சந்தனப் பேழைகள் சிந்தினவோ

சவுதியின் வரண்ட பாலையிலிருந்து விடுப்பில் ஊர்வந்தேன். வந்தவன் காடம்பாறையின் மலைக்காடுகளில் முதன் முறையாக வாசம் செய்தேன். அந்த ஈர நாட்களில் எழுதியதே இந்தச் சந்தக்கவிதை


சந்தனப் பேழைகள் சிந்தினவோ
           சாயங்காலமாய்ப் பூத்ததுவோ
சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில்
           சீட்டியடித்து நான் புறப்பட்டேன்

தந்தங்கள் இல்லா யானைகளாய்
           தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே அருவிமகள்
           சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்

வந்தனம் பாடிய வண்டுகளோ
           வந்த என் வரவை ஆதரிக்க
எந்தவோர்ப் பூவினில் ராசவண்டு
           எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ

அந்த நற்பூவின் மனதினைப்போல்
           ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத் தேனமுதாய்
           வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்

துள்ளித் துள்ளியோர் மான்கன்று
            தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச் சந்தனமாய்
            அங்கோர் அழகுப் பூந்தோட்டம்

சொல்லிச் சிரித்திடக் குரங்குகளோ
            சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர் நெடுமரத்தின்
            தனிந்த கிளையினிற் தாவினவே

சில்லென வீசியக் குளிர்வாடை
            சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட வேண்டும் வண்ணம்
            நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்

உள்ளமோ மகிழ்வின் உச்சியிலே
            உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு ஈடுயிணை
            இடிபடும் பட்டிணத் தெருக்களிலே

மன்மத அம்புகள் எய்தவண்ணம்
            மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ மலைமுகட்டில்
            வந்து வனப்பாய் நின்றிருந்தாள்

இன்று ஏன் புதிதாய் அம்புலிக்கு
            இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க நான்மறந்து
            கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்

கண்களை மூடிட கிடைத்ததங்கே
            கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே மனம் சிலிர்க்கும்
            இரவின் தனிமையில் என் வீட்டின்

முன்னும் பின்னும் ஏதேதோ
            முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி சன்னல்வழி
            கண்டேன் ஓரிரு கரடிகளை

மெல்லப் புலர்ந்ததும் அதிகாலை
            மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப் புகைபோலே
            முல்லையில் நெய்த குடில்வனப்பில்

பள்ளியறை என முகிலினங்கள்
            படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள அவ்வழகெல்லாம்
            அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே

மெள்ளத் துள்ளிநான் ஆடியோடி
            மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச் சுகங்கோடி
            சொர்க்க வெளியில் எனைத்தள்ளி

இல்லை இல்லை நான் திரும்பவில்லை
            எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா ஊருக்கென
            சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும்

No comments: