மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

காற்று
வாங்கப்போகும் இடத்தில்
கல்லறைகள்

ஏன்?

செத்தும்
அகலாத புழுக்கத்தோடு
அரசியல் தலைகள்
இங்கே அடக்கம்

தலைகள் ஏதும் வழிநடத்தாமல்
தங்கத்தமிழ் எழுச்சி மக்களின்
சல்லிக்கட்டுப் போராட்டம்
இந்தக் கல்லறையைச்
சுத்தப்படுத்தியது

ஆனால்
தடால் தடியடியால்
தறுதலைகளோடு நடுத்தலை
மீண்டும் இதை
அசுத்தப்படுத்தியது

எண்ணையைக் கொட்டி
கடல்வளம் அழிக்கும்
வணிகக் கப்பல்கள்
மெரினாவில்

கேட்க வாயற்றவை
சமாதிகள் மட்டுமல்ல
நடமாடும் சமாதிகளும்தான்
என்று நிரூபிக்கின்றன

எத்தனையோ குரல்களையும்
எண்ணற்ற கூக்குரல்களையும்
கேட்டவண்ணம்
பரந்து விரிந்து
அலைவீசிக் கிடக்கிறது
மெரினா

இன்றுவரை
இங்கே நடந்த கூட்டங்கள்
குவிந்த மக்கள்
மணல் எண்ணிக்கையை
என்றோ மூழ்கடித்த
சாதனை

இன்றெல்லாம்...

மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

அன்புடன் புகாரி
20170210

No comments: