இருபத்திநாலு மணி நேரத்தில்
இருநூற்றி நாற்பது வினோதங்கள்

எதையும்
தப்பாமல் செய்யும் நானேதான்
தம்பிக்குத் தபால் எழுதி
தாசில்தாருக்கு அனுப்பிவைத்தேன்

அலுவலகத்தில் சுறுசுறுப்பாய்
ஏதேதோ செய்தேன்
அது எதுவுமே என் நிறுவனத்திற்குத்
தேவையே இல்லை

கணினியின் சாளரங்களில்
காட்டுப் பூனைகள் பல
பதுங்கிக் கிடப்பதுபோல்
என் விரல்களுக்குள் சிக்காமல்
மின்னெலி
துள்ளிக்கொண்டே இருந்தது

நலமா என்று கேட்டு
என் மின்னஞ்சல் பெட்டிவிழுந்த
அத்தனை நட்பு மடல்களையும்
கன்னாபின்னாவென்று வைதுவைத்து
பதில் பொத்தானை அழுத்திவைத்தேன்

மதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி
இரண்டாவது கடியாக
என் கட்டை விரலைக்
கடித்து முடித்தேன்
கூடவே ’ஹாட் டாக்’ என்றால்
சுடுநாய் என்று
தூய தமிழில்
மொழிபெயர்த்து மகிழ்ந்தேன்

ஐந்தாவது தளத்தில் ஏறவேண்டிய
கோ-ட்ரான்சிட் ரயிலுக்காக
மூன்றாவது தளதில்
மூன்று மணி நேரமாய்
நின்றுகொண்டிருந்தேன்

கவிதை நூல் ஒன்றைப் பிரித்து
முதல் வரியை மட்டும்
முந்நூறுதரம் வாசித்தேன்

என் சீறுந்தில் அமர்ந்து
(அதாங்க ’என் காரில் அமர்ந்து’)
சாவியிடாமலேயே உந்து விசையை
(உந்துவிசை புரிந்திருக்குமே)
அழுத்திக்கொண்டிருந்தேன்

என் பெயரை
யாரோ கூவிக் கூவி அழைக்க
செத்துப் போன எவனையோ
அழைக்கிறார்களே என்று
விடுவிடுவென்று வீடுவந்து சேர்ந்தேன்

அன்பே
இதுபோல் என்னால்
இனியொருநாளை
கைகால்களில்
சங்கிலி பூட்டிக்கொள்ளாமல்
கடத்த முடியாது

செல்வழி
நீ என் செவியில்
சொல்லின்றி கிசுகிசுத்ததைச்
சத்தமாய் நீயே சொல்லிவிடு
நம் சத்தியத் தமிழால்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

அருமை அசத்தல் வரிகள்...