Showing posts with label anjali. Show all posts
Showing posts with label anjali. Show all posts

கனடாவில் பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி அவர்களின் மறைவு

மறைவு: ஜனவரி 22 அதிகாலை 3:28

என் ஆழ்ந்த அஞ்சலிகள்

எனக்கும் ஆர் எஸ் மணி அவர்களுக்குமான தொடர்பு தமிழின் வழியேதான் வந்தது. நெருங்கிய குடும்ப நண்பர் ஆனார். அவரைச் சந்தித்தால் எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு மகிழ்ச்சி வரும் என்று சொல்லவே முடியாது.

என் கண்களுக்குள் நிறங்களை கலை நயத்தோடு அள்ளி இறைக்கும் அவரின் ஓவியங்களில் ஒன்றை எனக்குப் பரிசாக வழங்கி இருக்கிறார். அது என் வீட்டுச் சுவரில் இன்றும் தொங்கிக்கொண்டிருக்கிறது

என் இரண்டு கவிதை நூல்களுக்கான அட்டைப் படங்களை வெகு நேர்த்தியாக வடிவமைத்துத் தந்தார். என் புகைப்படங்களை மின்னோவியத் தூரிகையால் மெருகேற்றி மின்னச் செய்தார். அத்தனை அன்பு அவருக்கு என் மீது.

என் கவிதைகளை வெகுவாக ரசிப்பார் பாராட்டுவார். என் கவிதைகளுள் சிலவற்றை அவரே தேர்வு செய்து அவரே இசையமைத்து அவரே அருமையாகப் பாடி எனக்கு அனுப்பிவைத்து என்னை நன்றிப்பெருக்கோடு நிற்க வைத்திருக்கிறார்

இசையில் மயங்கும் இனிய உள்ளம் அவருக்கு. என்னையும் அவரோடு இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உயர் ரசனைகளை ஊட்டினார்.

புகைப்படங்கள் எடுப்பதிலும் காணொளிகள் எடுப்பதிலும் கைதேர்ந்த கலைஞர் ஆர் எஸ் மணி அவர்கள்.

என்னுடைய அன்புடன் குழுமம் நடத்திய காணொளிக் கவிதைப் போட்டியில் பரிசு வென்றார். அது உலகத் தமிழர்கள் அனைவருக்குமான கவிதைப் போட்டி.

அவரை நான் இழந்தது என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல் நெஞ்சம் பதறுகிறது.

அவரின் துணைவியாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது? பாசத்தில் பூத்துச் சிரிக்கும் அவரின் முகத்தில் சோகத்தை எப்படிக் காண்பது?

பல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி அவர்களுக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன் நான் இப்படி ஒரு வாழ்த்துப்பா பாடினேன். இதை மீண்டும் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்

*

பட்டு மிளிர்கின்ற
விழிமணி - உயிர்
தொட்டு அணைகின்ற
கவிமணி


இட்டு நிறைகின்ற
புகழ்மணி - பனி
கொட்டும் கனேடியத்
தமிழ்மணி


மெட்டுக் கவிபாடும்
குரல்மணி - நிறம்
சொட்டித் தாளேறும்
விரல்மணி


எட்டுத் திசைவெல்லும்
நவமணி - கலை
விட்டு விலகாத
தவமணி

அன்புடன் புகாரி