சாதுர்யமாக விளையாடுகிறோம்
என்கிற பெருமையில்
அன்பான அன்பைக்
கொன்று புதைக்கிறார்கள்
சில அறிவாளிகள்

அன்புடன் புகாரி
முதியோர் இல்லம் நோக்கித்
தானே நடையைக் கட்டுபவரே
நாலும் அறிந்த முதியவர்

அன்புடன் புகாரி
எல்லாமே
தொடக்கப்புள்ளிதான்
முற்றுப்புள்ளி என்று
ஒரு புள்ளியே கிடையாது

அன்புடன் புகாரி

நீ வரும்போது

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

நீ என்னைக்
கொடுநெருப்பில்
தள்ளிவிட்டுக்
கண்டுகொள்ளாமல்
சென்றிருக்கிறாய்

ஆமாம்

நீ என் மீது
திராவகத்தைக் கொட்டிவிட்டு
திரும்பிப் பார்க்காமல்
ஓடியிருக்கிறாய்

உண்மைதான்

நீ என்னை
அனாதையாய் அறிவித்து
குப்பைத் தொட்டியில்
கொட்டிவிட்டுச்
சென்றிருக்கிறாய்

ஆனால்
என் செம்பவளமே

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

வா...

இன்றா?
நீ என்றோ
என் நெஞ்ச நதிக்குள்
நீராய் வந்தவன் தானே

நீ
வராமல் போயிருந்தால்
என் மனஆறு
வெறும்
சுடுமணற் கூடுதானே

நீ
என்
உற்சாக
உயிரல்லவா

நீ
என்
நிழலற்ற
நானல்லவா

வா...

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

ஏன்
எப்படி
எதற்காக

உன்மீதான
என்
உறவின் உணர்வை
நான்
ஒரு வார்த்தையில்
சொல்வதானால்
அப்படி
ஒரு
வார்த்தையே
உலக மொழிகள்
எதிலும்
இல்லவே இல்லை
என்பேன்

ஏன்
எப்படி
எதற்காக

நீ
வெட்டித் தின்று
துப்பிய சக்கையாய்
நான்
கிடந்தாலும்
ஒரு கோகினூர்
வைரமாய்
முத்துக்களால் அலங்கரித்தத்
தங்கத் தட்டில்
நான்
கிடப்பதாய்ப்
பெருமை கொள்வேன்

ஏன்
எப்படி
எதற்காக

கேட்டா
நான் உன்னைப்
பெற்றேன்

பெற்றுத்தானே
நானுன்னைக்
கேட்டேன்

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

எப்போது வருவாய்

வா....
வா....

நான் காத்திருக்கிறேன்

வா....
வா....

நீ வரும்போது
நானுன்னை
அள்ளியணைத்துப்
பூரித்து மகிழவேண்டும்

அன்புடன் புகாரி