20161028 முகநூல்



*

Jeyaruban Mike Philip 

திரு.புகாரி! மதங்கடந்த மனிதாபிமானத்தைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். மதம் என்பது மனிதாபிமானமற்ற சூழலில் அவரவர்களால் அறிவுறுத்தப்பட்ட போதனை.

ஜெயரூபன், நீங்கள் கானலைக் கண்டு நிஜமென்று நம்புகின்றீர்கள்.
மார்க்கங்களின் நோக்கம் அறம் வளர்ப்பது மட்டுமே. அது பிழையானதா?

பிழைப்புவாதிகளும், ஆதிக்கவெறியர்களும், அரசியல் சில்லுண்டுகளும் மார்க்கத்தைப் பிழையாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெருப்பு என்பது புனிதமானது. அதை கூரையில் வைப்பவனின் கையே வக்கிரமானது! இல்லை என்று சொல்வீர்களா?

*

முட்டி முட்டி மோதி மோதி கருகக் கருகத் துளிர்விட்டுத் துளிர்விட்டு முளைப்பதென்ன சாதாரணமா?

ஆனாலும் ஏற்க முடியவில்லையே இந்த வைரப்பயிரை, ஏன்?
உச்சகட்ட ஊழல்?
பிச்சைக்காரர்களாய்ப் பார்க்கும் பணக்காரம்?

எழுந்தால்தானே கவிழ்க்க வருவாய் என்று தரையோடு தரையாய்க் கட்டிவைத்திருக்கும் அதீத அதிகாரம்?

எல்லாம் தொலையட்டும்
மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே அம்மா!

ஆனாலும் நீ நலம்பெற வேண்டும் எழுந்து நடமாடவேண்டும்!

நீ இல்லாததால் மட்டுமே இங்கே தங்கம் விளையப் போவதில்லை அதே ஊழல்தான் இன்னும் அதிக விளைச்சல் காணப் போகிறது!

*

>>> மதமாகி சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கும் போது அதை விமர்சிப்பது தேவையாகி விடுகிறது ஐயா!<<<

அடுத்த ஊர்க்காரனையும் எதிரியாய்ப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் ஒழிக்கப்பட வேண்டும். நான் அறிந்து எந்த மதமும் இன்னொரு மதத்தவனை அழிக்கவோ வெறுக்கவோ சொல்லவில்லை. அயலானை நேசி என்பது கிருத்தவம் முஸ்லிம் இரண்டிலும் சொல்லப்பட்டவை. புத்தரோ மகாவீரரோ எவரையும் எதிரியாகப் பார்க்கச் சொல்லவில்லை. மனித வக்கிரங்களை எதனோடு முடிச்சுப் போட்டாலும் அது கெட்டது என்றாகிவிடும்.
அரசியல் அவசியமானது அதனுள் வக்கிரம் புகும்போது அது கேடுகெட்டதாகிறது. சுத்தம் செய்ய வேண்டும் அதற்குக் காமராஜர்கள் தேவையே தவிர அரசியல் ஒழிப்பால் நாடு அனாதையாகிவிடும்!

*

மூடநம்பிக்கைகளிலிருந்து தனிமனிதன்தான் திருந்த வேண்டும்.
அவன் காதுகொடுக்கத் தயாராக இருந்தால் ஒரு கோடி மூடநம்பிக்கைகளைக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலிக்க ஆட்கள் நிறையவே உண்டு. அந்தப் பிழைப்பில் வாழ்ந்தவர்கள் அன்று ஏராளம். ஆனால் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் நம் கல்வி தந்த அறிவுக்கான சவால்.

*

ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் எல்லா வயதிலும்
எல்லாப் பெண்களுக்கும் கிடைத்தலே வேண்டும்!


பிறந்தநாள் நீ மலர்ந்த நாள்

அந்த
ஒற்றை நாள் மட்டுமே
உன்னால்
தேர்ந்தெடுக்கப்படவே முடியாத
உன் சிறப்பு நாள்

உன் இறுதிநாள்
தீர்மாணிக்கப்பட்டிருக்கும்போது
அதை அறிய நீ இருக்க மாட்டாய்

ஆக...
இறைவனால் தீர்மானிக்கப்பட்டு
உன் கைகளில் தவழும் உன் நாள்
உன் பிறந்தநாள் மட்டுமே

அந்த நாளின்
மேன்மையைக் கொண்டாடு
அதைத் தந்த இறைவனிடம்
உன் அன்பை அள்ளிக் கொட்டு
சின்னச் சின்னக் கண்ணீர் முத்துக்களால்
நன்றி நதி பெருக்கு

உன்
ஒவ்வொரு பிறந்தநாளும்
இறைவனை நீ தேடிச் செல்லும்
தங்கப் படிக்கட்டுகள்

இடையிலேயே தடுக்கி விழுந்துவிடாமல்
அருளப்பட்ட இறுதிப் படிக்கட்டுவரை
இன்பமாய் இனிமையாய்
உன்னையே நீ பாராட்டி
ஊரறிய உன் வயதைச் சொல்லி
நிதானமாய் ஏறிச் செல்

எத்தனை காய்ந்த வயிறுகளை
நிறைக்க இயலுமோ
அத்தனையையும் நிறைத்துக்
கொண்டாடு

ஒரே ஒரு புது நட்பையாவது
பெற்றுப் போற்று

கசந்துபோன உறவுகளில்
ஏதோ ஒன்றையாவது
மீட்டெடுத்து அள்ளியணை

உன் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
உன் கசடுகளைக் களைந்த
புத்தம் புதியவனாய்ப் பிறந்து சிரி

உன்னாலும் தீர்மானிக்க முடிந்த
இன்னும் எத்தனை எத்தனை
உன் பிறந்த நாட்கள்
உன் முன் உனக்காகக் காத்திருக்கின்றன

பார் மகிழ்
கொண்டாடு குதூகலி

அன்புடன் புகாரி
20161028
எங்கே இல்லை பாம்புகள்

பாம்புகள் நெளிகின்றன
கழுத்துப்பட்டிகளுடன்
பணியிடங்களில்

நாற்காலிகளில் அமர்கின்றன
கணினி பார்க்கின்றன
புதுப்பணியாளனின்
மேலான்மைத் திறன்கண்டு
கண்கள் சிவப்பேற
நெளிகின்றன பாம்புகள்

வட்டமேசையின் இடையிடையே
ஏராளமான பாம்புகள்
வனப்பான ஆடைகளில்
துடியாகப் பேசுகின்றன

கொத்துவது தெரியாமல்
கொத்தத் தெரிந்த பாம்புகளால்
அயராப் பணிசெய்து கிடக்கும்
அபலை எலிகள் அவதியுறுகின்றன

எடு விடு என்கிற
இணைவாய்ப்புத் திட்டத்தால்
விடுபட்டு வீதியில் அலைய
வஞ்சிக்கப்படுகின்றன

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

ஆப்பிளிலா இருந்தன பாம்புகள்
ஆதாமிலல்லவா இருந்தன பாம்புகள்
என்றுரைக்கின்றன இந்தப் பாம்புகள்

நாவடிக் கட்டளை ஆங்கிலத்தில்
நடிப்பறியா நடிப்புச் சாதுர்யத்தில்
கரைகண்ட பாம்புகளைக் காண
எங்கே செல்ல வேண்டும்

வயல்வெளிப் பாம்புகள்
வெட்டிக்கொண்டு சாகும்
மூர்க்க முட்டாள் பாம்புகள்

அலுவலகப் பாம்புகளின் கைகளிலோ
நஞ்சு கக்கும் கோடரியே இருக்கும்
காணும் கண்களுக்கு
வெண்ணிற ஆடை மட்டுமே தெரியும்

எங்கே இல்லை பாம்புகள்
எப்போது இல்லை பாம்புகள்

இத்தனைப் பாம்புகளின்
முட்டைகளையும் யார்தான் இட்டது

அன்புடன் புகாரி
உன்னை நான்
அள்ளியெடுத்ததில்லை
ஆனால்
உன்னை என் உயிருக்குள்
மெத்து மெத்தென்று உணர்கிறேன் 
கண்ணே
நீ என்னிடம்
பேசியதே இல்லை
ஆனால்
உன் குரல் எனக்குச் சன்னமாய்
மிக அருகில்
கிசுகிசுப்பாய்க் கேட்கிறது
செல்லம்
என்னை உனக்குத் தெரியாது
நான் உன்னைக் கண்டதே இல்லை
ஆனால் உன்மீது நான்
யுகங்களாய் நீண்ட
வெறியன்பு கொண்டிருக்கிறேன்
உயிரே
*
நேற்று பார்த்த படத்தில் வந்த இந்த வசனம் தந்த பாதிப்பில்
I never held you but I feel you
You never spoke but I hear you
I never knew you but I love you

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
பயணம் ஒருவழியாய்
முடியத்தான் போகிறது
வழியெல்லாம் உதிர்ந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றையும் அள்ளியெடுத்துத்
தங்கமுலாம் பூசிப் பூசி
நினைவுப் பொந்துகளில்
பத்திரப்படுத்தினேன்
ஆனால்
நொடிகளில்
தன் பித்தளை முகம் காட்டுவதை
அந்நிமிடங்கள் நிறுத்தவே இல்லை
ஆக
நான் தான் போலியாகிப்
பல்லிளித்து நின்றேன்
பித்தளை தன் நிசத்தில்
நிமிர்ந்துதான் நின்றது
என் நாட்கள்தான் போலி
பித்தளையின் நாட்களோ
அச்சு அச்சு அசல் அசல்
வெற்றிபெற்ற
மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
கண்ணதாசா அடப்பாவி
கொல்றியடா
இந்தக் கல்வியால் பயனடைபவர்கள்
பெரு நிறுவனர்கள் மட்டுமே
நம்மை அவர்களுக்காக
உழைக்கத் தயாராக்குகிறார்கள்
வாழ்நாளெல்லாம்
நாம் அவர்களுக்காகவே உழைக்கிறோம்
சின்னச் சின்னப் பகுட்டுகளை
ஜென்ம வசதி என்று
வாய்கிழியச் சொல்கிறோம்
அறம் வலியுறுத்தும் கல்வி
நம்மிடம் இல்லை
இருந்தால் மனிதநேயம் பெருகும்
மனிதம் வாழும்
அறம் வலியுறுத்த எதுவந்தாலும்
அதை அப்படியே குறைகூறித்
தூக்கி எறிந்துவிடுகிறோம்
தூக்கி எறிந்தால் மட்டுமே
நாம் பகுத்தறிவாளர்கள் என்றுவேறு
சொல்லிக்கொள்கிறோம்
மூடநம்பிக்கைகளை அழித்துப்போடும்
கல்வி நம்மிடம் இல்லை
எது அறிவு என்று சொல்லித்தரும்
கல்வி நம்மிடம் இல்லை
எது உண்மையான வாழ்க்கை என்று
வரையறுக்கும் கல்வி நம்மிடம் இல்லை
எல்.கே.ஜி க்குக் கதறிக்கொண்டுபோகும்
பிள்ளையைத் தயார் படுத்தி
படுத்தி எடுத்து அனுப்பிவைக்கும்
பெற்றோர்களின் கண்களில் மிளர்வது
டை கட்டிய உத்தியோகம் மட்டுமே
டாக்டராவதைவிட
மனிதனாவது முக்கியம்
எஞ்சினியராவதைவிட
நல்லிணக்கம் பயில்வது முக்கியம்
வக்கீலாவதைவிட
வன்முறையற்றவனாவது முக்கியம்
கணிப்பொறியாளனாவதைவிட
சக உயிர் நேசிப்பவனாவது முக்கியம்
கலெக்டராவதைவிட
ஊழலற்றவனாவது முக்கியம்
கல்வியே உனக்குக்
கல்வி கற்றுத் தரப்போகும்
கல்வி எப்போது வரப் போகிறது
வாழ்க்கைப் பெருந்தீவில்
அதிரகசிய மறைபொருள் 
மந்திரமென்று எதுவுமே இல்லை

சுவாரசியமான ஓர் உயிர்
கிசுகிசுப்புத் தூரத்திலேயே
இணக்கமாய் உன்னோடு 
இணைந்திருந்தால்

வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது? அகலமாவது?

அவை அனைத்துக்கும்
ஆழ்கடல் நங்கூரமாய்
ஓர் இரும்பு முற்றுப்புள்ளி
அகற்றமுடியாததாய்
இறக்கப்பட்டிருக்கும்
நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும்
கோடிப் பிறப்புகள் 
குழுமிப் பூத்திருக்கும்

வேறொரு மாய மந்திர 
தேவ தத்துவதும் 
இல்லை இந்த வாழ்க்கையில்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிரி மகிழ் பூரித்துப்போ

உன்
பிணத்தின் முன்னின்று
அழப்போவது எத்தனை பேர்
என்றெண்ணி
இன்றே வருந்துவது
மரணத்திற்கு
நிகர்

இன்று இப்பொழுது
உன்னோடு சிரிப்பவர்களும்
உன்னைச் 
சிரிக்க வைப்பவர்களும்
போலியானவர்களாய் 
இருப்பினுங்கூட
அதுதான் பிறப்புக்கு 
நிகர்

சிரி
மகிழ்
பூரித்துப்போ

எவனும் உன் மரணத்தில்
உனக்காக 
ஒரு சொட்டுக் கண்ணீர்விட்டு
அழத் தேவையில்லை
அதுவும் 
இன்று உன்னைக்
கதறக் கதற அழவைத்துவிட்டு

அன்று
அறியாமையில்
ஆயிரம் ஆயிரம் சிரிப்பு
இன்று
அறிய அறிய
அழுகை ஒன்றே அவதரிப்பு

அந்த
அரைகுறை அறிவை
பூரண அறிவாக்கு
அழாதே எழு

சிரி
மகிழ்
பூரித்துப்போ
Whenever I chat with anyone else
I feel like I am not chatting through my own language
Whenever I laugh with anyone else
I feel like I am not laughing through my own heart
Please don't ever give myself
Back to me
Though these seems to me so funny
I like them so much

Love you forever
அதேதான் என் அன்பே
உன் குரலில் நான் கரைகிறேன்
உன் குழலில் நான் கரைகிறேன்
உன் விழியில் நான் கரைகிறேன் 
உன் மொழியில் நான் கரைகிறேன்
உன் விரலில் நான் கரைகிறேன்
உன் வளைவில் நான் கரைகிறேன்
உன் இதழில் நான் கரைகிறேன்
உன் தமிழில் நான் கரைகிறேன்
உன் கழுத்தில் நான் கரைகிறேன்
உன் கவியில் நான் கரைகிறேன்
உன் அழகில் நான் கரைகிறேன்
உன் அணைவில் நான் கரைகிறேன்
இன்னும் நான் கரைகிறேன்
உன் எதிலும் நான் கரைகிறேன்
ஆயினும் என் அன்பே
இத்தனை இத்தனையாய்
நான் இப்படி இப்படியாய்
கரைந்து கரைந்து
உருகும்போதும்
எப்படி எப்படித்தான் என் ஆயுள்
இப்படி இப்படியாய்க் கூடுகிறதோ
என்று
அந்தச் செப்படி வித்தை
அறியாதவனாய் அதிசயிக்கிறேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
மகிழ்ச்சி மொட்டுகள்
பூக்களாய் உடைந்து
மகரந்தம் சிந்தும்போது
தூக்கம் 
தானே வரும்

ஆனால்
தூங்க மனம் வருமா
என்று தெரியாது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
ஹார்மோனின் தவிப்புகள்
காதலுக்கு உகந்தவை
கவிதைகளுக்கும்
ஏனென்றே அறியாமல்

ஏனென்றே அறியாமல்
விழிப்பு வந்து
உறங்காமல் கிடக்கும்
இரவுகள் எதைச் சொல்கின்றன?

ஓடு ஓடென்று பணிச்சுமையில்
ஓடித்திரியும் உனக்கு
உனக்கே உனக்காக நேரத்தை
நான் இப்போது தருகிறேன்

என்னில் படுத்துக்கொண்டு
என் மடியின் அமைதியில்
உன்னை நீ யோசி
என்று சொல்கின்றனவா?

திரும்பிப்பார்
உன் பயணத்தில் நீ
எங்குமே செல்லவில்லை

நின்ற இடத்திலேயே நிற்கிறாய்
இதற்கு ஏன் நீ ஓடவேண்டும்
என்று கேட்கின்றனவா?

எதுவும் யாருக்கும் புரிவதில்லை
அவரவர் அவரவரின்
அழிச்சாட்டியங்களைக்
கடைவிரிக்கத்தான் வருகிறாரேயன்றி
நல்லன கொள்வதற்காக
ஒருவருமே வருவதில்லை

இதில் கூடும் தளமென்ன
உரைக்கும் கருத்தென்ன
என்று புரியவைக்கின்றனவா?

பசிக்குமுன் புசிக்கிறாய்
காண்டாமிருகங்களை விழுங்கிவிட்டு
இரவின் அமைதிப் படுக்கைக்குள் நுழைகிறாய்
பட்டினியாய் வயிற்றுக்கு
ஒருநாளும் ஓய்வு தருவதில்லை

சட்டென ஒருநாள் விழுந்துவிடப் போகிறாய்
எச்சரிக்கத்தான் எழுப்பிவிட்டேன்
என்று சொல்கின்றவா?

எழுந்ததும்
மீண்டும் கண்ணிறுக்கி முயன்று உறங்காமல்
ஏன் இப்படி நடு இரவிலும் உன் எண்ணங்கள்
தறிகெட்டு ஓடுகின்றன என்ற
விமரிசனமும் கரிசனமுமாய்
என்னுடம் உறங்கத் தவிக்கின்றனவா?
இது
முறையா சொல்

இப்படித்
தட்டுத் தடுமாற
விட்டுவிட்டுச்
சட்டென
விடைபெறுவது
தேவ தேவதைகள் சாட்சியாக
சரியா சொல்

உனக்காக
ஏங்கிக் காத்திருந்த
நடுக்கப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உனக்காக
உறக்கம் துறந்துத் தவித்திருந்த
இரவுப் பொழுதுகள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

உன்
கதகதப்புச் சுகம்பெறக்
கடுந்தவக் கோலங்கள்தாம்
எத்தனை எத்தனை
சொல்

வந்தது
வந்ததாய் இல்லாமல்
மாயமாய்
மறைந்துபோகும் நிலை
துரோக இழிநிலையல்லவா
சொல்

பச்சைப்பசும் இலைகளும்
கண்ணீர் கேட்டுப்
பரிதவித்து உதிர்கின்றன
சினங்கொண்டு சிவக்கின்றன

இத்துயர் காணும் நெஞ்சின்றி
பறவைகளும் பரிதவித்து
நெடுவானம் பறக்கின்றன காண்

போதுமா போதுமா
கனடியக் கடுங்குளிரின்
கொடுந்துயரில் கிடந்துழலச்
சன்னமாய்ச் சபித்துவிட்டு

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

கோடையே கோடையே
கனடியப் பசும்பொன்னெழிற்
கோடையே

இப்படி நீ மட்டும் தப்பிப் பிழைத்து
விடைபெறுவது நியாயமா
சொல்

நினைத்துப் பார்க்கிறேன் - என் பிறந்தநாளுக்காக - 2005 08 10

** பிறந்தநாள்.... பி..ற..ந்..த..நா..ள்.. **
புகாரி
டொராண்டோ, கனடா
பிறந்த தேதி: ஆகஸ்ட் 10
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com
இதோ, அன்புடன் சார்பில், அன்புடன் அன்பர் காந்தி ஜெகநாதனின் வாழ்த்து மடலும், நம் புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதையும், புகாரியின் நெருங்கிய நண்பரான கவிஞர் சேவியரின் கவிதையும்! வாழ்த்து முத்துக்கள் தந்த மூவருக்கும் என் நன்றிகள்!
* * * * *
பிறந்த நாள் வாழ்த்து
~~~~~~~~~~~~~~~~~~
இதயங்களை 'அன்பால்' இணையத்தில் இணைத்த புகாரி அவர்களுக்கு,
உதயமாகும் இப்பிறந்தநாளில் வாழ்த்து அனுப்பவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காண்பதற்கு மட்டும் அன்பான தோற்றமன்று,
பேச்சிலும், செயலிலும் அன்பைக் காட்டுவதில்
புகாரிக்கு நிகர், புகாரியேதான்!
வீண் வர்ணஜாலங்களை எல்லாம் காணமுடியாது
ஆனால், நகைச்சுவை உணர்வு இழையோடும்
அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்
ஒவ்வோரு நொடிப் பொழுதும்!
"தமிழை மறப்பதோ தமிழா..?" - புகாரி
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப்
போனவனன்றோ?
........
வா தமிழா...
நல்ல தமிழில் நாம்
நாளெல்லம் பேசுவோம் வா...
தமிழை நேசிக்கும்
தமிழை சுவாசிக்கும்
தஞ்சைத் தமிழனை
வாழ்த்த வார்த்தையின்றி
அன்புடன் சார்பாக நம் அனைவரின் வாழ்த்துக்களையும்
அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
~காந்தி ஜெகநாதன்~
* * * * *
புலவர் இரவா-கபிலன் அவர்களின் கவிதை:
                          வாழ்த்துகிறேன்!
                                              --- இரவா-கபிலன்

           கவிதையிலே மனமெழுதி
                           காயப் படுத்துவான்! - புகாரி,
                           காலை மாலை வேளைகளில்
                           கனவை உடுத்துவான்!
           புவியினிலே நிலவுபோன்ற
                           பொன்னு மேனிதான்! - புகாரி,
                           போகும் வழி காதல் மொழி
                           துள்ளும் கூனிதான்!
           கூவுகின்ற குயிலுபோல
                           குரலும் இனிமைதான்! - புகாரி,
                           குண்டுமேனி வண்டிபோல
                           நடையும் ஒயிலுதான்!
           காவிகட்டும் ஞானிபோன்று
                           கண்ணின் ஒளியிலே - புகாரி,
                           காட்டுகின்ற நயனமெலாம்
                           கவிதை மொழியில்தான்!

           இரவினிலே ஒளிருகின்ற
                           மின்னல் கவிதைகள் - புகாரி,
                           இதயம் மீறும் சொற்குவிப்பில்
                           மனதுள் திவலைகள்!
           அரகரவோ கரகரவோ
                           அவனுக் கில்லையே! - புகாரி,
                           ஆற்ற்ங் கரை மேட்டுக் குடி
                           மணக்கும் முல்லையே!
           பெருகிவரும் அலைவடிவாய்
                           அன்பின் வடிவுதான்! - புகாரி,
                           பேச்சுக் கலை கற்றதெலாம்
                           மூச்சு வடிவுதான்!
           கூரையிலா வானத்திலே
                           ஊரைக் கூட்டுவான்! - புகாரி,
                           கொட்டமிடும் கொட்டகையில்
                           சட்டம் இயற்றுவான்!

           கணினியிலே புகுந்துகொண்ட
                           ஒரத்த நாட்டனும் - பெற்ற
                           கல்வியெலாம் தமிழ்நிலத்தில்
                           காட்சிப் படுத்துவான்!
           பணிவுடைய புகாஅரியைப்
                           பற்றும் வயதுதான் - அவன்
                           பள்ளியிடம் தமிழகத்தின்
                           துள்ளும் உறவுதான்!
           வணிகமிலா வார்த்தைகளில்
                           வாழும் வாழ்வுதான் - புகாரி,
                           வாழ்க்கையிலே பெறற்கரிய
                           பேரும் புகழுந்தான்!
           அணியணியாய் வரிசைபெற
                           வாழ்த்து கூறுவேன்! - புகாரி,
                           ஆண்டுபல வாழ்ந்திருக்க
                           மீண்டும் கூடுவேன்!
* * * * *
கவிஞர் சேவியரின் கவிதை:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நேசக் கோட்டைக்குப்
பரவசப் படிக்கட்டுகளில்
பாதை அமைத்திருக்கும்
இனிய புகாரி,
என்ன சொல்லி வாழ்த்துவேன்.
கலையாத
தமிழ் மூட்டைகளை
பாலைவன தேசத்தில்
அலைந்து திரிகையிலும்
சுகமெனச் சுமந்ததையா ?
கனடாவின்
அவசர வீதிகளிலும்
சிந்தாமல் சிதறாமல்
தளும்பத் தளும்ப
கவிதை சுமந்ததையா ?
காரோட்டும் நேரத்திலும்
தேரோட்டப் போய்விடுமே
அந்த
நீரோட்ட நெஞ்சையா ?
இல்லை,
யார்வீட்டுப் பூ பூப்பினும்
பாராட்டப் போய்விடும்
உனது
பார் போற்றும் குணத்தையா ?
எதைச் சொல்லினும்,
சொன்னது கையளவு
சொல்லாதது உலகளவென
எனக்குள்
மனசு அணை உடைக்கிறது.
நேசம் கரை கடக்கிறது.
உனது கவிதைகளில்
கலந்து போவேன்.
ஆயினும்
கரைந்து போவது
உன் மெல்லிய மனசில் தான்.
உன் கவிதை
கனடாக் கடலிலும்
அமிர்தம் கடைந்தெடுக்கும்.
உன் நேசமோ
உடலைக் குடைந்து
உயிரின் சொடுக்கெடுக்கும்.
அதெப்படி புகாரி
உங்களால்
கனடாவில் கால்வைத்துக் கொண்டே
இதயம் நீட்டி
இந்தியா தொட முடிகிறது.
தோளில் ஆங்கிலத்தையும்
மனசில் தமிழையும்
தொய்வில்லாமல்
தூக்க முடிகிறது.
எனில்
பழமொழி ஒன்று
செத்ததாகிறதே
ஒரு உறைக்குள் இரண்டு கத்தி
சாத்தியமாகிறதே.
அதெல்லாம் போகட்டும்
மில்லியன் டாலர் கேள்வி
மனசுக்குள் முட்டுகிறது.
கேட்கலாமா என்றால்
நாவு
உள்நாக்கில் ஒட்டுகிறது.
கேட்டு விடுகிறேன்.
அதெப்படி உங்களால் மட்டும்
ஒரு கையால் காதலை வரையும்
அதே நேரத்தில்
இன்னொரு கையால்
போர்க்களத்தையும் புரட்ட முடிகிறது ?
அதெப்படி
உங்கள் தோட்டத்தில்
மட்டும்,
காய்ந்து விடாத கவிதைகள்
காய்த்துத் தொங்குகின்றன.
அதெப்படி
உங்கள் கடிகாரம் மட்டும்
கவிதைகளை
அசைபோடும் ஆர்வத்தில்
அசையாமல் நிற்கிறதா ?
வண்ணத்துப் பூச்சியின்
மேல் அமர்ந்த
மெல்லிய மல்லிகையாய்
மிதக்கிறது உன் மனசு.
ஆனாலும் அதற்குள்
போக்ரானும்
உடைத்து விட முடியாத
உறுதியான மனது.
பனித்துளிக்குள் இளைப்பாறும்
சிறு
குளிர்த்துண்டு போல
உன் நேசத்தின் துடிப்பு.
வெளிக்காட்டினாலோ
சீனச் சுவராலும்
சிறைப்பிடிக்க முடியாத
பெருங்கடலின் வெடிப்பு.
கவிதை
உன்னை எனக்கு
அறிமுகப் படுத்திய
அடையாள அட்டை.
இப்போது
நாம் சந்தித்துக் கொள்ள
அடையாள அட்டைகள்
தேவைப்படுவதில்லை.
சந்தப் புலிக்கு
சந்தத்தில் கவியெழுதையில்
வந்த கிலிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
சந்தத்திலேயே
வாழ்த்துகிறேன்.
புன்னகை இதழ்களில் பூநீட்டும் - உன்
இருவிழி திருவிழாத் தேரோட்டம்.
உயிருக்குள் நேசத்தின் நீரூற்றும் - உன்
இதயத்தை ஊரே பாராட்டும்.
பிறப்பின் நாளது கொண்டாட்டம் - உன்
சிறப்பினை மனமது கொண்டாடும்.
இன்றைய தினத்துப் பூபாளம் - அது
என்றும் நின்றே ஆளட்டும்.
உள்ளில் கள்ளம் கொள்ளாமல் - உன்
சொல்லில் கபடம் இல்லாமல்
நெஞ்சில் வஞ்சம் எஞ்சாமல் - நீ
வாழ்வாய் என்றும் அஞ்சாமல்.
வாழ்த்துக்களுடன்
சேவியர்
* * * * *
புகாரிக்கு வாழ்த்தனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சல் முகவரியில் அவரைத் தொடர்பு கொள்ளவும்:
buh...@gmail.com


நண்பர்கள் இல்லா நேரங்களில்
தனிமையின் சோகத்தில் தவிக்கும் நேரங்களில்
அன்புடன்தான் ஆறுதலாய்
ஆன்மாவுக்குள் அமிர்தாஞ்சன் தடவுகிறது
என்னை
இணைத்ததற்காக வாழ்த்துகிறேன்
என்
வாழ்த்துக்களையும் இணைக்கிறேன்

பத்தில் பிறந்த சொத்தே!
இணையம் தாண்டி
இதயம் இணைத்தவனே
கன்னித்தமிழை
கனடாவுக்கு கடத்தியவனே
உனக்கு என்
பிறந்தநாள் வாழ்த்து
புகாரியே!
ஓரு

பூ காரியின்
கூடை மணம்போல
உன் நாவில்
கவிதை மணக்கட்டும்
தவறாக நினைக்கவேண்டாம்
கவிதைக்கு
ஒருமைதான் பெருமை
ஒன்று தெரியுமா?
நானும் ஞானி
நீயும் ஞானி
ஆம்
நான் பெயரில்
நீ கவிதையில்

குழுமம் அமைத்து
குடும்பம் கொடுத்தாய்
இந்தக்
குடும்பக் குழுமம்
ஒருநாள்
ஒன்றாய் சந்திக்கும் நாளுக்காக
அமெரிக்க விசாவிற்காக
வாசலில் காத்திருக்கும்
மாணவர்களைப்போல
ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
நம் நட்பு
காதலும்- கண்ணீரும் போல
என்றும்
பிரியாமல் இருக்கட்டும்

           இதயம் நெகிழ்வுடன்

             ரசிகவ் ஞானியார்


(அன்பர்களே, புகாரியின் பிறந்தநாளுக்குக் கவிஞர் சேவியரிடமிருந்து இன்று
வந்த இன்னொரு வாழ்த்துக் கவிதை...)
.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தஞ்சம் என்பது தமிழில் - உந்தன்
நெஞ்சும் நேசத் தழலில்
விஞ்சும் சந்தம் சிந்தும் - உந்தன்
கொஞ்சும் தமிழின் நிழலில்.
அஞ்சும் என்ணம் என்றும் - உன்னில்
பிஞ்சும் இன்றிப் போகும்
எஞ்சும் மொழியும் கூடும் - உந்தன்
துஞ்சும் விழியும் பாடும்.
மிஞ்சும் நேசம் நோக்கின் - சர்ப்ப
நஞ்சும் தேனாய் மாறும்
பஞ்சும் பளுவாய் மாறும் - அக்கினி
குஞ்சும் இவனுள் தஞ்சம்
சேவியர்

16 இதற்கும் புன்னகைதானா



உலகத்தையே தன் அகிம்சையால் வென்றெடுத்தார் அண்ணல் காந்தி
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது


*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்

*

இதற்கும் புன்னகைதானா?

*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும்
பிறவிகள் உண்டாமே

உனக்கொரு
பிறவியில்லையா

தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல்
போய்விட்டன

கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும்
பிறவிகளெடுத்து விட்டனர்

உனக்கு மட்டும்
பிறவியே இல்லையா

அண்ணலே
இன்று
என்னுடைய மனுவையும்
கேள்

நீ
பிறவி எடுக்காதே

கோட்சேக்களுக்கே சொந்தமாகிவிட்ட
இந்த மயாணத்தில்
நீ ஜெனித்ததுமே
உன் ரோஜா இதயத்தைச்
சல்லடைக் கண்களாய்த்
துளைக்க
துப்பாக்கிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றன

என்ன
இதற்கும் புன்னகைதானா?