தனிமையின் வெளிச்சத்தில்

*
உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
தனிமை

*
உன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி
தனிமை

*
தனிமையின் வெளிச்சத்தில்
கடந்துபோன வாழ்க்கையை
அன்று தெரியா நிஜங்களோடும்
இன்று தெரியும் நிதரிசனங்களோடும
ஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னோடு அந்தரங்கமாய்ப் பேசும்
அந்தக் குரல்களைக் கேள்

உன் வாழ்க்கைப் பாதை
தெள்ளத் தெளிவாகத் தெரிவதை
உயிர் விருப்போடு காணலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னை உனக்குள் நிறுத்தி
பேரறிவுச் சுடராய் எரியலாம்

*
தனிமையின் தனிமையில்
அமைதியின் ஆழத்தில்
சிந்தனை சிதறா நிலையில்
உன் நெற்றியொளி உயர்த்தி
அணையா தீபமாய் உன்னை
ஞானச் சிமிழில் ஏற்றிக்கொள்ளலாம்

*
அனுபவமற்றவர்களுக்கு
தனிமை என்பது கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ
தனிமைதான் வரம்

*
தனிமைதான்
அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்

*
உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனிமையாய் இருப்பதில்லை

*
எந்தத் தனிமையிலும்
உன்னோடு இந்தப் பிரபஞ்சமாம்
ஐம்பூதங்களும்
அகலாது இருக்கின்றன

*
தனிமையில்
உன்னைப் பிட்டுப்பிட்டு வைக்கும்
உன் ஐம்புலன்களும்
உன்னோடுதான் இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் எண்ணங்கள் முழுவதுமாய்த்
தன் திறந்த விழிகளோடு இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் அளவற்ற கற்பனைகள்
அய்யங்களேதுமின்றி
அழகழகாய்ச் சரணைகோத்துப்
பொங்கி வழிகின்றன

*
தனிமையில் உன்னோடு
உனக்கே உனக்கான
உன் அந்தரங்கக் காதல்
அளப்பரிய சுகத்தோடு
பேரனுபவமாய் இருக்கிறது

*
தனிமையில் உன்னோடு
உன் உச்ச சக்தி மொத்தமும்
சற்றும் குறையாமல்
சன்னமாய் இருக்கிறது

*
தனிமைதான்
உன் பூரண சக்தியை
ஓர் உற்சாகப் புயலைப்போல
சற்றும் பிறளா வீரியத்தோடு
வெளிக்கொண்டுவரும்
தங்கச்சாவி

*
தனிமையில்
நீ எங்கே தனியே இருக்கிறாய்
தனிமையில் உன்னோடு
நீ இருக்கிறாயே மறந்துவிட்டாயா?

*
ஒரு விந்து
தனித்து நீந்தியபோதுதான்
நீ கருவானாய்

*
உன் உடல் மட்டும்
தனித்து விடப்படும்போதுதான்
நீ உன் கண்கொண்டு காணவியலா
மகத்துவப் பிணமானாய்

*
எனவே இளம்பிறையே
தனிமை எப்போதும்
தனிமையில் இருப்பதில்லையடா

*
தனிமையில்தான்
தனிமை தன்
நெருக்கமான உறவுகளோடு
நெருங்கி இருக்கிறது

*
உன் உள்மனம்
நீயே அறிந்திராத உன் அந்தரங்கம்
உன் ஆழ்ந்த அறிவு
உன் ஞான ஒளிச்சுடர்
உன் சரியான விருப்பு
உன் தெளிவான வெறுப்பு என்று
தனிமையின் நெருக்கமான உறவுகள்
நீண்டு கொண்டே செல்லும்

அவை அத்தனையும்
உன் நிஜங்களின் சத்திய முகங்கள்

ஆகவே
நீ உண்மையாய் இருக்கும்
உன் பொழுதுகளே
உன் தனிமை

*
ஓர் உயிர்
இன்னொரு உயிரை
தனக்குள் தனதாய்ப் பொத்திவைக்கும்
தனிமைதான் தாய்மை

*
இரண்டு உயிர்கள்
ஒன்றுக்குள் ஒன்றை உருக்கி 
உயிர்வாழ் பெருஞ் சுகமாய்க் காணும்
தனிமைதான் காதல்

*
ஓர் உயிர்
அளவிலா அன்பும் நிகரிலா அருளும் தரும்
நம்பிக்கையின் முன்
முழுவதும் பணிந்து கசிந்து காணும்
தனிமைதான் பக்தி

*
உன்னை உயர்த்துவதற்கான
அத்தனைப் படிக்கட்டுகளும்
உன் தனிமையில்தான்
உன் விழித்திரைகளில்
பிரமாண்டக் காட்சிகளாய் விரியும்

*
உன் உறவுகளை நீயறிய
உன் காதலை நீயறிய
உன் வாழ்வை நீயறிய
உன் சக்தியை நீயறிய

அட...
இப்படி நீளும் பட்டியலை
நிறுத்திச் சொல்வதானால்
உன்னையே நீயறிய
தனிமைதான் தனிமைதான்
உனக்கே உனக்குக் கிடைத்த
வரம் வரம் வரம்

*
தனிமையில்
எண்ணங்களெல்லாம்
தவங்களாகும்

*
தனிமையில்
அமைதிமடி தவழ்வது
வரங்களாகும்

*
தனிமையில்
இனிமை காண்பதோ
சாபவிமோசனங்களாகும்

*
தனிமையை
வெறுமையாய்க் காணாது
உற்ற உறவெனக் கண்டால்
என்றென்றும் உனக்குள்
கரையா நிம்மதி நிறையும் உறுதி

அடிப்படைவாதிகள்

தானே இயங்கும்
கூர்முனை ஆயுதங்கள்

மூளையைத்
தலைக்கு வெளியே
தண்டமாய் வைத்திருக்கும்
முட்டாள்கள்

மிருகங்களை நெஞ்சக் காடுகளில்
சுதந்திரமாய் அலையவிட்டு
வைத்திருப்பார்கள்

மனிதத்தை
திறந்த வெளிகளில்
இரக்கமின்றி
கொன்று குவிப்பார்கள்

எத்தனை எத்தனையோ
மெல்லிய இதயங்களை
நசுக்கி நசுக்கிச் சட்ணி செய்து
அறிவு ஆவியில் வேகாத
மடைமை இட்டிகளுக்குத்
தொட்டுக்கொண்டு
தின்று முடிப்பார்கள்

அடுத்தவர் வாழ்க்கைக்குள்ளும்
தனிமனித சுதந்திரத்துக்குள்ளும்
வெறிபிடித்தக்
காண்டாமிருகங்களாய்
அலைவார்கள்

முட்டி முட்டி இவர்கள்
எட்டித் தள்ளிய முட்டையோடுகள்
மிகப்பல குஞ்சுகளின் சமாதிகள்

வரட்டுப் பிடிவாதங்களின்
முரட்டுக் கோட்டைகள்

இதயங்களைக் காண
இவர்களுக்கு
விழிகள் கிடையாது

இயற்கையைக் கேட்க
இவர்களுக்குச்
செவிகள் கிடையாது

சுடச் சுட மனித ரத்தத்தை
உறிஞ்சமட்டும்
இவர்களின் நாக்கு நீளும்

கலந்துரையாடல்களின்
கழுத்தை நெறித்துக் கொல்லும்
கொலைகாரர்கள்

மனதை மதிக்கும் மரியாதைக்கும்
இவர்களுக்கும்
சொர்க்க நரக தூரம்

உண்மையைக் கொலைசெய்து
செருப்புக்கடியில் இட்டவர்கள்

தங்களிடமே உண்மை இருக்கிறது
என்று மார்தட்டுவார்கள்

தவறு அவர்களுடையதில்லை
தரவில்லையே இறைவன்
அவர்களுக்கும் மூளையை
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்?

பாவப்பட்ட இந்த
மனோ வியாதிக்காரர்களிடம்
இரக்கப்படவும் முடியாது

இரக்கப்பட்டால்
அந்த நொடியே அவர்களால்
மனிதர்கள் இறக்கப்படுவார்கள்

காலத்துக்கேற்ப
கனியத் தெரியாத இதயமும்
தேவைக்கேற்ப
மலரத் தெரியாத உதடுகளும்
நரகத்துக்கே போம் என்ற
உண்மையைச் சொல்லி 
இக்கவிதையை முடிக்கிறேன்

தோற்றுத்தான் போகிறோம்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்...

எங்கோ தூரத்திலல்ல
பக்கத்தில்தான்

விலகியவர்களாக அல்ல
நெருக்கமானவர்களாகத்தான்

காய்ச்சொல் ஈபவர்கள்களாக அல்ல
கனிமொழி குழைபவர்களாகத்தான்

வெறுப்பாடிக்கொண்டல்ல
உறவாடிக்கொண்டுதான்

நம் தோள் பற்றித்தான்
அணைத்தழைத்துச் செல்பவர்களாகத்தான்

அன்போடுதான்
அருகிலேயேதான்

நம்மோடுதான் இருக்கிறார்கள்
நமக்கான நம் எதிரிகள்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்....

ஏக்கங்களால் அபகரிக்கப்பட்டு
தவித்துத் தவித்து
நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்

நண்பர்களெல்லாம்
பயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்
அடையாளங்களற்று
உடைந்து கிடக்கிறார்கள்

தோற்றுத் தோற்றுப் போன
தொடர் களைப்பில்

தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி


தடிச்ச ஒதட்டுக்காரி
     தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
     பழக்கத்துல கெட்டிக்காரி

முடிஞ்ச மனமுடிச்ச
     முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
     வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
     இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
     ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
     விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
     மயாணத்துல நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
     முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
     நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
     கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
     ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
     ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
     ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
     சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
     கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
     மத்திமீன் கொழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
     நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
     பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
     காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
     தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
     வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
     இடிஞ்சது ஒங்கனவு
துடிக்குது ஒன்னுசுரு
     ஒன்னநீ காக்கவாடீ

காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி




















இருநீல மலர்களைச்
சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே
நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால்
காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது

ஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன்
என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்

நீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது
அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்

உன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது
என்று நான் புரியவைத்தபோது
உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்

ஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு
கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்

அவன் மட்டும் என் பௌர்ணமியைத்
தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது
நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்

சூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள்
நான் உன்னைக் கண்டேன்
என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப்
பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.

உன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்

உன் முக முற்றத்தில் வந்துவிழும்
கூந்தல் கற்றைகள் மேகங்களா - எனில்
அவை என்னைத்தவிர வேறெவர்க்கும்
பொழிவதில்லையே

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா - எனில்
அவை என்னைத் தவிர வேறெவர்க்கும் புரிவதில்லையே

நான் உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே என் உடலின்
இரத்த ஓட்டத்தை உணர்கின்றேன்

அன்றொருநாள் நானுன்னைத் தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த கோடி புஷ்பங்கள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின் மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள் மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும் புரியாமல் விழித்திருக்கிறேன்

நீ பொட்டிடுவது உன் நெற்றியை அலங்கரிக்க
என்றுநான் என்றுமே நினைத்ததில்லை
பொட்டை அலங்கரிக்கவே என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால் உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால் நான் கவிஞனானேன்

இன்றெல்லாம் நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லையடி
உன்னை நினைத்திருப்பதால் நான் விழித்திருக்கிறேன்

நான் வருசங்களை நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள் சூரியக் கண்களை பூமி இமைகள்
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய எல்லாம் மறந்தோம்

பொங்கல் வாழ்த்துக்கள்

இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை. 




மஞ்சள் கொத்தோடு
        மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
        எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
        வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
        பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
        கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
        குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
        ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
        பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
        வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
        பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
        தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
        அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
        மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
        பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
        அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
        நிலம்புகழும் பொங்கலிது

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   முடிந்துபோவதில்லை
உடைந்ததென்று நினைப்பதெல்லாம்
   உடைந்துபோவதில்லை
வடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   வடிந்துபோவதில்லை
மடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   மடிந்துபோவதில்லை
நடித்ததென்று நினைத்ததெல்லாம்
   நடித்ததின்றிப் போகலாம்
நடிக்கவில்லை என்றதெல்லாம்
   நடித்ததுபோல் ஆகலாம்
எடுத்ததென்று நினைத்ததெல்லாம்
   கொடுத்ததென்று ஆகலாம்
கொடுத்ததென்று நினைத்ததெல்லா
   எடுத்ததுபோல் ஆகலாம்
 
விடிந்ததென்று நினைத்துவிட்டால்
   விடிந்துவிடும் வானம்
கிடைத்ததென்று நினைத்துவிட்டால்
   கிடைத்துவிடும் ஞானம்
படர்ந்ததென்று நினைத்துவிட்டால்
   படர்ந்துவிடும் பாசம்
தொடர்ந்துதென்று நினைத்துவிட்டால்
   தொடர்ந்துவிடும் சொந்தம்

பெட்னா இதழில்

கைச்சொர்க்கமாக இல்லாவிட்டாலும்

ஒரு
சுவர்க்கடிகாரத்தின்
பெண்டுலத்தைப் போல

அதுவா
இதுவா

இதுவா
அதுவா

என்று
அல்லாடும்போது
நிலம் விழுந்த
திமிங்கிலத்தைப்போலத்தான்
நிம்மதி செத்துக் கொண்டிருக்கும்

0
எதுவென்று
ஒரு
நெருப்புக் கனியைக்
கண்டதுபோல
அறிந்துகொண்டதும்

நெடுந்தூரம்
விடைபெற்றுச் சென்றிருந்த
நிம்மதி
மீண்டு வந்து
கண் பிழிந்த நீரில் மூழ்கியும்
கனலாய்ச் சுட்டுக்கிடந்த நெஞ்சில்
பூரணமாய் நிறைந்தும்விடும்

0
விரும்பியதுதான்
அறியப்பட்டதும் என்றால்
அந்நொடியே
அது சொர்க்கம்தான்
மறுப்பதற்கில்லை

ஆனால்
விரும்பாததாயினும்
அலைபாய்ந்து அலைபாய்ந்து
அறற்றிக் கிடந்த
அல்லாடல்களிலிருந்து
விடுதலை பெற்று
அறியப்பட்ட நிறைவு
நிச்சயம்

கைச்சொர்க்கம் இல்லாவிட்டாலும்
மிக விரைவில்
காணப் போகும் சொர்க்கம்தான்