காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி




















இருநீல மலர்களைச்
சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே
நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால்
காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது

ஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன்
என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்

நீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது
அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்

உன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது
என்று நான் புரியவைத்தபோது
உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்

ஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு
கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்

அவன் மட்டும் என் பௌர்ணமியைத்
தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது
நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்

சூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள்
நான் உன்னைக் கண்டேன்
என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப்
பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.

உன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்

உன் முக முற்றத்தில் வந்துவிழும்
கூந்தல் கற்றைகள் மேகங்களா - எனில்
அவை என்னைத்தவிர வேறெவர்க்கும்
பொழிவதில்லையே

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா - எனில்
அவை என்னைத் தவிர வேறெவர்க்கும் புரிவதில்லையே

நான் உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே என் உடலின்
இரத்த ஓட்டத்தை உணர்கின்றேன்

அன்றொருநாள் நானுன்னைத் தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த கோடி புஷ்பங்கள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின் மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள் மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும் புரியாமல் விழித்திருக்கிறேன்

நீ பொட்டிடுவது உன் நெற்றியை அலங்கரிக்க
என்றுநான் என்றுமே நினைத்ததில்லை
பொட்டை அலங்கரிக்கவே என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால் உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால் நான் கவிஞனானேன்

இன்றெல்லாம் நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லையடி
உன்னை நினைத்திருப்பதால் நான் விழித்திருக்கிறேன்

நான் வருசங்களை நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள் சூரியக் கண்களை பூமி இமைகள்
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய எல்லாம் மறந்தோம்

1 comment:

mohamedali jinnah said...

கவிதை பிடிச்சிருக்கு+அருமை.
படம் அழகு.! மனதை மயக்குது