1 தமிழில் இல்லாத எழுத்துக்கள்

கேள்வி:
மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில், சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில், அதை நிரப்புவது தானே முறை? ஜா, ஷா போன்றவை அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில் என்ன தவறு? ழ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும் அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து கவலையும் பட வேண்டும் இல்லையா... z போன்ற இன்னும் எழுத்து இல்லாத சில ஓசைகளுக்கு எழுத்தை உருவாக்குவது நல்லது. இது எனது கருத்து மட்டுமே. இதன் மறுபக்கம் எனக்கு தெரியாது. இது குறித்த உங்களது பார்வையை எதிர்பார்க்கிறேன்.

என் பதில்:
அருமையான கேள்வி. எனக்கும் பலகாலமாய் இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்ததால்தான் கிரந்த எழுத்துக்களான ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ ஆகியவற்றைத் தமிழுக்குள் இழுத்துவந்தார்கள்.

ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி உண்டு. நீங்களே கூறி இருக்கிறீர்கள். தமிழின் தனி எழுத்து ழ என்பதை. இந்த ழ வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்?

ஆங்கிலத்துக்கு ஒரு புது எழுத்து தேவையில்லையா?

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.

கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது?

முஅஅல்லம் என்று ஒரு பெயர் அரபியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கிறீர்களா? பல எழுத்துக்களை உங்களால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியில் ழ என்ற எழுத்து இருக்கிறதா?

பிரஞ்ச் மொழி வாசகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அவரவர் அவரவர் நிலையில் அழகல்லவா? இவள் அழகு இவள் அழகில்லை என்று சொல்லமுடியுமா? ஆனால் அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்கள்தானே அவர்களைத் தனித்தனியாய் அடையாளம் காட்டுகின்றன.

வெள்ளைக்காரி சற்று உயரமாக இருப்பாள். கால்கள் வலுவாக அழகாக இருக்கும். எனவே அவள் கால்களை வெளிக்காட்டியே உடை உடுத்துவாள். மார்புப்பகுதி பெரும்பாலும் பாலைவனமாய்க் கிடக்கும். முடி சொல்லவே வேண்டாம். கருப்பாய் இருக்காது, குறைவாயும் இருக்கும்.

தமிழ்ப்பெண் சுமாரான உயரமாய் இருப்பாள். கால்கள் நோஞ்சானாய் இருக்கும். ஆனால் இடையும் இடை சுமக்கமுடியாத அழகுமாய் இருப்பாள். கண்கள் பெரியதாய் பேசும் விழிகளாய் இருக்கும். நிறைய கூந்தலோடு கவர்ச்சியாய் இருப்பாள்

சைனாபெண் குள்ளமாக இருப்பாள். பெரும்பாலும் சப்பை மூக்கு. சின்னச் சின்னப் பொருள்களாய்ப் பார்த்துப் பார்த்து தேடி கண்ணாடிப் பெட்டிக்குள் அலங்கரித்து வைத்திருப்பார்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஓர் அழகில் இருப்பாள்.

ஆப்பிரிக்கப்பெண் கறுப்பு. வாட்டசாட்டமான உருவம் அதில் மிகையான பின்புறம். சீப்புக்குச் சிக்காத சுருள் கூந்தல். நல்ல உயரம்.

ஆனால் பாருங்கள் எல்லாப் பெண்களுமே அழகு. இப்படித்தானே ஒவ்வொரு மொழியும் அழகு. எந்த மொழி அழகில்லாதது? சொல்லுங்களேன் பார்க்கலாம்.

தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதையர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

சரி மீண்டும் உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.

முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு.

Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?

Sun Son எப்படி வித்தியாசப்படுத்துகிறீர்கள்?

hire, here, hear, heir, hair நுனுக்கமாக எப்படி உச்சரிக்கிறீர்கள்?

Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்?

இன்னும் எனக்கு ஓர் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் உண்டு.

19 comments:

சாந்தி said...

அருமையான அலசல் , விளக்கங்களும் ..

சீனா said...

ஆழ்ந்த ஆய்ந்த விளக்கம் - நன்றி புகாரி

ஹரன் ஜாபர் said...

//சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.//


நிறைய பேச வேண்டிய ஒரு தலைப்பை எடுத்திருக்கிறீர்கள் புகாரி. ஒரு சந்தேகம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகு என்பதை விளக்க, நான்கு மூலையிலிருந்து நான்கு பெண்களை அழைத்து வந்துவிட்டீர்கள், கையில் எடைத் தராசுடன் (அதுவும் ரமலான் மாதத்தில்!) நிறைய காதல் கவிதைகள் எழுதினால் இப்படித்தான் ஆகும்.

உலகின் நான்கு மூலையிலுமுள்ள மனிதர்களை ஒப்பிட்டால் இயற்கையின் இன்னொரு அழகு தெரியும். உலக வரைபடத்தை நான்கு கட்டங்களாக ஆக்கினால், இடதில் உள்ள மேலும், கீழும் உயரம்; வலதில் உள்ள மேலும், கீழும் குட்டை. மேலிரண்டும் வெள்ளை; கீழிரண்டும் (இனிய)கருப்பு. இடது கீழே(ஆப்பிரிக்கா) சுருள் முடி; வலது மேலே(சைனா) கம்பி முடி. இடையிலிருக்கும் இடது மேலும், வலது கீழும் அழகு முடி. கீழிரண்டும் கூட்டுக் குடும்பம், பாசம் என்ற கருத்தியல் கூடுதல்; மேலிரண்டிற்கும் சுயசார்பு போன்ற பொருளியல் பார்வை கூடுதல். இடது கீழே மிகப் பெரிய கண்கள்; வலது மேலே மிகச் சிறிய கண்கள். இடைபட்ட இரண்டிற்கும் சராசரி கண்கள்... இயற்கையின் விந்தைக்கு எல்லையே இல்லை,

//Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?//

ஆங்கிலத்தில் எந்த உயிரெழுத்துமே, அதனதன் உச்சரிப்பில் வருவதில்லை, பெரும்பாலும்.
A= ‘ஏ', ஆனால் ‘அ' என்ற உச்சரிப்பில் வரும்.
E= 'இ' ஆனால் ‘எ' என்ற உச்சரிப்பில் வரும்.
I= ‘ஐ' ; ஆனால் ‘இ' எனும் உச்சரிப்பில் வரும்.
O= ‘ஓ' ; ஆனால் 'அ' எனப் பெரும்பாலுமாக வரும்.
U= 'உ'; ஆனால் ‘அ' எனப் பெரும்பாலுமாக வரும்.

உயிரே இப்படித் தடுமாறும்போது, மெய் எப்படி நிலையாக இருக்கும்?
ch சில இடத்தில் ‘ச்' (chill, rich); சில இடத்தில் ‘க்' (chemistry)
cut=கட்; cute=க்யூட்
கடைசியாக ஒரு உயிரெழுத்து சேர்கிறது இங்கே; ஆனால் இடையிலுள்ள (!) உயிரெழுத்து, ‘அ' விலிருந்து, ‘உ' வாக மாறுகிறது.

தமிழில், ஒரு மெய்யெழுத்து, பல உச்சரிப்புகளில் வரும் (‘க'= ka, ga, ha; ‘ப்'=pa, ba, fa, bha). ஆனால் வேறொரு மெய்யெழுத்தாக மாறிவராது. வீடற்றவர்களுக்கு, தன் வீட்டில் இடமளிக்கும்; ஆனால் வேறொருவர் வீட்டை அபகரிக்காது.

உயிரெழுத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; என்றும் மாறாக் கற்பு, நம் தமிழின் சிறப்பு.

அன்புடன்
ஹரன்

ஆயிஷா said...

//தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதையர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!//


நல்ல கருத்து ஆசான்.


//முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?//

Buhari என்ற ஆங்கிலச் சொல்லின் உச்சரிப்பு புஹாரி எனத் தானே வர வேண்டும். எனினும் புகாரி என்று எழுதுவதிலும் தப்பில்லை இல்லையா? B என்ற எழுத்துக்கு தமிழ் உச்ச்ரிப்பு இல்லையே. அதற்காக puhari எனக் கூறுவது சரியாகுமா?
அன்புடன் ஆயிஷா

Unknown said...

புகாரி என்று எழுதினாலே கா-வை ஹா என்றுதான் உச்சரிப்பீர்கள். முகம் என்பதில் க ஹ தானே?

இந்த B தான் பிரச்சினை. பாலசுப்ரமணியம் என்பதை எப்படிக் கூப்பிட்டு பழகுகிறார்களோ அதே போல என் பெயரைக் கூப்பிட்டு பழகிவிடுவார்கள். ஒரு முறை நான் உச்சரித்து அவர்கள் கேட்கவேண்டும். அவ்வளவுதான்.

அன்புடன் புகாரி

Anonymous said...

Dear Sir,

Yes in English there is no equivalent words for some tamil phrase, But not for the phrases used in English. Whereas our case is different, We don’t have equivalent words for the phrase used in Tamil it self. Sorry for posting in English. What’s your opinion about this

Unknown said...

Yes in English there is no equivalent words for some tamil phrase, But not for the phrases used in English. Whereas our case is different, We don’t have equivalent words for the phrase used in Tamil it self. Sorry for posting in English. What’s your opinion about this

நண்பரே, உங்கள் பெயரிடாமல் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் கருத்து தவறானதல்ல. எனவே உங்கள் பெயரை நீங்கள் சொல்லலாம்.

தமிழ் சொல் அனைத்துக்கும் சரியான தமிழ் எழுத்து தமிழில் உண்டு.

நிங்கள் இல்லை என்று நினைக்கும் சொற்களை உதாரணமாகக் கொடுத்தால், விளக்கம் தருவதற்கு வசதியாக இருக்கும்.

அன்புடன் புகாரி

அறிவுடைநம்பி said...

அன்புடன் புகாரி அவர்களுக்கு,
நீங்கள் எடுத்தாண்ட கருத்துக் காணாமல் போய்விட்டது. ஏன்?
ஓர் மொழியில் இல்லாத ஓசைகளுக்கான் எழுத்தை மற்ற மொழிகள் கடன்பெற்ற
கருத்துத் தொகுப்பு
தங்கள் கட்டுரையில் காணாமல் போய்விட்டது. ஏன்?
அதைத் தேடித் தொகுத்து வெளியிடுங்கள் ; கட்டுரை சிறப்புப்பெறும்.
தூத்துக்குடியை உச்சரிக்கத் திணறிய அறிவான ஆங்கிலேயர் உச்சரிப்பை
(tuticorin) நாம் பொறுத்துக்கொண்டோம். பருப்பு என்பதை பப்பு என்று மழலை
உச்சரிக்கையில் நாம் பூரிக்கவில்லையா? அது போல்.
தமிழில் இல்லாத எழுத்துக்கள் என்ற நிலை முதலில் எப்போது முளைத்தது?
அப்போது நாம் ஆங்கிலேயர் போல் அறிவுடையவர்களாக இல்லை. ஏன்?.
பிறர் மனம் புண்படாது பேசிப் பழகும் பண்பட்ட தமிழர் அன்று
விட்டுக்கொடுத்தனர். தமிழ் சான்றோர்
டி.கே.சி. அவர்கள் தாம் வாழ்ந்த இலஞ்சி மண்ணைப்பற்றிக் குறிப்பிடும்போது,
2000 ஆயிரம் ஆண்டு
காலமாக ஏர்க்கொழுவால் பண்பட்ட பட்டுமண் என்று குறிபிடுவார். தமிழ்
மண்ணும் தமிழர் மனமும்
உலகில் காணக் கிடையா.
ஒரு மொழி வேற்று மொழியிலிருந்து எழுத்தைக் கடன் பெற்ற (அ) எழுத்துரு
ஏற்படுத்திக்கொண்ட தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மீ.க.

தமிழ் said...

அருமையாக‌
அழகாக
அற்புதமாக உள்ளது
தங்களின் பதில்

அன்புடன்
திகழ்

வேல் said...

ஹ்ம்ம்ம்... நல்ல விவாதம்... எனக்கு மொழியறிவு ரொம்ப கம்மி.. அதனால் எட்ட நின்று பார்க்கிறேன்...


ழ கரம் மலையாளத்திலும் இருக்கா?(நீண்ட நாள் சந்தேகம், தீர்த்து வையுங்களேன்)


நிறையவே ஆங்கிலேய காலத்திலிருந்து நாம் மாறாது இருக்கிறோம். அதிலும் மொழிக்கு இடமுண்டு. என் ஊர் விழுப்புரம். ஆங்கிலத்தில் Villupuram.. என்று தான் எழுதப்படுகிறது. ழ கரத்திற்கு ஆங்கிலத்தில் நான் எப்போழுதும் எழுதுவது z என்கிற ஆங்கில எழுத்தில் தான்...


இப்பவும் நான் எழுதிக்கொண்டிருக்கிற இ கலப்பை மென்பொருளில் ழ க்கு za என்று தான் அடிக்கப்படுகிறது...
-
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

Unknown said...

//ழ கரம் மலையாளத்திலும் இருக்கா?(நீண்ட நாள் சந்தேகம், தீர்த்து வையுங்களேன்)//


வேல். மலையாளம் தமிழிலிருந்து உருவானது. தமிழை அடுத்து ழ மலையாளத்தில்தான். தமிழர்களைவிட மலையாளிகள் ழ வை படு சுத்தமாக உச்சரிப்பார்கள். வாழ்க சேரநாடு

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

நண்பர்களே


தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகி விடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் மருத்துவ, விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது.

தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!


சி. ஜெயபாரதன்.

Unknown said...

ஜெயபாரதன்,

தமிழ்மொழி விலங்கிடப்பட்டிருக்க வில்லை. அப்படி விலங்கிடப்பட்டிருந்தால் மட்டுமே அது விடுதலை அடையவேண்டும்.

இப்படி ஒரு நீண்ட மடலை எழுதி இருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு தமிழில் அல்லாத எந்த புது எழுத்தும் தேவையாய் இருக்கவே இல்லை.

அதே சமயம் மொழியாக்கம் செய்ய முடியாத பிறமொழி சொற்கள் அவசியம் தமிழில் எழுத வேண்டும் என்ற நிலைவரும்போது (உங்கள் பெயரில் வரும் ஜெ போல) இருக்கும் கிரந்தத்தைப் பயன்படுத்தலாம்.

தமிழில் செய்யமுடியாத அறிவியல் என்று ஒன்று இல்லவே இல்லை. அது தமிழனால் முடியவில்லை என்று சொல்லலாமே தவிர தமிழால் முடியாது என்று சொல்வது தவறு.

அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

புகாரி,

இப்போது நமது பிரச்சனைகள் ஸ, ஷ, ஹ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் இல்லாத தூய தமிழைத் தேடும் குறிக்கோள் அல்ல. பொதுத் தமிழில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதும் ஒரு பழக்கம், முயற்சி, விருப்பம், தூண்டுதல் ஆகியவை.

ஆங்கிலத்தைப் பிழையோடு எழுத வெட்கப்படுவோர் சிரத்தை இல்லாமல் தமிழைத் தாறுமாறாகப் பெரும்பாலும் வலைத்தளத்தில் அனுதினமும் எழுதி வருவோருக்கு யாராவது அறிவுரை கூறுகிறாரா ?


அன்புடன்
சி. ஜெயபாரதன்.

Unknown said...

ஜெயபாரதன்,

உங்கள் எண்ணம் உயர்வானது. ஆனால் முதலில் இவர்களெல்லாம் தமிழில்
எழுதட்டும். எழுத எழுத கற்றுக்கொள்வர். அடுத்தவர்களை வாசிக்க வாசிக்க
பழகிக்கொள்வர்.

ஆங்கிலவழி கற்பவர்கள் தமிழில் எழுதவருவதை முதலில் நான் பாராட்டுகிறேன்.
அவர்களைத் தலையில் குட்டி வெளியேற்ற விரும்பவில்லை.

ஜெயபாரதன் said...

புகாரி,

அதாவது நீங்கள் சொல்வது ஆங்கில வழியில் கற்ற நமது தமிழர்கள் தமிழைப் பாலர் வகுப்பில் இப்போதுதான் படிக்க எழுதத் துவங்கி இருக்கிறாரா ?

Unknown said...

கிட்டத்தட்ட உண்மை ஜெயபாரதன். உண்மையை நாம் உணரத்தான் வேண்டும். நான்
தமிழ்வழியே 11ம் வகுப்புவரை படித்தேன். அது மட்டுமே என் தமிழ்த் தொடர்பு.
ஆனால் பலரும் இன்று ஆங்கில வழி பயின்றவர்களே, என் குழந்தைகளையும்
சேர்த்து.


அன்புடன் புகாரி

ஜெயபாரதன் said...

புகாரி,

இந்த தரைமட்ட அளவை நாம் பொறுத்துக் கொள்வது தமிழ்ப் பணிக்கும் வளர்ச்சிக்கும் போதாது.


அன்புடன்
சி. ஜெயபாரதன்

Unknown said...

சொல்லித்தரத்தான் நாம் அவ்வப்போது எழுதிக்கொண்டே இருக்கிறோமே. எத்தனை
தமிழறிஞர்கள் எத்தனை கட்டுரைகள் எழுதுகிறார்கள்? நாளெல்லாம் தமிழ் பற்றி
பேசிக்கொண்டேதானே இருக்கிறார்கள்? நிச்சயமாக நாம் வளரும் முகமாகவே
இருக்கிறோம். நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இணையத் தமிழ் மூலமாக


அன்புடன் புகாரி