தமிழ் பைத்தியக்கார மொழியா?

அன்புடன் புகாரியின் இருநூறு முந்நூறு நாறூறு பகுதியை பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மிகுந்த சுவை உடையவை என்று கூறுகிறார். அதே நேரம் தமிழின் பைத்தியக்காரத்தனம் என்கிற வார்த்தையைக் கடுமையாகச் சாடுகிறார்.

இது போன்ற விமரிசனங்கள் சில என் முன் பதிவுக்கு வந்தன.

அமுத தமிழை விளையாட்டாகக் குறைத்துக்கூறினாலும் அதை ஒரு தமிழனும் ஏற்கமாட்டான். தமிழ்ப்பேராசிரியர் எப்படி ஏற்பார்?

ஆங்கிலத்தில் இடத்திற்கு ஏற்ப உச்சரிப்பு மாறுவதும் அந்த மொழிக்கே உரிய தனிப் பண்புதான் அழகுதான். அதில் பிழை ஏதும் இல்லை.

அது போலவே தமிழில் சொல்லாடல் ஓர் அழகுதான் பிழையில்லை.

ஒரு மொழியை ஒரு காரணத்திற்காகப் பைத்தியக்கார மொழி என்று சொல்ல வந்தால் எல்லா மொழிகளையுமே பைத்தியக்காரமொழி என்று சொல்லிவிடலாம்.

இதழ்கள் ஊறுமடி - இதழ் கள் ஊறுமடி

எழுத்துக்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இட்டால் பொருளே மாறிப்போகும் மொழியை அழகென்பதா பைத்தியக்காரன் மொழி என்பதா?

இதுபோன்ற இனிமை நிறைந்த சொல்லாடல்கள் தமிழின்மீது நம்மைப் பைத்தியமாய் அலைய வைக்கும்.

இப்படி பைத்தியாகி நேசிக்க்கும் பைத்தியக்காரர்களின் மொழிதான் தமிழ் :-)

இந்த இருநூறு முந்நூறு நானூறு விளையாட்டால் தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் வரும் என்று கண்ணதாசன் சொன்னார். நீதிபதிக்குப் பைத்தியமே பிடித்துவிடும், தீர்ப்பு வழங்க எப்படி முடியும் என்றார்.

இப்படியான மேலும் சிலவற்றையும் காண்போம்:

”வாரும் இரும்படியும்” என்றான் கொல்லன். சினந்த கவிஞருக்கு கொல்லன் விளக்கம் தர வேண்டியதாயிற்று “வாரும், இரும், படியும்” உங்கள் கவிதைகளை என்று

”பணத்தட்டு யாருக்கு” என்றான் புலவன், இரண்டும் உனக்குத்தான் என்றான் மன்னன். பணத்தட்டும் உனக்கு பணத்துக்கான தட்டுப்பாடும் உனக்கு.

கடைமடை என்ற ஊரிலிருந்து கடைசியாக மேடையேற வந்த கவிஞரை ”கடைமடையரே” என்றழைத்தார் கவியரங்கத் தலைவர், ”மடத்தலைவரே” என்று வணக்கம் சொன்னார் கடைமடைக் கவிஞர்

இப்படியாய்த் தமிழில் ஏராளம் உண்டு. சுவைத்துச் சுவைத்து இதயம் மகிழ்வானில் இறக்கைகட்டிக்கொண்டு பறக்கும்.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் "வளையும்"
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன் என்பது என் அறிமுகக் கவிதை.... இதில் கதிர் விளையும் என்றல்லவா இருக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். அவருக்கு நான் எழுதிய மறுமொழி இதோ:

கதிர் விளையும்தான். அது மற்றவர்கள் ஊரில்!

ஆனால் கதிர் விளைந்து அழகு நெல்மணிகளின் பாரம் தாளாமல் அப்படியே வளையும்!
அது எங்கள் ஊரில், ஒரத்தநாட்டில் :-)

இது பிழையாய் எழுதியதல்ல, அமுதத் தமிழில் அழகாய் எழுதியது.


ஹாஜா முகைதீன் சார் அவர்கள் சுட்டிக்காட்டிய ஆங்கிலத்தின் குழப்பம் தரும் சொல்லை சிலேடை நயமுள்ள தமிழின் சொற்சுவையுடன் முடிச்சுப் போட்டு தமிழின் பைத்தியக்காரத்தனம் என்று எழுதுவதும் அவ்விதம் சிந்திப்பதும் ஒரு தமிழ்ப் பேராசிரியரால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பதியச்சொன்னார்.

ஒரு தமிழ்ப்பேராசிரியரின் மனம் நோகச் செய்வது என் விருப்பம் அல்ல. நான் தமிழை நேசிப்பவன். அதன் இனிமைக்குள் சிலிர்ப்பவன். எந்த மொழியிலும் பைத்தியக்காரத்தனம் என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது என்பதே நான் முன்வைக்கும் கருத்து.

இதோ மேலும் சில நயங்கள்:

”என்னங்க வடை ஊசி இருக்கா” என்றாள் பழைய உளுந்து வடையைக் கணவனிடம் கொடுத்த மனைவி.

ஊசி மட்டும் இல்லை, நூலும் இருக்கு, தையலுக்கு உதவும் இந்தா என்றார். (தையல் = பெண்)

”பால் கசக்கிறதா?” எனக் கேட்டாள் பாலைத் துணியில் தோய்த்து படுக்கையில் சாகக் கிடக்கும் கவிஞனுக்கு ஊட்டிவிடும்போது அவன் முகம் சுளித்ததனால்.

கவிஞனுக்கு மரணப்படுக்கையிலும் சிரிப்புதான் வந்தது தமிழின் சுவைதான் எழுந்தது.

”பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை” (துணி கசக்கவில்லை = அழுக்குத் துணியைத் துவைக்கவில்லை)

தமிழ்ப் பேராசிரியர் என்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக நான் எழுதிய ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:


இதயத்தில் இனிக்கின்ற...
இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும்
வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும்
காற்று

பார்வைக்குள் விரிகின்ற
வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற
பார்வை

மண்ணுக்குள் கருவான
வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற
மண்

இயற்கைக்குள் முத்தாடும்
மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற
இயற்கை

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற
இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற
மோகம்

முயற்சிக்குள் முளைவிடும்
சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற
முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட
மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற
உயிர்

தீபத்துள் வாழ்கின்ற
புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற
தீபம்


இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.


பிற்சேர்க்கை:

அட இதை மறந்துவிட்டேனே?

http://anbudanbuhari.blogspot.ca/2009/08/blog-post_23.html

அத்திக்காய் காய் காய் பாடலுக்கான விளக்கம். இதில் இல்லாத சுவையா?

ஆங்கிலமும் தமிழும் பைத்தியக்காரர்களின் மொழி

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.

புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.

புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது.

மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகான அருந்தமிழில் தமிழர்கள் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.

புலவர்: அறுநூறு தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.

புலவர்: எண்ணூறு மகிழ்ச்சியாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.

புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.

மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

நெல்லை சந்திப்பில் என் பாட்டு

பாடல் பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ் ,பாலஅபிராமி
இசை :யுகேந்திரன் வாசுதேவன்.
பாடல் :அன்புடன் புகாரி
இயக்கம் :நவீன்.KBB



உண்மை இங்கே ஊனமோ
கொடும் பேய்கள் ஓதும் வேதமோ
கூண்டில் கண்ணீர் கோலமோ
முழு நிலவின் கருவும் ஏலமோ

விதி கண்ணில் பார்வை இல்லை
அதை வெல்லும் வழி ஏதோ

இவன் கூடு எங்கே குயில்கள் எங்கே
வாழ்ந்த வாழ்வெங்கே 

போதும் இது போதும்
இந்த துன்பச் சுமை போதும்

*

விழிகளில் உதிருதே
வலியும் துளியாக
உயிருமே சிதறுதே
மழையின் குமிழாக

ஓர் காவல் நிலைய கம்பியில்
அவன் சிலுவை என்றானால்
இந்த தேசம் என்னும் விதியிலே
இவன் வாழ்வு என்னாகும்