மகளிர்தின வாழ்த்துக்கள்

பார்வை நொறுக்கும் விழியோடு
பழி வென்று முடிக்கும்
நடையோடு
காட்டுத் தீயாய் எழுகின்றாள்
பழங் கட்டுகள் எரித்து
நிமிர்கின்றாள்

விகிதம் கேட்டா அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா
தருகின்றாள்
உரிமை மீட்டே எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே
அதுவென்றாள்

மலரின் மென்மை விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை
வேர்கொண்டாள்
நிலவின் எழிலாய் வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள்
வெடிக்கின்றாள்

கருணை அன்பு மனங் கொண்டாள்
உயர் காதல் நட்பு
உயிரென்றாள்
தாய்மை தூய்மை தானானாள்
வளர் அறிவின் தெறிப்பில்
ஓடுடைத்தாள்

பெண்களின் நலன், முன்னேற்றம், உரிமை என்று விரும்பும் பெண்கள் நேசிக்கத்தக்கவர்கள். ஆனால் பெண்களின் உரிமைக்காக யாசகம் கேட்கும், மடிப்பிச்சை கேட்கும் பெண்களால் பெண்ணுரிமை கிடைக்குமா? பெண் முன்னேற்றம் வளருமா? 

பெண்ணின் முன்னேற்றமும் உரிமையும் நலனும் பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு பெண்ணின் கைகளில்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். தன் பிள்ளைகளில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாகப் பார்த்தால் சமமாக வளர்த்தால். நாளை என்பது சம உரிமை கொண்டதாகத்தானே மலரும்?

ஒரு பெண் தான் பெற்ற பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுப்பதும், தன் சகோதரனைவிட அவள் எதிலும் இளைத்தவல் இல்லை என்று உறுதிபட வளர்ப்பதும், திருமணச் சந்தைகளில் பெண்ணை கடைப் பொருளாய் ஆக்காமல், இணையானவளாய் நிறுத்தி மணமுடித்து வைப்பதும் பெண்களின் கைகளில் இல்லையா?

எந்த ஒரு முன்னேற்றமும் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீடு சமுதாயத்தை மாற்றும் சமுதாயம் உலகை மாற்றம்.

ஆண்களுக்கு அதிகாரம் வேண்டும், அதற்காக அவர்கள் தங்களின் உடல்வலிமையைக் காட்டுவார்கள், ஆணாதிக்க சமூகத்தின் பழைய சிலந்தி வலைகளைக் கொண்டு மூட வருவார்கள், மதம் என்ற பெயரில் அடக்கியாள வருவார்கள், இன்னும் என்னென்ன வழிகள் உண்டோ அனைத்திலும் முயல்வார்கள். 

பெண்கள் என்ன செய்ய வேண்டும்? பெண்களால் முடியாதது என்று ஒன்று உண்டா? வருங்கால சமுதாய மரங்களின் விதைகள் உங்கள் கையில். ஆம் பிள்ளைகள் உங்கள் கைகளில்...

பெண்ணுரிமைக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களின் நலனுக்காக சிறு துரும்பையேனும் நகர்த்தும் பெண்களுக்கு என் மகளிர்தின வாழ்த்துக்கள்.

- அன்புடன் புகாரி

9 comments:

சாந்தி said...

அற்புதம் .. இப்படியான ஊக்க கவிதைகளையே விரும்புவேன்...

வீரத்தோடு, துணிச்சலோடு அதே சமயத்தில் கருணை, அன்போடு இருக்கணும் பெண்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாக்கற பார்வையே சரியில்லையே

அட்டகாசம் நல்லா இருக்கு

வாங்க என் பக்கத்துக்கு

நிலா அது வானத்து மேல!

ஷைலஜா said...

புதுமைப்பெண் மிக அழகுடன் அறிவுடன்
ஆணுக்கு நிகராய் வருகின்றாள்!

சிறப்பான கவிதை இது புகாரி

கிரிஜா மணாளன் said...

பெண்களுக்கு வீர உணர்ச்சியை ஊட்டக்கூடிய தங்களது இக்கவிதைகளை மிகவும்
ரசித்தேன் தலைவரே!



மலரின் மென்மை விரல் கொண்டாள்
யுக நெருப்பின் வன்மை
வேர்கொண்டாள்!

நிலவின் எழிலாய் வருகின்றாள்
பல நெற்றிக் கண்கள்

வெடிக்கின்றாள்!

எழுச்சியூட்டும் வரிகள்!

- கி.ம.

பூங்குழலி said...

விகிதம் கேட்டா அழுகின்றாள்
வெறும் கருணை மனுவா
தருகின்றாள்
உரிமை மீட்டே எடுக்கின்றாள்
புதுக் கற்பின் பொருளே
அதுவென்றாள்

இந்த வரிகள் அற்புதம் புகாரி .சரியான பார்வை கொண்ட வரிகள்

வேல் said...

அருமையான கவிதை புகாரி..! பெண் என்றாள் இப்படித்தான் இருக்கணுமா?..

நிறையவே இருக்கும் தானே.. அதெல்லாம் முடிந்தால் எழுத தவறாதீங்க..!

இப்பவும் அருமையான சொல்லாடல் உங்க கவிதையிலே..! வாழ்த்துக்கள்..!

சக்தி said...

அன்பின் நண்பரே புதுக்கவிதைப்புயல் புகாரி,

கவிதையென்றால் இதுவன்றோ கவிதை உங்களைக் கட்டியணத்துப் பாரட்ட ஏங்குகிறது
நெஞ்சம்.

பூவொன்று புயலாகும்
புதுமை சொல்ல வந்தனையோ
புதுக்கவிதைப்புயலாய் நண்பா
புயலது வருவது அழிப்பதற்கு
பூவையிவளின் வேகமோ
புத்துலகினைப் படைத்திடும் வேராகும்
அழகுற பெண்விடுதலை பற்றி
அளித்த நின் கவிதை கண்டு
ஆனந்தக் களிப்படைந்தேன்

அன்புடன்
சக்தி

விஷாலம் said...

அன்பு புஹாரி அருமையான ஒரு கவிதை மலரின் மெனமை
யுக நெருப்பின் வனமை வேர்" அழகான வரிகள்

செல்வன் சம்பத் said...

கவிதை சிறப்பு.பொருளும் நன்று.