அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்

தோழியை அழைத்தேன்....

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்...

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசந்தரும் என்னைப் பெறா
அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

வீட்டைவிட்டு
வெளியேற....

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க...

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
ஒரே படகில் பயணப்படும்
என் உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???

4 comments:

mohamedali jinnah said...

எங்கு அழைத்தாலும் வருவார்கள் ஆனால் என்னோடு வா சுவனம் புகலாம் இந்த மாயையான வாழ்கையை விட்டு நிலையான வாழ்வைத் தேடி சுவனம் போகலாம் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள் . வரமுடியாமைக்கு ஒரு காரணம் சொல்லி தப்பிக்கவும் செய்வார்கள்.தம்பி "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" விட்டு விடு என்னை.வீண் கற்பனையை .செய்யாதே என்பார்கள். பார்த்து வந்து பார்த்துத காட்சிகளையும் அனுபவித்த மகிழ்வையும் நேரில் வந்த சொல் அப்பொழுது அதனைப் பற்றி யோசிக்கின்றேன் என்பார்கள். "தாயின் மடியில் சுவனம் உள்ளது "என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து என்பதோடு இதன் கருத்து முடிந்து விடவில்லை. மாறாக தாய் தனது பிள்ளைகளை வழிகாட்டும் முறை அவள் பிள்ளைகளை சுவனம் செல்ல வழி வகுக்கும் என்பதும் அடங்குமோ! இதில் தாயின் கடமையும் உள்ளடக்கம் . தாய் வர மறுப்பது,மகன் மீது எல்லை இல்லா அன்பு கொண்டாலும் அவன் மாண்டால் தானும் அவனோடு சேர்ந்து உயிர் விட மறுப்பது தனக்கு உயிர் மேல் உள்ள ஆசையல்ல மாறாக நீண்ட காலம் வாழ்ந்து இறைவனைத் தொழுது அவனது இறையருள் அதிகமாகப் பெற வேண்டும் என்ற வேட்கையாகவே இருக்க முடியும். நாம் டார்வின் கண்டுபிடிப்புபோல் குரங்கிலிருந்து வரவில்லையே .நம்மை இறைவன் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.
96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து (மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்)
குரங்கு தன் குட்டி கிணற்றில் விழுந்து விட்டால் அதனை காப்பாற்ற தானும் பாயும் நீர் அதன் காலளவு இருந்தால் குட்டியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும், நீர் ஊற மார்பளவு வந்தால் தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும் அதற்கு மேல் நீர் ஊருமானால் குட்டியை தூக்கிப் போட்டு விட்டு தான் பாய்ந்து தப்பித்துக் கொள்ளும். நம் தாய் அந்நிலை வந்தால் தான் இறந்தாலும் தன் குழந்தையை காப்பாற்றிவிடுவாள் . இதுதான் தாய்பாசம். எக்காலமும் ஒருதாய் தன் மகன் அழைக்க ...
'தாய்ப்பால் அருந்திய
பாசத்தைத் தரும் உறவான
என் அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு'
என்று சொல்வாள் என்பதனை என்னால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான கவிதை !

அன்புடன் மலிக்கா said...

ஆசானின் அழைப்புக்கு ஓடோடி வந்தேன். எப்படியிருக்கீங்க நலமா? என்னை நியாபகம் இருக்கா?

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இன்றைய சூழலிலனைவரின் நிலையை
சொல்லிப் போனவிதம் மிக மிக அருமை
100வது பின் தொடர்ப்வராக என்னை
இணைத்துக் கொள்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்