உயிரை உயிரில் கரைக்க
ஓடோடி வந்தேன்
அங்கே உயிரே இல்லை

பொழுதும் மாறும் மாய நெஞ்சோடு
போராடும் கானல் உயிரிடம்
உயிரின் வேர்களுக்கு
நீர் எப்படிக் கிடைக்கும்

என் சொர்க்கங்களில் சில
மறைத்து நிற்கும் உன் திரைகளைத்தாண்டி
என்னிடம் நீள்கின்றனவே
அவற்றை எப்படிப் பொசுக்கப் போகிறாய்

தடுப்புகளைக் கிழித்துக்கொண்டு
உன் விழிகள் பேசும்
மெய் மொழிகளை
எப்படி அழித்தெடுப்பாய்

ஒரு முறை விரிய ஒரு ஜென்மம் மலர
என்று எனக்கு ஜென்மங்களை அருளிய
இதழ்கள் இன்றும் பூப்பதை
எப்படிக் கிழித்தெறிவாய்

எழவும் மறுக்கும் கால்களோடும்
இயங்க வெறுக்கும் இதயத்தோடும்
நான் வரவில்லை நீ போ என்று
கைக்குழந்தையாய்க்
கால்கைகளை உதைத்துக்கொண்டு
ஓங்கி அழும் உயிரோடும்
உன்னைவிட்டு விடை பெற்றேன்

ஆனாலும்
சொர்க்கமும் நரகமும் கட்டிப்புறளும்
இந்த விளையாட்டைத்தானே
இப்போதும் நான் விரும்புகிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

மகிழ்நன் said...

//எழவும் மறுக்கும் கால்களோடு
இயங்கவும் மறுக்கும் இதயத்தோடு
நான் வரவில்லை நீ போ என்று
ஒப்பாரி வைக்கும் உயிரோடு
உன்னைவிட்டு விடை பெற்றேன்///

ஒரு நொடி கலங்க வைத்துவிட்டன.........
என் காதலியின் பிரிவை நினைவுப்படுத்திவிட்டது