60

எதுவுமே இல்லாதபோது
தனிமையின் வெறுமை குத்தும்
முள்ளின் வலி

காதல் வந்து
ரத்தத்தில் சித்தாடும்போது
அதைக் காதலியிடம்
எப்படிச் சொல்வதென்று தவிக்கும்
நெருப்பு வலி

ஒருவழியாய்க்
காதல் உறுதி செய்யப்பட்டபின்
எப்போதும் அவளுடனேயே
இருக்க வேண்டுமே என்ற
உறங்கா வலி

ஒன்றுசேர முடியாத
கையாளாகாதத் தனங்கள் முகாரிபாட
தொட்டதை விடமுடியாமல் துடிக்கும்
தாங்கவே முடியாத
தொடர் வலி

எங்கிருந்தாலும் வாழ்க என்று
பேரன்புக் காதல் மனத்தோடு
வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும்
உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
59

நம்மைவிட்டு
ஓடிக்கொண்டிருக்கும் நதியை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் குளம்
நம் முகத்தைப் பிரதிபளித்துக்கொண்டிக்கிறது

ஓடிவந்த வேகத்திலேயே
திரும்பிப்போய்விடும் அலைகளை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் மணல்வெளி
நம் சுவடுகள் ஏந்திக்கிடக்கிறது

கண்களுக்கு எட்டி
கைகளுக்கு என்றுமே எட்டாத
உச்சிவான வெண்ணிலவை
நாம் காதலிக்கிறோம்
சூழ்ந்திருக்கும் இரவு நம் நித்திரையைத்
தாலாட்டிக்கொண்டிருக்கிறது

நம்மைக் காதலிக்காத ஜீவனோடு
நாம் காலமெல்லாம்
கனவுகளில் வாழ்வதும்
நாம் காதலிக்கும் ஒரு ஜீவன்
நம்மைவிட்டுத் தொலைதூரம் கிடப்பதும்தான்
நாம் காணும் வாழ்க்கை என்றால்
அதில் துக்கம் தவிர
வேறென்ன இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*59 நிழல்கள்


*
நம்பிக்கை நிழலில்
ஓர்
இன்பதின் நிழல்
காண
காலத்தின் நிழலில்
நின்றேன்

தினம்
துன்பத்தின் நிழல் தந்த
சாவின் நிழலில்
நான்
வாழ்வின் நிழல்
கண்டேன்

*


நான் என் முதல் தோல்வியைச் சந்தித்ததும் எழுதிய கவிதை இது. அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை அப்போதைய என் மனோநிலை. அதை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

பிறகெல்லாம் இந்தக் கவிதை நம்பிக்கையைத் தரவில்லை, எனவே இது நல்ல கவிதை இல்லை என்று முடிவெடுத்து கிழித்துப்போட்டுவிட்டேன்.

ஆனால் இன்னொரு சோகம் வந்து தன் முரட்டுக்கொம்புகளால் முட்டியபோது இந்தக் கவிதையின் வரிகள் தானே நினைவுக்கு வந்துவிட்டன.

வாழ்வில் நாம் ஏராளமான சோகங்களை எல்லா நிலைகளிலும் சந்திக்கத்தானே வேண்டும்?

அப்படி ஆட்டிப்படைக்கும் ஒரு கவிதையை நான் ஏன் கிழித்தெறிய வேண்டும்?

என் ஆறாவது கவிதை நூலிலேயே ஏற்றிவிட்டேன்.

58

உன் நகத்தில் கீறலென்றாலும்
என் உயிரில் எரிமலை விழுந்ததாய்
துடித்துப் போகிறேன்

இந்த அன்பை
எனக்குள் வாரி இறைத்தது
உன் அன்புதானே அன்பே

இந்தப் பாசத்தை
எனக்குள் அள்ளிப் பொழிந்தது
உன் பாசம்தானே கண்ணே

இந்த நேசத்தை
எனக்குள் கொட்டிக் குவித்தது
உன் நேசம்தானே செல்லமே

இந்தப் பிரியத்தை
எனக்குள் பொங்க வைத்தது
உன் பிரியம்தானே மலரே

இந்த உயிரை
இப்படித் தவிக்கச் செய்தது
என்னிடம் இருக்கும்
உன் உயிர்தானே உயிரே

இப்படி எழுதும்போதே
என் கண்களும் எழுத வருகின்றன
கண்ணீர் மையெடுத்து

உற்றுப்பார்
உனக்காக உதிரும்
இந்த விழி முத்துக்களில்
என் உயிர் துகள்களாய் மிதக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
57

பிரிவதானால்
பிரியட்டும் உயிர்
நீ பிரியாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
56

என் நேற்றைய இரவு
ஒரு கேள்வியோடு விழித்திருந்தது

கேட்டால் மெய்யான பதில் வருமா
என்ற ஐயம் உறங்கச்செல்லும்போது
நான் விழித்துக்கொண்டேன்

எதுவும் கட்டாயமில்லை என்னிடம்
இதயத்தின் தனி விருப்பமே
முதன்மையானது என்பதை
நடுவராய் அமர்த்துகிறேன்

எந்தக் கணக்கு
கழித்தல் குறிகளையும்
வகுத்தல் குறிகளையும்
என்முன் உன்னை இடவைத்தது
என்ற கேள்வியைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறேன்

தண்டனை தந்து விடுவித்துவிடலாமா
அல்லது ஈரமாய்ப் பழகிய உயிர் நெகிழ்வை
தீர்ப்பாய் அளித்து மீண்டும் உன்
இதயச் சிறையிலேயே அடைத்துவிடலாமா
என்று இன்றாவது சொல்

மரணம் ஒரு இருக்கையிலும்
வாழ்க்கை மறு இருக்கையிலும்
காத்திருக்கின்றன உன் தீர்ப்புக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
*****56

வளைகுடாவில் வாங்கிய காகிதத்தில்...


உண்மையில் இது கவிதையல்ல நான் என் மகளுக்கு எழுதி அனுப்பிய முதல் கடிதம். ஒரு ரோஜா நிற காகிதத்தில் மை பேனாவால் எழுதி சவுதி அரேபியாவில்லிருந்து அனுப்பினேன். இப்போதும் வாசித்து நெகிழ்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து வாழ்வுதேடி பாலைவனம் வந்த ஒரு தந்தையின் வலிகளைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிப்பேழை இது. எங்கோ இருந்து கொண்டு தன் சுற்றங்களுக்காக உழைக்கும் முகம் தெரியாத பல அப்பாக்களுக்கும் சகோதரர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

பனிரோஜா வம்சத்தின்
ஒற்றை இளவரசியைப் போல்
பிறந்த என் மகளே மகளே
நலமா நலமா

நீ
பிறந்த
பொற்பொழுதான
அப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்
முதல் பிறந்த நாளான
இப்பொழுதும்
நானுன் அருகிலில்லை

உன்னை மறந்தல்ல
நான் இங்கே வாழ்கிறேன்
உன் நலன்
நினைத்துத்தான்
நான் இங்கே தேய்கிறேன்

மூடிவைத்த
மின்னலொளிப் பூவே

என்
மனப்பூ வெளியெங்கும்
உன் சிரிப்பூ மகளே

என்
நினைப்பூப் பரப்பெங்கும்
உன் விழி துருதுருப்பூ
மகளே

உன் தாய்தரும் பாலிலே
பாசமுண்டு

உனக்கென இங்கே
நான்விடும் கண்ணீரிலே
என் உயிருண்டு

உன் மொழியை
எழுத்தாய் எழுதும்
கலையை நான் அறிந்திருந்தால்
நம்மூர் அஞ்சலகம்
என் கடிதங்களால் மூழ்கிக்
காணாமல் போயிருக்கும்

அடக்கி அடக்கி வைக்கும்
என் கொஞ்சல்கள் பீறிட
ஈரமாகும் காற்றலைகள்
ஏழுகடல் தாண்டும்
உன் பஞ்சுமேனியைத்
தீண்டும்

நீ வீரிட்டு அழுதால்
உன் அன்னை
வேதனை கொள்வாள்

அவளுக்குப் புரியாது
என் உணர்வுகளின் அதிர்வுகள்
உன் தேன்கன்னம் தொட்டுக்
கிள்ளிவைக்கும் இரகசியம்

பொன்
மகளே மகளே
நலமா நலமா

உன் கால் உதைக்கும் நெஞ்சில்
கவலை உதைக்கும் வரத்தை
நான் வாங்கிவந்திருந்தாலும்
தேனவிழ்க்கும் பூப்பிஞ்சே
உனை நான்
தேடிவரும் நாளொன்றும்
தூரத்திலில்லை

நீ பிறந்த இந்த நாளில்
வானில்
எத்தனை நட்சத்திரங்களோ
உனக்கு என் அத்தனை
முத்தங்கள்

அன்புடன் புகாரி

#தமிழ்முஸ்லிம்
***55 எது வாழ்க்கை?

பழக்கமில்லாதான்
பாதை அறியா ஊருக்குக்
கடிவாளமில்லாக் குதிரையில்
சவாரி செய்யும் கட்டாய விபத்தா

என்றோ செய்த
பாவ புண்ணியத்தின்
கூலி தினங்களா

இனிவரப்போவதாய் நம்பப்படும்
சொர்க்க நரகத்தின்
அனுமதிச் சீட்டுவாங்க
அலையும் அலைச்சலா

முழுமொத்த மௌனமாய்
முன்னிற்கும் கடவுள்முன்
சத்தமாய்க் கதறியழும்
பக்திப் பரவசமா

உள்மனச் சக்தி திரட்டி
சாட்டையைச் சொடுக்கினால்
சொன்னபடி கேட்கும் சாதுபூதமா

வருவதெல்லாம்
நலம்தான் என்றெண்ணும்
முற்றிய விழியிருப்பின்
பொழுதுக்கும் வசந்தம் பொழியும்
சொர்க்க நீரோட்டமா

கைகாட்டி இல்லாக்
காட்டுச் சாலையில் நின்று
இன்னும் இன்னும் இவைபோல
எத்தனை எத்தனைக் கேள்விகள்

இவற்றுள்
ஒன்றுக்குள்ளேனும்
ஒருவழியாய் ஒன்றிப்போகும்
அல்லல் உயிர்களே

எவரையும் விட்டுவைக்காமல்
ஒருநாள் விழுங்கியே தீரப்போகும்
மரணத்தை முந்திக்கொண்டு
தானே அதனுள்
வீழ்ந்துவிடலாம் என்று
பிறந்த உயிர் ஒவ்வொன்றும்
தன் வாழ்நாளில்
ஒரேயொரு முறையேனும்
இதயப்புயல் வீசிவிடுகிறதென்று
புள்ளிவிபரம் ஒன்று சொல்லியது

ஞான ஒளியடித்து
மூளை முடுக்குகளின்
முடிச்சுகளுக்குள்ளும்
ஊடுருவித் தேடிப் பார்த்ததில்

அன்பெனும் நூல் ஈகையெனும் வால்
கருணையெனும் காற்றில்லாம்
வாழ்வுப் பட்டமோ
இருட்டுப் பரணில்
திருட்டு எலிகளின் பற்களுக்கு
எட்டும் இடத்தில்தான் என்ற
உண்மை நெருப்பு சுட்டது

பிறந்த உயிர்
அத்தனைக்கும் இங்கே
தெளிந்த ஊற்றாய் வாழ்க்கை
கொப்பளிக்கவேண்டாமா

இந்த பூமியெங்கும்
அன்புச் சுடரேற்றி
விருப்புகளை விரும்புவோம்
கருணை மலர் தூவி
வெறுப்புகளை வெறுப்போம்
தவறுகளை மன்னித்து
ஆதரவாய் அணைப்போம்
யாசிக்காதார் கதவு தட்டியும்
குறைவற்றுக் கொடுப்போம்

நிம்மதிதான் வாழ்க்கை
அது நிச்சயம் கிடைக்கும்
என்ற நம்பிக்கை
அதில் முளைக்கட்டும்
55

விழிகள் தந்தாய்
கனவுகளைக் காணவில்லை
இதயம் தந்தாய்
நினைவுகளைக் காணவில்லை
இதழ்கள் தந்தாய்
வேர்களைக் காணவில்லை

கனாக்களற்று
நினைவுகள் மறந்து
வேர்கள் மண்மாறிய பொழுதில்
மூடிய இமைகள் காட்டினாய்
என் உயிரைக் காணவில்லை

மீட்டுக்கொண்டு போக
நான் அடகு கடையா வைத்திருந்தேன்
வட்டி தருகிறேன் என்று
வாட்டி எடுக்கிறாய்

உன்னுடையது என்று
இங்கே எதுவுமே இல்லை
என்னைத் தவிர என்று
குருதிக் கண்ணீர் விரிக்கிறேன்

மாற்றுப் பொருள் எனக்கெதற்கு
என்ற உன் நிராகரிப்புக்கு
பதில் சொல்லத் தெரியவில்லை
திவாலாகிவிட்டேன்

வந்து மூடிவிட்டாவது போ
திறந்து கிடக்க்கிறது
இன்னமும் என் நம்பிக்கை

சாவி தொலைந்த பூட்டாய்
வாய் பிழந்து கிடக்கிறது
மரணக் கதவோரம் என் குற்றுயிர்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
54

நீ ஏற்றிவைத்த
மெழுகுவத்தி நான்
நீ இறக்கிவிட்ட
பச்சைக்குழந்தை நான்

நீ மறந்துபோன
ஞாபகம் நான்
நீ சிந்திக்கவிடுத்த
எண்ணம் நான்

நீ பிரித்துவைத்த
இமைகள் நான்
நீ எழுப்பிவிட்ட
அலைகள் நான்

நீ நீர் மறுத்த
வேர்கள் நான்
நீ தரையில் எறிந்த
நெத்திலி நான்

நீ உறையவைக்கும்
சூரியன் நான்
நீ உலரவைக்கும்
உயிர் ஈரம் நான்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
53

ஒரு பழைய மாலை நேரத்தின்
இளமையில்
என் மனவாசல் கதவுகளைத்
திறந்துகொண்டு நீ
அவசரமாய் நுழைந்துவிட்டாய்

தத்தித் தத்தியும் தாவித் தாவியும்
இடைவிடாமல் நீ
உள்ளே நடக்கும்போது

தாள லயத்துக்குக் கட்டுப்பட்ட
அசாத்தியக் கலைஞனாய்
இம்மியும் பிசகாமல்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் இதயம்

நீ நின்றால்?

இல்லை இனி உன்னால்
நிற்க முடியாது

என் இதயத் துடிப்பு
நிற்கும்போதுதான்
என் மனத்தளத்தில்
புல்லரிக்கப் புல்லரிக்கப்
புதுப் புதுப்
பொற்சுவடுகளைப் பதிக்கும்
உன் பாதங்களும் நிற்கமுடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
52

கண்ணின் மையையும்
வெளிச்சமென்றாக்கும் இருட்டுக்குள்
தடம் தெரியாமல் வாழச் சம்மதமா

துடியாய்த் துடித்து
சுக்கு நூறாய்ச் சிதறியழியும் இதயத்தை
வாரி அள்ளிக்கொண்டு
திசை தெரியாமல் ஓட விருப்பமா

எங்கு ஓடியும்
எவ்வழியும் தெரியாமல் விழுந்து புரண்டு
வெடித்துக் கதறப் பிடிக்குமா

ஒரு சில்லறையைச் சுண்டும்போதுகூட
பூவா தலையா என்ற பதட்டம்
வீறிட்டுப் பறந்து வேதனையில் துவளும்
தோல்வியின் எண்ண மின்னல்கள்
தெளிவற்ற புலம்பல்களாய்
எத்தனை திசைகளில் பாயும் என்று
கணக்கிட முடியுமா

கண்களின் மாய வெளிச்சத்தில்
காதலிக்கத்தான் போகிறாயா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

51

முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

என்னிடமிருந்து
கவர்ந்த ஞாபகங்களை
விடுவிக்கும் பொறுப்பை
நீதான் ஏற்கவேண்டும்

அவை என் குரல்களைத்
துகள்களாக்கி
நான் விழுந்தழுவதில்
சிரிக்கின்றன

நீ எரித்தெறியும் ஞாபகங்களின்
சாம்பல் கரைக்க
என் இதய நதியைப் பழக்கவேண்டும்

உன்னால் ஞாபகங்களை
மீளப் பெறவே முடியாது என்று
என் உயிர் என்னிடம் பந்தயம் கட்டி
மரண மடியில் படுத்துக்கொள்கிறது

ஆனாலும்
முடிவு கட்டிவிட்டேன்
உன்னை மறக்கத்தான் போகிறேன்
என் ஞாபகங்களுக்குள் வந்துவிடாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்