1

நீ
செல்லுமிடமெல்லாம்
தன் கோடிகோடிக் கரு விழிகளால்
உன்னையே
அடங்காக் காதலோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது

வேறெவரையும்விட
அது உன்னை
அதி தீவிரமாய்க் காதலிக்கிறது

எரிபொருள் தேடும்
நெருப்பினும் தாகமாய்
வாசனைகள் ஏற்றும்
காற்றினும் ஆவலாய்
ஏந்திக்கொள்ள ஏங்கும்
நிலத்தினும் பாசமாய்
வழிந்தோடத் துடிக்கும்
நீரினும் தவிப்பாய்
பரந்துவிரியச் சுழலும்
வானினும் மோகமாய்

உன்னைக் காதலிக்கிறது

6 comments:

ஆயிஷா said...

புரியவில்லை ஆசான்.
அன்புடன் ஆயிஷா

Unknown said...

இந்தத் தொடரில் வரும் கவிதைகளை வாசித்துக்கொண்டே வாருங்கள் ஆயிஷா. இன்னும் எழுதுவதாக இருக்கிறேன்.

ஹரன் said...

///வேறெவரையும்விட
உன்னை
மரணமே அதி தீவிரமாய்க்
காதலிக்கிறது////

அது நம்மைக் காதலிக்கிறதா? அல்லது தன்னைக் காதலிக்கிறதா? மரணத்தின் பசிக்குத் தீனிதானே நம் வாழ்வு! மானைப் புலி துரத்துவது காதலினாலா?


கேள்விகளுடன்
ஹரன்

Unknown said...

////அது நம்மைக் காதலிக்கிறதா? அல்லது தன்னைக் காதலிக்கிறதா? மரணத்தின் பசிக்குத் தீனிதானே நம் வாழ்வு! மானைப் புலி துரத்துவது காதலினாலா?/////



மரணம், மண்ணில் உள்ள ஒவ்வொரு உயிரையும் காதலிக்கிறது. அத்தனை உயிர்களும் அதற்கு வேண்டும். அத்தனை உயிர்களும் அதனையே சென்று சேரவேண்டும் என்று நாளும் பொழுதும் காதல் தாகத் தவிப்பில் மரணம் இருக்கிறது.

மரணத்தின் பசி என்பதுதான் மரணத்தின் காதல். நான் தீனியாகமாட்டோம். அதனோடு ஐக்கியமாகி நிகரில்லாத நிம்மதியைப் பெறுவோம்.

புலி உங்களை உண்டு செரிக்கும். மரணம் உங்களைத் தன்னில் ஏற்றுக்கொள்ளும். புலி கவ்விக் குதறி உண்ணும்போது நீங்கள் வேதனைப்படுவீர்கள். மரணம் உங்களைத் தழுவும் வரைதான் வேதனை. தழுவியபின் சுகம் சுகம்.

சிவா said...

அருமையான விளக்கம் ஆசான் .. நாம் விரும்பினாம் விரும்பாவிட்டாலும்... தன்னை நோக்கி நம்ம இழுத்துக் கொள்கின்ற திறமை மரணத்திற்கு மட்டும் தான் உள்ளது

மல்லிகை வாணி said...

நாமும் ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி பயனிப்பதால் நாமும் மரணத்தை
காதலிப்பதாக கொள்ளலாமா?
இந்த கவிதையும் கருத்தும் புதுமையாக இருக்கு...
அன்புடன்...
வாணி