22 இந்தியனே நீ வெட்கப்படு

*இந்தியனே நீ வெட்கப்படு*

என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைபுகள் கவிதைத் தொகுப்பில் இருபத்தி இரண்டாவது கவிதையாக அச்சேறிய கவிதைதான் இது. இன்று மீண்டும் எடுத்து வாசித்து நேசித்தேன்.

எண்பதுகளில் என் இந்தியாவை நான் பார்த்து துக்கப்பட்டு சினந்து கொதித்து கொப்பளித்து எழுதிய இளவயதுக் கவிதைதான் இது.

”வெளிநாட்டுக்குப் போய் உக்காந்துகிட்டா என்ன வேணும்னா சொல்லலாமா?” என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக இன்றும் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. காரணம், நான் வெளிநாட்டில் குடியேறியவனாக வாழ்ந்தாலும் ஓர் இந்தியனாகவே வாழ்கிறேன். மண்ணின் வாசனையோடும் தமிழ்க் கலாச்சார வேர்களில் பலாவாய்ப் பழுத்தவனாகவும்தான் வாழ்கிறேன்.

அடுத்து இன்னொரு கேள்வி எனக்கு எழுந்தது. அன்று நான் உணர்ந்து எழுதிய இந்தியாவுக்கும் இன்று இருக்கும் இந்தியாவுக்கும் இந்த கவிதையின் வாயிலாகப் பார்த்தால் ஏதேனும் மாற்றம் உண்டா என்பதுதான் அது. மாற்றம் ஏதும் தெரியவில்லையே என்பதே இதை மீண்டும் வாசித்த எனக்குள் வந்த எண்ணங்கள். உங்களுக்கு எப்படி?

*
*

வெட்கப்படு இந்தியனே
நீ வெட்கப்படு

நீ வெட்கப்படாததால்தான்
இந்தியா துக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது

O

பசித்தால்-
கையேந்த மட்டுமே
உனக்குத் தெரியும்

தேவைப்பட்டால்-
திருட மட்டுமே
உனக்கு விருப்பம்


கோபப்பட்டாலும்-
கொளுத்துவதற்கு மட்டுமே
உன் கைகள் நீளும்

O

நீ
படிக்கப் போனால்
வினாத்தாள் திருடுகிறாய்

ஆளப்போனாலோ
நாட்டையே திருடுகிறாய்

தினமும்
வீட்டிலும் வீதிகளிலும்
உண்டியல் குலுக்கியே
பாரதத்தை
இன்று ஒரு
சில்லரைக் காசாக்கிவிட்டாய்

O

சொல்
கண்டதுக்கெல்லாம்
கொடி தூக்கிக்
கோஷம் போடுகிறாயே

என்றாவது உன்
தேசியக் கொடியை
நேசித்தது உண்டா
O

ஜீவநதிகள்
ஊர்வலம் வருகின்ற
நாட்டில்
விக்கித் தவிக்கிறாய்

அள்ளித்தரும் நன்நிலங்கள்
எங்கும் கிடக்கின்ற நாட்டில்
பட்டினி கிடக்கிறாய்

O

ஒன்றா இரண்டா
உனக்கு
எத்தனை கோடி கைகள்


இருந்தும் அவை
பிச்சையெடுக்கவே
என்று
பிரகடனப்படுத்திவிட்டாயே


இந்தியனே
நீ வெட்கப்படு

நீ
வெட்கப்படாததால்தான்
இந்தியா
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

அன்புடன் புகாரி
19800101

No comments: