மரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு

ருசியில்லாப் பண்டம்
அவனை
மரணம் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய்
அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப்
பறவை

அவனை
மென்று மென்று பார்த்து
இடம்பாதி வலம்பாதியாய்த்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று அவனது
மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கி எடுத்துப்
புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத்
தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
அவனிடம் தங்கிக் கொண்டது

வேறொரு புண்ணிய உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
அவனுக்கே அவனுக்கான
மரணமும் கூட என்று அவன்
அலைந்து திரிந்தான்

திரிந்த தெருக்களின்
வசந்த முனை ஒன்றில்
அவன் எதைச் சந்தித்தான்
என்று எவராவது சொல்லுங்கள்

ஏனேனில்
மரணம் தேடிக் கிடந்தவன்
பலம் கொண்டமட்டும்
தன் சகல சாட்டைகளாலும்
விரட்டியடித்துக் கொண்டிருக்கிறான்
அவனது மரணத்தை இன்று

No comments: