குறள் 0001


'அ' வென்ற
முதல் எழுத்தை முன்வைத்தே
மொழியின் எழுத்துக்கள் எல்லாம்

ஆண்டவன் என்ற
முதல்வனை முன்வைத்தே
உலகின் உயிர்கள் எல்லாம்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல் - 1 கடவுள் வாழ்த்து - குறள் 1

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 15, 2003

குறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை


உயிர் பறிக்கும் காலனைக்
கண்டிருக்கவே இல்லை
நான் முன்பெலாம்
இப்போதோ
மாபெரும் விழிகளோடு
படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று
கண்டுகொண்டேன்




பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1083

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்


பார்த்தேன் நான் அவளை
பதிலாகப்
பார்த்தாள் அவளும் என்னை
வெறுமனே
அவள் பார்த்தாலே
அந்தப் பார்வை
எனைக்
கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ
ஒரு படையையே
தன் விழிகளில் திரட்டி
என்னைப்
பார்த்துத் தொலைத்தாளே

*

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து



*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1082

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

மீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்

1. பாலிவுட் இல்லாவிட்டால் ஹிந்தி காலி. பாலிவுட்தான் ஹிந்தியை வளர்த்தெடுக்கிறது. ஹிந்தி இலக்கிய மொழியல்ல சினிமா மொழி!

2. ஹிந்தியில் வளமான இலக்கியங்கள் கிடையாது

3. குரங்குக் குட்டிகள் கொடியில் தொங்குவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டது (நன்றி கண்ணதாசன்)

4. ஹிந்தி கற்றுக்கொள்வது ஜலதோசத்துக்கு நல்ல மருந்து. ஹாங் ஹூங் என்று சலி சிந்துவதுபோலப் பேசிப்பேசி மூக்குத் துவாரத்தைச் சுத்தம் செய்கிறது ஹிந்தி.

5. ஹிந்தி தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்தியா 5000 வருடப் பாரம்பரியம் கொண்ட நாடு

6. ஹிந்தி பயின்றவர்களுக்கு பிறமொழி பயில்வது கடினம். அப்படியே ஹிந்திப்படம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

7. ஹிந்திமொழி அறிவு வளர்ச்சியைத் தடுக்கும். ஏனெனில் இந்தி அறிந்தவர்கள் வேறு எந்த மொழிக்காரர்களுடனும் ஹிந்தியில்தான் கடபுடா என்று ஓட்டுவார்கள். மற்றவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியாது என்பதெல்லாம் சுட்டுப்போட்டாலும் அவர்கள் புத்தியில் ஏறாது

8. ஹிந்தியில் கவிதை இலக்கியம் என்று வந்துவிட்டால் அது உருதுவையே கடன் வாங்கிக்கொள்கிறது. எது உருதுச் சொல் எது ஹிந்திச் சொல் என்று ஹிந்திக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது.

9. ஹிந்தி எழுத்துக்களின் மேல் கோடு இருப்பதால், தட்டச்சும்போது ஒரே கோடாய் போடமுடியாது. கோடுகள் சேராமல்தான் போடமுடியும். எனவே கணினிக்கு லாயக்கற்ற எழுத்துக்களை உடைய மொழி ஹிந்தி

10. ஹிந்தி அராபிய எண்களையே பயன்படுத்துகிறது.

காதலும் சாதலும்


”காதலுக்காக மட்டுமே உருகி உயிர் துறப்பது ஏற்க முடிவதில்லை”

இது என் கவிதை ஒன்றுக்கான விமரிசனம். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இவைதாம்.

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

இந்த வரிகளுக்கான என் விளக்கத்தை இந்தக் கட்டுரையின் இறுதியில் நான் தருகிறேன். அதற்குமுன் மற்ற கவிஞர்கள் காதலையும் சாதலையும் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

இது பாரதியின் பாட்டுவரிகள். இதை நேரடியாய்ப் பார்த்தால் காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதாகப்படும். ஆனால் அதல்ல உண்மை. காதல் இல்லாவிட்டால் மனிதன் நடைபிணமாகிவிடுவான், வாழ்க்கை முடமாகிவிடும் என்பதே பொருள். காதலில்லாவிட்டால் வாழும்போதே சாதலை அனுபவிப்போம் என்பதே பொருள். அதாவது வாழ்க்கை சாவாக இருக்கும். இதுதான் பொருளேதவிர தற்கொலை செய்துகொள்வதல்ல. காதலிதான் ஓடிப்போவாள். காதல் ஓடிப்போகாது. எனவே இன்னொரு காதலியைக் காலம் தரும். அவளோடு மீண்டும் காதல் கொண்டால் காதல் காதல் காதல் என்று ஆகிவிடுவிடும். ஏன் காதல் காதல் காதல் என்று மூன்றுமுறை பாரதி சொல்கிறான். ஒவ்வொரு தோல்விக்குப்பின்னும் இன்னொன்று என்று வலியுறுத்தான் என்று நீங்கள் அர்த்தப்படுத்திக்கொண்டால், நான் குறுக்கே நிற்கமாட்டேன். வீழும்போதெல்லாம் எழுந்து நின்று வாழ்வோம். அதுவே காதலோடு இருப்பது. வீழ்ந்ததும் அப்படியே புதைந்துபோவதுதான் வாழும்போதே சாதல் என்பது.

ஆரத்தழுவி அடுத்தவினாடிக்குள் உயிர்
தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!

என்கிறார் பாரதிதாசன். இதன் பொருள் என்ன? மனிதனுக்கு உயிர்தான் முதன்மை. அதை இழக்க எந்த ஜீவனும் ஒப்புவதில்லை. ஆனால் அதைவிட ஒருபடி உயர்வாக தன் காதலியைச் சேர்வதை கவிஞன் உயர்வு நவிழ்ச்சியணியில் கூறுகிறான். அவ்வளவுதான். தவிர உண்மையிலேயே அவளை அணைத்ததும் அவன் அணைந்துபோய்விடமாட்டான். அட சாக வேண்டும் நினைப்பிலா அவன் அணைக்க விரும்புகிறான். ஏன் அவளை அணைக்க விரும்புகிறான் என்று நான் சொல்ல வேண்டுமா? வாழத்தான் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

என்கிறார் கண்ணதாசன். நீயில்லாமல் எது நிம்மதி என்று கேட்கும்போதே ஒரு விசயம் தெளிவாகிறது. நிம்மதி இல்லாத நாட்கள் மரண நாட்கள். அவளின்றி அவன் பிணம்போலத்தான் ஒன்றுமற்று வாழ்வான். If love goes wrong, Nothing goes right என்பார்கள் அழகாக ஆங்கிலத்தில்.

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது

என்றும் கண்ணதாசன் இன்னொரு பாடலில் கூறுகிறார். இது மிகத் தீவிரமான காதலின் வெளிப்பாடு. இது நீயில்லாமல் நான் செத்துவிடுவேன் என்று நேரடியாகவே சொல்கிறது. அந்த அளவுக்குச் செல்லும் காதலும் உண்டுதான். ஆயினும் இது தற்கொலை செய்துகொள்வதற்கான வரிகள் அல்ல. ஏக்கத்தின் மனச்சிதைவால் அவன் உடல்சிதைகிறான். மரணம் மங்கையைத் தூதனுப்பி அவனைக் கொல்ல வருகிறது என்பதை அவன் உணர்கிறான். அவள் கிடைத்துவிடமாட்டாளா, சாவை வென்றுவிடமாட்டேனா என்ற வேதனையின் வெளிப்பாடுதான் இந்தப் பாடல். இதிலும் அவன் சாக விரும்பவில்லை. ஆனால் அது அவன்மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப்படுகிறது.

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்

என்று கண்ணதாசன் இன்னொரு பாடலிலும் சொல்கிறார். இதுபோல காதலும் சாதலும் சேர்ந்துவரும் பாடல்கள் நிறைய உண்டு. அண்ணலின் அருள் பெறவே உயிர் வளர்த்தேன் என்கிறாள் அவள் காதலில் உருகி. இந்த உயிர் உனக்கானது என்கிறாள். அதன் பொருளென்ன, நீயில்லாமல் நானில்லை, என் உயிரில்லை. இந்த உயிரை உனக்குப் படைப்பேன் என்பதுதானே? இதுவும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும் என்ற ஆழ்மனதின் அழுத்தமான எண்ணம். இப்படி ஒன்றே ஒன்று வேண்டும் என்பவர்கள் மட்டுமே தற்கொலைவரை செல்கிறார்கள். அப்படி இல்லாமல் இந்தக் காதல் போனால் இன்னொரு காதல் என்று நினைத்த மாத்திரம் வாழ்க்கை எழுந்து நடக்கத் தொடங்கிவிடுகிறது. நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம். நம்மை ஏமாற்றியவர்களை விட்டுவிலகி வேறொன்றைத் தொட்டு வாழ்வை காதலாய் அமைத்துக்கொள்வதே அறிவுடைமை.

ஒன்றையே நினைத்திருந்து
ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்

என்று தன்னலமற்ற சேவையை கண்ணதாசன் காதல் தோல்வியில் ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லிவிட்டு சாகும் ஒருவனுக்காகப்பாடுகிறார். காதல் என்பது சுயநலம்தான். ஆனால் அது பிறர்நலம் நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துவிடும் என்பதற்கான உதாரணம் இந்த பாடலும் அதன் சூழலும். குறிப்பாக தன் காதலியின் நலம். இருந்தும் அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவன் ஆழ்மனம் அழிகிறது அது அவன் இதயத்தை பலகீனமாக்குகிறது. மரணம் தன் குருட்டுச் செயலை அரங்கேற்றுகிறது. அதற்குமுன் காலம் அவனுக்கு வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் காத்திருக்க வேண்டும். அல்லது அந்தக் காதலியாவது காத்திருக்க வேண்டும். அல்லது நண்பர்கள் உறவுகள் என்று எவரேனும் காத்திருக்க வேண்டும். இங்கே குற்றவாளி காதலில்லை. காக்காத உறவு, நட்பு, சமூகம் என்றே நான் கூறுவேன்.

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

என்கிறார் வைரமுத்து. இதுவும் தன் வேதனையும் துயரும் உச்சமானது. அது என் ஜீவனை கரையானாய் அரித்துக்கொண்டிருக்கிறது. அதற்குமுன் வந்து என்னைக் காத்துவிடு என்று கூறும் பாடல்தான். காதல் என்ற உணர்வு சாதாரணமானதில்லை. அதன் ஆழம் உண்மையான காதலியைச் சந்தித்துவிட்டு அவள் பறிபோன துயரை ஏற்கும் இதயங்களுக்கே தெரியும். காலம் அவர்களுக்கு மருந்து இடும்முன் முடிவு நேர்ந்துவிடுவது துரதிர்ஷ்டம்தான்.

முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிடத் தோனுதடி மனசு

என்கிறார் இன்னொரு பாடலில் வைரமுத்து. ஒரு காதலன் தன் உயர்வான காதலையும் அவளை மட்டுமே நாடும் இதயத்தையும் மிக அற்புதமாகச் சொல்கிறான் இந்த வரிகளில். என் உயிரைத்த்தருகிறேன் என்பதே உயர் பக்தி. நான் உன் காலடி வருகிறேன் என்பதே கடவுள் பக்தியின் உச்சம். காதலும் பக்தியைப் போன்றதுதான். ஆயினும் கவிஞர் இங்கே தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றா சொல்கிறார்? இல்லை. அப்படியே அந்த சுகத்தின் தருணத்தை ஆழ்ந்து உணர்ந்து அதிசயித்து மயங்குகிறார். இந்த இன்பத்திலேயே செத்துபோலாம்னு இருக்கு என்று உணர்வு பொங்குகிறார்.

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால்
மலைமீது தீக்குளிப்பேன்

வருகிறாயா இல்லை நான் சாகவா என்று முடிவெடுப்பதற்கு பயந்து தயங்கி நிற்கும் காதலிக்கு உறுதியாகச் சொல்கிறான் இந்தப்பாட்டில் காதலன். இதை அற்புதமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து. காதலனின் இந்த வார்த்தைகளால் இவனை நம்பி எங்கும் எத்தனைக் காலமும் செல்லலாம் என்ற அழுத்தமான உணர்வுகளை அவளுக்கு அந்த வரிகள் சத்தியம் செய்து தருகின்றன. இதுவும் தற்கொலை முயற்சியல்ல, தன்னை காதலிக்குச் சரியாக உணர்த்தும் அற்புதக் கவிதை வரிகள்.

இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை

என்று உயிரே என்ற படத்துக்காக வைரமுத்து எழுதுகிறார். ஒரு காதல் மரணம் வரை பயணப்பட்டுவிடும் என்பதை சொல்லும் பாடல்தான் இது. காதலுக்காக உயிர்துறக்கவும் தயாராகவே காதல் உள்ளங்கள் இருக்கின்றன. இங்கே சமுதாயம்தான் அவர்களைக் கொல்கிறதே தவிர அவர்கள் வாழவே விரும்புகிறார்கள். அவர்களை வாழவிடாத சமூகம் அவர்களைக் கொலை செய்கிறதே தவிர அவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. கடைசிவரைப் போராடவே செய்கிறார்கள்.

உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணே

என்று புதியபாடல் சொல்வதும் இதே காதலின் மேன்மையான உணர்வுகளைத்தான். வாழ்வதே காதலர்களின் நோக்கம். சாவல்ல. சாவு அவர்களுக்குச் சுமத்தப்படும் கொடுமை.

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி

என்கிறார் கங்கை அமரன். ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணுக்கு ஏன் பிறவி என்ற கேள்வி காதல் வாழ்க்கையின் மேமையை அற்புதாகச் சொல்கிறதல்லவா?

யாரென்று நீயும் எனைப் பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகதே

என்கிறார் நா. முத்துக்குமார். என்னை விட்டுப் போகாதே. நீ போனால் நான் ஒன்றுமற்றவன். உயிரற்றவன். நான் இறந்தால் கூட இந்த உணர்வுகள் என்னை அகலாது. கல்லறையிலும்கூ நான் விழித்திருப்பேன் என்று கற்பனையை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார். கதாநாயன் கேட்பது என்ன? போகாதே போகாதே. அவ்வளவுதான். அதை தன் காதலிக்குப் புரியவைக்கும் வரிதான் உயிர் போவதும் கல்லறையிலும் உன் முகம் பார்ப்பேன் என்பதும். ஆக இதுவும் வாழ்க்கையின் தேடலே தவிர மரணத்தின் தேடல் அல்ல.

இனி என் கவிதையின் பொருளைப்பார்ப்போம்.

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

பெண்ணே நான் உன் மீது என் உயிரையே வைத்திருக்கிறேன். நீ என் மீது கொண்ட காதலை மறைத்து மறந்து எனக்கு மரண அவதிகளைத் தராதே. என் உயிர் ஊதிபத்தியைப்போல் நொடிதோறும் கரைந்துகொண்டே இருக்கிறது. அது சிறுகச்சிறுக சாகும் இந்த வேதனைக்கு தூரமாய் இருந்தாவது உன் அன்பெனும் ஆறுதலைக்கொடு. நீ என்னோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை. நான் இந்த மரண வலியின் கொடுமையிலும் நிம்மதியாய் வாழ்வேன் என்கிறான். தற்கொலை செய்துகொள்வேன் என்று அவன் கூறவில்லை. இப்போதும் உயிர்வாழ்வேன் என்றே கூறுகிறான்.

காதல் என்பது ஓர் அற்புதமான உணர்வு. அது மனிதன் பிறந்த முதல் அழுகை நாள்முதல் அவன் பிறர் அழ இறக்கும் இறுதி நாள் வரை நீடிக்கும். காலத்துக்கும் கோலத்துக்கும் ஏற்ப அதன் வெளிப்பாடுகளில் மாற்றம் இருக்கும். ஆனால் காதலே இல்லாமல் மனிதன் மனிதனே அல்ல.

பிறந்த ஒவ்வோர் உயிரும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் காதலுக்காக ஏதேனும் இயன்றதைச் செய்ய வேண்டும் அதுவே இந்தப் பிரபஞ்சம் வசந்தம் பூக்கும் வாழ்க்கைக்குப் பஞ்சமின்றி வாழத் தகுந்த சொர்க்கமாய் மாறும். நமக்கெல்லாம் சொர்க்கம் வேண்டுமா நரகம் வேண்டுமா? நாம் வாழும்போதே என்பதுதான் மிக முக்கிய கேள்வி!
மகளிர்தின வாழ்த்துக்கள்

பெண்ணின் வலிமை!

வாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.

ஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.

ஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.

அதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.

வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்துப் பதறிப்போவாள்.

ஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற பெரும் வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.

அதே போல ஆண் சுமக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான பொருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.

இவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.

இதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.

ஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.

ஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.

இதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகள் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.

குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள்.

பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.

பணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என்ற சில பெண்களின் அவலநிலை.

ஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்வு பணிக்குப் போகாதிருப்பதே! சில பெண்கள் இதில் விதிவிலக்கு.

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது

காற்றுச் சிறகேறி
காதுகளின் உயிர் தீண்டி
வேற்றுமொழி தேசத்தில்
ஊற்றுத் தமிழ் கூட்டி
ஒய்யாரமாய் உலாவரும்
ஒலிவெள்ள கீதவாணியே
உயர்வாய் நீ நாளுமே


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்; அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்குக்
கத்துங் குயிலொசை - சற்றே வந்து
காதிற் படவேணும்; - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
காவலுற வேணும்; - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

பாரதிக்கு ஏன் இதெல்லாம் வேண்டுமாம்?

1. காணிநிலம்: வசதி என்றாலே சொந்தமாய் ஒரு நிலம் இருப்பதுதானே!

2. அழகிய தூய மாளிகை: நிலம்மட்டும் போதுமா? அதனுள் ஓர் அருமையான மாளிகை வேண்டாமா?

3. கேணியும் தென்னைமரமும்: ஆகா, அருமையான இயற்கைச் சூழல் பாலவனத்து மாளிகையாக இல்லாமல்... தண்ணீர், அது நிறைவாய் இருப்பதைச் சொல்லும் தென்னை. தென்னைமரம் ஓர் இயற்கையான விசிறி அங்கே அமர்ந்தால் தெரியும். நான் கிராமத்தில் பிறந்தவன். தென்னை இளங்கீற்றின் சுகமே தனி. தென்னைமரம் ஒன்றிரண்டா கேட்டான். ஒரு பத்துப் பனிரண்டு வேண்டும் என்கிறான். இடைவெளியே இல்லாமல் அவன் தோட்டத்தை நிறைக்க.

4. முத்துச்சுடர்போலே நிலவொளி: பூமியை முடித்துவிட்டு இப்போது வானம். இன்றெல்லாம் நிலாவைப் பார்க்க நாம் வெளியே வருவதே இல்லை. அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே என்று நிலா காதலின் தோழமை, தூண்டுகோள். அந்த நிலா எந்தத் தடையுமில்லாமல் முன்பு வரவேண்டும் என்கிறான்

5. கத்தும் குயிலோசை: குயில் பாடுமா கத்துமா? ஏன் கத்தும் என்கிறான் பாரதி? இதுவும் காதலைச் சொல்லும் ரகசியம்தானே? கத்துவது என்றால் கூவி அழைப்பது என்று பொருள். தூரத்தில் இருப்பவர்களை அழைப்பதற்கான சொல் கத்துவதுதான். கத்தித்தான் தன் காதலை அழைக்கிறது குயில். அந்தக் கத்தும் குயிலோசை அவன் காதில் படவேண்டுமாம். காதல் தூண்டுவதற்கா? அல்லது தன் உள்மனக் காதல் குரலுக்கு இசையாகவா?

6. தென்றல்: சித்தம் தனிந்திடத் தென்றல் வரவேண்டும். ஆகா! தென்னையும் தென்றலும் போதுமே போதுமே! கொதிப்பவன் குளிரவேண்டுமே என்ற கவலையும் கொள்கிறான். இந்த வியர்வை மழைக்கு ஒரு வழிபண்ணவேண்டாமா?

7. பத்தினிப்பெண்: யார் பத்தினிப்பெண்? தன்மீதுமட்டுமே தணியாத காதல் கொண்ட பெண்தானே பத்தினிப்பெண்? இணக்கமான பெண் இல்லாதவர்கள் வாழ்ந்ததாய் சரித்திரம் உண்டா? இது மிக முக்கியம். எனவே பாரதி தெளிவாகக் கேட்கிறான். ஏதோ ஒரு பெண் வேண்டாம் எனக்கு, பத்தினிப் பெண்தான் வேண்டும். இணக்கம் என்பதை எப்படிச் சொல்கிறான் பாருங்கள். பாட்டுக்கலந்திடவே. பாட்டு எப்போது கலக்கும். இருவரும் ஒரு ரசனையில் ஓர் உணர்வில் கூடும்போதுதானே? கலக்கல் இல்லையா?

8. கூட்டுக்களியினிலே கவிதைகள்: அருமை அருமை! இன்பமென்றால் அதை இருவருக்கும் சமமாக்குவோம் என்று பட்டுக்கோட்டையார் பாடுவார். என்ன நடக்குது அங்கே? ஒரே கூட்டுக்களியா இருக்கே என்பார்கள். ஒத்துப் போனவர்களின் இன்ப விளையாட்டு. அது தரும் பல்லாயிரம் கவிதைகளை. அடடா கவிதை எழுத பாரதி தரும் சூழல் என்னமாய் மயக்குகிறது பாருங்கள்.

9. காவல்: காடுவெளியினிலே - பாருங்கள் காணிநிலம் வேண்டும் என்றான். அதுவும் எங்கே என்று இங்கே சொல்லிவிட்டான். காட்டுவெளியினிலே. தனிமை கவிஞனுக்குப் பிடித்த இடம். தீவுக்குப் போவாமா? நிலாவுக்குள் ஓடி விளையாடுவோமா? வேற்றுக்கிரகணம் தாவுவோமா என்றுதான் எல்லா கவிஞனும் கேட்கிறான். அங்கே தொல்லையில்லாமல் இருக்க காவலும் வேண்டுமாம் பாரதிக்கு. பராசக்தியின் காவல். இதில் இன்னொன்றும் இருக்கிறது. காட்டுவெளி என்று இந்தக் கேடுகெட்டப் பொறாமை உலகையும், அதிலிருந்து காப்பாற்ற பராசக்தியையும் அழைப்பதாய்க் கொண்டால் மேலும் சிறக்கும். இத்தனையோடும் இருந்தால் பொறுக்குமா நீலிக்கண்களுக்கு. அதைக் காக்க பராசக்தியின் துணை வேண்டுமாம்.

10. பாட்டுத் திறத்தால் வையம் பாலித்தல்: அருமையான நிலம், அதில் அழகான மாளிகை, தென்னைமரம் தரும் இதம், கேணிதரும் ஈர வசந்தம், முத்துச்சுடர்போல் நிலவொளியின் போதை, கத்தும் குயில்தரும் கிறக்கம், எழும் கொதிப்பைச் சீராக்கத் தென்றல், பக்கத்தில் காதல் வழியும் பத்தினிப் பெண், அவர்களின் விளையாட்டால் பொங்கும் கவிதைகள், பொறாமை உலகிலிருந்து காக்க பராசக்தியின் காவல், இத்தனையும் கிடைத்துவிட்டால்? இந்த வையத்தை மறந்து சுகங்களில் புறண்டு காணமல் போவேனோ? அப்படியாரும் தவறாக எண்ணிவிடாதீர்கள். அதுதான் என் மூச்சு. அதுதான் என் வாழ்க்கை அதுதான் என் உயிர் என்கிறான் பாரதி

பாட்டுத் திறத்தாலே
இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்..

இந்த உலகையே சுபிட்சமாக்கும் பாட்டுவரிக்குச் சொந்தக்காரன் கேட்பது எத்தனை எளிமையான காதல் சூழல். கோடி பொன் கேட்டானா? எல்லோரும் எனக்குத் தலைவணங்க வேண்டும் என்று கேட்டானா? இந்த உலகை ஆளவேண்டும் என்று பேராசைப் பட்டானா? எழுத்தால் ஆளும் கவிஞனுக்கு புறஆட்சி தேவையே இல்லையே. அது அவனுக்குப் பிடித்தமில்லாத பணியல்லவா.

பாரதி கேட்டத்தைக் கொடுங்கப்பா என்று எல்லோருக்கும் கட்டளையிடத் தோன்றுகிறதல்லவா?

அன்புடன் புகாரி
20031211

குறள் 1081


கனத்த
காதணி அணிந்த
இவள்
தேவ மங்கையோ
அல்லது
அரியதொரு மயிலோ
அடடா
இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே
என் நெஞ்சு

*

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு


*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1081

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

ஊடகம் கேடகம்

கேடுகளால் அழிந்துபோன
கால்வாசி நாசத்தை

திருப்பத் திரும்ப
சொல்நயத் திறமைகூட்டி

மாறி மாறி
நுண்கலை வலுசேர்த்து

மீண்டும் மீண்டும்
அதிரடிக் காட்சிகளோடு

இடை இடையே
நாச அனுமானங்களோடு

ஒலி ஒளி பரப்பிய
இருபத்தியோராம் நூற்றாண்டின்
ஊடகவியல்

அழித்தெடுத்தது
மீதம் முக்கால்வாசி
தேசத்தையும்

ஊடகமில்லாக் காலங்களில்
உயிரழிவுகளும்
அறியாதிருந்ததென்னவோ
உண்மைதான்
ஆனால்
ஊடகங்கள் வந்ததும்
காலமே அழிந்து
சொட்டுச் சொட்டாய் வழிகிறதே

காதலா வீரமா


கேள்வி:
எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' காதல் எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி.


பதில்:
இந்த உலகத்துக்கு எது தேவை? மனித நேயம் காக்க எது அவசியம்? தீவிரவாதமா வன்முறையா விரோதமா அல்லது அன்பு கருணை பாசமா?

தமிழ் சினிமாவில் இரண்டு விச்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கமுடியும். ஒன்று காதல் இன்னொன்று சண்டை. அத்தனை படங்களும் இவற்றைச் சுற்றித்தான். விதிவிலக்குகளை ஓரங்கட்டுவோம்.

சரி சங்ககாலத்தை எடுப்போம், தமிழர் காதலையும் வீரத்தையும்தான் இரு கண்களாய்க் கண்டனர். இந்த இரண்டையும் பற்றித்தான் அகநாநூறுகளும் புறாநாநூறுகளும்.

மனிதனை ஆக்கிரமிப்பதில் இந்த காதலுக்கும் வீரத்திற்கும் அதீத சக்தியுண்டு. இதில் எது உயர்ந்திருந்தால் உலகம் அமைதியில் தவழும் என்று நாம் சிந்திப்பது மிக அவசியம். காதலையோ வீரத்தையோ முற்று முழுதாக நம் வாழ்விலிருந்து அகற்றிவிடமுடியாது என்றாலும் ஒன்றை உயர்த்திப்பிடித்து இன்னொன்றை உள்ளுக்குள் வைத்திருப்பது இயலக்கூடிய ஒன்றுதான்.

காதல் என்பது அன்பு, கருணை, பாசம், அமைதி என்ற திசையில் பயணப்படும்போது வீரமோ வன்முறை, தீவிரவாதம், சிறுவர்கள் கையில் அரிவாள், இப்போது சின்னதாய் துப்பாக்கி. சொல்லுங்கள், இந்த உலகத்துக்கு எது தேவை?

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்துசெய்த கலவைதான் மனிதன். அவனிடம் இருக்கும் கடவுளை வெளிக்கொண்டுவருவதே நாம் போற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மிருகத்தைக் கொன்றழிக்க காதலைத்தவிர வேறு எதுவும் கைகொடுக்காது.

மனிதன் ஏதோ ஒரு பிடிப்பில் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கும்போது, மென்மையாகிவிடுகிறான். அது காதலென்றுவிட்டால் சொல்லவே வேண்டாம்.

இப்போது கூறுங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு எது வேண்டும்? காதலா அல்லது வீரமா? சமாதி எது? சாகும்வரை காதலே போற்றும் வீரம் கொள்வோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளையும் நாம் காதலிப்போம். அதுவே உண்மையான காதல். அதற்கு ஆதாரமாய் அமைவது ஆண் பெண் மீது கொள்ளும் காதலும் பெண் ஆண்மீது கொள்ளும் காதலும்தான்.

பிரபஞ்சச் செடியில் காதல் ரோஜாக்கள் பூக்கப்பூக்க, வன்முறை முட்களெல்லாம் உதிர்ந்து போய்த் தொலையட்டும்.

நான் நானாக

அவன் அவனாக வாழ்ந்த
நாட்கள் குறைவு

நேற்றைய இருட்டு
இன்றைய வெளிச்சம்

இன்றைய வெளிச்சம்
நாளைய இருட்டு

எதிலும் எவனுக்கும்
தெளிவு என்பது நிரந்தரமல்ல
சந்தேகம் என்பதும் சாசுவதமல்ல

ஒரு சந்தேகம் தெளிவாகி
மறுபொழுதில் அந்தத் தெளிவே
ஒரு சந்தேகமாகி
அவனைத் 'தேடு' என்று
கட்டளையிட்டுவிடுகிறது

இதுதான் நான் என்று
திட்டமிட்டுக் கூறியவர்களெல்லாம்
அது அன்று தோன்றியது
இன்றல்ல என்பதைத் தாங்களே அறிந்தபின்
சிலர் அறிக்கையாய் வெளியிட்டும்
சிலர் அடிமனதில் பூட்டிக் கொண்டும்
நடக்கிறார்கள்

மனதின் ஏதோ ஓர் ஓரத்தில்
மச்சங்களின் மிச்சங்களாய்
இருந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள் கைகுலுக்கியபோது
தீப்பொட்டுக்களாய் எழுந்து
கொள்ளியிடும் நெருப்பாய்
விசுவரூபம் எடுத்திருக்கின்றன

சிலருக்கு
இது எங்கிருந்து வந்தது
என்பதே அறியாமல்
திடீரென்று எழுந்துத்தாக்கி
அவர்களின் அவர்களை
குழிதோண்டிப் புதைத்திருக்கிறது

ஆக
அவனவனுக்குள்
எல்லாமும்தான் இருக்கின்றன

ஆயினும்
இந்தச் சமுதாயத்துக்காகப்
போட்டுக்கொண்ட
பொய்வர்ண முகத்துடன்தானே
அவன் நாளும் அலைகிறான்

கேட்டால்
அறியாமையின் வெண்சாமர வீசலில்
உறங்கிக்கொண்டு
பொய்முகமே அவனின்
நிஜமுகம் என்கிறான்

எப்படியோ
அவன் அவனாக இல்லை

அவனைப்போல
நான் நானாகவே
நீங்கள் நீங்களாகவே வாழ்ந்த
நாட்கள் குறைவுதானே?

உயிரே
அமைதியை நோக்கித் தவழ்ந்துவிடு
சத்தங்கள் சத்தான உள்ளத்துக்கும்
கடும் விசங்கள்

இந்த பூமி மடி நிறைய மனித மொட்டுக்கள்
அவை மலர்களாய்ப் பூக்கும்
பிரிய விரல்களால் வருடும் பொழுதுகளில்
இருந்தும் எந்தப் பூவினுள்ளும்
நீ வீழ்ந்துவிடாதே

ஒருசில பூக்களிலோ முட்களிருக்கலாம்
ஆயினும் நம் சுடுசொற்களால்
மெல்லிய இதழ்களையே
முட்களாய் மாற்றிக் கொள்ளும்
பூக்களும் உண்டு இங்கே

நெஞ்சம் உண்மையின் ஊற்றாகட்டும்
செவியரும்புகள் பிறருக்காய்
பிரியமுடன் மலரட்டும்

மெலிந்தவனோ அறிவிலியோ
நீ விட்டு விலகும்
அந்த ஒன்றுமறியாதவனிடமும்
ஓர் கதை உண்டு
பிறர் பிணிக்குச் செவி மடுத்தால்
உன் பிணி தூசல்லவா

ஆயினும்
கடும் விசத்தை அமுதெனக் கலந்து
நுனி நாக்கில் பரிமாறும் கரு நாகங்களையும்
விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே கழற்றிக் கொள்ளும்
பிறவித் திருடர்களையும் விட்டு விலகிவிடு

இந்த மண்ணில்
நம்மிலும் உயர்ந்தோருமுளர் தாழ்ந்தோருமுளர்
வீணே ஒப்பிட்டு நெஞ்ச நீரோடையில்
நஞ்சினைக் கலப்பதைக் கைவிடு

உனக்கென ஓர் உள்ளம்
அதில் உன்னுடைய என்றுசில எண்ணங்கள்
பிறகென்ன?

மனசாட்சியெனும் வைரக்கால் பதிய
திடமாய் எழுந்து நில்
உன் இனிய எண்ணங்களில் வாழ்
ஈடற்ற சாதனைகளில் சிரி

காதலும் உறக்கமும்

பிரசாத்:
எனக்கு ஒரு சந்தேகம் புகாரி, நீங்கள் எழுதிய கவிதைகளில் சில காதல்
உறக்கத்தை தொலைக்கும் என்ற கருத்தோடு உள்ளது. உண்மையிலேயே உறக்கத்தை
தொலைய வைக்குமா காதல். அனுபவமில்லாததால் அறிந்து கொள்ள கேட்கிறேன்.


நான்:
காதல் பொல்லாதது. அது குறிவைப்பதே முதலில் உறக்கத்தைத்தான். புரண்டு புரண்டு படுக்கும் பதின்ம வயது பெண்ணைக் கண்டால் தாய் கவலைகொள்கிறாள். இவள் காதலில் விழுந்துவிட்டால் என்று.


ஊரு சனம் தூங்கிருச்சி
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏந்தான் தெரியலியே

என்று ஜானகியின் குரலில் வழியும் காதல் ஏக்கத்தைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் அதுவும் ஒன்று.

கண்ணதாசன் பட்டுக்கோட்டையாருக்கெல்லாம் முன்பு மருதகாசி என்று ஒரு கவிஞர் அருமையாக திரையிசைப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் படம் ஊத்திக்கொண்டாலும் இந்தப் பாட்டுக்காகவே பேசப்பட்டது. அந்தப் பாடல் துள்ளல் இசையில் ஏ.எம். ராஜா குரலில் அழகாக வெளிவந்தது

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா

காதலும் உறக்கமும் எப்படி நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறது பாருங்கள்.

இன்னொரு பாட்டு நான் அசந்துபோகும் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. இதை கண்ணதாசன்தான் எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல பழைய பாடலைக் கேட்டாலே கண்ணதாசனையே மனம் எண்ணிக்கொள்கிறது. அந்த அளவுக்குக் கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பலருக்கும் மயக்கம்.


தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


காதலுக்கு எப்படி ஒரு வரையறை கொடுக்கிறார் பாருங்கள். தூங்காத கண். துடிக்கின்ற சுகம். அதென்ன துடிக்கின்றன சுகம். ஆமாம் காதலில் மட்டும்தான் வலி சுகமாய் இருக்கும். அப்படியான காதல் உறக்கத்தோடு கயிறிழுக்கும் போட்டி நடத்தாமல் இருக்குமா?

இன்னொரு திரையிசைப்பாட்டு இதுகூட கண்ணதாசனாய் இருக்கலாம். யாருக்குத் தெரியும். தேடிப்பிடித்து சரியான கவிஞர் பெயர் இட ஆசைதான் என்றாலும், இந்தக் கட்டுரை என்னை அவசரப்படுத்துகிறது :)


நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை-உனைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை

கண்டு பின் அவனைக் கொண்ட நாள் முதலாக அவள் உறங்கவே இல்லையாம்! எப்படி இருக்கிறது கதை. நிலாவைப் பார்த்தாலே அம்மாவுக்குத் தூக்கம் வரவில்லையாம். அத்தனை காதல் வேதனை. அதுவும் காயும் நிலா. இலக்கியத்தில் காயும் நிலவை காதலோடு கட்டிப்ப்டித்து விளையாட விடுவார்கள்.

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஒரு பழம்பெரும் தமிழ்க்கவிதையை கண்ணதாசன் அருமையான திரை இசைப்பாட்டாகத் தந்தான். அதன் ஒவ்வொரு வரியும் கேட்கக்கேட்க சுவை. அதை வைத்துக்கொண்டு விடுகதை போட்டே விளையாடலாம்.

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ என்று எழுதி இருப்பார் கண்ணதாசன். என்ன ஒரு நயம் பாருங்கள். உள்ளம் எல்லாம் இளகாயோ, ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்று காய் காய் என்றே கனிகளைக் கொய்யக்கொடுத்தார் கண்ணதாசன். இப்படியே மாதுளங்காய் - மாது உள்ளம் காய், அவரைக்காய் - அவரை காய், கொற்றவரைக்காய் -கொற்றவரை (அரசரை) காய் என்று பாடல் மிகச் சுவையாய்ச் செல்லும். சரி நீண்டு விலகிவிடலாமல் மீண்டும் உறக்கத்துக்கே வருவோம்.

சரி பழைய பாடல்கள்தானா இப்படி உறக்கத்தையும் காதலையும் கைகலப்புச் செய்தன. புதிய பாடல்கள் இல்லையா என்று கேட்கலாம். இதோ காதல் படங்கள் எடுப்பதில் ஒரு கலைவண்ணத்தை அள்ளிக்கொட்டிய பாரதிராசா படத்திலிருந்து ஒரு பாடல்

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு

என்று ஒரு கிராமியப் பெண் பாடுகிறாள். நாளெல்லாம் ஏக்கம் ராத்திரியும் தூக்கம் இல்லை. அடடா இந்தக் காதல் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமா? வலையில் விழுந்த மீன்களென இந்த வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன என்ற நிலவே நீ சாட்சி பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது இப்போது. எழுதிய வாலியாக இருக்கலாம்.

சரி வைரமுத்து தன் திரையிசைப்பாடலில் என்ன சொல்கிறார் பார்ப்போமா? புதுக்கவிதை இலக்கியத்தை இயன்றவரை திரையிசைக்குள் புகுத்தியவராயிற்றே.


இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!

இதுவரை கண்ட பாடலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் பார்த்தீர்களா? அதுதான் வைரமுத்து. அப்படியே புதுக்கவிதை தெறிக்கும்.

சரி ரொம்ப கிட்டத்தில் வந்த ஒரு பாடலைப் பார்ப்போமா? இதை எழுதியது நா. முத்துக்குமார் அல்லது யுகபாரதியாய் இருக்கலாம்.


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

காதல் தவிப்பு என்றால் கண்ணுறங்கப்போவதில்லை என்று இளைய கவிஞர்களும் ஒப்புக்கொண்டார்களா? அதைவிட இளையவனான நான் என்ன செய்யமுடியும் :)

வெறும் திரையிசைப்பாடல்களாகவே தந்துவிட்டேனே என்று யாரும் வருந்தவேண்டாம். மிகப் பழந்தமிழ்ப்பாடல்முதல் இன்றைய நவீன கவிதைவரை காதலும் உறக்கமும் ஒன்றை ஒன்று விழுங்கித்தான் வாழ்கின்றன. இன்னொருநாள் அவற்றைத் தொகுக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்.

பூவும் பொன்மின்னலும்

பூப்பூக்கும் ஓசை
அந்தப் பூவிற்கே கேட்பதில்லை

பொன் மின்னல் பூக்கும் ஓசையோ
இந்த பூமியெங்கும் கேட்கும்

பூவும் நான்
பொன்மின்னலும் நான்
குறையுள்ள மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போனால்
கல்லும் வைரமாக
கையிலேயே இருந்தால்
வைரமும் கல்லாக

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போகுமென்று
முன்பே அறிந்திருந்தால்
உயிரைக் கரைத்து ஊற்றி
ஒட்டுப்பசை நெய்திருப்பேன்

கையை விட்டுப் போகாதென்ற
கர்வத்தில்தானே நான்
கயிறிழுத்துப் பார்த்தேன்

வைரக் கல்லும் போனது
வைராக்கியக் கயிறும் போனது

கனவின் இழையும் பிரிந்தது
உயிரின் உயிரும் மரித்தது

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை

வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்

வந்தது கல்லாக
சென்றது வைரமாக
கருத்துப் பிழை
வருவதென்ன நியாயம்

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

ஊருக்குச் சேவை

குடும்பத்துக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் உலகுக்குச் சேவை செய்பவன் பொதுஜனக்காரன்.உலகுக்கு சேவை செய்துவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் குடும்பத்துக்குச் சேவை செய்பவன் மகாத்மா. குடும்பத்தையே துறந்து உலகுக்கு சேவை செய்பவன் துறவி.

நான் மாற்றுக்கருத்து உடையவன்.

ஊருக்குச் சேவை செய்து வீட்டைச் சாகடித்தால் அவன் சேவை போலியானது. ஏனெனில், அவனுக்குத் தேவை வெறும் புகழ் மட்டுமே. வீட்டில் உள்ளவர்களும் உயிர்கள்தான் அவர்கள் அவனை நம்பி வந்தவர்கள். தன்னை நம்பியவர்களையே காப்பாற்றாதவன் ஊரைக் காப்பாற்றினான் என்பது நகைப்புக்குரியது.

ஊரையும் குழும்பத்தையும் ஒன்றாகப் பார்ப்பவன்தான் உண்மையான சேவைக்காரன். பாரபட்சமாக தொண்டு செய்பவன் தொண்டுசெய்பவனல்ல சூது செய்பவன். தன் சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டவன். அவன் சுயநலம் என்பது தான் சரித்திர புருசனாய் ஆவது என்பது.

குடும்பத்தையே துறந்து உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பவன் தன் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காரணம் தேடுபவன். பொறுப்பற்றவன் புகழ் வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்தான் உலகைக் காப்பாற்றப்போகிறேன் என்பது.

பாரதி காலத்தில் எழுத்தாளர்களுக்கு வேறு வருமானம் இல்லை. எனவே வழி இல்லை

உண்மை. ஆனால் அவருக்குக் கிடைத்த வேலைகளில் அவர் தங்கவில்லை. தங்கி இருந்தால், குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கவிதைகளையும் எழுதி இருக்கலாம்.

அதோடு பெரும்பொழுதுகளை நண்பர்களோடு பேசியே கழித்தார். உடல் வலிமை கொண்ட பாரதி, பொருளீட்டுவதிலும் புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டும்.

கம்பன்போல் வள்ளுவன்போல் என்று அவர்களைப் புகழ்ந்துவிட்டு, வள்ளுவன் சொன்ன, ”பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என்பதை உள்ளேற்றிக்கொள்ளவில்லை!

இதை நான் பாரதியின்மீதுள்ள அக்கறையில்தான் சொல்கிறேன். பாரதியின் மனைவி செல்லாமளின் வானொலி உரையைக் கேளுங்கள், அவர் இறந்த பல காலம் ஆகியும் செல்லம்மாவால் அந்தத் துயரத்தை மறக்க முடியவில்லை.

கண்ணாடிகள்

உன் வார்த்தைகள்
உன் முகம் காட்டும்
கண்ணாடிகள்

அறிவழிந்த பொழுதுகளின்
மடிகளில் அமர்ந்துகொண்டு
இன்றைய உன்னை
இன்றே பார்த்தால்
உனக்கு அழகாகத் தெரியலாம்

நாளை உன்னை
நீயே பார்க்க நேர்ந்தால்
அதன் விகாரத்தில்
நசுக்கப்பட்டு
வெடித்து அழத் தோன்றும்

உன்
முக அழுக்குகளை
அகற்று முதலில்

உலகக் கண்ணாடிமுன்
நிற்கலாம் பிறகு

சளி வழியும் மூக்கோடும்
பீளை மூடிய விழியோடும்
வாநீர் உரிந்த வாயோடும்
நீ செல்லவேண்டியது
அறிவென்னும்
ஒப்பனையறைக்குத்தான்

அடிக்கடி
உன் முகம்பார்

உன் முகத்தின் கோரங்கள்
உன் விழிகளுக்குத்
தெரிந்தால்
நீ காப்பாற்றப்படுவாய்

அடடா அழகென்று
அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால்
உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும்
உனக்கு
ஆகாமல் போகக்கூடும்

இதயம் என்பது
நீ
அன்றாடம் சேமிக்கும்
சொற்களின் உண்டியல்

விகாரங்களெல்லாம்
அதனுள் விழுந்த
செல்லாக் காசுகள்

செல்லாக் காசுகளையே
செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது
அவமானங்களைத்தான்

கண்ணாடிகள்
ஒருநாள் உடையலாம்

உடைந்தால் அவற்றின்
ஒவ்வொரு சில்லும்
உன் முகத்தை இன்னும்
விகாரமாகவே காட்டும்

முகத்தைத்
துடைத்துக்கொள்ள
இனியாவது
உன் விரல்களுக்குப்
பாடம் எடு

சின்னச் சின்ன
மரணங்களுக்கு
உன்னை விலைபேசி
விற்றுவிடாதே
இணையத்தோரே

தேனீர்க்கடை தாண்டி
தெருமுக்குக் கூட்டம்தாண்டி
தேதி குறித்துக் கூடும்
இலக்கிய வட்டங்கள் தாண்டி
இணையமென்ற மேற்தள மாடம் வந்து
அகம்பூக்க அமர்ந்தால்

ஐயகோ...
இங்குமா அந்தச்
சில்லறை அரசியலின்
நச்சுமுள் விளையாட்டு

ஒருவன்
இருவனாகிக் கூடும்போதே
பேயாட வந்துவிடுகிறது
பொல்லாத அரசியல்

நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்

காரணம்...

அவரின்
அரைகுறைச் சொல்லைப்
பாராட்ட ஆளற்றுப் போனதே
அந்தச் சோகம்

தன்னைவிடத் தரமாக
எழுதித் தொலைக்கிறானே படுபாவி
அந்தப் பொறாமை

இவன் என்
எதிரி எழுத்தாளனின்
தாசனாயிற்றே
அந்த விரோதம்

இதையெல்லாம் பாராட்டிவிட்டால்
தன் கௌரவம் என்னாவது
அந்தத் தலைக்கனம்

கண்டதுக்கும்
மறுமொழியிட்டுவிட்டால்
நாம் பணிப்பளுவால் சிக்குண்டு
தவிக்கிறோமென்று எப்படி நிரூபிப்பது
அந்தச் சாதுர்யம்

அட...
நாம் பாராட்டிவிட்டால்
நம் கண்முன்னேயே
வளர்ந்து தொலைத்துவிடுவானே
அந்த நல்லெண்ணம்

இப்படியாய்ப் பலரழிய...

நாலுவரி என்று நாம் மூச்சுவிட்டால்
நாநூறு பிழை என்ற
நம் ஆஸ்துமாவல்லவா
அறிவிக்கப்பட்டுவிடும் என்றே
இன்னும் சிலர்

இவை போதாதென்று
இந்தக்குழு அந்தக்குழு என்ற
இணையக் குழுக்களின்
தன்மானத் துவேசத்தால்
குரல்கிழியும் குற்றச்சொற்கள்
காமநோய்க் கிருமிபோல்
கணக்கற்ற பெருக்கத்தில்

சின்ன வட்டத்துக்குள்ளும்
குட்டிக் குட்டி
குண்டூசி வட்டங்கள் போடுவதையா
சுதந்திர எழுத்து சொல்லித்தருகிறது

ஆயிரம் வட்டங்களையும்
மாண்போடு உள்ளடக்கிக் கொள்ளும்
மாசறு வட்டமல்லவா எழுத்தாளன் இதயம்
அதை எங்கே தொலைத்துவிட்டு
இங்கே வந்து உப்புக் கரிக்கிறீர்

ஆக...
அதி உயர் நவீன தமிழ்ச்சங்கமான
நம் இணையக் கோபுரமும் இன்று
நாற்றமெடுக்கும் நரகல் தொட்டிக்குள்

நாம் மாறாமல்...
நம் எண்ணக் கப்பல்
நங்கூரம் இட்டுக்கிடக்கும்
நரக நினைப்பை மாற்றாமல்
எந்த நவீனம் வந்து இங்கே
என்னவாகப் போகிறது?

கோட்டும் சூட்டும் அணிந்திருந்தாலும்
உள்ளத்தில் ஏற்றம் இல்லாதுபோனால்
நாற்றம்தானே வீசும்

நெஞ்சின் நேர்மைக்குக்
கருஞ்சாயம் பூசி
காணாதொழிக்கும் நண்பர்களே
இனியேனும் உங்கள்
நெஞ்ச வஞ்சங்களைக்
காலைக் கடனாகக்
கழித்துத் தொலையுங்கள்

அத்தனைக்கும் உச்சாணிக் கொம்பு
இவ்வுலகில் எழுத்துமட்டும்தான்
அதை இருட்டுக்குள் இருந்து
கிறுக்கிப் பார்க்காதீர்கள்

வெளிச்சத்தைத் தட்டி எழுப்ப
விரலிடுக்கில் எழுத்து நீர்க் குவளையோடு
நிற்கும் நீங்கள் முதலில்
வெளிச்சத்தை முத்தமிடுங்கள்

தாய்மொழி தமிழுக்கும்
தரமான இலக்கியத்துக்கும்முன்
இவையாவும் வெட்கக் கேடுகள்

வேங்கூவர் - கனடா


என் குரலில் கேட்க

அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட
அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர்.
2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் அங்கு சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன்.
ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல்
விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.


வசந்தத்தில்
வசந்தம் கேட்டுத்
தவமிருக்கும் உலகில்
வருடமெல்லாம் வசந்தம் காணும்
வேங்கூவர் ஓர் அதிசயம்

எங்கும் இங்கே
புல்லும் மரமும் பூத்துப்
பூரண சுயாட்சி நடத்தும்
பொற்பருவத் தாண்டவங்கள்

பேரெழிற் பொற்சிலையாய்
சுற்றிக்கட்டிய
நீர்ப்பட்டுச் சேலைக்குள்
நிமிர்ந்து நாணி நிற்கும்
நிலமகள் இந்த வேங்கூவர்

இயற்கையின்
எழில்வண்ணப் பளபளப்பு
காணும் கண்களிலெல்லாம்
மின்னல்கள் கொளுத்தி
மின்னல்கள் கொளுத்தி
மிடுக்கோடு விளையாடுகிறது

ஆசையின் உந்துதலில்
நடப்பதைக் கைவிட்டு
ஓர்
அங்கப்பிரதட்சணம் செய்தால்

இந்த
அழகு வீதி அழுக்காகும்
நம் தேகமோ தூய்மையாகும்
அப்படியோரு சுத்தம்



அடிக்கடி கொட்டும்
அந்த அமுத மழையும்
விடுப்பெடுத்துவிட்டால்

வானமே கூரையாக
பூமியே கம்பளமாக
ஓர் ஐந்து நட்சத்திர
விடுதியாகிப்போகும்
இந்த வேங்கூவர்

பாருங்களேன்
இந்தச் சூரியனை

இங்கு வந்ததும்
நானும் ஒரு நிலவுதான்
என்று
மஞ்சள் பூசிய
மணப்பெண்ணைப் போல
அழகு காட்டிச் சிரிக்கிறது

மயிலிறகு ஒத்தடம் போல்
நம் மேனியில் பதிக்கிறது
தன் முத்து முத்தங்களை

இங்கே
இரத்த அழுத்தக்காரனுக்கும்
வியர்வை என்பது
விளங்காத புதிர்தான் என்றால்
தாராளமாக நீங்கள் நம்பலாம்



காலங்காலமாய்ப் பாடுபட்டு
சொர்க்கத்தைக் கட்டி
கிரகப் பிரவேசம் நடத்த
நாள் குறித்துக்
காத்திருந்தபோது

யாரோ எவரோ குறும்புக்காரர்
அதைத் திருட்டுத்தனமாய்க்
கட்டியிழுத்துக்கொண்டு வந்து
இங்கே
இறக்கிவைத்துவிட்டார்கள் போலும்




சொல்ல மறந்துவிட்டேனே
நம் தமிழ்ப் பெண்கள் இங்கே
வாசல் தெளித்துக் கோலம்போடும்
வழியறியாமல்
செல்லமாய்ச் சிணுங்குவர்

ஏனெனில்

வாசலும் தெளித்து.
வண்ண வண்ணப் பூக்களால்
கோலமும் போட்டு
தினம் தினம்
வாஞ்சையாய் வந்து நிற்பாள்
வேங்கூவர் வசந்த தேவதை



அட
இத்தனை அழகு
எப்படி இங்கே
கொட்டிக்கிடக்கிறது என்று
இங்கும் அங்கும் நான்
உற்று உற்றுப் பார்த்தேன்

சொட்டுச் சொட்டாய் அமுத அழகு
எங்கிருந்தோ
வடிந்த வண்ணமாய்த்தான்
இருக்கிறது

வடிவது சொர்க்கத்திலிருந்தா
என்று எனக்குத் தெரியாது
ஆனால்
வடியும் இந்த இடம்
நிச்சயமாக
ஓர் அற்புதச் சொர்க்கம் என்று மட்டும்
நான் எங்கும் எவரிடத்தும்
சத்தியம் செய்வேன்

கவிதைகளும் நானும்

ஆயுள் பெரும்பாலையில்
அவ்வப்போது
வாழ்க்கை
கவிதைகளாய்த்
துளிர்க்கவே செய்கிறது

அதன்
தித்திப்பு முத்தங்களும்
திரும்பியோட ஏங்கும்
நினைவுகளும்
விழிகளெங்கும் கவிதைகளாய்ப்
பொழுதுக்கும்
வேர் விரிக்கின்றன

உணர்வுகளின்
உயிர்ச் சிறகுகளை
ஈரம் உலராமல்
எடுத்துப் பதித்துக்கொண்ட
இதயக் கணங்களாய்க்
கவிதைகள்

தீபத்தைத் தொட்டால்கூட
சுடாமல் போகலாம்
தீபம்பற்றிய கவிதையோ
சத்தியமாய்ச் சுடும்

புயலைப்
புரிகின்ற மொழியில்
மொழிபெயர்க்கவும் செய்யும்
அதை வளைத்துப்
பெட்டிக்குள் இடும் சாமர்த்தியத்தைப்
பூந்தென்றலின் வரிகளில்
பதுக்கிவைக்கவும் செய்யும்

கவிஞனின்
பிரம்மாண்ட எழுச்சி
கவிதை
கவிதையின் பித்தன்
கவிஞன்

கவிதைக்கும் மனத்திற்கும்
இடைவெளி இல்லை
ஏனெனில் அது
என்னுடைய இயல்பு

கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
ஏராள இடைவெளி
ஏனெனில்
அது வாழ்க்கையின் இயல்பு

வாழ்க்கையை வளைத்து
கவிதை ரதம் ஏற்றும்
தவ முயற்சிகளே
கவிதைகளாயும் நிகழும்
வாழ்க்கையாயும்
என்னோடு

காதலும் வ.வெ.சு. அய்யரும்

காதல் என்றால் என்ன
...

காலஞ்சென்ற ஸ்ரீமான் வ.வெ.சு அய்யர் காதலுக்கு மிகச் சிறந்த விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்:

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்தும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது மற்ற யாரைப் பார்க்கும்போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமனிய விசயமானாலும், அவருடைய குரலில் விசேசமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தையைக் காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும்போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக்காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ,
அது தேவரகசியம் - மனிதரால் சொல்லமுடியாதது.

(கல்கியின் கட்டுரைத் தொடரிலிருந்து...)

ஜெயமோகனின் இலக்கியம்

ஏன் இலக்கியம் மனிதனுக்குத் தேவை?

நாம் ஓர் இடத்தில் ஒரு காலத்தில் மட்டுமே ஒரு சமயம் வாழ முடிகிறது. சாகசமே வாழ்வாகக் கொண்டவனுக்கும்கூட வாழ்வனுபவங்கள் மிக எல்லைக்குட்பட்டவையே. இலக்கியம் மூலம் நாம் எல்லையின்றி வாழமுடிகிறது. காலமும் இடமும் கட்டுப்படுத்தாத வாழ்க்கை, பலவிதமான உறவுகள், பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான உணர்ச்சிக்கட்டங்கள்... இலக்கிய வாசகனுக்குப் பல்லாயிரம் வாழ்க்கை

- எழுத்தாளர் ஜெயமோகன்

வினோதன்

கேட்போருக்கு
மௌனத்தால் பாட்டிசைப்பான்

பார்ப்போருக்கு
உருவமற்று நடனமாடுவான்

நுகர்வோருக்கு
வாசனையற்று அனுபவமாவான்

சுவைப்போருக்கு
ருசியற்று விருந்தாவான்

தொடுவோருக்கு
பரிசமற்று அணைப்பாவான்

பிரபஞ்சத்தின்
ஒரே ஒரு நாடகத்தில்
ஒரே ஒரு பாத்திரப் படைப்பு

நட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்

நட்பென்னும் கவிதை
(நட்புரை)

- கவிஞர் சேவியர்

கவிதைகள் குறித்த நோக்கமும் போக்கும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் எனக்குச் சொல்வது ஒன்றைத் தான். கவிதை இன்னும் இருக்கிறது. தென்றலென்றோ, வாடையென்றோ, புயலென்றோ பெயரிட்டழைப்பது காற்று இருக்கும் இடத்தில் தானே. பெயர்களைப் பார்த்துப் பதட்டப்படாமல் காற்று இருப்பதனால் கவலையற்று இருக்கக் கற்றுத் தந்திருக்கிறது காலம்.

குளிர் பற்றிய ஒரு கவிதையை ஒரு முறை இணையத்தில் வாசித்தேன். மனதுக்குள் பனியை விளையச் செய்து விழிகளில் வியப்புச் சொடுக்கெடுக்க வைத்த அற்புதக் கவிதையாய்த் தோன்றியது எனக்கு. அப்போது ஒரு மின்னஞ்சல் எழுதிப் போட்டேன் அதை எழுதியவருக்கு. அந்த அறிமுகம்தான் இன்று நட்புரை எழுதுடா என்று மின்னஞ்சல் மூலமாகத் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

நண்பர் புகாரியின் கவிதைகளை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம், கண்டு, கேட்டு, உண்டு , உயிர்த்து , உற்றறியும் ஐம் புலன்களுக்குள்ளும் அற்புதமாய்க் கிளர்ந்து வரும் அவரின் கவிதைகளை அதனதன் கனத்துடனும், கலைந்து விடாத கவனத்துடனும் கவிதைக் களத்தில் மிக சாமர்த்தியமாக அவர் எடுத்துக் கொடுக்கும் நேர்த்திதான்.

சமுதாயத்தில் நிகழும் ஏதேனும் ஒன்றைப்பற்றிய அதீத பாதிப்பு அவருடைய கவிதைகள் பலவற்றில் முகமூடி இல்லாமல் முன்நிறுத்தப் படுகிறது. தான் எழுதிய கவிதை சரியானதே என்று வாதிடுவதற்குரிய அத்தனை தளங்களையும் யோசித்துப் பார்த்துக் கவிதை எழுதும் அவருடைய ஈடுபாடு என்னைப் பல வேளைகளில் சிலிர்க்க வைத்ததுண்டு.

காதலைப் பற்றி நண்பர் கவிதை எழுதுகிறார் என்றால் பதின்ம வயதுக்கே பயணப்பட்டுவிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றிவிடும் எனக்கு. தளிர் மாவிலையின் நுனியில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து ஒரு பெரும் துளியாக மாறி மண்ணில் வந்து வீழும் தங்கிய மழைத்துளி போல, காதலின் உணர்வுகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து மனதுக்குள் கொட்டிவிடும் மழைத்துளி அவர்.

தன்னை நேசிக்காத எவனும் முழுமையான மனிதனாக இருக்க முடியாது, தன் கவிதைகளை நேசிக்காத எவனும் முழுமையான கவிஞனாய் இருக்க முடியாது. புகாரி நேசிக்கிறார். சங்கத் தமிழை உள்வாங்கி சந்தத் தமிழில் கவிதை எழுதி, இது வெண்பா அல்ல என்பா என்று தைரியமாக முழங்கிக் கவிஞனாக வாழ்கிறார்.

அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்து விட்டால்
ஆவல் செத்துவிடும்

என்று ஆங்காங்கே வாழ்க்கைத் தத்துவங்களைச் சின்னச் சின்ன வரிகளில் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு போவது நண்பரின் பாங்கு. குருடன் கையில் கிடைத்த நவீன ஓவியம் போன்ற புரியாத கவிதைகள் படைப்பதில் புகாரிக்கு உடன்பாடு இல்லை. இதோ.. என்னிடம் இருப்பது இந்த ரோஜா மலர் தான். பிடித்திருக்கிறதா? என்று கேட்கின்றன அவருடைய கவிதைகள். கையில் இருப்பது என்ன மலர் என்று கண்டுபிடிக்கும் சிரமத்தை கவிஞர் தருவதில்லை. கண்டு பிடிக்கப் படாமல் போனால் குறிஞ்சி மலர்கள்
கூட நிராகரிக்கப் படலாம் அல்லவா?

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்க்கவிதைகள் பாடி விடாத எதுவும் இல்லை என்னும் கூற்று இனிமேல் மெய்யாக இருக்கச் சாத்தியமில்லை. எத்தனை காலம்தான் மயில்களைப் பற்றிப் பாடுவது? இ-மெயில்களைப் பற்றிப் பாடலாமே! கன்னிகளைப் பற்றியே கவிதை வடிப்பதை கொஞ்சம் நிறுத்திக் கணிணிகளைப் பற்றிக் கவிதை வடிக்கலாமே? நவீன யுகத்தின் அறிமுக முகங்களை கவிதைக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டுமே! நண்பரின் பல கவிதைகள் அதைச் செய்திருக்கின்றன.

இன்றைய வாசகனின் முன்னால் கவிதைகள் தங்கள் பல முகங்களையும் காட்டி நிற்கின்றன, பந்தியில் பரிமாறப் பட்டிருக்கும் விருந்து போல. நிராகரிப்பதும் வரவேற்பதும் வாசகர்களின் விருப்பம். இலக்கியக் கடலில் நீந்தும் வாசக மீன்களுக்கு பலவேளைகளில் உணவுத் தூண்டில்களில் வழங்கப்படுவது துயரமான உண்மை. கவிதைகள் புனிதமான பிறப்பினங்கள், அவை புனிதர்களால் எழுதப்பட்டு புனிதர்களால் வாசிக்கப்பட்டுப் புனிதத் தன்மை அடையவேண்டும் என்பவையெல்லாம் மீன்களைக் குழப்பும் மந்திரங்கள் என்பவற்றை புகாரி புரிந்து கொண்டிருக்கிறார்.

நான்காவது தொகுப்புடன் முன்னால் நிற்கும் நண்பரை மனமார வாழ்த்துகிறேன். பச்சை மிளகாய் இளவரசி நண்பரை கவிதை ராஜ்யத்தின் அரச இருக்கையில் அமர வைக்கட்டும்.

·

அன்புடன்
சேவியர்

வைரமுத்து ஏற்றிய மெழுகுவத்தி


வைரமுத்து கவிதைகளில் எது எனக்கு மிகவும் பிடித்த கவிதை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் சிரித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவேன். ஏனெனில் அதைத் தேடத் தொடங்கினால் அந்தத் தேடலில் நான் அப்படியே தொலைந்துபோய்விடக்கூடும்.

ஒவ்வொரு கவிதையிலும் தன் உயிரை எப்படித்தான் இவர் இறக்கி வைத்துவிடுகிறாரோ தெரியவில்லை. எதில் அவரின் எத்தனை சதவிகித உயிர் எப்படித் துடிக்கிறது என்று நான் கண்டறியும்முன் என் துடிப்புகள் உச்சத்துக்குப் போய்விடும்.

எனவே திருவுளச்சீட்டு எடுப்பார்களே அதுபோல ஏதோ ஒரு கவிதையைக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்துக்கொண்டு நான் அதில் எதை ரசித்தேனோ அதை எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தபோது என் தமிழ்ப் பேராசிரியரால் வைரமுத்து எனக்கு அறிமுகமானார். வைகறை மேகங்கள் என்ற கவிஞரின் முதல் தொகுதியிலிருந்து இரு வரிகளை எடுத்து புதுமை வரிகள் என்று அடையாளம்காட்டியதுதான் அவர் செய்த அறிமுகம். ஆனால் நான் வாசித்த வைரமுத்துவின் முதல் கவிதை நூல் திருத்தி எழுதிய தீர்ப்புகள்தான். அதன் ஒவ்வொரு கவிதையும் என் வேர்களை அறுத்துக்கொண்டு என்னைப் பறக்கச் செய்தது. அதிலிருந்து ஒரு கவிதையைக் கண்ணை மூடிக்கொண்டு இன்று தொட்டேன். தொட்டது "மெழுகுவத்தி".

ஐம்பதைக் கடந்து சில ஆண்டுகளும் ஓடிவிட்ட, சாகித்ய அகாடமி விருதுபெற்ற, பத்மஸ்ரீ வைரமுத்துவின் இன்றைய கவிதைகள் அவரின் வலிமைமிக்க விரல்களின் வழியே வழிந்தோடுபவை. ஆனால் இந்த 'மெழுகுவத்தி' கவிதையோ விமரிசனக் கட்டுகளுக்குக் கட்டுப்படாத அவரின் இளமைக்கால முயற்சி. வெகு நாட்களுக்குப் பின் நான் இக்கவிதையை மீண்டும் வாசிக்கிறேன். அன்று அது எனக்குள் ஊட்டிய உணர்வுகள் இன்னும் காய்ந்துபோகாமல் இருந்தாலும் இன்று எனக்கு அது எந்த உணர்வுகளை ஊட்டுகிறதோ அவற்றை நான் அப்படியே பதிவு செய்ய முயல்கிறேன்.

பலரும் மெழுகுவத்தி எரிவதைப் பார்த்தவர்கள்தாம். அதைக் காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அதின் முன் அமர்ந்து இரவு உணவு உண்பது மேலை நாடுகளில் பலருக்கும் பிடித்தவிசயம். சில மகிழ்ச்சிகளை அது நெஞ்சில் சுடர்விடச் செய்யாமல் எவரையும் விடாது. விழிமூடாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் பலர். சிலர் அது எரிந்து ஓயும் கடைசி நிமிடத்திற்காகக் காத்திருக்கவும் செய்வார்கள். அவ்வளவு எளிதில் அது ஓய்ந்தும்விடாது.

வைரமுத்து என்ற வாலிபரும் எரியும் ஒரு மெழுகுவத்தியின்முன் அமர்ந்திருக்கிறார். ஆனால் அது அவரை வெறுமனே அமர்ந்திருக்கவிடவில்லை. கற்பனைச் சிறகுகள் படபடவென அடித்துக்கொள்கின்றன. விழிப்பறவைகள் அந்தச் சுடர்மலரைச் சுற்றியே வட்டமிடுகின்றன. எண்ணக்குருவிகள் கீச்கீச்சென்று உள்ளுக்குள் ஒலியெழுப்பிக்கொண்டு இங்குமங்கும் தத்துகின்றன. உயிர் மெல்ல கரைகிறது. அதை உள்ளம் சூடாக உணர்கிறது. கவிதை வந்து கொட்டுகிறது.

சுயநலமில்லாத ஒரு தாய் நின்றுகொண்டே அழுகிறாள். ஏன்? தன் வயிற்றின் கரு எரிகிறதே என்று. வெள்ளை மெழுகு இங்கே தாயாகவும் அதன் உள்ளிருக்கும் திரி கருவாகவும் வைரமுத்துவின் கண்களில் பட்டதால் வந்த வரிகள் இவை. அழுகை என்றால் எப்படியான அழுகை, தன்னை அப்படியே கரைத்துத் திரவமாக்கும் அழுகை. இதோ அந்த வரிகள்...

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே
அந்தத் தாய் அழுகிறாள்


வார்த்தை முடிகளைப் பின்னிப் பின்னி தமிழை வசீகர கூந்தலாக மட்டுமே காணத் துடிக்கும் கண்கள் வைரமுத்துவினுடையவை. தமிழின் மீதுள்ள இவரின் அழகியல் தாகத்தை இவர் தன் ஒவ்வொரு சொல்லிலும் விருந்துவைக்காமல் விடுவதில்லை. பழந்தமிழின் செழுமைகளைப் பிழிந்து எளிமையாக நவீன யுகத்துக்குள் ஊற்றும் முயற்சி இவருக்கு இயல்பாய் வாய்த்திருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவராயிற்றே.

புதுக்கவிதைக்கு இசை கிடையாது என்பார்கள் அறியாதவர்கள். பேசும் பேச்சிலேயே இசை இருக்கும்போது இதயத்தை இயக்கும் புதுக்கவிதைக்குள் எப்படி இசை இல்லாமல் போகும். அது ஆரவாரம் கொண்ட தண்டவாளத்தின் தடக் தடக் இசையல்ல உயிரின் விரல்களைக் கோத்துக்கொண்டு மெல்ல மெல்ல அசையும் மென்மையான இசை. மலர் மலரும்போதும், இலைகள் வளரும்போதும், வேர்கள் நனையும்போதும் எழும் இசையைக் கேட்கும் அறிவு மனிதர்க்கில்லைதான். ஆனால் இசை எங்கும் உண்டு என்ற அறிவு உண்டு. வைரமுத்துவின் புதுக்கவிதைகளில் இசை துல்லியமாகவே பின்னிக்கிடக்கும். இந்தக் கவிதை முழுவதிலும்கூட அந்த இசையின் சுகானுபவத்தை ரசிக்கலாம்.

மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது


வைரமுத்து கவிதைகளில் இருக்கும் இன்னோர் அழகு அவர் முரண்வைத்து நடக்கும் நேரிய நடை. இந்தக் கவிதை முழுவதும் அது சிறப்பாக அமைந்திருக்கிறது.

மரணத்தை வரங்கேட்டா
அந்த உச்சித்தவம் நடக்கிறது?

அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே

விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?

நெருப்புப் பாசனம்
அங்கு நீர்ப்பயிர் வளர்க்கிறது


அடடா, ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு எத்தனை எத்தனை கோணங்கள். இவரின் கற்பனையின் அளவுகள் சுனாமி அலைகளைவிட எத்தனை உயரமானவை என்று வியக்கலாம். கவிதாகத்தால் தன்னை மறந்து பொங்கிய நிலையில் ஒரு விசயத்தின் பல சாத்தியக்கூறுகளையும் அலசி அலசி அழகுற சொல்லிப் போகும் தன்மை வைரமுத்துவினுடையது. ஒரு மரத்திற்கு எத்தனை வேர்கள் உண்டோ அத்தனையையும் நெய்தடவி நீவிவிட்டு காட்டிவிடவேண்டும் என்ற துடிப்பும் அதில் அமைதி பெறாத தவிப்பும் வைரமுத்து கவிதைகளில் காணலாம். இதன் காரணமாகத்தான் இவரின் பல கவிதைகள் தன் அளவில் நீண்டுவிடுகின்றன. அழகுதமிழ் வழிந்தோடும்போது அது நீளமானால் என்ன என்ற சமாதானத்தில் கவிதையின் புறநாறூற்று இறுக்கத்தைத் தியாகம் செய்யும் மனம் கொண்டுவிட்டவர் வைரமுத்து. மெழுகுவத்தி கவிதையில் மெழுகு எரிவதை இப்படி பல நிலைகளில் நின்று பார்க்கிறார். எல்லா நிலைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வேன் என்று துடியாய்த் துடிக்கிறார். பல தேர்ந்த கவிஞர்களும் ஆச்சரியப்படும் வண்ணம் நிறையவே சொல்லியும் இருக்கிறார். ஆனால் அவரிடம் கேட்டுப்பாருங்கள், இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்றுதான் இப்போதும் துடிப்பார். அந்தத் துடிப்புதான் வைரமுத்து.

மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?


எத்தனை அருமையான வரிகள் இவை? தீ மௌனமாய் நம்முடன் பேசுகிறது. உருகி வழியும் மெழுகினை வார்த்தைகளாய் தந்துகொண்டு சத்தமில்லாமல் உச்சக்குரலில் பேசுகிறது. அந்த வார்த்தைகளின் பொருள் தேடிச் சென்று பாருங்கள். இந்தக் கவிதையின் நீளம், இதில் உள்ள வரிகளைவிட எத்தனை பெரியது என்று விளங்கும். ஒரு கவிதை என்பது அதன் வரிகளோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி வாசிப்பவனின் இதயத்தில் நீண்டு வளர்வது. அப்படி இழுத்துச் செல்லும் இந்தக் கவிதையை வாசித்துவிட்டு விழிகள் நிலைகுத்திப் போகும் ஆபத்து அநேகமாக எல்லோருக்கும் நேரும் என்றுதான் தோன்றுகிறது.

எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?

கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?


வைரமுத்து இயற்கையின் தீராத நேசன். இலைகளோடு இலையாய் கிளைகளோடு கிளையாய் வேர்களோடு வேராய் இயற்கையோடு வாழும் வேட்கை இவரின் ஒவ்வொரு எழுத்திலும் காய்த்துத் தொங்குவதைக் காணலாம். வயல், வரப்பு, பட்டி, தொட்டி என்ற இந்தியாவின் ஜீவன்களால் உருவானவை இவரின் செல்கள். இன்றைய நவீன சாலைகளில் திடமாக நடந்தாலும் இயல்பான கிராமிய நடை நடந்து இதயங்களைச் சிலிர்க்கவைப்பவர் வைரமுத்து. வட்டார வழக்கே ஒருவரின் உண்மையான தாய்மொழி என்ற உண்மையை உணர்ந்தவர். இவர் தன் வட்டார வழக்கில் கவிதை பேசும்போதெல்லாம் பலரும் வாயடைத்துப் போகிறார்கள்.

நிலா என்றால் அது தேயும்தான். தேய்ந்து முடிந்ததும் ஓய்ந்துபோவதில்லை அது. மீண்டும் வளரும். ஆனால் மெழுகுவத்தி ஒரு நிலவைப் போலத்தான் அழகாகத் தேய்கிறது. ஆனால் அது மீண்டும் வளர்வதில்லையே ஏன்? அது இழக்கும் ஒளி நம் இதயத்தில் பெருகி வளர்கிறதே அதனால் இருக்கலாம். ஆனாலும் அது ஒரு சாபம் போலத்தானே தெரிகிறது?

எப்பொழுதுமே
இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன சபிக்கப்பட்ட நிலவா?


பெண்ணுக்கு கற்பு உண்டு என்கிறார்கள். ஆணுக்கு இல்லாவிட்டால் பெண்ணுக்கு மட்டும் எப்படி அது இருக்கும் என்று தெரியவில்லை? கர்ப்பம்தான் பெண்ணின் கற்பு என்று முடிவு செய்ததினால் வந்த பிழையாக இருக்கலாம். கற்பு என்றால் அதனை ஆணுக்கும் பெண்ணும் பொதுவில் வைக்கவேண்டுமல்லவா? இல்லாவிட்டால் பாரதியின் சிரிப்புக்கும் சினத்திற்கும் ஆளாகமாட்டோமா? சரி ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் கற்பு உண்டா? ஒதுக்கீட்டுக் கடையில் வாங்கும் அரிசிக்கும்தான் கற்பு உண்டு. நாலு கல்லை அதில் கலந்து கள்ள வியாபாரி அதைக் கற்பழித்துத் தருகிறானே? ஆனால் வைரமுத்து கற்பு எதற்கும் உண்டு என்கிறார் என்று இந்த வரிகளில் பாருங்கள்.

இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது


இப்படியாய்க் கவிதை முழுவதும் கற்பனை நிஜத்தின் தளங்களில் நின்றுகொண்டு விண்களம் விடுகிறது, கும்மாளம் போடுகிறது, அதிசயிக்க வைக்கிறது, அமைதியாய்த் தவழ்கிறது, நம்மை அசையாத பொருள்களாக்கி வேடிக்கையும் பார்க்கிறது.

இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள் முட்டி மூழ்கும்


வைரமுத்து நம்மிடம் ரகசியமாய் எதையும் சொல்ல வருவதே இல்லை. அவர் சொல்வதெல்லாம் பகிரங்கமானவைதான். ஏனெனில் அவர் சொல்வது எதுவும் கிசுசிசுக்கள் அல்ல. சாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, களவு அரசியல் என்ற அனைத்துச் சிறுமைகளையும் கிழித்தெறியும் உரத்த குரலின் உச்சம் அவருடையது. சமூக அநீதிகளைச் சாடும்போது இவரின் தீப்பிடிக்கும் வரிகள் எந்த அவலத்தையும் பொசுக்கிப்போடும் வீரியம் கொண்டவை. பள்ளிநாட்களிலிருந்தே மேடையேறி உச்சக்குரலில் உயர்வான கவிதைகளை செவிகளும் சிந்தனைகளும் மெச்ச அரங்கேற்றியே வளர்ந்தவர். தனக்குமுன் வாழ்ந்த தமிழின் நீண்ட பெரும் கவிஞர்களின் முகங்களில் வேண்டிய பகுதிகளைமட்டும் கிள்ளிக்கிள்ளி தன் முகத்தின் வடிவாய் ஆக்கிக்கொண்டவர். அதோடு நின்றுவிடாமல் தனக்கென ஒரு முகத்தையும் தெளிவாக வெளிக்கொண்டுவந்து தனிநடை போடுபவர்.

புதிதுபுதிதாக பல இலக்கிய நடைகளை தமிழ்க் கவிதை ஆற்றின் இளைய கிளைகளாய் ஆக்கித் தந்தவர். மரபிலும் மன்னன், இவர் புதுக்கவிதையிலும் பேரரசர் என்று கலைஞர் கருணாநிதியால் புகழப்பட்டவர். நல்ல தமிழ்க் கவிஞர்கள் என்று பெருமையோடு உலகெங்கிலும் சொல்லிக்கொள்ள நம்மிடையே உள்ள மிகக்குறைவான கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவர் மெழுகுவத்தியின் அடுத்த வரிகளில் ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறார்

அங்கே வடிவது கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?


நல்ல கேள்வி. பதில்தேடி சற்றே சிந்திக்கிறான் வாசகன். தன் கவிதையை எழுதுவதில் வாசகனையும் உடன் அழைத்துக்கொள்வது எத்தனை சர்க்கரை விசயம்? வாசகனோ "வைரமுத்து, நீ என்ன சொல்கிறாய்? சீக்கிரம் சொல்லிவிடு என் ஆவல் என்னைக் கொல்கிறது" என்று அடுத்த வரிகளை வாசிக்கிறான்

ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?


அடடா, இது எங்கோ இட்டுச்செல்கிறதே. மெழுகுவத்தி தன் கண்களை வேண்டி நிகழ்த்தும் உருகுவிரதமா இங்கே நிகழ்வது? இப்படியாய் இந்தக் கவிதைக்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டே எத்தனை தூரம் பயணப்படுவது? அடுத்தடுத்த வரிகள் மேலும் மேலும் கனமாகவே வந்து விழுகின்றனவே? தன் முதல் தொகுப்பிலேயே யாப்பிலக்கணத்துக்குள் புதுக்கவிதை எழுதியவர், புதுக்கவிதைகளுக்குள் மரபின் வாசனைகளை ஊற்றுபவர் வைரமுத்து. கனியன் பூங்குன்றனோடும், கம்பனோடும் வள்ளுவனோடும், பாரதியோடும், பாரதிதாசனோடும், கண்ணதாசனோடும் என்று மட்டுமல்லாமல் இன்றைய கடைக்குட்டியோடும் இணையாக அமர்ந்து சிறப்பாகப் பாடி பாராட்டுகளைப் பெறும் ஆற்றல் பெற்றவர். எத்தனை எழுதினாலும் எத்தனை பாராட்டுகளைப் பெற்றாலும் புத்தகம் வாசிப்பில்தான் அதிகம் சுகம்பெறுபவர். புத்தகம் இல்லாத பூமியில் இவர் நாசிக்கான மூச்சுக்காற்று இல்லை. பாட்டு, கவிதை, பயணக்கட்டுரை, மேடைப்பேச்சு, நேர்காணல் என்று இலக்கியத்தில் எதையும் விட்டுவைக்காதவர். அனைத்திலும் முத்திரை பதிப்பவர். அறிவும் உணர்வும் போட்டிபோட்டுக்கொண்டு உச்சத்தில் நிற்கும் வாய்ப்பினைப் பெற்ற அரிய கவிஞர்கள் இவரைப்போல் மிகச் சிலர்தான்.

இவர் கவிதைகளில் அடிக்கற்களாய் உறுதியாய் நிற்பவை நம்பிக்கை வரிகள்தாம். எந்த ஒரு நிலையிலும் நம்பிக்கையை ஊட்டிவிடாமல் எந்த ஒரு கவிதையையும் இவர் வெளியேற்றிவிடுவதில்லை. இந்த வரிகளைப் பாருங்கள். நடப்பது ஒரு அழிவு. ஒரு மெழுகு எரிந்து உருகி உருகி சிதைகிறது. இதில் எப்படி நம்பிக்கையை ஊட்டமுடியும். முடியாதல்லவா? ஆனால் வைரமுத்துவால் முடிகிறதே...

இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகுதான்
உயிர் வருகிறது


ஒவ்வொரு கவிதையின் கடைசி வரிகளிலும் இவர் தன் உயிரை அடர்த்தியாய் எப்படியோ இறக்கி வைத்துவிடுகிறார். ஒவ்வொரு கவிதையின் முடிவின் பின்னும் இவர் மீண்டும் பிறக்கிறார். இவர் கவிதை எழுதுகிறாரா அல்லது செத்து செத்து பிழைக்கிறாரா என்ற கேள்வி வருகிறதல்லவா? இந்தக் கவிதையின் கடைசி வரிகளையும் பாருங்கள். பல கற்பனைகளால் ஒரு மெழுகுவத்தி எரிவதை நம் முன்னே உலக விருதுபெற்ற படங்களாய் ஓட்டிக்காட்டிவிட்டு, அது சொல்லும் பாடத்தை மிகத் தெளிவாய் நமக்குச் சொல்லிவிடுகிறார். அப்படியே சிலிர்த்துப் போகிறது

மனிதனைப் போலவே
இந்த அஃறிணையும்
நான் அதிகம் நேசிப்பேன்

எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்

என் இரத்த நெய்யில்
இது நம்பிக்கைச் சுடரேற்றும்

வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்

அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.


மரணம் என்பது இல்லாத ஒன்று. அது மரணமடைந்துவிட்டதற்காக நாம் மௌன அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும். இக்கவிதையை ஒருமுறை வாசித்துவிட்டவர்களுக்கு, பின் எப்போதும் எங்கும் மெழுகுவத்தி எரியும்போதெல்லாம் சிந்தனையும் உணர்வுகளும் சேர்ந்தே எரிவதைத் தடுக்கவே முடியாது.
மகளிர்தின வாழ்த்துக்கள்

பெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.

தாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.

க‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.

அத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.

ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் இறைவனாலும் புகழப்படுபவள்.

அம்மா என்றழைத்தால் சில பெண்கள் கொதித்தெழுகிறர்கள்....


அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்

அம்மா - தங்கை
அம்மா - மகள்
அம்மா - பேத்தி
அம்மா - வேலைக்காரி
அம்மா - தாய்
அம்மா - எஜமானி
அம்மா - நண்பரின் தாய்
அம்மா - கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா - காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா - நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா - பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா - அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா - தமிழ் (தமிழன்னை)
அம்மா - தெய்வம்
அம்மா - மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா - துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா - வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா - கலைஞரின் எதிர் இருக்கை :)
அம்மா - மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா - பெண்கள்
அம்மா - தாய்க்குலம்

இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!

எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான்.

பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!

சட்டமா? சிந்தனையா? எது சரி? ஏன்?

இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பா என ஜனநாயக நாடுகள் அனைத்திலும் அபார்ஷன் செய்யும் உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றார் ஒரு நண்பர்.

சில நாடுகளில் பெண்கள் விபச்சாரம் செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சில நாடுகளில் யாரும் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம், அதெல்லாம் சட்டத்தின் பிரச்சினை இல்லை என்கிறது.

இந்த சட்டப்பூர்வம் என்பதை முதலில் ஒதுக்கி வையுங்கள். அது நாட்டுக்கு நாடு மாறுபடுவது. மதக்கருத்துக்களை ஒதுக்கி வையுங்கள். அதுவும் மதத்துக்கு மதம் மாறுபடுவது.

உங்கள் கருத்து என்ன? ஏன்? என்று விளக்கமாக எழுதுங்கள். அதுவே நாளையை முடிவுசெய்யும். சட்டம் சொல்வதை நீங்கள் திருப்பிச் சொல்வதற்கு நீங்கள் ஏன் வேண்டும். நான் நேரே சட்டத்தைப் பார்த்துக்கொள்வேனே?

இந்த நாட்டின் சட்டங்களை இயற்றியவர்கள் விவரம் தெரியாமலா சட்டங்களை இயற்றினார்கள் என்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் சட்டத்தை மாற்றுகிறார்களே, என்றால் முன்பு விபரம் தெரியாமல்தானே செய்திருக்கிறார்கள் என்கிறேன் நான்.

ஆளும்கட்சி மாறும்போதெல்லாம் சட்டமும் மாறுகிறது. ஆட்சி மாறியதும் மீண்டும் தடுக்கப்பட்ட ஒரு சட்டமே முறையானதாகிறது. ஏன்? எப்படி?

சட்டமே அனுமதிக்கும்போது நாம் அதை தடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது புகாரி என்கிறீர்கள், இன்று ஒரு சட்டம் நாளை இன்னொரு சட்டம். நாம் சட்டத்தையே தவறு என்று கூறும் சிந்தனை ஓட்டம் உடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிடால் கருத்தாடல் எதற்கு என்கிறேன் நான்

அழகே அழகு

அழகு என்பதும் ”பர்சனாலிடி” என்பதும் முற்றிலும் வேறு வேறு என்று தமிழில் சொல்லமுடியாது.

பர்சனாலிடி என்பது ஆளுமைதான். ஆளுமை என்பது குணாதிசயங்கள்தாம். நல்ல குணாதிசயங்கள் என்பது ஒருவரின் அழகுதானே! அழகு என்றதும் நாம் புற அழகை மட்டுமே நினைக்கத் தேவையில்லை.

ரஜினியைப் பார்த்து உங்க ஸ்டைலே அழகு தலைவா என்கிறோம் - இது புற அழகா?
வைரமுத்துவைப்பார்த்து நீங்கள் பேசுவது பேரழகு என்கிறோம் - இது புற அழகா?
காமராஜரைப் பார்த்து நீங்கள் அரசியல் செய்யும் அழகே அழகு என்றோம் - இது புற அழகா?

அழகு என்ற தமிழ் வார்த்தை மிகவும் விரிந்த பொருளுடையதல்லவா?

கவர்ச்சியும் அழகுதான். கவர்ச்சி என்பது புற அழகால் மட்டுமா வருகிறது? காண்பதற்கு அழகாக இருக்கிறது என்பதும் பழகுவதற்கு அழகாக இருக்கிறது என்பதும் வேறு வேறுதான்.
தமிழில் அழகன் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் அப்படி நேரடியாய் இருப்பதாய்த் தெரியவில்லை.

அழகிப்போட்டியில் 60 வயது கிழவிகள் ஏன் வருவதில்லை? புற அழகும் இளமையும் அங்கே அழகுக்கான முக்கிய அளவுகோள். அதன் பின்னறே குணாதிசயஙக்ள் ஆளுமைகள் எல்லாம்.

”பெர்சனாலிடி டெவலப்மெண்ட்” என்பது முற்றிலும் வேறு. அங்கே நடை உடை பாவனை மொழியாளுமை என்றெல்லாம் கவனிக்கப்படும். நடை உடை பாவனை அனைத்தையும் அழகாக்குவதே அது செய்யும் காரியமல்லவா?

நிறுவனன் வரவேற்பாளர் வேலைக்கு புற அழகும் தேவை. ஆனால் அது மட்டுமே போதாது. மற்ற அழகுகளும் தேவை.

பிள்ளைகளைக் காப்பது தந்தைக்கழகு. மரியாதை தருவதுதான் மகனுக்கழகு. பிறந்த வீட்டுப் பெருமை காப்பது மகளுக்கழகு என்றெல்லாம் சொல்கிறோமே இங்கே எது அழகு?

”பெர்சனாலிடியில்” உள்ள நேர்மறை குணத்தை அழகு என்றுதானே சொல்லவேண்டும்? அதன் எதிர்மறை குணம்தான் அசிங்கம் அல்லவா?

என் கவிதை ஒன்று அழகு எது என்று ஒரு பார்வை தருகிறது:

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி அழகு
விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி அழகு
புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி அழகு
நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி அழகு
இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி அழகு
சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி அழகு
கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி அழகு
மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி அழகு
கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி அழகு
கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி அழகு
விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி அழகு
இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி அழகு
கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி அழகு
மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி அழகு


இன்னொரு கவிதை புற அழகை முதன்மையாக்கி பெர்சனாலிடி அழகை உள்ளடக்கி இப்படி வர்ணிக்கிறது:

அழகு என்பது

இனியும்
ஒருமுறையென
விழிமணி இழுப்பதும்

பார்க்கும் பொழுதெலாம்
பூக்கள் பொழிவதும்

மூடிய இமைக்குள்ளும்
ஈரமாய் மிதப்பதும்

முற்றாய் மறந்த நாளொன்றில்
நிலவாய்ப் புலர்வதும்

புலரும் பொற்கணங்களில்
இதழ்முகை அவிழ்ப்பதும்

ஊசிகளாய் இறங்காமல்
உணர்வுகளுக்குள்
ஊற்றுகளாய் எழுவதும்

ஆசைத்திரி தூண்டாமல்
இதயக் கிண்ணியில்
தீபச்சுடர் ஏற்றுவதும்

அழகு அழகு
பேரழகு

ஆனந்தம் நிறைந்த முதல் அழுகை

நம் வாழ்க்கை நம்மிடம்தான் இருக்கிறதா அல்லது யார் யாரோ அதை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ ஓடி ஆடி விளையாடுகிறார்களா?

பிறந்து விழுந்த உடனேயே நம்மையும் அறியாமல் நாம் நம் வாழ்க்கையை தேடி விழிகளால் புறப்படுகிறோம். அல்லது புறப்பட்டதாய் பிற்காலத்தில் கற்பனை செய்துகொள்கிறோம்.

பிறந்து விழுந்ததும் வாழ்க்கைக்குள்ளேயே படுத்துக்கொண்டு வாழ்க்கையை எங்கே தேடி ஓடுவது?

ஆம், அம்மா மடியைவிட வேறு வாழ்க்கை இருக்க முடியுமா? அம்மா மடியின் கதகதப்பில் கண்கள் மூடிக்கிடக்கிறோம்.

சுகமான வாழ்க்கை. வேறு எப்போதும் எங்கேயும் கிடைக்கவே கிடைக்காத சுகம்கொண்ட பெருவாழ்க்கை.

தாய்ப் பாலின் சூடு இதயத்தின் இடுக்குகளிலும் பரவிக்கிடந்த நாட்கள் ஞாபகங்களில் இருப்பதில்லை ஆனால் மிகுந்த சுகத்தோடு அனுபவித்திருக்கிறோம்.

இதில் ஒரு சங்கடம் உண்டு. எதை நாம் அனுபவிக்கிறோமோ அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அறிவற்றிருப்பது. அதன் மேன்மை தெரியாமல் அதை விட்டு விட்டு எழுந்து ஓடுவது. பின் அந்த பாச சூட்டின் தேவ ஈர்ப்பால் மீண்டும் ஓடி வந்து தன்னை அறியாமலேயே ஒட்டிக்கொள்வது.

எல்லாம் சரிதான், ஆனால் அந்த பாக்கியம் என்பது எல்லோருக்கும் ஒன்றுபோலவே நிறைவாய் கிடைப்பதில்லையே என்பதுதான் சிலருக்கு அல்லது பலருக்கு மன்னிக்க முடியாத உண்மை.

ஆனாலும் குறைந்த பட்ச தாயன்பு என்பதுகூட ஒரு வரம்தான். நாம் வாங்கிவந்த வரம்தானே நம் வாழ்க்கையின் நீள அகலங்களாகிறது.

ஆனாலும் ஒன்றை இங்கே சொல்லவேண்டும். தன்னை எட்டி எறியும் தாயை அதன் பிள்ளை அதிகமாக நேசிக்கிறது. அவள்பின் அழுதழுது ஓடுகிறது.

அதுதான் மானிடத்துக்கு மட்டுமல்ல விலங்கினத்திற்குமான பிறப்பின் ரகசியம்.

கௌரவம் கோபம் தன்மானம் என்று எது வந்து முட்டியும் விலகியோட நினைப்பதே இல்லை.

தாயின் நினைவும் தாய்ப்பாச ஏக்கமும் இதுபோன்ற குழந்தைகளின் மனோநிலையை வெகுவாக பாதித்துவிடுகின்றன. கொஞ்சும் பிஞ்சிலேயே வஞ்சிக்கப்பட்ட பைத்தியம் ஆகிவிடுகின்றன. அந்த ஏக்கமும் துக்கமும் தன் இறுதிநாளிலும் தீர்வதே இல்லை.

எதை கண்டாலும் தாயாய் நினைக்கும் மனோநிலை உயர்வானதா தாழ்வானதா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

அதில் வெல்பவர் பிஞ்சு ஏக்கத்தால் பைத்தியமாக்கப்பட்டு கண்ணீராய் கரைந்தோடுபவராய்த்தான் இருக்கமுடியும்.

சகோதரியை கண்டால் இவள் என் தாய் என்று நினைப்பது. தோழியை கண்டால் இவள் என் தாய் என்று சிலிர்ப்பது. காதலியைக் கண்டால் இவள் என் தாய் என்று உருகுவது. மனைவியை கண்டால் இவள் என் தாய் என்று அழுவது. மகளை கண்டால் இவள் என் தாய் என்று குழைவது. பேத்தியை கண்டாலும் இவள் என் தாய் என்று பிணாத்துவது.

இப்படியாய் எதிலும் எப்போதும் தாயை காணும் கண்கள் கிட்டாத தாய்ப்பாசத்துக்கு ஏங்கி ஏங்கி நீர்வழிந்த கண்கள்தாம்.

விரும்பாதவளாய் இருந்தாலும் தன் தாயைப் பிரிய எந்த குழந்தையும் விரும்புவதே இல்லை. பள்ளிக்கு செல்வது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் பெரும் துயரம் நிறைந்த பாலைத்திணை.

தாயின் மடியில் எல்லாம் பெற்ற பிள்ளைகள் கொஞ்சம் பிரிந்து பள்ளிசெல்ல விரும்புவது உண்டு. ஆனால் தாயின் பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகள் அழுது புரளுமே தவிர பள்ளி செல்ல விரும்புவதில்லை.

ஆனாலும் பள்ளிக்கு சென்றுதானே ஆகவேண்டும். அங்கே பள்ளியில் தமிழாசிரியர் பாடம் நடத்தினார். 'அ' என்று எழுதினார் குழந்தைகள் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தன. ‘ஆ' என்று எழுதினார் ஓ அப்படியா என்று பார்த்துக்கொண்டிருந்தன. 'இ' என்று எழுதினார் அவ்வளவுதான் அதில் ஒரு குழந்தை அழத்தொடங்கிவிட்டது. 'அம்மா அம்மா அம்மா' ஒரே அழுகைதான். நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையின் தாய் அமர்ந்திருந்தால் அது 'இ' போல இருக்கும் என்பதால் அந்தக் குழந்தையின் அழுகை நிற்கவே இல்லை.

ஆம், நம் முதல் அழுகை தாயோடுதான் தாய்ப்பாலுக்காகத்தான் தாயின் கதகதப்யைத் தேடித்தான், தாய்மடி என்ற சொர்க்கத்தை விட்டுப்பிரியாத நிலைக்காகத்தான்.

இலக்கியத்தை வாழ்கிறேன்

வாழ்க்கையில்
நான்
வாழ்க்கை
தேடத்தொடங்கியதும்
இலக்கியம்
என்னைத்
தேடத்தொடங்கிவிட்டது

எனக்கு
வாழ்க்கை
வாசிலில் நின்றது

இலக்கியத்திற்கு
நான்
முற்றத்தில் கிடைத்தேன்

இலக்கியம்
எனக்குக் கிடைத்துவிட்டது
வாழ்க்கைக்கு
நான் கிடைத்துவிட்டேன்

வாழ்க்கை
என்னை வாழ்கிறது
நான்
இலக்கியத்தை வாழ்கிறேன்

ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல



அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பாட்டி மாறிவிட்டாள். நாலு எழுத்துப் படித்தால்தானே நல்லது கெட்டது தெரியும், புருசனைத் தெரிஞ்சிக்கவாவது படிப்பு வேணாமா என்கிறாள் இன்று.

ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைகிறேன் என்ற தாய் மாறிவிட்டாள். ஒண்டியா நின்னாலும் எல்லாத்தையும் காப்பாத்தற வக்கு வேணும் அடங்கிப்போகவும் தெரியணும் அடக்கவும் தெரியணும் இணையா நின்னாத்தானே அது குடும்பம் என்கிறாள் இன்று.

இந்தப் பாரம்பரியத்தில் வளர்ந்தாலும் கணினிப் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகம் கண்டாலும்
கைக்கெட்டிய தூரத்தில் பல நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளே காத்துக்கிடந்தாலும் உனக்கு அடிமையாய் வரக் காத்திருக்கிறேன் என்கிறாள் மகள்.

காதல் என்பது வாலிப மனங்களில் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. காதல் என்பது புனிதமான அர்பணிப்புதான் அதில் சந்தேகமே இல்லை ஆனால் ஒருவரை இன்னொருவருக்கு அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல. இருவரும் சேர்ந்து தங்களைக் காதலுக்கு அர்ப்பணிப்பது.

அப்படி அர்ப்பணிப்பவர்கள்தான் ஒருவரை ஒருவர் உயர்வாய் மதித்து நடப்பர் ஒருவரை ஒருவர் ஓயாது உயர்த்தி வாழ்வர். கண்ணுக்குள் வைத்துக் காப்பேன் என்று வீட்டுக்குள் வைத்து பட்டும் பவளமும் தந்து கிளிப்பிள்ளை ஆக்கமாட்டார்கள்.

மணமகளின் இடது கையை மணமகனின் வலது கையில் ஒப்படைக்க மணமகனின் இடது கை மணமகளின் வலதுகையில் ஒப்படைக்கவேண்டும். அதுதான் வாழ்க்கை. மற்றதெல்லாம் திருமணம் என்ற பெயரில் உறுதி செய்யப்படும் அடிமைத்தனங்கள்.

தூக்கிச் சுமப்பதல்ல வாழ்க்கை. இணையாகக் கைகோப்பதும், கைகோக்கும் வலுவினை தன் துணைக்குத் தானே உருவாக்கித் தருவதும்தான் வாழ்க்கை. ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல. சுயகௌரவத்தைச் சிதைக்கும் எதுவும் உறவே அல்ல

அடிக்கொருதரம் துடிக்குது மனம்


தமிழின் வல்லினம் கசடதபற. காதலின் வல்லினம் அடங்காத மோகம். ஆகவேதான் இந்த தேன்முத்த நிலாக் கவிதை தமிழின் வல்லின எழுத்துக்கள் மிகுந்து காதலின் வல்லினம் இசைத்து அமைந்துவிட்டது. நான் முயலாமல் அதுவே தானாக இயல்பாக.


அடிக்கொருதரம்
துடிக்குது மனம்
படுக்கையை விரி இளமானே
பனிப் படுக்கையை விரி
இளமானே

கொடியது கனம்
ஒடியுது இடை
மடியினில் இடு இளமானே
என் மடியினில் இடு
இளமானே

வெடித்ததும் மலர்
கொடுக்குது தேன்
தடுப்பதும் ஏன் இளமானே
நீ தடுப்பதும் ஏன்
இளமானே

தடுக்கின்ற வெட்கம்
வடிக்குது ரசம்
உடுப்பினை எறி இளமானே
உன் உடுப்பினை எறி
இளமானே

தொடுவது சுகம்
விடுவது ரணம்
முடிவற்ற தொடர் இளமானே
இது முடிவற்ற தொடர்
இளமானே

கவிதைக்குப் பொய்யழகு


சுனாமியின் வேதனையை ஒரு கவிதையாய்க் கொட்டினால் பாருப்பா, சோகத்தில் ஆதாயம் தேடுகிறான் கவிஞன். இவனுக்கு இப்படிப் பொய்யாய் புலம்பியே பழகிப்போச்சு என்கிறார்கள் அறியாத சிலர். சுனாமியின் தகவல் வந்ததிலிருந்து, கண்கள் கரைபுரண்டோட செய்திகள் கேட்பதிலேயே தவிப்போடு இருந்தேன். சுனாமிக்கு உண்மையான காரணம் என்ன அதை எப்படித் தவிர்க்கமுடியும் என்ற என் சிந்தனை
எங்கெங்கோ சென்றது.

நேற்று முதல் காரியமாக அதிகாலையிலேயே, இந்து நாளிதழ் நிவாரண நிதி மூலமாக நிதியளித்தேன். நேற்று நடு இரவில் என் மனதில் தங்கிய சோகம், சிந்தனை, உணர்வுகளின் அலைக்களிப்பு எல்லாம் கவிதையாய் வெளிவந்து கொட்டின.

ஓவ்வொருவருக்கும், ஒவ்வொரு வடிகால். கவிஞனின் வடிகால் கவிதை. துக்கம் என்பது அழுகையால் மட்டும் வருவதில்லை. கவிதையாலும் வரும். களிப்பில் வருவதுதான் கவிதை என்பது தவறான நினைப்பு. இதுபோன்ற தருணங்களில் வரும் கவிதைகள் வார்த்தை தேடி அலையாது. உணர்வுகளை அப்படியே கொட்டும்.

கவிஞர்கள் உணர்வுகளால் ஆனவர்கள். பிணங்களைத் தின்று புகழ் தேடமாட்டார்கள். கவிஞன் என்பது அரிதார முகம் அல்ல. அது ஒரு மன இயல்பு. கவிஞன் தன்னை மீறிய உணர்வுகளால் ஆளப்படுபவன்,
அதைக் கவிதைகளில் இறக்கிவைக்கிறான். அது மிகை என்றும் கவிதைக்குப் பொய்யழகு என்றும்
கவிதை என்பதே பொய் என்றும் கூறுகிறார்கள் சிலர்.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்று கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்தான், அதீத மிகைதான். நிலாவைப் பிடித்துத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று
தாய் அதை நமக்குப் பேச்சுவரும்முன்பே சொல்லிக் கொடுத்துவிடுகிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவள் பாசம் என்ற அரிதாரம் இட்டவள் ஆகிறாளா?

உனக்காக என் உயிரைத்தருவேன் என்கிறான் உணர்வு பொங்கும் நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் நட்பு என்ற அரிதாரம் இட்டவன் ஆகிறானா? வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? அவன் காதல் என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா?

இணையத்தால் ஆகாதது ஏதுமில்லை என்கிறான் கணிஞன். எனவே, கணிஞனுக்குப் பொய்யழகு என்று சொல்லலாமா? கணிஞன் பெருமை என்ற அரிதாரம் பூசிக்கொள்கிறானா? இப்படியே போனால்,
வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.

நீயும்கூட கவிதை எழுத வந்துவிட்டாயா?


எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும். எழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது

வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன்
மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்

கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் செத்துப்போவான்.

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதையாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

நான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.

கவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.

சிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.

கவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.

இருள்

விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது

பதறிப்போய்
ஊதி அணைத்தேன்

ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

ஞாபகங்கள் தேவையில்லை

நிலைத்திருக்கப்
போவதற்கு
ஞாபகங்கள் தேவையில்லை

புதுப்புது மாற்றங்களும்
அதனுள்
இதயங்களின் ஆட்டங்களுமே
அற்புத உறவு

நிலைக்காமல் போனாலும்
ஞாபகங்கள் தேவையில்லை

பறிபோன உறவுகளில்
பழைய ஞாபகங்கள்
சொரிவது வெறும்
விழித்துளிப்
பூக்களைத்தான்

பழுதுபட்ட இதயங்களை
பழைய ஞாபகங்கள்
வந்து ஒட்டித் தைக்கலாம்

ஒட்டவைத்தப் பூவும்
உயிர் மொட்டுப் பூவும்
ஒன்றாவதில்லை

ஒட்டுப் பூக்களில்
பழுதடைந்த ஞாபகங்களின்
தொடர்
விரிசலையே திறக்கும்

ஞாபகங்கள்
தேவையில்லை

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர்

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர் என் பெயர் :)

ஆகவே buhari@gmail.com என்று என் முகவரியை அமைத்துக்கொண்டேன்.

அடுத்து இந்தப் பிரபஞ்சம் என்பது அனைத்தாலும் ஆனது. நஞ்சும் அதில்தான் அமுதமும் அதில்தான். ஆனால் அது அன்பால் நிறைந்திருந்தால் அத்தனை உயிர்களும் இன்பமாய் வாழுமே என்ற ஆதங்க்ம் எனக்கு எப்போதும் உண்டு.

தொய்ந்துபோகும் உயிர்களைத் தூக்கி நிறுத்துவது வெறெதுவும் இல்லை, அன்புதான். அன்பு இருந்தால் அருளும் குணம் இருக்கும். அன்பு இருந்தால் மன்னிக்கும் மாண்பு இருக்கும். அன்பு இருந்தால் கொடுக்கும் மனம் இருக்கும். அன்பு இருந்தால் அகிலமே நமதாகிப்போகும். இப்படியே அனைவருக்கும் அகிலமே அவர்க்ளுடையது என்று ஆகிவிட்டால், வாழ்க்கை எத்தனை இனிமையானது.

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இதுதான் நான் அன்புடன் என்ற என் குழுமம் தொடங்கியம் எழுதிய அழைப்பு வரிகள். இதை முன்பே யோசனை செய்துகொண்டு அன்புடனைத் தொடங்கவில்லை. முதன் முதலில் கூகுளிடம் குழுமம் தொடங்க பதிவு செய்தபோது குழுமம் பற்றிய குறிப்பு கேட்டது. குறிப்பா? சரி என்று அப்படியே அப்போதே இந்த வரிகளை எழுதினேன்.

அந்த அன்பு பிரபஞ்சத்தில் இருக்க வேண்டுமானால் நம் ஒவ்வொருவரிடமும் அது நிறைவாய் இருக்க வேண்டும். நம் ஒவ்வொருவரிடமும் அன்பு இருக்க வேண்டும் என்றால் அது என்னிடம் முதலில் இருக்க வேண்டும்.

என்னிடம் இருப்பதை எனக்கே உறுதி செய்வதாய் ஆக்கிக்கொண்டதுதான் என் பெயருடன் இணைத்தது. பலரும் அன்புடன் என்று எழுதி தன் பெயரை அதன் கீழேதான் இடுவார்கள். ஆனால் நான் அன்புடன் புகாரி என்று ஒரே வரியில் எழுதுவேன். ஏனெனில் என் பெயரே அதுதான் என்பதுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆகையால் என் எழுத்துலகுக்காகவும் ந்ண்பர்களுக்காகவும் அலுவல் அற்ற பிற விசயங்களுக்காகவும் நான் உருவாக்கிக்கொண்ட் இன்னொரு மின்னஞ்சல்

anbudanBuhari@gmail.com

என் வலைப்பூவும் http://anbudanbuhari.blogspot.com தான்
என் குழுமமும் http://groups.google.com/group/anbudan தான்

நால்வகை மனிதன்

மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்!

1. பிறப்பிலேயே தவறுசெய்யாமல் வாழ்வார்கள். தவறிப்போய் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதற்காக வருந்தி வருந்தியே பிறகொரு தவறும் செய்யாமல் வாழ்வார்கள்

இது மனிதத்தின் வெற்றி

2. மதங்கள் சொல்வதை அப்படியே கேட்டு மாறாமல் நடப்பார்கள். கடவுளுக்குப் பயந்து எந்தப் பாவமும் செய்யமாட்டார்கள்.

இது மதத்தின் வெற்றி

(ஒரே ஒரு மதம் மட்டும் ஒரு நாட்டில் இருந்தபோது, பிரச்சினைகள் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஒரே இடத்தில் ஒன்றுக்குமேற்பட்ட
மதங்கள் வந்து சர்ச்சைகள் கிழம்பி சண்டைகள் வலுத்து நாசமாகிவிட்டன. இன்று உலகம் என்பது சுருங்கி ஒரே இடமாகிவிட்டது இதனால் மதம் மூலமாக உருவாகும் வெற்றியைவிட தோல்விகள் அதிகமாகிவிட்டன.)

3. நல்ல மனதுடன் பிறந்திருக்கமாட்டார்கள். மதம் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். சட்டத்தால் கண்காணித்து ஒடுக்கினால்தான் அடங்குவார்கள்.

இது சட்ட ஒழுங்கின் வெற்றி

4. நல்ல மனமும் கிடையாது, மதம் சொல்வதையும் கேட்கமாட்டார்கள், சட்டத்துக்கும் பயப்படமாட்டார்கள், எப்படி சட்டத்தைச் சாதுர்யமாய் மீறலாம் என்பதிலேயே கவனமாய் இருப்பார்கள். இவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.

இது மனித இனத்திற்கே தோல்வி

ஆனால் இந்தத் தோல்வியின் அளவு ஒரே ஒரு சதவிகிதம்தான். மனிதத்தின் வெற்றி சுமார் 60 சதவிகிதம் மதத்தின் வெற்றி சுமார் 10 சதவிகிதம் சட்ட ஒழுங்கின் வெற்றி சுமார் 29 சதவிகிதம் மனித இனத்தின் தோல்வி சுமார் 1 சதவிகிதம் என்று ஒரு அனுமானம் கொள்வோம். ஆனால் ஒரு சதவிகித தோல்வி என்பதே நம் உலகிற்கு மிகப்பெரிய நாசம்தான்.

ஜூலை 2007 உலக மக்கள் தொகை: 6,602,224,175 (6.6 பில்லியன்) இதில் ஒரு சதவிகிதம் என்பது 66,022,242 (66 மில்லியன் - 6.6 கோடி)

உலகில் இந்த 66 மில்லியன் மக்கள் தவறு செய்தால் அதனால் வெகு எளிதாக அழிவது 6.6 பில்லியன் மக்கள். பாலைவிட விசத்திற்கு வீரியம் அதிகம்தானே?

ஆகவே இந்த ஒரு சதவிகித மக்கள் செய்யும் தவறுகளையும் சரிசெய்தே ஆகவேண்டும். அதற்குச் சரியான வழி குற்றங்களுக்கு ஏற்ப கடுமையான சட்டங்களும், அதைவிட அந்தச் சட்டங்களை 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்துவதும்தான்.

இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?

நல்லா கவிதை எழுதறீங்க. கற்பனை வளம் எழுத்து நடை எல்லாமே அமோகமா இருக்கு. ஆனால், இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?

அநேகமாய் ஒவ்வொரு கவிஞனும் இந்த வரிகளால் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருப்பான்.

பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று
சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று தோன்றும். ஆனால் ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் இவர்களாகத்தான் இருபார்கள்.

கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.

வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது. அவற்றை அவற்றின் இயல்பிலேயே விட்டால்தான், காய்ப்பவையும் பூப்பவையும் சிலிர்ப்புகள் உதிர்ப்பனவாய் அமையும்.

தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும்
வாய்ப்புகள் உண்டு.

ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.

கவிஞன் அப்படிப்பட்ட ஒரு தாவரம்!