நோயாளியா ஆம்புலன்சா?




இந்த முறை தமிழ்நாடு சென்றிருந்த சமயம் சில ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர உதவி வாகனங்களைக் கண்டேன்.


மிகவும் பலகீனமான வாகங்கள். உயிருக்குப் போராடும் நோயாளியால் அந்த வாகனங்களில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கமுடியுமா என்ற கேள்வியே எழுந்தது.

இந்த வாகனமே இப்படி ஊசலாடும்போது உள்ளே உயிர் ஊசலாடும் நோயாளியின் கதி எப்படி இருக்கும் என்று எழும் கவலையைத் தடுக்க முடியவில்லை.

விழுந்து எழுந்து ஆட்டோவைப் போல ஓடும் அந்த வாகனங்களும் இல்லை என்றால் அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேறு வசதிகளும் இல்லை ஏழைகளுக்கு என்ற உண்மையும் தெரியவந்தது.

சில மத அமைப்புகள் இப்படியான வாகனங்களை இலவசமாகச் சேவையில் வைத்திருப்பது பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது.

அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் இந்த வாகனங்கள் துரிதமாய்ச் செல்ல சாலையில் பலரும் ஒதுங்கி வழிதருவதில்லை. ஆனாலும் சிலர் சரி பரவாயில்லை ஒதுங்குவோமே என்று ஒதுங்குவதைக் காண்பதும் ஆறுதலாய் இருந்தது.

ஏழை பணக்காரர் இவர்களுக்கு இடைப்பட்ட தூரம் பூமிக்கும் நிலாவிற்கும் இருக்கும் தூரத்தைப் போல நீண்டு இருப்பது இந்தியாவின் அரசியல் அமைப்பால்தான் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த அரசியல் அமைப்பின் மூல காரணம் நிச்சயமாக தனிமனித ஒழுக்கம்தான்.

எப்படியோ ஏதோ ஒரு வாகனம் அவசர அவசரமாய் ஓர் ஏழையை அழைத்துக்கொண்டு எங்கோ ஒரு மருத்துவ மனைக்கு விரைகிறது இன்றெல்லாம். இதுவும் இல்லாமல் இருந்தோமே நேற்றெல்லாம் என்பதும் உண்மைதானே?

அத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம் ஊர்.

இந்தமுறை நான்கு மாதங்கள் நானே கார் ஓட்டிச் சென்றேன் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும். அந்த தைரியம் முன்பெல்லாம் எனக்கு வந்தது கிடையாது. பத்தாண்டுகளுக்குமுன் அடுத்தடுத்த ஊர்களுக்கு மட்டுமே ஓட்டிச் சென்றுகொண்டிருந்தேன். இம்முறை தமிழ்நாடு கேரளா இரண்டு மாநிலங்களையும் சுற்றி வந்தேன்.

ஊருக்கு வெளியே சாலைகள் நன்றாகவே இருக்கின்றன. ஊருக்குள் வாகனம் ஓட்டுவதை எழுதத் தொடங்கினால் அது பெரும் துயரம்.

ஒலி எழுப்பாமல் வழி கிடைக்கவே கிடைக்காது.

அப்படி ஒலி எழுப்பினாலும், ஆடு ஒதுங்குகிறது மாடு ஒதுங்குகிறது நாயும் ஒதுங்குகிறது மனிதர்கள் மட்டும் ஒதுங்கவே மாட்டேன் என்கிறார்கள்.

என் வாகனத்தில் இருபுறக் கண்ணாடிகள் எவரை இடித்துத் தள்ளுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டேதான் இருந்தது.

கூட்ட நெறிசலில் என் வாகனத்திற்கும் ஒரு பேருந்துக்கும் இடையில் மிக மெல்லிய கோடாய் மட்டுமே ஒரு சந்து இருந்தது, பேருந்தில் உராசிவிடுவேனோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், சடால் என்று நான்கு இருசக்கர வாகனங்கள் அந்தச் சந்திச் சீறிப் பாய்ந்து சென்று பேருந்துக்கு முன்சென்று பேருந்தை வழிமறித்துக்கொண்டு எதிரி முகாம் சிப்பாய்களைப் போல நின்றன.

அடடா, இப்படித்தான் கற்பனைகளை விஞ்சிய, ஹாலிவுட் திரைப்படங்களின் சாகசங்களை விஞ்சிய காட்சிகளை வாகனச் சாலைகளில் காணலாம் நம் ஊரில்.

சாலைகள் எங்கும் ஒரே சத்தம். காதைப் பிளக்கும். பெரும்பாலும் எந்த வாகனத்திலும் ஆட்டோமேடிக் கியர் இல்லை. இரண்டு காலும் இரண்டு கையும் எப்போதும் முழு பயன்பாட்டில் இருக்கவேண்டும். கூடவே கூர்ந்து பார்க்கும் கண்களும் சத்தத்தைக் கேட்கும் செவிகளும் என்று உடலின் அத்தனைப் புலன்களும் மிக நன்றாக இயங்க வேண்டும். இல்லாவிட்டால் நம் ஊரில் வாகனம் ஓட்டவே முடியாது.

சில ஊர்களில் சில சந்துக்களில் நுழைந்துவிட்டு வெளியேற வழியில்லாமல் நான் பட்ட பாடு பெரும்பாடு.

ஜிபிஎஸ் என்னும் வழிகாட்டியும் ஊரில் படு சொதப்பல். அங்கங்கே நிறுத்தி வழிகேட்டுச் செல்வதே உத்தமம். கனடாவைப் போல ஜிபிஎஸ் காட்டும் வழியில் சென்றால் போகும் இடம் வரவே வராது. எங்காவது ஒரு இடத்தில் சென்று முட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.

இப்படியாய் ஏராளமான அனுபவங்கள். ஆனாலும் ஊர் ஊராய்ச் சுற்றியது மறக்கமுடியாத நினைவுகள்.

அன்புடன் புகாரி

குற்றால அருவிலியிலே குளிப்பதுபோல் இருக்குமா?

குற்றாலம் என்றாலே குதூகலம் தான். எத்தனை முறை சென்றாலும் அலுப்பதே இல்லை. தமிழ் நாட்டின் சொர்க்கம் அது.

குற்றாலம் என்றால் என்னென்ன நினைவுக்கு வரும்?

கொட்டும் நீர் இத்தனை குளிராய் இருந்தும் நடு இரவிலும் சென்று குளிக்கும் ஆர்வம் எப்படி வருகிறது? இந்தக் குரங்குகளுக்கும் அருவிக்கும் என்ன பந்தம்? எங்கெல்லாம் அருவிகள் உண்டோ அங்கெல்லாம் ஏராளமான குரங்குகளைக் காணலாம். கையில் இருப்பதை வந்து தட்டிப் பறித்துப் போகும் தைரியத்தை வளர்த்துக்கொண்டவை நம்மூர் குரங்குகள்.

அலுவலகம், வீட்டுத் தொல்லை எல்லாம் விட்டு ஹாயாக சில நாட்கள் இப்படி ஓர் நிம்மதியைத் தரும் குற்றாலத்தை எப்படித்தான் பாராட்டுவது? நயாகராவின் முன் நின்றால் சிலிர்ப்புதான், ஆனால் தலையில் கெட்டிமேளம் கொட்டக் குளிக்கும் சுகம் கிடைக்குமா? குற்றாலம் வாருங்கள். நம்ம ஊரு நயாகராவே என்று நான் வடித்த குற்றாலக் கவிதை எப்போதும் என் நினைவுக்கு வருகிறது இங்கே வந்தால். அதற்கு குமுதம் எனக்குப் பரிசும் கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சி.

குற்றாலத்தில் குளியலை முடித்துவிட்டு வந்தால் அப்படி ஒரு பசி. அந்தப் பசியைத் தீர்த்துவைக்க ருசி மிகுந்த உணவுக்கும் பஞ்சமில்லை. சாலையோரத்தில் வண்டிகளில் வந்து விற்கப்படும் இட்லி தோசை முட்டை வகைகள் அனைத்திற்கும் ருசி அதிகம் விலை குறைவு. ஏங்கிக் கையேந்தும் முதியவர்களுக்கு கொஞ்சம் வாங்கிக்கொடுத்து உண்ணும் போது மனதின் மகிழ்ச்சி வான உச்சியில்.

ஒரு நாளைக்கு ஒரு நேரம் குளிக்கலாம் அது நம் வீட்டுக் குளியல் அறை. நாளெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் குளிக்கலாம் என்றால் அது குற்றாலம்தான். இப்போதெல்லாம் வெயில் கொடுமை அதிகமாகிவிட்டது தமிழ்நாட்டில். ஆகையினாலேயே குற்றாலம் மேலும் சொர்க்கம் ஆகிவிட்டது.

முன்பு போல இல்லை, பெண்கள் நிம்மதியாகக் குளிக்க வசதிகள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. எப்போதுமே காவல்துறையினரின் பாதுகாப்பும் இருக்கிறது.  தங்கும் இடம் தேடுவது இன்னொரு அலாதி அலைச்சல். கூட்டம் அதிகரித்த நாட்களில், எது கிடைத்தலும் சரி என்று மிக எளிமையாகத் தங்குவது குற்றாலத்தில்தான் என்றே சொல்லலாம்

இந்த நீர் தலையில் நாளெல்லாம் பட்டாலும் தடுமல் பிடிப்பதில்லை காய்ச்சல் வருவதில்லை. இருக்கும் காய்ச்சலும் காணாமல் போகும் அதிசயம் நிகழும். மூலிகைக் குளியல் உடலுக்கு ஆரோக்கியம், மனதிற்கு ஆரோக்கியம், மனநலமற்றவர்களும் இங்கே குணமாகிறார்கள் என்கிறார்கள்.

சொந்தங்கள் எல்லோரையும் அள்ளிக்கொண்டு, ஒரு வாரம் குற்றாலத்தில் ஒதுங்கினால் சொந்த உறவுகள் நிச்சயம் பலப்படும். எல்லோரும் சிரித்த முகத்துடன் சண்டையே இல்லாமல் நாட்கள் கழியும். நாட்டுக்கோழி வறுவல் வறுக்க வறுக்கத் தீர்ந்துபோகும்.

ஒருவர் குளிக்க வந்தார். ரொம்பவே கூச்சசுபாவம் போலும். சட்டை வேட்டி எல்லாம் இட்டுக்கொண்டே குளிக்கவந்தார், சட்டென தலையை அருவியில் நிறுத்தி முதலில் குளிரிலிருந்து விடுபட்டார். பின்னர் சட்டையை மெல்லக் கழட்டினார், பின் வேட்டையையும் அவிழ்த்தார். டவுசர் பாண்டியாய் ஆனார். அவர் ஆனந்தத்தை அருவி நீர் தலையில் கொட்டிப் பாராட்டியது.

மனைவி குழந்தைகளை பெண்கள் பக்கம் அனுப்பிவிட்டு, இந்தப் பக்கம் நின்று குளிக்கும்போது இடையிடையே ஓடிவந்து மனைவி பிள்ளைகளைக் கையாட்டி சந்தோசங்களைப் பகிர்ந்துகொண்டு, இன்னும் குளிக்கலாம் என்ற முடிவை சைகைகளால் காட்டிவிட்டு மீண்டும் வந்து குளிப்பது அலாதி சுகம்தான்.

அட இப்படியே எழுதிக்கொண்டே போகலாம், குற்றால அனுபவங்கள் தீராது. குற்றாலும் ஒரு கொடை. வேறெங்கும் கிடைக்காத அற்புத ராஜகொடை.

குமுதத்தில் வந்த என் குற்றாலம் கவிதை கீழே:

குபுக் குபுக் குற்றாலம்

நம்ம ஊரு நயாகராவே

பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா

கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன் சிலீர்ச் சந்தங்களா

யார் நீ
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா

அல்லது
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா

அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்

நீ
கொட்டுவதோ கோபமாய்
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண
என் காதலியின் ஊடலிலா

– அன்புடன் புகாரி, கனடா

மதங்களால் என்ன பயன்

கேள்வி:

இறைவன் உண்டு என்று மனிதன் தோன்றியதிலிருந்து சொல்லி கொண்டு இருக்கிறோம். உலகம் அமைதிப்பூங்காவாகாவா மாறியுள்ளது? ஆனால், அதே இறைவன் பெயரை சொல்லித்தான் காலம், காலமாக உலகம் அமைதியே இல்லாப்பூங்காவாக மாறிவிட்டது. அது உண்மைதானே!

பதில்:

இறைவன் உண்டு என்றாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை இறைவன் இல்லை என்று சொன்னாலும் உலகம் அமைதிப் பூங்காவாக இல்லை

இதுதானே நீங்கள் சொல்வது?

உலகம் அமைதிப் பூங்காவாக மலர்வதற்கான முன்னெடுப்புகள் பல

1. தனிமனித ஒழுக்கம். அதை யார் சொல்லித் தருவது? பெற்றோர்கள் என்று கொள்ளலாம். அந்தப் பெற்றோருக்கே சொல்லித்தர ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது

2. தனிமனித ஒழுக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு முறையாக இருந்து தண்டனைகள் மூலம் குற்றத்தை நிறுத்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் பட்டுக்கோட்டை. சட்டம் ஒழுங்கு என்பது முழு சக்தி கிடையாது

3.அற நூல்கள் மனிதனைப் பண்படுத்தவேண்டும். அறநூலை ஏற்க ஓர் அச்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் இறைவன் மதம் எல்லாம் வருகிறன

இறுதியாக இப்படி முடிப்போம்:

மனிதர்கள் யாவரும் தனிமனித ஒழுக்கம் பேணி நடப்பவர்களாய் இருந்தால், சட்ட ஒழுங்கு தண்டனை என்று எதுவும் தேவையில்லை. அதைப் போலவே மதங்களும் தேவையில்லை.

சரி, இனி உங்களிடம் என் கேள்வி:

மனிதர்களின் தனிமனித ஒழுக்கத்திற்கு உங்களிடம் என்ன மருந்து இருகிறது. மனித வக்கிரங்களை எப்படி அழிப்பது? சூது, குற்றம், வஞ்சகம் போன்ற அனைத்தையும் எப்படி இல்லாமல் செய்வது?

கேள்வி:

கடுமையான சட்டதிட்டங்கள் மூலமாகத்தான் இதற்கு எடுத்துக்காட்டாக அரேபிய நாடுகள்.

பதில்:

கடுமையான சட்டங்களாலும் மனித வக்கிரங்களை ஒன்றுமே செய்யமுடியவில்லை.

கடுமையான தண்டனைகள் அவசியம் வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. பிறப்பிலிருந்தே அறம் போதிக்க ஓர் அமைப்பு வேண்டும். அதுதான் மனித வக்கிரத்தை மட்டுப் படுத்தும்.

கேள்வி:

உண்மையாக சொல்ல வேண்டுமெனில் தனிமனித ஒழுக்கத்திற்கு யாரிடமும் மருந்து இல்லையென்பது எனது கூற்று.

பதில்:

உண்மை. ஆனால் அந்தத் தனிமனித ஒழுக்கம் இனி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

சிறுவயதிலேயே இறைவன்மீது அச்சம் என்று தொடங்கி அறம் போதிக்கப்படுகிறது. பசுமரத்தாணியாய் நல்ல செயல்கள் மனிதில் பதியச் செய்யப்படுகிறது
இப்படி எந்த மதம் செய்யவில்லையோ அதை விமரிசியுங்கள்.

மதம் சொன்னதையே மாற்றிச் சொல்லும் கயமையிலிருந்து நம்மை நன் அறிவே காக்க வேண்டும்.

மதத்தால் மட்டுமே தனிமனித ஒழுக்கம் வந்துவிடாதுதான்.

ஆகையினால் தான் கடும் தண்டனைகள் என்று ஒன்று வருகிறது. அந்தத் தண்டனைகளைச் சரியாகத் தர நீதி, காவல் என்றெல்லாம் இருக்கிறது
இத்தனையையும் மீறி தனிமனித ஒழுக்கம் கெட்டுவருகிறது என்பதுதான் பலரும் வைக்கும் குற்றச் சாட்டு.

ஆனால் இதனுள் ஒரு பெரும் உண்மை மறைந்திருக்கிறது.

இன்று உலகில் கெட்ட செய்திகள் மட்டுமே ஈசல்கள் போலப் பரவுகின்றன.

ஒரு மில்லியன் பேருந்துகள் ஒழுங்காகச் செல்கின்றன. விபத்துக்கு உள்ளான அந்த ஒரே ஒரு பேருந்துதான் உலகம் முழுவதும் தினம் தினம் செய்தியாக வருகின்றது.

ஒவ்வொருநாளும் நல்ல செய்திகளாய் மட்டுமே வெளியிடும்போதுதான் இளைய தலைமுறை அதை வாசித்து நாமும் நல்லவர்களாய் வாழவேண்டும் என்று விரும்பும்.

இங்கே செய்திகளும் அப்படி, திரைப்படங்களும் அப்படி, தொலைக்காட்சிகளும் அப்படி, ஊடகங்களே அப்படித்தான்.

ஒரு சாதாரணமாகவன் என்ன நினைக்கிறான். இதெல்லாம் (தவறுகள் எல்லாம்) பிழை இல்லை என்று நினைக்கிறான். எல்லோரும்தான் செய்கிறார்களே என்று சமாதானம் அடைகிறான்.

உலகம் உள்ளங்கையில் வந்த இந்த நாட்களில், நீங்கள் ஒரு நாளில் வாசிப்பது இந்த உலகம் முழுவதும் நடந்த அத்தனை கெட்ட செய்திகளையும் மட்டுமே?

அவை எத்தனை விழுக்காடு? மில்லியன் நல்லவை நடக்க ஒரே ஒரு கெட்டது. உண்மைதானே?

நாம் ஏன் மில்லியனுக்கு ஒன்று குறைவான நல்லவர்களை அதிகம் பேசமாட்டேன் என்கிறோம்.

அப்படிச் செய்தால், ஊடகம் காசு சம்பாதிக்க முடியாது?

ஊடகத்திற்கு தர்மம் வேண்டும். அதைத் தருவதுதான் நல்ல மதம், அதன் அற அறிவுரைகள்.

கேள்வி:

இப்பொழுது மதம் என்னதான் அறத்தை போதித்தாலும் அதை செயல் படுத்துபவர்கள் தங்களது மனசாட்சியை விற்றல்லவா நடக்கிறார்கள். இதில் எந்த மதம் போதித்து என்ன பயன்?


பதில்:

மனசாட்சியை மட்டும் விற்கவில்லை, தங்கள் மதத்தின்மீது கரியைப் பூசிவிட்டுத்தான் நடக்கிறார்கள். தங்கள் இறைவன் மீது கல்லெறிந்துவிட்டுத்தான் நடக்கிறார்கள்.

இதற்கான காரணம் என்ன என்பதுதான் என் சிந்தனை.

அறம் அழுத்தமாகப் போதிக்கப்படவில்லை

இறையச்சம் முழுமையாக இல்லை

இளவயதிலேயே பசுமரத்தாணியைப்போல அறம் பதிக்கப்படவில்லை

இங்கே மத உணர்வு என்றால் அற உணர்வு இல்லை. அது வெறும் பகை உணர்வாக மட்டுமே இருக்கிறது. ஒரு மதத்தவன் இன்னொரு மதத்தின் மீது காட்டும் துவேச உணர்வுதான் உயர்வான மத உணர்வு என்று காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சரியானதைச் சொல்லித்தராமல் இந்த சண்டையை ஊக்கப்படுத்தி நாட்டைச் சூரையாடிக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள், அரசியல், மற்றும் போலி மதத் தலைவர்கள்.

அன்புடன் புகாரி

இறை நம்பிக்கை இறை மறுப்பு மதம் அன்பு அறிவு அறம்

அறிவு வளரவேண்டும்.
வெறும் அறிவு மட்டும் வளர்ந்தால் வெறுப்புதான் வளரும்.
அறிவோடு அன்பும் வளரவேண்டும்.
அறிவும் அன்பும் மட்டும் போதாது, அது சாய்வுநிலைகளை உருவாக்கிவிடும்.
ஆகவே அறிவும் வேண்டும் அன்பும் வேண்டும் கூடவே அறமும் வேண்டும்.
இந்த மூன்றையும் சொல்லித்தரும் பல்கலைக்கழகங்களே மதங்கள்

அன்புடன் புகாரி

*
மனித நேய அழிவுகளைத் தடுப்பதற்காக வந்தவையே மதங்கள்.
அவற்றால் இயலாதது நாத்திகத்தால் இயலும் என்று நீங்கள் நம்புவது ஒருபட்சமானது.
இறைவன் இல்லை என்று சொன்னதுமே உலகம் அப்படியே அமைதிப் பூங்காவாய் மாறிவிடுமா?
இது வேடிக்கை இல்லையா?

அன்புடன் புகாரி

*
மனிதநேயம்தான் இறை மறுப்பாளர்களின் நோக்கம் என்கிறீர்கள். அதே மனிதநேயம்தான் இறை நம்பிக்கையாளர்களின் நோக்கமும் என்பதை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?
இல்லை என்றால் உங்கள் சிந்தனையில் பெரும் குறை உள்ளது என்றுதான் பொருள்.
”எல்லா மக்களும் அன்புடன் எல்லாம் பெற்று வாழவேண்டும்”
இதை நீங்கள் உங்கள் வழியில் முயலுங்கள். இறை நம்பிக்கையாளர்கள் அவர்கள் வழியில் முயலட்டும்.
இருவரும் முட்டிக்கொள்ள வேண்டுமா?
ஏன்?

அன்புடன் புகாரி

*
இறைவன் இருக்கிறான் என்பது ஒருவரின் நம்பிக்கை.
இறைவன் இல்லை என்பது இன்னொருவரின் நம்பிக்கை.
இரண்டுமே நம்பிக்கை என்பதால் அதில் ஏதும் பிழையில்லை.
ஆனால் ஒன்று இன்னொன்றின் மீது சொல்லாலோ செயலாலோ வன்முறையை அவிழ்த்துவிட்டால் அங்கே பெரும் பிழை இருக்கிறது.
அன்புடன் புகாரி

*

மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, மனித நேயத்தைக் காப்பதற்கான எந்த ஒரு நம்பிக்கையும் மில்லியன் பகுத்தறிவுத் தாக்குதல்களைக் காட்டிலும் உயர்வானது
அன்புடன் புகாரி