உயிரை உயிரில் கரைக்க
ஓடோடி வந்தேன்
அங்கே உயிரே இல்லை

பொழுதும் மாறும் மாய நெஞ்சோடு
போராடும் கானல் உயிரிடம்
உயிரின் வேர்களுக்கு
நீர் எப்படிக் கிடைக்கும்

என் சொர்க்கங்களில் சில
மறைத்து நிற்கும் உன் திரைகளைத்தாண்டி
என்னிடம் நீள்கின்றனவே
அவற்றை எப்படிப் பொசுக்கப் போகிறாய்

தடுப்புகளைக் கிழித்துக்கொண்டு
உன் விழிகள் பேசும்
மெய் மொழிகளை
எப்படி அழித்தெடுப்பாய்

ஒரு முறை விரிய ஒரு ஜென்மம் மலர
என்று எனக்கு ஜென்மங்களை அருளிய
இதழ்கள் இன்றும் பூப்பதை
எப்படிக் கிழித்தெறிவாய்

எழவும் மறுக்கும் கால்களோடும்
இயங்க வெறுக்கும் இதயத்தோடும்
நான் வரவில்லை நீ போ என்று
கைக்குழந்தையாய்க்
கால்கைகளை உதைத்துக்கொண்டு
ஓங்கி அழும் உயிரோடும்
உன்னைவிட்டு விடை பெற்றேன்

ஆனாலும்
சொர்க்கமும் நரகமும் கட்டிப்புறளும்
இந்த விளையாட்டைத்தானே
இப்போதும் நான் விரும்புகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****
82

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்

மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது
இதயம்

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டும்
கனமாய்க் கனக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அன்புடன் புகாரி
81

நான் உயிருக்குயிராய்க்
காதலிக்கும் உன்னிடம் கேட்டேன்
ஒரு நாள்கூட நீ என்னைக்
காதலித்ததில்லையா
என்று

நீ சொன்னாய்
யோவ், ஒரு நாள்கூட
நான் உன்னைக்
காதலிக்காமல் இருந்ததில்லையா
என்று

காத்திருந்த கண்ணீர்
சட்டென்று இமைக்கரை ஏறி
எரிமலைக் குழம்பாய்ப் புரள்கிறது

சரி போடீ
உன்னிடம் பேசி
ஒரு பிரயோசனனும் இல்லை
என்று அழுகிறேன் நான்

என்னை மன்னிச்சிடுய்யா
என்று கூறி
என் உயிர்த் தோட்டம்
கடந்து
பறந்து
போயே போய்விடுகிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்