Showing posts with label * * 01 அன்புடன் புகாரி. Show all posts
Showing posts with label * * 01 அன்புடன் புகாரி. Show all posts
அரபுநிலப் பிரவேசம்

பசிவந்தால்
பத்தும் பறந்துபோகும்

அப்படி ஒரு பசி
எனக்கும் வந்தது

மனக்குரல்
காலடியில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்து நான்
அவசரமாய் நடந்தேன்

எதிரே
நரிவர நரியானேன்

நான்வர
குரைத்தேன்

இன்று என்னிடம்
பசியும் இல்லை
நானும் இல்லை
https://www.facebook.com/photo.php?fbid=3055905904434562&set=a.100183646673484&type=3&theater

தமிழ்பற்றி உரையாடினாலே அது ஒரு தனி இன்பம்தான்

இன்று காலை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

டொராண்டோ தமிழ் இருக்கைக்குத் தேவையான 3 மில்லியன் டாலர்களில் கிட்டத்தட்ட  1 மில்லியன் டாலர்கள் ($50,000 குறைவு)  திரட்டப்பட்டுவிட்ட நற்செய்தியை மிகுந்த மகிழ்வோடு பகிர்ந்துகொண்டார்.

ஓராண்டுக்குள் 1 மில்லியன் டாலர்கள் திரட்டுவதுதான் உச்சநிலைக் குறிக்கோளாய்க் கொள்ளப்பட்டது. ஜூன் மாத இறுதிக்குள் உறுதியாக 1 மில்லியனைத் தாண்டியதாகவே அது வெற்றிநடை போட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு 2018 ஜூன் மாதம்தான் டொராண்டோ தமிழ் இருக்கைக்கான  தொடக்கப்பணி டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கையெழுத்தானது . இன்னும் ஓராண்டே நிறைவுறாத நிலையில் இது ஒரு  சாதனைதானே?

இச்சாதனையை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் அயராத உழைப்பு இல்லாவிட்டால் நிகழ்த்துவது மிகக் கடினம்.

அன்று இளவயதில் ஒரு சிறுகதைக்கு விருது வாங்கிய அ. முத்துலிங்கம் அவர்கள் தன் வெளிநாட்டுப் பணிகள் காரணமாக முப்பது ஆண்டுகள் வனவாசம் இருப்பதுபோல எழுதாமலேயே இருந்தார். பணி ஓய்வு பெற்றதும் படபடவென எழுதத் தொடங்கினார். அதுவும் வித்தியாசமாக தனக்கென ஒரு தனிநடை கைவரப் பெற்று எழுதினார். அந்தத் தனி நடை உருவாவதற்குக் காரணம் அவர் எப்போதும் எதையும் இதயத்திலிருந்தே பேசுவதால், அப்படியே எழுதுவதால் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இன்று அவர் ஏராளமான விருதுகள் குவித்து பெருமை பெற்றதையும்விட, உலகின் தலை சிறந்த எழுத்தாளர் இன்று இவர்தான் என்று  பெரிய பெரிய எழுத்தாளர்களாலேயே புகழப்படுவது பெரிதினும் பெரிதுதான்.

எப்படி அவரைப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியாமல், தமிழ் நாடாய் இருந்திருந்தால் உங்களுக்குச்  சிலை வைத்துவிடுவார்கள் என்றேன். நான் அப்படிப் புகழ்ந்ததற்குக் காரணம் அவரின் எழுத்து மட்டும் அல்ல, தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் பெருஞ்சேவை.

இன்று உலகப் புகழ் பெற்றுவிட்ட கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதும், டொராண்டோ தமிழ் இருக்கையும் அவருடைய சேவைகளுள் முக்கியமானவை.

தானுண்டு தன் எழுத்துண்டு அது பெற்றுத் தரும் பெரும் புகழுண்டு என்று சுயநலமாய் இருந்துவிடாமல், இந்த வயதிலும்  அ. முத்துலிங்கம் அவர்கள் ஓடி ஓடி தமிழ்ச்சேவையில் அயராது உழைப்பதைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை. வாழும்போதே அவரைப் பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன்.

எதிர்பாராத விதமாகத் தமிழ்நாட்டிலிருந்து டொராண்டோ தமிழ் இருக்கைக்காக யாரென்றே தெரியாதவர்களிடமிருந்தும் நிதி வந்திருக்கிறது, தமிழர் அல்லாத ஒரு வெள்ளைக்காரர்கூட 300 டாலர்கள் அனுப்பி வைத்திருக்கிறார் என்ற தகவல்களை ஆர்வத்தோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார். மகிழ்ந்தேன்.

உலகத் தமிழர்களே, உங்களின் பங்களிப்பு ஒரு டாலராக இருந்தாலும் சரி, சற்றும் தாமதிக்காமல் உடனே அனுப்பி வையுங்கள், டொராண்டோ தமிழிருக்கையில் அமரப் போகும் தமிழன்னை உங்களை என்றென்றும் வாழ்த்திப் பாராட்டுவாள்.

http://torontotamilchair.ca/

அன்புடன் புகாரி

கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை

This entry is part of 46 in the series 20031218_Issue
வே.ச. அனந்தநாராயணன்


பொன்னிலும் பொருளிலும் நிறைவு காணாமல் தவிக்கும் மனித உள்ளத்தை, ஊனில் புகுந்து உணர்வைத் தொட்டு
எழுப்பும் கவிதை முழுமையாக்கிப் புன்னகை பூக்க வைக்கிறது. ஆதலால், அத்தகைய கவிதையைப் படைக்கும்
திறமை பெற்றவர்களை உலகம் மன்னர்களுக்கும் மேலாக மதித்துப் போற்றுவதில் வியப்பில்லை. தொன்றுதொட்டு
இன்றுவரை தொடர்ந்து ஆயிரமாயிரம் கவியரசர்களாகச் சேர்ந்து, நம் தமிழினத்தைக் கவிதையின் சுவையை
நுகரும் நுண்ணுணர்வு கொண்ட இனமாக உருவாக்கியுள்ளார்கள். இதை, தமிழின் இத்தகைய தனிச்சிறப்பை,
உலகுக்குப் பறைசாற்றும் வகையாக அமைவதே கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழாக்கள்.
இன்று நாம் கொண்டாடும் கவிஞர் புகாரி அவர்களின் இரண்டாவது கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்கு முதற்காரணம் ‘இணையம் என்னும் ஒற்றை மகா மின்மரம் ‘ என்று நம்
கவிஞரால் வருணிக்கப்படும் ‘உலகஅரங்க ‘மே. என்றோ தொடர்புவிட்டுப் போன தமிழோடு என்னை மீண்டும்
உறவாட வைத்த தமிழ் இணையத் தளங்களின் வாயிலாகவே கவிஞர் புகாரியின் கவிதைகள் சில ஆண்டுகளுக்கு
முன்பு எனக்கு அறிமுகமாயின. அந்த உறவின் பிணைப்பு நாளாக ஆக இறுகிக்கொண்டு வந்து இன்று கவிஞரின்
‘அன்புடன் இதயம் ‘ நூல் வெளியீட்டு விழாவில் எனக்கும் ஒரு பங்கைத்தரும் ஆற்றல் படைத்ததாக அமைந்த
விந்தையை எண்ணி என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை.
மணிமணியாக முப்பது கவிதைகளைக் கொண்டு தொகுத்த மாலையான ‘அன்புடன் இதயத்தை ‘ப் படிக்கையில் நம்
நெஞ்சில் பல்வேறு துடிப்புகள் மாறிமாறிப் பயில்வதைப் பார்க்கிறோம். முதல் பாடலிலேயே, நம்
தாய்மொழியின் ஏற்றத்தைக் கவிதையின் நடையழகிலும் பொருள் அழகிலும் நாம் உணரச் செய்கிறார்.
அதைப்படித்தவுடன்:
கவிதை பிறந்திடும் இதயம்- பிறர்
இதயம் திறந்திடும் கவிதை
அறிவினில் உதிக்கின்ற சொற்கள் – அந்தச்
சொற்களில் புதைந்துள்ள அறிவு
கணினிக்குள் விளையாடும் புதுமை – அந்தப்
புதுமையால் களைகட்டும் கணினி
கட்டை உடைத்தோடும் பாய்ச்சல்- அந்தப்
பாய்ச்சலைப் பதமாக்கும் கட்டு…..
என்று அவர் வடித்த வகையிலேயே நம்மையும் அவர் கவிதையைப் புகழ்ந்து பாடுமாறு நம் இதயத்தில் ஒரு உந்துதல்
பிறக்கின்றது! இதை அடுத்து வரும் காதலும் கனிவும் கொண்ட பாடல்கள் நம் இதயத்தில் ‘சொட்டுச் சொட்டாய்
அமுத அழகை ‘ வார்க்கின்றன. மேலே தொடர்ந்து, வேதனையும் விரக்தியும் விரவி மனத்தின் அடித்தளத்தைத்
தொடும் பாடல்களும், அந்நிலையிலிருந்து நம்மைப் பிரபஞ்ச வெளிக்குக் கொண்டுசென்று சிறகடிக்க வைக்கும்
‘பஞ்சபூத ‘ப் பாடல்களும், ஒரு விந்தைக் கவிஞனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவனுடன் நம்மைப் பயணம் செய்ய
வைக்கின்றன. அதன் விளைவால் எழுந்த உணர்வைச் சொற்களில் வடிக்க முயல்கிறேன்:
தேரளித்தான் முல்லைக்(கு)அன்று பாரி – தமிழ்த்
…. தேருக்குப்பூப் புனைவர்இப்பு காரி!
பாரில்இவர் பாடல்பல கோரி – வரும்
…. பசிமறந்து பத்தர்களின் சாரி!
ஊர்மகிழக் கவிஉணவை வாரி – அன்பாய்
…. ஊட்டுவதில் நேர்இவர்க்கு மாரி!
காரெழிலாள் கன்னித்தமிழ் நாரி- முகம்
…. காணுமிடம் இவர்கவிதை ஏரி!
நல்லகவிதை இன்ன வகையில் தான் அமையவேண்டும் என்று யாராலும் வரையறுக்க இயலாது. இந்த உண்மையைப்
புகாரி தம் கவிதைகளால் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். சீர், தளைகள் போன்ற கட்டுப்பாடுகளும் ஓசை நயமும்
கொண்ட கவிதைகளின் சாரத்தை, தம் தனிப்பட்ட கவிதை நடையில் தருவது இவருக்கே கைவந்த ஒரு பெரும்
கலை. இதை ‘அன்புடன் இதய ‘த்திலும் இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘வெளிச்ச அழைப்புகளி ‘லும் தெளிவாகக்
காணலாம். இந்த ‘மரபு சார்ந்த புதுமை ‘க்குக் காரணம் கவிதையின் ஓசையில்/இசையில் கவிஞர் புகாரிக்கு
உள்ள நாட்டமே என்று கூறலாம். அந்த நாட்டமே இவரது கவிதைகளைப் பல்வேறு தளங்களில் உள்ள மாந்தரும்
விரும்பிப் படிப்பதற்கும் காரணமாகத் திகழ்கிறது.
புகாரி கவிதைப் பொழிலின்உள்ளே
…. புதுமையும் மரபும் பொலிந்திடும்;பூம்
புகாரின் பழமையும் புதுநிலவாய்ப்
…. பொங்கிடும் அழகும் பூக்கும்;அங்கே
புகாரிங் குளரோ ? புகுந்தவரின்
…. ‘போனது உள்ளம் கொள்ளை ‘என்னும்
புகாரைக் கேட்போர் புரிந்துகொண்டு
…. ‘போகட்டும் ‘ என்பார் புன்னகைத்து!
என் அருமை நண்பரும் பெரும் கவிஞருமான புகாரியின் கவிதை மலர்கள் ஆண்டாண்டுக் காலமாக உலகெங்கும் பூத்துக்
குலுங்க வேண்டுமென்று நான் மனமார வாழ்த்துகிறேன்!
————————-
Series Navigation
வே.ச. அனந்தநாராயணன்

கனடா கவிஞர் புகாரி - ஜெயபாரதன்

கனடா கவிஞர் புகாரின் தனித்துவப் பண்புகள் என்ன ? அவரது கவிதைகள் யாவும் பொரி உருண்டை போல் சிறியவை. கற்கண்டு போல் இனிப்பவை சில! பாகற்காய் போன்று கசப்பவை சில! ஆனால் அவை யாவும் சிறு சிறு கவளத் துண்டுகள். பச்சிளம் குழந்தைகள் கூட தமது பிஞ்சுக் கரங்களில் அள்ளித் தின்ன வசதியானவை! கவிதைகள் எல்லாம் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை! வெறும் வெளி உதடுகளில் பிறந்தவை அல்ல! அவரது கவிதைகள் தெய்வங்களைப் பற்றியோ, வேத விற்பன்னங்களைப் பற்றியோ விளக்குபவை அல்ல! மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளை கவளம், கவளமாக பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார்.
தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக நமது புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல் நமது கனடா கவிஞருக்கு ஆறு அம்சங்கள் உள்ளன:
முதலாவது அம்சம்: ஆக்க உணர்ச்சி, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்னும் ஆத்மீகத் துடிப்பு. தொடர்ந்து கவிதைகள் ஆக்க வேண்டும் என்னும் உந்தல் உணர்ச்சி. உருவமின்றி உள்ளக் கருவில் களஞ்சியமாகத் தேங்கிப் பின்னால் கவிதையாகப் பிறக்கும் திணிவு சக்தி அது. பூமிக்குள்ளே இப்படி இருக்கும் திணிவுச் சக்திதான் வெடிப்பாக, எரிமலையாகப் பீறிட்டு எழுகிறது!
இரண்டாவது அம்சம்: ஆத்ம உணர்ச்சி அல்லது ஞான உணர்ச்சி. நமது கவிஞருக்கு மூன்றாவது கண்ணான ஞானக்கண் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் அவருக்குத் தீர்க்க தெரிசனம் கிடைக்கிறது! வரப் போகும் புதுயுகம் அவரது ஞானத் திரையில் தோன்றுகிறது! அவர் தேவையான வேளைகளில் அதை நெற்றிக்கண்ணாகப் பயன்படுத்தி நாட்டுத் துரோகிகளைச் சுட்டெரிக்கிறார். ‘சுட்ட வீரப்பன் வேண்டுமா, அல்லது சுடாத வீரப்பன் வேண்டுமா, ‘ என்ற கேள்வியைக் கேட்டு, இரண்டு பேரும் வேண்டா மென்று தன் நெற்றிக் கண்ணால் துரோகியைச் சுட்டுத் தள்ளுகிறார்.
மூன்றாவது அம்சம்: அன்புணர்ச்சி. கவிஞர் மனித நேயம் உடையவர். அவர் ஒரு மனிதாபிமானி. எல்லாம் அன்புமயம் என்று நினைப்பவர். பெண்மைக்குத் தலை வணங்குபவர். தினமும் பிளாஸ்டிக் வெடிகளில் தற்கொலை புரிந்து மற்றவரைக் கொல்லத் துணியும் மூர்க்க வர்க்கத்தாரை அறவே வெறுப்பவர்.
நான்காவது அம்சம்: அழகுணர்ச்சி. கவிஞனுக்கு அழகுணர்ச்சி இல்லாவிடில் ஒளியற்ற கண்களைக் கொண்டவனாகக் கருதப் படுவான். எல்லாம் வனப்பு மயம்! இயற்கை அழகு அவனை ஈர்க்கிறது! பொங்கி வரும் பெருநிலவு போன்ற பெண்ணின் முகப் பொலிவு, கண்களின் காந்தசக்தி, கொடி உடல் வனப்பு, நடை அழகு, இடை நளினம் ஆகியவைக் கவிஞனைக் கவர்கின்றன. ஓவியம், காவியம், நாட்டியம் அனைத்திலும் கவிஞன் மனதைப் பறிகொடுத்து அங்கே அழகின் நடனத்தைக் காண்கிறான். பிறகு அவற்றைக் கவிதைகளாய் வடிக்கிறான்.
ஐந்தாவது உணர்ச்சி: ஆவல் உணர்ச்சி. படைப்புக்கு வேண்டிய தூண்டுகோல் அல்லது உளவு சக்தி அது. அதாவது தேடல் உணர்ச்சி, ஆக்க உணர்ச்சிக்கு வேண்டிய தாகம், வேட்கை, ஆர்வம் அவை! ஆய்வு உணர்ச்சி, உளவி உண்மை காணும் பண்பு.
ஆறாவது உணர்ச்சி: விடுதலை உணர்ச்சி. நாட்டு வேலிக்குள், இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு அடிமையாய்க் கிடக்கும் மனிதருக்கு விடுவிப்பு! இதைத்தான் பாரதி, ‘சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே, ‘ என்று பாடிப் பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க வீறுகொண்டு எழுந்தான். ஆனால் பாரதிதாசன் பாரதியின் பெயரில் புகழ் பெற்றாலும், பாரத விடுதலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய பாரதியாருக்கு இருந்த தீர்க்க தெரிசனம் பாரதிதாசனுக்கு இல்லாமல் போனது எனது நெஞ்சில் ஒரு முள்ளாய்க் குத்துகிறது!
கனிவுடன்,
சி. ஜெயபாரதன்
கனடா
கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி

https://www.youtube.com/watch?v=ZV6Fz0PiWVM

வெளிநாட்டில்
தமிழைக் காக்கிற ஒரு தூதுவராக
தமிழைக் காக்கிற
காவலர்களில் ஒருவராக

தமிழ்ப் படைப்பாளிகளில்
ஒரு முன்னணி
படைப்பாளியாகத் திகழ்கிற
புகாரியின் விழாவில்
கலந்துகொள்வதை நான்
பெருமையாகக் கருதுகிறேன்

வெல்க  புகாரியின் தமிழ்
வாழ்க அவர்தம் குடும்பம்  என்று
வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து


மற்றும்....

மூத்த எழுத்தாளர் மாலன்
கவிஞர் யுகபாரதி
கவிஞர் இந்திரன்
கவிஞர் வைகைச் செல்வி
கவிஞர் அண்ணா கண்ணன்
சென்னை பத்திரிகையாளர்கள்

அன்புடன் புகாரி
நான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

கணினி முற்றங்களில் - தமிழே
நீயொரு கோடி நிலா

முகநூல் முகப்புகளில் - தமிழே
நீயொரு தேவதை நாட்டியம்

டிவிட்டர் இழைகளில் - தமிழே
நீயொரு ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில் - தமிழே
நீயொரு தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே
நீயோர் ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில் - தமிழே
நீயோ நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழே தமிழே

அன்று நீ சங்கத் தமிழ்
இன்று நீ டிஜிட்டல் தமிழ்

நாளை வரும் நவீனத்திலும்
நீயே தமிழே தாயே

உனக்கு என்
தலையாய முத்த வணக்கம்


****


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய்ச் சென்றவாழ்வை
       இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
       வருகின்றேன் தமிழ்த்தாயே
 
****

செம்மொழியே செம்மொழியே
செந்தமிழர்த் தாயே
செம்மொழியே செம்மொழியே
என்றானாய் என்றோ

செம்மொழியே செம்மொழியே
என்றறிந்தும் அன்றே
செம்மொழியே செம்மொழியே
என்றழைத்தார் இல்லை

செம்மொழியே செம்மொழியே
இன்றிதுவோர் மாயம்
செம்மொழியே செம்மொழியே
வந்ததென்ன ஞானம்

செம்மொழியே செம்மொழியே
இன்றேற்றார் மூடர்
செம்மொழியே செம்மொழியே
மன்னிப்பாய் தாயே

****

யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே

இன்னும் சிலவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டதும் இடுகிறேன்

அன்புடன் புகாரி
அருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே! உங்களைத் தூண்டி கவியுலகுக்குள் ஈர்த்த உங்கள் தமிழ் ஐயாவைப் (பேராசிரியர் திரு மன்சூர் அலி) போற்றுதல் எம் கடனுமாம். வாழ்க அவர்கள்! ''சிறுவனுக்கு''ச் சிறந்த கவிதைகளை பெருந்துணையாம் கருத்துகளைப்பற்றி இயற்ற ஊக்கிய பெருமை ஐயாவுக்கே. - முனைவர் செல்வா

*

இவ்வேளையில் என் பள்ளித் தமிழாசிரியர், என்னை எப்போதும் வகுப்பில் கவிஞரே என்று அழைக்கும் திரு கிருட்டிணன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.

என் கவிதைகளை வகுப்பில் கறும்பலகையில் எழுதி அதை மேம்படுத்துவார், பாராட்டுவார், அசை பிரித்துக் காட்டுவார், அணிகளைக் குறிப்பிட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்.

மனதில் பதியும் வண்ணம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை சொல்லித் தந்த என் பள்ளி ஆசிரியர்.

இப்போது நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொஞ்சம் அசை, கொஞ்சம் எதுகை கொஞ்சம் மோனையோடு புதுக்கவிதைகள் எழுதுகின்றேன் இசைக்கவிதைகளும் எழுதுகின்றேன்

அன்புடன் புகாரி
20171212
என் நூல்களுள் சில மின் நூல்களாய் நிலாச்சாரல் டாட் காமில் கிடைக்கும்

http://www.nilacharal.com/product-category/poetry/?filter_ebookauthor=buhari

1. வெளிச்ச அழைப்புகள்
http://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

2. அன்புடன் இதயம்
http://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

3. சரணமென்றேன்
http://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/

4. பச்சை மிளகாய் இளவரசி
http://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/

5. காதலிக்கிறேன் உன்னை எப்போதும் - மின்னூலாய் இன்னும் வெளிவரவில்லை

6. அறிதலில்லா அறிதல் - மின்னூலாய் இன்னும் வெளிவரவில்லை

அன்புடன் புகாரி
கவிதை எழுதுபவன் கவியன்று
கவிதையே வாழ்க்கையாய் உடையோன்
வாழ்க்கையே கவிதையாய் செய்தோன்
அவனே கவி

-பாரதி
பூக்களைத் தொடுத்தால் மாலை
புலர்வினைத் தொடுத்தால் காலை
கோடுகள் தொடுத்தால் ஓவியம்
கவிதைகள் தொடுத்தால் காவியம்
எவற்றைத் தொடுத்து நான் சொல்ல
உங்கள் அன்பை என் நன்றி வெல்ல

அன்புடன் புகாரி
கவிஞரே எனக்குள் ஓர் ஆதங்கம், நீங்கள் இவ்வளவு தமிழை மூளையில் வைத்துக் கொண்டு கன்டாவில் இருப்பதால் தமிழ் வருந்துகின்றதோ?

*
கனடாவில் இருப்பதால்தான் நான் வணிக மற்ற தமிழ் செய்கிறேன்.
பலனல்லவா அது தமிழுக்கும் எனக்கும்.

என் இன்னலெல்லாம் நேரம் போதவில்லையே என்பது மட்டுமே
கணினி ஆலோசகனாகப் பணியாற்றும் எனக்கு நேரம் வெகு தூரம்

அன்புடன் புகாரி
20171125
*நூஹு என்றொரு நண்பர்*

டொரோண்டோவில் நூஹு என்று ஒரு நண்பர். கீழக்கரையைச் சேர்ந்தவர். உணர்வுகளின் கோட்டைக்குள் உற்சாகமாய்க் குடியிருப்பவர்.

அருமையான புதிய வீடு ஒன்றை ஏஜாக்ஸ் என்ற ஊரில் வாங்கிக் குடிபெயர்ந்து விருந்து வைத்தார்.

அவருக்குக் கானா பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதை மனதில் கொண்டு ஒரு நான்கு வரிகள் எழுதிப் பாடினேன். அதுவும் அவருக்குப் பிடித்து எங்களிடம் பாடிக்காட்டிய ’வகைவகையா சீப்பு சோப்பு கண்ணாடி’ என்ற மெட்டுக்குள் எழுதிப் பாடினேன். இதோ அது உங்களுக்காக

பளபளப்பா
தொப்பி ஜிப்பா கண்ணாடி
நூஹு....
பச்சப்புள்ள
பாசத்துக்கு முன்னாடி

பேட்டுமிட்டன்
ஆட்டத்துல கில்லாடி
அந்த.....
ஜல்லிக்கட்டு காளையெல்லாம்
பின்னாடி

நூஹூ நூஹூ நூஹுடா
நூஹூ வெல்லப் பாகுடா

அன்புடன் புகாரி
20171119
மாமனுக்கு அஞ்சலி

உறவினர் ஒருவர் இறந்திருப்பார். அம்மா என்னை அந்த மரணவீட்டிற்குச் சென்றுவா என்று கட்டளை இட்டிருப்பார். நானும் சென்றிருப்பேன். மருந்துக்குக்கூட அந்தச் சாவினால் எனக்கு ஒரு துளி கண்ணீர் வராது.

ஆனால்... நான் தொடர்ந்து அழுதேன் ஒரு மரணத்திற்கு. இறந்தவர் எனக்குச் சொந்தம் இல்லை. என் உறவினர் எவருக்கும் அவர் தூரத்து உறவும் இல்லை.

என்னை எடுத்து முத்தமிடும் என் வீட்டு வேலைக்காரர். என்னால் ‘மாமா’ என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர் ஒரு தெய்வப் பிறவி என்றே எனக்குத் தோன்றும். அத்தனை அன்புடன் வேறு எவரும் என்னிடம் இருந்ததாய் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது.

அவர் ஒரு நாள் விபத்தில் இறந்துவிட்டார். பார்க்க இயலாத நெடுந்தூரம். இறந்த செய்தியே ஒரு வாரம் கழித்துத்தான் என்னை வந்து சேர்ந்தது. என் கண்ணீர் ஒரு நயாகராவாய் அவருக்கு என்றென்றும்...

*

அஞ்சலி...

ஓவெனக் கதறினால் தீருமோ - என்
       ஒப்பாரியுனையிங்கு மீட்குமோ
ஆவியும் இல்லையே போக்கிட - என்
       ஆவியே நீதானே மாமனே

தூவிய முட்களில் துவள்கிறேன் - மனந்
       தேறிடும் வழியற்றுத் தீய்கிறேன்
சாவெனும் அரக்கனவனெங்கே - என்
       சினத்தினில் எரியட்டும் இன்றே

அன்புடன் புகாரி
19870000

கீழே உள்ள இரண்டு கவிதைகளும் ஒன்றுதான். இறைவன் என்றாலும் அல்லாஹ் என்றாலும் பொருளில் யாதொரு மாற்றமும் இல்லை. 

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்) = God (ஆங்கிலம்)

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை மாற்று மதத்தவர் பலரும் அனுபவித்துப் பாடுவார்கள். அப்படியானதோர் அற்புதப் பாடல் அது. மனித உயிர்கள் நெஞ்சுருக நேசிக்கும் இறைவனின் குணாதிசயங்களை அருமையாகப் பாடிச் செல்லும் அந்தப் பாடல்.   

இறைவன் இறைவன் என்றே எல்லா இடங்களிலும் வரும் அந்தப் பாடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ’அல்லா’ என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்திவரும்.

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

இதை ஒரு மேடையில் ’ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப்பாடினார்கள். பிழையே இல்லை. ஆனாலும் தமிழர்களாகிய நாம் எத்தனையோ வடமொழிச் சொற்களையும் அரபுமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குள் அழகாகக் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம். அதுபோலவே அல்லா என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏனெனில் அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். God என்றுதான் பொருள். 

நான் அறிந்து சில மாற்றுமத எழுத்தாளர்கள் இன்சால்லா என்ற சொல்லை வெகு சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். 

நான் மதநல்லிணக்கம் பாடுபவன். இதுபோல் எழுதி இணக்கம்தேட விழைபவன்.

*
அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

அன்புடன் புகாரி
20171120
எத்தனையோ மாணவர்களைத் தமிழால் ஊட்டிய உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் நான் என்றும் உங்களை மறப்பதே இல்லை.
என் கவிவேர் இதழ்களில் பாலூட்டியத் தாயை நான் எப்படி மறப்பது?
என் நட்பில்தான் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். ஆனால் நான் தான் அடையாளம் தெரியாதவனால் இருந்திருக்கிறேன். வருந்துகிறேன்.
இப்போதும் உங்கள் பாராட்டைக் கேட்டு அதே வயதுக்கு மீள்கிறேன்.
அடுத்தமுறை ஊர் வரும்போது அவசியம் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்கிறேன்
அன்புடன் புகாரி
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.

அந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தார். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.

உடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார். ஏமாற்றத்தோடு விடுதிக்குச் சென்று மௌனமாகவே இருந்துவிட்டு உறங்கிவிட்டேன்.

ஆனால் அடுத்த நாள் பேராசிரியர் மன்சூர் அலி அவர்கள் என்னை அள்ளி அனைத்ததை சொல்லி மாளாது. தன் நூலகம் அழைத்துச் சென்று அத்தனை நூல்களையும் நீ வாசிக்க வேண்டும் என்று அள்ளிக்கொடுத்தார். அப்படி ஒரு ஆசான் எனக்கு அதன்பிறகு கிடைத்ததாகச் சொல்லமாட்டேன். புகுமுக வகுப்பிற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அது எனக்கு மகா வருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஓ மன்சூரா நல்லாத் தெரியுமே என்று கூறினார். சந்திக்கலாம் என்றும் சொன்னார். இன்னும் நிறைய என் நினைவுகளை எழுதலாம். அலுவலகம் ஓட வேண்டும் நேரமாகிவிட்டது. 

அன்று என் தமிழாசிரியர் கேட்டதற்காக நான் எழுதிய கவிதைதான் இது.

தமிழய்யா

தீந்தமிழ்ப் பாடங்களைத்
        தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா
நீந்தும் ஆசையை ஏந்திச் சென்றேன்
        நீர்சொன்ன கவியாற்றில் நீச்சலிட
பூந்திடச்சில துணிவுகளைப் புகுத்தி
        எனதாசையையும் வளர்த்துவிட்டீர்
காந்தம்முன் இரும்பாய்நான்
        கவிபுனைய முற்பட்டேன்

பாந்தமாய்க் கவிவடிக்கப்
       பெருந்துணையோ கருத்தென்றீர்
ஆந்தையாய் விழியுருட்டி
       அலசியுமொரு பலனில்லை
ஏந்துக உணர்சிகளென்றீர்
       எங்கிருந்தும் கிட்டவில்லை
சாந்திகெட்டேன் தமிழய்யா
       கவிவருமோ இச்சிறுவனுக்கு

அன்புடன் புகாரி
19760615



நீங்கள் ரசிக்கும்
ரசிப்பைக் கண்டுதான்
நான்
என் கவிதைகளை
ரசிக்கத் தொடங்குறேன்
அன்புடன் புகாரி
அம்மா
என் அம்மா

ஓடி விளையாடிக்கொண்டிருந்த
உன்னை
தூக்கிக்கொண்டுவந்து
மணக்கோலத்தில்
உட்கார வைத்தபோது
உனக்கு வயது 13 - 1955

நீ
அக்காவைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 16 - 1958

நீ
என்னைப்
பெற்றெடுத்தபோது
உனக்கு வயது 18 - 1960

நீ
காலிதைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 20 - 1962

நீ
ஹாஜாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 22 - 1964

நீ
சகாவைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 24 - 1966

நீ
பகுருதீனைப்
பெற்றடுத்தபோது
உனக்கு வயது 25 - 1967

நாற்பதுநாள்
பால்வாய்ப் பிள்ளையோடு
நீ வெள்ளைச்சேலை கட்டியபோது
உனக்கு வயது 25 - 1967

எதுவும்
தொடங்குவதற்கு முன்பே
எல்லாமும் முடித்துவிட்டது
உனக்கு

28 வயதிலும்கூட
திருமணம் செய்யாமல்
பெண்கள் இருக்கும்போது
25 வயதிலேயே
எல்லாக் கோப்பைகளையும்
வென்று முடித்துவிட்ட
வீராங்கணையாக
உன்னை நிற்க வைத்தக்
காலக் கோலம்
கொடும் அலங்கோலம்

அம்மா
இந்தச் சேலை கட்டுமா
வெள்ளை வேண்டாம்மா
என்று ஒவ்வொருநாளும்
உன் காலைக் கட்டிக்கொண்டு
அழுத எனக்கு
உன் நிலை தெரியவில்லை

வளர வளர
வேண்டாண்டா வேண்டாண்டா
என்று
தொடர்ந்து மறுக்கும் உன்னைக்
கெஞ்சிக் கெஞ்சி
செருப்பு அணிவித்தேன்
பட்டுச் சேலையும்
கட்ட வைத்தேன்

டாப்ஸும்
ட்ராக் பேண்டும்
நைட்டியும் கூட போடவைத்து
கேரளாவில் நடக்க வைத்தேன்

இது எதனாலும்
என் காயங்கள் எதுவும்
ஆறவே இல்லையே
அம்மா

உனக்கு
மகனாக மட்டும் இல்லாமல்
தந்தையாகவும் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பேன் என்று
எத்தனையோ முறை
சொல்லியழுது புலம்பியும்
அந்தக் காயம் மட்டும்
அப்படியேதான் இருக்கிறது
அம்மா

நீ
எதற்குமே கலங்காத
வீரமகள்
தைரியத்தின் கோட்டை

அம்மா
கை வலிக்குதும்மா என்றால்
’சரியாப் போயிடும்’
என்ற ஒரு வரியில்
பெரிய மருத்துவம் பார்க்கும்
மனோதத்துவ
மேதை

அம்மா சொல்லிட்டாங்க
சரியாப் போயிடும்
என்று நினைக்காத
பிஞ்சுக் குழந்தைகள்
இருக்க முடியுமா

எத்தனைதான்
உனக்கு
உடல் நலம் இல்லாமல்
போனாலும்
நீ பயந்ததே இல்லை
சரியாப் போயிடும்
என்றுதான்
உனக்கும் சொல்வாய்

ஆனால்
முதன் முறையாக
2015ல் என் கைகளைப்
பிடித்துக்கொண்டு
புகாரி
முடிஞ்சுபோச்சுடா என்றதும்
அந்த நொடி முதல்
நான் என்ன செய்தேன்
என்று எனக்கே தெரியாது

இறைவன்
மகா பெரியவன்
அவன் தன் அளவற்ற
கருணையைக் காட்டினான்

எழவே முடியாத
உன்னை
எழுந்து நடக்கவைத்தான்

அந்த
நீண்ட தெருவின்
முனையில் இருக்கும்
மருத்துவமனைவரைகூட
நடந்துவந்துவிட்டாய்

நான் உன்னிடம்
சொன்னேன்

அம்மா
நான் எல்லா டாக்டர்கிட்டயும்
நிறைய பேசிட்டேன்
நீ ரொம்ப நாள்
இருக்க மாட்டாயாம்
இன்னும் 30 வருடங்கள்தான்
உயிரோடு இருப்பாயம்
என்றேன்

நல்லா படிச்சவன்
டாக்டர்கிட்ட எல்லாம்
தாறுமாறா கேள்வி கேட்குறவன்
அவன் சொன்னா
சரியாத்தான் இருக்கும்
என்று உள்மனதில்
ஓரு நம்பிக்கை கொண்டாய்

அவ்ளோ வருசமெல்லாம்
இருக்க வேண்டாம் புகாரி
என்னை விட்டுடுங்கப்பா
என்றாய்

உனக்கு வேண்டாம்மா
ஆனால்
எங்களுக்கு வேண்டுமே
அமெரிக்காவில்
எத்தனை உயிர்கள்
உன்னைக் கண்டு
கட்டியணைத்து
கொண்டாடி வாழத்
துடித்துக்கொண்டிருக்கின்ற
கருணை செய் அம்மா
என்றேன்
கண்களில் கட்டும்
நீரை
துஆவாக மாற்றிக்கொண்டு

அப்படியே
ஹஜ்ஜுக்கும்
போயிடனும்டா தம்பி
என்றாய்

உன் அறை முழுவதும்
மெக்கா மெதினா புகைப்படங்களை ஒட்டி
இதைப் பார்த்துப் பார்த்துச் துஆ செய்மா
உன் உடல்நலம் தேறும்
நாம் எல்லோரும் போகலாம்
அல்லாஹ் அருள்வான்
என்றேன்

உன் கல்யாணத் தேதியைக்
கண்டுபிடித்து
ஹாஜா குடும்பத்தினரிடமும் சொல்லி
என் குடும்பமும் சேர்ந்து
தொடர்ந்து தொலைபேசியில்
நவம்பர் 10ல்
உனக்கு மணநாள் வாழ்த்துச்
சொன்னபோது
எத்தனை பூரித்தாய்
அம்மா

இதோ
அமெரிக்கத் தேர்தல்
முடிந்ததும்
உன் ஆசை நிறைவேறும்
அத்தனை பேரும் வருவார்கள்
நானும் கூடவே ஓடி வந்துவிடுவேன்
எல்லோரும் உன்னோடுதான்
அம்மா என்றதும்

அல்லாஹ்
ஆமீனாக்கித் தருவான்
என்று என்னை நீ நம்பினாய்

உன்னை ஏமாற்ற
அப்படி நான் சொல்லவில்லை
அம்மா

அதுதான் என் தொடர்
துஆவாக இருந்தது
அம்மா

துஆக்கள் நிறைவேறும்
காலம் இதோ கனிந்துவிட்டது
அம்மா

அல்லாஹ் ஆமீனாக்க
முடிவு செய்துவிட்டான்
அம்மா
உயிரை
இழக்கவே முடியாது
ஆனால் இழந்துதான் ஆகவேண்டும்
மரணம் தோற்பதே இல்லை
துக்கத்தைப்
பெறவே முடியாது
ஆனால் பெற்றுத்தான் ஆகவேண்டும்
கொடுந்துயர் வலுக்கட்டாயமானது
கண்மூடி மண்மூடி முடிந்தாயிற்று
நெற்றிமூடி நித்திரைமூடி அழுதாயிற்று
நெஞ்சுமூடி நினைவுமூட வழியில்லை
காட்சிமூடி கண்ணீர்மூட முடியவில்லை
செய்திகேட்டதும்
கனடாவிலிருந்து கலிபோர்னியாவுக்கு
நெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்
என் நேரிளைய தம்பி காலிதுக்கு
ஈமச்சடங்கு செய்துவிட்ட
ஈரக்கையுடன் எழுதுகிறேன்
நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட
கோட்டைகளில் இருந்தாலும்
மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்
- குரான் 4:78
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனிடமிருந்து வந்தோம்
இறைவனிடமே செல்கிறோம்
இறைவன் அவனைத்
தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்
ஆமீன்
*
காலிது அசன்பாவா
மரணம் ஏப்ரல் 17, 2017 @Santa Maria
அடக்கம் ஏப்ரல் 19, 2017 @Livermore - Five Pillars Farm



நலமாக இருக்கிறாயா
அம்மா

ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்

*

பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்

ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்

மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்

*

இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்

காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்

உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்

உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்

*

வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்

*

விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை

தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எப்படி
நலமாக இருப்பாய்

நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்

உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா

*
நலமாக இருக்கிறாயா
அம்மா

இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை

அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை

என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா

இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது

இதோ
இப்போது வந்துவிடப் போகிறது

இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்

அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா

- அன்புடன் புகாரி  நவம்பர் 5, 2016