்த ஒரு போலிக் கனவைக்கூட பரிசளிக்கவில்லை. அவர்மட்டும் அல்ல நீயா நானா கோபியோ, பார்த்திபனோ, விவேக்கோ, கார்த்திக் ராஜாவோ, யுவன் சங்கர் ராஜாவோ எவருமே ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அது ஏன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

அப்படியே ஒருவழியா இளையராஜாவின் வடை பாயச இசை விருந்து முடிந்துபோனது. நான் பனியில் நனைய என்னைத் தயார்ப் படுத்திக்கொண்டேன். அந்த ஊசிக் குளிரில் கொட்டும் பனியில் மக்கள் இறங்கி நடந்து விடைபெற்றார்கள். ஒரு ஆறுதல் வார்த்தை தந்திருக்கலாம்தான் வேறு எதைச் செய்துவிட முடியும் உங்களால் என்று மீண்டும் எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை.

நிகழ்ச்சிக்குச் செல்லும்போது எனக்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நான் இன்னும் ஆழத்துக்குப் போகலாம் என்ற கனவுகளோடுதான் சென்றேன். என் எதிர்பார்ப்புகளில் தவறிருந்ததாக நான் இப்போதும் நினைக்கவில்லை. எனக்கான இசைத் தீனி போதவில்லை என்று எனக்குப்பட்டது.

இளையராஜா என்னை ஆட்டிப்படைத்த இசைஞானி. இன்று அவரைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய நிலை.

என்ன காரணம் என்று மீண்டும் யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.

(நிறைந்தது - உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)

அன்பும் அமைதியும் நிறைக

இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.

ஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது "அன்பும் அமைதியும் நிறைக" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா?

இஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது "அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா?

உண்மையான இஸ்லாம் குர்-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல்பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.

தீவிர இறைப்பற்று

தீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.

இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

ஏனெனில்
அவையாக இறைவன் இருப்பதாகத்தான்
அனைத்து வேதங்களும் சொல்கின்றன.

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ

துவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.

எலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.

பார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)

கடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)

இளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.

இளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத்துக்கொள்ளும் கவனம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த விழாவிலும் அப்படியேதான். பாராட்டுக்கள்.

பிசிறுகள் இல்லாமல் இசை சன்னமாக ஒலித்தது. அது இதயத்தின் ஆழத்தில் இதயாக இறங்கியது. சில நேரங்களில் நிகழும் சிறுபிழையும் ராஜா விடவில்லை.

மீண்டும் வாசிங்கடா என்று சொல்லிவிட்டார். இறங்கிச் சென்று நின்று ஒவ்வொருமுறையும் அவர் அக்கறையாய் நேசித்துக் கவனித்துச் செய்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது.

ஏன்னா..... அண்ணன் ரொம்ப ஸ்டிரிக்டு..... ஸ்டிரிக்டு.... ஸ்டிரிக்டு.... என்று விவேக் அவ்வப்போது அதையும் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருந்தார்.

பார்த்திபனும் விவேக்கும் உண்மையிலேயே இளையராஜாவின் இசை வெறியர்கள்தாம். எங்குமே விட்டுக்கொடுக்காமல் எத்தனை உயரம் உயர்த்திப்பிடிக்கமுடியுமோ அத்தனை உயரம் உயர்த்திப் பிடித்தார்கள்.

எத்தனை நல்ல விசயமாக இருந்தாலும், அதை உயர்த்திப் பிடிக்க நிச்சயம் ஆட்கள் தேவை.

இதே மேடையில் 2000 அல்லது 2001ல் ஏஆர் ரகுமான் இசையைக் கேட்டிருக்கிறேன். அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது.

அப்போது கிடைத்த ஒரு குதூகலம் எனக்கு இப்போது இல்லை என்பது உண்மை. அதற்குக் காரணம் நானாகவே இருக்கலாம். எனக்கு அது முதல் நேரடி நிகழ்ச்சி.

அதுமட்டுமல்லாமல் அதுபோல கனடாவில் பிரம்மாண்டமாக ஒரு தமிழ் இசையமைப்பாளரைக் கொண்டு நிகழும் நிகழ்ச்சி நிகழ்வது அதுதான் முதன்முறை.

கூடவே இந்திப்பாடல்களும் பாடப்பட்டதால், தமிழ் அல்லாத இந்தியர்களின் கூட்டமும் சொல்லிமாளாத அளவு வந்திருந்தது. அப்படி வந்த கூட்டம் தமிழ்ப்பாட்டையும் மிகவும் ரசித்துக் கேட்டது வரவேற்கக்கூடியதாய் இருந்தது,

அறிமுகமே இல்லாத ஒரு இந்திக்காரர் ”ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாட்டை எனக்கு எப்படியாவது பதிவு செய்து கொடுத்துவிடு என்று என்னிடம் அன்று கெஞ்சினார்.

ரகுமானின் இசை அரங்கையே அதிரடிக்கும் இசை. ராஜாவின் இசை பூ மலர்வதைப் போன்ற இசை. இரண்டையும் ரசிக்க முடிந்த நான் இசையின் ரசிகனே தவிர ஒருவரை ரசித்து ஒருவரை விட்டுவிடும் கண்மூடி ரசிகன் அல்ல.

”கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அன்று என் கண்களில் நீரை வரவழைத்தது. நான் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தேன்.

அப்படியான ஒரு இதயத் தாக்கம் எனக்கு நேற்று கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் என் சொந்தச் சூழல்களின் மாற்றமாகவும் இருக்கலாம்.

ஆனாலும் எம் எஸ் விஸ்வனாதன் தன் பாடல்களை இந்த மேடையில் ஏற்றியிருந்தால் நாம் மீண்டும் அழுதிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது.

நேற்றுபோல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்....

என்னால் மறக்கவே முடியாத பாட்டு. அந்தப் பாடலைத் தேர்வு செய்து எஸ்பிபியைப் பாடவைத்து அரங்கில் எனக்கொரு தங்கத் தொட்டில் செய்துகொடுத்தார் ராஜா. நன்றி பண்ணைப்புரத்து பாட்டுக்காரா!

”தந்தன நந்தன தாளம் வரும்....” என்ற பாடலை எவரும் மறந்திருக்கமுடியாது. அது அவ்வகைப்பாடல்களில் முதலாவது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பாடல்கள் அதுபோல வந்துவிட்டாலும் அதை மட்டும் அசைக்கவே முடியவில்லை.

அந்தப் பாடலுக்கு எங்களுக்காகவே பிரத்தியேகமாய் இசையைக் கொஞ்சம் மாற்றியமைத்துப் பாடவைத்து இசையமைப்புப் பணியைச் செம்மையாய்ச் செய்துகாட்டினார் ராஜா.

இதுபோலெல்லாம் வேறு இசையமைப்பாளர்கள் செய்வதே இல்லை. இது ராஜாவுக்கே உரித்தான சிறப்பு. ராஜா இசையை எடுத்து எளிமையாய்ச் சொல்வதில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். இதுவரை நான் கண்ட இளையராஜா நிகழ்ச்சிகளிலெல்லாம் இதை அழகாகச் செய்து என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சி முழுவதுமே நான் இதுபோன்ற விசயங்களையே விரும்புவேன். அப்படியே அனைத்துப் பாடல்களையும் சோதனை முயற்சிகளாகவே செய்திருந்தால் நான் இன்னும் இரண்டு நாள்கூட அந்த அரங்கிலேயே உட்கார்ந்திருப்பேன்.

*

இளையராஜா ஒரு நல்ல கவிஞர். ஆனால் வைரமுத்துவுடன் வந்த லடாய்க்குப் பிறகு அவர் இசையா கவிதையா என்ற சண்டையிலிருந்து மீளவே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

எல்லா மேடைகளிலும் பாடல் வரிகளை அவர் கேவலமாகவே பேசுகிறார். ஆனால் பாரதி பாடல்களைத் தேடிப்பிடித்து இசையமைத்து வெற்றிபெறுகிறார் ;-)

ஒரு முறை கண்ணதாசன் சொன்னார். இசை வார்தைகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடும் என்று. அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனாலும் இறக்கை கட்டிக்கொள்ளத் தகுதியான அந்த வரிகளை எழுத ஒரு கண்ணதாசன் வேண்டும், ஒரு வைரமுத்து வேண்டும். ஒரு டி ஆர், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி என்று வார்த்தைகளின் சுவையறிந்தவர்கள் வேண்டும்.

அப்போதுதான் பாட்டு ஆயுள் கூடிய ஒன்றாய் இருக்கும். இல்லை என்றால் ஓரம்போ ஓரம்போ என்று ஓரம்போய்விடும்.

என்னிடம் கொடுத்தாலும் நானும் வார்த்தைகட்டி வையம் ஏற்றுவேன். இதை யாருக்கிட்டேயும் அவசரப்பட்டு சொல்லிடாதீங்க ;-)

ஓரம்போ ஓரம்போ என்ற புகழ்வாழ்ய்ந்த பாடலையும் இளையராஜா பாடினார். பாட்டுலகில் அது ஒரு புதிய முயற்சி என்று பேசப்பட்டது. ஆனால் இலங்கை வானொலி அந்நாளில் இது பாட்டே இல்லை என்று கூறி காற்றலையில் ஏற்ற மறுத்தது.

இன்றும் நாம் அதைக் கேட்கிறோம். ஆனால் ஒருவரும் விரும்பிப் பாடுவதில்லை. ஏனெனில் அதன் வார்த்தைகள் இதயத்தோடு பேசவில்லை.

ஆனால் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாடலை மக்கள் தாங்களாகவே விரும்பிப் பாடுகிறார்கள். இளைய நிலா பொழிகிறது என்றால் இயல்பாகவே இதயத்திலிருந்து பாடுகிறார்கள். எல்லாம் ராஜாவின் பாட்டுத்தான் என்றாலும் ஏன் இந்த வித்தியாசம்?

அங்கேதான் வரிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.

இந்த ஓரம்போ பாடலைவிட இளையராஜாவின் இன்னொரு அந்த சமயத்துப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

வாடை வாட்டுது
ஒரு போர்வை கேக்குது
இது ராத்திரி நேரமடீ...

இந்தப் பாடலை எவருக்காவது நினைவிருக்கிறதா? முழுக்க முழுக்க ஸ்டீரியோவிலான பாட்டு. ஸ்டீரியோவை உச்சத்தில் உயர்த்தி தனித்தனியே பிரித்துப் பாடப்பட்ட பாட்டு என்று சொன்னார்கள் அன்று. ஆனால் இளையராஜா இந்தப் பாடலை எங்கும் பாடுவதே இல்லை ஓரம்போ ஓரம்போ என்றுதான் பாடுகிறார்.

ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் இசை ஞானம் என்பது என் காதுகளோடு சரி. மூளை.... சுத்தம் ;-)

இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா வந்தார். இளையராஜாவின் மேஜிக் என்ற தலைப்பில் சில விசயங்களைச் சொன்னார். அதில் முக்கியமானது என்னவென்றால் கவிதை என்பதெல்லாம் குப்பை. இசை என்பது மட்டுமே கோபுரம் கோபுரம் கோபுரம்.

அதை நிரூபிக்கும் வகையில் இளையராஜா சில வரிகளைச் சொன்னார்

தாமரை மலரில்
மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்

ஒரு தூதும் இல்லை
உன் தோற்றம் இல்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

என்று இசை எதுவும் இன்றி மொட்டையாக வாசித்தார். தாமரை மனதில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். இந்த வரிகளைக் கேட்கும் போது உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது என்று அரங்கத்தாரைக் கேட்டார். ஆனால் பதிலுக்குக் காத்திருக்காமல் ராஜாவே சொன்னார், இதில் ஒன்றுமே இல்லை. வெத்து வார்த்தைகள். இதில் எந்தப் பொருளும் இல்லை என்றார்.

ஆனால் இப்ப பாருங்க என்று அப்படியே இசையோடு பாடிக்காட்டினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது!

”தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”

அடடா எத்தனை அற்புதமான கண்ணதாசனின் வரிகள்? உனக்காக என் மனதை நான் எப்படி வைத்திருந்தேன் என்று காதலி சொல்கிறாள். எந்த எண்ணங்களும் இடைமறிக்காத வேறு எந்த நினைவுகளும் தீண்டாத தனிமையில் வைத்திருந்தேன் என்கிறாள்.

அத்தோடு நின்றாளா நிற்கவில்லை, மேலும் சொல்கிறாள் அந்த மனதை உனக்காகக் காத்திருக்க எங்கோ ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவில்லை. அல்லது படுக்கையில் கிடத்திருக்கவில்லை. ஏனெனில் என் மனம் காதல் மனம். மெல்லிய மனம். பூவினும் மெல்லியது அது. ஆகவே அதை தாமரை என்ற நீண்ட இதழ்களைக் கொண்ட பூவின் இதழ்களின் மேல் தனியே வைத்திருந்தேன் என்கிறாள். சிறிய இதழ்கள் என்றால் உன்னை நினைத்துக் கனத்துக்கிடக்கும் என் இதயம் கீழே விழுந்துவிடுமே என்ற அக்கறையில் தாமரை இதழ்களின் மேல் வைத்திருந்தேன் என்கிறாள்.

உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை. ஒரு தூதும் இல்லாமல் இந்த மனம் எப்படிச் சமாதானம் அடையும் என்று காதலி கேட்பது எத்தனை நியாயமானது?

சரி தூதுதான் இல்லை, என் நினைவினில் அல்லது கனவினில் உன் தோற்றமாவது வரவேண்டுமா இல்லையா? அதுவும் இல்லையே? ஒரு பொய்யான தோற்றத்தைக்கூட நீ தராமல் போய்விட்டாயே காதலா என்று எப்படி உருகுகிறாள் காதலி? பிறகு தூக்கம் எங்கிருந்து வரும்?

இந்த வரிகளை எல்லாம் இளையராஜா வெத்து வார்த்தைகள் என்கிறார்.

என்றால் இவர் கவிஞர்தானா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இளையராஜா நல்ல கவிஞர் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. வைரமுத்துவோடு வந்த லடாயின் காரணமாக இவர் கவிஞர்களை எல்லாம் கீழாக்கினார். அதனால் கவிதைகளும் இவருக்குக் கீழாகத் தெரிகின்றன.

இது ஒரு மனப்பிறழ்வன்றி வேறென்ன?

(தொடரும்)

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ


யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.

கோபி நீ போய் ராஜாவை அனுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா? நானா? என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...

முதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.

இதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.

இது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.

இந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.

வெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை!

இலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.

நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.

அது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது? அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.

கோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.

ஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.

கோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.

கனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.

சட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

இடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

அரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...

டிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.

பாவம் கோபி அல்லாடினார்.

இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும்? 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.

25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே?

இளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.

ஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.

நீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.

ஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.

நேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்
வந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

இவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.

அரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்
தொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.

இது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.

இளையராஜாவுக்கு நேரம் போதவில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.

அந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.

அந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.

இளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.

உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை
வெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.

அவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.

விசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.

இப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.

இளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.

இந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.

காதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.

(தொடரும்)

எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை

எந்த வாழ்க்கையும்
புதிய வாழ்க்கை இல்லை.
எல்லா வாழ்க்கையும்
முன்பே வாழப்பட்டவைதாம்

எந்த மனிதரும்
புதிய மனிதரில்லை
எல்லா மனிதரும்
முன்பே பிறந்தவர்கள்தாம்

கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

விடைபெற்றுப்
பாழாகும் தினங்கள்
பெரும்
வெற்றியென நினைக்கின்ற
ரணங்கள்

அடைகாத்த
முட்டைகளும் குஞ்சாகும்
ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ
நஞ்சாகும்

கடக்கின்ற
நாளேதும் மீளாது
என்றும்
கடப்பாரை குடலுக்குள்
வேகாது

தடையில்லா
வாய்க்காலில் நீரோடும்
தினம்
தடுகின்ற உள்ளத்தால்
எது வாழும்

அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்?


அடீ மருதாணீ
என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க
அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்

எந்த மன்மதன் அனுப்பி
இங்குநீ தூது வந்தாய்

நீ முத்தமிட்டு முத்தமிட்டா
என் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன

மருதாணீ
நீ யாருக்குப் பரிசம் போட
இங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ

அடியே
நீ வெற்றிலையைக் குதப்பி
என் விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்

அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது

அழாதேடி தோழீ
உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து
ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்

எங்கேயோ....

எங்கேயோ உலவும்
ஒரு மேகம்
இந்த மனதை
நனைக்கக்கூடும்.

எங்கேயோ
பூக்கும்
ஒரு பூ
இந்த நாசிக்குள்
வாசம் வீசக்கூடும்

எங்கேயோ
வீசும்
ஒரு தென்றல்
இந்த தேகத்தைத்
தொட்டுத் தழுவக்கூடும்

எங்கேயோ
பாடும்
ஒரு பாடல்
இந்த உயிரை
உசுப்பிவிடக்கூடும்
இலக்கியம் யாதெனிலோ

வாழ்க்கையில்
வாழ்க்கை தேடிக் களைத்து
கற்பனையில் வாழ்க்கை தேடி
விருப்பம்போல் வாழ்வதே
அருங்கலைகளும்
அற்புத இலக்கியங்களும்

இயல்பில் நீ
ஒரே ஒரு கதாநாயகன்
ஆனால்
இலக்கியத்திலோ
நீ பல நூறு கதாநாயகன்

இல்லாததையும்
இயலாததையும்கூட
எண்ணங்களால் வாழ்ந்து
பல நூறு ஜென்மங்களை
ஒற்றைப் பிறவியிலேயே
பெற்றுச் சிறக்கும்
பேரின்ப வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

படுத்த படுக்கையாய்க்
கிடக்கும்
முற்று முடமானவனும்
படபடவெனப்
பொற்சிறகுகள் விரித்து
நீல வானின்
நிறந்தொட்டுப் பறக்கும்
அதிசய வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

உன்
உடலைக் கொண்டு
ஒரு வாழ்வுதான்
உன் உள்ளத்தைக் கொண்டு
உனக்கு
ஓராயிரம் வாழ்வு

எழுதி வைத்தால்தான்
அது இலக்கியம் என்றில்லை
ஆக்கிவைத்தால்தான்
அது கலையென்றில்லை
எண்ணத்தில் கருவாகி
உனக்குள்ளேயே
ரகசியமாய்
பொன்னுலகம் படைத்து
பூரித்து வாழ்ந்தாலும்
அது
கலைதான்
இலக்கியம்தான்

கலையும் இலக்கியமும்
இல்லாவிட்டால்
கடவுள் தந்த அரிய வாழ்வும்
கரிக்கட்டையாய்க்
கருகியே போகும்

யாப்புக்குத் தோப்புக்கரணம்

யாப்புக்குத்
தோப்புக்கரணம் போடமாட்டேன்
என்றார்
அதிலுள்ள
எதுகையை ரசித்தேன்

மரபுக்குள்
மடிவதோ என்றார்
அதிலுள்ள
மோனையை ரசித்தேன்

எதுகை மோனை தொல்லை
எனக்கதில் நாட்டம் இல்லை
என்றார்
அதிலுள்ள
இயைபை ரசித்தேன்

இப்படி எழுதிப்போகும்
இந்தப்
புதுக் கவிதையைக்
கண்டேன்
அதன் இயல்பினையும்
ரசித்தேன்

தனிமையின் வெளிச்சத்தில்

*
உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
தனிமை

*
உன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி
தனிமை

*
தனிமையின் வெளிச்சத்தில்
கடந்துபோன வாழ்க்கையை
அன்று தெரியா நிஜங்களோடும்
இன்று தெரியும் நிதரிசனங்களோடும
ஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னோடு அந்தரங்கமாய்ப் பேசும்
அந்தக் குரல்களைக் கேள்

உன் வாழ்க்கைப் பாதை
தெள்ளத் தெளிவாகத் தெரிவதை
உயிர் விருப்போடு காணலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னை உனக்குள் நிறுத்தி
பேரறிவுச் சுடராய் எரியலாம்

*
தனிமையின் தனிமையில்
அமைதியின் ஆழத்தில்
சிந்தனை சிதறா நிலையில்
உன் நெற்றியொளி உயர்த்தி
அணையா தீபமாய் உன்னை
ஞானச் சிமிழில் ஏற்றிக்கொள்ளலாம்

*
அனுபவமற்றவர்களுக்கு
தனிமை என்பது கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ
தனிமைதான் வரம்

*
தனிமைதான்
அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்

*
உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனிமையாய் இருப்பதில்லை

*
எந்தத் தனிமையிலும்
உன்னோடு இந்தப் பிரபஞ்சமாம்
ஐம்பூதங்களும்
அகலாது இருக்கின்றன

*
தனிமையில்
உன்னைப் பிட்டுப்பிட்டு வைக்கும்
உன் ஐம்புலன்களும்
உன்னோடுதான் இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் எண்ணங்கள் முழுவதுமாய்த்
தன் திறந்த விழிகளோடு இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் அளவற்ற கற்பனைகள்
அய்யங்களேதுமின்றி
அழகழகாய்ச் சரணைகோத்துப்
பொங்கி வழிகின்றன

*
தனிமையில் உன்னோடு
உனக்கே உனக்கான
உன் அந்தரங்கக் காதல்
அளப்பரிய சுகத்தோடு
பேரனுபவமாய் இருக்கிறது

*
தனிமையில் உன்னோடு
உன் உச்ச சக்தி மொத்தமும்
சற்றும் குறையாமல்
சன்னமாய் இருக்கிறது

*
தனிமைதான்
உன் பூரண சக்தியை
ஓர் உற்சாகப் புயலைப்போல
சற்றும் பிறளா வீரியத்தோடு
வெளிக்கொண்டுவரும்
தங்கச்சாவி

*
தனிமையில்
நீ எங்கே தனியே இருக்கிறாய்
தனிமையில் உன்னோடு
நீ இருக்கிறாயே மறந்துவிட்டாயா?

*
ஒரு விந்து
தனித்து நீந்தியபோதுதான்
நீ கருவானாய்

*
உன் உடல் மட்டும்
தனித்து விடப்படும்போதுதான்
நீ உன் கண்கொண்டு காணவியலா
மகத்துவப் பிணமானாய்

*
எனவே இளம்பிறையே
தனிமை எப்போதும்
தனிமையில் இருப்பதில்லையடா

*
தனிமையில்தான்
தனிமை தன்
நெருக்கமான உறவுகளோடு
நெருங்கி இருக்கிறது

*
உன் உள்மனம்
நீயே அறிந்திராத உன் அந்தரங்கம்
உன் ஆழ்ந்த அறிவு
உன் ஞான ஒளிச்சுடர்
உன் சரியான விருப்பு
உன் தெளிவான வெறுப்பு என்று
தனிமையின் நெருக்கமான உறவுகள்
நீண்டு கொண்டே செல்லும்

அவை அத்தனையும்
உன் நிஜங்களின் சத்திய முகங்கள்

ஆகவே
நீ உண்மையாய் இருக்கும்
உன் பொழுதுகளே
உன் தனிமை

*
ஓர் உயிர்
இன்னொரு உயிரை
தனக்குள் தனதாய்ப் பொத்திவைக்கும்
தனிமைதான் தாய்மை

*
இரண்டு உயிர்கள்
ஒன்றுக்குள் ஒன்றை உருக்கி 
உயிர்வாழ் பெருஞ் சுகமாய்க் காணும்
தனிமைதான் காதல்

*
ஓர் உயிர்
அளவிலா அன்பும் நிகரிலா அருளும் தரும்
நம்பிக்கையின் முன்
முழுவதும் பணிந்து கசிந்து காணும்
தனிமைதான் பக்தி

*
உன்னை உயர்த்துவதற்கான
அத்தனைப் படிக்கட்டுகளும்
உன் தனிமையில்தான்
உன் விழித்திரைகளில்
பிரமாண்டக் காட்சிகளாய் விரியும்

*
உன் உறவுகளை நீயறிய
உன் காதலை நீயறிய
உன் வாழ்வை நீயறிய
உன் சக்தியை நீயறிய

அட...
இப்படி நீளும் பட்டியலை
நிறுத்திச் சொல்வதானால்
உன்னையே நீயறிய
தனிமைதான் தனிமைதான்
உனக்கே உனக்குக் கிடைத்த
வரம் வரம் வரம்

*
தனிமையில்
எண்ணங்களெல்லாம்
தவங்களாகும்

*
தனிமையில்
அமைதிமடி தவழ்வது
வரங்களாகும்

*
தனிமையில்
இனிமை காண்பதோ
சாபவிமோசனங்களாகும்

*
தனிமையை
வெறுமையாய்க் காணாது
உற்ற உறவெனக் கண்டால்
என்றென்றும் உனக்குள்
கரையா நிம்மதி நிறையும் உறுதி

அடிப்படைவாதிகள்

தானே இயங்கும்
கூர்முனை ஆயுதங்கள்

மூளையைத்
தலைக்கு வெளியே
தண்டமாய் வைத்திருக்கும்
முட்டாள்கள்

மிருகங்களை நெஞ்சக் காடுகளில்
சுதந்திரமாய் அலையவிட்டு
வைத்திருப்பார்கள்

மனிதத்தை
திறந்த வெளிகளில்
இரக்கமின்றி
கொன்று குவிப்பார்கள்

எத்தனை எத்தனையோ
மெல்லிய இதயங்களை
நசுக்கி நசுக்கிச் சட்ணி செய்து
அறிவு ஆவியில் வேகாத
மடைமை இட்டிகளுக்குத்
தொட்டுக்கொண்டு
தின்று முடிப்பார்கள்

அடுத்தவர் வாழ்க்கைக்குள்ளும்
தனிமனித சுதந்திரத்துக்குள்ளும்
வெறிபிடித்தக்
காண்டாமிருகங்களாய்
அலைவார்கள்

முட்டி முட்டி இவர்கள்
எட்டித் தள்ளிய முட்டையோடுகள்
மிகப்பல குஞ்சுகளின் சமாதிகள்

வரட்டுப் பிடிவாதங்களின்
முரட்டுக் கோட்டைகள்

இதயங்களைக் காண
இவர்களுக்கு
விழிகள் கிடையாது

இயற்கையைக் கேட்க
இவர்களுக்குச்
செவிகள் கிடையாது

சுடச் சுட மனித ரத்தத்தை
உறிஞ்சமட்டும்
இவர்களின் நாக்கு நீளும்

கலந்துரையாடல்களின்
கழுத்தை நெறித்துக் கொல்லும்
கொலைகாரர்கள்

மனதை மதிக்கும் மரியாதைக்கும்
இவர்களுக்கும்
சொர்க்க நரக தூரம்

உண்மையைக் கொலைசெய்து
செருப்புக்கடியில் இட்டவர்கள்

தங்களிடமே உண்மை இருக்கிறது
என்று மார்தட்டுவார்கள்

தவறு அவர்களுடையதில்லை
தரவில்லையே இறைவன்
அவர்களுக்கும் மூளையை
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்?

பாவப்பட்ட இந்த
மனோ வியாதிக்காரர்களிடம்
இரக்கப்படவும் முடியாது

இரக்கப்பட்டால்
அந்த நொடியே அவர்களால்
மனிதர்கள் இறக்கப்படுவார்கள்

காலத்துக்கேற்ப
கனியத் தெரியாத இதயமும்
தேவைக்கேற்ப
மலரத் தெரியாத உதடுகளும்
நரகத்துக்கே போம் என்ற
உண்மையைச் சொல்லி 
இக்கவிதையை முடிக்கிறேன்

தோற்றுத்தான் போகிறோம்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்...

எங்கோ தூரத்திலல்ல
பக்கத்தில்தான்

விலகியவர்களாக அல்ல
நெருக்கமானவர்களாகத்தான்

காய்ச்சொல் ஈபவர்கள்களாக அல்ல
கனிமொழி குழைபவர்களாகத்தான்

வெறுப்பாடிக்கொண்டல்ல
உறவாடிக்கொண்டுதான்

நம் தோள் பற்றித்தான்
அணைத்தழைத்துச் செல்பவர்களாகத்தான்

அன்போடுதான்
அருகிலேயேதான்

நம்மோடுதான் இருக்கிறார்கள்
நமக்கான நம் எதிரிகள்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்....

ஏக்கங்களால் அபகரிக்கப்பட்டு
தவித்துத் தவித்து
நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்

நண்பர்களெல்லாம்
பயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்
அடையாளங்களற்று
உடைந்து கிடக்கிறார்கள்

தோற்றுத் தோற்றுப் போன
தொடர் களைப்பில்

தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி


தடிச்ச ஒதட்டுக்காரி
     தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
     பழக்கத்துல கெட்டிக்காரி

முடிஞ்ச மனமுடிச்ச
     முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
     வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
     இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
     ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
     விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
     மயாணத்துல நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
     முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
     நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
     கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
     ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
     ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
     ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
     சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
     கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
     மத்திமீன் கொழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
     நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
     பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
     காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
     தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
     வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
     இடிஞ்சது ஒங்கனவு
துடிக்குது ஒன்னுசுரு
     ஒன்னநீ காக்கவாடீ

காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி




















இருநீல மலர்களைச்
சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே
நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால்
காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது

ஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன்
என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்

நீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது
அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்

உன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது
என்று நான் புரியவைத்தபோது
உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்

ஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு
கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்

அவன் மட்டும் என் பௌர்ணமியைத்
தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது
நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்

சூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள்
நான் உன்னைக் கண்டேன்
என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப்
பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.

உன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்

உன் முக முற்றத்தில் வந்துவிழும்
கூந்தல் கற்றைகள் மேகங்களா - எனில்
அவை என்னைத்தவிர வேறெவர்க்கும்
பொழிவதில்லையே

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா - எனில்
அவை என்னைத் தவிர வேறெவர்க்கும் புரிவதில்லையே

நான் உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே என் உடலின்
இரத்த ஓட்டத்தை உணர்கின்றேன்

அன்றொருநாள் நானுன்னைத் தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த கோடி புஷ்பங்கள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின் மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள் மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும் புரியாமல் விழித்திருக்கிறேன்

நீ பொட்டிடுவது உன் நெற்றியை அலங்கரிக்க
என்றுநான் என்றுமே நினைத்ததில்லை
பொட்டை அலங்கரிக்கவே என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால் உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால் நான் கவிஞனானேன்

இன்றெல்லாம் நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லையடி
உன்னை நினைத்திருப்பதால் நான் விழித்திருக்கிறேன்

நான் வருசங்களை நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள் சூரியக் கண்களை பூமி இமைகள்
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய எல்லாம் மறந்தோம்