உன்
மூடக் கால்களுக்கும்
மிகக் கீழாய்
மூளையைப் புதைத்து
இரும்புப் பலகையும் இட்டு
மூடிக்கொண்டுவிட்டால்
மொக்கைக் கத்திகூட
உன்னை
அக்கக்காய் அரிந்து
வெங்காயம் கூட்டி
வதக்கி வறுத்து
வாயில்
இட்டுக்கொள்ளாதிருக்குமோ
என்
அன்புடன் இதயமே
வேறு
எதுவும் தர அல்ல
கவிதைகள்
தரவே
நீ
வந்திருக்கிறாய்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நிறைந்த விழி விரித்து
நிலவைப் பார்த்து
காதலிக்கிறேன்
உன்னை எப்போதும் என்று
உயிரின் உதடுகளும்
ஓசையெழுப்ப
சொல்லித் திரிகிறேன்

சட்டென்று
நிலவுக்கு இன்று
பேச்சு வந்துவிட்டால்?

என்னைப் பார்த்து
அது
பேசவும் தலைப்பட்டால்?

என்னதான் சொல்லும்
அந்த நிலா என்னிடம்?
 
 உலகுக்கே
  ஒளித்தேன் பொழிவதன்றோ
  என் வழமை

 பிதற்றிச் சரிவதோ
 உன் நிலைமை?

 என்னைத்
 தொடும் தூரத்தில்
  உன் விரல்கள் இல்லாதவரை
  பித்தனே நீ
  பிழைத்தாய் போ....


நிலா
இப்படியும் பேசுமா?
ஆச்சரியம்
என்னை ஆக்கிரமிக்க
 எண்ணச்சிறகுகள்
எனக்குள் படபடகின்றன

 உறங்கும்போதுமட்டுமல்ல
  இதயம் காணாததைக் கண்டு
  விழித்துக்கொள்ளும்போதும்
  கனாக்கள் பீறிடுகின்றன

 உறக்கக் கனவென்பது
  விழிக்கு உள் நிறையும்
  விருப்பச் செழிப்பு

 உறங்கா கனவென்பதோ
  விழிக்கு வெளியில்
 விரிந்து பரந்து
 விண்முட்டி நிறைந்து
  கொதிக்கும் உயிரழிப்பு

ஓ..
என்றால்
நான் நிலவிடம்
இனி என்னதான் சொல்வேன்?

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

வாசிப்பில் லயிப்பவர்கள்...

வாசிப்பில்
லயிப்பவர்கள்
மிதமாக
வாசிப்பவர்களைக்
கேவலமாக
ஏன் பேசுகிறார்கள்?

மனிதர்களை
அவர்களுக்காகவே
நேசிக்கத் தெரியாதவர்களின்
வாசிப்பு
அவர்களுக்கு
எதைத் தந்துவிடும்?

எழுத்து வாசிப்பு மட்டுமா
வாசிப்பு
இதய வாசிப்பு என்பது
அதனினும் பெரிதில்லையா?

வாழ்க்கையை
வாசிப்பவர்களைவிட
நூல் வாசிப்பவர்கள்
சிறந்தவர்களாகிவிட
முடியுமா என்ன?
இந்தப் பிறப்பில்

என்
மாமழைக்கும்
நனையாத
உன்
புற்கள்

என்
முகில்மடிகள்
மலடிகளானபின்
ஈரமில்லையா
உன்
நெஞ்சில்
என்கின்றன
மயான பூமி

நல்ல
உள்ளங்களின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக் கொள்ளும் 
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்


வாழ்க்கை வண்டி



இருட்டை
உடைத்தெறிந்து
எங்கிலும்
நிலைக்கப் பார்க்கிறது
வெளிச்சம்

வெளிச்சத்தை
உண்டு செரித்து
கருமையை
நிறைக்கப் பார்க்கிறது
இருட்டு

இத்தொடர்ப்
போராட்டங்களுக்குள்
மாய மயக்கத்தோடு
ஓடி முடிகிறது
வாழ்க்கை

பெண் புரியாத புதிர்



உலகம் போற்றும் 
கவிஞர் நீங்கள்
உங்களாலாவது 
புரிந்துகொள்ள முடிகிறதா 
பெண்ணின் மன ஆழத்தை
அவள் சிரிப்பின் அர்த்தங்களை

என்று

காதல் தவிப்பில்
காய்வதும்
காயும்முன் ஈரமாவதுமாய்
அலையடித்து
நிறம் ஒட்ட வழியற்ற
மணலாகிக் கிடக்கும்
இதயத்திடமிருந்து

ஒரு கேள்வி
வந்து முட்டியது
என்னை

பெண்ணின் மனதைத் 
தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான்

புரிந்துகொள்ளவே 

முடியாது என்று
பெண்ணின் மனதைத் 

தெளிவாகவே
புரிந்துகொண்டவன் 

நான் ;-)

என்று இதற்கு 

நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்

ஆனாலும் 

ஒரு வாழ்க்கைச் சுவாரசியத்தை 
உங்கள் முன் வைக்கிறேன்
பாருங்கள் என்றேன்

எந்த ஓர் அழகும்

அறியமுடியா அதிசயமாய்
இருக்கும் வரைதான் 

அழகு

மீண்டும் மீண்டும் 

காண வைக்கும் 
மந்திரம்

பெண்ணின் மனம் 

புரியாததல்ல
அது சட்டென்று புரிந்துவிடும்
ஆனால் புரிந்தது 

உறுதிப்படும் முன்
மெல்ல நிறமிழப்பதாய்த் 

தோன்றும்

என்றால் அவள்
அவளே அறியாத 

வற்றாப் புதிர்

ஏன்?

அப்படி அவள் 

இருக்கும்வரைதான்
அவள்மீது எவருக்கும்

சுவாரசியம் இருக்கும்

எல்லாம் 

பளிச் பளிச் என்று 
ஆகிவிட்டால்
சட்டெனப் 

புளித்துப் போகக்கூடும்

வானத்தை 

ஆயிரம் முறை பார்த்தாலும்
அது ஏதோ 

ஒரு செய்தியைப்
புதிதாய்ச் 

சொல்லிக்கொண்டே 
இருக்கும்

இந்தப் பிரபஞ்சத்தில்
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று
ஆகாயத்தைவிட வேறு உண்டா?

அந்த சுவாரசியம்தானே 

அதன்மீது
அடங்காத ஈர்ப்பை நமக்குள்
கட்டி வைத்திருக்கிறது

இப்படியும் பதில் சொல்லலாம்

ஓர் 

ஆணின் விழிகளில் 
ஆயிரம் ஆசைகள்


ஒரு பெண் மட்டும்
ஒற்றை ஆசையோடு 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆணின் தேவைகளில்
ஆயிரம் சறுக்கல்கள்
ஒரு பெண் மட்டும்
ஒற்றைத் தேவையோடு மட்டும்
உறைந்து போய் 

இருக்க வேண்டுமா?

ஓர் ஆண் எப்படியெல்லாம்
மாறித் தொலைந்து விடுகிறான்
இவனை இப்படி 

நம்புகிறோமே
ஏமாந்துவிடுவோமோ?

ஏமாந்தால் 

அவனுக்கு ஒன்றுமில்லை
நாமல்லவா 

கந்தல் துணியாகிவிடுவோம்
அப்படியல்லவா 

சமுதாயம் நம்மை
ஆக்கி வைத்திருக்கிறது 

என்று
ஒரு லட்சம் ஒரு கோடி 

சந்தேக எண்ணங்கள்
அவள் மனதில் 

ஊசலாடாதா?

ஆண் கெட்டால் 

ஒரு அத்தியாயம்தான்
பெண் கெட்டால் 

புத்தகமே போட்டுடுவாங்க
என்று நம் சமூகத்தில் ஒரு பெண்
உள்ளுக்குள் 

கதறியழாமல் இருக்க முடியுமா?

ஆக பெண் 

புதிராவது அவளாலா
அல்லது ஓர் ஆணாலா
அல்லது அவளை 

அப்படி ஆக்கிவைத்திருக்கும்
ஆண் படைத்த 

சமூகத்தாலா?
முரண்கள்

உலகப் புகழ்
மல்லிகைப்
புன்னகைகளுக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒரு கோடி ரகசியங்கள்

படைத்தவனையே
அடித்து நொறுக்கும்
வசீகர விழிகளில்
கிழிந்து வழிகின்றன
விழிநீர்ப் பேரருவிகள்
...
மென்மையிலும் மென்மை
உண்மையிலும் உண்மை
கருணையிலும் கருணை
கொண்ட இதயங்கள்
எவர்க்கும் தாங்கவியலா
வலிகளைத்
தாங்கிக் கிடக்கின்றன

இணையத்தில் 

என்னைக் கடந்த சில வரிகள்
என்னை இந்த
வரிகளாக்கிப் போயின