Showing posts with label * * 10 தமிழ் முஸ்லிம். Show all posts
Showing posts with label * * 10 தமிழ் முஸ்லிம். Show all posts

தமிழ்முஸ்லிம் தந்தையை ஏன் அத்தா, வாப்பா என்று அழைக்கிறார்?

தமிழ்முஸ்லிம் என்றழைக்கப்படுபவர்களின் தாய்மொழி தமிழ் என்பதாலும் அவர்களுக்கு அரபு மொழியோ உருது மொழியோ தெரியாது என்பதாலும், வடமொழி நாட்டமும் அவர்களுக்கு இயல்பாகவே இல்லை என்பதாலும், தமிழ்முஸ்லிம்கள் பல தூய தமிழ்ச் சொற்களை அன்றாடம் அதிகம் புழங்குகிறார்கள்.

சோறு, ஆணம், பசியாறல், வட்டிலப்பம், பெருநாள், நோன்பு, தொழுகை, பள்ளிவாசல் என்று பல சொற்களை உதாரணமாகச் சொல்லலாம்.

அப்படியான தூய தமிழ்ச் சொற்களுள் அத்தா என்பதும் ஒன்று.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். அத்தன் அத்தா அச்சன் முத்தன் அப்பன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

அழைக்கும்போது அப்பன் என்பது அப்பா என்று ஆவதைப் போல அத்தன் என்பது அத்தா என்று ஆகிறது.

மாற்றுமத நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் சில தமிழ்முஸ்லிம்கள் இவர்தான் என் அப்பா என்று அவர்களுக்கு தகப்பனாரை அறிமுகம் செய்வார்கள். அது அவசியமற்றது, தாராளமாக அத்தா என்றே அறிமுகம் செய்யலாம்.

தமிழ்முஸ்லிம் வீடுகளில் தகப்பன் தகப்பனார் என்பவையும் புழக்கத்தில் உள்ள சொற்கள்தாம். தம் அப்பன் என்பதுதான் தகப்பன். தம் அப்பனைத்தான் அப்பா என்று அழைக்கிறோம்.

ஒரு தமிழ்முஸ்லிம் தகப்பனார் என்று சொல்லும்போதெல்லாம் அப்பா என்றுதான் தந்தையைக் குறிப்பிடுகிறார்.

அத்தா அப்பா என்ற சொற்களெல்லாம் பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறன. பழந்தமிழ் இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.

      பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா     
      எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
      வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
      அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

என்பது தேவாரப் பாடல்

      அன்னை நீ அத்தன் நீயே
      அல்லவை எல்லாம் நீயே
      பின்னும் நீ முன்னும் நீயே
      பேறும் நீ இழவும் நீயே

      அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இப்
      பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
      எத் தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
      ஒத்தால், பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?

என்பவை கம்பராமாயணப் பாடல்கள்

      முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
      அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
      தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
      பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

என்பது மணிவாசகரின் பாடல்
     
      அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
      அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
      எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
      எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்

இது திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்
     
      காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
      தேமொழி கேட்டல் இனிது

என்னும் வரிகள், மகனே, அனைவரும் விரும்பும் அழகனே, அத்தா அத்தா என்று சொல்லும் உன் தேன்மழலை மொழி கேட்பது என்றென்றும் இனிமையானது என்று சொல்லும் கலித்தொகையின் பாடல்

தமிழ்முஸ்லிம்கள் வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில்லை. பழந்தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதில் குறிப்பாக கடலோரம் வாழும் தமிழ்முஸ்லிம் வீடுகளுக்குச் சென்றால் அவர்கள் புழங்கும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தேநீர் என்பதை அதிராம்பட்டினம் போன்ற கடற்கரையோர ஊர்களில் தேத்தண்ணி (தே+தண்ணீர்) என்பார்கள். தேநீருக்கும் தேத்தண்ணிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தேத்தண்ணி என்பது பால் மிகக் குறைவாகவும் இஞ்சி அதிகம் சேர்க்கப்பட்டும் வெடவெடவென்று தண்ணீரைப்போல அடர்வற்று இருக்கும். உண்ட உணவை எளிதில் செரிக்க வைக்கக் கூடிய அருமருந்து அது.
தமிழ்நாட்டில் 5 மில்லியன் தமிழ்முஸ்லிம்களும் இங்கையில் 2 மில்லியன் தமிழ்முஸ்லிம்களும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். மேலும் மலேசியா சிங்கப்பூர் பாங்காக் போன்ற நாடுகளிலும் தமிழ்முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்

பிரியாணிக்கும் கவிதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நகைச்சுவையாக ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கேட்டாராம். காரணம் கவிஞர்களுள் அதிகமானோர் முஸ்லிம்களாக இருக்கிறார்களே அது எப்படி என்ற வியப்புதான். 

பௌத்தமும் சமணமும் ஆரியர்களால் அழிக்கப்பட்டபோது அவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சமணர்கள் தமிழ் இலக்கியங்கள் பல படைத்திருக்கிறார்கள்.

தமிழ்முஸ்லிம் வீடுகளில் மட்டும் எப்படி இத்தனை பழந்தமிழ்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன, எப்படி இத்தனைக் கவிஞர்கள் பிறக்கிறார்கள் என்பதற்கான காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்.

இயல்பாகவே உலக அளவில் அராபியர்கள், பெர்சியர்கள், சூபிகள், துருக்கியர், உருதுக்காரர்கள், தமிழ்முஸ்லிம்கள் என்று பலரும் கவிதைகளில் மிகுந்த நாட்டம் உடையவர்களாகவே இருக்கின்றனர். சகோதரத்துவத்துக்கும் கவிதைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாமோ என்னவோ!

அத்தா என்பது அதன் வேரோடு புரிகிறது ஆனால் இந்த வாப்பா எங்கிருந்து வந்தது?

கடலோர தமிழ்முஸ்லிம் வீடுகளில் அம்மா என்று அழைப்பதற்குப் பதிலாக உம்மா என்று அழைப்பார்கள். இது பேச்சுவழக்கில் வந்தது. இப்படியானதொரு பேச்சுவழக்குதான் வாப்பா என்பதும்.

அப்பா என்பதை உப்பா என்றும் வூப்பா என்றும் இப்பா என்றும் கேரளாவில் அதிகளவில் சொல்வார்கள். அதையே தமிழ் நாட்டில் வாப்பா என்று சொல்வார்கள். இவை எல்லாமே அப்பா என்ற சொல்லின் பேச்சு வழக்குதானேயன்றி வேறில்லை.

வாப்பா என்று வாய்நிறைய அழைத்தவர்கள் அதிலிருந்து மாறத் தேவையில்லை. ஏனெனில் பேச்சுவழக்கிலிருந்து தமிழுக்குள் வந்த சொற்கள் ஏராளம்.

அத்தா என்பதும் வாப்பா என்பதும் அரபுச் சொற்களோ உருதுச் சொற்களோ அல்ல அச்சு அசலான பழந்தமிழ்ச் சொற்களே.

#தமிழ்முஸ்லிம்

அன்புடன் புகாரி


தமிழ்முஸ்லிம் ஜனாப் என்றுதான் அழைக்கவேண்டுமா திரு என்று அழைக்கக்கூடாதா?

தமிழ்நாட்டில் சில தமிழ்முஸ்லிம்கள் பிற முஸ்லிம் ஆடவரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். உதாரணம் ஜனாப் அப்துல் காதர், ஜனாப் அப்துல்ரகுமான், ஜனாப் முகமது பரூக்.

இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

மிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததுதான். மிஸ்டர் என்பதையும் மாஸ்டர் என்பதையும் மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கியதே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானாம்.

மாஸ்டர் என்ற சொல்லின் மூலத்தைப் பார்த்தால் அது லத்தீன் மொழியில் மாஜிஸ்டர், மாஜிஸ்ட்ரம் என்ற சொற்களின் மூலச் சொல்லான மாகுஸ் அதாவது க்ரேட்என்ற பொருளுடைய சொல்லிலிருந்து வந்திருக்கிறது. அதாவது க்ரேட் மேன்உயர்ந்த மனிதர் என்று அழைப்பதாகத்தான் மிஸ்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கிரேக்க மொழியில் மெகாலொ என்ற சொல்லின் மூலமான மெக் என்ற சொல்லும் க்ரேட்என்ற பொருளுடையதுதான். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறார்களே அதுவும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான்.

சார்என்று அழைப்பதற்குப் பதிலாகவும் இந்த மிஸ்டர் என்ற சொல் பயன்படும். ராணுவத்தில் இந்த மிஸ்டரின் பயன்பாடு வெகு அதிகம்.

ஆடவரை மரியாதையாக அழைக்கும் இந்தச் சொல்லின் வழக்கம் அப்படியே தமிழுக்குள் வந்தது. தமிழர்கள் பெயருக்கு முன் திரு என்று இட்டு மரியாதையாக எவரையும் அழைப்பார்கள். உதாரணம் திரு மணிவண்ணன், திரு செல்வராகவன், திரு வெற்றிவேல்

இந்தத் திரு என்ற சொல்லை மதம் சார்ந்த ஆன்மிகவாதிகள் புனிதமான, தெய்வீகமான போன்ற சொற்களுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். திரு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. ஆனால் பொதுப் பயன்பாட்டின்படி திரு என்று பெயரின் முன் இட்டு எவரையும் அழைக்கும்போது அது மரியாதைக்குரிய என்று மட்டும்தான் பொருள்படும்.

அதாவது மிஸ்டர் என்றாலும் திரு என்றாலும் ஒரே பொருள்தான். ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது அழைக்கும்போது இந்த திரு என்ற சொல் மொழி சார்ந்த சொல்லே தவிர மதம் சார்ந்த சொல் அல்ல. ஆகவே திரு என்ற சொல்லை தமிழர்கள் அனைவரும் மதம்கடந்து பயன்படுத்தலாம்.

தமிழ்முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை.

முகம்மது நபி அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். பார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். பார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.

தமிழ்முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் பார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

சவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.

இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.

அராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன? சேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் சேக் என்றே அழைக்கிறார்கள்.

பிறகு தமிழ் முஸ்லிம்கள் எப்படித்தான் மரியாதையாக இன்னொரு தமிழ் முஸ்லிமை அழைப்பது? இது நியாயமான கேள்விதான். இதற்கான விடையைத் தேடி நாம் வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. நமக்கு மிக மிக அருகிலேயே இருக்கிறது.

குர்-ஆனை தமிழ் முஸ்லிம்கள் எப்படி அழைக்கிறார்கள்?  திருக்குர்-ஆன் என்றுதானே? திருமறை என்றுதானே? அப்படி இருக்க திரு அப்துல் காதர் என்று அழைத்தால் அதைவிட தமிழ் முஸ்லிம் சகோதரர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஏற்ற சொல் வேறு எதுவாக இருக்க முடியும்?

அன்புடன் புகாரி